Saturday, April 30, 2022

என் சாக்குத் துணியைக் களைகிறார்!

பாஸ்கா காலம் 3ஆம் ஞாயிறு

I. திருத்தூதர் பணிகள் 5:27-32, 40-41 II. திருவெளிப்பாடு 5:11-14 III. யோவான் 21:1-19

என் சாக்குத் துணியைக் களைகிறார்!

திருச்சிராப்பள்ளி மணிகண்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2019ஆம் ஆண்டு கத்தார் நாட்டிலுள்ள தோகாவில் நடந்த ஆசிய தடகள போட்டிகளில் பெண்கள் பிரிவில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர் ஓடி முடித்து விளையாட்டரங்கில் ஓய்ந்து நின்ற நேரம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இவர் ஏறக்குறைய கிழிந்து நைந்துபோன ஷூ ஒன்றை அணிந்திருப்பது பலருடைய கண்களில் பட்டது. தன் பழைய கிழிந்த ஷூதான் தனக்கு லக்கி என்று இந்த இளவல் பெரிய மனத்துடன் பெருமைப்பட்டுக்கொண்டாலும், புதிய காலணிகள் வாங்குவதற்குக் கூட இயலாத இவருடைய பின்புலமும், கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்குத் தரப்படவில்லை என்ற விளையாட்டு அரசியலும் இங்கே தெளிவாகிறது. தன் தங்கத்தின் வெற்றிக்குப் பின்னாலும் தன்னுடைய கிழிந்த ஷூவைக் கழற்றத் துணியவில்லை கோமதி.

இவரின் வெற்றிக் களிப்பும், மகிழ்ச்சியும் இவரின் கிழிந்த காலணியைக் கழற்ற முடியவில்லை.

முதன் முதலாக வாங்கி உடைந்த பேனா, நம் லக்கியான சேலை, ஷர்ட், திருமண பட்டுச் சேலை, குருத்துவ அருள்பொழிவு திருவுடை, பழைய டைரி என நிறைய பழையற்றையும், கிழிந்தவற்றையும் நாம் இன்று நம்முடன் வைத்திருந்து பழமை பற்றிப் பெருமை கொள்கிறோம். பழமையான இவைகளை நாம் பாதுகாக்கக் காரணம் இவை நம் இறந்த காலத்தை, நம் வேர்களை நமக்கு நினைபடுத்துகின்றன. 

ஆனால், சில நேரங்களில் - இல்லை, பல நேரங்களில் - நாம் தூக்கி எறியப்பட வேண்டிய பழையவற்றை இன்னும் தூக்கிக்கொண்டே திரிகிறோம். இப்படிப்பட்ட நேரங்களில் நம் பழையவற்றை அகற்றிவிட்டு புதியவற்றை அருள இறைவன் வருகிறார் என்று நமக்கு நம்பிக்கை அளிக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றை பதிலுரைப்பாடலோடு (காண். திபா 30) நம் சிந்தனையைத் தொடங்குவோம்:

'புகழ்ப்பா, திருக்கோவில் அர்ப்பணப்பா, தாவீதுக்கு உரியது' என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்பாடல் மிக அழகான உருவகம் ஒன்றைக் கொண்டிருக்கிறது. 'நீர் என் புலம்பலை களிநடனமாக மாற்றிவிட்டீர். என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்!' (திபா 30:11). 'புலம்பல்' மற்றும் 'சாக்குத்துணி', 'களிநடனம்' மற்றும் 'மகிழ்ச்சி' என்ற ஒரே பொருள் கொண்ட சொற்கள் அடுத்தடுத்துப் பயன்படுத்தப்படுவதால், இங்கே 'ஒருபோகு நிலை' அல்லது 'இணைவுநிலை' என்னும் இலக்கியக்கூறு காணக்கிடக்கிறது.

தான் அணிந்திருக்கின்ற சாக்குத்துணியை கடவுள் அகற்றுவதாக தாவீது பாடுகிறார். இன்று சாக்கு என்பது 'ஜனல்' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டுக் காலத்தில் இது ஆடுகளின் மயிரிலிருந்து தயாரிக்கப்பட்டது. இந்த சாக்கு ஒரு விநோதமான பயன்பாட்டுப் பொருள். உணவுப் பொருள்களான அரிசி, கோதுமை, சீனி போன்றவை சேமிக்கப்படுவதும் சாக்கில்தான். அடுப்பறையில், கழிவறைக்கு வெளியில் ஈரம் அகற்றும் கால்மிதியாகப் பயன்படுத்துவதும் சாக்குதான். வீட்டிற்கு வெளியே தாழ்வாரத்தில் நிழலுக்கு, கவிழ்த்து வைக்கப்பட்ட பஞ்சாரத்துக் கூடையிலிருக்கும் கோழிக்குஞ்சுகளை பருந்துகளின் பார்வையிலிருந்து காப்பாற்ற கூடையின் மேல், பெரிய பாத்திரத்தை சூடு பொறுத்து இறக்க கைகளில், அப்பாத்திரத்தின் கரி தரையில் படியாமல் இருக்க தரையில், பழைய பாத்திரங்களை மூட்டை கட்டி வண்டியில் ஏற்றி வீடு மாற்ற என்று இதன் பயன்பாடு மிகவே அதிகம். நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் தடைசெய்யப்பட்டபின் இப்போது சாக்குப் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது நம் ஊரில். விவிலியத்தில் சாக்கு மூன்று பொருள்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது: ஒன்று, துக்கம் அல்லது சோகம். தன் மகன் யோசேப்பு கொல்லப்பட்டான் என்று தனக்கு அறிவிக்கப்பட்டவுடன் யாக்கோபு சாக்கு உடை அணிந்து துக்கம் கொண்டாடுகிறார் (காண். தொநூ 37:34). தன் இனத்தார் அழிக்கப்படப் போகின்றனர் என்று கேள்விப்பட்ட எஸ்தர் அரசி சாக்கு உடை அணிகின்றார் (காண். எஸ் 4:1-2). தன் மகனின் இறப்பு செய்தி கேட்டவுடன் சாக்கு உடை அணிகின்றார் தாவீது (காண். 2 சாமு 42:25). இரண்டு, மனமாற்றம். ஏறக்குறைய முதல் பொருளை ஒட்டியதுதான். இறைவாக்கினர் யோனாவின் செய்தியைக் கேட்ட நினிவே நகரம் சாக்கு உடை அணிந்துகொள்கிறது (காண். யோனா 3:8, மத் 11:21). மூன்று, சேமிப்பு பை. எகிப்துக்கு உணவு சேகரிக்க வந்த தன் சகோதரர்களின் கோணிப்பையில் தன் வெள்ளித்தட்டை வைத்து தைக்கிறார் யோசேப்பு (காண். தொநூ 42:25).

'என் சாக்குத் துணியை நீர் களைகிறீர்' என்று தாவீது பாடும்போது, தன்னுடைய 'துக்கத்தையும்,' 'பாவத்தையும்' இறைவன் களைவதாக முன்மொழிகின்றார் தாவீது. கடவுள் சாக்குத்துணியை அகற்றினால் மட்டும் போதுமா? நிர்வாணத்தை அவரே மறைக்கின்றார். எப்படி? மகிழ்ச்சியால்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 5:27-32,40-41) திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் கைது செய்யப்பட்டு தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தப்படுகின்றனர். தலைமைச் சங்கம்தான் இயேசுவுக்குச் சிலுவைத்தீர்ப்பிடுமாறு பிலாத்துவை வலியுறுத்தியது. தங்களுடைய ஆண்டவரும் போதகருமான இயேசுவைக் கொலைக்கு உட்படுத்திய அதே சங்கத்தின்முன் பேதுருவும் யோவானும் நிறுத்தப்படும்போது இயல்பாக அவர்களின் உள்ளத்தில் எழுகின்ற உணர்வு 'பயம்.' 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாகக் கட்டளையிடவில்லையா?' என்று தலைமைக்குரு கேட்டபோது, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமில்லையா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர் திருத்தூதர்கள். இந்தப் பதிலில் இவர்களின் பயமற்ற நிலையையும் அதே வேளையில், 'நீ ஒரு மனிதன்தான்!' என்ற தலைமைக் குருவையே எதிர்த்து நிற்கும் இறைவாக்கினர் துணிச்சலையும் பார்க்கின்றோம். இவர்களின் இந்தப் பதிலால் இவர்கள் நையப்புடைக்கப்படுகின்றனர். ஆனாலும் விடுதலை செய்யப்படுகின்றனர். விடுதலை செய்யப்பட்ட திருத்தூதர்கள், 'இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்திலிருந்து வெளியே சென்றனர்' எனப் பதிவு செய்கிறார் லூக்கா. 

அரசவையிலிருந்து பொன்னும் பரிசிலும் பெற்று வெளியே வந்தால் ஊரார் வியப்புடன் பார்த்து வாயாரப் புகழ்வர். நெற்றி முகர்வர். நன்றாய் அடிபட்டு, கிழிந்த ஆடை, உடைந்த பற்கள். வழியும் இரத்தம், கலைந்த தலை என்று வெளியே வந்தால் எல்லாரும் ஏளனம் செய்வர். ஒதுங்கிச் செல்வர். ஆனால், திருத்தூதர்கள் அச்சம் அற்றவர்களாக, அவமதிப்பை ஏற்றுக்கொள்பவர்களாக இருப்பதோடு, இவற்றுக்காக மகிழ்ச்சியும் அடைகின்றனர்.

ஆக, 'அச்சம்' என்னும் சாக்குத்துணியை திருத்தூதர்களிடமிருந்து அகற்றி 'மகிழ்ச்சி' என்ற ஆடையை கடவுள் இவர்களுக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். திவெ 5:11-14) யோவான் 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியைக்' காட்சியில் காண்கின்றார். 'பார்ப்பதற்கேற்ற தோற்றம் இல்லாமல், இகழப்பட்டு, மனிதரால் புறக்கணிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, சிறுமைப்படுத்தப்பட்டு, அடிப்பதற்காக இழுத்துச்செல்லபட்ட ஆட்டுக்குட்டி போல' (காண். எசா 52:13-53:12) இருந்த இயேசு, 'வல்லமை, செல்வம், ஞானம், ஆற்றல், மாண்பு, பெருமை, புகழ்' என்னும் ஏழு குணங்களைப் பெருகிறார். யூத நம்பிக்கைப்படி கடவுள் கொண்டிருக்கும் அல்லது கடவுளிடம் நிறைவாக இருக்கும் ஏழு குணங்கள் இவை. கடவுளுக்கு உரித்தான ஏழு நிறைகுணங்களும் இப்போது இயேசுவுக்கு வழங்கப்படுகின்றன.

ஆக, 'அவமானம்' என்னும் சாக்குத்துணியை இயேசுவிடமிருந்து அகற்றி, 'மாட்சி' என்ற ஆடையை கடவுள் அவருக்கு அணிவிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 21:1-19) யோவான் நற்செய்தியின் பிற்சேர்க்கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. உயிர்த்த இயேசு கலிலேயாவில் தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை இரண்டு நிலைகளில் பதிவு செய்கிறார் யோவான். முதலில், லூக்கா நற்செய்தில் செய்வதுபோல, தன் சீடர்களோடு இணைந்து உணவு உண்கிறார் இயேசு. இரண்டவதாக, மூன்று முறை தன்னை மறுதலித்த பேதுருவை, 'என்னை அன்பு செய்கிறாயா?' என்று மூன்று முறை கேட்டு, தலைமைத்துவத்தால் அவரை அணிசெய்கிறார். 

எருசலேமிலிருந்து கலிலேயா திரும்புகின்ற சீடர்கள் தாங்கள் முதலில் செய்துவந்த மீன்பிடித்தொழில் செய்யப் புறப்படுகின்றனர். இது இவர்களுடைய ஏமாற்றத்தின், விரக்தியின், சோர்வின் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். அவர்களை அழைத்த நிகழ்வில் போலவே (காண். லூக் 5:1-11) காலியான வலைகள் மற்றும் காலியான வயிறுகளோடு காய்ந்திருக்கின்ற சீடர்களுக்கு மிகுதியான மீன்பாட்டை அருளுகின்றார் இயேசு. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கைக்குத் திரும்பியதை இயேசு கடிந்துகொள்ளவில்லை. மாறாக, தாயன்போடு, 'பிள்ளைகளே' என் அவர்களை அழைத்து, 'கரியினால் தீ மூட்டி உணவு தயாரித்து' அவர்களின் பசியைப் போக்குகின்றார். தொடர்ந்து, சீமோன் பேதுருவோடு தனித்து உரையாடும் இயேசு, 'நீ இவர்களைவிட மிகுதியாக என்னை அன்பு செய்கிறாயா?' என்று கேட்டு, 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்,' 'என் ஆடுகளை மேய்,' 'என் ஆடுகளைப் பேணி வளர்' என்று தலைமைத்துவப் பொறுப்பை அவருக்கு அளிக்கின்றார். மேலும், பேதுருவின் இறுதிக்காலம் எப்படி இருக்கும் என்பதையும் முன்னுரைக்கும் இயேசு, 'என்னைப் பின்தொடர்!' என்று தற்கையளிப்பிற்கு அவரை அழைக்கின்றார்.
ஆக, 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணியை சீடர்களிடமிருந்து அகற்றும் இயேசு, 'பொறுப்புணர்வு' என்ற ஆடையால் அவர்களை அணிசெய்கின்றார்.

இவ்வாறாக, இன்றைய முதல் வாசகத்தில், 'அச்சம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மகிழ்ச்சி' என்னும் ஆடையும், இரண்டாம் வாசகத்தில், 'அவமானம்' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'மாட்சி' என்னும் ஆடையும், நற்செய்தி வாசகத்தில், 'குற்றவுணர்வு' என்னும் சாக்குத் துணி அகற்றப்பட்டு, 'பொறுப்புணர்வு' என்னும் ஆடையும் அணிவிக்கப்படுகிறது.

இன்று நம்மிடம் இருக்கும் 'அச்சம்,' 'அவமானம்,' மற்றும் 'குற்றவுணர்வு' என்ற சாக்குத் துணிகளை அகற்றி, 'மகிழ்ச்சி,' 'மாட்சி,' 'பொறுப்புணர்வு' என்னும் ஆடைகளை நமக்கு அணிவிக்கின்றார் கடவுள்.

எப்படி?

1. 'அச்சம்' அகற்றி 'மகிழ்ச்சி'

நம் இருப்பை நாம் மறுக்கும்போது, அல்லது பிறருடைய இருப்பை அதிக மதிப்பிடும்போது நமக்கு அச்சம் வருகிறது. எடுத்துக்காட்டாக, தலைமைக் குருவைப் பார்த்து மறைமுகமாக, 'நீரும் ஒரு மனிதன்தான். உமக்கு அச்சப்படத் தேவையில்லை' என்று சொல்கின்றனர் திருத்தூதர்கள். பல நேரங்களில் இல்லாத ஒன்றை இருப்பது போல நினைத்து, அல்லது இருப்பதை மிகைப்படுத்திப் பார்த்து நாம் அச்சம் கொள்கிறோம். சிறிய தலைவலி வந்தால் புற்றுநோய் வந்துவிட்டதாகவும், சிறிய பிரச்சினையை பெரிய ஆபத்தாகவும் நினைக்கின்றோம். தாங்கள் யார் என்றும், தங்களுடன் கடவுள் இருக்கின்றார் என்றும் அறிந்துகொள்கின்ற சீடர்கள், தலைமைக்குரு யார் என்றும் தெரிந்துகொள்கின்றனர். இவ்வளவு நாளாக, தாங்கள் கொண்டிருந்த மிகைப்படுத்துதலை அகற்றி, 'நீயும் ஒரு மனிதன்தான். உன்னைவிட கடவுள் இருக்கிறார்' என்று துணிவு கொள்கின்றார். ஆக, மிகைப்படுத்துதல் மறைந்தாலே அச்சம் மறைந்துவிடும். அரசுத் தேர்வில் தோற்றுவிட்டால் வாழ்விலேயே தோற்றுவிட்டதுபோல நாம் அச்சப்படக் காரணம் நம்முடைய மிகைப்படுத்துதலே. ஆக, மிகைப்படுத்துதல் மறைந்து, மனிதர்களை மனிதர்களாக, தேர்வை தேர்வாக, பிரச்சனையை பிரச்சினையாகப் பார்க்கும்போதும், இவற்றை எல்லாம் விட பெரிய கடவுளை நம் அருகில் வைத்துக்கொள்ளும்போதும் நம் அச்சம் மறைந்து நமக்கு மகிழ்ச்சி பிறக்கிறது.

