Tuesday, May 13, 2014

எது உண்மை? எது பொய்?

அக்காலத்தில் இயேசு...விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்...ஒருவர் வயலில் நல்ல விதைகளை விதைத்தார்...ஒருவர் கடுகு விதையை எடுத்து...பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து...கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்! (காண். மத்தேயு 13:24-43).

விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம் என்று தன் உவமையைத் தொடங்கும் இயேசு அடுத்தடுத்து மூன்று உவமைகளை முன்வைக்கின்றார்: களைகள், கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு. களைகளின் உவமைக்கு இயேசுவே அர்த்தமும் கொடுக்கிறார்.

இந்த உவமைகளை எதற்காக மத்தேயு நற்செய்தியாளர் எழுதியிருக்க வேண்டும் என்று பார்ப்போமே!

முதலில் களைகள். தொடக்கத் திருச்சபை இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் வேகமாக வளர்ந்து வரும் நேரம். அதையொட்டியே தப்பறைக் கொள்கைளும் வளர்கின்றன. இயேசு கடவுளா? மனிதனா? அவர் எப்படிப் பாவத்தைப் போக்க முடியும்? அவர் உண்மையிலேயே உயிர்த்தாரா? இந்தத் தப்பறைகள் ஒரு பக்கம் விசுவாசிகளைப் பின்னோக்கி இழுத்தன. மற்றொரு பக்கம் திருத்தூதர்களின் துணிச்சலான போதனைகள். இதில் எது உண்மை? எது பொய்? என்று உணர முடியாத நேரம். இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் ஒருங்கே வளரும் நேரத்தில் யார் வெற்றி பெறுவார்? என்பது எல்லோருடைய கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதிலாக வருவதுதான் இந்த உவமை. நன்மையும், தீமையும் அருகருகே இருந்தாலும் பயப்பட வேண்டாம். தொடர்ந்து வளரட்டும். இறுதிநாளில் கடவுள் தீமையை அழித்து விடுவார் என்று இந்த உவமை தொடக்கத் திருச்சபைக்கு நம்பிக்கை தந்தது. இயேசு கூறுவதாக நற்செய்தியாளர் எழுதும் அர்த்தமும் இதை மையப்படுத்தியதாகவே இருக்கிறது.

இரண்டாவதாக, விசுவாசிகளின் சிந்தனையில் ஒரு குழப்பம். நாம் சிறிய சமூகமாக இருக்கிறோமே. இவ்வளவு பெரிய உலகில் எப்படி மாற்றம் கொண்டு வர முடியும்? நம் நம்பிக்கை வளருமா? அப்படியே மடிந்து விடுமா? இதற்கு விடையாக வருவதுதான் கடுகுவிதை. சிறியதாக இருந்தாலும் வானத்துப் பறவைகள் வந்து தங்கும் அளவிற்கு கிளைகள் பரப்பும் என்ற நம்பிக்கையைத் தருகிறது இரண்டாவது உவமை.

மூன்றாவதாக, அவர்களிடம் இருந்த மற்றொரு பிரச்சனை பயம். தொடக்கக் கிறித்தவர்கள் தங்களை க் கிறித்தவர்கள் என்று அறிக்கையிடப் பயந்தனர். மற்றவர்களின் கண்களிலிருந்து ஒளிந்தே இருந்தனர். ஒளிந்தே இறைவார்த்தையைக் கேட்டனர். ஒளிந்தே அப்பம் பிட்டனர். ஒளிந்தே செபித்தனர். இப்படியே நாம் ஒளிந்தே இருக்கிறோமே? எப்படி நம்மால் மற்றவர்கள் முன் சான்று பகர முடியும் என்று நினைத்தவர்களுப் பதிலாக வருவதுதான் புளிப்பு மாவு. புளிப்பு மாவு ஒளிந்தேதான் இருக்கும். ஆனால் முழு மாவையும் புளிப்பேற்றிவிடும் என நம்பிக்கை தந்தது மூன்றாவது உவமை.

இந்த மூன்று பின்புலங்களில் பார்க்கும் போது இயேசு இந்த உவமைகளைச் சொல்லியிருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு எனத் தெரிகிறது. நற்செய்தியாளர்கள் தாங்களும் தங்கள் விசுவாசிகளும் சந்தித்த அன்றைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உவமைகளைப் பயன்படுத்தியுள்ளனர். அந்த உவமைகளை இயேசுவே சொல்வதாக எழுதுகின்றனர். இது என் கருத்து! 'இயேசுதான் சொன்னார்' என நீங்கள் சத்தியம் செய்தாலும் நான் உங்களோடு வாதாடப் போவதில்லை!

இந்த மூன்று உவமைகளும் இன்று நமக்கு என்ன சொல்கின்றன?

