Sunday, September 14, 2014

நாளை நீ எழுந்து நிற்பாய்!

இன்று மாலை மதுரை உயர்மறைமாவட்ட அருட்பணியாளர்கள் தங்களின் (புதிய) பேராயரோடு இணைந்து தங்களின் ஆண்டு தியானத்தைத் தொடங்குகின்றனர். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்தத் தியானத்தில் பங்குபெரும் அருட்பணியாளர்களுக்காகவும், பேராயர் அவர்களுக்காகவும் சிறப்பாக செபிப்போம்.

உடல் தான் இன்று தூரமாக இருக்கின்றது. உள்ளம் என்னவோ இன்று காலை முதல் எனக்கு மதுரையிலேயே இருக்கின்றது. என் மறைமாவட்டப் பணியாளர்களோடு இணைந்து தியானம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஏன் தியானம் செய்தே மூன்று ஆண்டுகள் ஆகின்றன என்றும் சொல்வேன். இந்த வருடம் அவர்களோடு இணைந்து செய்ய முடியவில்லையென்றாலும் நான் தனிப்பட்ட முறையில் செய்யலாம் என்று முடிவெடுத்து நானும் அதை இன்றே தொடங்க விழைகின்றேன். வருகின்ற ஐந்து நாட்களும் என் வலைப்பதிவிலும் என் எண்ண ஓட்டங்களையே பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நான் தியான உதவிக்காக எடுத்துக்கொள்பவை இரண்டு: அ. எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம். ஆ. இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடான 'அருட்பணி நிலை' (அருட்பணியாளர்களின் பணியும், வாழ்வும் என்ற கொள்கைத் திரட்டு).

அ. தியானம் என்றால் ஒரு ஆடம்பரம் (லக்சரி). வருடத்தில் ஐந்து நாட்கள் ஒன்றும் செய்யாமல் எல்லாராலும் இருக்க முடியுமா? அன்றாடம் வேலை செய்தால் தான் சாப்பாடு என்று இருப்பவர்களுக்கும், ஒரு நாள் வேலைக்குப் போகவில்லையென்றாலும் 'லாஸ் ஆஃப் பே' என்று தலை வலித்தாலும் மாத்திரை போட்டுக் கொண்டு ஓடுவோர் நடுவில், அருட்பணி நிலையில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்கும் ஆடம்பரம் இது.

ஆ. ஆடம்பரம் என்றவுடன் அவர்கள் அனைவரும் கூடிவந்து ஓய்வு எடுப்பார்கள் என நினைத்து விட வேண்டாம். ஆண்டின் 360 நாட்களை நல்ல முறையில் வாழ இந்த 5 நாட்கள் திட்டமிடுதலும், சீர்தூக்கிப் பார்த்தலும் அவசியமே. சின்ன உருவகம்: ஒர்க்ஷாப்பில் நிற்கும் நம் பழைய மாருதி கார். ஒர்க்ஷாப்பில் கொண்டு போய் காரை விடுகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தக் கார் ஒர்க்ஷாப்பில் ஓய்வு எடுக்கவா செய்கிறது? இல்லை. எந்நேரமும் அதைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். நெளிவுகளை எடுப்பார்கள். ஸ்குரு போனதை மாற்றுவார்கள். பழுதான டயர்கள், பல்ப், ஸ்டீரியோ, வயரிங் என அனைத்தையும் மாற்றுவார்கள். எல்லா இணைப்புக்களிலும் ஆயில் விடுவார்கள். பிரேக் சரி செய்வார்கள். சக்கரங்களின் அலைன்மென்ட் பார்ப்பார்கள். புதிய வண்ணமேற்றுவார்கள். ஐந்து நாட்கள் அல்லது ஒரு வாரம் அந்த மாருதி கார் இந்த வலிகளையெல்லாம் தாங்கும் போதுதான் மற்ற 51 வாரங்களும் நம்மை பகுமானமாக சாலையில் அழைத்துச் செல்ல முடியும். இந்த ஐந்து நாளில் ஒருநாள் மெக்கானிக் சோர்ந்து போனாலும் அது வருட முழுவதும் நம் வண்டிக்கு செலவை இழுத்துவிடுகிறது.

