Sunday, May 18, 2014

அம்மா! உமது நம்பிக்கை பெரிது!

அக்காலத்தில் இயேசு தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார் ... கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா! தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்! என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார் ... 'இவரை அனுப்பிவிடும்' ... 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து' ... 'மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க் குட்டிகள் திண்ணுமே!' ... 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது!' (காண். மத்தேயு 15:21-28)

நாம் அடிக்கடி கேட்ட நற்செய்திப் பகுதிகளில் இதுவும் ஒன்று. இயேசுவைப் பற்றிய நம் நல்ல அபிப்பிராயத்தைக் கொஞ்சம் ஆட்டம் செய்ய வைக்கும் பகுதி. எல்லா மக்களுக்கும் பொதுவாக அனுப்பப்பட்ட இறைமகன் இயேசு எதற்காக தான் 'சிதறுண்ட இஸ்ரயேல் மக்களிடமே அனுப்பப்பட்டதாகக்' குறிப்பிட வேண்டும்? தன்னிடம் உதவி கேட்டு வந்த புறவினத்துப் பெண்ணை எதற்காக 'நாய்க்கு' ஒப்பிட வேண்டும்? இந்த இரண்டு கேள்விகள் குறித்து ஒவ்வொரு மாதமும் யாராவது ஒருவர் ஆய்வுத்தாள் எழுதுகின்றார். ஆனால் இன்னும் இதற்கான பதில்கள் விளக்கம் தருபவையாக அல்ல. இயேசு அப்படிச் சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்பது ஒரு சிலரின் வாதம். இயேசு 'தான் ஒரு யூத ஆண்!' என்ற சிந்தனையைக் கொண்டிருந்திருக்கலாம் என்பது மற்றவர்களின் வாதம். கேள்விகளை அப்படியே விட்டுவிடுவோம். சிந்தனைக்குச் செல்வோம்.

இயேசுவின் மற்ற புதுமைகளுக்கும் இந்தப் புதுமைக்கும் உள்ள பெரிய வித்தியாசம் என்னவென்றால், மற்ற புதுமைகளில் எல்லாம் புதுமை நடக்கத் தடையாக யூதர்களும், மறைநூல் வல்லுநர்களும், பரிசேயர்களும் இருப்பார்கள். ஆனால் இங்கே தடையாக இயேசுவே இருக்கின்றார். இயேசுவின் தயக்கம் இரண்டு முறை இருக்கின்றது: 1) நான் இஸ்ராயேல் மக்களுக்காக அனுப்பப்பட்டேன். உங்களுக்காக அனுப்பப்படவில்லை. 2) பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்களுக்குப் போடுவதில்லை.

இறுதியில் இயேசு சொல்லும் வார்த்தை மிகவும் மேன்மையானதாக இருக்கிறது: 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது!' பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த வார்த்தைகளை இன்று நாம் ஜெயாவுக்குச் சொன்னாலும் பொருத்தமாகவே இருக்கும்: 'அம்மா! உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்!' அம்மா விரும்பியவாறே அவருக்கு நிகழ்ந்து விட்டது. வாக்காளர்கள் விரும்பியவாறு இனி அம்மா நடக்க வேண்டும்!'

ஜோக்ஸ் அபார்ட். இன்றைய நற்செய்தி நமக்கு என்ன சொல்கிறது?

1. துணிச்சல். இன்று நாம் காணும் இந்தத் தாய் மூன்று வகை 'தாழ்வுநிலைக்கு' உட்பட்டவள்: அ. பெண். ஆ. புறவினத்துப் பெண். இ. புறவினத்து பேய்பிடித்த குழந்தையின் தாய். இந்த மூன்று தாழ்வு நிலைகளையும் தாண்ட துணிச்சல் அவருக்கு எங்கிருந்து வந்தது? வாழ்க்கையை இரண்டு நிலைகளாக வாழலாம்: அ. விக்டிம் மனநிலை. அதாவது, நான் இப்படித்தான். என்னால் ஒன்றும் செய்ய முடியாது. என் பிறப்பு ஒரு தவறு. என் சூழல் ஒரு தவறு. எனக்கு எப்போதும் கெட்டதே நடக்கும். இப்படியொரு புலம்பல். ஆ. மாஸ்டர் மனநிலை. எது எப்படி இருந்தாலும் நான் என் வாழ்க்கையின் நிர்வாகி. என்னால் வாழ முடியும். என் பாதையை நான் அமைத்துக் கொள்வேன். இது ஒரு நேர்மறை அணுகுமுறை. நம் கதையின் பெண் இந்த இரண்டாம் மனநிலைக்குச் சொந்தக்காரி. நாம்?