2. 'அவமானம்' அகற்றி 'மாட்சி'

இன்று நாம் ஒருவரின் பின்புலம், இருப்பு, கையிருப்பு, பையிருப்பு ஆகியவற்றை முதன்மைப்படுத்தி பார்க்கும்போது, அவரை நாம் நம்மைவிடத் தாழ்வானவர் என எண்ணி, இகழ்ச்சியாகப் பார்ப்பது சில நேரங்களில் நடக்கும். அல்லது இதே காரணங்களுக்காக நாமும் மற்றவர்களால் அவமானத்திற்கு உள்ளாகியிருப்போம். அவமானம் அல்லது வெட்கம் என்பது நம்முடைய ஆளுமையைச் சீர்குலைக்கும் பெரிய காரணி. 'தனக்குத் தானே பொய்யாய் இருக்கும் ஒருவர் அவமானத்தால் கூனிக்குறுகுவார்' என்கிறார் இரஷ்ய எழுத்தாளர் டோஸ்டாய்வ்ஸ்கி. எடுத்துக்காட்டாக, என் அறையின் இருட்டின் தனிமையில் நான் ஒரு மாதிரியாகவும், வெளியில் வேறு மாதிரியாகவும் இருக்கும்போது, என்னை அறியாமல் என் மனம் வெட்கப்படும். ஏனெனில், என் மனத்திற்கு என் அறையின் இருட்டில் நான் எப்படி இருக்கிறேன் என்று தெரியும். நமக்குள்ளே நாம் கொள்ளும் அவமானம் குறைய வேண்டுமெனில் எனக்கு நானே பொய் சொல்வதை நான் குறைக்க வேண்டும். பிறரால் வரும் அவமானம் குறைய வேண்டுமெனில் நான் பொறுமை காக்க வேண்டும். ஆக, பொய்யைக் குறைக்கும்போது, பொறுமையாய் இருக்கும்போது அவமானம் மறைந்து மாட்சி பிறக்கும்.

3. 'குற்றவுணர்வு' அகற்றி 'பொறுப்புணர்வு'

நம்மை வெற்றிப்பாதையிலிருந்து பின்நோக்கி இழுக்கும் ஒரு பெரிய காரணி குற்றவுணர்வு. நாம் கடந்த காலத்தில் செய்த தவறும், அந்தத் தவறு நம்மில் உருவாக்கிய காயமும் நம்மை முன்நோக்கிச் செல்லவிடாது. 'ஐயோ! நான் இப்படி,' 'நான் இப்படித்தான்,' 'என்னால் திருந்த முடியாது,' 'என் பழைய சுமை கடினமாக இருக்கிறது' என்று சோர்வும், விரக்தியும் கொண்டிருந்தால் நம்மால் முன்னேறிச் செல்ல முடியாது. முதல் ஏற்பாட்டில் மிக அழகான வாக்கியம் இருக்கிறது: தானும் தன் மனைவியும் தன் நிலமும் கடவுளால் சபிக்கப்பட்டவுடன், ஆதாம் தன் மனைவிக்கு 'ஏவாள்' எனப் பெயரிடுகின்றான். இதுவரை 'பெண்' (காண். தொநூ 2:23) என அறியப்பட்டவள் இப்போது 'உயிர் வாழ்வோர் அனைவரின் தாயாக' (காண். தொநூ 3:20) மாறுகிறாள். 'ஐயோ! பாவம் செய்தாயிற்று! கீழ்ப்படியவில்லை! கடவுளின் கட்டளை மீறிவிட்டேன்!' என ஆதாமும், ஏவாளும் குற்றவுணர்வுடன் புலம்பிக் கொண்டே இருக்கவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று தங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்கின்றனர். நாமும் நம் பழைய பாவக் காயங்களை மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் சிலர், கொஞ்சம் நன்றாகச் சிரித்தாலே, அல்லது தங்களுக்கென ஒரு நல்ல பொருளை வாங்கினாலே குற்றவுணர்வு கொள்வர். இதுவும் ஆபத்தானது. நாம் மகிழ்ச்சியாக இருக்கவும், நல்ல பொருள்களைப் பயன்படுத்தவும், மதிப்பாக இருக்கவும், மதிப்பானவற்றோடு, மதிப்பானவர்களோடு உறவு கொள்ளவும் குற்றவுணர்வுகொள்தல் கூடாது. மதிப்பான இந்தப் பொருளை வைத்து நான் எப்படி என் மதிப்பைக் கூட்ட முடியும்? என்று நினைக்க வேண்டுமே தவிர, 'ஐயோ! எனக்கு தகுதியில்லை இதற்கு!' என்று அழுது புலம்பக்கூடாது. 'நான் தவறிவிட்டேன். நான் மறுதலித்தேன். ஆனால், எல்லாவற்றிற்கும் மேலாக உம்மை அன்பு செய்கிறேன்' என சரணாகதி ஆகிறார் பேதுரு. ஆக, குற்றவுணர்வு மறையும்போது பொறுப்புணர்வு தானாக வந்துவிடுகிறது. 

இறுதியாக,

பழைய சாக்குத் துணிகளை இறைவன் அகற்றி புதிய ஆடைகளை நமக்கு அணிவிக்க அவர் முன்வரும்போது, நாம் கொஞ்சம் எழுந்து நிற்போம். அப்போதுதான், 'மகிழ்ச்சி என்னும் ஆடை அணிந்து களிநடனம் செய்ய முடியும்' - இன்றும் என்றும்!

Friday, April 29, 2022

முறை அல்ல

இன்றைய (30 ஏப்ரல் 2022) முதல் வாசகம் (திப 6:1-7)

முறை அல்ல

இந்த ஆண்டு உயிர்ப்புக் காலத்தில் (ஏப்ரல் 19) நான் என் 13 ஆண்டு குருத்துவ அருள்பணி வாழ்வை நிறைவு செய்தேன். என்னோடு அருள்பொழிவு செய்யப்பட்ட அருள்பணியாளர்களோடு உள்ளத்தில் இணைந்து இறைவனுக்கு நன்றி கூறினேன். இந்த ஆண்டில் என் வாழ்வின் இலக்கு (விஷன்), நோக்கு (மிஷன்), மற்றும் அடிப்படை மதிப்பீடுகளை (கோர் வேல்யூஸ்) கூர்மைப்படுத்தலாம் என நினைத்தேன். என் அருள்பொழிவு விருதுவாக்கை - 'அவரோடு' (மாற் 3:14) (இலத்தீனில், 'எல்ஸே கும் இல்லோ') என் இலக்கு என நிர்ணயித்தேன். என் நோக்கு என நான் தேர்ந்து கொண்டது - 'இறைவேண்டலும் (இறை)வார்த்தைப் பணியும்' - இன்றைய முதல் வாசகத்திலிருந்து (திப 6:4) தூண்டப்பட்டது. அடிப்படை மதிப்பீடுகள் என 'மகிழ்ச்சி, உண்மை, மற்றும் கட்டின்மை' ஆகியவற்றைத் தேர்ந்துகொண்டேன்.

13 ஆண்டுகளுக்கு முன் நிறைய செய்ய வேண்டும் என நினைத்தேன். ஆனால், வாழ்க்கையின் நாள்கள் நகர நகர நாம் நிறைய செய்ய முடியாது என்பதை உணரத் தொடங்குகிறேன். ஆக, இலக்கு, நோக்கு, மதிப்பீடுகள் கூர்மைப்படுத்தல் வழியாக, கொஞ்சமாவது செய்ய முடியும் என்னும் நம்பிக்கை துளிர்க்கிறது. 

இன்றைய முதல் வாசகமும் இதையே காட்டுகிறது.

இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் திருத்தூதர்கள் உலகத்தையே மாற்றி விடலாம் என நினைக்கின்றனர். இதை, அதை என எல்லாவற்றையும் செய்கின்றனர். ஏழைகளுக்கு உணவு, வீடற்றோருக்கு வீடு, அநாதைகளுக்கு ஆதரவு, குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, முதியோருக்கு ஆறுதல், நற்செய்தி அறிவித்தல், இறைவேண்டல் என வாழ்க்கை வேகமாக நகர்கிறது. இந்த நேரத்தில் ஒரு பிரச்சினை எழுகிறது. மொழி அடிப்படையிலும் உணவு அடிப்படையிலும் பிரச்சினை எழுகின்றது. வழக்கமாக எல்லாக் குழுமங்களிலும் இந்த இரண்டின் அடிப்படையில்தான் பிரச்சினை எழுகின்றது. இரண்டும் வாய் சம்பந்தப்பட்டதுதான். 

'எங்கள் கைம்பெண்கள் பந்தியில் கவனிக்கப்படவில்லை' என்று கிரேக்க மொழி பேசுவோர் எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுக்கின்றனர். இந்தப் பிரச்சினையை கடவுளின் கண் கொண்டு பார்க்கின்ற திருத்தூதர்கள், 'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல' என்று உணர்கின்றனர். மேலும், 'நாங்களோ இறைவேண்டலிலும் வார்த்தைப் பணியிலும் ஈடுபட்டிருப்போம்' என்கின்றனர். மேலும், 'நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்த எழுவர்களைத் தெரிந்தெடுத்து' அவர்களைத் திருத்தொண்டர்களாக ஏற்படுத்துகின்றனர்.

இந்த நிகழ்வு நமக்கு, குறிப்பாக அருள்பணியாளர்களின் மேய்ப்புப் பணிக்கு ஆறு பாடங்களைத் தருகின்றது:

(1) நம் முதன்மைகளைச் சரி செய்தல்

'பந்தியில் பரிமாறுவது அல்ல. மாறாக, இறைவேண்டலும் இறைவார்த்தைப் பணியும்' எனத் தங்களுடைய முதன்மைகளைச் சரி செய்கின்றனர் திருத்தூதர்கள். வாழ்வில் எல்லாம் முதன்மையானவைதாம். எல்லாம் இன்றியமையாதவைதாம். ஆனால், ஆற அமர்ந்து யோசித்தால் மிகச் சிலவே முதன்மைகளாக மாறுகின்றன. ஆகையால்தான், இயேசு, 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார். இன்று என் வாழ்வில், என் பணியில் உள்ள முதன்மை எது? வாழ்வின் முதன்மைகள் மற்றவை முன் ஒருபோதும் துன்புறுக்கூடாது.

(2) பணிப் பகிர்வு (டெலகேஷன்)

தாங்களே அனைத்தையும் செய்ய வேண்டும் என்னும் மனநிலை விடுத்து தங்கள் பணியைத் திருத்தூதர்களுடன் பகிர முன்வருகின்றனர். வயதின் காரணமாக இது பெரும்பாலும் வருகின்றது. ஆனால், இங்கே முதன்மையான பணிகளைத் தங்களுக்கு வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பகிர்ந்துகொடுக்கின்றனர். இந்த உலகத்தில் நான் மட்டுமே செய்யக்கூடிய பணி என்று நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதைக் கண்டுகொண்டு, அதைப் பற்றிப் பிடித்துக் கொண்டு மற்றவற்றைப் பகிர்ந்துகொடுத்தல் நலம். பகிர்ந்துகொடுத்தல் வழியாக நாம் அதிகாரம் பறிபோவதில்லை. மாறாக, மற்றவர்கள் நம்மோடு உடனுழைக்கத் தொடங்குகின்றனர்.

(3) நிரந்தரத் தீர்வு காண்பது

ஒரு பிரச்சினைக்கு நாம் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாகத் தீர்வு காணலாம். தற்காலிகத் தீர்வு எளிதாகத் தெரியும். ஆனால், அடுத்தடுத்த பிரச்சினைகளைக் கொண்டு வரும். சட்டையில் கிழிந்த ஒரு பகுதியை ஊக்கு கொண்டு சரி செய்வது தற்காலிகத் தீர்வு. ஆனால், இது கிழிசலை அதிகமாக்கும். ஆனால், ஊசி-நூல் கொண்டு தைக்கும்போது நிரந்தரத் தீர்வு கிடைக்கிறது சட்டைக்கு. பந்தியின் பிரச்சினை தானே அதைச் சரி செய்ய முயலாமல் புதிய அமைப்பை - திருத்தொண்டர்களை - உருவாக்குகின்றனர்.

(4) உடனடித் தீர்வு

பிரச்சினை தங்கள் காதுகளுக்கு எட்டியவுடன் உடனடியாகச் செயலாற்றத் தொடங்குகின்றனர் திருத்தூதர்கள். உடனடியான தீர்வு நம் ஆதாரங்கள் வீணாகாமல் நம்மைக் காக்கிறது.

(5) வலுவற்றவர்களுடன் உடனிருத்தல்

பந்தியில் உணவு மறுக்கப்பட்டவர்கள் மூன்று நிலைகளில் வலுவற்றவர்களாக இருக்கின்றனர்: முதலில், அவர்கள் கிரேக்க மொழி பேசுகின்ற சிறுபான்மையினர், இரண்டு, அவர்கள் பெண்கள், மூன்று, அவர்கள் கைம்பெண்கள். திருஅவை வலுவற்றவர்களுடன் துணை நிற்கிறது என்பது நாம் இங்கே கற்கும் பாடம். ஆனால், பங்குத் தளத்தில் நாம் வலுவற்றவர்களுக்குத் துணைநிற்பதை விட, பொருளாதாரத்தில் படிப்பில் சமூக உயர்வில் வலுவானவர்களுடன்தான் துணை நிற்கின்றோம். இது தவறு!

(6) முணுமுணுத்தலைக் கேட்டல்

பந்தியின் பரிமாறும் சத்தத்திலும் ஒரு சிலரின் முணுமுணுப்பைக் கேட்கின்றனர் திருத்தூதர்கள். முணுமுணுப்புகள் பெரும்பாலும் உணவறையில்தான் - குழுமத்திலும், குடும்பத்திலும் - தொடங்குகின்றன. அவற்றைச் சரி செய்தல் அவசியம்.

நிற்க.

திருத்தொண்டர்கள் என முன்மொழியப்படுபவர்களுக்கு இரண்டே தகுதிகள்தாம் முன்மொழியப்படுகின்றன: ஒன்று, அவர்கள் நற்சான்று பெற்றிருக்க வேண்டும். ஏனெனில், மற்றவர்கள் முன் வழுவாநிலையில் இருப்பவர்தாம் அவர்களைக் கண்டித்துத் திருத்தி வழிநடத்த முடியும். மனிதர்முன் நற்சான்று நமக்கு இல்லாதபோது நாம் அவர்களோடு சமரசம் செய்யத் தொடங்குவோம். இரண்டு, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டமோ, படிப்பில் முதலிடமோ, விவிலிய அறிவோ தகுதி அல்ல. மாறாக, தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும். ஆக, நற்சான்றின் வழியாக திருத்தொண்டவர் மனிதர்முன்னும், தூய ஆவி வழியாக கடவுள்முன்னும் உகந்தவராக மாறுகின்றார்.

இவையே சிறந்த தலைமைத்துவத்துக்கான தகுதிகள்.

ஆக, மேய்ப்புப் பணியில் இருக்கும் நாம் மனிதர்முன் நற்சான்றும், இறைவன்முன் தூய ஆவியின் அருளும் பெற்றவர்களாக இருக்கிறோமா என்பதை அறிந்து, அதற்கேற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்தல் நலம்.

பந்தியின் உணவு ஆறிப் போவதற்கு முன் தீர்வு காண்கின்றனர் திருத்தூதர்கள்.

நம் அருள்பொழிவின் எண்ணெய் காய்ந்து போகுமுன் நம் வாழ்வை மேம்படுத்திக் கொள்தல் நலம்.

