Wednesday, May 21, 2014

சீறி எழுவதேன்? சூழ்ச்சி செய்வதேன்?

'உனக்கு முன் நிற்கும் ஒரு மனிதரை நீ காயப்படுத்தாதே! ஏனெனில் ஏதோ ஒரு காயத்தால் அவர் அழுது கொண்டிருப்பார்!' என்பது செல்டிய பழங்குடி மக்களிடம் புழங்கும் ஒரு பழமொழி.

ஒவ்வொருவரின் இதயத்திற்குள்ளும் ஒரு கண்ணீர்ப் பெருங்கடல் இருக்கின்றது. இவ்வளவு கண்ணீரைத் தனக்குள் வைத்திருக்கும் மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் அடுத்தவர்களின் கண்களில் கண்ணீரைக் கூட்டுவதிலேயே கவனமாக இருக்கின்றனரே! ஒரு வேளை தங்களிடம் உள்ள கண்ணீர்தான் மற்றவர்களின் கண்ணீருக்கும் காரணமாகிவிடுகின்றதோ?

மனிதர்கள் ஏன் மனிதர்களுக்கு எதிராக எழ வேண்டும்?

தன் இனத்தை அளவுக்கதிகமாக அன்பு செய்யும் இனமும் மனித இனம்தான். தன் இனத்தை 'அழிக்க வேண்டும்!' என நினைத்து அழிப்பதும் மனித இனம்தான்.

மனிதர்களின் உள்ளுணர்வை வன்முறை - காமம் என இரண்டு வகையாகப் பிரிக்கின்றார் உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டு. இந்த இரண்டையும் கட்டுக்குள் வைக்க மனிதர்களுக்கு கடவுளும், சமூகமும் தேவைப்படுகின்றன(ர்).

'வேற்றினத்தார் சீறி எழுவதேன்? மக்களினங்கள் வீணாகச் சூழ்ச்சி செய்வதேன்?

சீறி எழுவதேன்? சூழ்ச்சி செய்வதேன்?

இந்த இரண்டு கேள்விகளின் அர்த்தம் என்ன?

'மனிதன் மனிதனுக்கு ஓநாய்!' (homo homoni iupus) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட ஒரு முதுமொழி.

இந்த இரண்டு கேள்விகளின் பின்புலத்தில் இருப்பது இஸ்ரயேல் மக்களின் அரசியல் வரலாறு. கடவுள் ஒரு அரசரை (தாவீதை அல்லது சாலமோனை - உறுதியான தகவல் பாட்டில் இல்லை!) தேர்ந்தெடுக்கிறார். அந்த அரசரைப் பிடிக்காதவர்கள் அவருக்கு எதிராகச் சீறி எழுகின்றனர். அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர். இந்த நிலையில் ஆண்டவர் எதிரிகளை எல்லாம் அழித்து இவரின் அரசரை நிலைநாட்டுவார் என்று இவருக்கு நம்பிக்கை தருவதாகவும், எதிரிகளுக்கு எச்சரிக்கை தருவதாகவும் அமைந்திருக்கிறது திருப்பாடல் 2.

நல்ல நிலையில் இருக்கும் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் சீறி எழுவதும், அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்வதும் நாம் அன்றாடம் காணும், அனுபவிக்கும், சொல்லக் கேட்கும் நிகழ்வுதான்.

சீறி எழுபவர் யார்? சூழ்ச்சி செய்பவர் யார்?

'டோம் அன்ட் ஜெரி' நாடகம் பார்த்ததுண்டா? டோம் கேட் - ஜெரி மவுஸ். டோமிற்குக் கோபம் உண்டாக்கும் ஜெரி. அப்படிக் கோபித்துத் தன்னை விரட்டும் போது தன் சூழ்ச்சியால் முறியடிக்கும். டோமிடம் இருப்பது சீற்றம். ஜெரியிடம் இருப்பது சூழ்ச்சி.

வலிமையானவனிடம் இருப்பது சீற்றம். வலிமையில்லாதவனிடம் இருப்பது சூழ்ச்சி.

நம்மிடம் யார் கோபப்படுவார்கள்? நம்மைவிட வலிமையானவர்கள்தான். கோபம் மேலிருந்து கீழ்நோக்கி செல்வது. சூழ்ச்சி கீழிருந்து மேல் நோக்கி செல்வது.

வீட்டுப்பாடத்தை மாணவன் எழுதிக் கொண்டு வராததால் அவன் மேல் கோபப்படுகின்றார் ஆசிரியர். இந்தக் கோபத்திற்கு எதிராகக் கோபப்பட முடியாமல் அவரது சேரில் எண்ணெய் தடவி அவரை அழுக்காக்க சூழ்ச்சி செய்கின்றான் மாணவன்.

தாவீதின் வாழ்வில் இந்த இரண்டையும் அவர் எதிர்கொள்கின்றார். வலுவானோர், வலுவற்றோர் என அனைவரும் அவருக்கு எதிரிகளாக இருந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் ஆண்டவரின் பதில் என்ன?

மற்றவர்களின் சீற்றத்தாலும், சூழ்ச்சியாலும் வருத்தப்பட்ட தாவீதுக்கு ஆண்டவர் ஏழு வாக்குறுதிகளை வழங்குகின்றார்:

1. நீர் என் மகன். ஆம். மகன். அடிமையல்ல. மகனுக்கு எல்லா உரிமையும் உண்டு.