2. இயேசுவைத் தெரிந்திருந்தல். இயேசுவைத் 'தாவீதின் மகனே!' என அழைக்கின்றார். இந்த டைட்டில் இயேசு ஒரு யூதர் எனவும், யூதரின் அரசராம் தாவீதின் மரபில் அவர் வந்தவர் எனவும் தான் ஏற்றுக்கொள்வதாக இருக்கின்றது. 'உம் டைட்டில் பற்றி எனக்குக் கவலையில்லை. ஆனால் நீர் இரக்கம் கொள்வீர் என எனக்குத் தெரியும்' என்று முடிவெடுக்கின்றார். இயேசுவைத் தெரிந்திருந்தல் என்பது அவருக்கு இறையியலார்கள் வழங்கும் பெயர்களைத் தெரிந்திருத்தல் அன்று. மாறாக, அவரின் இரக்கத்தையும், அன்பையும் உணர்வது.

3. தன் மகள் மேல் இருந்த அக்கறை. தன் மகளுக்காகத் தான் ஒரு நாய் எனவும் அழைக்கப்படத் தயாராகின்றாள் இந்த ஏழைத்தாய். இதை இரண்டு பக்கங்களில் இருந்து பார்க்கலாம். அ. தாய் என்பவள் தன் பிள்ளைக்காக எதையும் செய்யத் துணிபவள். என்னை என்ன வேண்டுமானாலும் அழைத்துக்கொள். ஆனால் எனக்கு வேண்டியதைச் செய்து கொடு! இதுதான் பெண்ணின் மனநிலை. ஆ. நம்மிடம் உதவி கேட்டு வருபவர்களை நாம் எப்படிப் பார்க்கின்றோம். உதவி கேட்டு என்றால் பணம் கேட்டு வருபவர்கள் அல்லர். நம் குடும்பங்களிலேயே ஒருவர் மற்றவரிடம் அன்பை, ஆதரவைக் கேட்கிறோம். இவர்களை நாம் உதாசீனப்படுத்துகிறோமா?

4. இயேசுவுக்கே பாடம் சொல்லிக் கொடுக்கின்றார் பெண். உடல்நலமும், உள்ள நலனும் தருபவர் கடவுள். மனிதர்கள் அதற்குக் குறுக்கே நிற்க முடியாது. இந்த உண்மையை இயேசுவுக்கு உணர்த்துகின்றார். நாய்க்கு உணவளிப்பவர் கடவுள். வீட்டு உரிமையாளர் அல்ல. இன்றும் கடவுள் செயலாற்றுவதற்கு எந்த மதமோ, மத போதனையே, மத கொள்கையோ, கோட்பாடோ தடையாக இருக்க முடியாது. அன்பையும், மன்னிப்பையும், நலத்தையும் வழங்குபவர் கடவுள்.

5. நம்பிக்கை. பெண்ணின் மனதில் இருந்ததெல்லாம் நம்பிக்கை மட்டும்தான். நாம் அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? 'நீங்க எப்படி என்னைய நாய் என்று கூப்பிடலாம் எனக் கோபப்பட்டிருப்போம்' அல்லது 'பரவாயில்லை. நாங்க வேற வழியைப் பார்க்கிறோம்!' என்று சொல்லியிருப்போம். நம்பிக்கை என்பது இயேசுவின் மேல் கண்களைப் பதிய வைப்பது. ஒருமுறை பதிய வைத்துவிட்டால் ஒருக்காலம் திரும்ப எடுக்கவே கூடாது. பெண் கண்களைப் பதிய வைத்தார். பெற்றுக்கொண்டார்.

2 comments:

  1. இந்த ஏழைத்தாய் உறுதியை இழக்கவில்லை. இயேசு மனது வைத்தால் போதும் தன் மகள் குணம்பெறுவாள் என அப்பெண் விடாப்பிடியாக நிற்கிறார். கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு அவரை அணுகுவோர் ஏமாற்றமடையார் என்பதற்கு இப்பெண்ணின் ஆழ்ந்த நம்பிக்கை சிறந்த எடுத்துக்காட்டு. புதிய கண்ணோட்டத்தில் எம்மை சிந்திக்க வைத்த தந்தைக்கு நன்றிகள்

    ReplyDelete
  2. ஒவ்வொரு முறை கேட்கும் போதும் படிக்கும் போதும் மனதை நெருடும் பகுதி.எதற்காக இயேசு அத்தாயை நாயுடன் ஒப்பிடல் வேண்டும்? அவளின் தளரா நம்பிக்கையை மற்ற தாய்மாருக்கு எடுத்துரைக்கவா? இருக்கலாம்.அந்த தாயல்ல..எந்த தாயுமே அதைத்தான் செய்திருப்பார்.தன் பிள்ளைக்காகத் தான் விடும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் இறைவனின் சந்நிதியில் எதை வேண்டுமானாலும் சாதிக்கும் என்று தெரியும் அஅவளுக்கு. இவள் தான் இவ்வையத்து தாய்மாருக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு. ஆமாம் Father, சொல்ல வேண்டியதை எல்லாம் அழகாகச் சொல்லிவிட்டு அதென்ன ஜெயா புராணம்? ஓ....அவள் தமிழகத்து மக்களுக்கெல்லாம்'அம்மா' என்பதில் நீங்களும் மயங்கி விட்டீர்கள் போலும்! நல்ல கொடுமைடா சாமி....

    ReplyDelete