Sunday, June 7, 2015

நீங்கள் தலித்தா?

'நான் இரபேல். ஆண்டவருடைய மாட்சிமிகு திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களுள் ஒருவர்' என்றார்... 'நான் ஒன்றும் உண்ணவில்லை. நீங்கள் கண்டதெல்லாம் வெறும் காட்சியே என அறிந்து கொள்ளுங்கள்'.
(தோபித்து 12:15,19)

நேற்று தொடங்கிய இரபேல் நிகழ்வை இன்று முடிப்போம்.

இரபேல் தான் ஒரு வானதூதர் என்பதை வெளிப்படுத்துகிறார். தன்னை ஏழு வானதூதர்களுள் ஒருவராகக் குறிப்பிடுகிறார். இசுலாம் மதமும், யூத மதமும் ஏழு அதிதூதர்கள் இருப்பதாக நம்புகின்றன. ஆனால், கிறிஸ்தவர்கள் மூன்று என அறிக்கையிடுகின்றனர்.

தன்னை வெளிப்படுத்துமுன் இரபேல் தோபித்து குடும்பத்தாருக்கு அறிவுரையும் சொல்கின்றார். அவரின் அறிவுரைகள் மூன்று விடயங்களை மையப்படுத்தியதாக இருக்கின்றன:

அ. அநீதியாகச் சொத்து சேர்க்கக் கூடாது.
ஆ. ஆண்டவரைப் புகழ வேண்டும்.
இ. இறந்தவர்களை அடக்கம் செய்ய வேண்டும்.

இந்த மூன்றையும் இரபேல் சொல்லக் காரணம் என்ன?

தோபித்து நூல் எழுதப்பட்ட காலம் ஏறக்குறைய கி.மு. 721. இந்த ஆண்டில் தான் அசீரியப் படையெடுப்பு நிகழ்ந்து இஸ்ரயேல் நாடு அழிக்கப்பட்டு, யூதர்கள் நாடுகடத்தப்பட்டனர். ஆக, எங்கு பார்த்தாலும் இரத்தம், கண்ணீர், இழப்பு.

இந்தச் சூழலில் 'எரிகிற வீட்டில் பிடுங்குகிற மட்டும் லாபம்' என்பது போல, இறந்தவர்களின் உடைமைகளை இருந்தவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். மேலும், இறந்தவர்கள் தெருக்களில் வானத்துப் பறவைகளுக்கு உணவாக விழுந்து கிடந்தனர். அவர்களை அடக்கம் செய்வார் யாருமில்லை. மேலும், எரோபாவாம் மன்னன் பெத்தேலில் கட்டிய ஆலயமும் இந்த படையெடுப்பின் போது தரைமட்டமாக்கப்பட்டது. ஆகவே, கோயில் இல்லையென்றாலும் நீங்கள் ஒரே குடும்பமாக ஆண்டவரை பாடிப்புகழுங்கள் என அறிவுறுத்துகின்றார் இரபேல்.

ஆக, ஆண்டவரின் தூதர்கள் அந்தந்த நேரத்திற்கு தேவையானவற்றை அறிவுறுத்த வருகிறார்கள். ஒருவேளை இன்று இரபேல் நம்ம ஊருக்கு வந்தால், 'மேகி நூடுல்ஸ் சாப்பிடாதீங்க! தலைவர்களைப் பார்த்து தேர்ந்தெடுங்க! ரொம்ப வாட்ஸ்ஆப் பயன்படுத்தாதீங்க!' என்றுதான் சொல்வார்.

இன்று எங்கள் பங்கில் நற்கருணைப்பவனி இருந்தது. இந்த நிகழ்வில் ஒன்று பிடிக்கவில்லை. மற்றொன்று பிடித்தது.

பிடிக்காததை முதலில் சொல்லிவிடுகிறேன். இன்றைய நிகழ்வுக்குத் தலைமை வகித்தவர் மேதகு கர்தினால் ஃபிலோனி. இவர் வத்திக்கானின் மறைபரப்பு அமைச்சகத்தின் தலைவர். இவர்தான் ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன்-அமெரிக்க நாடுகளிலிருந்து செல்லும் 'ப்ராஜக்ட்களுக்கு' பணம் தருபவர். இவரோட பணத்தை இவர் தருவதில்லை. யாராரோ கொடுத்ததை இவர் பகிர்ந்து கொடுப்பார்.

'சில பெண்களைப் பார்த்தால் கும்பிடத் தோன்றும். சில பெண்களைப் பார்த்தால் கூப்பிடத் தோன்றும்!' என்பார்கள். சிலரின் பிரசன்னம் காந்தம்போல நம்மை இழுக்கும். சிலர் சிரித்து சிரித்து பேசினாலும், அவரின் கண்கள் அவரின் கள்ளத்தனத்தைக் காட்டிவிடும். நம்ம கர்தினால் இரண்டாம் வகை. கைகுலுக்கியதைத் தவிர ஃபோட்டோ எடுக்கணும் என்றுகூட எனக்குத் தோன்றவில்லை.

'வணக்கம். கர்தினால்! எப்படி இருக்கீங்க?' என்றேன்.

'வணக்கம்!' என்றார்.

'நீங்க எந்த நாடு?' என்று கேட்டார்.

'இந்தியா!' என்றேன்.

'நீங்கள் தலித்தா?' என்றார். 'அங்கே இன்னும் தலித் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்துக்களின் சாதிய அமைப்புக்குள் வராதவர்கள். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தலித்துகள்....' என்று சொல்லிக்கொண்டே போனார்.

'நான் தலித்தா இருப்பது தவறா?' என்றேன்.

என்னை ஆச்சர்யமாகப் பார்த்தார்.

இவர் இப்படிப் பேசுவதில் எனக்கு அவர் மேல் கோபம் இல்லை. என் மேலும், நான் ஒரு காலத்தில் எழுதிய ப்ராஜக்ட் மேலும்தான் கோபம் வந்தது. அப்படித்தானே நாங்கள் எழுதுகிறோம். எங்களிடம் ஒன்றுமில்லை என்றும், நாங்கள் சாலையில் தூங்குகிறோம் என்றும், ஒருவேளை உணவே அரிது என்றும் எழுதி, சின்னப் பிள்ளைகளை கூட்டம் கூட்டமாக நிற்க வைத்து, இடிந்த கட்டிடத்தின் பின்புலத்தில் ஃபோட்டோ எடுத்து அனுப்புகிறோம். அவர்கள் நம்மை அப்படித்தானே நினைப்பார்கள். பின் பணம் வாங்கி வேலை முடிந்தவுடன் அவர்களுக்கு கல்வெட்டு வேறு. முட்டாள்தனம்!

இந்தக் கல்வெட்டை அவர்கள் நம்ம ஊரில் வைப்பதற்கான விளம்பரக் கட்டணம்தான் அவர்கள் அளிக்கும் காசு என்று நான் சொல்வேன். சும்மாவா காசு கொடுக்குற! எங்கள் தரவுகளையெல்லாம் வாங்கிக்கொண்டு வாய்க்கரிசி போடுறமாதிரி போடுற! என மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.

'இங்கே படிக்க வருபவர்கள் எல்லாம் எங்கள் நாட்டின் வளங்களைத் திருடும் திருடர்கள்!' என்று தொடர்ந்து வம்பிழுத்தார். 'உங்கள் நாட்டின் ஆயர்களும் திருடர்கள். அவர்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியாது. இங்கே வந்து கைநீட்டுகிறார்கள்!' என்று சொல்லிக் கொண்டே போனார். கஷ்டப்பட்டு நானும் மௌனமாக நின்றேன். காலில் ஏதோ அசிங்கத்தை மிதித்தது மாதிரி இருந்தது.

தன்மானம் இழந்துதான் நாம் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்றால் அந்த மதம் தேவையில்லை.

இவ்வளவு பேசி முடித்துவிட்டு நல்ல கோல்டன் நிற பூசையுடையை போட்டுக்கொண்டு சிலுவை போட்டுக்கொண்டே பவனியில் சென்றார். இவர் இன்று கொண்டாடும் ஆண்டவரின் திருவுடல், திருஇரத்தம் என்ன அர்த்தத்தை எனக்குத் தரும்? 'இடது கை செய்வது வலது கைக்குத் தெரியக்கூடாது!' என்ற இயேசுவைப் பற்றி இவர் பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

இரண்டாவதாக, பிடித்த விடயம்.

பவனி செல்லும் நேரம். ரொம்ப வெயில். அருட்பணியாளர்களுக்கு முன்னால் சென்றவர்கள் கடந்த வாரத்தில் முதல் நற்கருணை வாங்கியவர்கள். அந்த அரும்புகளின் கூட்டத்தில் இருந்த ஒரு இளவலின் அப்பா பவனி தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு வாட்டர் பேக் கொண்டு வந்து கொடுத்தார். கொடுத்து விட்டு, கொஞ்சம் தள்ளியே உடன் வந்தார். அவரின் கண்கள் முழுவதும் தன் மகளின்மேல் தான் இருந்தது. நடந்து சென்றுகொண்டேயிருக்க, சில நிமிடங்கள் கழித்து அவளிடம் வந்து, அவளின் தலையில் கொஞ்சம் தண்ணீர் தொட்டு வைத்தார். முகம் துடைத்துவிட்டார். இவளின் கையில் மட்டும் வாட்டர் பேக். மற்ற அரும்புகள் வாடிக்கொண்டே நடப்பதைப் பார்க்கின்றார். பவனி செல்லும் தெருவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தார். பவனியில் வந்த அனைத்து அரும்புகளுக்கும் ஒரு பாட்டில் வீதம் 20 பாட்டில்கள் வாங்கி வந்தார். அவர்கள் எல்லாருக்கும் உடைத்துக் கொடுத்தார். பவனி முடியும் நேரம் அவரைக் காணவில்லை. அந்த இளவலையும் காணவில்லை. எங்கிருந்தோ வந்தவர், வந்த சில மணித்துளிகளில் குழந்தைகளின் தாகத்தைத் தணித்துவிட்டார். இந்தக் குழந்தைகளுக்கு இன்று இறைவன் தண்ணீரில்தான் தன் பிரசன்னத்தை வெளிப்படுத்துகிறார் என நினைத்துக்கொண்டேன்.

தாகம் தணித்தவர் இரபேலா? அல்லது தங்க உடை அணிந்தவர் இரபேலா?


1 comment:

  1. இதிலென்ன சந்தேகம் தந்தையே! கண்டிப்பாகத் தாகம் தணித்தவர்தான் இரபேல் என்று சொல்வதில் யாருக்குத் தயக்கம் இருக்கப் போகிறது? தாகம் எடுக்கையில் தடாகத்தின் அருமையும்,வெயில் நேரத்தில் மரநிழலின் அருமையும், பசி வயிற்றைக் கிள்ளும் போது உணவின் அருமையும் நமக்குப் புரிவது போலத்தான் சில நல்லவர்களை அடையாளம் காட்ட நாலு எதிர்மறையானவர்களும் இருக்கிறார்கள்( இந்தக் கர்தினால் பற்றிக் கருத்து சொல்ல எனக்கு எந்தத் தகுதியும் இல்லை) மனிதர்கள் செய்யும் தவறுக்கு மதங்களைச் சாடுவதில் என்ன இலாபம்?? இவ்வளவுக்கு அப்புறமும் இன்னும் கூட வெளிநாட்டுப்பண மோகத்தில் ' ப்ராஜெக்ட்' எழுதிக்கொடுக்க ஆட்களைத்தேடி பேடும்(pad) கையுமாகத் திரிபவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.....நாம் சாடவேண்டியது இவர்களைத்தான்....

    ReplyDelete