Thursday, April 28, 2022

கடவுளைச் சார்ந்தவை

நாளின் (29 ஏப்ரல் 2022) நற்சொல் (திப 5:34-42)

கடவுளைச் சார்ந்தவை

இயேசுவை இறப்புக்குத் தீர்ப்பிட்ட நாள் முதல் தலைமைச் சங்கம் தன் கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கிறது. பிலாத்துவின் முன் சண்டையிட்டு இயேசுவுக்குச் சிலுவைத் தண்டனை பெற்றுத் தந்தது, அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைக்குக் காவல் காத்தது, படைவீரர்களுக்குப் பணம் தந்து தவறான வதந்தியைப் பரப்பச் செய்தது என எல்லாம் முடிந்தது என ஓய்ந்திருந்தவர்களுக்கு, கண்களில் விழுந்த தூசியாய், கண்களைக் கசக்கச் செய்யும் புகையாய் வந்து நிற்கிறார்கள் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும். 

திருத்தூதர்கள் சாலமோன் மண்டபத்தில் இயேசுவின் பெயரால் நிகழ்த்திய அரும்செயல் மக்கள் நடுவே பரபரப்பாகப் பேசப்படுகிறது. நலம் பெற்றவரும் சங்கத்தின்முன் நிற்கின்றார். திருத்தூதர்கள் தங்கள் பேருரைகளில் தலைமைச் சங்கத்தைச் சாடுகின்றனர். எந்த அளவுக்கு அவர்கள் நிறுத்தப்பட்டார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தொடர்ந்து நடக்கின்றனர். மீண்டும் மீண்டும் எருசலேம் சங்கம் கூட்டப்படுகின்றது.

அப்படி ஒரு நாள் கூட்டப்பட்ட சங்கத்தில் நடந்த நிகழ்வைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் (திப 5:34-42) வாசிக்கின்றோம். இந்த நிகழ்வில் முதன்மையான நபராக இருப்பவர் கமாலியேல். தலைமைச் சங்கத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் தங்கள் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டுக் கூச்சலிட்டபோது, அறிவுப்பூர்வமாகவும், அமைதியாகவும், தன் அனுபவத்தின் பின்புலத்திலும் அறிவுரை வழங்குகின்றார் கமாலியேல்:

'... இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது. நீங்கள் கடவுளோடு போரிடுபவர்க ளாகவும் ஆவீர்கள்!'

அதாவது, காலம் தன் போக்கில் செயல்பட அனுமதியுங்கள் என்கிறார் கமாலியேல். பண்டைக் காலத்தில் நீடித்தவை அனைத்தும் நலம் தருபவை என்று கருதினர். ஏனெனில், நேரம் அல்லது காலமே பெரிய சோதனையாளர். காலத்தைக் கடந்து ஒன்று அல்லது ஒருவர் நிற்கிறார் என்றால் அவர் மேன்மையானவர். ஆகையால்தான் காலத்தால் அழியாத கட்டடங்களைக் கட்டவும், காலத்தால் அழியாத புகழைப் பெறவும் மனிதர்கள் விரும்பினர்.

ஒன்றை அதன் போக்கிலேயே அனுமதித்தால் - என்ட்ரோபி விதி போல - அது அப்படியே மறைந்துவிடும். ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் விட்டால் அது அப்படியே மறைந்துவிடும் என்பது நம் வாழ்வியல் அனுபவமும் கூட. நாம் அழைக்காமல் அல்லது காணாமல் விடுகின்ற நட்பு அப்படியே மறைந்து விடுகிறது. நாம் பயன்படுத்தாமல் இருக்கின்ற அறிவு மறைந்துவிடுகிறது. நாம் செயல்படுத்தாமல் இருக்கின்ற ஒரு திறன் மறைந்துவிடுகிறது. சில நேரங்களில் விதிவிலக்கு இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையான நேரங்களில் காலமே வெல்கிறது.

கமாலியேலின் வார்த்தைகள் நம் வாழ்வுக்கும் சவால் விடுகின்றன. எப்படி?

நம் வாழ்வில் நாமே முன்னெடுக்கும் செயல்பாடுகள் விரைவில் மறைந்துவிடுகின்றன. ஆனால், கடவுளோடு கரம் கோர்த்து மேற்கொள்ளும் செயல்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. ஏனெனில், கடவுள் என்றென்றும் நீடிப்பவர். அதனால்தான், புனித அகுஸ்தினார் தன் இளவயது நண்பன் நெப்ரிடியு இறந்த போது, 'நான் உன்னைக் கடவுளில் அன்பு செய்தால் நீ என்றும் நீடித்திருப்பாய் அல்லவா!' என்று தன் 'ஒப்புகைகள்' நூலில் புலம்புகின்றார்.

நம் வாழ்வில் நிறைய செயல்கள் தொடங்கி அவை பாதியிலேயே சென்றிருக்கலாம். நிறைய மனிதர்களை நாம் கடந்து போயிருக்கலாம். இவற்றில் அல்லது இவர்களில் கடவுளின் கரம் இல்லை என்றால் அனைத்தும், அனைவரும் காலத்தில் கரைந்துவிடுகின்றன(ர்).

நற்செய்தி வாசகத்தில் (யோவா 6:1-15) இயேசு ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் பகிர்ந்து ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கின்றார். 'இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு துண்டும் கிடைக்காதே' என்று மனித நிலையில் நிகழ்வைத் தொடங்குகின்றார் பிலிப்பு. ஆனால், இயேசுவோ இறைவனின் கரத்தோடு தொடங்குகிறார். ஆகையால்தான் பசி அடங்கினாலும், அப்பங்கள் மிஞ்சுகின்றன.

அனைத்திலும் இறைவனின் கரம் இணைந்து தொடங்குதல் நலம்.

இறைவனின் கரம் நாம் பற்ற நமக்குத் தேவை நிறைய பொறுமை, ஆழ்ந்த அமைதி, கொஞ்சம் அறிவு. 

கமாலியேல் இவற்றைப் பெற்றிருந்தார்.


Wednesday, April 27, 2022

இயல்பின் வெளிப்பாடு

இன்றைய (28 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவா 3:31-36)

இயல்பின் வெளிப்பாடு

இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியோடு நிக்கதேம்-இயேசு உரையாடல் நிறைவு பெறுகின்றது. 'மேலிருந்து வருபவர் - கீழிருந்து வருபவர்,' மற்றும் 'கடவுள் - மனிதர்' என்னும் முரண்களோடு உரையாடல் நிறைவு பெறுகிறது. உரையாடலை வாசிக்கும் நம்மை நோக்கிப் பாடம் ஒரு கேள்வியை மறைமுகமாக முன்வைக்கிறது: 'நீங்கள் மேலிருந்து வருபவரா? அல்லது கீழிருந்து வருபவரா?' 'நீங்கள் கடவுளிடமிருந்து வருபவரா?' அல்லது 

'மனிதரிடமிருந்து வருபவரா?'

முதல் வாசகத்தில் திருத்தூதர்கள் பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தால் எச்சரிக்கப்படுகின்றனர். கடவுளின் வார்த்தையை இனியும் எடுத்துரைக்கக் கூடாது என்று அவர்கள் எச்சரிக்கப்பட்டபோது, 'நாங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவதா? அல்லது மனிதருக்குக் கீழ்ப்படிவதா?' என்று எதிர்கேள்வி கேட்கின்றனர். 

தங்கள் இயல்பை அறிந்த இவர்கள் எதிர்கேள்வி கேட்கின்றனர்.

தூய ஆவியாரின் வருகைக்கு முன்னர் இவர்கள் மனித இயல்பில் இருக்கின்றனர். அச்சம் கொண்டு கதவுகளை அடைத்துக் கொள்கின்றனர். ஆனால், தூய ஆவியாரைப் பெற்றவுடன் அவர்கள் இயல்பு மாற்றம் பெறுகின்றனர். அவர்களுடைய அச்சம் அகல்கின்றது.

இன்று நாம் நம்மிடம் உள்ள எந்த இயல்பில் செயல்படுகின்றோம்?

மனித இயல்பில் நாம் இருந்தாலும், இறை இயல்பு என்னும் இயங்குதளம் நோக்கி நகரும்போது, நாம் மாற்றம் பெறுகின்றோம்.


Tuesday, April 26, 2022

ஒளி

இன்றைய (27 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவான் 3:16-21)

ஒளி

கௌதம புத்தரின் சீடர்களுள் ஒருவர் அவரிடம், 'ஐயனே! மனிதர் படும் கோபத்திற்குத் தண்டனை என்ன?' என்று கேட்டார். அதற்கு புத்தர், 'தம்பி! கோபத்திற்குத் தண்டனை ஏதும் இல்லை. ஏனெனில், அவர்களுடைய கோபமே அவர்களுக்குத் தண்டனை' என்று விடையளித்தார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு-நிக்கதேம் உரையாடல் தொடர்கிறது.

இந்த உரையாடலில் மிக முக்கியமான இறையியல்கூற்றை யோவான் பதிவு செய்கின்றார்: 'தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்' (யோவா 3:16). யோவான் நற்செய்தியாளரின் சுருக்கக் கூற்றுக்களில் இதுவும் ஒன்று.

இங்கே, இயேசு கடவுளின் மகன் என்றும், அவர் மேல் நம்பிக்கை கொள்தல் என்றும், நிலைவாழ்வு என்பது நம்பிக்கையாளர்களுக்கு உண்டு என்றும், கடவுள் உலகின்மேல் அன்புகூர்கின்றார் என்றும், அந்த அன்பு அவருடைய தற்கையளிப்பில் வெளிப்படுகிறது என்றும் பல இறையியல் உண்மைகள் புதைந்து கிடக்கின்றன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நம்பிக்கை கொள்தல்' பற்றிய இரண்டு புரிதல்கள் தெளிவாக இருக்கின்றன. ஒன்று, 'நம்பிக்கை கொள்தல் என்றால் ஒளிக்கு வருதல்.' இரண்டு, 'நம்பிக்கை கொள்ளாமல் இருத்தல் என்றால் தண்டனைத் தீர்ப்பு அளித்தல்.'

நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலால் தண்டனைத் தீர்ப்பு வருவதில்லை. ஏனெனில், நம்பிக்கை கொள்ளாமல் இருத்தலே தண்டனைத் தீர்ப்புதான் என்பதுதான் இயேசுவின் புதிய பகிர்வு.

'ஒளிக்கு வருதல்' என்பதை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

அ. ஒளி உலகிற்கு வந்துவிட்டது (அந்த ஒளிதான் இயேசு).

ஆ. தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர்.

இ. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்.

ஈ. தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை.

உ. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள்.

ஊ. (அவர்கள் ஒளியிடம் வருவதால்) அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள்.

இங்கே இரண்டு விடயங்கள் தெளிவாகத் தெரிகின்றன:

அ. கடவுள்தான் ஒளி. அவரே உண்மை. அவரோடு இணைந்து மனிதர்கள் செயல்படும்போது அவர்கள் நன்மையானதைச் செய்கின்றனர்.

ஆ. தீங்கு செய்யும் மனிதர்கள் ஒளியிடம் வர அஞ்சுகிறார்கள். ஏனெனில், வந்தால் அவர்களுடைய செயல்கள் வெளியாகிவிடும். அவர்கள் நிந்தனைக்கும் வெட்கத்திற்கும் ஆளாக வேண்டும். நிந்தனையும் வெட்கமும் பொய்மையின் கனிகள்.

ஒளி என்றால் என்ன?

ஒளி என்பது வெளியே எரியும் வெளிச்சம் அல்ல. மாறாக, அது நன்மை அல்லது உண்மையை நோக்கி என்னைத் தூண்டி எழுப்பும் ஒரு தீப்பொறி.

எப்படி?

நான் செய்யும் தவறை எனக்கு மேலிருக்கும் ஒருவர் சுட்டிக்காட்டுகிறார் என்றால், அந்தச் சுட்டிக்காட்டுதல் ஒரு ஒளி.

நான் வாசிக்கும் புத்தகம் நான் வாழ்வில் அனுபவிக்கும் ஒரு பிரச்சினைக்கு தீர்வான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது என்றால், அந்த வாக்கியம் ஒரு ஒளி.

நான் காய்ச்சலாய்க் கிடக்க, ஒரு டைலினால் அல்லது பாராஸெட்டமால் என் காய்ச்சல் போக்குகிறது என்றால், அந்த மாத்திரை ஒரு ஒளி.

ஆக, ஒளி என்பது எந்த வடிவத்திலும் வரலாம்.

அகுஸ்தினார் தன்னுடைய வாழ்வின் மனமாற்றம் பற்றி எழுதும்போது, இனி தன்னாளுகையோடும் உடல் இன்பங்களை அடக்கியும் அவர் முடிவெடுக்கும் தருணத்தில் நடந்த மனப்போராட்டை இப்படி எழுதுகின்றார்:

'நான் எழுந்தேன். எழுந்து உம்மிடம் (இறைவனிடம்) வந்தேன். இனி என் பழைய வாழ்க்கையை வாழப் போவதில்லை என முடிவெடுத்தேன். ஆனால், என் முடிவு என்னுடைய இச்சைக்கும், பேராசைக்கும், ஆணவத்திற்கும் பிடிக்கவில்லை. அவை, என் மேலாடையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே, 'எங்களைவிட்டு போகப் போகிறாயா? உண்மையிலேயே போகப் போகிறாயா? நாங்கள் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா? சீக்கிரம் திரும்பிவந்துவிடுவாய்தானே? ஒருமுறை கூட திரும்ப வரமாட்டாயா? இன்றைக்கே போக வேண்டுமா? நாளை பார்த்துக்கொள்ளக் கூடாதா?' என்று கேட்டன.'

ஆக, ஒளியை நோக்கி நாம் வருவதற்குத் தயாராக இருந்தாலும், இருளின் செயல்கள் தரும் இன்பம், 'இவை இல்லாமல் எப்படி நம்மால் இருக்க முடியும்?' என்ற அச்சத்தையும், 'நாளை பார்த்துக்கொள்ளலாம்' என்ற தயக்கத்தையும் தருகின்றன.

ஒளி எல்லார்மேலும் ஒளிர்கிறது. சிலரே அதைக் கண்டு அதனிடம் வருகிறார்கள்.

இருளின் செயல்களுக்குத் தண்டனை என்று எதுவுமே இல்லை. ஏனெனில், இருளின் செயல்களே தண்டனை. ஒளி மட்டுமே உண்மை. ஒளி மட்டுமே விடுதலை.

நற்செயல்: மெழுகுதிரி போல என் வாழ்வு எரிந்தாலும், என் கால் பகுதியில் இருள் இருக்கும் என்பது நியதி. இந்த இருள் அகல வேண்டுமானால், அங்கே இறை என்னும் மெழுகுதிரியை ஏற்ற முயல்தல் சால்பு.


Monday, April 25, 2022

என் மகன் மாற்கு

இன்றைய (25 ஏப்ரல் 2022) திருநாள்

என் மகன் மாற்கு

இன்று நாம் நற்செய்தியாளரான மாற்கின் திருநாளைக் கொண்டாடுகிறோம்.

இவரை இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 பேதுரு 5:5-14), பேதுரு, '...என் மகன் மாற்கும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றனர்' என எழுதுகின்றார்.

பவுல் தன்னுடைய கடிதங்களில், அன்பு மகன் அல்லது அன்பார்ந்த பிள்ளை திமொத்தேயு என்று குறிப்பிடுவதுபோல இது உள்ளது.

இவர் பேதுருவின் சீடர் என்பதும், இயேசு பாஸ்கா விருந்தை ஏற்பாடு செய்ய திருத்தூதர்கள் சென்றபோது தண்ணீர் குடம் சுமந்து சென்றவர் இவர் என்பதும், இவருடைய இல்லத்தின் மேல்மாடியில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார் என்பதும், இந்த இல்லத்தின் மேலறையில்தான் திருத்தூதர்கள்மேல் தூய ஆவி பொழியப்பட்டது என்பதும், இயேசு கைது செய்யப்பட்டபோது ஆடையின்றி ஓடிய இளைஞர் மாற்கு என்பதும், இவருடைய நற்செய்தியே முதலில் எழுதப்பட்ட நற்செய்தி என்பதும் மரபுவழிச் செய்தி. இவர் யோவான் மாற்கு என்றும் அறியப்படுகின்றார்.

