Monday, September 8, 2014

அவர்களுடன் இறங்கி வந்து

விடிந்ததும் அவர் தம் சீடர்களைக் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்...இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். (காண். லூக்கா 6:12-19)

இந்த நற்செய்திப் பகுதியில் மலையும், சமவெளியும் இடம் பெறுகிறது. இந்தப் பகுதியின் முதல் நிகழ்வு மலையில் நடக்கிறது. இரண்டாம் நிகழ்வு சமவெளியில் நடக்கின்றது. மலையில் சீடர்களின் நடுவிலிருந்து திருத்தூதர்களைத் தேர்ந்தெடுக்கும் இயேசு, அவர்களை சமவெளிக்கு அழைத்து வந்து மற்றவர்கள் நடுவில் நிறுத்துகின்றார். லூக்கா நற்செய்தியாளர் மட்டுமே இந்த 'மேல்-கீழ்' முரண்பாட்டைப் பதிவு செய்கின்றார்.

தன் அழைப்பில் மேன்மை இருந்தாலும், அந்த மேன்மை தங்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் கொள்ள அன்று எனவும் மற்றவர்கள் நடுவில் நிற்கவே தாங்கள் அழைக்கப்பட்டோம் என்பது திருத்தூதர்களுக்கு நினைவுபடுத்தவும் இயேசு இதைச் செய்கின்றார் எனப் புரிந்து கொள்ளலாம்.

மலை அனுபவம், மக்கள் அனுபவம் - இந்த இரண்டும் அழைக்கப்பட்ட அனைவருக்கும் முக்கியம்.

'மலை'யை மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் அடிப்படைவாதிகளாக மாறி விடுவர். 'மக்களை' மட்டும் பிடித்துக் கொண்டிருப்பவர்கள் மேலோட்டமானவர்களாக இருப்பார்கள். அருட்பணி நிலையில் இந்த இரண்டும் அவசியம் என்று மட்டும் சொல்லிவிட்டு ஒதுங்கிவிட முடியுமா? இல்லை.

நாம் எல்லாருமே இறைவனால் அழைக்கப்பட்டவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு நோக்கம் இருக்கின்றது. நாம் விபத்தால் பிறந்தவர்கள் அல்லர்.

நம் அழைத்தலை உணர்ந்து கொள்ள இறையனுபவம் என்னும் மலை அனுபவமும், மக்கள் அனுபவம் என்னும் சமவெளி அனுபவமும் தேவை.

எந்தவொரு வேலையை எடுத்தாலும் இது பொருந்தும். மருத்துவர் ஒரு மருத்துவக் கல்லூரில் படிக்கும் போது மலையனுபவம் பெறுகிறார். மக்களுக்காக பணியாற்றும் போது மக்கள் அனுபவம் பெறுகிறார். முதலாவது இல்லையென்றால் இரண்டாவது சாத்தியம் இல்லை. இரண்டாவது இல்லையென்றால் அவரால் பயன்பாடும் இல்லை.

'மலை - சமவெளி' - இவைதாம் வாழ்வு என்னும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

அது அருள்நிலை வாழ்வாக இருந்தாலும், பொதுநிலை வாழ்வாக இருந்தாலும்!


1 comment:

  1. ஆம்..நாம் விபத்தால் பிறந்தவர்கள் அல்லர்..எத்துணை பெரிய பேருண்மையைப் போகிற போக்கில் கூறிவிட்டீர்களே தந்தையே! இறையனுபவத்தையும்,மக்கள் அனுபவத்தையும் 'மலை- சமவெளி' யோடு ஒப்பிட்டிருப்பது நாம் எந்நிலையில் இருக்கிறோம் என்று யோசிக்கத்தூண்டுகிறது.நாம் நாணயத்தின் எந்தப்பக்கத்தில் இருக்கிறோம்??!!..

    ReplyDelete