Tuesday, September 30, 2014

அதையே நான் நாடித் தேடுவேன்!

நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்.
அதையே நான் நாடித் தேடுவேன்.
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம்
நான் குடியிருக்க வேண்டும்.
ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்.
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
(திபா 27:4)

இன்று காலை கல்லூரி நூலகத்தில் தன் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் அருட்பணியாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவரின் ஆய்வுக்காக அவர் எடுத்துக்கொண்டது 'திபா 27'.

திபா 27ஐ எபிரேய மொழியில் இருந்து 'லிட்டரலாக' (அதாவது இருப்பது போல!) மொழி பெயர்த்துத் தரச் சொன்னார்.

அதை மொழி பெயர்த்தபோது 'நான் நாடித் தேடுவேன்' என்ற வார்த்தை என்னைக் கவர்ந்தது. இந்தத் திருப்பாடலை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம் (1-4 மற்றும் 5-15). இரண்டு பகுதிகளிலும் மையமாக இருக்கின்ற வார்த்தை 'நாடித் தேடுதல்'.

தன் அரசில் தனக்கு பகைவர் மேல் வெற்றி, சுற்றிலும் மனைவியர், அறிவுரை கூறும் அமைச்சர், சொன்ன வேலையைச் செய்யும் பணியாட்கள், கருவூலம் நிறைய பணம், திடமான உடல், பாதுகாப்பு என எல்லாம் தனக்கு இருந்தாலும் தாவீது அரசர் நாடித் தேடுவது என்னவோ கடவுளைத் தான். நம்மைச் சுற்றியிருப்பவை ஒருகாலும் நம்முள் இருக்கும் வெற்றிடத்தை நிரப்பப் போவதேயில்லை. ஒரு வெற்றிடம் நிரம்பும்போது மற்றொரு வெற்றிடம் பிறந்து விடுகிறது. ஒரு நொடியில் நமக்கு மகிழ்ச்சி தரும் பொருள் அடுத்த நொடியில் துன்பம் தரும் பொருளாக மாறிவிடுகிறது.

தாவீதின் விண்ணப்பம் மூன்று கோரிக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது:

அ. ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்.
ஆ. அவரின் அழகை நான் காண வேண்டும்.
இ. அவரின் திருவுளத்தை அறிய வேண்டும்.

இஸ்ராயேல் மக்கள் வரலாற்றில் கோவில் மிக முக்கியமானதாக இருந்தது. இன்று நாம் ரொம்ப ஈஸியா சொல்லிடுறோம்: 'கடவுள் எங்கும் இருக்கிறார்!' 'அவரை வீட்டிலேயே கும்பிடலாம்!'

ஆனால் கோவில் என்ற இடம் கண்டிப்பாகத் தேவை என்றே எண்ணத் தோன்றுகிறது. கோவில் முக்கியமில்லையென்றால் எதற்காக நூற்றுக்கணக்கான கிமீ பயணம் செய்து எருசலேமுக்கு வர வேண்டும். 'கோயில்' என்றால் 'கடவுள்' என்றே நினைத்தார்கள்.

இன்று நாம் கடவுளை வெறும் ஆன்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் அப்ளிகேஷனாக மாற்றிவிட்டோமோ என்று அஞ்சத் தோன்றுகிறது. அதான் கடவுள் எல்லா இடத்திலயும் இருக்கார்ல என்று சொல்லிக் கொண்டு அவரை ஒரு அலைபேசியாக எல்லா இடத்திலும் தூக்கிக் கொண்டு போகப் பார்க்கிறோம்.

தியானம் செய்கிறேன் என்று சொல்லி ஒரு மணி நேரம் நம் டிவி அறையில் உட்கார்வதற்கும், கோவிலில் அமர்வதற்கும் வித்தியாசம் இருக்கவே செய்கின்றது.

ஆண்டவரைத் தேடுவோம்!
அவரை ஆலயத்தில் தேடுவோம்!

1 comment:

  1. 27ம் திருப்பாடல்..இறைவனுக்கு நம் மனத்திலிருந்து எழுப்பும் புகழ்ச்சிப்பண்.எலலாவற்றுக்கும் இடம்,பொருள்,காலம் இருப்பதுபோல் இறைவனை வழிபட உகந்த இடம் 'ஆலயமே'.படைத்தவனை விட்டு விட்டு,படைப்புக்களின் மீது நம் நம்பிக்கையை வைக்கும்போது மிஞ்சுவதெல்லாம் வெறுமையும்,கண்ணீரும்தான்..இதை உணர்ந்தோமெனில் கண்டிப்பாக நாம் " ஆண்டவரைத் தேடுவோம்; அவரைஆலயத்தில் தேடுவோம்".இரத்தினச்சுருக்கமாக கருத்தை முன்மொழிந்துள்ள தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete