Monday, May 5, 2014

அந்நியராய் வந்தவர் ஆண்டவராய் மாறினார்!

முன்னே பின்னே பழக்கமோ, தொடர்போ இல்லாமல் திடீர்னு வந்த ஒருத்தர் சில மாதங்களில், சில ஆண்டுகளில் நம் நிழல்போல நெருக்கமாய் ஆன அனுபவம் உங்களுக்கு உண்டா?

நம் வாழ்வில் நாம் அனுபவிக்கும் எல்லா நெருக்கங்களுமே ஒரு காலத்தில் அந்நியமாய் இருந்தவைதானே.

அந்நியம் நெருக்கமாகும் ஒரு அற்புதமான நிகழ்வு எம்மாவுஸ் நிகழ்வு.

ஒரு மதிய வேளைக்குள் அந்நியர் ஒருவர் ஆண்டவராய் மாறுகிறார். எத்தனை முறை வாசித்தாலும் அத்தனை முறையும் புதுப்புது அர்த்தங்கள் தரக்கூடிய ஒரு நிகழ்வு எம்மாவுஸ் நிகழ்வு. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று நிகழ்வா? என்ற கேள்வியை இப்போது கேட்க வேண்டாம்.

இறைவன் வழிப்போக்கனாய் வருவது எல்லா சமய மரபுகளிலும் காணக்கிடக்கும் ஒன்று. கீதாஞ்சலியில் வரும் தாகூரின் இறைவன் அதிகமாக வழிப்போக்கனாகவே வருகிறார். மனிதர்கள் நாம் அனைவருமே பயணிகள். யாரும் நிலையானவர்கள் அல்ல. பிறப்பில் தொடங்கும் பயணம் இறப்பில் தொடர்கிறது. ஒரு பெரிய டிரெயின் பயணம் போல. சிலர் சில நிறுத்தங்களில் நம்முடன் ஏறுகின்றனர். நம்மோடு பயணம் செய்த சிலர் இறங்கி விடுகின்றனர். புதிய வருகை மகிழ்ச்சி தருகிறது. பிரிவு வருத்தம் தருகிறது. ஆனால் டிரெயின் போய்க்கொண்டே தான் இருக்கின்றது.

எம்மாவுஸ் நிகழ்வை (லூக்கா 24:13-35) ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.

அந்நியராய் அந்த இரு சீடர்களின் உரையாடலுக்குள் குறுக்கிடுகிறார் இயேசு. அவர் அந்நியர் என்று தெரிந்தும் தங்கள் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டிவிடுகின்றனர் அந்த அப்பாவிச் சீடர்கள். முன்பின் தெரியாத ஒருவரிடம் ஏன் இவ்வளவு மனம் திறக்கிறார்கள்? காரணம் சோகம். சோகம் கொண்ட இதயம் யாரிடமும் தன்னைத் திறந்து காட்டிவிடும்.

சென்னை ஏர்போர்ட்டில் ஃபிளைட்டுக்கு தயாரானபோது ஒரு 55 வயது மிக்க ஒரு பெண் தனியாக அமர்ந்திருந்தார். தலைப்பிரசவத்திற்குத் தயாராய் இருந்த தன் மகளைக் காண லண்டன் செல்ல வேண்டும். அவருக்கும் டிரான்சிட் துபாயில். 'தம்பி, நீங்க எங்க போறீங்க?' என்றார்கள். 'துபாய்' என்றேன். 'நானும்தான்!' என்றவர்கள், 'நான் உங்கள ஒன்னு கேட்கட்டுமா?' என்று சொல்லிவிட்டு அழத் தொடங்கிவிட்டார்கள். அவரது கணவர் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டாராம். தன் ஒரே மகளையும் (நர்ஸ்) லண்டனில் கட்டிக் கொடுத்தாயிற்று. இப்போது துணைக்கு யாருமில்லை என்று தன் மகள் அழைக்கத் தனியே புறப்பட்டுச் செல்கின்றார். முதல் விமானப் பயணம். விமானம் கூட அவருக்குப் பயமில்லை. டிரான்சிட் தான் பயமாம். 'என்னை என் விமானத்தில் ஏற்றிவிடுவீர்களா?' எனக் கேட்டார். நானும் சம்மதித்தேன். காத்திருந்த சில நிமிடங்களில் தன் மகளைப் பற்றிய எல்லாச் சோகக் கதைகளையும் சொல்லி முடித்துவிட்டார். எனக்கே ஆச்சர்யம். முன்பின் தெரியாத ஒருவரிடம் சோகம் சொல்லாமல் கொள்ளாமல் வெளி வந்து விடுகிறது.