இ. தியானம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு இருப்பது என்றே நாம் நினைப்போம். கண்ணை மூடிக்கொண்டே இருக்க வேண்டுமென்றால் அதைத் தான் நாம் தினமும் இரவில் செய்கிறோமே. உடம்பு முழுவதும் கண்களாக மாற்றிக் கொள்ளவேண்டிய பொழுதே தியானம். தியானத்தில் முதன்மைப்படுத்தப்படுவது உறவுநிலை. அதாவது இறைவனுக்கும், நமக்கும். நமக்கும் நம் அருகில் இருப்பவர்களுக்கும், நமக்கும், நாம் பணி செய்பவர்களுக்கும் என்ற மூன்று நிலையில் உறவுநிலைகளை சீர்தூக்கிப் பார்ப்பதே தியானம். நம் அனைத்துக் குற்றங்களும் உறவுநிலைகளையே பாதிக்கின்றன. ஆகையால் தான் நமது திருஅவையின் புதிய மறைக்கல்வி, 'பாவம் என்றால் உறவின் முறிவு' என்று சொல்கின்றது.

ஈ. அருட்பணியாளர்களின் பணி மற்றும் வாழ்வு என்ற வத்திக்கான் ஏட்டை இன்று மதியம் வாசிக்கத் தொடங்கினேன். இறையியில் படித்த போது இதைப் படித்திருந்தாலும் இன்று படிக்கும் போது புதுமையாக இருந்தது. அன்று தேர்வுக்காக படித்தேன். இன்று தியானத்திற்காகப் படிக்கிறேன். நோக்கம் மாறுபடத்தானே செய்கின்றது.

அருட்பணியாளரின் பணியும், வாழ்வும் கிறிஸ்துவை மையமாக வைத்தே இருக்க வேண்டும் என்று தொடங்கும் ஏடு, அருட்பணியாளர்களின் குருத்துவம் என்பது ஆயரின் குருத்துவத்திலோ அல்லது திருத்தந்தை (போப்)யின் குருத்துவத்திலோ பங்கு பெறுதல் அல்ல. ஒவ்வொரு அருட்பணியாளரும் கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்குபெறுகின்றார். ஆகையால் ஆயர் மாறினாலோ, திருத்தந்தை மாறினாலோ அருட்பணி நிலையை ஒருவர் மாற்றிக் கொள்ள முடியாது. ஒருவர் என்றென்றும் அருட்பணியாளரே. மேலும், இந்த ஏடு அருட்பணியாளர்கள் என்று மறைமாவட்டக் குருக்களை மட்டுமே அழைக்கின்றது. வாசிக்கும் போதே எனக்குப் பெருமையாக இருந்தது. துறவற சபைக் குருக்களை, அதாவது இயேசு சபை, சலேசியன் சபை, இரட்சகர் சபை போன்ற குருக்களை அது 'துறவியர்' என்றும், அதிலும் துறவியர் (ஆண் மற்றும் பெண்) என்று குறிப்பிடுகிறது. ஆகையால் துறவியர் என்பவர்களில் யாரையும் அருட்பணியாளர் என்று அழைக்க வத்திக்கான் ஏடு மறைக்கின்றது. ப்ளீஸ்! என்மேல் கோபிக்காதீங்க! வத்திக்கான் ஏடு அப்படித்தான் சொல்கிறது!

கிறிஸ்துவோடு இணைந்திருப்பது முதல் வகை உறவு. இரண்டாவதாக, ஆயரோடும், சக அருட்பணியாளர்களோடும் இணைந்திருப்பது. இதை எந்த அளவுக்கு முன்வைக்கிறது என்றால், இந்த உறவுநிலை இருந்தால் அதுவே நிறைவான திருச்சபை என்றும், வேறு சபையே தேவையில்லை எனவும் சொல்கின்றது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஒரு திருச்சபை. இந்த இடத்தில் அழகாக மற்றொன்றையும் சொல்கின்றது. ஆயரும், அருட்பணியாளர்களும் திருச்சபையின் தலைவர்கள். துறவியரும், பொதுநிலையினரும் பணிசெய்யப்பட வேண்டியவர்கள் எனவும், அவர்கள் நம் பணிக்காக பயன்படுத்தப்பட வேண்டியவர்கள் எனவும் சொல்கிறது. இதில் தலைவர்கள் என்றவுடன் ஆட்டிப்படைக்கும் தலைமையல்ல எனவும், பணிசெய்யும், பாதம் கழுவும் தலைமை என்றும் சொல்கிறது.

மூன்றாவதாக, பங்குப் பணி மற்றும் பங்குப் பணி சாராத அனைத்துப் பணி செய்பவர்களும் தங்கள் பணிக்கேற்ற வாழ்க்கை நிலையை தான் பணி செய்யும் நபர்களுக்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், மேற்காணும் இரண்டு உறவுகளும் இருந்து, இந்த மூன்றாம் வகை உறவு இல்லையெனில் அருட்பணியாளர் 'அந்நியப்பட்டும்', 'உடைந்தும்' நிற்பார் என சொல்கின்றது.

