Friday, July 30, 2021

புனித இனிகோ

இன்றைய (31 ஜூலை 2021) திருநாள்

புனித இனிகோ

'மாஜிஸ்' – 'ஆத் மெயோரெம் தெய் க்ளோரியாம்' – 'இறைவனின் அதிமிகு மகிமைக்கே' என்னும் வாக்கியத்தை தன் வாழ்வாக்கி, தான் தோற்றுவித்த 'இயேசு சபையின்' இலக்கு வாக்கியமாக நிர்ணியத்துச் சென்ற, லொயோலா நகர் புனித இஞ்ஞாசியாரின் (இனிகோ) திருநாளை இன்று கொண்டாடுகின்றோம்.

'மாஜிஸ்' என்ற ஒற்றைச் சொல்லை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இது வெறும் வார்த்தையல்ல. இது ஒரு தத்துவம். கிறிஸ்துவுக்காக அதிகம் செய்வது. அப்படிச் செய்வது என்றால் மற்றவர்களுக்கு அதிகம் செய்வது. இது ஒருவரை உந்தித் தள்ளக் கூடிய எந்திரம், மந்திரம். கிறிஸ்துவை மையமாக வைத்து உருவாகவிருக்கும் ஒரு சமூகத்திற்கான முதற்படி.

'புனித இஞ்ஞாசியாரின் ஆன்மிகப் பயிற்சிகளில்' தியானம் செய்பவர் தன்னையே இப்படிக் கேட்பார்: 'நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்தேன்? கிறிஸ்துவுக்காக என்ன செய்கிறேன்? கிறிஸ்துவுக்காக நான் என்ன செய்ய வேண்டும்?' இனிகோவைப் பொருத்தவரையில் ஒருவர் எந்த அளவுக்குக் கிறிஸ்துவை அறிகிறாரோ, அந்த அளவுக்கு அவர் கிறிஸ்துவை அன்பு செய்வார், அந்த நெருக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுவார். பயிற்சிகள் முழுவதும் ஒருவர் கேட்கக் கூடிய வரமும் இதுவே: கிறிஸ்துவை இன்னும் நெருக்கமாகப் பின்பற்றுவது. அல்லது கடவுளுக்கு உகந்ததைச் செய்வது. நாம் எதற்காகப் படைக்கப்பட்டோமோ அதை அடையும் வரை நாம் ஓய்ந்துவிடக் கூடாது என்பது இனிகோவின் அறிவுரை. 'மாஜிஸ்' (இன்னும் கொஞ்சம் அல்லது இன்னும் மேலாக) என்பது ஆன்மிகப் பயிற்சிகளில் அடிக்கடி வருகின்ற ஒரு வார்த்தை.

இன்று மேலாண்மையியலில் தலைமைத்துவப் பாடமாகவும் இது கருதப்படுகிறது.

'இன்னும் கொஞ்சம்' எக்ஸ்ட்ரா செய்வதில்தான் நம் வாழ்க்கையும் ஆன்மிகமும் அடங்கியுள்ளது. 'இன்னும் கொஞ்சம்' என்று நாம் நடக்க, நடக்க பாதை விரியும் என்பதுதான் வாழ்வியல் எதார்த்தம்.

'இன்னும் கொஞ்சம்' நடக்க வேண்டும் எனில் நமக்கு முதலில் தேவை 'கட்டின்மை.' நம் ஆன்மிக வாழ்க்கை இந்த ஒற்றைச் சொல்லில் கட்டப்பட்டுள்ளது என்கிறார் இனிகோ. கட்டின்மை அடையும் ஒருவரே எளிதில் எதையும் தேர்ந்து தெளிய முடியும். அல்லது அவர் தன் உடல்சார் அல்லது உறவுசார் கட்டுக்களுக்குக் கட்டுப்பட்டே முடிவுகள் எடுப்பார்.

கடவுளை அனைத்திலும் நாம் காண வேண்டும் எனில் நாம் கட்டின்மையோடு இருக்க வேண்டும். கட்டின்மையோடு இருக்க நம் உளத்தை அவரிடம் சராணதி ஆக்க வேண்டும். நம்மிடம் இருக்கும் அனைத்தையும், நம்முடையது என அழைக்கும் அனைத்தையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

'எடுத்துக் கொள்ளும் ஆண்டவரே! என் கட்டின்மை, என் நினைவு, என் புரிதல், என் உளம், என்னிடம் இருக்கும் அனைத்தையும், நான் உடைமையாக்கிய அனைத்தையும் எடுத்துக்கொள்ளும்! இவை அனைத்தும் நீர் எனக்குக் கொடுத்தவையே! உம்மிடமே அவற்றை நான் ஒப்படைக்கிறேன்! அனைத்தும் உம்முடையதே! உம் திருவுளப்படியே அவற்றைப் பயன்படுத்தும். உம் அன்பையும் அருளையும் எனக்குத் தாரும்! அதுவே எனக்குப் போதும்!' – புனித இனிகோ

Thursday, July 29, 2021

அவர்கள் தயங்கினார்கள்

இன்றைய (30 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:54-58)

அவர்கள் தயங்கினார்கள்

இயேசு தன் சொந்த ஊரில் நிராகரிக்கப்படும் நிகழ்வை மூன்று ஒத்தமைவு நற்செய்தியாளர்களும் நேரிடையாகவே பதிவு செய்கின்றனர். யோவான், இந்நிராகரிப்பை உருவகமாக எழுதுகின்றார்: 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' (காண். யோவா 1:11).

இயேசுவின் இருத்தலும் இயக்கமும் அவருடைய சொந்த ஊராரிடம் ஒரே நேரத்தில் இரண்டு வகை உணர்வுகளை எழுப்புகின்றன: ஒன்று, வியப்பு. இரண்டு, தயக்கம். இயேசுவின் போதனையைக் கண்டு வியப்படைகின்றனர். போதித்தல் என்பது ரபிக்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று என்ற பின்புலத்தில், ரபி அல்லது ரபி பள்ளியின் பின்புலம் எதுவும் இல்லாமலேயே இயேசு போதிப்பது அவர்களுக்கு வியப்பு தருகின்றது. அந்த வியப்பை அவர்கள் தயக்கமாக மாற்றுகின்றார். 'என்ன இருந்தாலும் இவர் ...' என்று ஒருவர் சொல்லத் தொடங்க, ஒவ்வொருவராக அதைத் தொடர்கின்றனர்.

போதகராகவே ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்ற மக்கள் தன்னைக் கடவுளாக அல்லது கடவுளின் மகனாக ஏற்றுக்கொள்வார்களா என்ற எண்ணத்தில் இயேசு வல்ல செயல்கள் எதுவும் அங்கு செய்யவில்லை. மாற்கு நற்செய்தியாளர், இதையே, 'வல்ல செயல்கள் செய்ய இயலவில்லை' என்று பதிவு செய்கின்றார்.

'இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?' என்ற கேள்விக்கு அவர்களிடம் விடையில்லை. அவர்கள் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து, 'இறைவனிடமிருந்து' என்று சொல்ல இயலாதவாறு, அவர்களுடைய முற்சார்பு எண்ணம் அவர்களைத் தடுத்தது.

நிராகரிக்கப்படுதல் ஒரு கொடுமையான உணர்வு.

ஊராரின் மனநிலை இயேசு தங்களைப் போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறது.

அடுத்தவரும் என்னைப் போலவே இருந்துவிட்டால் எனக்கு நெருடல் இல்லை. என்னைவிட அவர் சிறந்தவர் என்ற எண்ணம் வரும்போதுதான் தயக்கம் வருகிறது.


Wednesday, July 28, 2021

புனித மார்த்தா

இன்றைய (29 ஜூலை 2021) திருநாள்

புனித மார்த்தா

நீர் இங்கே இருந்திருந்தால்

புதிய ஏற்பாட்டுக் கதைமாந்தர்களில் ஒருவரான பெத்தானியா ஊர் மார்த்தாவின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். புனித நாடுகள் பயணத்தின்போது இன்றும் பெத்தானியாவுக்குச் செல்பவர்கள் அந்த இல்லத்தில் மார்த்தா இயேசுவிடம் புலம்பியதை நம்மால் கேட்க முடிகிறது. அதே புலம்பலோடு சேர்த்து, 'ஆண்டவரே நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்' என்ற நம்பிக்கை வார்த்தையையும் நாம் அங்கே கேட்கலாம்.

மார்த்தா என்னும் கதைமாந்தரை நாம் லூக்கா நற்செய்தியிலும், யோவான் நற்செய்தியிலும் சந்திக்கின்றோம். லூக்கா நற்செய்தியாளர், மார்த்தாவை விருந்தோம்பல் செய்பவராகவும், யோவான் நற்செய்தியாளர், நம்பிக்கை அறிக்கை செய்பவராகவும் முன்மொழிகின்றனர்.

ஒரு வீட்டில் முதலில் மகள் பிறந்து அடுத்தடுத்து இன்னொரு மகளோ அல்லது மகனோ பிறந்தால், அந்த மகளுக்கும் மகனுக்கும் இரண்டு அன்னையர் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில், அக்காவும் அங்கே அன்னையாகவே இருக்கின்றாள் மற்ற குழந்தைகளுக்கு. மற்ற குழந்தைகளுக்குக் கிடைக்கும் பாக்கியம் அது. ஆனால், அக்காக்கள் அலட்டிக்கொள்வதே இல்லை – அன்னையரைப் போல! அன்னை இல்லாத இடத்தையும் கூட அக்காக்கள் நிரப்பி விடுவார்கள். அம்மா குழந்தைகளை வீட்டில் விட்டு நிம்மதியாக வெளியே செல்லக் காரணம் அங்கே அக்கா இருப்பதால்தான்.

இப்படிப்பட்ட ஓர் அக்காவாகத்தான் இருக்கிறார் மார்த்தா.

மார்த்தா, மரியா, இலாசர் குடும்பத்தில் இவர்களுடைய பெற்றோர்கள் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம். பெற்றோர் இல்லாத நிலையை தங்கையும் தம்பியும் உணராதவாறு வளர்த்திருப்பார் அக்கா மார்த்தா.

'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா?' என இயேசுவிடம் முறையிடுகின்றார் மரியா.

அக்காக்கள் தங்கள் குறைகளை ஆண்டவரிடம் மட்டுமே தெரிவிப்பார்கள். அக்காக்களும் அண்ணன்களும் பல நேரங்களில் தனியாகவே இருக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஏனெனில், அவர்கள் சொல்வது தங்கையருக்கும் தம்பிகளுக்கும் புரியாது. தனக்கு மேல் முறையிடுவதற்கு பெற்றோர்களும் இல்லாத நிலையில் தங்கள் துக்கங்களை அவர்களே விழுங்கித் தண்ணீர் குடித்துக்கொள்கின்றனர். 'அதெல்லாம் ஒன்னுமில்லமா! ஒன்னுமில்லப்பா!' என்று தங்கை, தம்பியிடம் சொல்லிவிட்டு மெதுவாக ஒதுங்கிக்கொள்வார்கள். தன் வாழ்வில் தனிமைக்குப் பழக்கப்பட்ட மார்த்தா, இயேசுவும் தன் தங்கையும் இருக்கின்ற அந்தப் பொழுதிலும் தனிமையை உணர்கின்றார். சிலரை வாழ்க்கை அப்படித்தான் மாற்றிவிடுகிறது. சிறிய வயதில் ஞானிகளாக!

தான் தனியாக விடப்பட்டாலும் தன் வேலையைச் சரியாகச் செய்கின்றார் மார்த்தா. விருந்தோம்பலில் கருத்தாயிருக்கின்றார். விருந்தோம்பல் ஒரு கலை. விருந்துக்கு அழைப்பவர்களில் பல வகை உண்டு. சில வகையினர் தங்கள் இருத்தலை மற்றவர்களுக்குக் காட்டுவதற்கு அழைப்பர். சிலர் விருந்தோம்பிவிட்டு வந்தவரைக் காயப்படுத்தி அனுப்புவர். சிலர் இரக்கம் காட்டுவதற்காக விருந்தோம்பல் செய்வர். வெகு சிலர் மட்டுமே விருந்தோம்பலில் உரிமை கொண்டாடுவர். மார்த்தா கடைசி வகை. அதனால்தான், தன் மனத்தில் உள்ளதை அப்படியே இயேசுவிடம் கொட்டுகின்றார்.

'மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால், தேவையானது ஒன்றே. மரியா நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்!' என்று சீரியஸாகப் பேசுகிறார் இயேசு.

அதைக் கேட்ட மார்த்தா, 'சரி! சரி! நல்ல பங்கெல்லாம் இருக்கட்டும்! வாங்க சாப்பிடலாம்!' என்று சாப்பிட அழைத்திருப்பார் அவ்விருவரையும். தங்கள் தங்கையரும் தம்பியரும் பாராட்டப்படுவதையே அக்காக்கள் விரும்புவர். தன் இருத்தலும் பணியும் அங்கே இயேசுவால் அங்கீகரிக்கப்படவோ, பாராட்டப்படவோ இல்லை என்றாலும் மார்த்தா அதைப் பொருட்படுத்தவில்லை! அக்காக்கள் அப்படியே! தாங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் சற்றே புன்முறுவல் பூத்து தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்வர்.

சில மாதங்கள் கழிய, இலாசர் உடல்நலக்குறைவால் அவதியுறுகின்றார். 'ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான்' என்று இயேசுவுக்குச் செய்தி அனுப்புகின்றனர். இயேசு தங்கள் இல்லத்தில் விருந்துக்கு வந்தாலும், அவர் தங்கள் நண்பர் என்றாலும், அவர்மேல் வைத்திருந்த, 'ஆண்டவரே!' என்ற மரியாதையை அவர்கள் விட்டுவிடவில்லை. 'பழகப் பழகப் பாலும் புளிக்கவில்லை' அங்கு!

இயேசு வேண்டுமென்றே தாமதிக்கின்றார். கடவுளை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது!

இலாசர் இறந்து நான்கு நாள்கள் ஆகின்றன. இளவயது இறப்பு என்பதால் இன்னும் வீட்டில் சோகம் அப்பிக்கொண்டிருக்கின்றது. இன்னும் நிறையப் பேர் வந்து செல்கிறார்கள். அவர்களுள் ஒருவராக இயேசுவும் வர, அவரை எதிர்கொண்டு செல்கின்ற மார்த்தா, 'ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான். இப்போது கூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்' என்று தன் நம்பிக்கையை அறிக்கையிடுகின்றார்.

'உன் சகோதரன் உயிர்த்தெழுவான்' என்று இயேசு சொல்ல, 'அவன் இறுதிநாளில் உயிர்த்தெழுவான் என்று எனக்குத் தெரியும்' என்று மார்த்தா இயேசுவைப் புரிந்துகொள்ளாமல் பேசுகிறார். இது நற்செய்தியாளர் பயன்படுத்தும் முரண் உத்தி.

இந்த இடத்தில்தான், 'உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே' என்ற 'நானே' வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. 'ஆம்! ஆண்டவரே!' என்று தன் நம்பிக்கையை மீண்டும் அறிக்கையிடுகின்றார். மேலும், இயேசு வந்த செய்தியை, 'போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்' என்று மரியாவிடம் காதோடு காதாய்ச் சொல்கின்றார். 'போதகர்' என்று மரியா இயேசுவை அழைத்ததால் என்னவோ அவர் அப்படியே அவரை அறிமுகம் செய்கின்றார்.

மரியா அழுவதைக் கண்ட இயேசு, தானும் அழுகின்றார்.

மார்த்தா அழவில்லை. அக்காக்கள் அழுவதில்லை. இறப்புகளும் இழப்புகளும் அவர்களைப் பெரிதாய்ப் பாதிப்பதில்லை. அதில் அவர்கள் கடவுளையும் மிஞ்சியவர்கள்.

'அவனை எங்கே வைத்தீர்கள்?' என்று கேட்டு அங்கே செல்கின்றார் இயேசு.

'கல்லை அகற்றுங்கள்!'

'ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று. நாற்றம் அடிக்குமே!' என்கிறார் மார்த்தா. மிகவும் எதார்த்தமான விடை. ஒரு பக்கம் இறைநம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் இன்னொரு பக்கம் மனித வாழ்வின் எதார்த்தை அறிந்தவராகவும் அதை ஏற்றுக்கொண்டவராகவும் இருக்கிறார் மார்த்தா.

இதுவே மார்த்தா சொன்ன இறுதி வாக்கியம். எதார்த்தமான வாக்கியம்.

விருந்தோம்பல், நம்பிக்கை அறிக்கை, எதார்த்தமான வாழ்வியல் அணுகுமுறை என்று வாழ்ந்த மார்த்தாவின் வாழ்வும் வார்த்தைகளும் நமக்குச் சவால்களே!

இன்றைய நாளில் நம் அக்காக்களையும் அண்ணன்களையும் நினைவுகூருவோம்.

அக்காக்கள் அம்மாக்களாகவும், அண்ணன்கள் அப்பாக்களாகவும் மாறுகின்ற குடும்பங்களில் இன்றும் மார்த்தா உயிருடன் இருக்கிறார்.


Tuesday, July 27, 2021

முழுமையாக முதன்மையாக

இன்றைய (28 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:44-46)

முழுமையாக முதன்மையாக

விண்ணரசு பற்றிய உவமைகளைத் தொடர்கின்ற இயேசு, விண்ணரசை புதையல் மற்றும் முத்துக்கு ஒப்பிடுகின்றார்.

நிலத்தில் புதையல் இருப்பதைக் காண்கிறார் ஒருவர். புதையலை அப்படியே எடுத்துச் செல்வதை விடுத்து அதை மீண்டும் புதைத்துவிட்டுச் சென்று, தமக்குள்ள அனைத்தையும் விற்று நிலத்தை வாங்கிக்கொள்கின்றார். இங்கே நமக்கு ஒரு கேள்வி எழலாம். 'புதையலை மட்டும் அவர் எடுத்துச் சென்றிருந்தால் என்ன?' இயேசுவின் சமகாலத்தில் நிலங்களில் நிறையப் புதையல்கள் கண்டெடுக்கப்பட்டன. அதாவது, நாடுகடத்தல், போர், வன்முறை, திருட்டு ஆகியவற்றுக்கு அஞ்சிய மக்கள் தங்களிடம் உள்ள பணம் (நாணயம்) மற்றும் அணிகலன்களைப் பானையில் வைத்து நிலத்தில் புதைப்பது வழக்கம். அப்படிப் புதைக்கப்பட்ட பல காலப்போக்கில் மறக்கப்பட்டன. அல்லது மறைந்து போயின. நிலத்தை உழும்போது புதையல்கள் பெரும்பாலும் கண்டெடுக்கப்பட்டன. நிலத்தை உழுதுகொண்டிருக்கின்ற நபரின் ஏரில் புதையல் தென்பட்டவுடன், அவர் அதை எடுத்துக்கொண்டால் அது திருட்டு என்று கருதப்படும். ஏனெனில், நிலம் வேறொருவருக்கு உரியது. ஆக, உழுபவர் என்ன செய்கிறார் தன்னிடம் உள்ள அனைத்தையும் விற்று அந்த நிலத்தையும், பின்னர் அந்தப் புதையலையும் சொந்தமாக்கிக் கொள்கின்றார்.

ஆக, இறையாட்சி என்பது திருடப்பட வேண்டியது அல்ல. மாறாக, உரிமையாக்கிக்கொள்ள வேண்டியது. அதை உரிமையாக்கிக் கொள்ள ஒருவர் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாக இழக்க முன்வர வேண்டும். நிலத்தை உழுபவர் அந்த நிலத்தை உரிமையாக்க வேண்டும் என்றால் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும்.

இரண்டாவது, விலையுயர்ந்த முத்து.

முத்துக்களைச் சேகரிப்பதையும் விற்பதையும் சில வணிகர்கள் முன்னெடுத்தனர். நல்முத்துக்களை தேடிச் செல்கின்ற வணிகர் அதைக் கண்டவுடன், தன்னிடம் உள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக்கொள்கின்றார். அதாவது, மற்ற முத்துக்களை அவர் இழந்தால்தான் இந்த முத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த முத்து அவருக்கு மதிப்புக்குரியதாக இருக்கும். ஆக, மதிப்புக்குரிய ஒன்றைத் தனதாக்கிக் கொள்ளவும், முதன்மையாக்கிக்கொள்ளவும், தன்னுடைய மற்ற முதன்மைகளை அவர் இழக்க முன்வர வேண்டும்.

ஆக, விண்ணரசு முழுமையாக உரிமையாக்கப்படவும், முதன்மையானதாகத் தெரிந்துகொள்ளப்படவும் வேண்டும்.

அப்படி என்றால், பாதிப் பாதியான அணுகுமுறையும், பலவற்றில் ஒன்ற என்ற மனநிலையும் இறையாட்சிக்கு ஏற்ற மனநிலை அல்ல.

முழுமையாக உரிமையாக்கிக் கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? ஒருவேளை புதையல் வெறும் செல்லாக் காசுகளாக இருந்தால் என்ன ஆவது? என்ற பயம்.

முதன்மையாக உரிமையாக்கிக்கொள்ள நமக்குத் தடையாக இருப்பது எது? மதிப்புக்குரிய முத்தைத் தேடிச் செல்லாமல் இருப்பதே போதும் என்ற தேக்க மனநிலை கொள்வது. அல்லது மதிப்புக்குரிய ஒன்றைக் கண்டாலும் மதிப்பற்றவற்றை இழக்கும் ஆர்வமும் துணிவும் இல்லாமல் இருப்பது.

ஆனால்,

நாம் விட்ட வாய்ப்புகளை எவரோ எங்கோ தனதாக்கிக்கொள்கிறார் என்பதே உண்மை.

இன்றும், முழுமையாகவும் முதன்மையாகவும் இறையாட்சி உரிமையாக்கிக்கொள்ளப்படுகிறது.

Monday, July 26, 2021

விளக்கிக் கூறும்

இன்றைய (27 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:36-43)

விளக்கிக் கூறும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் வீட்டுக்குள் நடக்கும் நிகழ்வு ஒன்றை மத்தேயு பதிவு செய்கின்றார்.

மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வருகின்றார் இயேசு. வீட்டுக்கு வருதல் என்பது மிக முக்கியமான நிகழ்வு. மார்ட்டின் ஹைடக்கர் என்ற மெய்யியலாளர், 'வீட்டுக்கு வருதல்' (homecoming) என்பது ஒவ்வொரு மனிதருடைய வாழ்விலும் நடக்க வேண்டிய மிக முக்கியமான நிகழ்வு என்கிறார். எடுத்துக்காட்டாக, லூக்கா 15இல் நாம் காணும் இளைய மகன் தூர நாட்டில் அமர்ந்து, 'என் தந்தையின் இல்லத்தில் ...' என்று யோசித்துக்கொண்டிருக்கின்றார். 'அவர் அறிவு தெளிந்து' என்று பதிவு செய்கின்றார் லூக்கா. ஆக, அறிவு தெளிந்தவுடன் இளைய மகன் அந்த நொடியே தன் இல்லம் வந்துவிடுகின்றார். அதாவது, அவருடைய மனம் அந்த நொடியே இல்லத்திற்கு வந்துவிடுகின்றது. அதற்குப் பின்னர் வருவது அவருடைய உடல்தான்.

வீட்டுக்கு வருதல் என்பது இயேசு மற்றும் சீடர்களுடைய வாழ்வில் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

(அ) அவர்கள் பொது வாழ்க்கையிலிருந்து தனி வாழ்க்கைக்கு வருகின்றனர். அங்கே யாரும் யாரையும் யாருக்கும் நிரூபிக்கத் தேவையில்லை. நம் வீட்டிற்குள் நாம் நாமாக இருக்கிறோம். நாம் அணியும் உடை, நாம் பேசும் பேச்சு, நாம் நடந்துகொள்ளும் முறை என எதைப் பற்றியும் நாம் யோசிக்கத் தேவையில்லை. நாம் இயல்பாக இருக்கிறோம் நம் வீட்டில்.

(ஆ) சீடர்கள் இயேசுவோடு உரையாடும் வாய்ப்பு பெறுகின்றனர். இந்த நிகழ்வைக் கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்போம். வீட்டிற்கு வருகின்றனர் இயேசுவும் சீடர்களும். இயேசு சற்றே ஓய்வாக சுவற்றில் சாய்ந்து அமர்கின்றார். வருகின்ற வழியில் வாங்கி வந்த மீன்களைப் பேதுரு அலசிக் கொண்டிருக்கின்றார். யோவான் அந்த வீட்டில் உள்ள விளக்குகளுக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டே, ஒரு விளக்கின் திரியை மாற்றுகின்றார். யூதாசு அன்றைய நாளின் வரவு செலவு பார்க்கின்றார். பிலிப்பு, 'இதோ வருகிறேன்!' என்று சொல்லிவிட்டுத் தன் நண்பர்களைச் சந்திக்கச் செல்கின்றார். மற்றவர்கள் இயேசுவைச் சுற்றி அமர்கின்றனர். விளையாட்டும் கேலியுமாகத் தொடங்கும் உரையாடல் கேள்வியாக முடிகிறது: 'நீர் சொன்ன உவமையின் பொருள் என்ன?'

(இ) விளக்கம் கேட்கவும் விளக்கம் பெறவும் அவர்களால் முடிகிறது. விளக்கம் கேட்டல் ஒரு கலை என்றால், விளக்கம் சொல்லுதலும் ஒரு கலை. அதாவது, கேட்பவரின் அறியாமையைக் குத்திக் காட்டாமல், கேட்பவரைக் காயப்படுத்தாமல் விளக்கம் சொல்லுதல் வெகு சிலரால் மட்டுமே முடியும். இயேசு அந்தக் கலையைக் கற்றவராக இருக்கின்றார். தன் சீடர்களைக் கடிந்துகொள்ளாமல் விளக்கம் தருகின்றார். இன்றைய முதல் வாசகத்தில், 'ஒருவன் தன் நண்பனிடம் பேசுவது போல ஆண்டவர் முகமுகமாய் மோசேயிடம் பேசுவார்' என எழுதுகின்றார் ஆசிரியர். ஏறக்குறைய அதே போன்ற பரிவர்த்தனை இங்கே நடந்தேறுகிறது.

இந்த வாசகம் நமக்குக் கூறும் செய்தி என்ன?

ஒன்று, 'நான் என் வீட்டுக்கு எப்போதெல்லாம் திரும்புகிறேன்?' வீட்டுக்குத் திரும்பும் ஒருவர்தான் தன் வேர்களோடு நெருக்கமாக இருக்க முடியும்.

இரண்டு, வாழ்வின் நிகழ்வுகள் எனக்குப் புரியாத புதிராக இருக்கும்போது, என் தனிமையில் இயேசுவிடம் நான் பகிர்ந்துகொள்ளத் தயாரா?

மூன்று, அறிநிலையில் பின்தங்கி இருப்போருக்கும், விளக்கம் தேவைப்படுவோருக்கும் நான் எப்படி அறிவு புகட்டுகிறேன்?


Sunday, July 25, 2021

உவமைகள் இன்றி

இன்றைய (26 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:31-35)

உவமைகள் இன்றி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மேலும் இரு உவமைகளை எடுத்தாளுகின்றார். கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு உவமைகளின் வழியாக விண்ணரசின் மறைபொருளை விளக்குகின்றார் இயேசு. இறுதியில், 'உவமைகள் இன்றி இயேசு மக்களோடு பேசியதில்லை' என நிறைவு செய்கின்றார் மத்தேயு.

உவமைகள் அல்லது கதைகளின் நோக்கம் காணக்கூடிய ஒன்றிலிருந்து காண இயலாத பொருளுக்கு, வாசகரை அல்லது கேட்பவரை அழைத்துச் செல்வதுதான். தன் சமகாலத்தவரின் அன்றாடப் பயன்பாட்டிலிருந்த பொருள்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து இயேசு உவமைகளை எடுத்தாளுகின்றார்.

கடுகு விதை விண்ணரசு பற்றிச் சொல்வது என்ன?

(அ) விண்ணரசு காண்பதற்கு மிகச் சிறிய அளவாக இருந்தாலும் அது பெரிய அளவில் வளரும்.

(ஆ) விதையைப் போல அது தன்னகத்தே ஆற்றல் கொண்டிருக்கிறது.

(இ) அது வளரும்போது அனைவரையும் தழுவிக்கொள்ளும்.

புளிப்பு மாவு விண்ணரசு பற்றிச் சொல்வது என்ன?

(அ) புளிப்பு மாவு பார்ப்பதற்கு சாதாரண மாவு போல இருந்தாலும் அது தன்னகத்தே ஆற்றல் கொண்டது.

(ஆ) புளிப்பு மாவு செயல்படத் தொடங்கியவுடன் அதன் ஓட்டத்தை யாராலும் நிறுத்த முடியாது.

(இ) புளிப்பு ஏறிய மாவிலிருந்து புளிப்புத் தன்மையை நீக்கவும் முடியாது.

இவ்வாறாக, விண்ணரசு மேல் நோக்கி வளரும் என்றும், சமமாக அனைத்திலும் கலக்கும் என்றும் சொல்கிறார் இயேசு.

நம் வளர்ச்சியும் இப்படித்தான் இருக்க வேண்டும்.

நம் வாழ்வில் நாம் மேல்நோக்கிய நிலையிலும், சமநிலையிலும் ஒருவர் மற்றவரோடு இணைந்திருத்தல் அவசியம். நம் வழியாகவே இறையரசு வளரும். இறையரசின் கடுகுவிதையாக, புளிப்பு மாவாக நாம்தான் செயல்படுகின்றோம்.

நாமே இறைவன் பயன்படுத்தும் கதைகள், உவமைகள்!

 

Saturday, July 24, 2021

மூத்தபெற்றோர் மற்றும் வயதுமூத்தோரின் நாள்

இன்றைய (25 ஜூலை 2021) திருநாள்

மூத்தபெற்றோர் மற்றும் வயதுமூத்தோரின் நாள்

இந்த ஆண்டு, இன்றைய நாள் கத்தோலிக்கத் திருஅவையின் முதன்மையான நாள். இயேசுவின் தாத்தா-பாட்டி என்னும் புனித சுவக்கின்-அன்னா ஆகியோரின் திருநாளை ஒட்டி வருகின்ற ஞாயிற்றுக்கிழமையை, 'உலக மூத்தபெற்றோர் மற்றும் வயதுமூத்தோரின் நாள்' என்று கொண்டாடுமாறு நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.

'நான் உங்களோடு என்றும் இருக்கிறேன்' என்ற தலைப்பில் அவர் வழங்கியுள்ள இன்றைய நாளுக்கான செய்தியின் பின்புலத்தில் நாம் இன்று சிந்திப்போம்.

'நான் உங்களோடு என்றும் இருக்கிறேன்' என்ற இவ்வாக்கியத்தை திருத்தந்தை மூன்று பொருள்களில் பயன்படுத்துகின்றார்: ஒன்று, ஆண்டவராகிய இயேசு தன் திருத்தூதர்களிடம் இறுதியாகச் சொன்ன இதே வார்த்தைகளை இன்று வயது முதிர்ந்த உங்களிடம் சொல்கின்றார் என்று வயது முதிர்ந்தவர்களுக்கு நம்பிக்கை தருகின்றார் திருத்தந்தை. இரண்டு, வயது முதிர்ந்த நிலையில் 'நான் உங்களோடு இருக்கிறேன்' என்று தன் வயது முதிர்ந்த நிலையை அறிக்கையிடுகின்றார். மூன்று, நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும், இந்தச் சமூகத்திற்கும் இதே செய்தியைத் தருகின்றீர்கள். ஏனெனில், உங்களது இருத்தல் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நிறையத் தேவை என்று பெரியவர்களின் இன்றியமையாத நிலையை நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார்.

இதை எழுதும் இந்த நேரத்தில் என் மனம் முழுவதும் என் அய்யாமை (அப்பாவின் அம்மா) நிறைந்திருக்கின்றார். அவர் தீவிரமான முருகன் பக்தர். இளவயதிலேயே தன் கணவனை இழந்தவர். தன் கஷ்டத்தில் தன் இரு மகன்களை வளர்த்தவர். இவருடைய கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சயர்ப்பட வைக்கும். தான் வேலை செய்வது மட்டுமல்லாமல், வேலைக்கு ஆள்களை அழைத்துச் செல்வது, அவர்களை வழிநடத்துவது, அவர்களை மேற்பார்வை செய்வது என்று அனைத்தையும் மிகவும் எளிதாகவும் தன்னார்வத்துடனும் செய்வார். ஒருமுறை நாயக்கர் ஒருவரின் வயலில் வேலை முடித்துவிட்டு, கூலி வாங்கும் நேரத்தில், 'இது போதுமா இலட்சுமி!' என நாயக்கர் கேட்க, 'போதும் என்றால் இதுவே போதும். போதாது என்றால் எதுவுமே போதாது!' என்றவர். இதுதான் இவருடைய ஆன்மிகம் என்று நான் கருதுகிறேன்.

இப்படியாக நம் ஒவ்வொருவருடைய தாத்தா-பாட்டியும் (அம்மா வழி), அய்யப்பா-அய்யாமையும் (அப்பா வழி) நம் நம்பிக்கை, தனிமனித உருவாக்கம், வாழ்வியல் அறநெறி ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாத்தா-பாட்டியர் மற்றும் வயது முதிர்ந்த இவர்கள் மூன்று நிலைகளில் நம் சமூகத்திற்கு உதவி செய்கிறார்கள் என்கிறார் திருத்தந்தை.

ஒன்று, கனவுகள்.

யோவேல் இறைவாக்கினர், 'முதியவர்கள் கனவு காண்பார்கள்' என்று முன்னுரைத்தார். முதியவரின் கனவுகள் இளைய தலைமுறையை வழிநடத்துகின்றன. வாழ்வின் நாள்கள் குறுகிய நிலையில் தாங்கள் கண்ட கனவு நனவாக வேண்டும் என்று அவர்கள் துடிக்கிறார்கள். அந்தக் கனவை சில நேரங்களில் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்கிறார்கள். கனவுகளே நம் நாள்களை நகர்த்துகின்றன.

இரண்டு, நினைவுகள்.

பெரியவர்களின் நினைவுகள் நமக்கு ஆச்சர்யம் தருகின்றன. நிகழ்காலத்தில் இருந்துகொண்டு, கடந்த காலத்தின் நினைவுகளை அசைபோட்டு, எதிர்காலம் நோக்கிப் பயணிப்பவர்கள் இவர்கள். 'நாங்கள் இப்படி இருந்தோம்' என்று அவர்கள் சொல்வது நம்மைப் பயமுறுத்த அல்ல. மாறாக, அந்தக் கஷ்டம் உங்களுக்கு இல்லாத நிலையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவே. தங்கள் ஊரைவிட்டுப் புலம் பெயர்ந்த நினைவுகள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த நினைவுகள், தங்கள் வாழ்வில் தாங்கள் எதிர்கொண்ட எதிர்மறையான நிகழ்வுகள் என நிறைய நினைவுகளை அவர்கள் சுமந்து நிற்கிறார்கள்.

மூன்று, இறைவேண்டல்.

திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்கள் தான் திருத்தந்தை பணியைத் துறந்தபோது சொன்ன வார்த்தைகளை நாம் இங்கே நினைவுகூரலாம்: 'இளையோரின் பரபரப்பான செயல்களை விட, வயது முதிர்ந்தவர்களின் இறைவேண்டலே இவ்வுலகைப் பாதுகாக்கிறது.' தங்களின் தனிமையில், இயலாமையில், வயது முதிர்ந்தவர்களின் வாய் எதையோ முணுமுணுத்துக்கொண்டே இருக்கின்றது. சில நேரங்களில் அவர்கள் காக்கும் மௌனமும் ஒரு மொழியே.

நிற்க.

இன்றைய நாளை நாம் எப்படிக் கொண்டாடுவது?

(1) நம் மூத்தபெற்றோர் இன்று நம்மோடு இருந்தால் அவர்கள் அருகே அமர்ந்து அவர்களோடு சில நிமிடங்கள் செலவிடுவது.

(2) அவர்கள் இன்று நம் நினைவில் வாழ்ந்தால் அவர்களுடைய கல்லறை அல்லது நினைவிடத்திற்குச் செல்வது.

(3) அவர்கள் விட்டுச் சென்ற மதிப்பீடுகளை எண்ணிப் பார்ப்பது.

(4) இன்று நாமே மூத்தபெற்றோர் நிலையில் இருந்தால் நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளோடு உறவாடுவது.

(5) மூத்தவர்களை இன்று நாம் கண்டால் அவர்களுக்கு வணக்கம் சொல்வது.

(6) முதியோர் இல்லம் அல்லது மருத்துவமனை நமக்கு அருகில் இருந்தால் அங்கு சென்று யாராவது ஒருவரைச் சந்தித்து அவருடன் சற்றுநேரம் உரையாடுவது. 'வயது முதிர்ந்தவர்களோடும் குழந்தைகளோடும் உரையாடும்போது நம் மனம் நிறைய பக்குவப்படுகிறது' என்பது நிதர்சனமான உண்மை. நமக்கு அருகில் வயது முதிர்ந்த ஆயர்கள், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், அருள்சகோதரர்கள் இருந்தால் அவர்களைத் தேடிச் சென்று அவர்களோடு சில நிமிடங்கள் உரையாடுவது.

(7) நம் வாழ்வில் இன்று நாம் எந்த நிலையில் இருந்தாலும் - குழந்தை, இளவல், பெரியவர், மூத்தவர் – வாழ்க்கை என்ற கொடைக்காக நன்றி கூறுவது.

(8) வாழ்வின் நிலையாமையை ஏற்றுக்கொள்வது.

(9) நம் வாழ்வின் மகிழ்ச்சியைக் கெடுக்கும் தேவையற்ற பழக்கங்களை, உணர்வுகளை, செயல்களைக் கைவிட உறுதி எடுப்பது. 'தன் தாத்தா-பாட்டியை நினைவுகூர்ந்து, அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று செயல்படும் அருள்பணியாளர் கண்ணியமாக இருப்பார்' என்பது அமெரிக்காவின் ஒரு மறைமாவட்டப் பத்திரிக்கையில் வாசித்த ஒன்று.

(10) இறுதியாக, நம் திருத்தந்தை அவர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்வது. இன்று, முதியவர்கள் தேவையற்ற சுமைகளாகக் குடும்பங்களிலும் சமூகத்திலும் பார்க்கப்படுகின்றனர். இந்த நிலை மாறவும், மனித மாண்புடனும் தன்மதிப்புடனும் அவர்கள் நடத்தப்படவும் நாம் முயற்சிகள் எடுப்பது.

மூத்தபெற்றோர் மற்றும் வயது முதிர்ந்தோர் நாள் நல்வாழ்த்துகள்!

Friday, July 23, 2021

இரண்டையும் வளரவிடுங்கள்

இன்றைய (24 ஜூன் 2021) நற்செய்தி (மத் 13:24-30)

இரண்டையும் வளரவிடுங்கள்

விண்ணரசு பற்றிய இன்னொரு உவமையைத் தருகின்றார் இயேசு. நல்ல விதைகள் விதைக்கப்பட்டு வளர்கின்றன. பகைவன் இரவில் களைகளை விதைக்கின்றான். களைகளைக் பறிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றார் தலைவர்.

இந்த உலகில் நன்மையும் தீமையும் ஒருங்கே இருப்பது ஏன்? என்பது நம் கேள்வி.

களைகளும் கோதுமையும் ஒருங்கே வளரட்டும் என்கிறார் தலைவர்.

பொறுமை காத்தால் மட்டும் களைகள் கோதுமையாகிவிடுமா? இல்லை.

களைகள் கோதுமைக்கான தண்ணீரையும், ஊட்டத்தையும் எடுத்துக்கொள்கின்றன. மேலும், இடத்தை அடைத்துக்கொண்டிருப்பதால் கோதுமையின் வளர்ச்சியையும் அவை தடுக்கின்றன.

இருந்தாலும், தலைவர் பொறுமை காக்கின்றார்.

எதற்காக? தவறுதலாக ஒரு கோதுமையும் களையப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக.

ஆக, நன்மையானவற்றின்மேல் கடவுள் காட்டுகின்ற பரிவு இங்கே வெளிப்படுகிறது.

மேலும், களைகள் இறுதி வரை களைகளாகவே இருக்கின்றன.

ஆனால், நாம் மாற முடியும்.

கடவுளின் காத்திருத்தலும் பொறுமையும் நம் மாற்றத்திற்கான காலக்கெடு என நாம் எடுத்துக்கொள்ள முடியும்.

நம்மைச் சுற்றி நடக்கும் தீமை கண்டு பரபரக்க வேண்டாம் தலைவருடைய பணியாளர்கள் போல!

உரிமையாளனே அமைதியாக உறங்குகிறான்.

ஊழியக்காரர்கள் நாம் ஏன் கூச்சல் போட வேண்டும்?

நிலம் அவனுடையது. அவன் பார்த்துக்கொள்வான்.

Thursday, July 22, 2021

மூன்று பிரச்சினைகள்

இன்றைய (23 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:18-23)

மூன்று பிரச்சினைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், விதைப்பவர் உவமையின் விளக்கத்தை இயேசுவே தருகின்றார். நான்கு தளங்களில் விதைக்கப்படுகின்ற விதைகளில் முதல் மூன்று தளங்களில் விதைக்கப்பட்ட விதைகள் பயன்தரவில்லை.

அவற்றுக்கு மூன்று காரணங்களை நாம் இங்கே காண்கின்றோம்.

முதல் வகை நிலத்தில் தீயோன் விதைகளைக் கைப்பற்றிக்கொண்டான்.

இரண்டாம் வகை நிலத்தில் வேதனையோ இன்னலோ வரும்போது அவர்கள் தடுமாற்றம் அடைகின்றனர்.

மூன்றாம் வகை நிலத்தில் உள்ள விதைகளை உலகக் கவலையும் செல்வ மாயையும் நெருக்குகின்றன.

ஆக, விதை என்பது இறைவார்த்தை.

இறைவார்த்தை அல்லது நற்செய்தியை ஏற்றுக்கொண்ட தொடக்ககாலக் கிறிஸ்தவர்கள் அனுபவித்த பிரச்சினைகளை நாம் இங்கே உருவகமாகக் காண்கின்றோம்.

தீயோன் என்பவன் இறைவனுக்கு எதிரி.

இன்னலும் வேதனையும் வெளியே இருந்து வருகின்றன.

கவலையும் செல்வ மாயையும் நமக்கு உள்ளேயிருந்து புறப்படுகின்றன.

ஆக, வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் வரும் காரணிகளால் இறைவார்த்தை பயன்தராமல் போகின்றது.

புரிந்துகொள்வோரே பயன்தருகின்றனர். அவர்கள் தரும் பயனின் அளவும் மாறுபடுகிறது.

ஆக, நல்ல நிலமாக இருந்தாலும் பயன் தருவதில் மாற்றம் வரலாம்.

இறைவார்த்தை தன்னகத்தே ஆற்றல் கொண்டிருந்தாலும் அதை ஏற்று, புரிந்துகொண்டு, செயல்படுத்துபவரின் வழியாகவே அது பலன் தருகின்றது.

இன்று நாம் இறைவனின் வார்த்தைகளைக் கேட்கத் தடையாக இருக்கின்ற அக மற்றும் புறக் காரணிகளை அடையாளம் காணுதலும் களைதலும் நலம்.

Wednesday, July 21, 2021

மகதலா மரியா

இன்றைய (22 ஜூலை 2021) திருநாள்

மகதலா மரியா

இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடும் இளவல் விவிலியத்தின் பக்கத்தை பல நூறு ஆண்டுகளாக அலங்கரித்துக்கொண்டிருப்பவர். விவிலியத்திற்குள் வராத நூல்களிலும் இவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. இவர் இப்படி இருந்திருப்பார் என்று சில பதிவுகள், இவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று சில பதிவுகள், இப்படித்தான் இவர் இருந்தார் என்று சில பதிவுகள். ஓவியம், நாடகம், புதினம், திரைப்படம் என்னும் பல தளங்களில் பலரின் கற்பனைத் திறனைத் தட்டி எழுப்பியவர் இவர். இவருடைய அறநெறி, பண்புகள், செயல்கள், நம்பிக்கை ஆகியவை பற்றி நிறைய சொல்லப்பட்டாலும் ஒன்றை மட்டும் நாம் உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது: 'உயிர்த்த இயேசுவைத் தொடுகின்ற தூரத்தில் மகதலா மரியா இருந்தார்!'

சுதந்திரமான (independent) பெண் இவர்.

அது என்ன சுதந்திரம்? ஏனெனில், விவிலியம் இவருடைய பெயரை ஊரின் அடைமொழி கொண்டு அறிமுகம் செய்கிறது. அன்றைய காலத்தில் பெண்கள் தங்களுடைய தந்தை அல்லது மகன் அல்லது கணவருடைய பெயராலே அறிமுகம் செய்யப்படுவர். எ.கா. 'கூசாவின் மனைவி யோவன்னா' (லூக் 8:3), 'இயேசுவின் தாய் மரியா' (காண். யோவா 2:2). எந்தவொரு இரத்த உறவும் திருமண உறவும் இவருடைய பெயராக ஒட்டிக்கொள்ளாததால், இவர் 'ஒரு மாதிரியான' பெண் என்று சொல்கிறது மரபு. இதன் பின்புலத்திலேயே இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன.

இவரைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் அனைத்திலும் இவர் செந்நிற ஆடை அணிந்தவராக இருக்கின்றார். ஏனெனில், அன்றைய காலத்தில் விலைமாதர்கள் செந்நிற ஆடையே அணிந்திருந்தனர். யோசுவா நூலில் வருகின்ற இராகாபு கூட தன் இல்லத்தை அடையாளப்படுத்துவதற்காக செந்நிற நூல் ஒன்றைத் தன் ஜன்னலில் கட்டி வைக்கின்றார். லூக்கா 7:39இல் வருகின்ற பாவியான பெண் இவர் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் யோவான் 12இல் வரும் மரியாவுடன் இணைத்துப் பார்க்கின்றனர்.

இன்னொரு புறம், 'ஏழு பேய்கள் நீங்கள் பெற்ற மகதலா மரியா' என்று நற்செய்தியாளர்கள் (காண். லூக் 8:2, மாற் 16:9) இவரை வரையறுப்பதும் நமக்கு நெருடலாக இருக்கின்றது. 'ஏழு' என்பது அவர் அனுபவித்த துன்பத்தைக் குறிக்கும் அடையாளமே தவிர, அவரைப் பற்றிய நலக்குறைவான பார்வையை நாம் பெறவேண்டியதில்லை.

இன்றைய நற்செய்தி அவரைப் பற்றிய மிக அழகான பதிவாக இருக்கின்றது.

'வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே கல்லறைக்குச் செல்கின்றார்' இளவல். சிலுவையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இறந்த தன் போதகரின் உடலுக்கான இறுதி மரியாதையைச் செலுத்தச் செல்கின்றார் மரியா. தன் போதகரின், தன் தலைவரின் உடலின் வெற்றிடங்களில் நறுமணத் தைலம் பூச வேண்டும் என்று நினைத்தவர் வெற்றுக்கல்லறை கண்டு வியந்து நிற்கின்றார்.

விரைந்து வந்த சீடர்கள் வெற்றுக் கல்லறை கண்டவுடன் விரைந்து இல்லம் செல்கின்றனர்.

உள்ளத்தில் வெறுமை, கண்முன் வெற்றுக் கல்லறை.

தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லாத நிலையில் அங்கே நின்று அழத் தொடங்குகின்றார் இளவல். அவளுடைய கண்ணீர் அவளது வாழ்க்கையைச் சுற்றியிருந்த துணிகளையும் அவள் அணிந்திருந்த துணிகளையும் சேர்த்தே நனைக்கின்றது. 'உன் கண்ணீரின் வழியாக வானதூதரை மட்டுமே காணமுடியும்' என்ற அன்றைய சொலவடையை அவள் அறிந்திருந்தாளோ என்னவோ, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள். வானதூதர்கள் வரமாட்டார்கள் என்று அவருடைய மூளை சொல்லத் தொடங்குகிறது.

ஆனால், வானதூதரை அவள் காணவில்லை. உயிர்த்த ஆண்டவரையே காண்கின்றார். அவ்வளவு ஆற்றல் மிக்கது அவளுடைய கண்ணீர்.

கல்லறையிலிருந்து திரும்பிப் பார்க்கிறார். அங்கே இயேசு நிற்கின்றார்.

உரையாடல் தொடர்கிறது.

'மரியா' என இயேசு சொல்ல, 'ரபூனி' எனத் திரும்புகின்றார் மரியா.

ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கின்றார். அப்புறம் ஏன் திரும்புகிறார்?

இவ்வளவு நேரம் இவளுடைய உடல்தான் திரும்பியிருந்தது. இப்போது இவளுடைய உள்ளம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது.

அவளுடைய அழுகை மகிழ்ச்சியாக மாறுகிறது.

சுதந்திரமாக இருந்த அவள் சுதந்திரமாகவே மாறுகிறாள்.

கட்டின்மையில் தன் வாழ்க்கையை நகர்த்தியவள் கட்டின்மைக்குள் நுழைகின்றாள்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்னும் அவளுடைய சொற்களே அதற்குச் சான்று.

இந்த இளவலின் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) நாம் இன்று இந்த இளவலைப் போலவே நிறைய பேருடைய எண்ணங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றோம். நம் அறநெறி, மதிப்பீடுகள், இருத்தல், இயக்கம், வேலை பற்றி நிறையப் பேர் எந்நேரமும் எதுவோ சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். பல வாரங்களாக தெருவில் நிற்கப்பட்ட வாகனம் ஒன்றில் அன்றாடம் தூசி அடுக்கடுக்காகப் பதிந்துகொண்டிருப்பதுபோல, நம்மைப் பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் நம்மேல் படிந்துகொண்டே இருக்கின்றன. இப்படிமங்களால் வாகனம் தன் இயல்பை ஒருபோதும் இழப்பது இல்லை. மறுபடியும் தூசு தட்டினால் வாகனம் ஓடும்.

(ஆ) இன்னொரு பக்கம் நாம் மற்றவர்கள்மேல் தூசிப் படிமங்களை ஏற்றிக்கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் மதிப்பீடுகள், வாழ்க்கைத் தரம், பணி, செயல்பாடுகள் ஆகியவை பற்றிய விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கின்றோம். எப்படி மற்றவர்களுடைய விமர்சனங்கள் நம்மைப் பாதிக்காதோ, அப்படியே நம்முடையவையும் மற்றவர்களைப் பாதிக்காது என்பதே உண்மை. அப்படியிருக்க நாம் ஏன் தூசுப் படிமங்களை அவர்கள்மேல் சுமத்த வேண்டும்? நம் கைகளும் அல்லவா தூசியாகின்றன!

(இ) எல்லாவற்றுக்கும் மேலாக, 'கிறிஸ்து வாழ்கிறார்' என்று திருத்தூதர்களுக்கும் உலகுக்கும் அறிவித்த முதல் நபர், முதல் பெண்ணாகிய இந்தப் புனிதை நமக்குச் சொல்வது இதுதான். இயேசுவின் சீடராக இருப்பது. எந்த நிலையில் தன் வாழ்க்கை புறப்பட்டாலும் கண்களை இயேசுவின்மேல் மட்டுமே பதித்து, அவருடைய சிலுவைப் பாதையில் பின்தொடர்ந்தாள் மகதலா மரியா. இறுதியில், தன் அழுகையும் வெற்றுக் கல்லறையும் அவருடைய இறையனுபவத்தின் தளங்களாக மாறின. தனிமையிலும் வெறுமையிலும் கையறுநிலையிலும் இருளிலும் குளிரிலும் நாம் வடிக்கும் கண்ணீர் வானதூதர்களை அல்ல, கடவுளையே நம்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று உணர்த்துகிறார் இந்த மாமனிதை. நம் எதிர்பார்ப்புகள் விரக்தியாக மாறுகின்றபோது, நம் முயற்சிகள் தோல்வியாக முடிகின்றபோது நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து அழவேண்டியது மட்டும்தான். அங்குதான் கிறிஸ்து வாழ்கின்றார். அவர் நம்மைச் சந்திக்கின்றார். நம்மைச் சந்திக்கும் அவர் நம் உலகுக்கு நம்மை மீண்டும் அனுப்புகின்றார்.

கட்டுகள் அறுபட்ட நாமும், இளவலோடு இணைந்து,

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்ல முடியும்.


Tuesday, July 20, 2021

நன்றாக இருந்திருக்கும்

இன்றைய (21 ஜூலை 2021) நற்செய்தி (மத் 13:1-9)

நன்றாக இருந்திருக்கும்

'நாஸ்டால்ஜியா' (nostalgia) (உச்சரிப்பு மாறுபடலாம்) என்ற ஆங்கில வார்த்தையை, 'ஏக்கம்,' 'தாய்வீடு அல்லது நாட்டை பற்றிய நினைவுத் துயரம்,' 'பழங்கால நாட்டம்' என்று கூகுள் மொழிபெயர்க்கிறது.

