Thursday, January 30, 2014

நாம் பற்றிக் கொண்ட 'பாட்டில்கள்'

1980 ஆம் ஆண்டு 'காட்ஸ் மஸ்ட் பி கிரேஸி' என்ற ஆப்பிரிக்க காமெடி படம் வெளியானது நம் அனைவருக்கும் தெரியும். அந்தத் திரைப்படத்தின் துவக்கத்தில் இரண்டு உலகங்களைக் காட்டுவார்கள்: ஒரு உலகத்தில் தோட்டங்கள் இருக்கும். மறு உலகத்தில் உயர்ந்த கட்டடங்கள் இருக்கும். ஒரு உலகத்தில் குழந்தைகள் ஓடியாடி விளையாடுவார்கள். மறு உலகத்தில் குழந்தைகள் பள்ளிக்குப் பெரிய சுமைகளைச் சுமந்து கொண்டு செல்வார்கள். ஒரு உலகத்தில் ஒருவர் ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருப்பார். மறு உலகத்தில் அலுவலகத்திற்குள் பேக் மற்றும் ஃபைல்களோடு பலர் ஓடிக் கொண்டிருப்பர். முதல் உலகம் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கங்களுக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும். இரண்டாவது உலகம் கடிகாரத்திற்குக் கட்டுப்பட்டதாக இருக்கும். வெறும் எண்களால் கட்டப்பட்ட இந்த இரண்டாவது உலகம் மிகவும் பரிதாபமானது என்ற தலைப்புடன் தொடங்கும் திரைப்படம். ஒரு காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுள் ஒருவர் ஒரு கோகோ கோலா பாட்டிலை வயல்வெளியில் கண்டுபிடிப்பார். அதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்ப்பார். அது எதற்குப் பயன்படும் என்பது அவருக்குத் தெரியாது. அதை தன் ஊருக்குக் கொண்டு வந்த அனைவரிடமும் காட்டுவார். பெண்கள் அதை மாவரைக்கவும், சப்பாத்தி சுடவும் பயன்படுத்தவர். சிறுவர்கள் அதனுள் கற்களைப் போட்டு விளையாடுவர். பெரியவர்கள் அதற்குள் காற்றை ஊதி சமிக்ஞைகள் எழுப்புவர். ஆனால் யாருக்கும் அது என்ன என்பது தெரியாது. ஒரு கட்டத்தில் அந்தப் பாட்டிலுக்காக ஊருக்குள் சண்டைகள் தொடங்கும். 'எனக்குத்தான்! எனக்குத்தான்!' என்ற போட்டிகள் எழும். ஒரு கட்டத்தில் ஒருவர் அந்தப் பாட்டிலைக் கொண்டு மற்றவரை அடித்துக் காயப்படுத்திவிடுவார். இதைப் பார்த்த அதைக் கொண்டு வந்தவர் மறுபடியும் அதை எடுத்துக்கொண்டு போய் ஓடுகின்ற ஆற்றுக்குள் எறிந்து விடுவார். ஊருக்குள் அமைதி திரும்பும்.

திடீரென்று வந்த ஒரு பொருள் ஊருக்குள் பெரிய கவலையை உருவாக்கி விட்டதே என அனைவரும் வருத்தம் தெரிவிப்பார்கள். இன்றைய நற்செய்தி 'கவலைப்படாதீர்கள்' என நமக்குச் சொல்கிறது. எதற்காகக் கவலைப்படக் கூடாது? ஏனெனில் வானத்துப் பறவைகளும், வயல்வெளி மலர்களும் கவலைப்படுவதில்லை. மனிதர்களாகிய நாம் ஆறறிவு படைத்தவர்கள். ஏழாம் அறிவுக்கும் சொந்தக்காரர்கள். ஆனால் பல நேரங்களில் நம் பிரச்சினைகள் மற்ற மிருகங்களின் பிரச்சினைகளை விட அதிகமாகவே இருக்கின்றது. எந்த ஒரு ஆட்டுக்குட்டியும் தாழ்வு மனப்பான்மையால் துன்புறுவதில்லை. கன்றுக்குட்டி ஆளுமை வளர்ச்சிக்கான வகுப்புக்களுக்குச் செல்வதில்லை. கோழிக்குஞ்சு ஒருநாளும் மயிலைப் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. முயல் வேகமாக ஓடுகிறதே, தன்னால் ஓட முடியவில்லையே என மீன் என்றும் கவலைப்பட்டதில்லை. மனிதர்கள் மட்டுமே இந்த அனைத்து உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

கவலை. இது நாம் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு உணர்வு. இந்த உணர்விற்குப் பின்னால் இருக்கும் மற்ற உணர்வு பாதுகாப்பின்மை. நடந்தவற்றைக் குறித்தும் கவலைப்படுகிறோம். நடக்கப்போவதைப் பற்றியும் கவலைப்படுகிறோம். காதலி கிடைக்கவில்லையே என்ற கவலை, காதலி கிடைத்தவுடன் 'நம்மை விட்டுப் போய்விடுவாளோ!' என்ற கவலையாக மாறிவிடுகிறது. சாப்பாடு இல்லையே என்ற கவலை சாப்பாடு கிடைத்தவுடன், 'சாப்பிட்டால் குண்டாகிவிடுவோமோ?' என்ற கவலையாக மாறிவிடுகிறது. கரண்ட் இல்லையே என்ற கவலை கூடிய சீக்கிரம் 'இவ்வளவு கரண்ட் பில்லா?' என்ற கவலையாக மாறிவிடுகிறது. நாம் மகிழ்ச்சி தரும் என்று நினைப்பதே பல நேரங்களில் கவலையாக மாறிவிடுகிறது.

'தேவையற்ற கவலைகள் எதற்கு?' என்பர் சிலர். கவலைகள் என்றாலே தேவையற்றவைதானே. தேவையுள்ள கவலைகள் இருக்கின்றனவா என்ன? நாமே உருவாக்கிக்கொள்ளும் மனித அமைப்புகள் நமக்குக் கவலை தருவனவாக மாறிவிடுகின்றன. அமைப்புகள் இல்லாதவரை கவலைகள் இல்லை. ஆனால் அமைப்புகளைக் கடந்து வர நம்மால் இயலாது. ஆனால் கவலைகளைக் கடந்து வர இயலும்.

1. கவலைகள் பயனற்றவை. 'கவலைப்படுவதால் வளர்த்திக்கு ஒரு முழம் கூட்ட முடியும்' என்றால் இன்று நாம் அனைவரும் மிகவும் உயரமானவர்களாக இருப்போம். கவலைப்படுபவர்கள் தீர்வு காண்பதில்லை என்பார்கள். எடுத்துக்காட்டாக, தேர்வு கடினமாக இருக்குமோ எனக் கவலைப்படும் மாணவன் படித்தாலும், கடின உழைப்பு செய்தாலும் அது அவனிடம் தங்குவதில்லை. அவனது கவலை அவனது செயல்திறனைக் குறைத்துவிடுகிறது. நாம் கவலைப்படும்போது நம் ஆற்றல் குறைந்து விடுகிறது. எதற்காக நாமே நம் ஆற்றலைக் குறைத்துக் கொள்ள வேண்டும்?

2. முதன்மைப்படுத்த வேண்டும். வாழ்வியல் மதிப்பீடுகளை முதன்மைப்படுத்துபவர்கள் கவலைப்படுவதில்லை. 'உணவை விட உயிரும், உடையைவிட உடலும் முதன்மையானவை' என்பது நமக்குத் தெரிய வேண்டும். பல நேரங்களில் நம் கவலைகளுக்குக் காரணம் திட்டமிடாமையும், முதன்மைப்படுத்தாத தன்மையும் தான். எல்லாவற்றையும் போட்டுக் குழப்பி ஒன்றும் செய்ய முடியாமல் போய்விடுகின்றது. கிரிக்கெட் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கின்றது. படிக்க வேண்டும் என்ற பயமும் இருக்கின்றது. விடிய விடிய கிரிக்கெட் பார்த்துவிட்டு ஐயோ தேர்வுக்குப் படிக்கவில்லையே என்று கவலைப்படுவது நாம் முதன்மைப்படுத்தத் தெரியாதவர்கள் என்பதையே காட்டுகிறது.

3. உடனடி இன்பம். கவலை வர அதிகக் காரணம் இதுதான். 'நாம் நினைப்பதை உடனடியாகச் செய்துவிட வேண்டும்'. தாவீது அரசர் சிறந்த உதாரணம். மதிய நேரம் தூக்கம் வராமல் மாடியில் உலாவுகின்றார். பெத்சேபாவைப் பார்க்கின்றார். அவரோடு உறவு கொள்கின்றார். எல்லாம் முடிந்தது என நினைக்கின்றார். பெத்சேபா என்ற பெண் தந்த இன்பம் கொஞ்ச நாட்களில் துன்பமாக மாறிவிடுகிறது. அவள் கருத்தரித்து விட்டாள். அதை மறைக்க வேண்டும். அவளது கணவனை அழைக்கிறார். கணவன் வீடு செல்ல மறுக்கிறான். ஒன்றை மறைக்க மற்றொன்று. இறுதியில் கொலை. 'நாம் இன்பம் தரும்' என்று நினைக்கும் பல நமக்குத் துன்பமே தருகின்றன. ஆகையால் உடனடி இன்பங்களுக்கு உடன்படாமல் இருப்பது நம் கவலை போக்கும்.

4. செல்வமா? கடவுளா? இந்தக் கேள்விக்கு நாம் தரும் பதிலைப் பொறுத்தே நம் கவலை அதிகரிக்குமா, குறையுமா என்பது தெரியும். 'இறையரசையும் அதன் நீதியையும் நாடுங்கள். எல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' என்கிறது நற்செய்தி. 

திடீரென நம்மிடம் வந்து இன்று நாம் பற்றிக் கொண்ட 'பாட்டில்கள்' எவை? அவைகள் நமக்குக் கவலை தருகின்றனவா? 'நாம் வானத்துப் பறவைகளை விட மேலானவர்கள்!'

Wednesday, January 29, 2014

என்ன சுவையாய் இருக்கின்றது!

ஜென் துறவி கிம்கானிடம் ஒரு இளைஞன் வருகிறான். 'சுவாமி! எனக்கு வாழ்க்கை ரொம்பக்     கஷ்டமாக இருக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆபத்து இருப்பது போல இருக்கிறது. யாரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. யாரைப் பார்த்தாலும் எனக்குப் பயமாக இருக்கிறது' என்று புலம்புகிறான். அப்போது கிம்கான் ஒரு உவமை சொல்கிறார்: 'காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான். ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான். அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு ஸ்டராபெரிக் கொடி. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு 'என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்' என்றான் அவன்.' உடனே ஞானம் பெற்றான் இளைஞன்.

தன்னைச் சுற்றியிருப்பவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் கண்முன் எப்போதும் சிலுவை நின்று கொண்டே இருக்கின்றது. இப்படியாக நம்மைப் போலவே சாவின் நிழலில் வாழ்ந்து கொண்டிருந்த இயேசுவுக்கும், அவரையே சுற்றி வந்த அவரது சீடர்களுக்கும் சுவைமிக்க ஸ்டராபெரி பழமாக இருக்கின்றது இயேசுவின் உருமாற்றம். 

இயேசுவின் உருமாற்றம் ஒரு வரலாற்று நிகழ்வா அல்லது இறையியல் நிகழ்வா? இயேசு தன்னோடு 12 திருத்தூதர்களை வைத்திருந்தாலும் அவர்களில் பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு என்ற மூவரைத்தான் தனக்கு நெருக்கமான வட்டத்தில் வைத்திருக்கின்றார். யாயீரின் இறந்த மகளுக்கு உயிர் கொடுத்த போதும், தாபோர் மலையில் தான் உருமாறிய போதும், கெத்சமேனித் தோட்டத்தில் இரத்த வியர்வை வியர்த்த போதும் இந்த மூன்று சீடர்களை மட்டுமே தன் அருகில் இயேசு வைத்திருக்கின்றார். இயேசுவின் உருமாற்றத்தை மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் மட்டுமே எழுதுகின்றனர். ஆனால் இதை நேரில் கண்ட யோவான் தன் நற்செய்தியில் இந்த நிகழ்வைக் குறித்து மௌனம் காக்கின்றார். அவர் பார்த்தாரா? பார்த்ததை எழுதவில்லையா? சீடர்களின் வாழ்வில் இது எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? தாபோர் மலையில் ஆண்டவரின் மாட்சிமை இறங்கி வந்தபோது கீழே நின்ற மக்கள் அதைப் பார்க்கவில்லையா? வந்திருந்தவர்கள் எலியாவும், மோசேவும் என்பதை யார் யாருக்குச் சொன்னார்கள்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நற்செய்திப் பகுதியில் விடைகள் இல்லை.

இந்த நிகழ்வைக் குறித்து எழுதுகின்ற மூன்று நற்செய்தியாளர்களுமே தங்களுக்கு ஏற்றவாறு நிகழ்வை மாற்றி எழுதுகிறார்கள். உதாரணத்திற்கு, தாபோர் மலை என்ற பெயரை இவர்கள் மூவருமே குறிப்பிடவில்லை. 'மலை' என்று மட்டுமே எழுதுகின்றனர். மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் உடைகளை அதிகமாக வர்ணிக்கின்றார். லூக்கா நற்செய்தியாளர் இந்த நிகழ்வு எட்டு நாட்களுக்குப் பின் நடப்பதாகவும், மற்றவர்கள் ஆறு நாட்களுக்குப் பின் நடப்பதாகவும் எழுதுகின்றனர். 

இயேசுவின் உருமாற்றம் நமக்கு வைக்கும் பாடங்கள் என்ன?

1. இயேசுவின் பணிவாழ்வில் இரண்டு மலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை: ஒன்று, தாபோர் மலை, மற்றொன்று, கல்வாரி மலை. இரண்டு மலை நிகழ்வுகளுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. தாபோரில் உருமாறினார். கல்வாரியில் உருச்சிதைந்தார். தாபோரில் மாட்சிமை பெற்றோர். கல்வாரியில் இழிமரணத்திற்கு ஆளானார். தாபோரில் தன் இரு பக்கங்களிலும் மோசேயும், எலியாவும் நின்றிருந்தனர். கல்வாரியில் தன் இருபக்கங்களிலும் தன்னோடு உரையாடிக்கொண்டிருந்தவர்கள் இரண்டு கள்வர்கள். 'இவரே என் அன்பார்ந்த மகன்' என்ற தந்தையின் அரவணைக்கும் வார்த்தைகள் ஒலித்தது தாபோர் மலை. 'என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்' என்ற இயேசுவின் அவல ஒலி கேட்டது கல்வாரி மலை. 'இங்கேயே இருப்பது எத்துணை நன்று' என்ற பேதுருவின் பெருமகிழ்ச்சி தாபோர் மலையில். 'அவரை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து அனைத்துச் சீடர்களும் இயேசுவை ஆதரவற்றவராக மாற்றியது கல்வாரி மலையில். 'அவரது ஆடை கதிரவனைப் போல ஒளிர்ந்தது' தாபோர் மலையில். 'அவரின் ஆடைகளைக் களைந்தனர்' கல்வாரி மலையில். இரண்டு நிகழ்வுகளுக்கும் இவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும், இந்த வித்தியாசங்கள் நடுவில் ஒரே மாதிரி நிற்கின்றவர் இயேசு. தாபோர் மலையில் மகிமையும், கல்வாரி மலையின் இகழ்வும் இயேசுவுக்கு ஒன்றுதான். மக்கள் பாடிய 'ஓசான்னாவும்', 'சிலுவையில் அறையும்!' என்ற அவர்களின் கூக்குரலும் இயேசுவுக்கு ஒன்றுதான். 'போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும்' தனக்கு ஒன்று என இயேசுவால் எப்படி எடுத்துக்கொள்ள முடிந்தது? இந்த இரண்டு மலைகளும் நம் வாழ்விலும் வரும். ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு நாம் கடந்து செல்லும்போது நம் மனநிலை என்ன?

2. இயேசுவின் திருமுழுக்கின்போது மேகத்திலிருந்து ஒலிக்கும் வானகத்தந்தையின் குரல், 'நீரே என் அன்பார்ந்த மைந்தர்' (லூக் 3:22) என இயேசுவிடம் நேரடியாகப் பேசுவதாக ஒலிக்கிறது. ஆனால் தாபோர் மலையில் ஒலிக்கும் தந்தையின் குரல், 'இவரே என் அன்பார்ந்த மைந்தர். இவருக்கு செவிகொடுங்கள்' (மத்தேயு 17:5) என சீடர்களைப் பார்த்து ஒலிப்பதாக அமைகின்றது. இது 'நீரே கடவுளின் மெசியா. உயிருள்ள இறைவனின் திருமகன்' (மாற்கு 8:29) என்ற பேதுருவின் நம்பிக்கை அறிக்கையை வானகத்தந்தை உறுதி செய்வதாகவும் அமைகின்றது. திருமுழுக்கில் ஒலிக்கும் வார்த்தைகள் இயேசுவை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தின. தாபோரில் ஒலிக்கும் வார்த்தைகள் இயேசுவை நோக்கி வர நமக்கு அழைப்புவிடுக்கின்றன. 'செவிகொடுங்கள்' என்பதற்கு 'பின்தொடருங்கள், பற்றிக்கொள்ளுங்கள்' என்றும் பொருள் உண்டு. இயேசுவை நாம் பின்பற்றுகிறோமா?

3. 'அஞ்சாதீர்கள்'. உருமாற்ற நிகழ்வைக் கண்டு பயத்தால் உறைந்து போயிருந்த தன் சீடர்களைப் பார்த்து இயேசு சொல்லும் வார்த்தை இதுதான். இறைவனின் பிரசன்னம் பல நேரங்களில் நமக்கு பயத்தைத் தருகின்றது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. நாம் பயந்துபோயிருந்தாலும் இயேசு அங்கே நமக்கு அமைதியும், அன்பும் தருகின்றார்.

எதிர்வரும் வாழ்வியல் நிகழ்வுகள் எப்படி இருந்தாலும் எம்பெருமான் இயேசுவின் காலடிகளே எம் சுவை என்று நிற்பவர்களுக்கு எல்லா நாளுமே உருமாற்றம்தான்!


Tuesday, January 28, 2014

ஒரு கை எழுப்பும் சப்தம்!

இந்த ஆண்டு திருநீற்றுப் புதனுக்கான மறையுரை

மொக்குராய் என்பவர் ஒரு ஜென் துறவி. அவருக்கு டோயோ என்ற 12 வயது மகன் இருந்தான். அவன் மிகவும் புத்திசாலி. எப்போதும் துறுதுறுவென்று இருக்கக் கூடியவன். தன் தந்தையைப் போலவே ஜென் தியானம் செய்ய அவனுக்கு மிகவும் ஆசை. தியானம் செய்யும் இடத்திற்குத் தன்னையும் அழைத்துக் கொண்டு போகுமாறு சொல்லிக் கொண்டே இருக்கிறான். ஆனால் அவன் தந்தை, 'உனக்கு வயது போதாது. இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!' எனச் சொல்லிவிடுகின்றார். ஆனால் டோயோ தன் தந்தைக்கும் தெரியாமல் ஒரு நாள் தியானம் நடக்கும் இடத்திற்குச் சென்று விடுகிறான். அங்கே தியானம் சொல்லிக் கொடுக்கும் துறவி சன்சானின் முன் சென்று மற்றவர்களைப் போலவே மூன்று முறை விழுந்து வணங்குகிறான். பின் ஒரு இடம் தேடிச் சென்று அமர்கிறான். சன்சான் தன் போதனையைத் தொடங்குகிறார்: 'உங்கள் எல்லாருக்கும் இரண்டு கைகள் எழுப்பும் ஓசை தெரியும். நிச்சயம் கேட்டீருப்பீர்கள்! யாராவது ஒரு கை எழுப்பும் ஓசையைக் கேட்டிருக்கிறீர்களா?' என்கின்றார். டோயோ ரொம்ப நேரம் யோசிக்கின்றான். தன் வீட்டிற்கு அருகில் ஒரு ஓடையில் தண்ணீர் ஓடும் சப்தம் கேட்கிறது. சன்சானிடம் போய் 'தண்ணீரின் சப்தமே ஒரு கை எழுப்பும் சப்தம்' என்கிறான். 'இல்லை. தண்ணீரும், கற்களும் இணைவதால் அது இருகை சப்தம். ஒரு கை சப்தமல்ல' என்று மறுத்துவிடுகிறார் சன்சான். 'மணியின் சப்தம், ஆந்தையின் அலறல், வெட்டுக்கிளியின் சப்தம்!' என நிறைய சப்தங்களைச் சொல்ல 'இல்லை!' என மறுத்துவிடுகிறார் சன்சான். பல ஆண்டுகள் முயற்சி செய்தும் கேட்க முடியவில்லை. இறுதியில் தியானம் செய்யத் தொடங்குகிறான் டோயா. 'எந்தச் சப்தமுமே கேட்கவில்லை!' என்று ஒரு கட்டத்தில் சரணடைந்து விடுகிறான். 'அதுவே ஒரு கை எழுப்பும் சப்தம்!' என்கிறார் சன்சான். ஞானம் பெற்றான் டோயோ.

இன்று திருநீறு அணிந்து தவக்காலத்தைத் தொடங்குகிறோம். இது பாவத்தை நினைத்து பரிதவிக்கும் பாவத்தின் காலமோ, பூ வைக்காமல், பொட்டு வைக்காமல், முகச்சவரம் செய்யாமல், செருப்பு அணியாமல் இருக்கும் சோகத்தின் காலமோ அல்ல. இது ஒரு தயாரிப்புக் காலம். உயிர்ப்பின் மகிழ்ச்சியை நமதாக்கும் காலம். இந்தக் காலத்தில் ஆலயத்திலும் பூ வைக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். மேலை நாடுகளில் இந்தப் பருவத்தில் பூக்கள் பூக்காது. அதனால் அவர்கள் பூ வைப்பதில்லை. அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஏற்படுத்திக் கொண்டதை நாம் ஏனோ வெறும் சடங்காகவே மாற்றிக் கொண்டுவிட்டோம். நம் நாட்டின் பருவநிலை சமநிலையானது. எல்லா நாட்களிலும் இங்கு பூக்கள் பூக்கும். எல்லா நாளும் நமக்குத் திருநாளே. வருடம் எல்லாம் இறைச்சி, வெண்ணெய் எனச் சாப்பிட்டு கொழுத்துவிட்டு நாற்பது நாட்கள் தவக்காலத்தில் அவர்கள் நோன்பு இருப்பது உடல்நலத்திற்காகத்தான் அன்றி அதில் ஆன்மீகம் இல்லை. ஆனால் இங்கே நோன்பு என்பது வருடம் முழுவதும் ஒரு சில வீடுகளில் பட்டினி என்று தவம் கிடக்கிறது. ஆகையால் எக்காலம் போல தவக்காலத்திலும் இயல்பாக வாழ்வோம். 

தவக்காலத்தின் தொடக்க நாளாகிய இன்று நாம் வாசித்த வாசகம் செபம், நோன்பு, பிறரன்புச் செயல் பற்றி இருக்கின்றது. இதை வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் செபம் என்பது 'இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு', நோன்பு என்பது 'நமக்கும் நமக்கும் உள்ள உறவு', பிறரன்புச் செயல் என்பது 'நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு'. இந்த மூன்று உறவுகளையும் மறுஆய்வு செய்ய தவக்காலம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இந்த மூன்றிலும் இயேசு முன்வைப்பது என்னவென்றால், 'நாம் செய்வது நமக்கும் இறைவனுக்கும் மட்டுமே தெரிய வேண்டும்'. நாம் செய்வது நம்மைப் பற்றிய தம்பட்டம் அடிக்கவோ, நம்மை நாமே நீதிமான்கள் என்று காட்டுவதற்காகவோ இருக்கக் கூடாது என்பதுதான். ஜென்னின் வார்த்தைகளில் கூற வேண்டுமென்றால் இந்த மூன்று செயல்களுமே 'ஒரு கை எழுப்பும் ஓசையாகத்தான் இருக்க வேண்டுமே' தவிர 'இரு கை எழுப்பும் சப்தங்களாக இருக்கக் கூடாது'.

நோன்பு - நமக்கும் நமக்கும் உள்ள உறவு. நோன்பு என்பது எல்லா மதங்களிலும் முன்வைக்கப்படும் ஒன்று. நோன்பு என்பது ஆன்மீக மதிப்பீடு என்பதைவிட உடலியல் சார்ந்த மதிப்பீடே என்று சொல்லலாம். 'வாழும் கலை' என்ற தியான மையத்தின் சிந்தனைகளில் ஒன்று என்னவென்றால் நம் உடலுள் நடக்கும் நிகழ்வுகளைச் சிந்திப்பது. நம் உடலின் வெளிப்புறத்தை நாம் பாதுகாக்கும் அளவிற்கு நம் உடலின் உட்புறத்தை நாம் நினைத்துப் பார்ப்பதில்லை. 'எல்லாம் நன்றாக நடப்பதால்' அதைக் கண்டுகொள்வது கிடையாது. சிறுநீரகக் கல் என்று ஒன்று வந்தால்தான் நம் உடலில் சிறுநீரகம் இருப்பதே தெரிகின்றது. மாரடைப்பு வந்தால்தான் இதயம் நினைவிற்கு வருகிறது. மூச்சுத்திணறல் வந்தால் தான் நுரையீரல் நினைவிற்கு வருகிறது. நம் பிறப்பு முதல் நம் இறப்பு வரை நம் உடன் வருவது நம் உடலில் உள்புறங்கள். நாம் பிறந்த அன்று நம்மில் தொடங்குகிற இரத்த ஓட்டம் நாம் இறப்பதற்குள் எத்தனையோ இலட்சம் மைல்கள் பயணம் செய்கின்றன. நோன்பு நம் உடலைப் பற்றி நினைக்க நமக்கு அழைப்பு விடுகிறது. உடலின் இயக்கத்திற்கு நாம் தரும் சிறு ஓய்வே நோன்பு. தவக்காலத்தில் மட்டுமல்ல ஆண்டு முழுவதும் நாம் அடிக்கடி மேற்கொள்ளும் நோன்பு நமக்கு மிகுந்த பயன் தருகிறது. மேலும் நோன்பில் நமக்கு நம் பசியும், நமக்கருகில் இருப்பவர்களின் பசியும் நினைவிற்கு வருகிறது. 

இறைவேண்டல் - நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு. நம் உடலின் இயக்கமாக இருப்பவர் இறைவன். அவர் நம்மை இயக்குவதை நாம் உணரும் ஒரு வழியே இறைவேண்டல். 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என்று கேட்கும் விண்ணப்பம் மட்டும் இறைவேண்டல் அல்ல. நன்றி, புகழ், மன்னிப்பு என அனைத்துமே இறைவேண்டல்தான். இயற்கைக்கும், இயற்கையைக் கடந்த இறைவனுக்கும் இடையே நடக்கும் உறவே இறைவேண்டல். எப்போதெல்லாம் நாம் இறைவேண்டல் செய்கிறோம்? 

பிறரன்புச் செயல் - நமக்கும் பிறருக்கும் உள்ள உறவு. நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய அழைக்கப்படுகின்றோம். ஆனால் பல நேரங்களில் நாம் செய்யும் உதவி மேலிருந்து கீழ் செல்லும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. நாம் செய்யும் உதவிகள் பல நேரங்களில் 'இருப்பவர் - இல்லாதவர்' என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் ஆபத்தும் இருக்கின்றது. உதவி என்றால் பொருளுதவி என்றே பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். நம் அனைவருக்குமே பொதுவாக இருக்கும் அறிவு, ஆற்றல், நேரம் என அனைத்தையும் பிறரோடு பகிர்வதும் பிறரன்புச் செயலே.

'நீங்கள் உங்கள் நம்பிக்கையோடு நற்பண்பும், நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மன உறுதியும், மனஉறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேயமும், சகோதர நேயத்தோடு அன்பும் கொண்டு விளங்குமாறு முழு ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள்' (2 பேதுரு 1:5-7).

Monday, January 27, 2014

ஆண்டவரே நீர் இங்கு இருந்திருந்தால்...

ஒரு ஜென் துறவியைப் பார்க்க ஒரு பார்வையற்ற மனிதர் ஒரு மாலை நேரம் வருகின்றார். சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்துவிட்டு அந்த மனிதர் புறப்படுகின்றார். அப்போது இருட்டத் தொடங்கிவிடுகிறது. உள்ளே சென்ற துறவி ஒரு அரிக்கேன் விளக்கைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்து, 'இதை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்!' என்கிறார். அதற்கு பார்வையற்ற மனிதர், 'பகலோ, இரவோ, வெளிச்சமோ, இருளோ எனக்கு அனைத்தும் ஒன்றுதான். இந்த விளக்கை வைத்து நான் என்ன செய்ய?' எனக் கேட்கின்றார். துறவி சொல்கின்றார், 'உனக்காக இல்லையென்றாலும் உன்மேல் யாராவது மோதிவிடாமல் இது உன்னைக் காப்பாற்றும்'. விளக்கைப் பெற்றுக்கொண்டு சிறிது தூரம் செல்கின்றார் பார்வைற்றவர். சற்று நேரத்தில் ஒருவர் அவர் மீது மோதிவிடுகிறார். இவருக்குக் கோபம் வந்துவிடுகிறது. 'என் கையில் விளக்கு இருப்பது கூடத் தெரியவில்லையா? ஏன் மேல் மோதுகிறீர்?' எனக் கேட்கின்றார். 'உன் கையில் விளக்கு இருக்கின்றது. ஆனால் அது அணைந்து கிடக்கின்றது' என்கிறார் மோதியவர். உடனே ஞானம் பெற்றார் பார்வையற்றவர்.

நம்மிடம் இருக்கும் விளக்கு அணைந்து விடும்போது என்ன செய்வது? விளக்கு இருந்தால் மட்டும் போதாது. அதை அணையாமலும் காக்க வேண்டும் அல்லவா? லாசர் என்ற விளக்கு பெத்தானியாவில் அணைந்து கிடக்கிறது. அதை ஏற்ற வருகின்றார் இயேசு. இயேசுவின் உடலில் அவரது இதயம் இருந்ததைவிட பெத்தானியாவில்தான் இருந்தது என்று சொல்லலாம். லாசர், மார்த்தா, மரியா வாழ்ந்த பெத்தானிய இல்லம் இயேசுவுக்கு ஓய்வு இல்லம். தன்னை முழுமையாக ஏற்றக்கொண்டவர்கள் இந்த மூவர்தான். இன்றும் புனித பூமியில் பெத்தானியாவின் மார்த்தா இல்லம் அழகாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கு நுழைந்தவுடன் இயேசு இன்னும் அங்கேயே அமர்ந்திருப்பது போல நம் கண்முன் தோன்றுகிறது. கொடுத்த வைத்த குடும்பம் அது.

1. லாசர் தூங்குகிறான். 'தூக்கம்' - இதுதான் விவிலியம் மரணத்திற்குக் கொடுக்கும் வார்த்தை. 'ஒவ்வொரு தூக்கமும் குறுகிய இறப்பு, ஒவ்வொரு இறப்பும் நீண்ட தூக்கம்' என்பார் ஷேக்ஸ்பியர். 'உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறது திருக்குறள் (339). செபக்கூடத் தலைவர் யாயீரின் மகள் இறந்த போதும் 'சிறுமி உறங்குகிறாள்' என்றே சொல்கின்றார் இயேசு. நாம் தான் இறப்பைப் பற்றி ரொம்பவும் பயப்படுகிறோம். ஆனால் இறைவனின் பார்வையில் அது 'தூக்கம்'. இறப்பைப் பற்றிய நமது பயத்தை மறு ஆய்வு செய்ய அழைக்கின்றது இன்றைய நாள்.

2. 'ஆண்டவரே நீர் இங்கு இருந்திருந்தால்...' ஒவ்வொரு இறப்பு வீட்டிலும் அழுகின்ற இதயங்கள் இதைச் சொல்லித்தான் அழுகின்றன. 'இறைவன் நம்மோடு இல்லை' என்ற ஒரு எண்ணத்தைத் தருவது நம் நெருங்கியவரின் இறப்பு. இறப்பு ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பை உருவாக்கி விடுகிறது. ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே நிறைவு தரும் என்பதை நமக்கு நினைவுறுத்துவது மரணம்தான். 'மரணம், நோய், மூப்பு' - இந்த மூன்றின் முன் எல்லா அறிவியலும், விஞ்ஞானமும் மண்டியிட்டு விடுகிறது. மார்த்தாவின் அளவுகடந்த நம்பிக்கையை நாம் இங்கு பார்க்கலாம். 'என் இயேசு எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் இருக்கும் இடத்தில் குறை இருக்காது' என்று துணிச்சலாக அறிக்கையிடுகின்றார். இந்த நம்பிக்கை நம்மிடம் இருக்கிறதா? மற்றொரு பக்கம் 'கடவுள் இருந்தாலும் இறப்பும் நடக்கும்' என்பதும் மறுக்க முடியாத ஒன்று. இயற்கையின் எதார்த்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் மனப்பக்குவம் அவசியம்.

3. கண்ணீர் விடும் கடவுள். விவிலியத்தில் மிகவும் குறுகிய வசனம் யோவான் 11:35 - இயேசு அழுதார். கிரேக்கப் பதிப்பில் இது ஒரே வார்த்தையில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்களுக்காக கண்ணீர் விடும் கடவுள். இங்கே தான் இயேசு இம்மானுவேலனாகத் தன்னையே முழுமையாக வெளிப்படுத்துகின்றார். 'அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது. அழுகை இராது. துன்பம் இராது' என்ற திருவெளிப்பாட்டு 21:4 வசனம் அன்றே இயேசுவில் நிறைவேறிவிட்டது. 

4. 'ஆண்டவரே நாற்றம் அடிக்குமே!' மார்த்தாவின் நம்பிக்கை கொஞ்சம் தடுமாறுகிறது. 'நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் உயிரோடு இருந்திருப்பான்' என்று முழு நம்பிக்கையை அறிக்கையிட்ட மார்த்தா, 'கல்லைப் புறட்டுங்கள்' என்று இயேசு சொன்னவுடன் கொஞ்சம் தடுமாறுகின்றார். இயேசு நம் வாழ்வில் செயலாற்ற பல நேரங்களில் ஏதோ ஒரு கல் தடையாக இருக்கின்றது. 'அந்தக் கல்லை அகற்று' என்று அவர் நம்மிடம் சொல்லும்போது, 'ஐயோ ஆண்டவரே நாற்றமடிக்குமே. நான் பாவியாயிற்றே. நான் நிறைய தவறுகள் செய்திருக்கிறேனே' என்ற குற்றவுணர்வு இயேசுவைச் செயல்பட முடியாமல் செய்து விடுகிறது. 'நான்கு நாட்கள் என்ன, நாற்பது நாட்கள்' ஆகியிருந்தாலும் இயேசுவால் செயல்பட முடியும்.

5. 'கட்டுக்களை அவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்!' கடவுளும் மனிதனும் இணைதலே அற்புதம். நம் வாழ்வில் அற்புதங்களை எதிர்பார்க்கிறோம். ஆனால் அதைக் கடவுள் மட்டுமே நடத்த வேண்டும் என நினைக்கிறோம். 'வேலை கிடைக்க வேண்டும்' என்ற அற்புதத்தைக் கடவுள் நிகழ்த்த வேண்டும் என்று நாம் நினைத்தால் 'அதற்கேற்றாற் போல நாம் படித்திருக்க வேண்டும். அல்லது பக்குவப்பட்டிருக்க வேண்டுமே'. இறைவன் நமக்கு உயிர் மட்டும்தான் தர முடியும். நம் கட்டுக்களை நாம் தான் அவிழ்க்க வேண்டும். அல்லது கட்டுண்டிருப்பவர்களை நாம் தான் அவிழ்த்துப் போகவிட வேண்டும். சமூகத்தின் பொறுப்புணர்வையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. 'நான் என்ன என் சகோதரனுக்குக் காவலாளியா?' என்ற கேள்வி விடுத்து அடுத்தவர்களின் கட்டுக்களை அவிழ்க்கும் பொறுப்புணர்விற்கு அழைக்கின்றார் இயேசு.

Sunday, January 26, 2014

கடவுள் ஏன் சோதனைகளை அனுமதிக்க வேண்டும்?

திருமுழுக்கின்போது இயேசுவின்மேல் இறங்கி வந்த தூய ஆவியானவர் உடனடியாக அவரைப் பாலைநிலத்திற்கு அழைத்துச்செல்கின்றார் (காண்: மோசே விப 34:28, எலியா 1 அர 19:8). அலகையால் இயேசு சோதிக்கப்பட்ட நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகளில் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. யோவான் நற்செய்தியாளர் இந்த நிகழ்வைக் குறித்து ஒன்றுமே எழுதாமல் அமைதி காக்கின்றார். மாற்கு நற்செய்தியாளர் 'பாலைநிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார். அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்' (மாற்கு 1:13) என்று ஒரே மூச்சாக எழுதி முடிக்கின்றார். மத்தேயு நற்செய்தியாளரும், லூக்கா நற்செய்தியாளரும் இயேசுவின் சோதனைகளை மூன்று எனக் குறிப்பிட்டாலும், அவர்கள் குறிப்பிடும் வரிசை ஒன்றிற்கொன்று முரண்படுகிறது (காண்: மத் 4:1-11 அப்பம் - கோவில் - மலை. லூக் 4:1-13 அப்பம் - நகரம் - கோவில்). மத்தேயு நற்செய்தியாளருக்கு முக்கியத்துவம் மலை – சீனாய் மலை மோசே, கார்மேல் மலை எலியா போல இயேசுவும் மலைமேலே. ஆனால் லூக்கா நற்செய்தியாளருக்கு முக்கியத்துவம் கோவில். எருசலேம் கோவிலில் தொடங்கும் தன் நற்செய்தியை எருசேலம் கோவிலிலேயே நிறைவு செய்கின்றார் லூக்கா. இரண்டுபேரின் நோக்கங்களும் வேறுபட்டதால் 'சோதனைகளை' வரிசைப்படுத்துவதிலும் வேறுபடுகின்றனர்.

நமக்கு கடவுள் ஏன் சோதனைகளை அனுமதிக்க வேண்டும்? கடவுளையே சாத்தான் சோதிக்கிறான் என்றால் கடவுளை விட அவன் மேலானவனா? எதற்காக இயேசு 'எங்களுக்குச் சோதனைகள் வேண்டாம்' என்று கற்பிப்பதற்குப் பதில் 'எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்' என்று இறைவேண்டலைக் கற்பிக்கின்றார். நன்மையும், அன்பும் உருவான எல்லாம் வல்ல கடவுள் ஏன் தீமையை அனுமதிக்க வேண்டும்? இந்தக் கேள்விகள் எல்லாம் நம் உள்ளத்தில் எழக்கூடியவை. நன்மை – தீமை என்பது மனிதரின் தொடக்கமுதல் இருந்துவரும் ஒரு தேடல். இந்தக் கேள்விகளுக்கு பதிலாக வருபவை அல்ல இயேசுவின் சோதனைகள். இதை ஒரு பாலைவன நிகழ்வாக மட்டும் பார்க்காமல் நம் உள்ளத்தில் நிகழும் நன்மைக்கும் - தீமைக்கும் எதிரான போராட்டமாகவும் பார்க்கலாம். 'ஏனெனில் நம் தலைமைக்குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல. மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர். எனினும் பாவம் செய்யாதவர்' (எபி 4:15).

'நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும.;' இயேசு தன் வாழ்நாள் முழுவதும் தனக்காக என்று எந்த அற்புதத்தையும் நிகழ்த்தவில்லை. ஆனால் இறுதி வரை மக்கள் அவருக்கு கொடுத்த சோதனையும் இதுதான்: 'நீ இறைமகன் என்றால் சிலுவையிலிருந்து இறங்கி வா' (மத் 27:40). 'தனக்குப் போகத்தான் தானம்' என்பது பழமொழி. இயேசுவைப் பொறுத்தவரையில் 'தனக்கென்று எதுவுமில்லை' என்பதுதான் வாழ்க்கைத் தத்துவமாக இருந்தது. 'இந்தக் கல்லை அப்பமாக்கி உண்' என்று சொல்கின்ற அலகை இயேசுவின் ஆணவத்தை தூண்டலாம் என நினைக்கின்றது. 'நீங்கள் இதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள்' (தொநூ 3:5) என்று முதற்பெற்றோரை தோட்டத்தில் தூண்டிய அலகை இங்கே இயேசுவையும் தூண்டுகிறது. நாம் எது செய்தாலும், யாரைச் சந்தித்தாலும் நமக்குள் ஒளித்துக்கொள்கின்ற கேள்வி: 'இதைச் செய்தால், இவரை அன்பு செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?' என்பதுதான். சுயத்தை அறுக்கக் கற்றுக்கொடுப்பதே இம்முதல் சோதனை. 

'நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையதாகும்.' கடவுளா? செல்வமா? கடவுளா? பொருளா? கடவுளா? அலகையா? 'நீங்கள் கடவுளுக்கும், செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது' (மத் 6:24) என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு விளக்கம் தருவதே இச்சோதனை. இங்கே இயேசுவை சோதிக்கின்ற சாத்தான் 'deal or no deal' என்று கேட்கிறது. 'வாழ்வையும், சாவையும், ஆசியையும், சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துகொள்' (இச 30:19) என எதைத் தேர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இது நமக்குக் கற்பிக்கின்றது. மனிதர்களை பல நேரங்களில் அடிமையாக மாற்றும் ஒன்று அவர்களிடம் இருக்கும் சுதந்திரம்தான். 'இது வேண்டும், அது வேண்டாம்' என்று நம்மை முடிவெடுக்க வைக்கும் சுதந்திரமே பல நேரங்களில் நம் துன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. தேர்ந்தெடுத்தபின் 'ஐயோ, தவறு செய்துவிட்டேன்' என்ற குற்றவுணர்வையும், 'அதை எடுத்திருக்கலாமோ?' என்ற கவலையையும் தருவது இந்தச் சுதந்திரம்தான். இன்று நாம் எதைத் தேர்ந்து கொள்கிறோம்?

'நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்.' இயேசுவை ஒரு கைப்பொம்மையாக மாற்ற நினைக்கிறது அலகை. 'கடவுளைக் கடவுளாக இருக்க விடு' என்று பதிலடி கொடுக்கின்றார் இயேசு. நாமும் பல நேரங்களில் கடவுளையும், கடவுளாக இருக்க விடுவதில்லை. மற்றவர்களையும், மற்றவர்களாக இருக்க விடுவதில்லை. 'நான் நவநாள் செய்கிறேன். என்னை இப்படி மாற்றுங்கள். எனக்குச் சொத்து கொடுங்கள்' என்று நாம் கடவுளையும் அவர் தன்மையிலிருந்து குதிக்கத் தூண்டுகிறோம். அல்லது 'நான் உன்னை எவ்வளவு அன்பு செய்தேன். எனக்கு ஒரு நன்றி சொன்னாயா? ஃபோன் செய்தாயா? நான் நல்லாயிருக்கேன்னாவது நினைச்சியா?' என்றெல்லாம் மற்றவர்களையும் குதிக்கச் சொல்கிறோம். அவரவருக்குரியதை அவரவருக்கு கொடுக்க வேண்டும் என்பதே இச்சோதனையில் இயேசுவின் போதனை.

'அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு அவரைவிட்டு (இயேசு) அகன்றது' (லூக் 4:13) – 'அப்பொழுது வானதூதர் அவரைவிட்டு (மரியா) அகன்றார்' (லூக் 1:38). இந்த இரண்டு இறைவாக்குகளையும் அருகில் வைத்துப் பார்த்தால் என்ன புலப்படுகிறது? வானதூதரும், அலகையும் நம்மை விட்டு அகல்கிறார்கள் என்றால் திரும்ப வரமாட்டார்கள் என்று அர்த்தம் அல்ல. இரண்டு பேருமே நம் வாழ்வில் தொடர்ந்து வருவார்கள். இயேசுவுக்கும் சோதனைகள் தொடர்ந்தன (காண். மத் 16:21-23, லூக் 22:42). நமக்கும் சோதனைகள் தொடரும். 'உங்களுக்கு வருகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார். சோதனை வரும்போது அதைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார். அதிலிருந்து விடுபட வழி செய்வார்' (1 கொரி 10:13).

Saturday, January 25, 2014

நீ நிற்பதே அக்கரையில் தானே!

ஒரு இளம் ஜென் துறவி தன் வீட்டிலிருந்து ஆசிரமம் நோக்கிப் புறப்படுகின்றார். வழியில் ஒரு நீளமான ஆறு. ஆற்றைக் கடந்தால் தான் தன் ஆசிரமம் செல்ல முடியும். 'இப்படி ஒரு அபாயம் குறுக்கே இருக்கும்' எனத் தெரியாமல் ஏதாவது உதவி கிடைக்குமா எனச் சுற்றும் முற்றும் பார்க்கின்றார். 'இதற்கு மேல் காத்திருக்க முடியாது. வீடு திரும்பலாம்' என நினைத்துப் புறப்படும் சமயம் கரையின் அந்தப் பக்கத்தில் அவருடைய குரு நிற்பதைப் பார்க்கின்றார். அவரை நோக்கி இக்கரையிலிருந்து சப்தமிடுகிறார்: 'ஐயா, அக்கரைக்கு வருவது எப்படி எனக்குச் சொல்வீர்களா?' சிறிது நேரம் யோசித்துவிட்டு அக்கரையிலிருந்து குரு சொல்கின்றார்: 'மகனே, நீ நிற்பதே அக்கரையில் தானே!' இளைஞன் ஞானம் பெற்றான்.

ஒரு கரைக்கு அடுத்து கரை அக்கரைதான். அதைத் தெரிந்து கொள்வதே பெரிய ஞானம். உயிர்ப்பு என்ற அக்கரைக்குக் கடந்து சென்ற இயேசு இக்கரையில் நின்று இன்னும் பயந்து கொண்டிருந்த தம் சீடர்களைச் சந்திக்கின்றார். நீங்கள் நிற்கும் இக்கரையும் அக்கரையே என அவர்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இன்றைய நற்செய்திப் பகுதியை (யோவான் 20:19-31) இரண்டு பாகங்களாகப் பிரிக்கலாம்: முதலில் தம் சீடர்களுக்கு உயிர்த்த இயேசு தன்னையே வெளிப்படுத்துகின்றார், இரண்டாவதாக, தோமையாரைத் தொடுவதற்கு அனுமதிக்கின்றார். பல நேரங்களில் இன்றைய நற்செய்தியை வாசித்தவுடன் 'நம்பாத தோமையார்!' 'ஐயம் கொள்ளும் தோமையார்' எனவும் நாம் முடித்து விடுகிறோம். இன்றைய நற்செய்தியின் மையம் தோமையாரோ அல்லது அவரது சந்தேகமோ அல்ல. இன்றைய நற்செய்தியின் மையம் இயேசுவே. 

1. இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று வந்த இயேசுவை 'கடவுள் நமக்காக' என்று மாற்றியது அவரது உயிர்ப்பே. சுவர்களையும், பூட்டிய கதவுகளையும் தாண்டி வருவதாலோ, பயந்து போன சீடர்களுக்குத் தன் காயங்களைக் காட்டினார் என்பதாலோ இயேசு உடனிருக்கிறார் என்ற நினைத்து விட முடியாது. அவரின் உடனிருப்பு அவர் தரும் 'தூய ஆவியில்தான்' இருக்கின்றது. 'அவர்கள் மேல் ஊதி தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;' என்கிறார் இயேசு. படைப்பின் தொடக்கத்தில் களிமண்ணால் செய்த ஆதாமின் மேல் ஊதி தன் ஆவியை உட்புகுத்துகின்றார் யாவே இறைவன். புதிய ஏற்பாட்டில் களி மண் போல் உறைந்து போயிருந்த தம் சீடர்கள் மேல் தன் ஆவியை ஊதுகின்றார் இயேசு. இனி அவர்கள் பழைய மனிதர்கள் அல்லர். புதியவர்கள். இயேசுவின் புதிய வாழ்வு அவர்களோடு இருக்கின்றது. அவர்களோடு இருக்கின்றது என்றால் அது நம்மோடும் இருக்கின்றது. 'ஒருவரின் மேல் ஆவி இறங்கியுள்ளது' என்று நாம் சொல்லும்போது 'அது அவரை ஆட்டுவிக்கும்' எனவும் நாம் அறிவோம். இயேசுவின் ஆவி நம்மேல் உள்ளதென்றால் அது நம்மைப் புது வாழ்விற்கு ஆட்டுவிக்கின்றதா. அல்லது அந்த ஆவியை நாம் ஆறப்போட்டு விட்டோமா?

2. 'நம்பிக்கையற்றவனாய் இராதே! நம்பிக்கை கொள்'. இயேசுவின் தாயுள்ளத்தை நாம் பார்க்கின்றோம். நம்மை மிகுதியாக அன்பு செய்பவர்களின் அன்பை நாம் புரிந்து கொள்ளாத போது அவர்கள் நம்மைப் பார்த்துச் சொல்வார்கள்: 'என் இதயத்தைத் திறந்து காட்டி நான் உன்னை எவ்வளவு அன்பு செய்கிறேன் என்று நிரூபி;க்க முடிந்தால் நான் எப்பவோ நிரூபித்திருப்பேன்!' இதே போலத்தான் இயேசு தம் சீடர்களின் மேல் இருந்த அன்பை, குறிப்பாக தோமையாரின் மேலிருந்த அன்பை நிரூபிக்கின்றார். 'உன் விரல்களை என் காயங்களில் இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு!' இயேசுவின் அன்பு திறந்து காட்டும் அன்பு. இயேசுவின் அன்பு தீர்ப்பிடாத அன்பு. 'நீங்கள்லாம் என்னை நம்பவே வேண்டாம்டா. உங்க விருப்பம் எதுவோ? அப்படியே செய்யுங்கள்!' என்று அவர் உதறித்தள்ளவில்லை. நாம் அன்பு செய்பவர்கள் நம் அன்பைப் புரிந்து கொள்ளாதபோது, நம்மை மற்றவர்கள் நம்பாதபோது நாம் அவர்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்கிறோமோ? இயேசுவின் இந்தச் செயல்பாடு நம் உணர்வு முதிர்ச்சிக்கு ஒரு நல்ல பாடம்.

3. கொடை- கடமை. இந்த நற்செய்தியில் இந்த இரண்டும் உள்ளது. 'இயேசுவின் உடனிருப்பு' நம்மோடு இருக்கிறது என்ற வாக்குறுதி ஒரு கொடை. அதே போல அந்த உடனிருப்பை நாம் உலகறியச் செய்ய வேண்டும் என்பது நமது கடமை. கொடையை மட்டும் வைத்துக்கொண்டு ஓய்ந்திருப்பதும், ஓடிக்கொண்டே இருந்துவிட்டு உடனிருப்பை அறியாமல் இருப்பதும் ஆபத்துதான். 

4. தோமையார் நம் பிரதிநிதி. இயேசுவைச் சுற்றியிருக்கும் வட்டம் இன்று விரியத் தொடங்குகிறது. இரண்டாயிரத்து பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பின் நாம் இருந்தாலும் இயேசுவைச் சுற்றியிருக்கும் ஒரு வட்டத்தில் தான் இருக்கின்றோம். நம் பிரதிநிதியாகவே தோமையார் இன்று இயேசுவின் உயிர்த்த உடலுக்குள் கையை இடுகின்றார். 'என் ஆண்டவரைச் சிலுவையில் அறைந்தபோது நீ அங்கு இருந்தாயா?' என்ற அழகிய ஆங்கிலப் பாடல் உண்டு. நாம்; இன்று உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்தாலும், காலத்தால் வெகுதூரம் பிரிக்கப்பட்டு நின்றாலும் இயேசுவின் சிலுவையின் போதும், அவரின் உயிர்ப்பின் போதும் நாம் இருந்ததுபோலவே நம் மனம் உணர்கின்றது என்றால் நாம் முதற்சீடர்களின் அனுபவம் பெற்றுள்ளோம் என்றே அர்த்தம். 

'நீ நிற்பதே அக்கரையில் தானே!'

Friday, January 24, 2014

நாங்களுமா பார்வையற்யோர்?

யோவான் நற்செய்தியிலேயே, ஏன் அனைத்து நற்செய்திகளிலுமே, நாடக நடையும் அதே நேரத்தில் இறையியல் கோட்பாடுகளும் நிரம்பி இருக்கும் ஒரே பகுதி இன்றைய நற்செய்திப் பகுதிதான். மற்ற நற்செய்தியாளர்களும் இயேசு பார்வையற்றவர்களுக்குப் பார்வையளிப்பதைப் பற்றி எழுதியுள்ளனர். ஆனால் யோவான் நற்செய்தியாளர் இந்நிகழ்வில் 'பார்வை பெறுதல்' என்பது 'இயேசு இறைமகன் என்பதை அறிந்து கொள்ளுதல்' என்ற புதிய இறையியிலை முன்வைக்கின்றார். இந்த நற்செய்தி இயேசுவுக்கும் - பார்வையற்ற மனிதருக்கும், பார்வையற்ற மனிதருக்கும் - பரிசேயருக்கும், பார்வையற்ற மனிதருக்கும் - இயேசுவுக்கும், பரிசேயருக்கும் - பெற்றோருக்கும், பரிசேயருக்கும் - இயேசுவுக்கும் என ஐந்து உரையாடல்கள் உள்ளன. பார்வையற்ற மனிதர் பார்வை பெறுகின்றார். பரிசேயர் பார்வை கொண்டவர்களாக இருந்தாலும் பார்வையற்றவர்களாக இருக்கின்றனர். பெற்றோர்கள் இடைப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இயேசு இறைமகன் என்ற நம்பிக்கை வருவதே பார்வை பெறுதலின் நிறைவு. 

இறைநம்பிக்கை தான் நாம் பெற வேண்டிய பார்வை. நம் மனம் அனைத்துக்கும் விடைகள் கண்டுபிடிக்க நினைக்கிறது. விடைகள் கிடைக்காவிட்டால் அது பொய்யானது எனவும் எண்ணிவிடுகின்றது. ஆனால் வாழ்வின் எல்லா வினாக்களுக்கும் விடைகள் கிடைப்பதில்லை. கிடைக்கின்ற விடைகளும் நமக்குத் திருப்தியளிப்பதில்லை. ஐம்புலன்களையும் தாண்டிய அறிவே நம்பிக்கை. நம்பிக்கை பல நேரங்களில் மேலோட்டமானது எனவும், தேவையற்றது எனவும் நாம் நினைக்கின்றோம். நம்பிக்கை ஒரு பயணம். 

இந்த நம்பிக்கைப் பயணத்தில் இன்று இந்த நற்செய்திப் பகுதியில் வரும் ஐந்து கேள்விகள் உதவுகின்றன என்று பார்ப்போமா?

1. 'இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?' பார்வையற்றவர் பார்வையற்று இருப்பதற்கு பாவம் தான் காரணம் என்று நினைக்கின்றனர் இயேசுவின் சீடர்கள். ஆனால் 'கடவுளின் செயல் வெளிப்படவே இப்படி இருக்கிறார்' என்று புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. இந்து மதத்தில் வரும் 'கர்மா' என்ற சிந்தனைக்கு மாற்று இது. நாமும் பல நேரங்களில் நமக்கு வரும் துன்பங்கள் நாம் செய்த பாவத்தினாலும், நமக்கு வரும் இன்பங்கள் நாம் செய்யும் புண்ணியங்களாலும் வருகின்றன என நினைக்கின்றோம். ஆனால் இன்பமோ, துன்பமோ நம் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் இறைவனின் மாட்சி வெளிப்படவே என்பதுதான் உண்மை. எந்த ஒரு நிகழ்விலும் இறைப்பிரசன்னத்தைக் காணும் ஒருவரால் மட்டுமே இறைநம்பிக்கை வரும். 'கல்லை மட்டும் பார்த்தால் கடவுள் தெரியாது.' 

2. 'அவர் எங்கே?' இது பரிசேயர்களின் கேள்வி. இயேசுதான் பார்வை அளித்தார் என்று பார்வைபெற்றவர் சொன்னவுடன் 'அவர் எங்கே?' என்று கேட்கின்றனர். ஆனால் அவரால் இயேசுவை அடையாளம் காட்ட முடியவில்லை. பரிசேயர்கள் இயேசுவை எதற்காகத் தேடுகிறார்கள்? அவரை ஏற்றுக்கொள்ளவா? இல்லை. அவர்மேல் ஓய்வுநாளை மீறிய சட்டத்திற்காகத் தீர்ப்பளிக்க. இன்று இயேசுவை நாம் எங்கே தேடுகிறோம்? எதற்காகத் தேடுகிறோம்? பல நேரங்களில் நாம் தேடும் கடவுள் உணவில் கரைந்திருக்கும் உப்பாகத்தான் இருக்கின்றார். உணவில் உப்பு தேடும் படியாக இருந்தால் அந்த உணவுப்பகுதி உவர்ப்பாகவே இருக்கும். உப்பு தன்னையே மறைத்தால்தான் உணவு சுவை பெற முடியும். இறைவனின் பிரசன்னமும் நம் வாழ்வில் காணக்கூடியதாக இருப்பதில்லை.

3. 'இவனுக்கு எப்படிக் கண் தெரிகிறது?' கண் தெரிந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத பரிசேயர் அவரின் பெற்றோரிடம் கேட்கும் கேள்வி இது. இந்தக் கேள்வியை நம் மூளையும் பல நேரங்களில் கேட்கும். 'கோயிலுக்கே போகாதா அவன் மட்டும் ஏன் இப்படி இருக்கிறான்?' 'எப்போதும் கோவிலேயென இருக்கும் நான் ஏன் இப்படி இருக்கிறேன்?' 'அது எப்படி?' 'இது எப்படி?' என்று கேள்வி கேட்பதால் நம் அமைதிதான் கெடுகிறது. அன்னை தெரசா சொல்வார்: 'வாழ்வில் நாம் மற்றவரை அன்பு செய்வதற்குப் பதில் அவரைக் குறித்து கேள்விகள் கேட்டே பழகிவிட்டோம்.' கேள்விகள் குறையும்போது நம்பிக்கை பெருகும். அன்பும் பெருகும்.

4. 'மானிட மகனிடம் நீர் நம்பிக்கை கொள்கிறீரா?' இயேசு பார்வையற்ற மனிதரிடம் கேட்கின்றார். 'தி ஏஞ்சல்ஸ் அண்ட் டீமன்ஸ்' என்ற நாவலில் வரும் கதாநாயகனிடம் (விஞ்ஞானி) திருத்தந்தையின் பதில்குரு ஒரு கேள்வி கேட்பார்: 'கடவுள் மேல் உமக்கு நம்பிக்கை உண்டா?' அதற்கு கதாநாயகன் சொல்வார்: 'நம்பிக்கை என்பது ஒரு கொடை. அதைக் கடவுள் மட்டுமே தரமுடியும். அவராக யாரைத் தேர்ந்து கொள்கிறாரோ அவருக்கே அது கிடைக்கும்'. ஆம். நம்பிக்கை என்பது கீழிருந்து மேலே செல்வது அல்ல. மேலிருந்து நம்மை நோக்கி வருவது. அதைக் கடவுளே நமக்குத் தர முடியும்.

5. 'நாங்களுமா பார்வையற்யோர்?' பரிசேயர்கள் இயேசுவைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இது. இயேசுவின் பதிலில் நம்பிக்கைக்கான தேடல் நிறைவு பெறுகிறது: 'நீங்கள் பார்வையற்றோராய் இருந்திருந்தால் உங்களிடம் பாவம் இராது!'. நம்பிக்கை என்ற பார்வை இல்லாத அனைவருமே பாவிகள் என்கிறார் இயேசு. 'இருட்டறையில் கறுப்புப் பூனையைத் தேடுவதுதான் நம்பிக்கை' என்பார் தாமஸ் அக்வினாஸ். அந்த நம்பிக்கையைத் தேடவும் ஒரு பார்வை தேவை. 'நான் பார்வை பெற வேண்டும்!' என்று இறைவனை நாம் கேட்போம். இறைவனை 'அப்பா' என்று அழைத்து, ஒருவர் மற்றவரை 'சகோதரன், சகோதரி' என்று அழைக்கும்போதுதான் நாமும் பார்வைபெற்றவர்கள்.

Thursday, January 23, 2014

வாடகைக் கழுதையில் வந்த நம்பிக்கை

ஸ்பெயின் நாட்டில் அரசர்கள் ஆண்ட சமயம் நடந்த ஒரு நிகழ்வு. ஒரு கிராமத்து மக்களைச் சந்திக்க அரசர் வருகிறார் என்ற செய்தி வருகிறது. கிராமத்து மக்களுக்கு ஆச்சர்யம். ஆயிரம் வருடங்களுக்குப் பின் அரசர் ஒருவர் நம் கிராமத்திற்கு வருகிறார். நம்மிடம் உள்ளதில் சிறந்தவற்றை அவருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊர்கூடி திட்டமிடுகின்றனர். அந்த ஊரில் உள்ளவர்கள் அனைவரும் திராட்சை ரசம் செய்யக் கூடியவர்கள். ஆகையால் ஊர் நடுவில் ஒரு பெரிய பானையை வைப்போம். அந்தப் பானையில் நாம் அனைவரும் செய்த திராட்சை ரசத்தைக் கொண்டு வந்து ஊற்றுவோம். அரசர் இதுவரை தான் பருகியிராத சுவையான திராட்சை ரசத்தைப் பருகட்டும் என்று சொல்கின்றனர். பானையும் வைத்தாயிற்று. பானையின் உச்சிக்குச் செல்ல ஒரு ஏணியும் வைத்தார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக அந்தப் பானையில் ஊற்றுகின்றனர். அரசர் வரும் நாளும் வந்தது. மகிழ்ச்சியுடன் அரசரைப் பானையை நோக்கி அழைத்துச் செல்கின்றனர். ஒரு டம்ளரைக் கட்டி பானையினுள் நுழைத்து அரசருக்குக் குடிக்கக் கொடுக்கின்றனர். குடித்தவுடன் அரசரது முகத்தில் ஏமாற்றம்: 'என்ன தண்ணியா?' என்கின்றார். எல்லோரும் ஆச்சர்யமாகப் பார்க்கின்றனர். ஆம். என்ன நடந்தது என்றால், 'இவ்வளவு பெரிய பானையில் திராட்சை ரசத்திற்குப் பதிலாக கொஞ்சம் தண்ணீர் ஊற்றினால் தெரிந்துவிடவா போகிறது' என நினைத்து எல்லோரும் தண்ணீரையே ஊற்றியிருக்கின்றனர். தங்களிடமிருந்தில் சிறப்பானதை அரசனுக்குக் கொடுக்க அவர்களுக்கு மனம் வரவில்லை.

இதோ! இன்று ஒரு அரசர் எருசலேம் நோக்கிப் பயணமாக வருகின்றார். தன்னிடம் சிறப்பாக இருக்கும் தன் உயிரையே மக்களுக்காகத் தர வருகின்றார் அவர். அவருக்கு மக்கள் எதைக் கொடுத்தார்கள்? ஆண்டவரின் குருத்தோலைப் பவனி அவரின் வாழ்வில் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு அவரது சமகாலத்தவரின் வாழ்விலும் முக்கியமாக இருக்கிறது. ஆண்டவரின் எருசலேம் வருகை அவருக்கு ஒரு முடிவை அறிவித்தாலும், மக்களின் வாழ்வில் அது ஒரு புதிய தொடக்கத்தை விதைக்கிறது. இறைவாக்கினர்கள் இயேசுவைக் குறித்து எழுதியவை நிறைவேறத் தொடங்குகின்றன. 'வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள். தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள். மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்' (திபா 24:7) என்று திருப்பாடல் ஆசிரியர் முன்மொழிய இன்று எருசலேம் நகரமே எழுந்து நிற்கின்றது இயேசுவை வரவேற்க. இந்த அரசனுக்கு அன்று மக்கள் என்ன கொடுத்தார்கள்? இன்று நாம் என்ன கொடுக்க வேண்டும்?

1. தங்களில் சிறந்ததைக் கொடுக்கின்றனர். ஸ்பெயின் நாட்டு மக்களைப் போல அல்லாமல், இயேசுவின் சமகாலத்தவர், அவரால் நலம் பெற்றோர், எளியோர், வறியோர், இறையரசை எதிர்பார்த்துக் காத்திருந்தோர் தங்களிடமிருந்தவைகளில் முதன்மையானவைகளை இறைவனுக்குக் கொடுக்கின்றனர்: யாருமே ஏறியிராத கழுதை, குருத்தோலைகள் மற்றும் ஆடைகள். கழுதை அமைதியின் சின்னம். தாவீதின் அரசரும் அப்சலோமுடன் உடன்படிக்கை செய்யச் செல்லும்போது கழுதையின் மேலே அமர்ந்து செல்கின்றார். குதிரைகள் இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு வருகின்றன. ஆனால் கழுதை அமைதியையே கொண்டு வருகின்றது. இந்தக் கழுதைக்கும் இறைத்திட்டத்தில் பங்கு இருக்கின்றது. அது இயேசுவுக்காகவே காத்திருக்கின்றது. இன்று நாம் யாருக்காகக் காத்திருக்கிறோம்? யாராவது நம்மை அவிழ்க்க வருவார்களே என்ற தயார்நிலையில் இருக்கின்றோமா? குருத்தோலைகள் குறிப்பவை என்ன? புத்துயிர். தென்னை மற்றும் வாழை மரங்களில் பார்த்திருப்போம். குருத்தைக் கவனமாகப் பாதுகாப்பார்கள். குருத்து புதிய உயிரைக் கொண்டிருக்கிறது. குருத்து வருகிறது என்றால் அங்கே உயிர் இருக்கிறது என்று அர்த்தம். குருத்து தராத மரம் 'மலட்டு' மரம் என்றே அழைக்கப்படும். குருத்தோலைகள் புத்துயிரை அடையாளப்படுத்துகின்றன. இயேசுவின் பிரசன்னம் புத்துயிரைக் கொண்டுவருகின்றது. ஆடைகள் பாவ நிலையைக் குறிப்பிடுகின்றன. பாவத்தால் வந்த ஆடை பாவம் போக்க வந்த இயேசுவின் முன் விரிக்கப்படுகின்றது. மேலும் ஆடைகள் விரித்து அதன் மேல் நடந்து வருதல் ஒருவரின் மேன்மையைக் குறிப்பிடுகின்றது. சிவப்புக் கம்பள வரவேற்பு என்றும், இரத்தினக் கம்பள நடை என்றும் நாம் இதையே குறிப்பிடுகிறோம். எந்த நம்பிக்கையோடு இஸ்ராயேல் மக்கள் தங்கள் ஆடைகளை விரித்திருப்பார்கள்? இன்று இயேசு நம் முன் வருகிறார் என்றால் நம்மால் ஆடைகளை அவருக்காக விரிக்கும் துணிச்சல் வருமா?

2. ஓசான்னா. 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா. ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசீர் பெற்றவர். உன்னதங்களில் ஓசான்னா' என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்புகின்றனர் மக்கள். இந்த ஓசான்னா இன்னும் கொஞ்ச நாட்களில் 'சிலுவையில் அறையும்' என்று மாறிவிடும் என்பதும் எதார்த்தம். 'ஓசான்னா!' என்பது ஒருவகையான செபம். திபா 118:25-26 என்ற திருப்பாடல்தான் யூத மக்களின் ஹலேல் திருப்பாடலில் இறுதியானது. ஹலேல் வகைத் திருப்பாடல்கள் அரசர்கள் திருப்பொழிவு செய்யும் போது பாடப்படும். 'தாவீதின் வழி வரும் அரசர் இவரே' என்று இயேசுவைத் தாங்களாகவே அரசராகத் திருப்பொழிவு செய்கின்றனர் மக்கள். வாடகைக் கழுதையில் வந்த இறுதி நம்பிக்கை தங்களுக்கு மீட்பைக் கொண்டுவரும் என நம்பினர். 'ஓசான்னா' என்றால் 'எங்களை மீட்டுக்கொள்ளும், காப்பாற்றும்' என்றும் பொருள் கொள்ளலாம். இன்று நாம் திருப்பலியிலும் ஓசான்னா பாடுகிறோம். இறைவனின் மீட்பை நாம் நம் வாழ்வில் உணர்ந்திருக்கின்றோமா? இன்று எருசலேம் கூட்டத்தில் நாம் நின்றால் ஓசான்னா பாடுவோமோ?

ஓசான்னா பாடுவதற்கு நம்மிடம் தடையாய் இருப்பவை எவை? 'நான் என்ற ஆணவம்' - எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் முடியும், நானே என்னைப் பார்த்துக்கொள்வேன் என்று நினைப்பவர்கள் ஓசான்னா பாட முடியாது. ஆகையால் தான் பவனியைப் பார்த்த பரிசேயரும், மறைநூல் அறிஞரும் மக்களைக் கடிந்து கொள்கின்றனர். 'பயம்' இருப்பவர்களும் 'ஓசான்னா' பாட முடியாது. 'அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது. பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது' என்பார் அகுஸ்தினார். இறைவனின் அன்பை அனுபவிப்பவர்களே அவரிடம் தஞ்சம் புக முடியும். அடுத்ததாக, சந்தேகம் இருக்கும் இடத்தில் ஓசான்னாவிற்கு இடமில்லை. சந்தேகமற்ற நிலையே நம்பிக்கை. 

3. முதற்தர மகிழ்ச்சி. இயேசு கானாவூரில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியபோது அந்த இரசத்திற்கு பந்தி மேற்பார்வையாளர் அளித்த அடைமொழி 'முதற்தரமான' என்பதுதான். இயேசுவின் பவனியில் பங்கேற்றவர்கள் முகத்தில் இருந்ததும் இந்த மகிழ்ச்சிதான். இவர்களின் கண்கள் பார்த்தது இயேசுவை மட்டும்தான். மற்றவர்கள் பார்ப்பார்களே! நம்மை; கேலிசெய்வார்களே! என்று யாரைப் பற்றியும் அவர்கள் கவலைப்படவேயில்லை. நம் வாழ்வில் இயேசுமட்டும் மையமாக வைக்கும் முதற்தர மகிழ்ச்சியை நாம் அனுபவிக்கிறோமா? அந்த மக்களுக்கு தெரிந்ததெல்லாம் இயேசு என்றால் நம்பிக்கை என்பது மட்டும்தான். நம் வாழ்விலும் நமக்குத் தெரிந்த ஒரே நம்பிக்கை இயேசுதான் என்றால் நாமும் நம் ஆடைகளை விரிப்போம். அவர் பவனி வரட்டும்!

Wednesday, January 22, 2014

முடிந்ததா? விடிந்ததா?

பழைய ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து மோசே தலைமையில் விடுதலை பெற்றவர்களாய் செங்கடலைக் கடந்து சென்றதையும், புதிய ஏற்பாட்டில் இயேசு இறப்பைக் கடந்து பாவத்தை அழித்து உயிர்த்ததையும் ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமென்றால்: 'எல்லாம் முடிந்தது என்று நினைத்தவர்களுக்கு விடிந்தது!' என்று சொல்லலாம். 

பின்னால் பாரவோனின் படைவீரர்கள். முன்னால் செங்கடல். இரண்டு பக்கம் சென்றாலும் அழிவு நிச்சயம். இச்சூழலில் 'எங்களை அழிக்கவா இங்குக் கூட்டி வந்தீர்!' என்று மோசேயைப் பார்த்து இஸ்ரயேல் மக்கள் பயத்தால் அலறியபோது, எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தபோது அங்கே விடியச் செய்கின்றார் இறைவன். கடல் பிரிகின்றது. பாதை தெரிகின்றது. பாதம் நனையாமல் கடந்து செல்கின்றனர்.

முப்பது வருடங்கள் தம்மையே தயாரித்து, மூன்று வருடங்கள் பன்னிரண்டு சீடர்களோடு பட்டிகள் தோறும் பயணம் செய்து நோய்களைக் குணமாக்கி, பேய் பிடித்தவர்களுக்கு நலம் தந்து 'இறையரசு நெருங்கி வந்துவிட்டது!' என அறிவித்த ஒருவர், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா!' என்று நாம் வாழ்த்துப்பாடிய ஒருவர், 'மெசியா வந்துவிட்டார். நம் துன்பமெல்லாம் அழிந்துவிட்டது!' என நாம் கனவு கண்டுகொண்டிருக்க இதோ சிலுவையில் மிகக் கொடூரமாய் இறந்து போனாரே! என்று புலம்பிக் கொண்டிருந்த சீடர்களுக்கும் இன்று விடியல். இயேசுவின் சீடர்களை விட அவரின் எதிரிகளே அவரின் உயிர்ப்பின் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆகையால்தான் கல்லறைக்குக் காவல் வைக்கத் துணிகின்றனர்.

பழைய ஏற்பாட்டு மக்கள் கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'நனைந்த தரை'. புதிய ஏற்பாட்டில் இயேசு கடந்ததற்கு ஒரே உதாரணம்: 'வெற்றுக்கல்லறை'. 'அவர் இங்கு இல்லை!' - இதுதான் அவருடைய கல்லறையில் அவராய் எழுதி வைத்த வாசகம். 'சீடர்கள் கண்டார்கள், நம்பினார்கள்' என்று விவிலியம் சொல்லும்போதும் 'வெற்றுக் கல்லறையையே' குறிப்பிடுகின்றது.

இன்றும் நம்மைக் கட்டி வைக்கும் ஒரு வார்த்தை இதுதான்: 'எல்லாம் முடிந்துவிட்டது! இனி ஒன்றுமில்லை!' நம் வாழ்வில் இழப்புகள் வரும்போதும், நம் உடல்நலம் தளரும்போதும், நமக்கு நெருக்கமானவர்கள் நம்மைவிட்டுப் பிரியும்போதும், தொழிலில் நஷ்டம் வரும்போதும், குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போதும், 'எல்லாம் முடிந்துவிட்டது!' எனப் புலம்புகின்றோம். இறைவனின் பார்வையில் முடிவு என்பதே இல்லை. எல்லாம் புதிய தொடக்கம்தான்.

இந்தப் புதிய தொடக்கத்தைக் காண முதலில் நமக்குப் புதிய கண்கள் வேண்டும். அந்தக் கண்களின் பெயர்தான் நம்பிக்கை. இயேசுவின் எதிரிகளும் அவருடைய கல்லறையை வந்து பார்த்திருக்கக் கூடும். அவர்களும் 'அவர் இங்கு இல்லை!' எனச் சொல்லியிருப்பார்கள். சீடர்கள் சொன்னதற்கும், அவர்கள் சொன்னதற்கும் வித்தியாசம் இதுதான்: 'நம்பிக்கை!'. கண்டார்கள். நம்பினார்கள். 'ஆண்டவராகிய கிறிஸ்து உயிர்த்தெழாவிட்டால் நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும், நாங்கள் அறிவிக்கும் நற்செய்தியும் வீண்!' என்கிறார் தூய பவுலடியார். இயேசுவின் உயிர்ப்பே நம் இறைநம்பிக்கையின் ஆணிவேர். அந்த நம்பிக்கைக்காக இன்று நன்றி கூறுவோம். இந்த நம்பிக்கை நமக்கு மனதளவிலும் வலுவூட்டுகிறது. 'அவர் கல்லறையில் இல்லை!' என்றால் எங்கே இருக்கிறார்? 'இதோ! நம் நடுவில் இருக்கின்றார்'. 'வாழ்பவரை இனி இறந்தோரிடம் தேடுவதேன்!' எங்கெல்லாம் வாழ்க்கை துளிர் விடுகின்றதோ, எங்கெல்லாம் மொட்டு விரிகின்றதோ, எங்கெல்லாம் உயிர் பிறக்கின்றதோ அங்கே அவர் இருக்கின்றார். அங்கே அவரைத் தேடுவோம்.

இதன் உட்பொருள் என்ன? நாம் கல்லறைகளாய் இருந்தால் இயேசு அங்கே இருப்பதில்லை. நாம் நம் பழைய கால வடுக்களையும், பாவங்களையும் பற்றிக்கொண்டு 'என் பாவமே! என் பாவமே!' எனப் புலம்பிக் கொண்டிருந்தால் அங்கே கடவுள் இருப்பதில்லை. நம் புன்சிரிப்பில் கடவுள் இருக்கிறார். பல நேரங்களில் உயிர்ப்பின் மகிழ்ச்சியைவிட வெள்ளியின் சிலுவைச் சோகத்தையே விரும்புகிறோம். இஸ்ரயேல் மக்களும் ஒரு கட்டத்தில் 'எகிப்தின் இறைச்சிப் பாத்திரங்கள் அருகே அமர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' எனத் தங்களின் இறந்தகாலத்தை நாடிச்செல்கின்றனர். அவர் உயிர்த்துவிட்டார். ஆகவே இனி நாம் பின்னால் பார்க்க வேண்டாம். முன்னால் பார்த்து நடப்போம்.

'இயேசுவின் உடலுக்கு நறுமணத்தைலம் பூச வந்த பெண்களும், சீடர்களும் உயிர்ப்பின் சான்றுகளாய் மாறுகின்றனர்'. அகுஸ்தினார் உயிர்ப்பைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: 'கல்லறையின் கல் புறட்டப்பட்டது இயேசுவை வெளியே கொண்டு வருவதற்கு அல்ல. மாறாக, சீடர்களை உள்ளே கொண்டு வருவதற்குத்தான்!' இன்றும் நாம் உயிர்த்த ஆண்டவரைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு இதுதான் தோன்ற வேண்டும்: 'நாம் கண்டதை மற்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும்'. இயேசுவின் உயிர்ப்பிற்குப் பின் சீடர்கள் புத்துயிர் பெறுகின்றனர். 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்த இயேசு 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார். 

எல்லாம் கடந்து விடும். சவுக்கடி, மறுதலிப்பு, சிலுவைத் துன்பம், தனிமை, ஏமாற்றம், சோகம். எல்லாம் நொடிப்பொழுதில் மாறிவிடும். 'முடிந்தது என்று நினைக்கும் போது அங்கே விடியும்'. இரவில் மடிந்த சூரியன் காலையில் எழுகின்றான். கிழக்கில் உதித்த சூரியனாய் இயேசு இன்றும் நம் நடுவில்.

வேறு அரசர் இல்லை!

இயேசு தாம் உயிர்த்தெழுந்தபின் நாற்பது நாட்கள் மண்ணுலகில் தம் சீடர்களோடு இருந்துவிட்டு விண்ணகம் ஏறிச் செல்கின்றார். அவரை வானுலகில் வரவேற்க வானகத் தந்தை வானதூதர்களோடு காத்துக் கொண்டிருக்கிறார். தன் மகனைக் கண்டவுடன் ஓடிச் சென்று ஆரத் தழுவிக் கொள்கின்றார். 'வா! மகனே! வா! என் வலப்புறம் அரியணை உனதாகட்டும்!' என்று வரவேற்கின்றார். அந்நேரம் இயேசுவின் முகம் சற்று வாடியிருக்க தந்தை கேட்கின்றார்: 'என்ன மகனே? என்ன ஆயிற்று? நான் பூவுலகிற்கு அனுப்பியதில் உனக்கு எதுவும் வலி தந்ததா? சொல்! பெத்லகேமில் மாடடைக் குடிலில் பிறந்தது கஷ்டமாக இருந்ததா? எருசலேம் ஆலயத்தில் நீ தொலைந்து போனது கஷ்டமாக இருந்ததா? பாவிகளோடு நின்று யோர்தான் நதிக்கரையில் திருமுழுக்கு பெற்றது வலித்ததா? யூதேயா, கலிலேயா, சமாரியா எனப் பயணம் செய்து இறையரசைப் போதித்தது     கஷ்டமாக இருந்ததா? உன் சீடர்கள் உன் போதனை கடினமாயிருக்கிறது என்று விலகியபோது   கஷ்டமாக இருந்ததா? எல்லாருமே உனக்கு எதிராக எழுந்து உன்னைச் சிலுவையில் அறைந்தபோது உனக்குக் கஷ்டமாயிருந்ததா? இரண்டு கள்வர்களுக்கு மத்தியில் கள்வனைப்போல தொங்கியது உனக்குக் கஷ்டமாகயிருந்ததா? பின் ஏன் வாட்டமாயிருக்கிறாய்? சொல்.' சற்று நேரம் அமைதியாய் இருந்துவிட்டு இயேசு சொன்னாராம்: 'ஒன்றே ஒன்றுதான் கஷ்டமாயிருந்தது அப்பா. முத்தம். ஒரேயொரு முத்தம். அதுதான் எனக்குக் கஷ்டமாயிருந்தது. என்னோடு உண்டு, என்னோடு பயணம் செய்து, என்னோடு உறங்கிய என் நண்பன் ஒருவனின் முத்தம்தான் இன்னும் எனக்கு வலிக்கிறது.' 'நீ எனக்கு உரிமையானவன்' என்று சொல்லும் முத்தத்தை வைத்தே 'நீ எனக்கு உரிமையில்லை' என்று சொன்ன அந்த முத்தம் தான் இன்னும் வலிக்கிறது!

இன்று ஆண்டவரின் திருப்பாடுகளைக் கொண்டாடுகிறோம். நாற்பது நாட்கள் சிலுவைப்பாதைகள் செய்தும், நோன்பு இருந்தும், செபித்தும், பிறரன்புச் செயல்கள் வழியாகவும் இயேசுவின் பாடுகளை சிந்தித்தோம். அதில் பங்கேற்றோம். இன்றும் பெரிய சிலுவைப்பாதையில் சிந்தித்தோம். சிலுவையே இந்நாளில் நம் கண்முன் நிற்கின்றது.

யோவான் நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் திருப்பாடுகளை வாசிக்கக் கேட்டோம். சிலுவை நமக்கு இன்று சொல்லும் ஒரே வார்த்தை: 'சாய்ஸ்' (தேர்வு). பிலாத்து மக்களிடம் 'இதோ! உங்கள் அரசன்!' என, அவர்கள் 'எங்களுக்கு சீசரைத் தவிர வேறு அரசர் இல்லை' என்று குரலெழுப்புகின்றனர். மனுமகனுக்குப் பதில் பரபாவைத் தேர்ந்து கொள்கின்றனர். இயேசுவின் தீர்ப்பில் இயேசுவைவிட இந்த உலகமே தீர்ப்பிடப்படுகின்றது. நாம் யாரைத் தேர்ந்து கொள்கிறோம்? சிலுவை என்பது தேர்ந்து கொள்தலே. இயேசுவின் வாழ்வில் சிலுவைக்கு இரண்டு அர்த்தம் இருக்கின்றது: 'என்னைப் பின்செல்ல விரும்புபவர் நாள்தோறும் தன் சிலுவையைத் தூக்கிக் கொண்டு வரட்டும்' என்று சொல்லும் போது இயேசு நம் வாழ்வில் அன்றாடம் நாம் தெரிந்துகொள்பவற்றை, நம் 'சாய்ஸை' சிலுவையெனக் குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, மரத்தாலான சிலுவையை அவரே சுமக்கின்றார். சிலுவை என்பது மரம் மட்டுமல்ல. நம் வாழ்வும் கூடத்தான். நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் சாய்ஸ்கள் கூடத்தான். இயேசுவின் போதனைகள் அனைத்திலுமே ஒரு 'சாய்ஸ்' இருக்கும்: கடவுளா? செல்வமா? என்னும் சாய்ஸ். நேர்மையாளரா? பாவிகளா? என்னும் சாய்ஸ். நம்மைச் சார்ந்தவரா? நமக்கு எதிரானவரா? என்னும் சாய்ஸ். அகன்ற வாயிலா? இடுக்கமான வாயிலா? என்னும் சாய்ஸ். ஒளியா? இருளா? என்னும் சாய்ஸ். இவற்றில் நாம் ஏதாவது ஒன்றைத்தான் தெரிவு செய்ய முடியும். அப்படி நாம் தெரிவு செய்யும் ஒன்று நமக்குச் சிலுவையாகத் தெரிந்தாலும் அது நமக்கு மீட்பைக் கொண்டு வரும்.

ஒவ்வொரு பொழுதுமே நம் முன் சாய்ஸ் இருக்கின்றது: 'படிப்பா? ஆதித்யா டிவியா? - திருப்பலியா? கூடக் கொஞ்ச நேரக் குட்டித் தூக்கமா? - செபமா? சீரியலா? - உடல்நலமா? டாஸ்மாக்கா? - காலையில் வாக்கிங்கா? சுகர் கம்ப்ளைண்டா? - இப்படியாக நாம் ஒவ்வொரு பொழுதும் தெரிவு செய்கின்றோம். இரண்டும் வேண்டும் என்று சொல்ல முடியுமா? உடல்நலமும் வேண்டும், குடிப்பழக்கமும் வேண்டும் என்றால் சாத்தியமா? சத்தியமாக இல்லை.

பகைமை என்ற இடத்தில் அன்பையும், பழிக்குப் பழி என்ற இடத்தில் மன்னிப்பையும் தெரிவு செய்கின்றார் இயேசு. இன்று நாம் எப்படித் தெரிவு செய்யப் போகிறோம்?

Discriminate the lower from the higher. Embrace the higher and eliminate the lower. நம் முன் உள்ள இரண்டில் தாழ்ந்தது எது, உயர்ந்தது என்று முதலில் ஆராய வேண்டும். உயர்ந்ததைத் தழுவிக் கொண்டு, தாழ்ந்ததை விட்டுவிட வேண்டும். இ;ந்த முடிவில் மாற்றம் இருக்கக் கூடாது. உயர்ந்ததைத் தழுவிக் கொள்வதே சிலுவை. மகிழ்ச்சியோடு தழுவிக் கொள்ள வேண்டும். அல்லது துன்பத்தோடு விட்டு விட வேண்டும். இரண்டிற்கும் நடுவழி கிடையாது. தழுவிக் கொள்ளவும் மாட்டேன், விட்டு விடவும் மாட்டேன் என்பதும், தழுவியும் கொள்வேன், விட்டும் விடுவேன் என்பதும் சாத்தியம் அல்ல. 

சின்ன சின்ன விஷயங்களில் ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க முடியாத இயேசுவின் சமகாலத்தவர் இருளைத் தேர்ந்து கொண்டு ஒளியை விட்டு விடுகின்றனர். 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். ஆனால் அவருக்குரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை!' என்னவொரு சோகமான இறைவசனம். பிலாத்து தன் அரியணையைக் காத்துக் கொள்வதை தன் சாய்ஸ் என நினைக்கிறான். தலைமைக் குருக்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள விழைகின்றனர். சிலர் வேடிக்கை பார்க்கின்றனர். சிலர் கூச்சல் போடுகின்றனர். இந்தக் கூட்டத்தில் எல்லா வகை மக்களும் இருக்கின்றார்கள். இந்தக் கூட்டத்தில் நான் யார்? 

நாம் சரியானவற்றைத் தேர்வு செய்யாத போது முத்தமும் முள்ளாய்க் குத்தும்தானே!

Tuesday, January 21, 2014

'இதை நினைவாகச் செய்யுங்கள்!'

ஒரு ஊரில் ஒரு தாயும் ஒரு மகனும் இருந்தார்கள். அந்த மகனுக்குத் திடீரென்று வெளிநாட்டில் வேலை கிடைக்க அவன் புறப்பட்டுப் போய்விட்டான். ஒவ்வொரு மாதமும் அவன் தன் தாய்க்கு ஒரு கடிதம் அனுப்புவான். தான் கண்ட இடங்களையும், ரசித்த நிகழ்வுகளையும் புகைப்படமாகவும், கடிதமாகவும் அனுப்புவான். அப்படி அனுப்பும் ஒவ்வொரு முறையும் அக்கடிதத்தோடு தன் சம்பளப்பணத்தில் ஒன்றிரண்டு தாள்களையும் வைத்து அனுப்புவான். இந்தத் தாயும் கடிதம் வந்தவுடன் தான் படித்ததோடு மட்டுமல்லாமல் அதைத் தன்னைச் சுற்றியிருப்பவர்களிடமும் காட்டி மகிழ்வாள். ஐந்து வருடங்கள் வேலை முடித்து வீட்டிற்கு வருகின்றான் மகன். தன் இல்லம் சென்றவுடன் அவனுக்கு அதிர்ச்சி. தான் அனுப்பிய புகைப்படங்கள் அனைத்தையும் தன் இல்லம் முழுவதும் தன் தாய் ஒட்டி வைத்திருக்கக் காண்கிறான். அந்தப் புகைப்படங்களோடு அவன் அனுப்பிய பணக்காகிதங்களையும் அந்தத் தாய் சுவரில் ஒட்டி வைத்திருக்கின்றார். அவன் அம்மாவிடம், 'இது படம் அல்ல அம்மா. நான் அனுப்பிய பணம்' என்கிறான். 'என்னது பணமா? நான் இதுவும் ஏதோ படம் என்றல்லவா நினைத்தேன்' என்கிறார் தாய். 'ஆனால் இதைப் பார்க்கும் ஒவ்வொரு பொழுதும் நீ என் உடன் இருப்பது போலவே இருந்தது' என்று அவனைக் கட்டித் தழுவிக் கண்ணீர் வடிக்கின்றார்.

ஆண்டவரின் இறுதி இராவுணவுப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இன்றைய நாளின் மையமாக இருக்கும் வார்த்தைகள் இவைகள் தாம்: 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்!'. பாதம் கழுவுதல், பணிவிடை செய்தல், அப்பம் பிட்குதல், அன்பு செய்தல் என அனைத்திலும் தன் நினைவை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார் இயேசு. மனிதர்களை மற்ற உயிர்களிலிருந்து மேன்மைப்படுத்தும் ஒரு கொடை 'நம் நினைவுகள்!' நம்மோடு வாழ்ந்த நம் முன்னோர்கள் இன்று நம்மோடு இல்லையென்றாலும் அவர்கள் விட்டுச்சென்ற வீடுகளோ, உறவுகளோ, மதிப்பீடுகளோ இன்றும் அவர்களை நமக்கு நினைவுபடுத்துகின்றன. நினைவுகள் நமக்கு அழியா வாழ்வைத் தருகின்றன. இறப்பு நினைவுகளை அழிக்க முடியாது. அதில் இறப்பு தோற்றுத்தான் போகின்றது. ஆகையால் தான் இயேசு தான் காட்டிக்கொடுக்கப்பட்டு இறப்பதற்கு முன் 'நினைவாகச் செய்யுங்கள்' என்று தம் சீடர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

எதை நினைவாகச் செய்யச் சொல்கின்றார்? தான் பெத்லேகேமில் மாடடைக் குடிலில் பிறந்ததையா, தன்னை ஏரோது கொல்லத் தேடியதையா, தன் பெற்றோர்கள் தன்னை ஆலயத்தில் அர்ப்பணித்ததையா, தன் திருமுழுக்கையா, தன் பணிவாழ்வையா, தனக்கு வந்த எதிர்ப்புக்களையோ, தன்னை ஏற்றுக்கொண்டவர்களையா, தனக்கு வழங்கப்பட்ட சிலுவைச்சாவையா, தன் இறப்பையா, தன் உயிர்ப்பையா - எதை நினைவாகச் செய்ய வேண்டும். அனைத்தையுமே.

1. அன்பில் நினைவு கூறுவோம். இன்று இவ்வுலகம் ஏங்கியிருக்கும் ஒன்று அன்பு. இது கிடைக்காமல் ஏங்குவோர் எத்தனையோ பேர். ஒவ்வொரு ஆன்மாவும் அன்பிற்காக ஏங்குகிறது. அந்த அன்பு பல நேரங்களில் பலருக்குக் கிடைப்பதில்லை. சிலர் கிடைக்கும் போது அதைக் கண்டுகொள்வதில்லை. சிலர் அதற்கு பெரிய விலை கொடுக்க வேண்டியுள்ளது. இயேசுவைப் பொறுத்த வரையில் அன்பு என்றால் 'அடையாளங்களைத் தாண்டுவது'. இன்று அன்பு செய்ய மிகப் பெரிய தடை அடையாளம்.  சமாரியர், பாவிகள், வரிதண்டுவோர், விபச்சாரர் என அனைத்து அடையாளங்களையும் தாண்டி ஒருவரின் உள்ளியல்பில் இறைவனைக் காணக் கற்றுக்கொடுக்கின்றார் இயேசு. 'நான் உங்களை அன்பு செய்தது போல' என்பதன் அர்த்தம் இதுதான். அன்பு செய்ய முக்கியத் தேவை 'வெறுமையாவது!'. தன்னையே வெறுமையாக்கும் ஒருவரால் தான் மற்றவரை அன்பினால் நிரப்ப முடியும். அன்பில் ஒருவர் மற்றவர் முன் தன்னையே தோலுரி;த்துக் காட்டுகின்றார். 

2. பணிவாழ்வு. பழைய ஏற்பாட்டில் அரசர்களும், இறைவாக்கினர்களும் திருப்பொழிவு செய்யப்பட்டது போல இன்று அருட்பணியாளர்கள் திருப்பொழிவு செய்யப்படுகிறார்கள். இந்த அருள்பொழிவு பற்றி திருப்பாடல் 45:7-8 இப்படிச் சொல்கிறது: 'எனவே கடவுள், உம் கடவுள், மகிழ்ச்சித் தைலத்தால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணம் உம் ஆடையெலாம் கமழும்.' திருப்பொழிவினால் ஒருவர் மகிழ்ச்சி பெறுகிறார். மாட்சிமை பெறுகிறார். மணம் பெறுகிறார். சகோதரர்கள் ஒன்றிணைந்திருப்பது எவ்வளவு அழகானது என்று வர்ணிக்கும் விவிலியம் 'அது ஆரோனினின் தலையினிலே ஊற்றப்பெற்ற நறுமணத்தைலம் அவருடைய தாடியினின்று வழிந்தோடி அவர்தம் அங்கியின் விளிம்பை நனைப்பதற்கு ஒப்பாகும்' (திபா 133:2) என்று சொல்கின்றது. இந்த வழிந்தோடுதலை கற்பனை செய்து பார்த்தாலே மெய்சிலிர்த்து விடுகிறது. இதை இன்னும் ஒரு படி மேலே போய் பார்த்தால் நம் தமிழக மண்ணின் கடவுளர்களுக்கு நீராபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய்வது போல இவர்களும் அபிஷேகம் கெய்யப்படுகிறார்கள். திருமுழுக்கின் வழியாக நாம் அனைவருமே கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்கிறோம். நாம் அனைவருமே அருள்பொழிவு செய்யப்படுகிறோம். அந்த அருள்பொழிவு நம்மை ஒருவர் மற்றவரின் பாதங்களைக் கழுவ அழைக்கின்றது. பாதம் கழுவுபவர் தன் மேலாடையைக் கழற்ற வேண்டும். மேலாடைதான் ஒருவருக்கு மதிப்பைத் தருவது. தனக்கு மதிப்பு தருவது இது என்று எதை ஒரு அருட்பணியாளர் நினைக்கிறாரோ அதை அவர் இழந்தால்தான் பணி செய்ய முடியும். தான் படித்த படிப்பு, தான் சம்பாதித்த உறவு, தன் பணித்தளம், தன் பணிப் பொறுப்பு என எதெல்லாம் அவருக்கு மதிப்பு தருகின்றதோ அதை அவர் கழற்றிவிட்டு துண்டைக் கட்டிக்கொள்ளத் துணியும்போதுதான் பணிவாழ்வு சாத்தியமாகும். குடும்ப உறவில் கணவன், மனைவியும் தங்களுக்குரியவற்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் பிறருக்குரியவற்றில் அக்கறை செலுத்தும்போது அங்கே பணிவாழ்வு பிறக்கிறது.

3. நற்கருணை. இயேசுவைப் பொறுத்த வரையில் நற்கருணை ஒரு போராட்டம். 'நான், எனது, எனக்கு' என்று இந்த உலகம் எல்லாவற்றிற்கும் லேபிள்கள் போட்டு வைத்திருக்கும் வேளையில் அதற்கு எதிர் சான்றாக 'இது என் உடல், இது என் இரத்தம்' எனத் தன்னையே கையளிக்கின்றார். உயிர் வளர்ச்சியின் இன்றியமையாததொன்றாகிய உணவை நற்கருணையின் கருப்பொருளாக்குகின்றார் இயேசு. ஆனால் இன்று நற்கருணையின் பொருள் வெறும் ஆலயத்திற்குள் அடங்கிவிட்டது. ஒவ்வொரு முறை நாம் அருந்தும் உணவும் நற்கருணையே. தன்னையை வாழ்நாள் முழுவதும் மற்றவர்களுக்காக உடைத்த இயேசு நற்கருணையில் அதை நிறைவு செய்கின்றார்.

'இதை நினைவாகச் செய்யுங்கள்!'

Monday, January 20, 2014

வந்து பாருங்கள்

அப்பெண் தன் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், 'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து பாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என்றார். அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள். (யோவான் 4:28-30)

இயேசுவின் பணி வாழ்வு யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியா போன்ற மூன்று இடங்களில் நடைபெறுவதாக அனைத்து நற்செய்தியாளர்களுமே எழுதுகின்றனர். பூகோள அடிப்படையில் பார்த்தால் யூதேயாவிற்கும் கலிலேயாவிற்கும் இடையே உள்ள பகுதியே சமாரியா. கிமு 732ல் அசீரியர்கள் இஸ்ரயேல் மீது படையெடுத்த அவர்களைத் தங்கள் நாட்டுக்கு அடிமைகளாகக் கடத்திச் செல்கின்றனர். அங்கிருந்து மீண்டு வந்த மக்கள் அசீரியர்களுடன் திருமண உறவிலும் ஈடுபடத் தொடங்குகின்றனர். இப்படியாக யூதர்களும், அசீரியர்களும் இணைந்து உருவானதுதான் சமாரிய இனம். யூத ரத்தத்தை மற்றவர்களுடன் கலந்ததால் மற்ற யூதர்கள் இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்றும் தீட்டுப்பட்டவர்கள் எனவும் கருதினர். மேலும் சமாரியர்கள் யூத விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களை மட்டுமே தங்கள் விவிலியமாகக் கொண்டவர்கள். யூத மக்கள் இறைவனை எருசலேமில் வழிபட்டதுபோல சமாரியர்கள் கெரிசிம் என்ற மலையில் யாவே இறைவனை வழிபடுகின்றனர்.

இப்படியாக கடவுள் வேறு, விவிலியம் வேறு, தூய்மையில் குறைவு என இருந்த மக்களில் ஒருவரான சமாரியப் பெண்ணைச் சந்திக்கின்றார் இயேசு. இதில் இயேசு இரண்டு மரபுமீறல்களைச் செய்கின்றார்: ஒன்று, யூதர்கள் சமாரியர்களோடு பண்ட பாத்திரங்களில் கையிடுவதில்லை. ஆனால் இயேசு அதையும் மீறி சமாரியப்பெண்ணிடம் 'தண்ணீர்' கேட்கின்றார். இரண்டு, யூத ஆண்கள், இன்னும் அதிகமாக யூத ரபிக்கள் பெண்களிடம் பொதுவிடங்களில் பேசுவது கிடையாது. அதையும் மீறி பெண்ணிடம் உரையாடுகின்றார் இயேசு. 

யோவான் நற்செய்தியாளரின் இறையியல் பின்புலத்தில் பார்த்தால், யோவான் நற்செய்தியாளர் இயேசு ஒரு இறைவாக்கினர் என்பதை முதலில் நிக்கோதேமுவும் (யோவான் 3), பின் சமாரியப் பெண்ணும் (யோவான் 4), பின் கிரேக்கர்களும் (யோவான் 10), இறுதியாக பொந்தியு பிலாத்துவும் - உரோமையர் (யோவான் 18-19) கண்டுகொள்வதாக வடிக்கின்றார். இயேசு யோவான் நற்செய்தியில் ஒவ்வொரு வட்டமாகக் கடந்து செல்கிறார். 

நேரம் நண்பகல். அந்நேரத்தில் தண்ணீர் எடுக்க வருகிறார் சமாரியப்பெண். கிராமங்களில் வழக்கமாகத் தண்ணீர் எடுக்கப் பெண்கள் செல்லும் நேரம் காலை மற்றும் மாலை. அந்த நேரத்தில் வந்தால் மற்ற பெண்களைச் சந்திக்க நேருமோ என்ற நினைப்பில்தான் யாருமற்ற நேரத்தில் வருகிறார் இவர். இதனால் இவர் 'சற்று ஒருமாதிரியான' குடும்பத்தைச் சார்ந்தவராக இருக்கும் என ஒரு சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதற்கு அவர்கள் தரும் சான்று: 'அவர் ஐந்து கணவர்களைக் கொண்டவர்' (4:18). ஆனால் இந்த ஐந்து கணவர்கள் என்பவர்கள் 'ஐந்து கடவுளர்கள்' (காண் 2 அரசர்கள் 17:24). இவ்வாறாக இயேசுவும் சமாரியப் பெண்ணும் ஒரு பெரிய இறையியல் உரையாடலில் ஈடுபடுகின்றனர். உரையாடலின் இறுதியில் இயேசுவைக் உண்மைக் கடவுளாக, உண்மைக் கடவுளின் இறைவாக்கினராகக் கண்டுகொள்கின்றார் சமாரியப்பெண்.

இன்றைய நற்செய்தியின் மையமாக இருக்கும் வார்த்தை இதுதான்: 'நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன்!' இயேசுவைக் கண்டுகொள்கின்றார் சமாரியப்பெண். இன்று நாம் எழுப்பும் முதல் கேள்வி இதுதான். இன்று நாம் இயேசுவைக் கண்டுகொள்கின்றோமா? எப்படிக் கண்டுகொள்கின்றோம்? சாதாரண வழக்க நடையில் நாம் மற்றவர்களைப் பார்த்து 'என்ன கண்டுக்கவே மாட்றீங்க?' என்று கேட்போம். ஒருவருக்கு உரியதை ஒருவருக்குக் கொடுப்பதன் பெயர்தான் கண்டுகொள்வது. அரசாங்கம் மக்களைக் கண்டுகொள்வதேயில்லை என்றால் அரசாங்கம் மக்களுக்கு உரியதை மக்களுக்குக் கொடுக்கவில்லை என்பதுதான் அர்த்தம். இயேசுவுக்கு உரியதை இயேசுவுக்கு நாம் கொடுக்கிறோமா?

இயேசுவைக் கண்டுகொண்டவுடன் அவர் செய்தது 'தன் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுவதுதான்'. இயேசுவைக் கண்டவுடன் நாமும் நம் குடங்களை விட்டுவிட வேண்டும். வாழ்வுதரும் தண்ணீரைக் கண்டபின் இனி தாகமெடுக்கும் தண்ணீரால் பலனில்லை என்று நினைத்துத்தான் அவர் குடத்தை விட்டுவிட்டார் போலும். ஊருக்குள் சென்று அவர் சொன்னது இரண்டே வார்த்தைகள்தாம்: 'வந்து பாருங்கள்.' இதே வார்த்தைகளைத் தான் இயேசு தன்னைப் பின்தொடர்ந்து வந்த தன் முதற்சீடர்களிடமும் சொன்னார் (யோவான் 1:39). இன்று நாம் இயேசுவைப் பார்த்தபின் மற்றவர்களிடம் போய் இதே வார்த்தைகளைச் சொல்கிறோமோ? கிறிஸ்தவ மதம் இயேசுவுக்குப் பின் 100 ஆண்டுகளுக்குள் பயணம் செய்த அளவிற்கு அதற்குப் பின் வந்த 1900 ஆண்டுகள் பயணம் செய்யவில்லை. 100 ஆண்டுகளுக்குப் பின் நடந்ததெல்லாம், இன்றும் நடப்பதெல்லாம் 'நான் சரியா? நீ சரியா?' என்ற வாய்ச்சண்டைதான். கிறிஸ்து இன்று பிளவுபட்டு நிற்கின்றார். கிறிஸ்து இன்று ஒரு வியாபாரப் பொருளாகவும், நம் சண்டைகளுக்கு நாம் எடுக்கும் காரணியாகவும் மாறிவிட்டார். இந்த நிலையில் நாமே கிறிஸ்துவைப் பார்க்கவில்லை. நாம் யாரிடம் போய் 'வந்து பாருங்கள்' என்று சொல்ல முடியும்.