இந்த மூன்று வகை உறவு சரிசெய்வது எப்படி எனவும், இந்த மூன்று உறவு நிலைகளிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் தனிப்பெரும் தலைமைக்குருவாம் இயேசு எனவும் சொல்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகம்.

உறவுநிலைகள் சரிசெய்யப்படவும், புத்துணர்ச்சியோடு மதுரை உயர்மறைமாவட்டம் இறையரசுப் பாதையில் நிமிர்ந்த நடை போடவும் இன்று நான் செபிக்கிறேன். நீங்களும் செபியுங்கள்.

பாரதிதாசனின் குடும்பவிளக்கில் என்னைக் கவர்ந்த பகுதி இது. தலைவன் தன் தலைவியிடம் படுக்கையறையில் சொல்வான்.

"அதிகாலை தொடங்கி நாம் இரவு மட்டும்
அடுக்கடுக்காய் நமது நலம் சேர்ப்பதைத் தவிர,
இதுவரைக்கும் பொதுநலத்திற்கென்ன செய்தோம்?
என்பதை நாம் நினைத்துப் பார்க்கவுமில்லை.
இன்றைக்குக் கறி என்ன? செலவு யாது?
ஏகாலி (சலவை செய்பவர்) வந்தானா? வேலைக்காரி சென்றாளா?
கொழுக்கட்டை செய்யலாமா? செந்தாழை வாங்குவோமா?
கடைச்சரக்கை ஒன்றுக்கு மூன்றாய் விற்போமோ?
மாடு குடம் நிறையக் கறப்பதுண்டா?
கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம் கண்டோம்.
தமிழரென்று சொல்லிக் கொள்கின்றோம் நாமும்.
தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்.
எமதென்று சொல்கின்றோம் நாடோறுந்தான்.
எப்போது தமிழனுக்குக் கையாலான நமது உழைப்பை
ஒருகாசைச் செலவு செய்தோம்?"

இந்தப் பாட்டு குடும்ப நிலைக்கு மட்டுமல்ல, அருட்பணி நிலைக்கும் அழகாய்ப் பொருந்தும்.

"மதுரை உயர்மறைமாவட்டமே,
உன்னிடமிருந்து தூரமாய் இருக்கும் ஒன்றே
இன்று என்னிடம் இருக்கும் பெரும் சோகம்.
இன்று நீ எப்படி இருந்தாலும்
நாளை நீ எழுந்து நிற்பாய்!
உன்னைத் தன் உயிரினும் மேலாய்ப் பேணும் இளங்காளையர்
தோள்களில் சுமந்து பெருமிதமாய் நிற்பர்!"



1 comment:

  1. இன்றையப்பதிவானது முக்கியமாக அருட்பணியாளர்களை மனத்தில் வைத்து அவர்களுக்காகவே எழுதப்பட்டுள்ளது.தந்தை முக்கியமாக குறிப்பிட்டிருப்பது நாம் ஒருவருக்கொருவர் கொண்டாடும் உறவு முறை பற்றி.இது இல்லறத்திலிருப்பவர்களையும் பாதிக்கும் ஒன்றுதானே! நாமும் சிறிது நேரம் ஒதுக்கி அதைப்பற்றி சிந்திக்கலாமே. மதுரை உயர்மறைமாவட்டம் இறையரசை நோக்கி நடைபோட அதன்அருட்பணியாளர்கள் தங்கள்பேராயருடன் சேர்ந்து தங்களைத்தாங்களே புடமிடப்போகும் 'தியானம்' எனும் வேள்வியில் உங்களுக்குத் தந்தை இறைவனும்,அவர்தம் மகனும்,தூய ஆவியும் துணை செய்ய அவர்களுக்காக சிறப்பாக இறையருளை இறைஞ்சுவோம்.தந்தையே! தூர இருப்பதனால் என்ன கலக்கம்? தங்கள் மறைமாவட்டத்தோடு எத்துணை ஒன்றித்திருக்கிறீர்கள் என்பதைத்தான் தாங்கள் பாரதிதாசனின் குடும்ப விளக்கு மூலம் பறைசாற்றியிருக்கிறீர்களே! கவலையை விடுங்கள் தங்களின் அர்ப்ணிப்பும்,பிரமாணிக்கமும் மேலும் பல தூரங்களைக் தொடச்செய்யும்..எல்லோருக்கும் எங்களது செபங்களும்,வாழ்த்துக்களும்....

    ReplyDelete