Saturday, May 10, 2014

கன்னத்தில் முத்தமிட்டால்

அவரைக் காட்டிக் கொடுக்க இருந்தவன் 'நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள்' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, 'ரபி வாழ்க' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், 'தோழா! எதற்காக வந்தாய்?' என்று கேட்டார். (மத்தேயு 26:48-50)

இன்று யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுத்த நிகழ்வை வகுப்பில் படித்தோம்.

எதற்காக யூதாசு இயேசுவைக் காட்டிக் கொடுக்க வேண்டும்? என்று கேட்பதை விட, எதற்காக யூதாசு முத்தமிட்டு இயேசுவைக் காட்டிக் கொடுக்க வேண்டும்? என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும்.

இயேசு தான் உயிர்த்தபின் தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து அழுதிருப்பாரானால் கண்டிப்பாக யூதாசின் முத்தத்திற்காகத் தான் அழுதிருப்பார்.

'முத்தமிடும்போது மூக்கும் மூக்கும் உரசுமா?' என்று கதாநாயகனைப் பார்த்துக் கேட்பார் கதாநாயகி.

இயேசுவை இரண்டு பேர் முத்தமிட்டதாக விவிலியம் சொல்கிறது:

1. அவரின் பாதங்களைக் கழுவி முத்தமிட்ட பெண்.
2. அவருடைய திருத்தூதர்களில் ஒருவரான யூதாசு.

இயேசுவின் தாயும்;, தந்தையும் கண்டிப்பாக அவரை முத்தமிட்டிருப்பார்கள். அவரின் உறவினர்கள் சக்கரியா - எலிசபெத்து, கீழ்த்திசை ஞானியர், இடையர்கள் என இயேசுவின் குழந்தைப் பருவத்தில் அவரை உச்சிமுகர்ந்து முத்தமிட்டிருப்பார்கள்.

யூதாசு ஏன் முத்தமிட்டுக் காட்டிக் கொடுக்க வேண்டும்?

இரண்டு காரணங்கள்:

1. இயேசுவின் பணி அதிகமாக கலிலேயாவில் இருந்தது. யூதேயாவிலிருந்து வந்த மூப்பர்கள், தலைமைக்குருக்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களுக்கு அவரை அடையாளம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் ஒரு அடையாளம் தேவைப்பட்டது.

2. இயேசுவைக் கைது செய்த நேரம் இரவு நேரம். இயேசு காலத்தவரின் ஆடை முறைகள் ஒரே மாதிரி இருந்திருக்கலாம். ஆகவே இயேசுவை தனியே அடையாளப்படுத்த முத்தம் தேவைப்பட்டது.

யூதர்களின் வாழ்க்கை மரபில் முத்தம் நட்பின் அடையாளமாக இருந்தது. இயேசுவின் சமகாலத்து இலக்கியங்கள் மூவகை முத்தங்களைப் பற்றி எழுதுகின்றன:

1. பெரியவர்கள் தங்களைவிட வயது குறைந்தவர்களுக்கு ஆசியின் அடையாளமாக வழங்கும் நெற்றி முத்தம்.

2. நண்பர்கள் ஒருவர் மற்றவரின் நட்பை வெளிப்படுத்தும் அடையாளமாக இடும் கன்னத்து முத்தம்.

3. அடிமைகள் தங்களின் அர்ப்பணத்தையும், கீழ்ப்படிதலையும் காட்டும் அடையாளமாக இடும் பாதத்து முத்தம்.

இதன் அடிப்படையில் பார்த்தால் இயேசுவின் பெற்றோர் அவருக்கு வழங்கியது முதல்வகை. யூதாசு கொடுத்தது இரண்டாம் வகை. பாதம் கழுவும் பெண் கொடுத்தது மூன்றாம் வகை.

தமிழ் மரபில் முத்தமிடுதல் இலக்கியத்திலேயே உறைந்து விட்ட ஒன்றாக இருக்கின்றது.

'நான், நீ என்று சொல்லும் போது உதடுகள் ஒட்டாது. நாம் என்று சொல்லும் போது உதடுகள் கூட ஒட்டும்' என்று பேருந்துகளில் நாம் காணும் கலைஞரின் வார்த்தைகளை முதன்முறை நான் வாசித்தபோது என்னில் தோன்றியது முத்தம்.

விக்கி ஆன்ஸ்வர்ஸில் 'தமிழில் முத்தம்' என்று அடித்தால் இரண்டு வகை என வருகிறது:

1. ஆப்பிள். கன்னத்தில் கொடுப்பதாம்.
2. சாக்லேட். இதழ்மேல் இதழ் பதித்துக் கொடுப்பதாம்.

இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டார்களாம்:

'ஏன்டா, இந்தப் பொண்ணுங்கள்ளாம் நாம முத்தமிடும்போது கண்ணை மூடிக்கிறாங்க?' என்று கேட்டானாம் ஒருவன்.

மற்றவன் சொன்னானாம்: 'நாம சந்தோசமா இருக்குறத அவங்களால பார்க்க முடியாமத்தான்!'

ஆனால் கண்களை மூடுவதற்கு இது காரணமன்று.

ப்யோர் சயன்ஸ். கண்ணுக்கு அருகில் எந்த ஒரு பெரிய பொருள் வந்தாலும் ஏதோ ஒரு ஆபத்து வருவதாக எண்ணி இமைகள் மூடிக்கொள்ளும். இதன் பெயர் அனிச்சை செயல் (reflex). ஆனால் தொடர்ந்து கண்களை மூடிக்கொண்டிருப்பது அனிச்சை செயல் அன்று.

என்னைப் பொறுத்தவரையில் முத்தம் என்றால் இதுதான்:

முத்தம் என்றால் முத்திரை. முத்தத்திற்கும் முத்திரைக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். அன்பின், நட்பின், மரியாதையின், பாசத்தின், ஆசியின், பக்தியின் அடையாளமாக நாம் அன்பு செய்பவரின் மேல் பதிக்கும் முத்திரையே முத்தம்.

இந்த முத்திரை தடமாக இருந்தால் பாசிட்டிவ். இதே முத்திரை தடயமாக மாறினால் அது நெகட்டிவ்.

யூதாசின் முத்தம் ஒரு தடயம்.

பாதம் கழுவும் பெண்ணின் முத்தம் ஒரு தடம்.

நம் உடலின் உணர்வு நரம்புகள் மெல்லியதாய்க் கோர்த்து நிற்கும் பகுதிதான் இதழ்கள்.

முதல் முத்தம்.
முதல் காதல்.
முதல் ஸ்பரிசம்.
முதல் பங்குத்தளம்.
இவையெல்லாம் மறக்க முடியாதவை என்பார்கள்...

யூதாசின் முத்தம் இயேசுவுக்கு முதல் முத்தம் அல்ல...

இயேசு மறந்திருப்பார்...

'நான் எதிர்பாரத நேரத்தில்
அவள் தரும் முத்தம்
எனக்கு ஆஸ்கர்'

... எங்கோ வாசித்தது...

1 comment:

  1. ஆம்,இயேசு தன் வாழ்க்கையைக் திரும்பிப் பார்த்திருப்பாரேயெனில் யூதாசு அவருக்கக் கொடுத்த முத்தத்திற்காக நிச்சயம் அழுதிருப்பார்.அதற்காக மட்டுமா அழுதிருப்பார்..நம்மையும் நினைத்துக்கூடத்தான்..சில பல வசதிகளுக்காக நாம் சார்ந்துள்ள மத்த்தையே மறுதலிக்கையில், நம் வலிமையை நமக்குக் கீழே இருக்கும் நலிந்தவர்களிடம் காட்டுகையில், நம் ஞான மேய்ப்பர்களைப்பற்றி புறங்கூறுகையில், நம்மை அடுத்திருப்பவரிடம் உதட்டளவில் புன்னகைத்து அவர்களுக்குப்பின்னால் கல்லறை கட்டுகையில்...நாமும் தான் அவரைக்காட்டிக் கொடுக்கிறோம்.அவர் நம்மை உச்சி முகர்ந்து முத்தமிட நமக்குத் தகுதி இல்லையெனினும் நாம் அவர் பாத்த்தை முத்தமிடும் மரயமதலேன்களாக மாறுவோம்.அவரின் அழுகையைப் புன்னகையாய் மாற்றுவோம்.....

    ReplyDelete