Tuesday, September 9, 2014

தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?

இயேசு மீண்டும் அவர்களிடம், 'நான் போன பின் நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது. நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்' என்றார். யூதர்கள், ''நான் போகுமிடத்திற்கு உங்களால் வர இயலாது' என்று சொல்கிறாரே, ஒருவேளை தற்கொலை செய்து கொள்ளப் போகிறாரோ?' என்று பேசிக்கொண்டார்கள். (யோவான் 8:22)

நாளை, அதாவது செப்டம்பர் 10, உலக தற்கொலை தடுப்பு தினம் கொண்டாடப்படுகிறது. 2003ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார அமைப்பு இதைக் கொண்டாடி வருகின்றது. இந்த அமைப்பின் கருத்துக்கணிப்பின்படி உலகம் முழுவதும் 40 நிமிடங்களுக்கு ஒருவர் என்ற வீதியில் தினமும் 3000 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதிலும் முக்கியமாக 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்கள் தொகையில் போர்களில் இறந்தவர்களை விட தற்கொலை செய்து இறந்தவர்களே அதிகம் எனவும், தற்கொலை இறப்புக்கான காரணங்களில் 13வது என்றும் சொல்லப்படுகிறது.

விவிலியத்தில் தற்கொலை பற்றிய படிப்பினை என்ன? என்பதையும், வாழ்க்கையை நாம் இனிமையாக வாழ்வதற்குத் தேவையான துணிவையும் பற்றி இன்று பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

விப 20:13 மற்றும் இச 5:17ல் உள்ள பத்துக்கட்டளைகளில் ஒன்றான 'கொலை செய்யாதீர்கள்!' என்ற கட்டளை எபிரேய விவிலியத்தில், அதாவது முதல் ஏற்பாட்டில், உயிருக்கான முக்கியத்துவம் பற்றிச் சொல்லப்பட்ட முதல் பதிவு. 'உங்களையும் கொல்லாதீர்கள்! மற்றவர்களையும் கொல்லாதீர்கள்!' என்பதே இதன் அர்த்தம்.

எண்ணிக்கை நூல் 11:12-15ல் தன் பணி மற்றும் பயணத்தின் வலி தாங்க முடியாத மோசே 'நீர் என்னை இப்படி நடத்துகிறீர் என்றால், என்னை இங்கேயே, இப்போதே கொன்றுவிடும்' என்று முறையிடுகின்றார். நீத 9:52-54ல் ஒரு பெண் தன் மேல் கல்லைத் தூக்கிப் போட்டதால் அது அவமானம் என்று கருதும் அபிமெலக் தன் பணியாளனை நோக்கி தன்னை வாளால் குத்திக் கொல்லுமாறு முறையிடுகிறான். நீத 16:29-30ல் மிகப்பெரும் நீதித்தலைவரான சிம்சோன் பிலிஸ்தியர்களைப் பழிவாங்குவதற்காக தான் கட்டப்பட்டிருந்த தூணைத் தகர்த்து கட்டிடத்தை விழச் செய்து கூடியிருந்த பிலிஸ்தியர்களை அழித்ததோடல்லாமல் தன்னையும் அழித்துக் கொள்கிறார். 1 சாமுவேல் 31:4-6ல் சவுல் அரசன் தன் வாளின் மேல் தானே விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொள்கிறார். தன் காயங்கள் தான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்று சாக்குப் போக்கும் சொல்கிறார் சவுல் (1 குறி 10:3-7). 2 சாமுவேல் 17:1-29ல் தாவீதை அழிக்கும் தன் திட்டம் நிறைவேறவில்லை என்று நினைக்கும் அகித்தோஃபேல் தூக்குப் போட்டு இறந்து விடுகிறான். 1 அரசர்கள் 16:15-20ல் சிம்ரி என்ற அரசன் தன் நகரம் முற்றுகையிடப்பட்டதால் தன் வீட்டிற்குத் தீயிட்டு அதில் விழுந்து தானும் மடிந்து விடுகிறான். 1 அரசர்கள் 18:40 மற்றும் 19:4ல் இசபெல் அரசியிடமிருந்து தப்பிவிடும் எலியா இறைவாக்கினர் தான் இறக்க வேண்டும் என்று கடவுளை மன்றாடுகின்றார். யோனா 4:1-11ல் கடவுளின் இரக்கத்தைப் பார்த்து அவர்மேல் கோபப்படும் யோனா இறைவாக்கினர் 'வாழ்வதை விட சாவதே மேல்' எனப் புலம்புகிறார்.

இவ்வாறாக, வாழ்வின் இக்கட்டான தருணங்களில் மோசேக்கும், எலியாவுக்கும் கூட தற்கொலை எண்ணங்கள் வந்திருக்கின்றன.

