Thursday, June 18, 2015

20:1-16 ஐந்து பிரிவுகள்

மத்தேயு 20:1-16 உள்ள இறைவாக்கு பகுதியின் அமைப்பை முதலில் ஆராய்வோம். வழக்கமாக இந்த உவமையை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்:

1. 20:1-7 வேலையாட்கள் பணியமர்த்தப்படுதல்
2. 20:8-16 வேலையாட்களுக்கு ஊதியம் தரப்படுதல்

இப்படிப் பிரிக்கத் தூண்டுவது 1 மற்றும் 8 வசனங்களில் இருக்கும் 'காலை' மற்றும் 'மாலை' என்ற நேரக்குறிப்புகள். இந்த நேரக்குறிப்புகள் மிக முக்கியமானவைதான். ஆனால், இந்த வகை பிரித்தலில் வேலையாட்கள்தான் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், வேலையாட்கள் சும்மா வந்து போகக்கூடியவர்கள்தாம். ஆனால், இந்த உவமையின் கதாநாயகன் தோட்ட உரிமையாளர்தான். ஆக, அவரையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் இந்த உவமையில் ஐந்து பிரிவுகள் இருப்பதாக முன்வைத்தேன்:

1. 20:1அ முன்னுரை
2. 20:1ஆ-7 வெளியே
3. 20:8 உள்ளே-வெளியே
4. 20:9-15 உள்ளே
5. 20:16 முடிவுரை

20:1அ வில் இந்த நிகழ்ச்சி இறையாட்சிக்கு ஒப்பிடப்படுவதாகச் சொல்லப்படுவதுதான் முன்னுரை. இத்தோடு இணைந்து செல்வது 20:16ல் இருக்கும் முடிவுரை. இறையாட்சியில் முதன்மையானவர்கள் கடைசியாவார்கள், கடைசியானவர்கள் முதன்மையாவார்கள்.

'வெளியே', 'உள்ளே' என்று சொல்வது தோட்டத்தைப் பொறுத்தது. உவமையின் முதல் பகுதியில் தோட்ட உரிமையாளரும், வேலையாட்களும் தோட்டத்திற்கு வெளியில் இருக்கிறார்கள். இரண்டாம் பகுதியில் இந்த இரண்டு பேரும் தோட்டத்திற்கு உள்ளே இருக்கிறார்கள். மேலும், தோட்டத்திற்கு வெளியே, வேலைக்காரர்கள் ஓரிடத்தில் நிற்கின்றார்கள். உரிமையாளர் முன்னும் பின்னும் செல்கின்றார். ஆனால், தோட்டத்திற்கு உள்ளே உரிமையாளர் ஓரிடத்தில் நிற்கின்றார். வேலைக்காரர்கள் முன்னும், பின்னும் செல்கின்றனர்.

20:8ல் உரிமையாளர் தன் கணக்கரிடம் அல்லது மேற்பார்வையாளரிடம், 'வேலையாள்களை அழைத்து கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை கூலி கொடும்!' என்கிறார். இதுதான் கதையின் மையம் அல்லது உச்சம். 'கடைசியிலிருந்து தொடங்கி முதலில் வந்தவர் வரை செல்ல வேண்டும்!' - இதே வார்த்தைகள்தாம் 'கடைசியானவர் முதலாவர்' என்று 20:16ல் தீர்வாக அல்லது முடிவுரையாக அமைகிறது.

'உள்ளே-வெளியே' (Inside-Out) என்பது ஸ்டீபன் கோவே அவர்கள் தன் Seven Habits for Highly Effective People நூலில் உருவாக்கிய ஒரு சொல்லாடல். அதாவது, கான்செப்ட் சிம்பிள்தான். பேண்ட்ல உள்ள பாக்கெட்ல பென்-டிரைவ் போட்டு அது காணாம போயிடுச்சுனு வச்சிக்கிவோம். அதைத் தேடும் முயற்சியில் பேண்டின் பாக்கெட்டை அப்படியே வெளிப்புறமாக எடுத்து தேடுவோம். இதுதான் inside-out இதற்கு மேல் தேட ஒன்றுமில்லை. ஆக, ஒருவரின் உள்ளக்கிடக்கையை முழுவதுமாகத் தெரிவிப்பதுதான் 'உள்ளே-வெளியே'. 20:8ல்தான் உரிமையாளரின் உள்ளக்கிடக்கை அப்படியே வெளிப்படுகிறது.

மேலும் இந்த ஐந்து வகை பிரிவில் நேரக்குறிப்புகள், வேலையாட்கள்-உரிமையாளர், காலை-மாலை, உள்ளே-வெளியே, என எல்லா இருமைநிலைகளும் எளிதில் துலங்குகின்றன.


2 comments:

  1. ஏற்கனவே வந்த பதிவின் தொடர்ச்சி எனினும் சொல்ல வருவது உலகப்பிரமாணமாக கொஞ்சம் ஏற்றுக் கொள்ளக் கடினமான கருத்துதான்." கடைசியானவர் முதலானோர்" என்பது தலைவர் கூலி கொடுக்கச்சொல்லும் முறையைக் குறிக்கிறது என்பதைத் தவிர எப்பவுமே இதில் ஏற்றுக்கொள்ள விசேஷமாக எனக்கு எதுவும் இருந்ததுமில்லை; புரிந்ததுமில்லை.ஒருவேளை என் விசுவாசக்குறைவுதான் காரணமோ....தெரியவில்லை.யாரேனும் விளக்கம் தர முன் வந்தால் வரவேற்பேன்.....

    ReplyDelete