2. உம்மை நான் பெற்றெடுத்தேன். தத்தெடுக்கவில்லை. பெற்றெடுத்தேன். கடவுள் தன்னையே பெண்ணாக உருவகப்படுத்துகின்றார். பெற்ற பிள்ளை தாயின் உடலிலும் பங்கு பெறுகிறது. ஆனால் தத்துப் பிள்ளை தாயின் உணர்வுகளில் மட்டுமே பங்கு பெறுகிறது.

3. நீர் விரும்புவதை என்னிடம் கேள். 5 வயது வரை ஒரு குழந்தை இந்த உலகில் மிகவும் வலிமையானவர் தன் அப்பா தான் எனவும், அவரை வெல்ல யாராலும் முடியாது எனவும் நினைக்குமாம். அந்தக் குழந்தையின் மனப்பக்குவத்தைப் பெற தாவீதை அழைக்கின்ற கடவுள் இங்கே ஒரு அப்பாவாக வருகின்றார்.

4. பிற நாடுகளை உனக்கு உரிமைச் சொத்தாக்குவேன். உரிமைச் சொத்து என்பது பங்கு போட முடியாதது. அதாவது வெற்றி முழுவதும் உனக்கே. பங்கு போடவே ஆள் இருக்காது. நீதான் என் எல்லாம்!

5. பூவுலகை உனக்கு உடைமையாக்குவேன். அதாவது, உனக்கு எதிராக எவருமே இருக்க மாட்டார்கள்.

6. இருப்புக்கோலால் நீர் தாக்குவீர். ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் தங்கள் கைகளில் இருப்புக் கோல் வைத்திருப்பார்கள். ஆடுகளைக் கவர ஓநாய் வந்தால் ஒரே அடி அடித்து ஓநாயைக் கொன்று தங்கள் மந்தையைக் காப்பாற்றுவார்கள். முதல் அடி சரியாக விழுந்தால் தான் ஓநாய் இறக்கும். அல்லது அது அடிப்பவரின் மேலேயே பாய்ந்து விடும். இந்த முதல் அடியை வலிமையாக விழச்செய்வது இரும்புக்கோல்தான்.

7. குயவன் கலத்தைப் போல அவர்களை நொறுக்குவீர். பானையை உடைத்து விட்டால் அது ஒன்றுக்கும் பயன்படாது. அதிலிருந்து புதிய பானையை செய்யவும் முடியாது. சுட்ட களிமண் சுடாத களிமண்ணோடு கலக்க முடியாது. உடைந்த செங்கலிலிருந்து ஒருபோதும் புதிய செங்கலை உருவாக்க முடியாது. தாவீதின் எதிரிகள் தங்களுக்கும் பயன்படாமல், மற்றவர்களுக்கும் பயன்படாமல் அழிந்து போவர்.

இந்த ஏழு வாக்குறுதிகளும் தாவீதுக்கு நம்பிக்கை தருகின்றன. இவைகளெல்லாம் நடக்கவில்லை என்றாலும் 'கடவுள் என்னோடு இருக்கிறார்! நான் அவருக்கு செல்லப்பிள்ளை!' என்ற நம்பிக்கை தாவீதுக்கு கண்டிப்பாக வந்திருக்கும்.

'நீரே என் மகன்!' என்ற வார்த்தையை இங்கிருந்துதான் நற்செய்தியாளர்கள் எடுத்து இயேசுவின் திருமுழுக்கின்போதும், உருமாற்றத்தின் போதும் வானகத்தந்தையின் வார்த்தையாக எழுதுகின்றனர்.

இந்தத் திருப்பாடல்தான் புதிய அரசர் அரியணையில் ஏறும்போது இஸ்ரயேல் மக்கள் பாடிய திருப்பாடல்.

நம் வாழ்வில் மற்றவர்களின் சீற்றமும், சூழ்ச்சியும் தாங்க முடியாத போது இந்த ஏழு வாக்குறுதிகளை நினைவில் கொள்வோம். உடைந்த பானையைப் போல அவர்கள் அழிய வேண்டாம். பாவம்! ஆனால், 'கடவுளின் செல்லப்பிள்ளைகள் நாம்!' என்ற நம்பிக்கையை இது நமக்கு தரட்டும்! ஒவ்வொரு நாளும் நாமும் அரசர்கள்தாம்!

சீறி எழுவதேன்! சூழ்ச்சி செய்வதேன்!

3 comments:

  1. Thank you for your message

    ReplyDelete
  2. இன்றையப்பகுதியானது ஆண்டவர்க்கும்,அவர்தம் அருள்பொழிவு பெற்றவர்களுக்கும் எதிராக சூழ்ச்சி செய்வோருக்கு நேரும் கதியை விளக்குகிறது.அதே சமயம் இறைவன் தாவீதுக்குத் தரும் வாக்குறுதிகள் அவரின் அன்புப் பிள்ளைகள் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக்கூறும் உணர்வை ஏற்படுத்துகிறது.'கோபம் மேலிருந்து கீழ் நோக்கியும் சூழ்ச்சி கீழிருந்து மேல் நோக்கியும் செல்கிறது'. அழகாக observe பண்ணி அதை நேரம் பார்த்து பிறருக்குக் கொடுக்கும் தங்கள் சாமர்த்தியத்துக்கு ஒரு 'சபாஷ்'.

    ReplyDelete