என் நண்பன் அடிக்கடி சொல்வான். நம் கேர்ள்பிரண்ட்ஸ் கூட எப்பவும் சண்டை போடவே கூடாதாம். ஏனென்றால், நாம் சண்டை போட, அவர்கள் யாரிடமாவது போய் அழ அதுவே அவர்களுக்கு புதிய நட்பாக மாறி விடுமாம். ஆகையால் தொலைவில் இருக்கும் நண்பர்களே உஷார். உங்க தோழிகளிடம் சண்டை போடாதீங்க. கண்ணீர் துடைக்க வரும் ஒருவன் அவர்களின் கண்ணான கண்ணாவாகி விடுவான்.

நம் நிகழ்விற்கு வருவோம். அந்நியர் ஒருவரிடம் மனம் திறக்கின்றனர் அந்தச் சீடர்கள். அந்த அந்நியரும் அவர்கள்மேல் அதிகமாகவே உரிமை கொண்டாடுகின்றார். 'அறிவிலிகளே!' என்று சாடும் அளவிற்கு உரிமை எடுத்துக் கொள்கின்றார். அப்போதும் அவர்களுக்குக் கோபம் வரவில்லை பாருங்கள். சோகம் கொண்ட மனம் கோபப்படாது.

அந்தச் சோகத்திலும் அவர்களிடம் எனக்குப் பிடித்தது இதுதான்: 'எங்களோடு தங்கும்!' என்று அந்நியரைக் கேட்கின்றனர். முன்பின் தெரியாத ஒருவரைத் தங்களோடு இரவைக் கழிக்க அழைப்பது எவ்வளவு பெருந்தன்மை!

ஆனால் அவர்கள் அழைக்கவில்லையென்றால் அந்நியர் அந்நியராகவே போயிருப்பார். அந்நியர் ஆண்டவராக வேண்டுமென்றால் 'அழைப்பு' அவசியம்.

இன்று நம் ஆண்டவர்களாக, ஆண்டவள்களாக நம் வாழ்வில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் அந்நியர்களாய் இருந்தவர்கள் தாம். அவர்கள் நம்மை அழைத்திருக்கலாம். அல்லது நாம் அவர்களை அழைத்திருக்கலாம்.

'நாம் முதலில் பேசிய வார்த்தை என்ன?' என்று என் நண்பர்கள் பலரிடம் நான் கேட்டதுண்டு. அந்த முதல் அனுபவம் எப்போதும் ஆனந்தமாகவே இருக்கும்.

இன்றும் யாராவது அந்நியராய்த் தெரிகிறார்களா கொஞ்சம் அழைத்துத்தான் பார்ப்போமே. அவர்களும் நம் ஆண்டவராக இருக்கலாம்!


2 comments:

  1. "எம்மாவுஸ்" நிகழ்வு...எத்துணை முறை படித்தாலும் கேட்டாலும் என்னை நெகிழ் வைக்கும் ஒன்று. அதிலும் "எங்களோடு தங்கும்" என்ற சொற்றொடர் என்னுள் உறைந்து போன விஷயம்.உடலளவில் நமக்கு மிக அருகிலிருப்பினும் உள்ளத்தளவில் எத்துணை அந்நியப்பட்டுப்போயிருக்கிறோம் சிலரிடம்.நம் குடும்ப உறவுகளில்,வேளைத்தளங்களில்,பயணங்களில் உடன்வருபவர்களோடு அவர்களின் உறவுகளை,உணர்வுகளை,சுகதுக்கங்களைப் பகிர்ந்துகொள்வோம்..நம் அந்நியத்தன்மையை வேறருப்போம்.'எம்மாவுஸ் இயேசு' நாம் அழைக்காமலே நம்முடன் வந்து தங்குவார்.அந்த ஏர்ப்போர்ட் பெண்மணியைப்பற்றிய பகிர்வு சுவையான ஒன்று.

    ReplyDelete
  2. Anonymous5/05/2014

    எம்மாவுஸ் நிகழ்வை ஒரு புதிய கண்ணோட்டத்தில் எம்மை வழிநடத்தியமைக்கு மிக்க நன்றி தந்தையே. அந்நியமாதல் என்னும் போது எனக்கு சமூகவியல் தான் ஞானபத்துக்கு வந்தது. அதில் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும்.

    ReplyDelete