Wednesday, May 28, 2014

எங்களுக்குத் தலைவர் வேறு யார்?

'கடவுள் இல்லை' என்று சொன்ன பொல்லார்கள் போய், 'பறவையைப் போல பறந்து ஓடிப்போ!' என்று சொன்ன பொல்லார்கள் போய், அம்புகளும் வில்லும் எடுத்த பொல்லார் போய் இன்று பாடகருக்கு எதிராக இருப்பவர்கள் 'எங்களுக்கு வேறு தலைவர் யார்' என்று சொல்லும் பொல்லார்கள் வருகின்றனர்.

திபா 9 முதல் 12க்குள் நான்கு வகைகளான பொல்லார் வந்து விட்டனர். ஆகையால் பொல்லார் என்பது ஒரு குழுச் சொல். அந்தக் குழுவிற்குள் பல்வேறு வகையினர் உண்டு.

திருப்பாடல் 12 'நாவன்மை' கொண்ட பொல்லாரைப் பற்றிச் சொல்கின்றது.

இந்த நாவன்மை கொண்டவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

தங்கள் நாவன்மையே தங்கள் வலிமை என்றும், தங்கள் பேச்சுத்திறனே தங்கள் பக்கத்துணை என்றும் சொல்கின்றனர்.

திபா 12 இரண்டு எதிர்மறை வார்த்தைகளோடு தொடங்குகின்றது:

அ. உலகில் இறையன்பர்கள் இல்லை.
ஆ. மானிடருள் மெய்யடியார் இல்லை.

இறையன்பர் என்றால் யார்? இறைவனை அன்பு செய்யும் அன்பரா அல்லது இறைவனால் அன்பு செய்யப்படும் அன்பரா? தமிழ்ச்சொல் இரண்டு அர்த்தங்களையும் தருகின்றது.

மெய்யடியார் என்றால் யார்? உண்மை பேசும் அடியாரா? அல்லது பொய்யான அடியாருக்கு எதிர்ப்பதமான மெய்யான அடியாரா?

மூலமொழி என்ன சொல்கிறது? 'ஹெசத்' (hesed) என்ற வார்த்தையும், 'உமனாம்' (umanam) என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'ஹெசத்' என்றால் கடவுளின் அளப்பரிய பேரன்பு. உமனாம் என்றால் பிரமாணிக்கம்.

இப்படி பொருள் கொள்வோமா?

இவ்வுலகில் மனிதர்கள் நடுவில் பிரமாணிக்கம் குறைந்துவிட்டது. ஆகையால் கடவுளின் பேரன்பும் அவர்கள் மேல் குறைந்துவிட்டது.

இப்படித்தான் மொழிபெயர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பிற்குப் பின் இருப்பது பிரமாணிக்கம். கணவன் மனைவிக்குள் உள்ள காதல், இரண்டு நண்பர்களுக்கு இடையில் இருக்கும் நட்பு, பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே இருக்கும் பாசம், கடவுள் மனிதர் மேல் கொள்ளும் இரக்கம், மனிதர் கடவுள்மேல் கொள்ளும் பக்தி அனைத்திற்கும் பிரமாணிக்கம் அவசியம். இந்தப் பிரமாணிக்கம் இல்லையென்றால் அங்கே அன்பும் இல்லை. மனிதர்களின் அன்பு மட்டுமல்ல. அங்கே கடவுளின் பேரன்பும் கண்டுகொள்ளப்படுவதில்லை.

பிரமாணிக்கம் எதில் வெளிப்பட வேண்டும்? பேசுகின்ற வார்த்தைகள். மேலே சொன்ன அனைத்து அன்பிலும் நாம் ஒருவர் மற்றவரோடு பேசுகிறோம். அந்தப் பேச்சில் பிரமாணிக்கம் இருக்கிறதா?
இன்று மதிய உணவு வேளையில் கல்லூரி நூலகத்தில் இருந்தேன். 'இங்குள்ள புத்தகங்களில் எத்தனை வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும்? இந்த வார்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் அடுத்தவரின் வாழ்க்கையை மாற்றியிருக்கும்?'

சேகுவரா அழகாகச் சொல்வார்: 'மாற்றத்தை உருவாக்காத எந்த வார்த்தையும் வீணான வார்த்தை என்று!'

இன்று நாம் எவ்வளவோ பேசுகிறோம்? எவ்வளவோ எழுதுகிறோம்? எவ்வளவோ வாசிக்கிறோம்? ஃபேஸ்புக், டுவிட்டர், ப்ளாக், வெப் என வார்த்தைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாம் காணும் புகைப்படங்கள் கூட வார்த்தைகள் தாம். இந்த வார்த்தைகளில் எவை நம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன? நம் வார்த்தைகள் மற்றவர்கள் மேல் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா? அன்பை ஆழமாக்குகிறதா?