இயேசுவை நாம் 'போய்ப் பார்க்காததற்கு' இன்று என்னென்ன காரணங்கள் உள்ளன? அல்லது இயேசுவை நாம் எதற்காகப் போய்ப் பார்க்கிறோம்? நம்மைப் பாதுகாக்க வேண்டும் எனவும், நமக்குப் பணம் வேண்டும் எனவும், நமக்கு உடல்நலம் வேண்டும் எனவும், தொழில் பெருக வேண்டும் எனவும் கேட்கின்றோமே நம்மைப் படைத்த அவருக்கு இவையெல்லாம் தேவை என்று தெரியாதா என்ன? மேலும் இயேசுவைப் போய்ப் பார்க்க முடியாத அளவிற்கு இன்று நம் வேலைப்பளு அதிகரித்துவிட்டது. இன்று யாரைக் கேட்டாலும் சொல்கின்ற வார்த்தைகள் 'நேரமேயில்லை!' நமக்கு இன்று எதற்குமே நேரமில்லை? உடல்நலமில்லாதவரைப் போய்ப்பார்க்க நேரமில்லை, உற்றவர்களின் திருமணத்திற்குச் செல்ல நேரமில்லை, படிக்க நேரமில்லை, உடல்நலத்தைக் கவனிக்க நேரமில்லை. ஓடிக்கொண்டேயிருக்கிறோம். யாருமில்லாத நண்பகலாக நாம் நம்மையே தனிமைப்படுத்தும்போதுதான் இயேசுவைக் காண முடியும்.

இன்று யாரெல்லாம் நம்மைப் பார்த்து 'வந்து பாருங்கள்' என்று கூறுகின்றார்கள். நம் உலகம் வர்த்தக விளம்பர உலகம். ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு என அனைத்தும் நம்மை 'வந்து பாருங்கள்' என அழைக்கத்தான் செய்கின்றன. இன்று நாம் யார் பின்னால் போகின்றோம். 

இயேசுவை அடையாளம் கண்ட சமாரியப்பெண் முதல் பெண் சீடராக மாறுகின்றார். இறைவார்த்தையிலும், அருளடையாளங்களிலும் இயேசுவை அடையாளம் காணும் நாம் நம் வாழ்விடங்களிலும், பணியிடங்களிலும் அவருக்குச் சான்று பகரும் சீடர்களாக மாறுகின்றோமா? அல்லது அவரை வழிபடும் வெறும் பக்திமான்களாக இருக்கின்றோமா?

Sunday, January 19, 2014

கிணறுகள் காய்ந்தால்

சகோதர சகோதரிகளே, நீங்கள் அழைக்கப்பட்டவர்கள். தெரிந்துகொள்ளப்பட்டவர்கள். இந்த நிலையில் உறுதியாக நிற்க முழு முயற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்தால் நீங்கள் ஒருபோதும் தடுமாறமாட்டீர்கள். அப்பொழுது நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் என்றும் நிலைக்கும் ஆட்சியில் பங்கேற்கும் உரிமை உங்களுக்கு நிறைவாக அருளப்படும். (2 பேதுரு 1:10-11, திருப்புகழ்மாலை, சனி 1, காலைப்புகழ்)

நான்கு நாட்களுக்கு முன் நான் மிகவும் அன்பு செய்த, அல்லது என்னை மிகவும் அன்பு செய்த உயிர்களில் ஒன்றான அரோரா பாட்டி இறந்து விட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் சமயலறையில் வழுக்கி விழுந்து தலையில் இரத்தம் உறைந்து பாவம் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டார்கள். ஆனாலும் முகத்தில் ஒரு மகிழ்ச்சி அவர்களுக்கு. ஒருநாள் அவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். 'நான் இறந்துவிட்டால் எனக்காக செபிக்க வேண்டாம் பாதர்!' என்றார். எனக்கு ஆச்சர்யம். 'ஏன்?' என்று கேட்டேன். 'பரிட்சைக்கப் போகுமுன் சாமி கும்பிட்டு போவதை விட படிச்சுட்டுப் போகணும்னு' நினைக்கறவ நான். 'கடவுள் கொடுத்த வாழ்க்கையை நல்லா வாழ்ந்திட்டேன். நன்றி சொல்றேன். என்ன தேர்வு வச்சாலும் நான் வெற்றி பெற்றிடுவேன்!'

என்ன ஒரு திடமான நம்பிக்கை.

வாழ்க்கையை நன்றாக வாழ்பவர்கள் இறப்பைப் பார்த்துச் சிரிக்க மட்டுமே செய்வார்கள்! அரோரா மரணத்தை நேருக்கு நேராக பார்த்தபோது கண்டிப்பாகச் சிரித்திருப்பார்.

இன்றைய நற்செய்தியில் மிக அழகான ஒரு நிகழ்வு உண்டு. திருமுழுக்கு யோவான் பாலைவனத்தில் இருக்கிறார். அவரிடம் இயேசு வருகின்றார்.

நம் வாழ்க்கை பாலைநிலத்தில் இருந்தால் எப்படி இருக்கும்? திருமுழுக்கு யோவான் காட்டுத்தேனும், வெட்டுக்கிளியும் சாப்பிட்டார் என வாசிக்கின்றோம். நாமும் பாலைவனத்தில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்போமே. யாருமே நம்முடன் இல்லை. தொலைபேசி இல்லை. இணையம் இல்லை. எலக்ட்ரிக் பில் பற்றி கவலை இல்லை. எல்லாமே வெறுமையாய் இருக்கிறது. அந்த இடத்தில் இயேசு வருகிறார். இங்கே என்ன தோன்றுகிறது? 'நாம் பாலைவனமாய் இருந்தால் கடவுள் அங்கே நம்மைத் தேடி வருவார். மேலும், பாலைவனத்தில் யார் வந்தாலும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். எந்தப் பொருளும் யாரையும் மறைக்காது. இயேசு வருவதை எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஊருக்குள் இருந்தால் தான், நம்மைச் சுற்றிப் பலர் இருந்தால்தான் கடவுள் வருவது நமக்குத் தெரிவதில்லை.

கொஞ்ச நாட்களாக எனக்குக் கடவுள் தன்னையே மறைத்துக்கொள்வதாகவே இருக்கின்றது. 'கிணறுகள் காய்ந்தால்' என்று ஒரு புத்தகம் வாசித்தேன் ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. நம் கிணறு வற்றும் போது என்ன நடக்கும். ஒரு கிணறு தண்ணீர் நிறைய இருந்தால் எல்லாரும் அதைத் தேடி வருவார்கள். தண்ணீர் வற்றிவிட்டால் யாரும் வரமாட்டார்கள். அப்போது அந்தக் கிணறு என்ன நினைக்கும்? 'நான் நினைப்பது போல நீங்கள் இல்லை!' என்பதற்காக என்னிடம் யாரும் வருவதில்லை என்று நம்மைப் பார்த்துக் கேட்கும். 

கிணறு வெறுமையாய் இருந்தால் அதைத் தேடி வருபவர் அதன் உரிமையாளர் மட்டுமே. வாழ்க்கை என்ற கிணறு, மனம் என்ற கிணறு வெறுமையாகும்போது அதன் உரிமையாளராகிய கடவுளும் நம்மிடம் வருகிறார்.

Saturday, January 18, 2014

நாம் அனைவரும் கோடீஸ்வரர்கள்தாம்!

மன வலிமை கொண்டவர்களாகிய நாம் வலுவற்றவர்களின் குறைபாடுகளைத் தாங்கிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு உகந்ததையே தேடலாகாது. அடுத்தவருடைய நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் செயல்பட்டு அவர்களுக்கு உகந்தவர்களாக வாழுங்கள். கிறிஸ்துவும் தமக்கு உகந்ததைத் தேடவில்லை. (உரோமையர் 15:13 திருப்புகழ்மாலை, வெள்ளி 1, மாலைப் புகழ்)

'நாம் அனைவரும் கோடீஸ்வரர்கள்தாம். ஆனால் இது நமக்குத் தெரியவில்லை. இதை நமக்குத் தெரியப்படுத்தியவர் 2000ஆம் வருடங்களுக்கு முன்பாக நம்மோடு வாழ்ந்த நாசரேத்தூர் இயேசு' என்று எழுதுகிறார் ஹார்லி என்ற நாவலாசிரியர். அவர் தொடர்ந்து இப்படி எழுதுகின்றார்: 'கோடி என்பது பணம் மட்டுமல்ல. மனமும் கோடியாக இருக்கலாம். நம்மையே ஒரு நிமிடம் உற்றுப் பார்ப்போமே. நம் கண்களின் அசைவு, நம் உடலின் இயக்கம், நம் உறவுகள், நமக்கு கொடுக்கப்பட்டுள்ள திறன்கள், நம்மில் வாழும் இறைவனின் ஆவி, நாம் ஒவ்வொரு பொழுதும் வாழ்வில் உணரும் ஆசீர்கள் ஆகிய அனைத்துமே நம்மைக் கோடீஸ்வரர்களாக மாற்றுகின்றன. 

நான் அடிக்கடி பார்க்கும் ஒரு வலைத்தளம்: simpletruths.com நல்ல நல்ல கருத்துக்களைத் தாங்கி வரும் வலைத்தளம் இது. நேற்றிரவு இதில் புத்தகத்தின் மதிப்புரையை வாசித்தேன். புத்தகத்தின் பெயர் 'The Richest Man in Town' (நகரில் உள்ள பெரிய பணக்காரர்). வி. ஜே. ஸ்மித் என்ற மேலாண்மை ஆசிரியர் எழுதியது. நம்மூர் ரிலையன்ஸ் ஃபரெஷ் மாதிரி அமெரிக்காவில் உள்ள ஒரு சங்கிலித் தொடர் கடையின் பெயர் வால்மார்ட். ஒரு வால்மார்ட் (Wal-mart) பல்பொருள் அங்காடியில் வேலைபார்த்த 'மார்ட்டி' என்பவரைத்தான் இந்தப் புத்தகத்தில் 'மிகப் பெரும் பணக்காரராகச்' சித்தரிக்கின்றார் ஸ்மித்.

வால்மார்ட் கடையின் ரசீது கொடுத்து பணம் பெறும் சாளரத்தில் அமர்ந்திருப்பவர் மார்ட்டி. ஒவ்வொருவருக்கும் ரசீது போட்டவுடன் எழுந்து சென்று அவர்களின் கைகளைக் குலுக்கி, புன்சிரிப்புடன் 'நீங்கள் வால்மார்ட்டிற்கு வந்ததற்கும், பொருட்கள் வாங்கியதற்கும் நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும்' என்று வாழ்த்துவார். இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா? என்னவென்றால் வேறு யாரும் வால்மார்ட்டில் செய்ய மாட்டார்கள். இதை ஒருநாள் கவனித்த ஸ்மித் அவரைக் காண்பதற்காகவே அடிக்கடி அதே கடைக்கு வருகின்றார். மார்ட்டியின் சாளரத்தில் மட்டும் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிவதைக் காண்கின்றார். அவரின் வருகை மிக சீக்கிரமாக நட்பில் மலர்கிறது. ஒரு நாள் மாலையில் சாலையில் நடந்து செல்லும் போது, 'மார்ட்டி நீங்கள் இப்படிச் செயல்பட என்ன காரணம்?' எனக் கேட்கின்றார். மார்ட்டி அதற்கு தான் வாழ்க்கையில் தன் 30 ஆம் வயதில் ஒரு மூன்று முடிவுகளை எடுத்தாராம். அதை எப்போதும் கடைப்பிடிக்கிறாராம். அதுவே தனக்கு நிறைவைத் தருவதாகச் சொன்னார்.

மார்ட்டி என்ன சொன்னார்?

அவர் சொன்ன மூன்றை என் சிந்தனையோடு பகிரட்டுமா?

1. Relationships matter most in life. உறவுகள் தாம் வாழ்க்கையில் முதன்மையானவை. நாம் படிக்கும் படிப்பு, நாம் பார்க்கும் வேலை, நாம் மேற்கொள்ளும் பயணம், அலைச்சல், தேடல் அனைத்தும் நம்மை உறவிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். நாம் சம்பாதிக்கும் உறவுகளே நமக்கு வலுசேர்க்கின்றன. இதை என் வாழ்வில் நான் மிகவும் நன்றாகவே பார்த்துள்ளேன்.

என் அப்பா ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நல்ல வேலை. பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை. ஆனால் அதில் அவருக்கு திருப்தி இல்லை. அவரது தாய் (தந்தையை 2 வயதிலேயே இழந்து விட்டார்!) தான் செய்த கூலி வேலையை வைத்து அவரை ஐந்தாம் வகுப்பு வரைதான் படிக்க வைத்தார். பின் எப்படியோ தன் முயற்சியில் தொழிலைக் கற்றுக் கொண்டு 14 வயதிலேயே டெக்ஸ்டைல் மில்லில் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டார். அவரின் பொழுதுபோக்கு கலை. கலை என்றால் நடனம், நாட்டியம், நாடகம், ஓவியம் என நினைக்க வேண்டாம். தான் செய்யும் எதையும் கலைநயத்தோடு செய்வார். தினமும் மாலை எங்கள் வீட்டில் சிறுவர் பட்டாளம் இருக்கும். அவர்களின் கிழிந்த நோட்டுப் புத்தகங்களைச் சரி செய்தும், புதிய புத்தகங்களுக்கு அட்டைகள் இட்டும், அதன் லேபிள்களில் அவர்களின் பெயரை எழுதிக் கொடுத்தும் அனுப்புவார். எவ்வளவு கிழிசலாகப் புத்தகம் வந்தாலும், எவ்வளவு கந்தலாக அவர்கள் புத்தகப் பைகள் வந்தாலும் (எங்கள் ஊரில் நான் பள்ளியில் படிக்கும்போது ஸ்கூல் பேக் என்றால் 'சொக்கலால் பீடி' வரும் துணிப்பைதான். இதே நிலை தான் என் உடன் பயின்றவர்களுக்கும். எங்கள் ஊரில் முதல் முதலாக ஸ்கூல்பேக் வாங்கியவன் 'ராஜாக்கண்ணு' - அவனின் இயற்பெயர் விஜயானந்த். ஆனால் அவர்களின் வீட்டின் நிலபுலன்களை வைத்து அவனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் இது. அவன் ஸ்கூலிற்குப் போகும் போது அதை தொட்டுத் தொட்டுப் பார்ப்போம். அந்தச் சிவப்புக் கலர் பேக் இன்னும் என் நினைவில் இருக்கிறது. ஒருமுறை அந்த பேக் கிழிந்து விட, அவனுக்குக் கணிதம் சொல்லிக் கொடுக்கப்போன எனக்கு அதை கிப்டாகக் கொடுத்தார் அவனின் அம்மா. அந்தக் கிழிந்த பேக்கைச் சரிசெய்தவரும் என் அப்பாதான். ஏன் இந்த டைவர்சன்?) 

நிகழ்விற்கு வருவோம். நன்றாக வேலைக்குப் போய்க்கொண்டிருந்த என் அப்பா திடீரென்று வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டார். எங்க அம்மாவிற்குக் கோபம். அவங்க அம்மாவிற்குக் கோபம். எந்நேரமும் சண்டை நடக்கும். ஆனால் காலையில் குளித்து சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார். மாலையில் தான் வருவார். எங்கள் ஊருக்கு ஆறு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள ஊர் சத்திரப்பட்டி. அங்கு துறைமடம் என்று ஒன்று உண்டு. சித்தர்கள் தங்கியிருந்து அருளுரை வழங்கிக் கொண்டிருப்பார்கள். மருத்துவம் செய்வார்கள். மருந்து தயாரிப்பார்கள். அவர்களோடு இருந்து ஓலைச்சுவடி கற்றுக்கொள்ள ஆரம்பித்தார் என் அப்பா. பழைய ஓலைச்சுவடிகளைப் பழுதுபார்க்கத் தொடங்கிய அவர் அவற்றைப் படிக்கவும் ஆரம்பித்து விட்டார். அங்கே வரப்போக இருந்தவர்களோடும் நன்றாகப் பழகிவிட்டார். ஒரு எட்டு ஆண்டுகள் இப்படி 'வேலையே செய்யாமல்' ஓட திடீரென்று ஒரு மாலை இறந்து விட்டார். 

அப்போது நான் புனேயில் படித்துக்கொண்டிருந்தேன். அலறியடித்து விமானம் பிடித்து ஊருக்கு வந்தேன். நானும் பறப்பேன் என்று விமானக் கனவு கண்ட எனக்கு முதல் விமானப் பயணமே என் தந்தையின் இறப்பிற்கு என்பதால் இன்னும் விமானப் பயணம் என்றாலே அழுகை வந்து விடுகிறது. அடக்கம் எல்லாம் முடிந்து எல்லோரும் சென்றவுடன் அந்தத் துறைமடத்தில் என் அப்பாவோடு பழகிய குருசாமி என்பவர் வந்தார். ரொம்ப நேரம் என் அப்பா என்னைப் பற்றி அவரிடம் சொன்னதையெல்லாம் சொன்னார். அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் அப்பா 30 வருடங்கள் பணியாற்றிய டெக்ஸ்டைல் நிறுவனத்திலிருந்து அவரின் இறப்பிற்கு ஒருவர் கூட வரவில்லை. வந்தவர்கள் எல்லாம் அவர் 8 வருடங்களில் சம்பாதித்த உறவுகள். அன்றிலிருந்து நான் யாரையும் 'ஏன் வேலை செய்யப் போகவில்லை?' என்றோ 'நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?' என்றோ கேட்பதில்லை. 'வேலைதான் எல்லாமா?' என்றுக் கேட்கத் தூண்டியவர் என் அப்பா. மேலும் இன்று வரை நான் படித்த படிப்பும், என் திறமைகளும் துணை நின்ற நேரங்களைத் தவிர நான் சம்பாதித்த நண்பர்களும், உறவுகளும்தான் துணைநிற்கின்றன என்னுடன். 'நாம் நமது கருத்தியல்களுக்காக நண்பர்களை இழப்பதை விட, நண்பர்களுக்காக கருத்தியல்களை இழப்பது மேலானது'.

2. Try to do a little more. எப்போதும் கொஞ்சம் அதிகமாகவே செய்யுங்கள். நம்மிடம் மற்றவர்கள் எதிர்பார்ப்பதை மற்றும் செய்வது கடினம் அல்ல. இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, சாலையில் காரில் போகிறோம். பச்சை விளக்கு எரிகிறது. பச்சை விளக்கு எரிந்தால் போகலாம் சட்டப்படி. ஆனால் அப்போதுதான் ஒரு பாட்டி சாலையைக் கடந்து கொண்டிருக்கிறார். நாம் கொஞ்சம் நின்று அவரைக் கடக்க விடுவதுதான் கொஞ்சம் அதிகமாகச் செய்வது. இதையே இயேசு, 'உங்களை யாராவது ஒரு மைல் வரை வரக் கட்டாயப்படுத்தினால் இரு மைல் வரை செல்லுங்கள்' எனவும் 'யாராவது உங்கள் மேலாடையை எடுத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் அங்கியையும் கொடுங்கள்' எனவும் குறிப்பிடுகின்றார். வால்மார்ட்டில் பில் போடுவது என்பது எல்லாரும் செய்த வேலை. ஆனால் அதிலும் கொஞ்சம் அதிகமாகச் செய்கின்றார் மார்ட்டி. 'விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை' என்பார்கள். கொஞ்சம் அதிகமாக நேரம், ஆற்றல், பொருள் அனைத்தையும் அனைவருக்குக் கொடுத்துப் பார்க்கலாமே!

3. Only you can make yourself happy. நீ மட்டும்தான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். மகிழ்ச்சி ஒவ்வொருவரும் தானாகத் தன் உள்ளே உணர வேண்டிய ஒன்று. தன்னிடம் இல்லாத ஒன்றைத் தேடுவதை விட தன்னிடம் இருக்கும் ஒன்றைக் குறித்து மகிழ்வது. 'என் பிள்ளைகள் என் பேச்சையே கேட்பதில்லை. எப்போதும் என்னுடன் சண்டை போடுகிறார்கள்!' என்று கவலைப்படுகிறீர்களா. 'பலருக்கு பிள்ளையே இல்லையே!' அவர்கள் மனம் எப்படிக் கஷ்டப்படும். 'கணவர் குடிக்கிறார்' எனக் கவலைப்பட வேண்டாம். குடிக்கிறவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். குடிக்கிறவர்கள் தாம் பாசம் வைப்பார்கள். 'எந்நேரமும் விலைவாசி ஏற்றம், ஊழல் என்று கவலைப்பட வேண்டாம்'. பல நாடுகளில் போர்கள், வன்முறை, கண்ணீர். பிரகாஷ்ராஜ் இப்படிச் சொல்வார்: 'அனைவரையும் ஏமாற்றிப் பயமுறுத்திப் பிழைக்கும் அமெரிக்காவாய் இருப்பதைவிட, தன்மானத்தோடு வாழும் கியூபா நாடாக இருப்பது மேல்!'. நமக்கு வெளியில் மகிழ்ச்சி எப்போதும் இல்லை. எல்லாம் இருந்தும் மகிழ்ச்சி இல்லையென்றால் நாம் ஏழைகளே. எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சி இருந்தது என்றால் நாம் கோடீஸ்வரர்களே.

இந்த மார்ட்டி 2004 ஆம் ஆண்டு இறந்து விட்டார். இன்னும் அவர் வேலை பார்த்த இடத்தில் அவர் அமர்ந்த இருக்கையில் விளக்கொன்றை ஏற்றி உள்ளனர்.

'நாமும் கோடீஸ்வரர்களே. ஆனால் அது நமக்குத் தெரிவதில்லை'.

Thursday, January 16, 2014

ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாளர்கள்!

இப்போது சிறிது காலம், நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருறவேண்டியிருக்கும். அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். (1 பேதுரு 1:6-7) (திருப்புகழ்மாலை, வியாழன் 1, மாலைப்புகழ்)

நேற்றைய தினம் Lilly Foundation என்ற அமெரிக்க கல்வியியல் 1996ல் வெளியிட்ட Grace Under Pressure: What Gives Life to American Priests என்ற அறிக்கையின் சுருக்கத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க நாட்டில் பல மாகாணங்களில் பணியாற்றும் குருக்களின் உணர்வு முதிர்ச்சியையும், அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை உணர்வுகளையும் கேட்டறிந்து தொகுத்துள்ளனர் இந்த ஆய்வாளர்கள். அதில் ஒரு பகுதியின் தலைப்பு: மகிழ்ச்சி. குருக்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா? என்ற கேள்விக்கு 'ஆம்' என்னும் பதில் 14 சதவிகிதம் தான் தரப்பட்டுள்ளது. 86 சதவிகிதம் பேர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்களா. அதற்கான காரணங்களாக அவர்கள் தருவது: 'குருக்களும் துறவியரும் நண்டுகளாக மாறிவிட்டனர் (நண்டுக்கதை தெரியுமல்லவா? ஒரு பாட்டிலில் நிறைய நண்டுகளைப் போட்டு அதை மூடாமல் வைத்துவிட்டாலும் ஆபத்தில்லை. ஏனெனில் ஒரு நண்டு முன்னேறுவதைப் பார்க்கும் அடுத்த நண்டு அதை திரும்பக் கீழேயே இழுத்துவிடுமாம்!), சிலர் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர், சிலருக்கு வேலைப்பளு, சிலருக்கு எதுவுமே நன்றாக நடப்பதில்லை, சிலர் எந்நேரமும் சுயபச்சாதாபப் படுகின்றனராம் - ஐயோ அப்படி ஆயிடுச்சே, இப்படி ஆயிடுச்சே மனநிலை, சிலர் தங்கள் வாழ்க்கை நிலையை மிக serious எடுத்துக்கொள்கின்றனர்'. இந்தக் காரணங்களால் மகிழ்ச்சி பறிபோகிறதாம்.

துறவு நிலை வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே மகிழ்ச்சி மிக முக்கியமான ஒன்று. அழுதே பழக்கமாகிப்போன நமக்கு கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்தால் பயம் வந்து விடுகிறது. ஐயோ ரொம்ப சிரிக்கிறோமோ? சிரித்தால் திரும்ப அழுகை வருமோ? மகிழ்ச்சியாய் இருப்பதில் மிகவும் கஞ்சத்தனமாய் இருக்கிறோம்.

'இறைவன் நம்முடன் இருக்கிறார் என்பதன் அடையாளமே மகிழ்ச்சி' என்கிறார் பிரெஞ்சு மெய்யியலாளர் லெயோன் பிளாய். 

மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்கள் எவை?

1. கடவுள் என்னை அன்பு செய்கிறார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை. ஒரு அருட்பணியாளருக்கு இந்த நம்பிக்கை மிகவும் அவசியம். என்று இந்த நம்பிக்கை தளர்கிறதோ அன்றுதான் அவர் அந்த அன்பை மற்ற மனிதர்களிடமும், பொருட்களிடமும் தேடத் தொடங்குகின்றார்.

2. இறைப்பராமரிப்பின் மேல் நம்பிக்கை. நான் கல்லூரிக்குச் செல்லும் போது மெட்ரோவில் நிறையப் பேர் வயலின் மற்றும் கிட்டாரோடு பாடல்கள் பாடி பிச்சை எடுத்துக் கொண்டிருப்பர். சிலர் குழந்தைகளை வைத்துப் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பர். ஒவ்வொரு நாளும் இவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில்தானே இரவு தூங்கச் செல்கிறார்கள். நான் எனது படிப்பையும், தகுதிகளையும், திறன்களையும் நம்பும் அளவிற்குப் பல நேரங்களில் இறைப்பராமரிப்பை நம்புவதில்லை. 'விடுவது!' இன்னும் கடினமாகத்தான் இருக்கிறது.

3. இறைவேண்டல் அல்லது செபம். ஏனெனில் மகிழ்ச்சி ஒரு கொடை. அதைக் கடவுள்தான் கொடுக்க முடியும். 'கேளுங்கள், தரப்படும்!' என்றார் இயேசு. 'காத்திருங்கள், தரப்படும்' என்று சொல்லவில்லையே. சும்மா கேட்டத்தான் பார்ப்போமே. கிடைக்காது என நாமாக ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்?

மகிழ்ச்சிக்கான தடைகள் எவை?

சுய பச்சாதாபம் (self-pity). அருட்பணியாளர்கள் பொதுவானவர்கள். அவர்கள் பலருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டும். அவர்களைச் சுற்றிலும் எப்போதும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருக்கும்: 'ஆயர்கள் அல்லது மறைமாவட்ட நிர்வாகம், தான் பணிபுரியும் மக்கள், தன் உடன் பணியாளர்கள், தன் சமூகம், தன் குடும்பம்' என அனைத்து நிலைகளிலும் நெருக்கப்படுகின்றார் அவர். அந்த நெருக்கத்தை சமாளிக்கத் தெரியாதபோது அல்லது முடியாதபோது, அதை இயல்பாகவும் சரியாகவும் கையாளாமல் போகும் போது, 'ஐயோ! நான் ஒன்னுக்கும் உதவாதவன். என்னால் யாருக்கும் பயனில்லை. என் வயதில் இருக்கும் அவனைப் பார். நன்றாகச் சம்பாதிக்கிறான். குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருக்கிறான்!' என்று தன்னையே நொந்து கொள்ளத் தொடங்குகின்றார் அவர். 

2. கவலை. ஒருமுறை எங்கள் பாடகர் குழுவில் உள்ள ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த போது 'கவலை ஒரு பாவம்' என்றார் அவர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. பின் அவரே விளக்கமும் சொன்னார்: 'வானத்துப் பறவைகளைப் பாருங்கள்! வயல்வெளி மலர்களைப் பாருங்கள்! என்று உருவகங்கள் சொல்லும் இயேசு கடைசியாக என்ன சொல்கிறார்? கவலைப்படாதீர்கள்! என்று தானே சொல்கிறார். அப்படியிருக்க நாம் கவலைப்பட்டால் அது கடவுளின் மேலும் இயேசுவின் மேலும் நம்பிக்கையில்லாமல் இருப்பதால்தானே அர்த்தம். அது பாவம்தானே!' அவரின் விளக்கம் எனக்குப் பிடித்திருந்தது. பல நேரங்களில் கவலை என்பது ஒரு பாவம் எனத் தெரியாமலே நானும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறேன். 

3. நம் மகிழ்ச்சி நமக்கு வெளியில் இருக்கிறது. இது ஒரு தப்பறையான கொள்கை. நமக்கு வெளியில் இருக்கும் எதுவும் நமக்கு மகிழ்ச்சியைத் தந்துவிடாது. அழகான மொபைல் ஃபோன் என்று அதைத் தடவிப் பார்த்து, பொத்தி பொத்தி வைக்கும் நான், அடுத்த நாள் அதன் பின்புறம் ஒரு சிறிய கோடு விழுந்தவுடன் மகிழ்ச்சியை இழந்து விடுகிறேன். ஓய்வான நேரங்களில் யாருடனவாது பேசலாம் என நண்பிகளுக்குப் ஃபோன் செய்து பேசும் போது இருக்கும் மகிழ்ச்சி, ஏதாவது பொது வழிபாட்டில் இருக்கும்போது அவர்கள் ஃபோன் அடிக்க அதுவே எரிச்சலாக மாறிவிடுகிறது. நண்பர்களோடு இணைந்து ஒன்றாக பியர் குடிப்பதும், உணவு அருந்துவதும் தரும் மகிழ்ச்சி, அடுத்த நாள் காலையில் hang-out ஆகி தலையை அழுத்தும்போது 'இனி குடிக்கவே கூடாது!' என்று தோன்றுகிறது. புத்தகங்கள், சினிமாக்கள், சந்திப்புகள், படிப்பு, வேலை எதுவும் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதில்லை. அதை நான்தான் எனக்குள்ளே தேடி எடுக்க வேண்டும்.

4. குறைகூறுவது. ஒரு சில அருட்பணியாளர்கள் எப்போதும் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். எங்கள் கல்லூரியில் மாணவக் குருக்கள் கூறும் குறைகளைக் கேட்டுவிட்டு என் பேராசிரியர் ஒருவர் சொன்னார்: 'நீங்கள் ஆண்டவரின் இறுதி இராவுணவில் இருந்திருந்தால் அங்கேயும் இந்த மெனு சரியில்லை என்று தான் குறைசொல்வீர்கள்'. யாராவது ஒருவர் நமக்கு பரிசுப் பொருளோ பணமோ கொடுத்தால், 'இவர் தன் பணத்தால் என்னை வாங்க நினைக்கிறார்!' என்பார்கள். ஒன்றுமே கொடுக்கவில்லையென்றால் 'இந்தப் பங்குத் தளமே சரியில்லை. போன பங்குல எப்படி இருக்கும் தெரியுமா?' என்பார்கள். 

5. பொறாமை. அருட்பணியாளர்களுக்கு மற்ற அருட்பணியாளர்கள் மேல் இயல்பாக இருக்கும் ஒன்று இது. குறிப்பாக ஒரு பங்கில் வேலை செய்து விட்டு அந்தப் பங்கை விட்டு வெளியே வந்தவுடன் தனக்குப் பின் வரும் அருட்பணியாளர் அதே இடத்தில் ஒன்றுமே செய்யாமல் சும்மா ஓய்ந்திருக்கிறார் என்றால் ஒன்றுமில்லை. ஆனால் அதே அருட்பணியாளர் ஏதாவது வேலை செய்துவிட்டால் அவர்மேல் பொறாமை வந்து விடுகிறது. 'எவ்வளவு நாளைக்குச் செய்வான்?' என்றும் 'புது விளக்குமாறு நன்றாகத்தான் கூட்டும்!' எனவும் பேசத் தொடங்கிவிடுகின்றோம். இதைவிடப் பெரிய பொறாமை. நாம் நெருக்கமாய் இருந்த நபர்களிடம் அடுத்த அருட்பணியாளர் நெருக்கமாக இருக்கும்போதும் அல்லது அவர்கள் அந்தப் பணியாளர்களிடம் நெருக்கமாக இருக்கும் போதும் பொறாமை பற்றிக் கொள்கிறது. 'ஐயோ! நாம் கட்டிக் காத்தவர்கள் எல்லாம் இவர் பின்னால் போய்விடுவார்களோ!' எனக் கலங்குகிறோம். பொறாமைக்குக் காரணம் 'பாதுகாப்பின்மை'. என்னிடம் இருக்கும் 'பாதுகாப்பின்மைக்காக' ஒரு சிலரை 'பாதுகாப்பு' என வைத்திருக்கும் போது அது தளர்ச்சி அடையும்போது மகிழ்ச்சி ஓடி விடுகிறது.

இறுதியாக, அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு மேற்குறிப்போடு நிறைவு செய்கிறேன்:

அருட்பணியாளர்களே,

'யாரிடமும், எந்நேரமும், எங்கேயும் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். அதுவே மகிழ்ச்சி. அதுவே சரி.' என எந்நேரமும் சொல்லிக் கொண்டிருக்கும் உலகத்தில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் மணத்துறவையும், கன்னிமையும் ஏற்கிறீர்கள்!

'நான் விரும்புவதை எந்நேரமும், எங்கும் செய்யலாம். நான் நினைப்பது கண்டிப்பாக நடக்க வேண்டும்' என்று சொல்லும் சமூகத்தின் நடுவில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் கீழ்ப்படிவதாய் வாக்கு தந்திருக்கிறீர்கள்!

'அதிகம் வாங்குவதிலும், அதிகம் சேர்ப்பதிலும் தான் மகிழ்ச்சி' என்று சொல்லும் கலாச்சாரத்தின் மத்தியில் நீங்கள் வாழ்க்கை முழுவதும் எளிமையைத் தழுவுவதாக வாக்களிக்கிறீர்கள்!

'பயன்பாட்டிலும், ஒருவரை அவரின் பயன்பாட்டைப் பொறுத்தும், அவர் வேலை செய்து சம்பாதிப்பதை வைத்தும் அளவிடும்' உலகில் நீங்கள் 'செபத்தில் நேரத்தைச் செலவிடுகிறீர்கள்'.

'என்னையே நான் பார்த்துக் கொள்வேன். யாரும் எனக்குத் தேவையில்லை. என் சுகம் தான் முக்கியம்' என்று கருதும் உலகில் நீங்கள் 'உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், நிலபுலன்கள் என அனைத்தையும் தியாகம் செய்கிறீர்கள்!'

'எல்லாம் உடனுக்குடன் என்று ஓடிக்கொண்டிருப்போர்' நடுவில் நீங்கள் இயேசுவின் அன்பைப் பற்றிப் பேசுகிறீர்கள்.

உலகின் பார்வையில் நீங்கள் ஒன்றுமில்லாதவர்கள்தாம்...ஆனால் நீங்கள்...மகிழ்ச்சியாளர்கள்!

உடலுறவின் உச்சத்திலும், எச்சத்திலும், வாங்குவதிலும், சேர்ப்பதிலும், சுயநலத்திலும், பயன்பாட்டிலும் இல்லாத மகிழ்ச்சியை நீங்கள் அன்பிலும், பொறுப்புணர்விலும், எளிய வாழ்விலும், இறைவேண்டலிலும், தாராள உள்ளத்திலும் கண்டுகொள்கிறீர்கள்.

வாழ்த்துக்கள்!