கிறித்தவர்களின் விவிலியத்தில், அதாவது இரண்டாவது ஏற்பாட்டில், தற்கொலை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது யூதாசு இஸ்காரியோத்து தான் (காண். மத் 27:5 மற்றும் திப 1:18). மேலும் 1 கொரி 3:17 தூய பவுல் ஆன்மீகத் தற்கொலை பற்றிப் பேசுகிறார். பிலிப்பியருக்கு எழுதிய திருமடலில் அவர்களிடம் மனம் திறக்கும் பவுல் 'உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்' என தன் இழுபறி மனநிலையை அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றார் (1:23-26). திருவெளிப்பாட்டில் ஐந்தாம் எக்காளம் ஊதப்படும் போது சொல்லப்படும் வார்த்தைகள் விந்தையாக இருக்கின்றன: 'அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள். ஆனால் சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள். ஆனால் சாவு அவர்களை அணுகாது' (9:6).

விவிலியத்தின் கதை மாந்தர்கள் தங்களின் இக்கட்டான நிலையில் சிலர் இறப்பு வராது என்று காத்திருக்கின்றனர். சிலர் இறப்பை வருவித்துக் கொள்கின்றனர்.

தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்பதற்கான ஒரே காரணம் இதுதான்: 'நம்மால் உயிரை ஆக்க முடியாது. ஆகவே, அதை அழிக்கவும் நமக்கு உரிமை இல்லை'.

தற்கொலை ஒரு கொடுமையான சிந்தனை. தற்கொலை செய்து கொள்ளும் மனிதர் இரண்டு முறை இறக்கின்றார். முதலில் தன் மனதளவில் இறந்து விடுகின்றார். பின் தன் உடலை மாய்த்துக் கொள்கின்றார். 'ஐயோ! நான் சரியில்லை!' 'என்னிடம் நல்லது எதுவும் கிடையாது!' 'எனக்கு அழகு இல்லை!' 'நான் டேலன்ட் இல்லாதவன்!' என்று ஒவ்வொருமுறை நம்மைத் தாழ்வாக மதிப்பிடும்போதும் நாம் நம் உள்ளத்தைக் கொலை செய்கிறோம். உள்ளம் இறந்தபிறகு, உடலும் தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிகிறது.

பிரச்சினைகள் எல்லாருக்கும் தான் இருக்கும். ஒபாமாவுக்கும் பிரச்சினை இருக்கும். நம்ம ஊரில் ஆடு மேய்ப்பவருக்கும் பிரச்சினை இருக்கும். ஆனால் பிரச்சினைக்கான நிரந்தரத்தீர்வாக தற்கொலையை தெரிவு செய்வது தவறு. இதில் தற்கொலை செய்து கொள்ள தைரியம் வேண்டும் என்று சப்பை கட்டும் கட்டுவார்கள் சிலர். இது என்ன ஒலிம்பிக்ஸா. தைரியத்தோடு சண்டை போட்டு வெற்றி பெற! ஒரு கண முயற்சி ஒரு குடும்பத்திலும், ஒரு சமுதாயத்திலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிடுகிறது. இறந்தவர் போய் விடுவார். ஆனால் இருப்பவர் அதே இடத்தில், அதே வீட்டில், அதே சூழலில் இருக்க வேண்டுமல்லவா!

கொலை, தற்கொலை, மரண தண்டனை. போர் என அனைத்தும் மனித உயிரின் மாண்பிற்கு எதிரானதுதான்.

துன்பம் வரும் போது கொஞ்சம் வெளியே பார்ப்போம். உள்ளே பார்த்தால் விரக்தி வரும். வெளியே பார்த்தால் உற்சாகம் வரும்.

யூதாசுக்கும், பேதுருவுக்கும் ஒரே துன்பம் தான் வந்தது. ஒருவர் காட்டிக் கொடுத்தார். மற்றவர் மறுதலித்தார். குற்றத்தின் தன்மை ஒன்றுதான். யூதாசு உள்ளே பார்த்தார். ஆனால் பேதுரு வெளியே பார்த்தார்.


1 comment:

  1. நம்மால் ஆக்கமுடியாத உயிரை அழிக்கவும் நமக்கு உரிமை இல்லை...கண்டிப்பாக இல்லைதான்.எதனால் வருகிறது இந்தத் தற்கொலை உணர்வு? நாம் தோற்றுவிட்டோம்; நிராகரிக்கப்பட்டுவிட்டோம் எனும் உணர்வுதானே! அத்தருணங்களில் நமக்கும் கீழே உள்ள கோடிமக்களை நினைத்துப் பார்த்து நமக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம்.நம்மால் முடிந்த அளவு யாரையும்,அவர்களது உணர்வுகளையும் மதிக்கவில்லையெனினும் மிதிக்காமல் பார்த்துக்கொள்வோம்.இறைவன் நமக்களித்துள்ள இந்த 'உயிரின்' மாண்பையும் மதிப்போம்.இதுகுறித்து இத்துணை புள்ளிவிவரங்களை சேகரித்து அளித்துள்ள தந்தையின், முயற்சிக்குப் பாராட்டுக்கள்....

    ReplyDelete