திபா 12 நான்கு வகையான வார்த்தைகளை முன்வைக்கின்றது:

அ. பொய் பேசும் வார்த்தைகள் அல்லது பொய்யான வார்த்தைகள்.
ஆ. தேனொழுகப் பேசும் வார்த்தைகள்
இ. இருமனத்தோடு பேசும் வார்த்தைகள்
ஈ. பெருமை பேசும் வார்த்தைகள்

இந்த நான்கு எதிர்மறை வார்த்தைகளுக்கு மாற்றாக அது முன்வைக்கும் வார்த்தை 'ஆண்டவர் பேசும் வார்த்தை'. அது எப்படிப்பட்டது? 'மண்உலையில் தூய்மையாக்கப்பட்ட வெள்ளி போன்றது' (12:6)

பொய் எப்போது பேசுகிறோம்? பொய் என்பது ரியாலிட்டியை (reality) ஏற்க மறுக்க நாமே கட்டும் ஒரு டிஃபென்ஸ் மெக்கானிசம் (defence mechanism). ஒன்றை மறைக்க மற்றொன்று, அதை மறைக்க இன்னொன்று என நாம் கட்டிக் கொண்டே போவோம்.

தேனொழுகப் பேசுவதும் ஆபத்தானது. எப்படி? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு - இது முதல் ஆபத்து. தேன் வடிந்து விட்டால் வார்த்தைகள் கசப்பாக இருக்கும்.

இருமனத்தோடு பேசுவது. இரண்டு வேலைகளைச் செய்து கொண்டு ஃபோனில் நீங்க யார்கூடவாவது பேசிப்பாருங்க! அதுதான் இது. மனம் இரண்டு பக்கம் இருக்கும். இரண்டிலும் கவனம் இருக்காது. அருட்பணி நிலையில் இருக்கும் எனக்குப் பல நேரங்களில் சாதாரண பொதுநிலையிலேயே இருந்திருக்கலாமோ எனத் தோன்றும். இந்த எண்ணங்களோடு நான் திருப்பலி நிறைவேற்றும் போதும், என் கடமைகளைச் செய்யும் போதும் நான் பேசும் வார்த்தைகளும், நான் ஆற்றும் மறையுரைகளும், அருட்சாதனக் கொண்டாட்ட வார்த்தைகளும் கூட 'இருமனத்தோடு' பேசுவதுதான்.

பெருமை பேசும் வார்த்தைகள். தன்னை மையமாக வைத்தே உலகம் இயங்குகிறது என்ற நினைப்பில் வெளிவரும் வார்த்தைகள்.

இந்த நான்கு வகை வார்த்தைகளைப் பேசுவோருமே பொல்லார் என திபா 12 சொல்கின்றது.

நம் வார்த்தைகள் வெள்ளி போல இருக்க முடியுமா? 'வெள்ளி இருப்பதை இருப்பது போலக் காட்டும்'. நம் வார்த்தைகளும் அப்படி இருந்தால் நாம் இன்னும் அதிகமாக ஒருவர் மற்றவருக்கு பிரமாணிக்கமாக இருக்க முடியுமே?

சரி நாம வெள்ளி போல பேசுறோம்...ஆனா மத்தவங்க தேனொழுகப் பேசுறாங்களே? என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா?

இந்த நிலைதான் தாவீதுக்கு வந்திருக்கிறது. அவர் உதவிக்காக மன்றாடுகிறார்.

நாமும் மன்றாடுவோம்!

'எங்களுக்கு தலைவர் வேறு யார்?' என்று சொல்பவரை ஒழித்துவிடுவீராக!

1 comment:

  1. புராணங்களில் வரும் அரிச்சந்திரன் போலவும்,தீயில் புடமிட்ட வெள்ளி போலவும் உண்மையை மட்டுமே பேச ஆசை கண்டிப்பாக் இருக்கிறது.ஆனால் சமயங்களில் சில நல்லது நடப்பதற்காக சில பொய்களைக்(நாம் அதைப் பொய் என்று ஒத்துக்கொள்வதில்லை) கலந்தே பேச வேண்டியுள்ளது.பொய்மை நிறைந்த உலகில் நாம் பேசும் உண்மைக்கு பல நேரங்களில் அர்த்தம் கிடைப்பதில்லை."End justifies the means" என்று நமக்கு நாமே சமாதானம் கூறலாமா? பதில் கிடைக்குமா தந்தையே!

    ReplyDelete