Tuesday, September 30, 2014

கலப்பையில் கை வைத்தபின்!

இயேசு அவரை நோக்கி, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என்றார். (லூக்கா 9:62)

நான் எட்டாம் வகுப்பு முடித்த பின்பு, அருட்பணியாளர் ஆவதற்காக, குருத்துவப் பயிற்சி பாசறையில் சேர்ந்தேன். அருட்பணியாளர் பயிற்சி நிலைக்கு இன்று குறைந்த பட்ச தகுதி 12ஆம் வகுப்பு அல்லது இளங்கலை பட்டப்படிப்பு. அன்று 9 முதல் 12 வரை பள்ளிப்படிப்பு இருந்தாலும், வார இறுதியில் மற்றும் தினசரி பொது நிகழ்வுகளில் குருத்துவப் பயிற்சி நடைபெறும்.

ஒன்பதாம் வகுப்பு காலாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது, எனக்கு இரண்டாம் வகுப்பு சொல்லிக் கொடுத்த ஆசிரியை என்னைப் பார்த்து, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்க்கக் கூடாது!' என்றார். இந்த நற்செய்திப் பகுதியை வாசிக்கும் போதெல்லாம் அவர் என் கண்முன் வந்து போகிறார்.

குருத்துவம் பற்றிச் சொல்லப்படும் நற்செய்திப் பகுதி இது அல்ல என்றாலும், இந்தப் பகுதியின் மையக்கருத்து சீடத்துவம் என்பதால் குருத்துவமும் இதில் அடங்கும் என எடுத்துக் கொள்ளலாம்.

'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பது' - இதை எப்படி நாம் புரிந்து கொள்வது?

இது ஒரு விவசாய சமூக உருவகம். எருதுகள் பூட்டி உழும்போது கலப்பையை ஒருவர் ஏறி நின்றோ, அல்லது அழுத்தியோ பிடித்துக் கொண்டு பின்னாலேயே செல்ல வேண்டும். திரும்பிப் பார்க்கும் போது கலப்பையின் மீதுள்ள பிடி தானாகவே குறையும். திரும்பிப் பார்த்துக்கொண்டே உழுவது ஆழமாக இருக்காது. மேலும் திரும்பிப் பார்க்கும் போது பெரிய காக்கா கூட்டம் இருக்கும். அதாவது, உழும்போது நிலத்திலிருந்து வெளிவரும் சின்னஞ்சிறு புற்களின் பூண்டுகளைத் திண்ண காகங்களும், மற்ற பறவைகளும் இறங்கி வரும். அவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் உழும் வேலை கெடும். மூன்றாவதாக, பின்னால் பார்த்துக் கொண்டே உழுதால் கலப்பை நேர்கோட்டில் செல்லாமல் மாடுகளின் இஷ்டத்திற்குச் செல்லும். கோணல் மாணலாக உழுதால் நீர் பாய்ச்சும் போது சிரமம் ஏற்படும்.

ஆக, இயேசு சொல்ல வருவது என்ன?

அ. மேலோட்டமாக உழக் கூடாது.
ஆ. நம்மைச் சுற்றிவரும் பறவைகளால் நம் பார்வை சிதறக்கூடாது.
இ. கோணல் மாணலாக உழக் கூடாது.

இன்று அருட்பணி சீடத்துவத்தில் உள்ள பெரிய சோதனை இதுதான்: கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பது. கையை வைத்தாயிற்று என்றால் வைத்தாயிற்றுதான். அங்க பாரு! அந்த வயல்ல நல்லா இருக்கே! அந்த ரோட்டுல யாரு போறது? அங்க தூரத்துல நிக்குறது யாரு? என்றெல்லாம் கேட்கக் கூடாது - இதுதான் இயேசுவின் சீடத்துவத்தின் சவால். இயேசுவின் சீடர்களில் சிலர் அப்படி இருந்திருக்கலாம். ஆகையால் தான் இயேசு இந்த உருவகத்தைக் கையாளுகின்றார்.

இன்று நான் கேட்கும் வரமெல்லாம் இதுதான்: அடிக்கடி திரும்பிப் பார்க்கும் கழுத்து என்றும் முன்நோக்கி செல்லும் கலப்பையின் பக்கம் திரும்ப வேண்டும்!

(பின்குறிப்பு: 'கலப்பையில் கைவைப்பது அல்லது உழுவது' என்பதற்கு 'பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல்' என்ற பொருளும் உண்டு. காண்க. நீதித்தலைவர்கள் 14:18ஆ. இந்தப் பொருளில் பார்த்தால் இயேசு மணத்துறவைப் பற்றிப் பேசியிருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இந்த நற்செய்திப் பகுதியில் குடும்ப உறவுகள் பற்றிப் பேசுவதால், மனைவி வைத்திருப்பவன் அல்லது 'உழுதவன்' இறையரசுக்குத் தகுதியில்லை என்று சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இது முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதன்று. விவாதத்திற்குட்பட்டது.)

1 comment:

  1. " கலப்பையில் கை வைத்தவன் திரும்பிப்பார்க்கக் கூடாது'...அடிக்கடி நம் காதில் விழுந்ததுதான்.ஆனால் தந்தையின் விளக்கம் புதிதாகவும், அழகாகவும் உள்ளது.இப்பொழுதெல்லாம் அருட்பணி சீடத்துவம் பற்றி நிறையவே கேட்க முடிகிறது.விவாத்த்துக்குட்பட்டதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.ஆனால் அருட்பணி சீடத்துவத்தில் உள்ளவர்கள் கைகள் கல்பையைப்பிடித்திருப்பினும் திரும்பிப்பார்ப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.ஆனால் பின்னால் திரும்பிய கழுத்தை அதே வேகத்தில் முன்னால் திருப்பவும் உங்களால் முடியும்.அனைத்து அருட்பணியாளர்களுக்கும்,சிறப்பாகத் தந்தையே தங்களுக்காகவும் எங்கள் செபம் எப்பொழுதும் உண்டு.கலப்பையை மட்டுமல்ல,தங்கள் கழுத்தையும் முன்னோக்கியே வைத்திருக்க எங்களின் நல்லெண்ணமும் தங்களுக்குத் துணை நிற்கும்...வாழ்த்துக்கள்!

    ReplyDelete