Thursday, May 15, 2014

மேலானதைப் பெற...

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: 'ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்...வணிகர் ஒருவர் நல்முத்துக்களைத் தேடிச் செல்கிறார்...விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்...' (காண். மத்தேயு 13:44-52)


விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைப் போதனை தொடர்கிறது. புதையல், முத்து, வலை என மூன்று உவமைகளை முன்வைக்கின்றார் இயேசு. நோக்கியா ஃபோன் பயன்படுத்திவிட்டு சாம்சங் ஃபோன் பயன்படுத்தினாலோ, ஆண்ட்ராய்ட் ஃபோன் பயன்படுத்திவிட்டு ஐஓஸ் ஃபோன் பயன்படுத்தினாலோ பயன்படுத்துபவர்கள் சொல்லும் ஒரு புகார் என்ன தெரியுமா? 'இதுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லையே!' நம் மூளை எப்போதும் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியது. ஃபிரேம் ஒன்றைக் கட்டி வைத்து அதற்குள் மற்றதைப் போட்டுப் பார்த்துத்தான் புரிந்துகொள்ளும். எடுத்துக்காட்டாக, வெள்ளை நிற பேப்பர் நம் கண்முன் இருக்கும் போது நம் மனதில் உள்ள வெள்ளை என்ற ஃபிரேமிலும், பேப்பர் என்ற ஃபிரேமிலும் பொருத்தி, ஓகே! இது வெள்ளை பேப்பர் என்று சொல்கிறது. இந்தத் தொடர்புபடுத்துதல் இல்லாதவரைத்தான் நாம் 'அப்நார்மல்' என்றும் 'சப்நார்மல்' என்றும் அழைக்கிறோம். இன்றைய உவமைகளை மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றிற்கொன்று தொடர்பு இல்லாதது போலவே இருக்கிறது. மூன்று உவமைகளும் வெவ்வேறு 'அர்த்த வளையங்களைச்' (semantic field) சார்ந்தவை. புதையல் நிலத்தில் கண்டெடுப்பது. முத்து கடலில் கண்டெடுப்பது. வலை கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் மாறி மாறிச் செல்வது.

இயேசுவின் முதல் இரண்டு உவமைகள் மேல்தட்டு மக்களின் வாழ்க்கை முறையோடு தொடர்புடையவை. புதையல் எல்லார் கண்ணுக்கும் படலாம் என்றாலும் பணம் உள்ளவர்கள்தாம் அதை நிலத்தோடு வாங்கிக்கொள்ள முடியும். நல்முத்தைக் காண்பவர்கள் அதைப் பெற வேண்டுமென்றாலும் தங்களிடம் உள்ள முத்துக்களையெல்லாம் துறக்க வேண்டும். பணமும், முத்தும் சாதாரண மக்களிடம் இருக்க வாய்ப்பில்லையே? வலை உவமை நேரடியாக மற்ற இரண்டோடு தொடர்புடையதாக இல்லை. முதல் இரண்டு உவமைகளில் வரும் வினைச்சொற்கள் 'செய்வினையிலும்', மூன்றாவது உவமையில் வரும் வினைச்சொற்கள் 'செயப்பாட்டு வினையிலும்' இருக்கின்றன. மேலும் மூன்றாவது உவமையின் விளக்கமும் அதனோடே தொற்றிக்கொண்டே இருக்கிறது.

இந்த உவமைகளைப் புரிந்து கொள்ளுமுன் இதை வாசிக்கும் போது என்னில் எழுந்த கேள்விகள் இவை:

புதையலைக் கண்டுபிடித்தவர் எதற்காக அதை மறுபடியும் மூடி வைக்க வேண்டும்? மூடி வைத்துவிட்டு ஏன் தன் சொத்தையெல்லாம் விற்று அந்த நிலத்தை வாங்க வேண்டும்? நான் வாசித்த புதையல் கதைகள் எல்லாம் அப்படித்தான் சொல்கின்றன.

வலையில் சிக்கிய கெட்ட மீன்கள் தீயில் எறியப்படுகின்றன. வலையில் சிக்காத தீய மீன்களும் கடலில் இருக்கின்றனவே. அவைகளுக்கு தீ பனிஷ்மென்ட் இல்லையா? கிறித்தவம் என்ற வலைக்குள் இருக்கப்போய்த்தானே 'மோட்சம், நரகம்' என்ற பயம் எனக்கு வருகிறது. கிறித்தவத்தில் இல்லையென்றால் இதுபற்றிக் கவலையில்லையே! எதற்காக நம் மதம் ஒரு பயமுறுத்தும் கருவியாக இருக்க வேண்டும்?

இந்த மூன்று உவமைகளையும் மூன்று வார்த்தைகளில் அடக்கி விடலாம் என நினைக்கிறேன்: முழுமை, முதன்மை, முறைமை. புரியலயா?

1. முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும்.
2. முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டும்.
3. முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

1. முழுமையாக வாங்கிக்கொள்ள வேண்டும். விண்ணரசு என்னும் புதையல் தனியே எடுக்கக் கூடிய ஒன்று அல்ல. அதை அதன் முழுமையான நிலத்தோடு வாங்கிக்கொள்ள வேண்டும். நம் வாழ்வில் வரும் மகிழ்ச்சி, நிறைவு, உயர்வு போன்றவை சிங்கிளாக வருபவை அல்ல. இறைவன் என்ற நிலத்தை நாம் முழுமையாக வாங்கும் போது அவைகளும் சேர்த்தே நமக்கு வருகின்றன. அவைகளை மட்டும் வைத்துக்கொள்ள நினைத்தால் காலப்போக்கில் அவைகளின் மதிப்பு குறைந்துவிடுகிறது. கொஞ்சம் ரியல் எஸ்டேட் மூளையோடு பார்ப்போமே! நாம் எடுத்த புதையலை நாம் செலவழித்து விட்டாலும், புதையல் இருந்த நிலம் என்று நிலத்தையும் நாம் நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளலாமே! ஆகையால் புதையலை மட்டும் எடுக்க வேண்டும். முழுமையாக நிலத்தையும் எடுத்துக்கொள்வோம். 'அனைத்திற்கும் மேலாக அவரது அரசையும் அதற்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். இப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத்தேயு 6:33).

2. முதன்மையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். நல்முத்தைப் பெற எம்முத்தையும் இழக்க முன்வர வேண்டும். நல்முத்தைக் கண்டும் பெற்றுக்கொள்ளாமல் பிறமுத்துக்களை வைத்திருத்தல் சால்பன்று. நல்முத்தைத் தேடுபவரே நல்முத்தைக் காண முடியும். இல்லத்தில் அமர்ந்துகொண்டே எல்லாம் கிடைக்கும் என நினைப்பது சிறப்பன்று. விண்ணரசையும், வாழ்க்கையையும் தேட வேண்டும். தேடிக் கண்டவுடன் வைத்திருப்பதை இழக்க வேண்டும். 'இதுவும் வேண்டும்! அதுவும் வேண்டும்!' என்ற பிளவு மனநிலை இறைவனின் டிக்ஷனரியில் கிடையாது. 'தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்தேனே!' - இந்தப் பழைய முத்துக்களை இழக்க வேண்டுமா? என நினைக்காமல் இழக்கத் துணிவோரே நல்முத்தை உரிமையாக்க முடியும்.

3. முறைமையாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நல்லதைத் தீயதிலிருந்து பகுத்தாயும் மனம் அவசியம். தீயதிலிருந்து நன்மையானதைப் பிரித்துப் பார்க்க வேண்டும். நன்மையைப் பற்றிக் கொள்ள வேண்டும். தீமையை விலக்கிவிட வேண்டும். இந்த உள்ளத்தைத்தான் சாலமோன் ஆண்டவரிடம் கேட்கின்றார் (1 அர 3:9-11). இதுதான் ஞானம். முறைமையானது எதுவோ அதையே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம் மனதிலும் ஒவ்வொரு நொடியும் ஆயிரம் எண்ணங்கள் ஓடும். அவற்றுள் நல்லது-தீயது எனப் பகுத்துப் பார்த்து முறைமையானதைச் சேர்த்துக்கொள்ளவில்லையென்றால் காலப்போக்கில் அழுகிய மீன்கள் நல்ல மீன்களையும் கொன்று விடும்.

இந்த மூன்று உவமைகளுக்குப் பொதுவானது என்ன? மேலானதைப் பெற தாழ்வானதை இழக்க வேண்டும். இறையரசையும் மற்ற அனைத்தையும் ஒப்பிடும்போது மற்றது தாழ்வே. மேலானைதைப் பற்றித் தாழ்வானதை விட இறைவனிடம் துணிச்சல் வேண்டுவோம்!

1 comment:

  1. நம் வாழ்க்கைப் பயணத்தில் நமக்குத் தெரிந்த விஷயங்களைக் கொண்டு தெரியாத விஷயங்களைப் புரிய வைத்திருக்கிறீர்கள். விண்ணரசை முதன்மையாக,முழுமையாக,முறைமையாகப் பெற நாம் மேலானதாக நினைப்பவற்றையும் இழக்கத் துணியவேண்டும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தையுள்ளீர்கள்.பாராட்டப்பட வேண்டிய முயற்சி.ஆனால் அதெப்படி,கிறித்துவத்தை மட்டும் 'மோட்சம்,நரகம்' என்று பயமுறுத்துவதாகச் சொல்கிறீர்கள்? வார்த்தைகள் வேறுபடினும் இம் மாதிரி பயங்களை எல்லா மதங்களும் ஏற்படுத்தத்தான் செய்கின்றன.தப்பிக்க முடியாது தந்தையே!

    ReplyDelete