Monday, September 1, 2014

உமக்கு இங்கு என்ன வேலை?

தொழுகைக்கூடத்தில் தீய ஆவியான பேய் பிடித்திருந்த ஒருவர் இருந்தார். அவரைப் பிடித்திருந்த பேய், 'ஐயோ! நாசரேத்து இயேசுவே, உமக்கு இங்கு என்ன வேலை? எங்களை ஒழித்துவிடவா வந்தீர்? நீர் யார் என எனக்குத் தெரியும். நீர் கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்று உரத்த குரலில் கத்தியது. (லூக்கா 4:33)

'உமக்கு இங்கு என்ன வேலை?'

நமக்குச் சம்பந்தமில்லாத இடத்தில் அல்லது சம்பந்தமில்லாத நேரத்தில் நாம் ஒரு இடத்தில் அல்லது ஒரு நேரத்தில் இருந்தால் நம்மைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் கேள்வியே இது.
'உனக்கு இங்கு என்ன வேலை?'

சொலவடையாகச் சொன்னால் 'இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை!' என்று சொல்வார்கள்.

இடத்திற்கும், நேரத்திற்கும் ஒருவர் பொருந்தவில்லை என்பதையே இந்தக் கேள்வி காட்டுகிறது.

இன்று காலையிலிருந்து கனவுகள் பற்றியே எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது. பல நேரங்களில் கனவுகளும் நம் வாழ்வில் பொருந்தாதவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு, இன்று நான் அதிகாலை கண்ட கனவு இதுதான்.

அருட்தந்தை ஒருவர் இறந்து விட்டார். அவரது இறந்த உடலை ஒரு பெரிய அறையில் வைத்திருக்கிறார்கள். வழக்கமாக நீளவாக்கில் வைக்கப்படும் நிலைக்குப் பதிலாக சிக்சாக் வடிவில் வைத்திருந்தார்கள். இதுவே ஒரு விநோதம். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களோடு நானும் நிற்கிறேன். அங்கே எனக்குப் பரிச்சயமான இரண்டு அருட்தந்தையர்களைப் பார்க்கிறேன். அவர்களும் இறுதிச் சடங்கிற்கு வந்திருக்கிறார்கள். இறந்தவரை எப்படித் தெரியும் உங்களுக்கு என அவர்களிடம் நான் கேட்கிறேன். அவர்கள் இவரோடு படித்ததாகச் சொல்கிறார்கள். அந்த இருவரும் எனக்கு அடுத்த வருடம் குருப்பட்டம் பெற்றவர்கள். இறந்தவரோ மிகவும் மூத்தவர். அப்படியிருக்க அவர் எப்படி இவர்களோடு படித்திருக்க முடியும். நிறைய ஆயர்கள் திருப்பலிக்கு வருகிறார்கள். அதில் ஒரு ஆயர் நீர்மாலை எடுக்கிறார். 'என் மறைமாவட்டத்தைச் சார்ந்த அருட்பணியாளர். நான் தான் நீர்மாலை எடுப்பேன்' என்கிறார். அவர் நீர்மாலை எடுக்க அவருக்கு மேலே வெள்ளை வேட்டியைப் பிடித்துக் கொண்டு நான்கு பேர் செல்கின்றனர். கொஞ்ச நேரத்தில் நான் ஒரு வயல்வெளியில் இருப்பதாகவும் அங்கே எனக்குத் தெரிந்த அருட்தந்தை ஒருவர் மைக் பிடித்துப் பேசிக் கொண்டிருப்பதையும் பார்க்கிறேன்.

கொஞ்ச நேரத்தில் விழித்துவிட்டேன். இந்தக் கனவு மட்டும் நினைவில் இருந்தது. மறந்துவிடக் கூடாது என்பதற்காக வேகமாக எழுதி வைத்தேன்.

இந்தக் கனவில் நிறைய விநோதங்கள்: சிக்சாக் வடிவில் வைக்கப்படும் உடல், மூத்தவரோடு இளையவர்கள் படித்ததாகச் சொல்வது, ஆயர் நீர்மாலை எடுப்பது, அந்த நேரம் வெள்ளைத் துணி பிடிப்பது (இது இந்துக்கள் மட்டும் செய்யக் கூடியது!), வயல்வெளியில் ஒருவர் மைக் பிடித்துப் பேசுவது.

கனவுகள் ஒன்றும் புதிதல்ல. மனித குலம் தோன்றியதிலிருந்து கனவுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. நம் மூதாதையர் கனவுகளின் வழி கடவுள் பேசுவதாக நம்பினர். ஆகையால் தான் பழைய ஏற்பாட்டு யோசேப்பு, தானியேல் நூல்களிலும் புதிய ஏற்பாட்டு யோசேப்பு நிகழ்விலும், இயேசுவின் இறப்பின் போது பிலாத்தின் மனைவி கனவு காண்பதிலும் என கடவுளின் உரையாடல் இருப்பதாக விவிலிய ஆசிரியர்கள் எழுதுகின்றனர்.

கனவுகள் நமக்குச் சொல்வது என்ன?

அ. கனவு ஒரு தனிப்பட்ட எதார்த்தம். அதாவது இப்போது நான்கு பேர் ஒரு அறையில் இருக்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். நான்கு பேருமே கண்ணைத் திறந்து பார்த்தால் அவர்களுக்கு முன் இருக்கும் சுவர் வெள்ளை எனச் சொல்லிவிடலாம். ஆனால் ஒரே அறைக்குள் இருக்கும் நான்கு பேருக்கும் ஒரே மாதிரி கனவு வருவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட எதார்த்தம்தான் கனவு.

ஆ. கனவுக்கும் உடலுக்கும் தொடர்பு இருக்கிறது. கனவில் கால்ப்பந்து விளையாடுவதுபோல நினைத்து கட்டிலை உதைத்துக் கட்டுப்போட்ட ஒருவரை நான் பார்த்தேன். 'Wet dreams' வகைக் கனவுகளில் கனவுக்கும், உடலுக்கும் உள்ள தொடர்பு நன்றாகவே தெரிகிறது.

இ. கனவுகள் நம்மைப் பற்றி ஏதோ சொல்கின்றன. கனவுகள் ஒருவரின் மனநிலையை வெளிப்படுத்தும் என்ற உண்மையை உலகறியச் செய்தவர் சிக்மண்ட் பிராய்ட். மனித மனத்தின் வன்முறையும், பாலியில் உணர்வும் கனவில் வெளிப்படுவதாகச் சொல்வார் அவர். பல வகைக் கனவுகளை ஆராய்ந்து அவற்றின் அர்த்தங்களையும் எழுதியுள்ளார். கனவுகள் நம் ஆழ்மனத்தோடு தொடர்புடையவை. நாம் தூங்கும் போது நம் ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது. இந்த ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்புடையது. நாம் தினமும் சராசரியாக 5 முதல் 8 கனவுகள் காண்பதாகவும் இதில் 0.001 சதவிகதமே காலையில் நம் நினைவுக்கு வருகின்றன என்றும் சொல்கிறது ஆய்வுகள்.

'உடம்பு என்றால் கனவுகள் வாங்கும் பை தானே' என்கிறது ஒரு திரைப்படப் பாடல். 'கண்ணால் காண்பது கனவோடு போகும்' என்பார் கண்ணதாசன். நம் உடல் கனவுகள் வாங்கும் பை என்றால் அந்தக் கனவுகளை விற்பவன் யார்?

'உமக்கு இங்கு என்ன வேலை?' என்று கனவுகளைப் பார்த்து நாம் கேட்க முடிவதில்லை. அப்படிக் கேட்டாலும் அவைகள் வரத்தான் போகின்றன. விழித்திருக்கும் போது 'இதை மட்டும் சிந்தி! மற்றதை மற!' என்று நாம் மூளைக்கு ஆணையிடுவதுபோல கனவுக்கு நாம் கட்டளைகள் இட முடிவதில்லை. ஆனால் மூளை ஒரு மிகத் திறன்வாய்ந்த கணிணி. அது ஒரு நல்ல திரைப்பட இயக்குநர். நாம் பகலில் பார்ப்பதையும், கேட்பதையும், தொட்டு உணர்வதையும், சுவைப்பதையும், நுகர்வதையும் அழகாக பிராசஸ் செய்து அதை அப்படியே கனவாக ஓட்டி விடுகிறது.