1. களைகள். 'ஆள்கள் தூங்கும்போது' களைகள் விதைக்கப்படுகின்றன. புதிய ஏற்பாட்டில் 'தூக்கம்' என்பதற்கு 'ஆன்மீக சோம்பேறித்தனம்' என்ற பொருள் உண்டு (காண். மாற்கு 13:36, 1தெச 5:6-8, 1பேதுரு 5:8). நம் உள்ளத்தில் நன்மை உண்டு. நாம் சற்றே 'தூங்கும்'போது தீமை விதைக்கப்பட்டு விடுகிறது. மற்றொரு பக்கம் நம்மைச் சுற்றி நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மகிழ்ச்சி தரும் குடும்பமே சில நேரம் வருத்தம் தருகிறது. பாதுகாப்பு தரும் சமூகமே சில நேரங்களில் தீவிரவாதத்தால் அச்சுறுத்துகிறது. நன்மை இருந்த இடத்தில் தீமை எப்படி வந்தது என்ற கேள்வியை இன்னும் நாம் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தீமையிலிருந்து தப்பிக்க வேறு என்னதான் வழி? தாராள உள்ளம். களைகளும் வளரட்டும்! எனத் தாராள உள்ளம் காட்டுகிறார் வீட்டுத்தலைவன். களைகளைக் களையும் போது பயிர்களையும் களைந்துவிடலாம் என்ற எச்சரிக்கையில் அதை அனுமதிக்கிறார். இறுதியில் வெற்றி என்றும் நன்மைக்கே.

மற்றொரு பக்கம், களையும் பயிரும் ஒரே நீரையே பருகுகிறது. ஒரே உரத்தையே சத்தாக்குகிறது. ஆனால் களைகள் அவைகளைப் பயன்படுத்துவதனால் மற்றவர்களுக்குப் பயன் தருவதில்லை. அவைகள் சத்துக்களை தங்களுக்கென்றே வைத்துக்கொள்கின்றன. நம்மிடம் வரும் உறவுகள், ஆற்றல், பொருள் எல்லாம் நம் வழியாக மற்றவர்களுக்குப் பயன் தர வேண்டும். நம்மிலேயே தேங்கிவிடும் போது நாமும் களையாக மாறிவிட வாய்ப்பு இருக்கின்றது. இந்த உவமை நமக்குத் தரும் பாடம்: charity. charity என்றால் வெறும் தானம் அல்ல. பகிர்வு. தாரள உள்ளம்.

2. கடுகு. கடுகு மரம் என்பது கிடையாது. கடுகு வெறும் பத்தடி வளரும் செடி தான். ஆனால் எதற்காக இவ்வளவு பெரிய நஒயபபநசயவழைn? கடவுளின் செயல்பாடு எப்போதும் அளப்பரியது. அது எப்போதும் நம் கண்களுக்கு வியப்பாகவே இருக்கிறது. அதை நாம் காண நம்பிக்கைக் கண்கள் வேண்டும். கடுகு போல நம் சிந்தனை இருக்க வேண்டும் - சிறியதாக அல்ல. ஆற்றல் மிக்கதாக. இதையே 'clarity' என்று சொல்லலாம். சிந்திக்கின்ற சிந்தனையில் தெளிவு இருந்தால் நாமும் அளப்பரிய நிலையில் செயலாற்ற முடியும்.

3. புளிப்பு மாவு. பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் கலக்கிறார். மூன்று மரக்கால் அளவில் 300 பேர் இட்லி சாப்பிடலாம். 'பிசைந்து வைத்தார்' என்று நற்செய்தி சொல்கிறது. ஆனால் மூலமொழியில் 'ஒளித்து வைத்தார்' என்றே இருக்கிறது. புளிப்பை ஒளித்து வைத்தாலும் அது மற்றதையும் தன் இயல்பாக மாற்றி விடுகிறது. இதை நாம் 'integrity' என்று பொருள் கொள்ளலாம். புளிப்பு மாவு தன்னை மற்ற மாவோடு இணைத்தாலும் அதன் இயல்புத் தன்னைத் தாக்கவிடாமல் தன் இயல்புக்கு அதைக் கொணர்கிறது. தகைமையைக் கொண்ட உள்ளமும் இப்படித்தான் செய்யும்.

Charity, Clarity, Integrity - என இந்த மூன்று 'ரிட்டிகளை' நாம் கொண்டிருந்தோம் என்றால் இறையரசு வளர நாமும் காரணமாக இருப்போம். இறைவனின் அரசு என்பது நம்மை இயக்கும் ஒரு ஆற்றல்!


1 comment:

  1. ஞான உபதேச வகுப்புக்களிலும்,திருப்பலிகளிலும் விவிலியம் வாசிக்கப்பட்டு அதை அப்படியே எந்த உள்பூச்சு,வெளிப்பூச்சுமின்றி விளக்கம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.ஆனால் இன்று தங்களின் எழுத்துக்களில் நிகழ்ச்சிகளின் பின்புலத்தோடு கூட சொல்லப்படும்போது பல விஷயங்கள் புருவங்களைத் தூக்க வைப்பதும்,சில விஷயங்கள் எங்களைக் குழப்புவதும் கூட உண்மைதான்.அனைத்தையும் தாண்டி விவிலியத்தின் எந்தப்பகுதியையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துமேயும் தங்களின் ஆளுமைக்கு எனது மனம் திறந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete