Friday, September 5, 2014

எழுத்தறிவித்தவன்(ள்) இறைவன்!

நாளை நம் தாய்த்திருநாட்டில் ஆசிரியர் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

'ஒவ்வொரு பெற்றோரும் ஒரு குழந்தையின் இரண்டாம் ஆசிரியர். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு குழந்தையின் இரண்டாம் பெற்றோர்' என்பர். ஒரு தாயின் கருவறையில் குழந்தை பத்து மாதம் இருப்பது போல ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் வகுப்பறையில் குழந்தையைத் தாங்கியிருக்கின்றார் ஆசிரியர்.

பள்ளிப்பருவத்தில் ஆசிரியர் தினம் கொண்டாடிய அளவிற்கு கல்லூரியிலும், பிற்கால மேற்படிப்பு பல்கலைக்கழகங்களில் கொண்டாடவில்லை.

ஆசிரியர் இறைவனின் பதிலி. இறைவனுக்குப் பல பெயர்கள் இருப்பது போல மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களுக்கும் பல பெயர்கள் இருக்கும்.

மாணவர்கள் படித்துக் கடந்து போனாலும் அதே இடத்தில் ஏணிகளாக நின்று அடுத்தடுத்த தலைமுறைகளை முன்னேற வைப்பவர்கள் இந்த ஆசிரியர்கள்.

என் பள்ளிப்பருவத்தில் என்னைக் கவர்ந்த ஐந்து ஆசிரியர்களை இன்று குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றி சொல்ல விழைகிறேன்:

அ. பழனியம்மாள் டீச்சர். எனக்கு ஆறாம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்தவர். வகுப்பு ஆசிரியை. வகுப்பறைக்குள் நுழையும் போதே மல்லிகை மனமும், ஜவ்வாது வாசனையுமாய் நுழைவார். ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒரு மணம் உண்டு. அவர் பயன்படுத்தும் வாசனைத் திரவியம். அவர் அடிக்கும் சிகரெட். அவர் போடும் பாக்கு. இப்படி ஒருவரின் மணத்தை வைத்து எந்த ஆசிரியர் வந்து சென்றார் என்று சொல்லிவிடலாம். 'குட்மார்னிங்! ஹவ் ஆர் யூ ஆல்!' என்று கேட்டுக் கொண்டே வகுப்பிற்குள் நுழைவார். பதிலுக்கு நாங்களும் 'குட்மார்னிங்! தேங்க் யூ! ஹவ் ஆர் யூ?' என்று கேட்கச் சொல்லிக் கொடுத்தார். யாரைப் பார்த்தாலும் 'நல்லா இருக்கிறீங்களா?' என்று கேட்பதை விட 'நீங்க நல்லா இருக்கீங்க!' என்று நாம் நேர்மறையாகச் சொல்வதிலேயே நாம் நம் பாசிட்டிவ் எனர்ஜியை மற்றவர்களுக்குச் செலுத்தலாம் என்று சொன்னவர். அவர் அன்று சொன்னது இன்றுதான் புரிகிறது.

ஆ. முருகேசன் சார். என் ஏழாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர். வகுப்பு ஆசிரியரும் கூட. அதிகமாக சிகரெட் பிடிப்பார். புல்லட் சார் என்ற பட்டப் பெயரும் இவருக்கு உண்டு. வகுப்பிற்கு வந்தவுடன் என்னிடம் பைக் சாவியைக் கொடுத்து அவரின் உணவு, நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் எடுத்து வரச் சொல்லுவார். வாத்தியார் பைக் சாவியைக் கொண்டு நடக்கும் போது ஏதோ வாத்தியாரையே கைக்குள் வைத்து நடப்பதாக பெருமிதமாக இருக்கும். அவரின் பெர்சனல் செக்ரட்டரி நான். அவரின் அலமாரியில் என்ன இருக்கிறது என்பது அவரைவிட எனக்கு அதிகமாகத் தெரியும். இந்து - கிறிஸ்தவன், கிராமம் - நகரம் என்ற பாகுபாடெல்லாம் பார்க்கவே மாட்டார். ஒரு நாள் பள்ளி மதிய உணவில் புழு இருந்தது என்று சாப்பிடாமல் இருந்து அறிவியல் வகுப்பில் மயக்கம் போட்டுவிட்டேன். அதைப் பார்த்த அன்றிலிருந்து எனக்கும் சேர்த்து மதிய உணவு சுமந்தவர் அவர். நானும் அவரும் வகுப்பறையிலேயே மதிய உணவு சாப்பிடுவோம்.

இ. சொர்ணாம்பாள் டீச்சர். இவர் எனக்கு எட்டாம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்தவர். நான் குருமடத்திற்குச் செல்கிறேன் என்று டி.சி. வாங்கச் சென்ற போது ஐந்து நாட்கள் இழுத்து அடித்தவர். 'நீ இங்கேயே படி! என்ன வேண்டுமானாலும் நான் செய்கிறேன்!' என்று என்னை பிள்ளை போல பார்த்துக் கொண்டவர். ஆடி மாதம் எங்க ஊரில் நடந்த திருவிழாவிற்கு (முளைகட்டு என்று சொல்லப்படும் மாரியம்மன் கோவில் திருவிழா) இவரை அழைத்தேன். எங்கள் வீட்டிற்கு வந்தும் விட்டார். எங்க பக்கத்து வீட்டு பசங்களுக்கெல்லாம் ஆச்சர்யம். டீச்சர் வந்திருக்காங்களாம் என்று பட்டாளமே திரண்டு விட்டது. அன்று எங்கள் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டார்கள். அன்று அவர்கள் அமர்வதற்கு சேர் கூட பக்கத்து வீட்டில் தான் இரவல் வாங்கினோம். இன்றும் எங்கள் பழைய வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம், மாரியம்மன் கோவில் பாட்டு கேட்கும் போதெல்லாம் இவர்களின் எளிய முகம் தான் நினைவிற்கு வரும்.

ஈ. ராஜகோபால் ஐயா. எட்டாம் வகுப்பில் எனக்குத் தமிழ் பாடம் எடுத்தவர். இன்று நான் தமிழ் மேல் கொண்டிருக்கும் காதலுக்குக் காரணமும் இவரே. தமிழ்ப் பாடல்கள் இவரின் நாவில் அப்படியே துள்ளி நடனமாடும். தனக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் என்னை ஒரு மகன் போல பாவித்தவர். ஒரு நாள் என்னை தத்து எடுப்பதாகச் சொல்லி பத்திரப் பேப்பர்களில் எல்லாம் எழுதி என் வீட்டிற்கே வந்து விட்டார். 'உங்க வீட்டிலேயே இருக்கட்டும். தினமும் என்னை வந்து ஒருமுறை பார்க்கட்டும்' என்று அன்று தன் பேரில் இருந்த வீட்டை என்பேரில் எழுதி வைக்கத் துணிந்தவர். என் அப்பா உறுதியாக மறுத்தாலும், நான் ஒன்பதாம் வகுப்பு மதுரைக்கு மாறி வந்தாலும் 'விசிட்டர்ஸ் சண்டேயில்' தவறாமல் இரண்டு ஆண்டுகள் வந்து பார்த்தவர். திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டார். பத்தாம் வகுப்பு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தபோது அவரின் மனைவியைச் சந்திக்கச் சென்றேன். வீட்டு பூஜையறையில் அவரின் ஃபோட்டோ அருகில் என் பஸ்பாசுக்கு எடுத்த பாஸ்போர்ட் ஃபோட்டோவும் இருந்தது. கடந்த வருடம் அவரின் வீட்டிற்குப் போன போது அவரின் மனைவியும் இறந்துவிட்டதாகவும் அந்த வீட்டை நூலகக் கட்டித்திற்கு அவர்கள் எழுதிக் கொடுத்ததாகவும் சொன்னார்கள். என் தமிழ் இருக்கும் வரை என் ராஜகோபால் ஐயாவும் இருப்பார்.

ஊ. சூசைமணி சார். என் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு இயற்பியல் ஆசிரியர். வகுப்பு ஆசிரியர். எளிமையின் கண்ணாடி. பழைய ஸ்கூட்டர் ஒன்றில் வருவார். அந்த ஸ்கூட்டரைப் போல வேறு எந்த பைக்கும் இருக்க முடியாது என்று சவால் விட்டு ஜெயித்தும் காட்டுவார். பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்தேன் என்ற காரணத்திற்காக தமிழ்வழிக் கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாற்றி விட்டார் எங்கள் குருமட அதிபர். முதல் நாள் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. கெஞ்சிப் பார்த்தேன். வகுப்பை மாற்ற மறுத்துவிட்டார் அதிபர். அந்த நேரம் புத்தகம் வாங்கவும் பணம் கிடையாது. எனக்காக இந்த இரண்டு ஆண்டுகளும் பாடப்புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து (தமிழிலும், ஆங்கிலத்திலும் - ஒப்பிட்டுப் படிப்பதற்காக!) நான் எழுதிப் பார்க்க ஒன்சைடு நோட் கொடுத்து என்னைப் பக்குவமாய்ப் பார்த்தவர். பிராக்டிகல் செய்யும் லேபில் எனக்கு பாதி இன்ஸ்டுருமென்ட்ஸ் எட்டாத உயரத்தில் இருக்கும். எனக்காக தனி டேபிள் அமைத்து அங்கே பிராக்டிகல் சொல்லிக் கொடுத்து தன் மகன் போல பார்த்துக் கொண்டவர். நான் குருவான பின்னும் என் திருப்பலியைப் பார்ப்பதற்காகவே ஞானாவின் கடைசிப் பெஞ்சில் அமர்ந்திருப்பார். 'இத வெர்னியர் அளவுகோல்னு சொல்வாக...சொல்லிட்டு...' என்று அவர் ரசனையோடு சொல்லும் வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்.

'எழுத்தறிவித்தவன் இறைவன்'

'இறைவன் எழுதும் தலையெழுத்தை நல்ல எழுத்தாக மாற்றுபவர்கள் இந்தக் குட்டி இறைவன்களே!'

இன்றும் எண்ணற்ற வகுப்பறைகளில் குழந்தைகளைத் தங்கள் கருவறைகளில் தாங்கும் அம்மையப்பன்களாம் ஆசிரியப் பெருமக்களுக்கு என் வாழ்த்துக்களும், வணக்கங்களும்!

(படத்தில் சொர்ணாம்பாள் டீச்சரோடு எட்டு 'அ' - அரசினர் மேனிலைப்பள்ளி, சத்திரப்பட்டி, 1993-94)

1 comment:

  1. ஆசிரியப்பணி ஒரு 'thankless job' என்று சொல்லக்கேட்டுள்ளேன்.அவர்களுக்குத் தங்களைப்போன்ற மாணாக்கர்களுக்கு பயிற்றுவிக்கும் பாக்கியம் கிட்டவில்லை போலும்.எத்துணை அழகோடு,பணிவோடு,நன்றிப்பெருக்கோடுத் தங்களை ஏற்றிவிட்ட ஏணிகளை நினைவுகூர்ந்துள்ளீர்கள்.தங்களைப்போன்ற மாணவர்களால் ஏணிகளுக்குத்தான் பெருமை.ஆம்..ஒவ்வொரு ஆசிரிய,ஆசிரியையும் இரண்டாம் பெற்றோர்தான்.நான்கூட ஒரு ஆசிரியை என்ற முறையில் என்னிடம் பயின்ற மாணவ,மாணவியரைப் பார்க்கையில் என் தாய்மைப் பூரிப்பை உணர்ந்துள்ளேன்.யார் சொன்னது? ஆசிரியப்பணி 'thankless job' என்று?! அனைத்து ஆசிரியப்பெருமக்களுக்கும் 'ஆசிரியர்தின' வாழ்த்துக்கள்!

    ReplyDelete