Saturday, May 24, 2014

நீர் நினைவில் கொள்ள அவர்கள் யார்?

அப்பொல்லா II விண்கலம் நிலவிற்குச் சென்ற போது வத்திக்கான் சார்பில் நிலவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட திருப்பாடல் இது.

நிலவிற்கு மனிதர்கள் சென்றது வெறும் நாடகம் என்றும், நாம் கண்ட காட்சிகள் எல்லாம் அமெரிக்காவின் ஒரு திரைப்பட ஸ்டுடியோவில் படம் பிடிக்கப்பட்டவை என்பதையும் நிரூபிக்க எண்ணற்ற வீடியோக்கள் யூடியூபில் இருக்கின்றன. நிலவிற்கு அவர்கள் சென்றார்களா, செல்லவில்லையா என்பது பதில் தெரியாத ஒரு கேள்வி.

கடவுளின் மாட்சியையும், மானிடரின் மேன்மையையும் எடுத்துக்காட்டும் திருப்பாடல் 8 தான் இன்றைய நம் சிந்தனையின் மையம்.

மிகவும் துள்ளலாக பாடலாசிரியர் இந்தப் பாடலைப் பாடியிருக்கின்றார்.

ஐந்து நிலைகளில் இதைப் புரிந்து கொள்ள முன்வருவோம்.

1. உமது மாட்சி வானங்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது (8:1)
இந்தத் திருப்பாடலைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் மத்திய கிழக்கு நாடுகளில் 4000 ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கொண்டிருந்த பிரபஞ்சக் கொள்கை பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். விவிலியத்தின் பிரபஞ்சக் கோட்பாடு எகிப்திய மற்றும் மெசபடோமிய சிந்தனையின் பிரதிபலிப்பாக உள்ளது. எகிப்தியத் தேவதை 'நுட்' (அதாவது, வானம்) இந்தப் பூமியின் மேல் சாய்ந்து வானம் போல, போர்வை போல போர்த்தியிருந்து காத்து வருகிறார் என்பது அன்று நிலவிய நம்பிக்கை. அந்த எகிப்தியத் தேவதைக்கும் மேலாக யாவே இறைவன் நிற்பதாக எழுதுகின்றார் பாடலாசிரியர்.

2. வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நோக்கும் போது... (8:3)
இந்தத் திருப்பாடலை எழுதும் போது, அல்லது பாடும் போது பாடலாசிரியர் இரவில் தன் வீட்டிற்கு வெளியே கட்டிலைப் போட்டுப் படுத்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பாடல் காட்டும் உலகம் இரவின் வானம். மெசப்படோமிய சிந்தனையின் படி 'மார்டுக்' என்ற கடவுள் தான் நட்சத்திரங்களை வானத்தில் பொருத்துகிறார். ஆனால் பாடல் நமக்குச் சொல்வது அனைத்தும் ஆண்டவரின் கைவேலைப்பாடு. 'கைவேலைப்பாடு' என்பது ஒரு முக்கியமான வார்த்தை. எபிரேய மரபில் மனிதர்களின் கைவேலைப்பாடானது அனைத்தும் தீட்டு எனக் கருதப்பட்டது. அதாவது, மனிதர்கள் கைகளால் உருவானவை தெய்வங்கள் அல்ல. இயேசு தன் சிலுவைப்பயணத்திற்கு முன் தலைமைக்குருவால் விசாரிக்கப்படும் போது அவருக்கெதிராக சொல்லப்படும் சாட்சி நினைவிற்கு வருகிறதா? 'மனிதக் கையால் உருவான இந்த ஆலயத்தை இடித்து விட்டு மூன்று நாளில் இதைக் கட்டுவேன் என்றான்!' என்கின்றனர். யாவே இறைவன் வாழும் இல்லத்தையே இயேசு 'கைவேலைப்பாடு' என்று சொல்லியதுதான் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆனால் இயேசு இவ்வாறாக எங்கும் பேசவேயில்லை. இது பொய்ச்சாட்சி தானே! இந்த வரியில் பாடல் ஆசிரியர் கூறுவது வானம் அனைத்தும் கடவுளின் கைவேலைப்பாடு. நிலாவும், விண்மீனும் வானில் பவனி வரும் அழகு கடவுளின் கலைத்திறனிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

3. மனிதரை நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? (8:4)
மீண்டும் மெசபடோமியா. அவர்களைப் பொறுத்த வரையில் கடவுளர்கள் மனிதர்களைப் படைக்கக் காரணம் தோட்ட வேலை செய்வதற்கும், கடவுளர்களுக்கு அப்பமும், திராட்சை ரசமும் செய்வதற்கு. ஆனால் விவிலியத்தின் மனிதர்கள் சாதாரண வேலை செய்யப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். மாறாக, 'மாட்சிமையையும் மேன்மையையும் முடியாகச் சூடிக்கொண்டவர்கள்!' இரண்டே வார்த்தைகளில் மனிதப்பிறவியின் உச்சத்தை எடுத்துரைக்கின்றது இப்பாடல். தொடக்கநூல் 1:26-27யே இது நினைவுபடுத்துகிறது. கடவுள் தன் சாயலாக மனிதரைப் படைக்கின்றார்.

4. அவர்களைக் கடவுளர்களுக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் (8:5)
இது மனிதர்களைக் குறைத்து மதிப்பிடுவது அன்று. கடவுளர்கள் என்பவர்கள் வானதூதர்கள். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் இருப்பவர்கள். கடவுளும் மனிதரும் இங்கு ஒரே தராசில் வைக்கப்படுகின்றனர். நம்மைக் கடவுளுக்கு இணையாக ஆக்கி விடுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'நான் கடவுள்!' (அகம் பிரம்மாஸ்மி!) என்ற இந்தியச் சிந்தனையை விவிலியமும் பகிர்கிறது.

5. அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். (8:6)
நாம் கூலிக்காரர்கள் அல்லர், மேற்பார்வை செய்யும் பொறுப்பாளிகள். இது நமக்கு உள்ள பொறுப்புணர்வை உணர்த்துவதாக இருக்கிறது.

இப்படியாக, வரிக்கு வரி உச்சதொனியில் பாடி முடிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர்.

இப்பாடல் இன்று நமக்கு வைக்கும் சவால்கள் என்ன?

அ. நம் ஒன்றுமில்லாமை. ஒரு சின்ன பயிற்சி. நீங்க டீ குடிக்கும் டீ கப்பை எடுத்துக்கொள்ளுங்கள். உங்க முன்னாடி வையுங்க. டீ கப்பை மட்டும் பாருங்க. அடுத்த டீகப்போட அதிருக்கும் டேபிளைச் சேர்த்துப் பாருங்கள். டேபிளோடு உணவறை, உணவறையோடு வீடு, வீட்டோடு தோட்டம், தோட்டத்தோடு தெரு, தெருவோடு ஊர், ஊரோடு மாநிலம், மாநிலத்தோடு நாடு, நாட்டோடு கண்டம், கண்டத்தோடு உலகம், உலகத்தோடு மில்கி வே (milky way), மில்கி வேயோடு பல மில்கி வேக்கள், அவைகளோடு இன்னும் கோடானு கோடி மில்கி வேக்கள். இந்த மில்கி வேயோடு ஒப்பிடும் போது டீகப் ஒன்றுமேயில்லை. அது போலத்தான் நாம். ஒன்றுமில்லாமல் இருந்துகொண்டு எதற்காக இத்;தனை ஆர்ப்பாட்டம்?

ஆ. நம் மேன்மை. என்னதான் மில்கிவே டீகப்பைவிட பெரிசா இருந்தாலும் மில்கிவேயில டீ குடிக்க முடியுமா? முடியாது. டீகப்புலதான் குடிக்க முடியும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏதோ பயன் இருக்க. சாதாரண டீகப்பே மத்தவங்களுக்கு பயன்படுதென்றால் நாம் பயன்படுவதில்லையா. நாம் விபத்தால் பிறந்தவர்கள் அல்லர். கடவுளால் சிந்திக்கப்பட்டு, முடிவெடுக்கப்பட்டு பிறந்தவர்கள் நம் பிறப்புக்கென்று கண்டிப்பாக ஒரு நோக்கம் இருக்கும். அதைக் கண்டறிவதும், கண்டபின் அதை நிறைவேற்றுவதுமே நம் தேடலாக இருக்க வேண்டும். இன்னைக்கு மத்தவங்க நம்மள கண்டுகொள்ள வில்லையென்றாலும் தளர்ந்து விட வேண்டாம். இறைவனின் அழகிய கைவேலைப்பாடு நாம். அவரின் பார்வையில் நாம் அழகானவர்கள். அவரின் பார்வையில் நாம் பயனுள்ளவர்கள். அவரின் பார்வையில் நாம் மேலானவர்கள்.

இ. நம்மைச் சுற்றியிருப்பதை ரசிப்போம். நாம் கடைசியாக நட்சத்திரங்களைப் பார்த்து ரசித்தது நம் குழந்தைப் பருவமாகத் தான் இருக்கும். மழை, வெயில், காற்று, நிலா, நட்சத்திரம் இவை வெறும் பொருட்கள் அல்ல. நம் உடன்பிறப்புகள். இம்மண்ணில் இறப்பவர்கள் எல்லாம் உடனே விண்மீன்களாக மாறிவிடுகிறார்கள் என்பது என் நம்பிக்கை. நிலாச்சோறு சாப்பிட்ட காலம் எல்லாம் போய் இன்று தொடுதிரைகளில் தட்பவெப்பநிலைக்காக மட்டும் சூரியனைப் பார்க்கும் நிலைக்கு வந்து விட்டோம். கொஞ்ச நேரம் எடுத்து ஜன்னலைத் திறந்து அண்ணாந்து பார்ப்போம் இன்றைக்கு. உங்க அன்பிற்கு உரியவர்களுக்கு ஏதாவது மெசேஜ் சொல்லணும்னா நிலாவிடம் சொல்லிவிடுங்க. அது கண்டிப்பாய்ப் போய்ச் சொல்லும். எல்லாருடைய வாழ்விலும் ஒருவர் குட்டி நிலாவாக, குளிர் நிலவாக இருப்பார். அவர் இல்லாமல் வானம் என்றும் வெறுமைதான்.

'மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்?'

No comments:

Post a Comment