உண்மையில் நேற்று நடந்தது இதுதான்: எங்கள் பங்கில் ஒருவர் இறந்து விட்டார். அவரின் இறுதிச் சடங்கிற்கு புக்கிங் செய்ய அவரின் உறவினர் வந்திருந்தார்கள். இறந்தவரைப் பற்றிய குறிப்பை நான் எழுதிக் கொண்டிருந்தபோது வந்திருந்த பெண்மணி, 'ஏன் டேபிளை நேராப் போடாம zig-zagகாக போட்டிருக்கிறீர்கள்?' எனக் கேட்டார். நேற்று மாலை இரண்டு அருட்தந்தையர்கள் மேற்படிப்பிற்காக எடுத்துக் கொண்ட முயற்சிகள் பற்றிக் கேட்டேன். நேற்று மதியம் எங்கள் பங்கிற்கு உணவருந்த எங்கள் மறைவட்டத்தின் ஆயர் ஒருவர் வந்திருந்தார். தூங்கச் செல்வதற்கு முன் இளையராஜா பாடல்கள் கேட்டேன். 'அன்பைச் சுமந்து சுமந்து' என்ற பாடலில் சிவகுமாருக்கு அவரது உறவினர்கள் நீர்மாலை எடுக்கும் காட்சியோடு வீடியோவை நிறுத்தி விட்டேன். பின் வயல்வெளியில் சிவாஜி நடந்து வரும் 'பூங்காற்று திரும்புமா' பாட்டு பார்த்தேன். அந்த நேரம் தொலைபேசி ஒலித்தது. என்னோடு பேசியவர் தான் கடைசியாக மாதா டிவியில் பேசியதாகவும் அதைப் பார்த்துவிட்டு அதுகுறித்து விமர்சனம் தருமாறும் கேட்டார். இந்த எல்லா டேட்டாவையும் எடுத்த மூளை அப்படியே திரைக்கதை, வசனம் என அமைத்து இரவில் ஒரு கனவாக ஓட்டிவிட்டது.

இதே போல நினைவில் வரும் ஒவ்வொரு கனவையும் ஓடவிட்டுப் பார்க்க ஆசைதான்.

ஆனால் அது நம் வேலை இல்லையே!

'உமக்கு இங்கு என்ன வேலை?'


2 comments:

  1. 'கனவுகள்' நினைக்கும் போதே இனிக்கும் ஒரு வார்த்தை.பொதுவாக நம்முடைய நிறைவேறாத ஆசைகள் ஆழ்மனத்தில் புதையுண்டு அவ்வப்போது எட்டிப்பார்ப்பதாகச் சொல்கிறது விஞ்ஞானம்.பல நேரங்களில் நாம் செய்வதறியாது, சில முடிவுகளை எடுக்க முடியாது தவிக்கின்றபோது குழப்பத்தை உணர்த்தும் கனவுகளும் உண்டு.நம் அன்னை மரியாளுக்கும், இடையர்களுக்கும்,ஞானிகளுக்கும் கிடைத்த மாதிரி ' நற்செய்தி' கொண்டுவரும் கனவுகள் கூட வரத்தான் செய்கின்றன.என்னைப்பொறுத்தவரை 'பகல்கனவை' வரவேற்கிறேன்.ஏனெனில் அவற்றை மட்டும்தானே நம்மால் ' நனவாக்க' முடியும்? ஆனால் நம் தந்தையின் கனவு கொஞ்சம் ஓவரா இல்லை?!..ஆமாம்...நான் ஏன் இப்பொழுது கனவுகளைப்பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்? அது என் வேலையா என்ன?...

    ReplyDelete
  2. ஆம் கனவுகள் ஒன்றும் புதிதல்ல ஆனால் கனவுகளையும் எழுதி வைப்பதுதான் ரொம்ப ஓவர்....உங்கள் எழுத்து ஆர்வத்திற்கு எல்லையே இல்லை. கனவுகள் பற்றிய உங்கள் பதிவுக்கு நன்றிகள்.

    உடம்பு என்பது..உண்மையில் என்ன..??கனவுகள் வாங்கும் பை தானே!!

    https://www.youtube.com/watch?v=ds61fQM1Y4s

    ReplyDelete