இவரைப் பற்றி திருத்தூதர் பணிகளில் இரண்டு பதிவுகள் வருகின்றன. அவற்றை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'பின்பு , பவுலும் அவரோடு இருந்தவர்களும் பாப்போவிலிருந்து கப்பலேறி, பம்பிலியாவிலுள்ள பெருகை நகருக்கு வந்தார்கள். அங்கே யோவான் (மாற்கு) அவர்களை விட்டு அகன்று எருசலேமுக்குத் திரும்பினார்' (காண். திப 13:13)

'மாற்கு எனப்படும் யோவானையும் தங்களுடன் கூட்டிச்செல்ல பர்னபா விரும்பினார். ஆனால், தங்களோடு சேர்ந்து பணி செய்ய வராது, பம்பிலியாவில் தங்களை விட்டு விலகிச் சென்றுவிட்டதால் அவரைக் கூட்டிச் செல்ல பவுல் விரும்பவில்லை. இதனால், அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே, இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்தனர். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு சைப்பிரசுக்குக் கப்பலேறினார்' (காண். திப 15:37-39)

முதல் நிகழ்வு பவுலின் முதல் தூதுரைப் பயணத்தில் நிகழ்கிறது. எதற்காக மாற்கு கப்பலிலிருந்து இறங்கி எருசலேம் திரும்பினார் என்று நமக்குத் தெரியவில்லை. கடற்பயணம் பயமாக இருந்ததாலா? அல்லது வீட்டு நினைப்பு வந்ததாலா? அல்லது பவுலோடு வந்தவர்களை இவருக்குப் பிடிக்கவில்லை என்பதாலா? அல்லது பவுலைக் கண்ட பயத்தாலா? அல்லது உள்மனப் போராட்டத்தாலா?

ஏதோ, ஒரு காரணத்திற்காக மாற்கு எருசலேம் திரும்புகின்றார். இந்நிகழ்வில் ஏறக்குறைய யோனா போல இருக்கிறார். பணி செய்வதில் மிகவே தயக்கம் காட்டுகிறார்.

இரண்டாம் நிகழ்வில், இவர் யோனா போல மீண்டும் கப்பலேற முயல்கின்றார். பவுலின் இரண்டாம் தூதுரைப் பயணத்தில் அவர்களோடு இணைந்துகொள்ள விரும்புகிறார். ஆனால், பவுல் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்' என நினைக்கிறார் பவுல். 'இன்னொரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போமே' என்கிறார் பர்னபா. ஒரே நிகழ்வை இரண்டு நிலைகளில் பார்க்கின்றனர் இருவர். பர்னபாவுக்கு மாற்கை எந்த அளவிற்குப் பிடித்தது என்றால், மாற்கிற்காக பவுலையே விட்டுப் பிரிகின்றார். அந்த அளவிற்கு மாற்கு ஆர்வம் கொண்டவராக அல்லது எல்லாருக்கும் பிடித்த இளவலாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், இறுதியில் பவுலும் மாற்குவும் சமரசம் செய்துகொள்கின்றனர் என்பதை வேறு குறிப்புகள் நமக்குக் காட்டுகின்றன:

'என் உடன் கைதியாயிருக்கும் அரிஸ்தர்க்கு உங்களை வாழ்த்துகிறார். பர்னபாவின் ஒன்றுவிட்ட சகோதரர் மாற்கும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்' (காண். கொலோ 4:10) - மாற்கு பர்னபாவின் சகோதரரா அல்லது பவுல் இங்கே அவர்களைக் கிண்டல் செய்கிறாரா என்று தெரியவில்லை.

'என்னுடன் லூக்கா மட்டுமே இருக்கிறார். மாற்கை உன்னுடன் கூட்டி வா. அவர் திருத்தொண்டில் எனக்கு மிகவும் பயனுள்ளவர்' (காண். 2 திமொ 4:11) - பவுல் மாற்கைப் பற்றி நற்சான்று கூறுகிறார்.

மாற்கு என்னும் வரலாற்று மைந்தர் நமக்குத் தரும் செய்தி என்ன?

வாழ்வில் நாம் சில நேரங்களில் பின்னடைவு கொண்டாலும், தொடர்ந்து முன்னேறலாம் என்பதே. வாழ்க்கை எப்போதும் நமக்கு இரண்டாம் வாய்ப்பைத் தரவே செய்கின்றது. 

முதலில் தோற்றால் பரவாயில்லை. இரண்டாவது வாய்ப்பு நிச்சயம் வரும்.

அந்த இரண்டாம் வாய்ப்பைப் பயன்படுத்தி மாற்கு நன்முறையில் திருத்தொண்டு ஆற்றுகிறார். அனைவரின் நற்சான்றையும் பெறுகிறார். தன்னை வெறுத்தவரின் அன்பையும் பெறுகின்றார்.

மாற்கு நற்செய்தி நூல் காட்டும் சீடர்களும் இப்படித்தான் இருப்பார்கள். முதல் வாய்ப்பில் இயேசுவைப் புரிந்துகொள்ள இயலாமல் இருப்பார்கள். சில நேரங்களில் இறுதிவரையும் அப்படியே இருப்பார்கள். இருந்தாலும் பரவாயில்லை என்கிறார் மாற்கு.

எல்லாரும் இயேசுவைப் புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

அதுவும் முதலிலேயே புரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

நற்செயல்: மாற்கு நற்செய்தியை அல்லது நற்செய்தியின் ஒரு பகுதியை வாசிப்பது.


Friday, April 22, 2022

இடுப்பில் ஆடை

இன்றைய (22 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவா 21:1-14)

இடுப்பில் ஆடை

இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் மூன்றாம் முறை தன் சீடர்களுக்குத் தோன்றும் நிகழ்வை வாசிக்கின்றோம்.

நிகழ்வின் தொடக்கத்தில், 'நான் மீன் பிடிக்கப் போகிறேன்' என்கிறார் சீமோன் பேதுரு. தான் மனிதர்களைப் பிடிக்க வேண்டும் என்பதை மறந்ததால் அப்படிச் செய்தாரா? இல்லை என்று நினைக்கிறேன். தான் தன்னுடைய தலைவரை மறுதலித்தது பேதுருவின் ஆன்மாவில் விழுந்த அம்மைத் தழும்பாய் குற்றவுணர்வாக உருத்திக்கொண்டே இருந்திருக்கலாம். ஆக, தான் மனிதரைப் பிடிக்கத் தகுதியற்றவன் என்ற நிலையிலோ, அல்லது தன்னுடைய சோகம் அல்லது தன்மேல் உள்ள கோபத்தை வடிகாலாக்க மீன்பிடிக்கச் சென்றிருக்கலாம்.

மீன் ஒன்றும் சிக்கவில்லை. கரையிலிருந்து ஒரு குரல்: படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள். வலை நிறைய மீன்கள் அகப்பட்டவுடன், யோவான் பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என அடையாளம் காட்டுகின்றார்.

இதற்குப் பின் பேதுரு செய்யும் செயல்களை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். மூன்று செயல்களைச் செய்கின்றார் பேதுரு.

அ. தம் ஆடையைக் களைந்திருந்த பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதிக்கின்றார்.

ஒன்று, பேதுரு நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். அல்லது, கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அணியும் மிகச் சிறிய அல்லது குறைவான ஆடையை அணிந்திருக்க வேண்டும்.

ஆ. படகு கரைக்குச் செல்லுமுன் தண்ணீரில் நீந்தி இயேசுவை நோக்கிச் செல்கின்றார்.

இ. 'மீன்கள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்' என்று இயேசு சொன்னவுடன், படகில் ஏறி, வலையிலிருந்து மீன்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு வருகின்றார்.

பேதுருவின் குற்றவுணர்வு இங்கே படிப்படியாக மறைகிறது. எப்படி?

முதலில், நாம் தவறு செய்யும்போது, நம்முடைய பார்வையில் மிகச் சிறியவர்களாக மாறிவிடுகிறோம். அல்லது நாம் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போல கூனிக் குறுகுகின்றோம். ஏனெனில், பாவம் செய்தவுடன் நம் முதற்பெற்றோர் பெற்ற முதல் உணர்வே நிர்வாண உணர்வு அல்லது வெட்க உணர்வுதான். இயேசுவின் உடனிருப்பு, பேதுருவை உடுத்துகிறது. பேதுரு ஆடையை அணிந்துகொள்கின்றார்.

இரண்டாவதாக, இயேசுவை நோக்கி நீந்திச் செல்கின்றார். இவருக்கும் தண்ணீருக்குமான இறுதி நெருக்கம் இது. 'மீன்பிடிக்கப் போக விரும்பிய' பேதுருவை இறுதியாக, கடல்நீரில் நீந்த வைக்கின்றார் இயேசு. இப்போது நீந்திய இவர் இனி நீந்தப் போவதில்லை. இவர் இனி மனிதர்களைப் பிடிப்பாரே அன்றி, மீன்களைப் பிடிக்க மாட்டார். ஆக, தானே தன்னுடைய பழைய தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும்விதமாக இறுதியாக தண்ணீர் தன் உடலைத் தொட அனுமதிக்கின்றார். இதைக் கொஞ்சம் உருவகமாகச் சொன்னால், தன்னுடைய தவற்றை எண்ணி தான் வடித்த கண்ணீர்த்துளிகளை இத்தண்ணீர் சுட்டிக்காட்டுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மூன்றாவதாக, படகைக் கரைக்கு இழுத்து மீன்களை இயேசுவிடம் கொண்டுவருகின்றார். படகு என்பது திருச்சபையையும், கரை என்பது இறையாட்சியின் நிறைவேறுதலையும் குறிக்கிறது. ஆக, திருச்சபை என்னும் படகை இறையாட்சி என்னும் கரையில் சேர்த்து, மீன்கள் என்னும் நம்பிக்கையாளர்களை இயேசுவிடம் கொண்டுவருவதே பேதுருவின் வேலை.

இந்த மூன்று படிகளில் பேதுருவின் குற்றவுணர்வு களையப்பட்டு, பொறுப்புணர்வு ஊட்டப்படுகிறது.

இந்த நற்செய்திப் பகுதி நமக்குச் சொல்வது என்ன?

நாமும் பல நேரங்களில் தவறு செய்கின்றோம். ஆனால், இயேசுவின் உடனிருப்பு நம் தவற்றை நமக்கு உணர்த்தி, நம் நிர்வாண உணர்வை அகற்றி நம்மை உடுத்துகிறது. இரண்டாவதாக, தண்ணீரில் நீந்துதல் நம் திருமுழுக்கையும், அல்லது ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் சிந்துகின்ற கண்ணீரையும் குறிக்கிறது. திருமுழுக்கின் தண்ணீர் மற்றும் ஒப்புரவின் கண்ணீர் வழியே நாம் தூய்மை அடைகிறோம். மூன்றாவதாக, அப்பமும் மீனும் நற்கருணையைக் குறிக்கிறது. இந்த நற்கருணை வழியாக நாம் இயேசுவோடு பந்தி அமர்கிறோம். நம் உறவு புதுப்பிக்கப்படுகிறது.

தொடர்ந்து, இயேசு, இங்கே, மனித ஏமாற்றத்தையும், பசியையும் அறிந்தவராக இருக்கின்றார். 'பிள்ளைகளே, மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா!' என்றும் 'உணவருந்த வாருங்கள்' என்றும் வாஞ்சையோடு பேசுகின்றார். சீடர்களைக் கடிந்துகொள்ளவில்லை. நம் உடல் ஏற்றதால் அவருக்கு மனித வாழ்வின் ஏமாற்றமும் பசியும் நன்றாகத் தெரியும்.

ஆக, அவரைக் கடவுளாக அந்நியப்படுத்துவதைவிட, மனிதராக அருகில் வைத்துக்கொள்தல் நலம்.

நற்செயல்: இன்று என்னை நிர்வாண உணர்வுகொள்ளச் செய்யும் என்னுடைய குறை எது? என் நிர்வாணத்தைக் களைந்து ஆடையை இடுப்பில் கட்டிக்கொள்ள நான் தயாரா?


Thursday, April 21, 2022

இயேசுவின் பெயரை

இன்றைய (21 ஏப்ரல் 2022) முதல் வாசகம் (திப 3:11-26)

இயேசுவின் பெயரை

நேற்றைய முதல் வாசகத்தைப் புரிந்துகொண்டால், அதன் தொடர்ச்சியான இன்றைய முதல் வாசகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

பேதுருவும் யோவானும் பிற்பகல் மூன்று மணிக்கு இறைவேண்டல் செய்யக் கோவிலுக்குச் செல்கின்றனர். கிறிஸ்தவம் தொடக்கத்தில் யூத சமயத்தின் அடையாளங்களில் பங்கேற்கவே செய்தது. அதனால்தான், யூத செப நேரத்தில், யூதர்களின் கோவிலுக்குள் செல்கின்றனர் திருத்தூதர்கள். ஆனால், சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டவர்கள் அதே கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்டனர். பேதுருவும் யோவானும் கோவிலுக்குள் நுழைகின்ற வாசலுக்குப் பெயர் 'அழகு வாயில்.' எருசலேம் நகருக்குள் நுழைய எட்டு வாயில்களும், ஆலயத்திற்குள் நுழைய 12 வாயில்களும் இருந்தன. இவற்றில் எந்த வாயிலின் பெயரும் 'அழகு வாயில்' என்று இல்லை. மக்களுடைய வழக்கத்தில் ஒருவேளை ஏதாவது ஒரு வாயில் இப்படி அழைக்கப்பட்டிருக்கலாம். 

'அழகு வாயில்' - அங்கே கால் ஊனமுற்ற ஒருவரைக் கொண்டு வந்து பிச்சை எடுக்க அமர்த்துகின்றனர். இது ஆலயத்தின் அழகைக் கெடுத்ததா? இல்லை. அழகானதொன்று அவருடைய வாழ்வில் இப்போது நடக்கவிருக்கிறது. 

கோவிலுக்குள் வருகின்ற திருத்தூதர்கள் இவரைக் கண்டவுடன், இவரை உற்று நோக்குகின்றனர். நல்ல சமாரியன் எடுத்துக்காட்டில் வரும் குரு அல்லது லேவியர் போல விலகிச்செல்லவில்லை அவர்கள். மாறாக, நின்று கவனிக்கிறார்கள். இவர்கள் கவனிப்பதை அந்த நபரும் கவனிக்கிறார். 

'எங்களைப் பாரும்!'

ஏதாவது கிடைக்கும் என அவர் பார்க்க, 'வெள்ளியும் பொன்னும் இல்லை என்னிடம். என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்!' எனச் சொல்லி அவரைத் தூக்கி விடுகின்றார் பேதுரு. 

அங்கே அற்புதம் நடக்கிறது. மக்கள் அனைவரும் காண, அற்புதம் நடக்கின்றது. 

அங்கே கூடிய மக்கள் கூட்டத்திடம் பேதுரு ஆற்றும் உரையே இன்றைய முதல் வாசகம்.

'இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது ... அவர் பெயர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் ...'

இங்கே 'பெயர்' என்ற சொல் மூன்று முறை பயன்படுத்தப்படுகின்றது. இதன் முக்கியத்துவம் மூன்று:

ஒன்று, எருசலேம் ஆலயத்தில் ஆண்டவராகிய கடவுளின், அதாவது யாவே கடவுளின் 'பெயர்' தங்கியிருப்பதாக இஸ்ரயேல் மக்கள் நம்பினர். அந்தப் பெயர்தான் இயேசு என்று சொல்லி, இயேசுவின் இறைத்தன்மையை முன்மொழிகின்றனர் திருத்தூதர்கள்.

இரண்டு, மக்கள் நடுவே வல்ல செயல்கள் செய்த இயேசு இப்போது தன் பெயரால் நன்மை செய்கிறார் என்றால், அவர் நம்மிடையே இருக்கின்றார். அவர் உயிர்த்துவிட்டார்.

மூன்று, இனி இயேசுவின் பெயர் மட்டுமே போதும். அனைவரும் அனைத்தும் நலம் பெறும். நலம் பெறுவதற்காக இந்தப் பெயர் தவிர வேறு எந்தப் பெயரும் நமக்குக் கொடுக்கப்படவில்லை.

இங்கே, திருத்தூதர்களோடு இருந்த இயேசுவின் உடனிருப்பை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. இதையே மாற்கு நற்செய்தியாளரும், 'அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' (காண். மாற் 16:20) என்று எழுதுகின்றார்.

இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்வது என்ன?

ஒன்று, இயேசுவின் உடனிருப்பை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

இரண்டு, தேவையில் இருப்பவர்களை நின்று கவனிக்க வேண்டும்.

மூன்று, இயேசுவின் பெயர் மேல் நாம் கொள்ளும் நம்பிக்கையால் மற்றவர்களுக்கு நம்மால் நலம் தர முடியும்.

மொத்தத்தில், அவருடைய இருப்பால் நம் இருத்தலும் இயக்கமும் மாற வேண்டும்.


Tuesday, April 19, 2022

என்ன நிகழ்ந்தது?

இன்றைய (20 ஏப்ரல் 2022) நற்செய்தி (லூக் 24:13-35)

என்ன நிகழ்ந்தது?

உயிர்த்த இயேசு எம்மாவு செல்லும் வழியில் இரு சீடர்களைச் சந்தித்ததையும் அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தியதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கின்றோம்.

'கண்கள் மறைக்கப்பட்டிருந்தன' என்னும் சொல்லாடல் தொடங்கி, 'கண்கள் திறந்தன' என்னும் சொல்லாடல் நோக்கி நகர்கின்றது நிகழ்வு.

இந்த நிகழ்வைப் பற்றி நிறையக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இரண்டை மட்டும் கருத்தில் கொள்வோம். ஒன்று, 'எம்மாவு' என்ற ஊர். எம்மாவு என்ற ஊர் விவிலியத்தில் குறிக்கப்பட்டுள்ளதே தவிர, உண்மையில் அது இல்லை. 'எம்மாவு' என்று லூக்கா எழுதியதாகச் சொல்லப்படும் இரு ஊர்களின் பெயர்களை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது. இவ்விரண்டு ஊர்களும் எருசலேமிலிருந்து ஏறக்குறைய 11 கிமீ தொலைவில் அமைந்துள்ளன. இரண்டு, எம்மாவு சீடர்கள் அப்பம் பிட்கும்போது இயேசுவைக் கண்டுகொள்கின்றனர். இயேசு மூன்று நாள்களுக்கு முன்புதான், அதாவது, வியாழன் அன்று, நற்கருணையை ஏற்படுத்துகின்றார். அப்பம் பிட்டுத் தன் சீடர்களுக்குக் கொடுக்கின்றார். மூன்று நாள்களில் அது எல்லாச் சீடர்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அந்த நிகழ்வில் பன்னிரு திருத்தூதர்கள் மட்டுமே இருந்தனர். மேலும், இந்த மூன்று நாள்களும் திருத்தூதர்கள் மற்றவர்களுக்குப் பயந்து ஒளிந்துகொண்டிருந்தனர். இப்படி இருக்க, 'அப்பம் பிட்குதல்' நிகழ்வு இயேசுவை அடையாளப்படுத்துவதாக எம்மாவு சீடர்கள் உணர்ந்துகொண்டது எப்படி? என்ற கேள்வி எழுகின்றது. ஆக, லூக்கா தான் நற்செய்தியை எழுதுகின்ற காலத்தில் வழக்கத்தில் இருந்த அப்பம் பிட்குதல் நிகழ்வை எடுத்து இங்கே சேர்த்திருக்கலாம் என்பது லூக்கா நற்செய்தி மற்றும் திருத்தூதர் பணிகள் நூல் ஆய்வாளர்களின் கருத்து.

இன்றைய நற்செய்தியில் மூன்று குழுவினர் பேசுகின்றார்கள்:

(அ) வழியில் சீடர்கள் பேசுகின்றனர்.

(ஆ) எருசலேம் முழுவதும் இயேசுவைப் பற்றிப் பேசுகின்றது.

(இ) இயேசு சீடர்களோடு பேசுகின்றார்.


(அ) சீடர்கள் எதைப் பற்றிப் பேசுகின்றனர்?

'நாசரேத்து இயேசுவைப் பற்றிப் பேசுகின்றனர்.' என்ன பேசுகின்றனர்? 'அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று நாங்கள் எதிர்பார்த்திருந்தோம் ... ஆனால் அவர் சிலுவையில் அறையப்பட்டார் ... மூன்று நாள்கள் ஆகின்றன ... அவர் உயிரோடிருப்பதாகச் சொல்கிறார்கள்' 

சீடர்கள் இயேசுவைப் பற்றிப் பேசினாலும், அவர்களுடைய வார்த்தைகளில் குழப்பமும் கலக்கமும் இருக்கின்றன.

(ஆ) எருசலேம் முழுவதும் என்ன பேசிற்று?

நேரிடையாக இது கொடுக்கப்படவில்லை என்றாலும், இயேசுவுக்கு நிகழ்ந்தது பற்றி அவர்கள் பேசியிருக்கலாம் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.

(இ) இயேசு என்ன பேசுகின்றார்?

அவர்களிடம் கேள்வி கேட்கின்றார்: 'என்ன நிகழ்ந்தது?'

அவர்களைக் கடிந்துகொள்கின்றனர்: 'மந்த உள்ளத்தினரே!'

தன்னை அழைக்குமாறு அவர்களைத் தூண்டுகின்றார்: 'எங்களோடு தங்கும்!'

இயேசுவின் உரையாடல் அத்துடன் நிற்க, அவருடைய செயல் அங்கே பேசத் தொடங்குகிறது. அப்பம் பிட்குதலில் இயேசுவைக் கண்டுகொள்கின்றனர் சீடர்கள். உடனே அவர் மறைந்து போகின்றார். இறைமை என்பது உடனடியாக மறையக்கூடியது என்பதை நாம் நீதித்தலைவர்கள் நூலிலும் வாசிக்கின்றோம் (காண். நீத 6, 13).

இயேசுவைச் சந்தித்த சீடர்கள் உடனடியாக தாங்கள் புறப்பட்ட இடம் நோக்கிச் செல்கின்றனர்.

எந்த ஊரை விட்டு அவர்கள் தப்பி ஓட நினைத்தார்களோ, அதே ஊரான எருசலேமுக்குச் செல்கின்றனர்.

இனி அவர்களுடைய வாழ்க்கை முன்பு போல இருக்கப் போவதில்லை.

'என்ன நிகழ்ந்தது?'

என்று இயேசு நம்மைப் பார்த்துக் கேட்கின்றார்.

இது விடை தேடும் கேள்வி அல்ல. மாறாக, 'நான் இருக்கும்போது உனக்கு ஏதாவது நிகழ்ந்துவிடுமா!' என்ற வாக்குறுதியும் ஆறுதலும் அவருடைய வார்த்தைகளில் இருக்கின்றன.

ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை நமக்கு.

ஒன்றும் நிகழ்ந்துவிடாது நமக்கு.

அவர் நம்முடன் வருகின்றார். நாம்தான் அவர் இல்லை என்று குறைபட்டுக் கொள்கின்றோம் பல நேரங்களில்.


திரும்பிப் பார்த்து

இன்றைய (19 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவான் 20:11-18

திரும்பிப் பார்த்து

இன்றைய நற்செய்தி வாசகம் பற்றிய புனித அகுஸ்தினாரின் விளக்கத்தை நான் வாசித்தேன். நிகழ்வின்படி, மகதலா நாட்டு மரியா கல்லறைக்கு வெளியே நின்று, கல்லறையைப் பார்த்து அழுதுகொண்டிருக்கின்றார். அங்கிருந்த இரு வானதூதர்களிடம் பேசிவிட்டு, பின்னால் திரும்புகின்றார். அங்கே இயேசு நிற்பதைக் காண்கிறார். ஆனால், இயேசு அவருடைய கண்களுக்குத் தோட்டக்காரர் போலத் தெரிகிறார். அவருடன் உரையாடல் தொடங்குகிறது. உரையாடலின் இறுதியில், 'மரியா!' என்கிறார் இயேசு. உடனடியாக, 'ரபூனி' என அவரை அள்ளிக்கொள்கின்றார் மரியா. இந்த இடத்தில், 'மரியா திரும்பிப் பார்த்து' எனப் பதிவு செய்கிறார் யோவான். ஏற்கெனவே மரியா திரும்பித்தானே இருக்கிறார். மீண்டும் அவர் திரும்பினால் கல்லறை நோக்கி அல்லவா திரும்ப வேண்டும்?

புனித அகுஸ்தினார் இதற்கு மிக அழகான விளக்கம் தருகின்றார்: 'மரியா, தன் திசையைத் திருப்பவில்லை. மாறாக, தன் இதயத்தைத் திருப்புகிறாள்.' இவ்வளவு நேரம் மரியாவின் முகம் இயேசுவை நோக்கியதாக இருந்தாலும், இப்போதுதான் அவருடைய இதயம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது. அல்லது இவ்வளவு நேரம் அவருடைய இதயம் கல்லறை நோக்கியதாக இருந்தது. ஆக, முகம் இயேசுவை நோக்கியும், இதயம் கல்லறை நோக்கியும் இருந்தால், அவர் நம் கண்களுக்கும் தோட்டக்காரர் போலவே தெரிவார். முகமும் இதயமும் ஒருசேர அவரை நோக்கி இருந்தால் அவர் நம் ஆண்டவராகத் தெரிவார்.

மரியா இயேசுவைக் கண்டுகொள்வது நான்கு நிலைகளில் நடக்கிறது:

முதலில், அவர் இயேசுவைக் காணவில்லை.

இரண்டாவதாக, அவர் இயேசுவைத் தோட்டக்காரர் போலக் காண்கின்றார்.

மூன்றாவதாக, அவர் அவரை ரபூனி ('போதகர்', 'என் போதகர்') எனக் காண்கின்றார்.

இறுதியாக, அவர் அவரை ஆண்டவர் எனக் காண்கின்றார்.

'நீ என் சகோதரர்களிடம் போய் அவர்களிடம், 'என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்' எனச் சொல்' என்று சொல்லி அனுப்புகிறார் இயேசு.

ஆனால், மகதலா மரியா எல்லாவற்றையும் மறந்துவிடுகிறார்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்கிறார். மற்றதைப் பின்புதான் சொல்கின்றார்.

யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'காணுதல்' என்பது 'நம்புதலுக்கான' அடையாளம். கிரேக்கர்கள் சிலர் பிலிப்பிடம், 'ஐயா! நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்!' (காண். யோவா 12) என்கின்றனர். அங்கே, 'காணுதல்' நம்பிக்கைக்கான முதல் படியாக இருக்கிறது. 

மரியா அறிவித்த செய்தியே திருத்தூதர்களுக்கு நம்பிக்கையின் செய்தியாக மாறுகிறது.

'கிறிஸ்து வாழ்கிறார்' என்ற செய்தியை இந்த உலகுக்கு முதன்முதலாக அறிவித்தவர் மகதலா நாட்டு மரியாவே. 

நம் வாழ்வில் கல்லறை நோக்கி நம் முகமும் இதயமும் இருத்தல் வேண்டாம். கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் அவர் நமக்குப் பின் நிற்கின்றார். சில நேரங்களில் தோட்டக்காரர் போல. சில நேரங்களில் போதகர் போல. சில நேரங்களில் ஆண்டவர் போல.


Sunday, April 17, 2022

அவர்களை எதிர்கொண்டு

இன்றைய (18 ஏப்ரல் 2022) நற்செய்தி (மத் 28:8-15)

அவர்களை எதிர்கொண்டு

மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அடக்கம் செய்யப்பட்ட வெற்றுக் கல்லறையை விட்டு இரு குழுவினர் புறப்பட்டுச் செல்கின்றனர். முதல் குழுவினர் பெண்கள். அவர்கள் திருத்தூதர்களுக்கு நற்செய்தி அறிவிக்க ஓடுகின்றனர். இரண்டாவது குழுவினர் போர் வீரர்கள். நடந்ததைத் தலைமைக் குருக்களுக்கு அறிவிக்கிறார்கள். முதல் குழுவினரை இயேசு எதிர்கொள்கின்றார். இரண்டாம் குழுவினர் தாங்களாகவே ஊருக்குள் சென்று 'வதந்தியை' பரப்புகின்றனர். இயேசுவின் சமகாலத்தவர் சிலருக்கு அவருடைய உயிர்ப்பு வெறும் வதந்தியாக மட்டுமே இருந்தது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் சொல்லாடல்கள் சில நம் சிந்தனையைத் தூண்டுகின்றன:

(அ) 'காலடிகளைப் பற்றிக்கொண்டனர்'

நறுமணத் தைலம் பூச வந்த பெண்கள், இயேசுவை எதிர்கொண்டபோது, அல்லது இயேசு அவர்களை எதிர்கொண்டபோது, அவருடைய காலடிகளைப் பற்றிக்கொள்கின்றனர். இந்த நிகழ்வு இரண்டு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. முதலில், இதன் வழியாக இயேசுவுக்கு உடல் இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார் மத்தேயு. தொடக்கத் திருஅவையில் இயேசு தன்னுடைய உயிர்ப்புக்குப் பின் உடல் பெற்றிருந்தாரா என்ற நிறைய கேள்விகள் எழுந்ததால், நற்செய்தியாளர்கள் இயேசுவின் உடலைப் பற்றிய குறிப்பை நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ எழுதுகின்றனர். இரண்டாவதாக, 'காலடிகளைப் பற்றிக்கொள்வதன்' வழியாக இயேசுவைக் கடவுள் நிலைக்கு உயர்த்துகின்றார் நற்செய்தியாளர். ஏனெனில், காலடிகளில் பணிதல் என்பது கடவுளுக்கு மட்டுமே செய்யப்படும் ஒரு பணிவிடைச் செயல் ஆகும்.

(ஆ) 'என் சகோதரர்களிடம் சென்று'

இங்கு தன் திருத்தூதர்களை, 'சகோதரர்கள்' என அழைக்கின்றார் இயேசு. யோவான் நற்செய்தியில் இயேசு தன் சீடர்களை, 'நண்பர்கள்' என அழைக்கின்றார். 'சகோதரர்கள்' என்பது தொடக்கத் திருஅவையில் திருத்தூதர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு காரணப்பெயராக இருந்தது. மேலும், இச்சொல்லாடலை இயேசு பயன்படுத்துவதன் வழியாக, இயேசு தன்னைவிட்டு ஓடிப்போன திருத்தூதர்கள்மேல் எந்தவித கோபமும் பாராட்டவில்லை என்பதும், அவர் அவர்களுடைய வலுவின்மையை ஏற்றுக்கொண்டதோடு, அவர்கள்மேல் தொடர்ந்து உரிமை கொண்டாடினார் என்பதும் தெரிகிறது.

(இ) 'கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள்'

கலிலேயா என்பது இயேசுவின் பணி தொடங்கப்பட்ட இடம். மீண்டும் கலிலேயாவுக்கு அவர்களை அனுப்புவதன் வழியாக, மறுபடியும் முதலிலிருந்து தொடங்க விழைகின்றார் இயேசு. எருசலேம் இயேசுவின் இறுதியாக இருந்தது. எருசலேம் நிகழ்வுகள் இன்னும் சீடர்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன. அவர்களின் உள்ளத்தை ஆற்றுவதற்காக, அவர்களுடைய வாழ்வின் முதன்மையான மற்றும் இனிமையான பொழுதுகளுக்கு அவர்களை அழைத்துச் செல்கின்றார் இயேசு.

இன்று நாம் எந்தவொரு வலுவற்ற நிலையில் இருந்தாலும், கடவுள் நம்மேல் கொண்டிருக்கின்ற உரிமையை விட்டுத்தருவதில்லை. இன்னும் அதிகமான நெருக்கத்தை நம்மோடு ஏற்படுத்திக்கொள்ளவே அவர் விரும்புகின்றார். மேலும், நம் வாழ்வு ஏதோ ஒரு நிலையில் தடைபட்டு நிற்கும்போது, மீண்டும் நம் கலிலேயா நோக்கிச் செல்தல் நலம்.

தலைமைக் குருக்களும், மூப்பர்களும், காவல் வீரர்களும் வதந்தியைப் பரப்புவதில் மும்முரமாய் இருந்து, பணம், இலஞ்சம், மற்றும் பொய்க்கு விலை போயினர். 

உயிர்ப்பு அனுபவம் பெற்றவர்கள் தங்கள் வாழ்வைப் புதிதாகத் தொடங்கச் சென்றனர் கலிலேயாவுக்கு.


Wednesday, April 13, 2022

உங்களுக்குப் புரிந்ததா?

ஆண்டவரின் இறுதி இராவுணவுக் கொண்டாட்டம்

விடுதலைப் பயணம் 12:1-8, 11-14 1 கொரிந்தியர் 11:23-26 யோவான் 13:1-15

உங்களுக்குப் புரிந்ததா?

தன் பணிவாழ்வு முழுவதும் பல்வேறு போதனைகள், வல்ல செயல்கள் என்று அவர்களுக்குச் சொல்லாலும் செயலாலும் கற்பித்து வந்த இயேசு, 'இப்படிச் சொல்லிக் கொண்டே இருந்தால் இவர்களுக்குப் புரியாது' என்று நினைத்தவர், சட்டென்று எழுந்து, மேலாடையைக் கழற்றிவிட்டு, இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களின் காலடிகளைக் கழுவித் துடைத்து, மீண்டும் மேலாடை அணிந்து பந்தியில் அமர்ந்துகொள்கின்றார். அப்படி அமர்ந்த அவர் தம் சீடர்களிடம், 'உங்களுக்குப் புரிந்ததா?' என்கிறார். பாதம் கழுவும்போதும் பேதுருவிடம், 'இப்போது உனக்குப் புரியாது. பின்னரே புரிந்துகொள்வாய்' என்கிறார். 

இயேசுவின் இந்தச் செயலைத்தான் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் செய்தனர். இறைவாக்கினர் அடையாளங்களில் மூன்று கூறுகள் பொதுவாக உள்ளன:

அ. இவை யாவும் கடவுளிடமிருந்து ஊற்றெடுக்கின்றன. கடவுளால் நேரிடையாக உந்தப்பட்டோ, அல்லது மறைமுகமாக அறிவுறுத்தப்பட்டோ கதைமாந்தர்கள் அடையாளச் செயல்கள் செய்கின்றனர்.

ஆ. இறைவாக்கு அடையாளங்கள் ஒரு சம்பிரதாய செய்கையாகவோ, அசைவு அல்லது நகர்வாகவோ, தோற்றப்பாங்காகவோ, அல்லது நாடகப்பாணியில் அமையும் செயலாகவோ இருக்கிறது.

இ. இவ்வடையாளங்கள் இவற்றைக் காண்பவர்களைக் காண்கின்ற ஒன்றிலிருந்து காணாத ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறது. எடுத்துக்காட்டாக, எரேமியாவின் கழுத்தில் நுகத்தைக் காணும் மக்கள் பாபிலோனிய அடிமைத்தனத்தின் நுகத்தைப் புரிந்துகொள்வார்கள்.

இந்த மூன்று கூறுகளும் இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்விற்குப் பொருந்துவதாக இருக்கின்றன.

அ. 'இராவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தன் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல அவரிடமே திரும்பிச் செல்ல வேண்டும் என்பதையம் அறிந்த இயேசு பந்தியிலிருந்து எழுகின்றார்.' ஆக, இயேசுவின் செயல் தன் தந்தையைப் பற்றிய அறிவால் தூண்டப்பட்டதாக இருக்கின்றது.

ஆ. இயேசு தன் சமகாலத்து மக்கள் நடுவே புழக்கத்தில் இருந்த ஒரு சாதாரண செயலைக் கைக்கொள்கின்றார். அதை ஒரு நாடகப் பாணியில் - சீடர்களோடு பேசிக்கொண்டு, பேதுருவோடு விவாதித்துக்கொண்டு - செய்கின்றார்.

இ. 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு உங்களுக்கு நான் முன்மாதிரி காட்டினேன்' என்கிறார் இயேசு. ஆக, சீடர்கள் தாங்கள் காணும் இந்தச் செயலைத் தங்கள் வாழ்வில் செய்ய, இயேசுவைப் போல பணி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.

முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் தங்களின் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை தங்களுடைய அடையாளச் செய்கைகளால் வெளிப்படுத்துகின்றனர். இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு அவருடைய சீடர்களின் பிரச்சினைகளுக்கு எப்படித் தீர்வாகிறது?

1. அவரிடமிருந்து வந்தார் - அவரிடமே திரும்பிச் சென்றார்

'உலகின் ஒளி நானே' என்று தன்னைப் பற்றி யூதர்களுக்கு அறிவிக்கின்ற இயேசு, தொடர்ந்து, 'நான் எங்கிருந்து வருகிறேன் என்றும் எங்குச் செல்கின்றேன் என்பதும் எனக்குத் தெரியும். நான் எங்கிருந்து வருகிறேன், எங்குச் செல்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியாது' என்கிறார் (காண். யோவா 8:12-14). இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வை, பவுலின் கிறிஸ்தியல் பாடலோடு (காண். பிலி 2:6-11) பேராயர் ஷீன் பின்வருமாறு ஒப்பீடு செய்கின்றார்: இயேசு பந்தியிலிருந்து எழுந்து - கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை விடுத்து, மேலுடையைக் கழற்றி - தம்மையே வெறுமையாக்கி, துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார் - அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார், குவளையில் தண்ணீர் எடுத்து காலடிகளைக் கழுவித் துடைத்தார் - சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார், கழுவியபின் மேலுடையை அணிந்துகொண்டு - இறந்து உயிர்த்து, பந்தியில் அமர்ந்து - கடவுளும் அவரை உயர்த்தி. மேற்காணும் ஒப்புமை சீடர்களுக்கு இயேசுவின் மனுவுருவாதல், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுப்பதாக இருக்கிறது. இவ்வாறாக, இயேசு கடவுளிடமிருந்து வந்தார் என்பதையும், அவர் கடவுளிடமே திரும்பிச் செல்கிறார் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

2. சீடர்களின் காலடிகளைக் கழுவி

இயேசுவின் சீடர்கள் நடுவில் விளங்கிய மிகப் பெரிய பிரச்சினை, 'நம்மில் பெரியவர் யார்?' என்பதுதான் (காண். மாற் 9:33-34, 10:35-37, லூக் 22:24). இயேசு சிறு குழந்தையை அடையாளமாக நிறுத்தி அவர்களுக்கு விளக்கியிருக்கிறார். ஆனால், அவர்கள் இறுதிவரை அதைப் புரிந்துகொள்ளவில்லை. ஆகையால்தான், இயேசு பாதம் கழுவும் நிகழ்வின் வழியாக சமத்துவத்தைக் கற்பிக்கின்றார். எப்படி? பாதம் கழுவும் நிகழ்வு ஓர் அடிமை எஜமானனுக்குச் செய்யும் வேலை என்றாலும், இயேசு அந்த அர்த்தத்தில் எடுக்கவில்லை. ஏனெனில், இயேசுவைப் பொறுத்தவரையில் சீடர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்லர். மாறாக, அவருடைய நண்பர்கள் (காண். யோவா 13:1-20). இந்த நட்பு அவருடைய தற்கையளிப்பிலும் வெளிப்படுகிறது (காண். யோவா 15:13-14). ஆக, சீடர்களுக்குள் இருக்கின்ற எல்லா பேதங்களையும், பிரிவுகளையும், பிரிவினைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், விருப்பு, வெறுப்புக்களையும் உடைக்கின்ற இயேசு, அவர்கள் அனைவரையும் நண்பர்கள் என்ற நிலையில் வைத்து அவர்களின் பாதங்களை ஒரு நண்பனாகக் கழுவுகின்றார். ஆக, சமத்துவம் என்பது இயேசுவைப் பொறுத்தவரையில் நட்பில் மலர்கிறது. பேதுரு அவருடைய காலடிகளைக் கழுவ இயேசுவுக்கு அனுமதி மறுத்தபோது,  'நான் உன் பாதங்களைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' - அதாவது, 'என் நட்பில் உனக்கு இடமில்லை' என்கிறார் இயேசு. 'நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்' என்று சொல்கின்ற இயேசு, சீடர்கள் நடுவில் திகழ வேண்டிய நட்பில் மலரும் சமத்துவத்தை வலியுறுத்துகின்றார்.

3. முன்மாதிரி காட்டினேன்

இயேசு செய்தது ஒரு முன்மாதிரி. அந்த முன்மாதிரியில் ஒரு அறிவுரையும் கட்டளையும் இருக்கிறது. 'நட்பாக இருங்கள்' என்பது அறிவுரை. 'நான் செய்ததுபோல நீங்களும் செய்யுங்கள்' என்பது கட்டளை. ஏறக்குறைய இதே வார்த்தைகளில்தான் இயேசுவின் புதிய அன்புக் கட்டளையும் அமைந்திருக்கிறது: 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்கிறார் இயேசு. 'நான் உங்கள் பாதங்களைக் கழுவியது போல நீங்கள் என் பாதங்களைக் கழுவுங்கள்' என்றோ, 'நான் உங்களிடம் அன்பு செய்தது போல நீங்கள் என்னை அன்பு செய்யுங்கள்' என்று தன்மையமாக இயேசு எதையும் செய்யவோ, சொல்லவோ இல்லை. ஆக, அவரிடமிருந்து பெற்ற சீடர்கள் அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். அதில்தான் சீடத்துவத்தின் அடையாளம் இருக்கிறது - 'நீங்கள் ஒருவர் மற்றவருக்குக் காட்டும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்.

ஆக, இயேசுவின் 'பாதம் கழுவுதல்' என்னும் இறைவாக்கினர் அடையாளம் சீடர்களைப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது.

இத்தீர்வுகள் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் பற்றிய புரிதல்களை எப்படி விரிவுபடுத்துகின்றன?

நாம் இன்று கொண்டாடும் நற்கருணை, அன்புக் கட்டளை, மற்றும் பணிக்குருத்துவம் ஆகிய மூன்றுமே இறைவாக்கினர் அடையாளங்கள். இவை தங்களையும் தாண்டிய பொருளைத் தங்களுக்குள் கொண்டுள்ளன. இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), கொரிந்து நகரத் திருஅவையில் நிலவிய பிளவுகள், ஏற்றத்தாழ்வுகள், வேற்றுமை பாராட்டுதல் ஆகியவற்றைக் கடிந்துகொள்கின்ற பவுல், இறுதியாக, 'ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக் கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லி, 'இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய இறப்பை அவர் வரும் வரை அறிக்கையிடுகிறீர்கள்' என்று அறிவுறுத்துகின்றார். ஆக, ஒவ்வொரு நற்கருணைக் கொண்டாட்டமும் ஆண்டவருடைய இறப்பை கொரிந்து நகர மக்களுக்கு நினைவூட்ட வேண்டும். ஆண்டவருடைய இறப்பு பிரிவினைகள் அகற்றியது. ஆக, பிரிவினைகள் அகற்ற நற்கருணை அவர்களைத் தூண்ட வேண்டும். அதே போல, முதல் வாசகத்தில் (காண். விப 12:1-8, 11-14) இஸ்ரயேல் மக்கள் கொண்டாடும் பாஸ்கா வெறும் விருந்து அல்ல. மாறாக, ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் நடத்திய அருஞ்செயலின் அடையாளம். இவர்கள் ஒவ்வொரு முறையும் இதைக் கொண்டாடும்போது அந்நிகழ்வை நினைவில் கொள்ள வேண்டும். 'அன்பு' என்பது சீடத்துவத்தின் அடையாளம் (காண். யோவா 13:35). பணிக்குருத்துவம் என்பது இயேசுவைப் போல ஒருவர் ஒத்திருக்க முன்வருகிறார் என்பதன் அடையாளம். ஆகையால்தான், அருள்பணி நிலைக்குள் வரும் ஒருவர் தன் குடும்பம், சாதி, பின்புலம் என்ற மேசையிலிருந்து எழுந்து, தன்னுடைய விருப்பு, வெறுப்பு என்னும் மேலாடையைக் கழற்றிவிட்டு, இறைத்திருவுளம் நிறைவேற்றுதல் என்ற துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஒருவர் மற்றவரின் காலடிகளைக் கழுவுதல் வேண்டும்.

ஆக, இன்றைய நாளில் நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் ஆகியவற்றை நாம் வெறும் சடங்குகள் அல்லது வழிபாட்டு அடையாளங்கள் என்பதைப் பார்ப்பதைத் தவிர்த்து, அவற்றை இறைவாக்கினர் அடையாளங்களாகப் பார்த்தல் வேண்டும். அல்லது நற்கருணை, அன்பு, பணிக்குருத்துவம் நம்மில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் என்னும் இறைவாக்கினர் அடையாளங்களை நாம் எப்படி வாழ்வது?

1. தாழ்வானது மேலானதாக மாற வேண்டும்

கோதுமை அப்பமாக மாறுகிறது. திராட்சைக் கனிகள் இரசமாக மாறுகின்றன. நாம் நற்கருணை வழிபாட்டில் கோதுமையையும், திராட்சைக் கனிகளையும் இறைவனுக்குக் காணிக்கையாக்குவதில்லை. மாறாக, நம் உழைப்பால் உருமாறிய அப்பத்தையும், இரசத்தையும் காணிக்கையாக்குகிறோம். அப்பமும் இரசமும் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறுகின்றன. அவற்றை உட்கொள்ளும் நாம் இயேசுவின் உடலாக இரத்தமாக மாறுகின்றோம். ஆக, ஒவ்வொரு நிகழ்விலும் தாழ்வான ஒன்று மேலானதாக மாறுகிறது. பாதம் கழுவும் நிகழ்வில் முதலில் மேசையில் அமர்ந்த இயேசுவும் பாதம் கழுவிய பின் அமர்ந்த இயேசுவும் ஒன்றா? இல்லை. ஏனெனில், இவ்விரண்டுக்கும் இடையேதான் தாழ்வானது - அதாவது, ஏற்றத்தாழ்வு - உயர்வானதாக - சமத்துவம் மற்றும் நட்பு - மாறுகிறது. ஆக, இன்று நாம் நற்கருணை கொண்டாடும்போது என்னுடைய தாழ்வானது உயர்வானதாக மாறுகிறதா? அல்லது நான் இன்னும் தாழ்ந்துகொண்டே போகின்றேனா?

2. பாதம் கழுவும் அன்பு

இன்று அன்பில் பிரச்சினைகள் எழுக் காரணம் ஒருவர் மேலிருப்பதும் மற்றவர் கீழிருப்பதும்தான். பாதம் கழுவும் நிகழ்வில் இயேசு தம் சீடர்கள் அனைவரையும் நண்பர்களாக்கி அதே நிலையில் தானும் நண்பராக நிற்கின்றார். நண்பர்-நண்பர் என்ற நிலையில் மட்டுமே அன்பு சாத்தியமாகும். மேலும், நண்பர்-நண்பர் நிலையைச் சீடர்கள் மற்றவர்களை நோக்கி நீட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றார். கணவன்-மனைவி, மாமியார்-மருமகள், ஆசிரியர்-மாணவர், காதலன்-காதலி, கடவுள்-பக்தன், பெற்றோர்-பிள்ளைகள் என எந்த அன்புறவிலும், 'மேல்-கீழ்' நிலைதான் இருக்கிறது. 'என் பிள்ளை நான் சொல்வதைக் கேட்க வேண்டும்' என நினைக்கின்ற பெற்றோர் ஏன் பிள்ளை சொல்வதைக் கேட்பதில்லை? தனக்கு எல்லாம் தெரியும் என்பதாலா? நாம் எல்லாருமே நம் இருப்பு என்ற பந்தியை விட்டு எழ வேண்டும். நம் ஈகோ என்ற மேலாடையைக் கழற்ற வேண்டும். நம் குறைவு என்ற துண்டை இடுப்பில் கட்ட வேண்டும். இனிய சொற்களைத் தண்ணீராய் எடுத்து, கனிவான செயல்களால் காலடிகளைத் துடைக்க வேண்டும்.

3. புரிந்துகொள்ளும் பணிக்குருத்துவம்

பணிக்குருத்துவத்தைப் பற்றிய புரிதல் அருள்பணியாளர்களுக்கும் அருள்பணியாளரின் பணி யாருக்குச் செய்யப்படுகிறதோ அவர்களுக்கும் இருக்க வேண்டும். சீடர்களின் காலடிகளைக் கழுவிவிட்டு மீண்டும் பந்தியில் அமரும் இயேசு, 'நான் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா?' எனக் கேட்கிறார். பாதம் கழுவும் நிகழ்விலும் பேதுருவிடம், 'நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது. பின்னரே புரியும்' என்கிறார். இந்தப் பின்னர் எது? அதுதான் திருஅவையின் தொடர் வாழ்வு. இயேசு சீடர்களை விட்டுச் சென்றபின் அவர்கள் செய்யப்போகின்ற பணிகளில்தான் அவர்கள் இயேசுவின் அடையாளத்தைப் புரிந்துகொள்ள முடியும். இன்று அருள்பணியாளர்கள் அருள்பணி நிலை என்றால் என்ன என்பதை சில நேரங்களில் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் தவறாகப் புரிந்துகொள்கின்றனர், சில நேரங்களில் புரிந்துகொள்ள மறுக்கின்றனர். இந்த மூன்று நிலைகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. புரிந்துகொள்ள வேண்டுமெனில் அருள்பணியாளர்கள் தங்கள் காலடிகளைக் கழுவுமாறு இயேசுவிடம் நீட்ட வேண்டும். அப்போதுதான் 'அவரோடு நமக்குப் பங்கு உண்டு!' அவரால் காலடிகள் கழுவப்படாமல் அருள்பணியாளர் மற்றவரின் காலடிகளைக் கழுவ முடியாது. இன்று பணிக்குருத்துவம் 'வலிந்து பற்றிக்கொண்டிருக்க ஒன்றாகக் கருதப்படுகிறதே தவிர,' அந்த நிலையை விட்டு இறங்குவதையும், தாழ்ச்சியுடன் கீழ்ப்படிந்து சிலுவையைத் தழுவிக்கொள்வதையும் அது ஏற்க மறுக்கிறது. வெறும் வழிபாட்டு அடையாளமாக மாறிவிடுகிறதே தவிர, ஆன்மீகமாக - அதாவது உள்ளும் வெளியிலும் ஒரே மாதிரி - இருக்கத் தயங்குகிறது. 'புரிந்துகொள்தல்' நடக்க ஒருவர் ஒரே தளத்தில் நிற்க வேண்டும், தான் பேசுவதை நிறுத்த வேண்டும், பிறர் பேசுவதைக் கேட்க வேண்டும், முற்சார்பு எண்ணம் அகற்ற வேண்டும், தீர்ப்பிடாமல் இருக்க வேண்டும். இந்ந நிகழ்வில் தான் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் தன் புரிந்துகொள்தலை அருள்பணியாளர் நிறுத்தவிடக் கூடாது.

இறுதியாக,

இயேசுவின் பாதம் கழுவும் நிகழ்வு நற்கருணை, அன்புக் கட்டளை, பணிக்குருத்துவம் ஆகியவற்றின் இறைவாக்கினர் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின் இறைவாக்கினர் அடையாளம் மற்ற இறைவாக்கினர் அடையாளங்களைப் போல உடனடி மாற்றத்தைக் கொண்டுவரவில்லை என்றாலும், இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பெரிய மாற்றத்தைச் சீடர்களில் ஏற்படுத்தியது. மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த அடையாளமும் - திருமண மோதிரம், அருள்பணி நிலையின் அருள்பொழிவு, துறவற நிலையின் வார்த்தைப்பாடு - வெறும் சுமையே. மாற்றத்தை ஏற்படுத்தும் அடையாளங்களாக நம் அடையாளங்கள் இருந்தால் எத்துணை நலம்!


Tuesday, April 12, 2022

ரபி நானோ?

இன்றைய (13 ஏப்ரல் 2022) நற்செய்தி (மத் 26:14-25)

ரபி நானோ?

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: முதலாவது, ஏற்கெனவே யூதாசு பணத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆக, பணத்திற்கான தேவை அவருக்கு அதிகம் இருந்திருக்காது. இரண்டாவது, அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தன் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். 'ஓசன்னா!' பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், 'ஓசன்னா!' பாடிய கூட்டம் 'சிலுவையில் அறையும்!' என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, 'அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!' என்கிறார். 

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று.

நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம்.

நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!' என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் பதில் சொல்வதைக் கவனித்தீர்களா?

சீடர்கள் ஒவ்வொருவரும், 'ஆண்டவரே, நானோ?' என்கின்றனர்.

ஆனால் யூதாசு மட்டும், 'ரபி, நானோ?' என்கின்றார்.

உடனே இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்!' என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்?

'ரபி' என்று சொன்னார்.

மற்றவர்கள் எல்லாம், 'ஆண்டவரே!' என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் 'போதகர், ஆசிரியர், ரபி' என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து வாசிக்கின்றோம். தான் இழிநிலையை அடைந்தாலும் தன்னுடன் தன் ஆண்டவராகிய கடவுள் இருப்பதாக உணர்கிறார் ஊழியன். 

'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்' என்கிறார் துன்புறும் ஊழியன்.

நம் நாவு கற்றோனின் நாவாக இருந்தால் இறைவனை ஏற்று அறிக்கையிட முடியும். 

இயேசுவை, 'ஆண்டவர்' என அறிக்கையிட மறுத்த யூதாசு, 'ரபி!' என்கிறார். 

அது அவருடைய கடின உள்ளமா?

அல்லது இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பா?

அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளமா?

நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.


Monday, April 11, 2022

மனமகிழ்வு நேரம்

இன்றைய (12 ஏப்ரல் 2022) நற்செய்தி (யோவா 13:21-33, 36-38)

மனமகிழ்வு நேரம்

துறவு இல்லங்களிலும், கல்லூரி விடுதிகளிலும், அருள்பணியாளர் பயிற்சி மையங்களிலும், கூட்டுக் குடும்பங்களிலும் இரவு உணவிற்குப் பின் 'மனமகிழ்வு நேரம்' என்று ஒன்று உண்டு. ஏறக்குறைய 30 நிமிடங்கள் நடக்கும் அந்நிகழ்வில் குழு விளையாட்டுக்கள், நகைச்சுவை பரிமாற்றம், நடந்த நிகழ்வுகளின் திறனாய்வு போன்றவை இருக்கும். இப்படி அமர்ந்து பேசிவிட்டவர்கள் எந்தவொரு மனத்தாங்கலும் இல்லாமல், வருத்தமும் இல்லாமல் தூங்கச் செல்வார்கள். மனமகிழ்வு நேரம் முடிந்து காலை உணவு முடியும் வரை 'நீண்ட அமைதி' (கிராண்ட் சைலன்ஸ்) கடைப்பிடிக்கப்படும்.

இயேசுவின் இறுதி இராவுணவு முடிந்து ஒரு மனமகிழ்வு நேரமாக இன்றைய நற்செய்தி வாசகம் இருக்கிறது. இயேசு அமர்ந்திருக்கிறார். அவருடைய மார்பில் அன்புச் சீடர் சாய்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் திராட்சை இரசமும் ரொட்டியும் மீதம் இருக்கிறது. மற்ற சீடர்களும் அமர்ந்திருக்கிறார்கள். உரையாடல் இயேசு-அன்புச் சீடர்-பேதுரு என்ற முக்கோணத்தில் நகர்கிறது. பேசு பொருளாக இங்கே யூதாசு இருக்கிறார். 

'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்'

'உங்களுள் ஒருவன் என்னை மறுதலிப்பான்'

- இப்படியாக யூதாசு மற்றும் பேதுரு செய்யப்போகின்ற செயல்களை முன்னுரைக்கின்றார் இயேசு.

இரண்டிற்கும் இரண்டு அடையாளங்கள் தருகின்றார் இயேசு:

'இரசத்தில் தோய்த்த அப்பத்துண்டு' - யூதாசு

'சேவலின் கூவல்' - பேதுரு

யூதாசு தான் செய்யப்போவதைக் குறித்து மௌனம் காக்கிறார். பேதுரு தன்னையே, 'இல்லை, இல்லை, நான் அப்படிச் செய்ய மாட்டேன்' என மறுதலித்துக்கொள்கிறார்.

இந்த நிகழ்வை இயேசு பெரிய கட்டத்தில் வைத்துப் பார்க்கிறார்: அதுதான், கடவுள் அருளும் மாட்சி.

அதாவது, தனக்கு முன்னால் நடந்தேறுகின்ற நிகழ்வுகள் - காட்டிக்கொடுத்தலும், மறுதலித்தல் - அவரை அசைக்கவில்லை.

இயேசு எல்லாரையும் ஒரே மாதிரி பார்க்கும் பக்குவம் பெற்றிருக்கிறார். ஒரு சீடர் மார்பில் சாய்ந்து தன்னை அன்பு செய்கிறார் என்று துள்ளவும் இல்லை. மற்ற இவர் காட்டிக்கொடுக்கவும், மறுதலிக்கவும் இருக்கிறார்கள் என்று துவண்டுவிடவும் இல்லை. ஒரே மனநிலை. சமமான மனநிலை. அமைதியான நிலை.

இந்தச் சமநிலை எப்போது வரும்?

- தன்னை அறிந்த ஒருவர் இந்த மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வை பெரிய வட்டமாக இணைத்துப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- எல்லாவற்றிலும் கடவுளின் விரல் செயலாற்றுவதைப் பார்க்கிறவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- மற்றவர்கள் இப்படி இருந்தால் அவர்களை நான் அன்பு செய்வேன் என்ற நிலையில் இல்லாமல், மற்றவர்கள் என்னை அன்பு செய்யாவிட்டாலும், அவர்கள் எனக்கு என்ன செய்தாலும் நான் அவர்களை அன்பு செய்வேன் என்ற பக்குவம் கொண்டிருப்பவர் இம்மனநிலையை எளிதாகப் பெறுவார்

- தன் வாழ்வில் எந்தப் பற்றுகளையும் கொண்டிராதவர் இம்மனநிலையைப் பெறுவார்

இந்தச் சமநிலை நமக்கும் வந்தால், இரவு ஒன்பது மணி மட்டுமல்ல. எல்லா நேரமும் மனமகிழ்வு நேரமே.


Sunday, April 10, 2022

இந்தத் தைலத்தை

இன்றைய (10 ஏப்ரல் 2012) நற்செய்தி (யோவா 12:1-11)

இந்தத் தைலத்தை

'பாஸ்கா விழாவுக்கு ஆறு நாள்களுக்கு' முன் என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. 'ஆறு நாள்களுக்கு' முன் என்று தொடங்கும் இன்றைய வாசகத்தில் ஆறு பேரை நாம் சந்திக்கின்றோம்:

(1) இரண்டாம் முறை வாழ வாய்ப்பு பெற்ற இலாசர், (2) மார்த்தா - உணவு பரிமாறுவதில் மும்முரமாய் இருக்கிறார், (3) மரியா - விலையுயர்ந்த தைலத்தால் இயேசுவின் காலடிகளில் பூசுகிறார், (4) யூதாசு - 'மரியாவைத் தடுக்க' நினைத்து தைலத்தை விற்று ஏழைகளுக்குக் கொடுக்க நினைத்தவர், (5) யூதர்கள் - இலாசரைக் காண வந்தவர்கள், காண வந்தவரையே கொலை செய்ய நினைத்தவர்கள், மற்றும் (6) இயேசு - தன் தலைக்கு மேல் வாள் தொங்கினாலும் எதையும் அலட்டிக்கொள்ளாமல் விருந்து உண்பவர்.

இயேசுவுக்கும் யூதாசுக்குமான உரையாடலை இன்று சிந்திப்போம்.

இதற்கு முன் ஒரு சின்ன பின்புலம். நற்செய்தியாளர் யோவானுக்கும் யூதாசுக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்ததை அவருடைய நற்செய்தியிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஏனெனில், யூதாசைப் பற்றிய சாடல் இந்நற்செய்தியில் நிறைய இருக்கும். அதுவும் தேவையற்ற இடங்களில். எடுத்துக்காட்டாக, பிலாத்து இயேசுவிடம், 'உன்னை விடுதலை செய்யவும் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்கிறார். இயேசு, 'மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது' என்கிறார். இத்தோடு முடித்திருந்தால் பரவாயில்லை. 'என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்' என்கிறார். இந்த இடத்தில் யூதாசைப் பற்றிய குறிப்பு ஏன்?

யூதாசின் ஒழுக்க நெறியை இன்றைய நற்செய்தியில் விமர்சிக்கிறார் யோவான்: 'ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல. மாறாக, அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக்கொள்வதுண்டு.' இது தேவையற்ற விமர்சனம் என நினைக்கிறேன். தன்னிடம் பணப்பை கொடுக்கப்படவில்லை என்ற கையாலாகாத நிலையில் இவர் எழுதினாரா, அல்லது தன்னைவிட யூதாசு நம்பிக்கைக்குரியவனாய் இன்னொருத்தன் இருக்கிறான் என்ற பொறாமையில் எழுதினாரா என்று தெரியவில்லை. அல்லது யூதாசு உண்மையிலேயே செய்தாரா என்று தெரியவில்லை. அப்படி எழுதியிருந்தாலும், 'அன்பு,' 'அன்பு' என்று மூச்சுக்கு முந்நூறு தடவை தன் நற்செய்தியிலும், கடிதங்களிலும் குரல் எழுப்பும் யோவான் அன்பின் நிமித்தமாவது இதை நீக்கியிருக்கலாம்.

நிற்க.

இன்றைய நற்செய்தியில் உள்ள வார்த்தைகளை அப்படியே வைத்து நாம் புரிந்துகொள்ள முன்வருவோம்.

'இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று ஏழைகளுக்கு கொடுக்கலாம்'

இதை யூதாசு செய்த செயலோடு ஒப்பிட்டால்,

'இந்த இயேசுவை முப்பது வெள்ளிக்காசுகளுக்கு விற்று பாவிகளுக்காக அல்லது பாவத்திற்காக கொடுக்கலாம்'

என்று அழகாக பொருந்துகிறது.

ஆகையால்தான், இயேசுவும் உடனடியாக இதில் தன்னை உருவகிப்பதுபோல, 'ஏழைகள்-பாவிகள் என்றும் உங்களோடு இருப்பார்கள். நான் உங்களோடு இருக்கப் போவதில்லை' என்கிறார்.

யூதாசு ஏற்கனவே பணத்தை எடுப்பவனாகவும், இன்று கடவுளையே எடுப்பவனாகவும் இருக்கிறார். 

'எடுப்பவர்கள்' எப்போதும் ஆபத்தானவர்கள்.

இன்றைய நற்செய்தியில் மார்த்தா விருந்து 'கொடுக்கிறார்,' மரியா தைலம் 'கொடுக்கிறார்,' இயேசு இலாசருக்கு உயிர் 'கொடுக்கிறார்.' ஆனால், யூதாசு பணத்தை 'எடுக்கிறார்,' யூதர்கள் இலாசரின் உயிரை 'எடுக்கின்றனர்.'

எடுப்பவர்களைப் பொறுத்தவரையில் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் ஒரு விலைக்குறிப்பு உண்டு. எல்லாவற்றையும் இவர்கள் இக்கண்கள் கொண்டே பார்ப்பார்கள். பார்ப்பதோடல்லாமல் அதை அப்படியே அவர்கள் தங்களுக்கென ஆக்கிக்கொள்ளவும் நினைப்பார்கள்

நம் வாழ்க்கையை 'தைலம்' என வைத்துக் கொள்வோம். அது எப்படி இருக்க வேண்டும்? கடவுளின் காலடியில் ஊற்றப்பட்டு வீடு முழுவதும் மணம் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், பல நேரங்களில் யூதாசு போல நாம் அதைக் கணக்கிட்டு கணக்கிட்டு வாழ்கிறோம். அவ்வகை மனநிலை நம் ஏழ்மை நிலையை - வெறுமை நிலையை - அதிகரித்துவிடும். ஆகையால், 'ஏழைகள் என்றும் உங்களோடு இருப்பார்கள்.'

இந்தத் தைலம் - அது இயேசுவாக இருந்தாலும், நம் வாழ்வாக இருந்தாலும் - விற்கப்படுவது தவறு!


Saturday, April 9, 2022

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை

ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

I. எசாயா 50:4-7 II. பிலிப்பியர் 2:6-11 III. லூக்கா 22:14 - 23:56

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை

செல்டிக் மரபில் ஒரு பறவையைப் பற்றிய புனைகதை ஒன்று உண்டு. அந்தப் பறவை தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறைதான் பாடும். அது அந்த ஒற்றைப் பாடலைப் பாடும்போது அப்பாடல் உலகில் மற்ற எந்த உயிர்கள் பாடும் பறவையைவிட மிக இனிமையாக இருக்கும். தன்னுடைய கூட்டை விட்டுப் புறப்படும் நாளிலிருந்து இது முள் மரத்தைத் தேடும். தேடிக் கண்டுபிடிக்கும் வரை அது ஓயாது. அப்படிக் கண்டுபிடித்த அந்த மரத்தின் முட்கள் நிறைந்த கிளைகளுக்குள் தன்னையே நுழைத்துக்கொண்டு, அம்முட்களிலேயே மிகக் கூர்மையான முள்ளின்மேல் மிகவும் வேகமாக மோதும். இரத்தம் பீறிட்டு அதன் துன்பம் எல்லை மீறிப் போகும் போது கத்தி ஓலமிடும். அந்த ஓலம் வானம்பாடியின் குரலைவிட இனிமையாக இருக்கும். ஒரு நொடி உலகமே அந்தப் பாடல் முன் உறைந்து நிற்கும். கடவுள் வானத்திலிருந்து புன்னகை பூப்பார். மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - இப்படி முடிகிறது அந்தப் புனைகதை.

நாசரேத்து என்ற கூட்டிலிருந்து வெளியேறிய இயேசு என்னும் பறவை தன் சிலுவை மரத்தையும், ஆணிகளையும், முள்முடியையும் தேடி எருசலேமுக்குள் நுழைகிறது. எவ்வளவோ முறை எருசலேமுக்குள் நுழைந்தவர் மீண்டும் நாசரேத்து திரும்பினார். ஆனால், இந்த முறை அப்படி அல்ல. இதுவே இறுதி முறை. அவர் சிலுவையில் மோதிக் கொண்டு, ஆணிகளில் தொங்கியபோது அவர் எழுப்பிய ஓலத்தால், சிலுவையில் அவர் விட்ட இன்னுயிரால் நாம் மிகப் பெரிய மீட்பைப் பெற்றோம். 

மிகச் சிறந்ததைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும்.

மிகவும் அழகானதைப் பெற வேண்டுமென்றால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை - இதுதான் ஆண்டவரின் திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு நமக்குத் தரும் செய்தியாக இருக்கிறது.

எப்படி?

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். எசா 50:4-7) தொடங்குவோம். எசாயா நூலில் உள்ள ஊழியன் பாடல்களில் இது மூன்றாவது. நான்காவது பாடல்தான் துன்புறும் ஊழியன் பாடல் என அழைக்கப்படுகிறது. அதை நாம் பெரிய வெள்ளியன்று வாசிப்போம். மூன்றாவது பாடல் இறைவனின் ஊழியனை நிராகரிக்கப்பட்ட இறைவாக்கினராகச் சித்தரிக்கிறது. இவர் தினமும் ஆண்டவருடைய குரலுக்குச் செவிசாய்க்கிறார். ஆகையால்தான் இவர் 'கற்றோனின் நாக்கை' அல்லது 'பண்பட்ட நாக்கைப்' பெற்றிருக்கின்றார். இவர் தினமும் 'நலிந்தோனை நல்வாக்கால் ஊக்குவிக்க வேண்டும்.' இதனால்தான் எசாயா அடிக்கடி நலிந்த இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதலின் செய்தியைத் தருபவராக இருக்கின்றார் (காண். எசா 40:1). இறுதியாக, மற்ற இறைவாக்கினர்களைப் போல இவர் ஆண்டவருக்குத் தன் காதுகளைத் திறந்து வைத்திருக்கின்றார். அவரின் குரலைக் கேட்டு அதை மக்களுக்கு எடுத்துரைக்கின்றார்.

இருந்தாலும், இந்தப் பணியாளர்-இறைவாக்கினர் நிரகாரிப்பையும் வன்முறையையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. யாருக்குக் கடவுளின் செய்தியை இவர் சொன்னாரோ அவர்களால் இவர் அடிக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாகின்றார். இதே மாதிரியான நிராகரிப்பை, வன்முறையை, அவமானத்தையே இஸ்ரயேலின் மற்ற இறைவாக்கினர்களும் எதிர்கொண்டார்கள்: எரேமியா (காண். எரே 11:18-22, 15:10-18, 20:1-10), எலியா (காண். 1 அர 19:1-2), ஆமோஸ் (காண். ஆமோ 7:10-13), மற்றும் மீக்கா (காண். மீக் 2:6-11). எசாயாவும் மற்ற இறைவாக்கினர்களும் தங்களுக்குத் துன்பம் நேர்ந்தாலும் தாங்கள் மேற்கொண்ட இறைவாக்கினர் பணியைத் திறம்படச் செய்தனர். தங்கள் பணிக்கான விலை தாங்கள் அனுபவித்த நிந்தையும் அவமானமும் இறப்புமாக இருந்தாலும் அவற்றுக்கான விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தனர். இவர்கள் இப்படித் தயாராக இருந்ததால்தான் கடவுளின் செய்தியை மக்கள் கேட்க முடிந்தது. இவர்களின் இந்த வலியிலும் இவர்களைத் தாங்கியது இவர்கள் கடவுளின் மேல் வைத்திருந்த நம்பிக்கையே. ஆகையால்தான், 'ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார். நான் அவமானம் அடையேன். என் முகத்தைக் கற்பாறையாக்கிக் கொண்டேன். இழிநிலையை நான் அடைவதில்லை' என்கிறார் எசாயா. 

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். பிலி 2:6-11) தொடக்ககாலத் திருஅவையின் மிக அழகான கிறிஸ்தியல் பாடல் ஒன்றை வாசிக்கின்றோம். கிறிஸ்துவின் மனுவுருவாதல் நிகழ்வு தொடங்கி, பிறப்பு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம், மாட்சி வரையிலான அனைத்து மறைபொருள்களையும் மிக அழகாக ஏறக்குறைய பன்னிரெண்டு வரிகளில் பாடலாக வடிக்கின்றார் பவுல். மேலும், இந்தப் பாடல் வெறும் கிறிஸ்தியல் பாடலாக இல்லாமல், இதன் வழியாக 'கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்' என்று பிலிப்பி நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார். இந்தப் பாடலைப் பொறுத்த வரையில் இயேசு அவரின் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவருடைய மனுவுருவாதலின்போது அவர் 'கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை' இழக்கின்றார். மனித உரு ஏற்றபோது அவர் 'இறைத்தன்மையை' வெறுமையாக்குகின்றார். சிலுவைச் சாவுக்குத் தன்னையே கையளிக்க கீழ்ப்படிதில் என்ற பெரிய விலையைக் கொடுக்கின்றார். அதற்கு அடுத்த நிகழ்பவை எல்லாம் - விண்ணேற்றம், மாட்சி, பெயர், மற்றவர்கள் மண்டியிடதல் - இவர் தான் கொடுத்த விலையினால் பெற்றுக்கொண்டவை. இறப்பை அழிப்பதற்கு இறப்பு என்ற நுகத்திற்குக் கீழ் தன் தலையைக் கொடுக்கின்றார் இயேசு. 

இப்பாடல் இயேசுவைக் கடவுளின் உண்மையான ஊழியராகவும், இறுதிவரை இறைத்திருவுளத்திற்கு கீழ்ப்படிந்திருந்தவராகவும், தான் கொடுத்த இறப்பு என்ற விலையின் வழியாக இறப்பைத் தோற்கடித்தார் எனவும் நமக்குச் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகமாக நாம் லூக்காவின் பதிவின்படி உள்ள இயேசுவின் பாடுகளின் வரலாற்றைக் கேட்டோம் (காண். லூக் 22:14 - 23:56). இங்கே நாம் வாசித்த கதை மாந்தர்களை ஆறு குழுக்களாகப் பிரித்துக்கொள்வோம்: (அ) இயேசுவின் சீடர்கள், (ஆ) இயேசுவின் எதிரிகள், (இ) இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கியவர்கள், (ஈ) இயேசுவுக்கு உதவியவர்கள், (உ) பார்வையாளர்கள், மற்றும் (ஊ) இயேசு. 

(அ) இயேசுவின் சீடர்கள் கொடுத்த விலை மிகக் குறைவு. ஏனெனில் யூதாசு பணம் பெற்றுக்கொண்டு இயேசுவைக் காட்டிக்கொடுக்கின்றார். பேதுரு மறுதலிக்கின்றார். சீடர்கள் இயேசுவைவிட்டு ஓடுகின்றனர். சீடத்துவம் என்னும் விலை கொடுக்க முடிந்தவர்களால் இறுதியில் இயேசுவுக்காக எந்த விலையும் கொடுக்க முடியவில்லை. ஆக, நிகழ்விலிருந்து தப்பி ஓடுகிறார்கள். (ஆ) இயேசுவின் எதிரிகளைப் பொறுத்தவரையில் இயேசு அவர்களின் கண்களில் விழுந்த தூசி, அவர்களின் செருப்புக்குள் நுழைந்த ஒரு கூழாங்கல். தூசியையும் கூழாங்கல்லும் அகற்றும் முயற்சியில் கண்களையும், காலையும் இழக்கத் தயாராகிறார்கள். இவர்கள் கொடுக்கின்ற விலை பொய். (இ) இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பளிப்பவர் நேரிடையாக பிலாத்தும் மறைமுகமாக ஏரோதும். பிலாத்து உரோமை ஆளுநர். இவர் நினைத்தால் இயேசுவை விடுவிக்கவும், தீர்ப்பிடவும் முடியும். சட்டத்தின் படி இயேசு குற்றமற்றவர் (காண். 23:15-16). ஆனால், சட்டத்திற்குக் கீழ்ப்படிவதைவிட யூதத் தலைவர்களுக்குக் கீழ்ப்படிவதைத் தெரிந்துகொள்கிறார். ஏனெனில், இயேசுவால் பிலாத்துக்கு ஒரு பயனும் இல்லை. ஆனால், தலைவர்களால் இவருக்குப் பயன் உண்டு. ஏனெனில், அவர்களை வைத்து இன்னும் பதவியில் உயர்ந்துகொள்ளலாம். பிலாத்தும் கீழ்ப்படிதலை விலையாகக் கொடுத்தார். ஆனால், அது சட்டத்திற்கான கீழ்ப்படிதல் அல்ல. மாறாக, யூதத் தலைவர்களுக்கான கீழ்ப்படிதல். (ஈ) சிலுவைப் பயணத்தில் இயேசுவுக்கு உதவிய சிரேன் ஊரானாகிய சீமோன், ஒப்பாரி வைத்த பெண்கள், நல்ல கள்வன், அரிமத்தியா நகர் யோசேப்பு, கலிலேயப் பெண்கள் ஆகியோர் இயேசுவுக்காக வீதிக்கு வருகின்றனர், மற்றவரைக் கடிந்துகொள்கின்றனர், தங்கள் பொருளையும், ஆற்றலையும், நற்பெயரையும் இழக்க முன் வருகின்றனர். (உ) பார்வையாளர்கள். 'நமக்கு நடக்கும்வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்ற நிலையில் நடக்கின்ற எல்லாவற்றையும் இவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அதிகபட்சம் இவர்களின் இழப்பு நேர இழப்பு மட்டுமே. மற்றும் (ஊ) இயேசு - இவர் தன்னுடைய சீடர்கள், தன் எதிரிகள், தனக்குத் தீர்ப்பிட்டோர் என்ற மூன்று குழுவிற்கு எதிர்மாறாக இருக்கிறார். மற்றவர்கள் தங்கள் கீழ்ப்படிதல் வழியாகத் தர முடியாத விலையை இயேசு தருகின்றார். இவருடைய இந்த விலை, 'இன்றே பேரின்ப வீட்டின் கதவுகளைத் திறந்துவிடுகிறது.' 

இயேசுவின் சீடர்களும், எதிரிகளும், அவருக்குத் தண்டனைத் தீர்ப்பளித்தவர்களும், பார்வையாளர்களும் அளித்த விலை குறைவு. மனம் மாறிய பேதுரு, இயேசுவுக்கு உதவியவர்கள் போன்றோர் கொஞ்சம் கூடுதலாக விலை கொடுத்தனர். ஆனால், இயேசு ஒருவரே மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது - அவருடைய உயிரை இழக்கின்றார். அந்த உயிரை இழக்க அவர் கொடுக்கும் விலை தந்தையின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிதல். இவர் இந்த விலையைக் கொடுக்கத் தயாராக இருந்தார்: 'தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும், உன் விருப்பப்படி அல்ல. உம் விருப்பப்படியே நிகழட்டும்' (காண். லூக் 22:42). 

ஆக, இயேசுவின் பாடுகள் நிகழ்வில் மிக உயர்ந்த விலையைக் கொடுத்த இயேசுவே மிக உயர்ந்ததைப் பெறுகின்றார். இயேசுவின் இறப்பைக் காண்கின்ற நூற்றுவர் தலைவர், 'இவர் உண்மையாகவே நேர்மையாளர்' (காண். 23:47) என்று சான்று பகர்கிறார்.

இறுதியாக,

தவக்காலத்தின் இறுதி நாள்களில் இருக்கிறோம். இயேசு எருசலேம் நுழைந்த இந்நிகழ்வோடு இணைந்து நாமும் புனித வாரத்திற்குள் நுழைகின்றோம். ஒவ்வொன்றிற்கும் ஒரு விலை இருக்க, நான் மலிவானவற்றிற்கு என்னையே விற்கிறேனா? அல்லது மிகச் சிறந்தவற்றுக்காக இழக்கிறேனா? என்ற கேள்வியைக் கேட்போம்.

நம் ஒறுத்தல் முயற்சிகள் வழியாக, இறைவேண்டல் வழியாக, பிறரன்புச் செயல்கள் வழியாக நாம் நம் வாழ்வின் பக்குவத்திற்கான, பண்படுத்துதலுக்கான விலையைக் கொடுத்துவந்திருக்கிறோம். இவற்றையும் தாண்டி நாம் பெற வேண்டியது எது? அதற்கு நான் தரும் விலை என்ன?

இயேசுவின் எருசலேம் பயணத்திற்குக் கழுதை கொடுத்தவர்கள் சிறிய நிலையில் தங்களையே இழக்க முன்வருகிறார்கள்.

அவரை வெற்றி ஆர்ப்பரிப்புடன் வரவேற்று 'ஓசன்னா' பாடியவர்கள், வாடகைக் கழுதையில் வந்த தங்கள் இறுதி நம்பிக்கையை வரவேற்கின்றனர். தங்கள் ஆற்றலை, நேரத்தை இழக்க முன்வருகிறார்கள்.

நாம் வாழ்கின்ற எந்த அழைப்பு என்றாலும் சரி - திருமணம், குருத்துவம், துறவறம் - எல்லா இடத்திலும் சிலுவை உண்டு. இந்தச் சிலுவையை கொல்கொதா வரை சுமக்க வேண்டும். நாம் வழியில் விழுவோம். பின் எழுவோம். வலியின் வழியாக வாழ்வு பெறுவோம்.

மிகச் சிறந்ததைப் பெற மிகப் பெரிய வலியை அனுபவிக்க வேண்டும் - எசாயா அவமானத்தையும், இயேசு இறப்பையும்.

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு. மிகச் சிறந்தவற்றின் விலை மிகப் பெரியதே.

இதை எசாயாவும், இயேசுவும் உணர்ந்தனர் - நீங்களும் நானும்?