புதிய இடத்திற்குச் செல்லும்போதும், புதிய பயணம் மேற்கொள்ளும்போதும், புதிய பணியில் ஈடுபடும்போதும் நம் மனம் பழையதை எண்ணி துயரப்படுகிறது. அந்த நாள் திரும்ப வராதா என எண்ணுகிறது. அதாவது, புதியது தருகின்ற துயரம் பழையது துயரமானாலும் அதை இன்பம் என்று எண்ண வைக்கிறது. நீதிமொழிகள் நூல் ஆசிரியர் இப்படிப்பட்ட உணர்வைக் கண்டிக்கிறார். அதாவது, 'அந்தப் பழைய நாள்கள் நன்றாக இருந்தனவே!' என்று மூடரே சொல்வர் என்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விதைப்பவர் எடுத்துக்காட்டைத் தருகின்றார். நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் தவிர, மற்ற மூன்று இடங்களில் - வழியோரத்தில், முட்செடிகளுக்கு நடுவே, பாறையின்மேல் - விழுந்த விதைகள் அனைத்தும் கண்டிப்பாக ஏங்கியிருக்கும்.

நாம் பேசாம விதைப்பவரின் கைகளுக்குள்ளேயே இருந்திருக்கக் கூடாதா?! அல்லது விதை வைக்கும் சாக்கிலேயே இருந்திருக்கக் கூடாதா?! இப்படி வந்து கஷ்டப்படுகிறோமே!

ஏன் இந்த உணர்வு நமக்கு வருகிறது?

அல்லது பழையது ஏன் நமக்கு இனிமையாகத் தெரிகிறது.

இரண்டு காரணங்கள்:

ஒன்று, புதியது நமக்குக் கடினமாக இருப்பதால். புதிய வேலை கடினமாக இருக்கும்போது நாம் செய்த பழைய வேலை நமக்கு இனிமையாகத் தெரிகிறது. புதிய இடத்தின் தட்பவெப்பநிலை தாங்க முடியாததாக இருக்கிறபோது, பழைய இடம் இனிமையாகத் தெரிகிறது.

இரண்டு, புதியதில் நம் மனம் விருப்பம் கொள்ளாமல் அல்லது ஈடுபடாமல் இருப்பதால். புதியது ஒன்றைப் பற்றிக்கொள்ள மனம் மறுக்கும்போது, புதியது சுமையாக மாறிவிடுகிறது. அதிக மனஇறுக்கத்தை அது தருகிறது.

விதைகள் விதைப்பவரின் கைகளுக்குள்ளேயே இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். கைகளின் வெதுவெதுப்பு, மற்ற விதைகளின் உடனிருப்பு, கைகளில் பொதியப்பட்டு இருப்பதால் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு அனைத்தும் விதைகளுக்கு உற்சாகம் தருகின்றன. ஆனால், வெதுவெதுப்பு, உடனிருப்பு, பாதுகாப்பு உணர்வு ஆகியவை நிரந்தரம் அல்ல. கைகளை விட்டு எறியப்பட்ட அந்த நொடியில் விதைகள் தனிமையாக உணர்கின்றன. வெயில் சுடுகின்றது. பாதுகாப்பற்ற சூழ்நிலைக்கு அவை தள்ளப்படுகின்றன. வழியோரம் விழுந்த விதைகள் பறவைகளுக்கு இரையாகின்றன. பாறையின் வெயில் சுடுகின்றது. இருந்தாலும் சற்று அங்கே ஒதுங்க நினைக்கும் விதை முளை விடுகின்றது. முட்கள் தனிமை போக்குவதாக இருந்தாலும் அவை விதைகளை நசுக்கிவிடுகின்றன.

பாவம் விதைகள்!

இன்றைய முதல் வாசகத்தில், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்ட மக்கள், தாங்கள் பெற்ற விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்குப் பதிலாக, பழைய வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டு அதை நினைத்து ஏங்குகின்றனர்: 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும்!' எனப் புலம்புகின்றனர்.

உண்டது என்னவோ இறைச்சியும் . ஆனால், இருந்தது அடிமைகளாக!

பழையதன் இன்பம் தந்த ஈர்ப்பை அவர்களால் விட இயலவில்லை. காரணம், புதியது கடினமாக இருந்தது. மேலே காற்று சுதந்திரமாகக் கிடைத்தாலும் கால் என்னவோ பாலைநில வெப்பத்தால் பொசுங்கியது. உள்ளத்தில் சுதந்திரம் இருந்தாலும் உடல் என்னவோ பசித்தே கிடந்தது.

ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு உடனே மன்னாவும் காடையும் தருகின்றார்.

இன்று புலம்பெயர்ந்தோர் பலர், படிப்பு, பணி, திருமணம் போன்ற காரணங்களுக்காகப் புலம் பெயரும் பலர், தங்கள் மண்ணையும் மக்களையும் நினைத்து ஏங்குகின்றனர். அன்று கிடைத்த மன்னாவும் காடையும் இன்று கிடைப்பதில்லை என்பதே எதார்த்தம்.

பழையதன் மேல் ஏக்கம்.

புதியது பற்றிய பயம்.

இருந்தாலும் வாழ்க்கை நகர்கிறது.

விதைப்பவன் என்னவோ விதைத்துக்கொண்டே செல்கின்றான். விதைகள்தாம் பாவம்!


Monday, July 19, 2021

சீடத்துவத்தின் மேன்மை

இன்றைய (20 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:46-50)

சீடத்துவத்தின் மேன்மை

யோவான் நற்செய்தியில் இயேசு, தன் சீடர்களை, 'நண்பர்கள்' என அழைக்கின்றார்.

மத்தேயு நற்செய்தியில், அவர்களை, 'தாய் மற்றும் சகோதரர்கள்' என அழைக்கின்றார்.

தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் வழியாக ஒருவர் இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்கள் என ஆக முடியும். மத்தேயு நற்செய்தியில் தந்தையின் திருவுளம் நிறைவேற்றுதல் சீடத்துவத்தின் மிக முக்கியமான கருத்துரு ஆகும்.

திருவுளம் நிறைவேற்றுதல் என்றால் என்ன?

இது மூன்று நிலைகளில் நடந்தேறுகிறது.

(அ) திருவுளம் அறிதல்

பல நேரங்களில் நம் உள்ளத்தில் எழுவதே நமக்குக் குழப்பமாக இருக்கிறது. இப்படி இருக்க, இறைவனின் திருவுளம் எது என்பதை எப்படி அறிவது? சில நேரங்களில், 'இதுதான் திருவுளம்' என்று நம் மூளை நம்மை ஏமாற்றுகிறது.

(ஆ) நம் உளம் மறுத்தல்

அதாவது, ஒரே நேரத்தில் நான் இரு கட்டளைகளை ஏற்க முடியாது. 'சாப்பிடு!' என்ற ஒரு கட்டளையும், 'சாப்பிடாதே!' என்ற இன்னொரு கட்டளையும் ஒரே நேரத்தில் மூளையிலிருந்து வந்தால் உடல் எதைச் செயல்படுத்த முடியும்? என் உளமும் இறைவனின் திருவுளமும் எதிரும் புதிருமாக இருந்தால், நான் இரண்டையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த முடியாது.

(இ) திருவுளத்தை நிறைவேற்றுதல்

நிறைவேற்றாத எண்ணங்கள் எல்லாம் வெறும் ஆசைகளே. ஆக, எண்ணங்கள் செயல்வடிவம் பெறும்போதுதான் திருவுளம் நிறைவேறுகிறது.

மொத்தத்தில், இறைவனின் திருவுளம் நிறைவேற்றுதல் என்பது நாமாக விரும்பி நம்மேல் ஏற்கின்ற தெரிவு. இந்தத் தெரிவுக்காக நாம் இழக்க வேண்டியவை நிறைய இருக்கலாம். ஆனால், பெறப் போவது இறைவனின் உடன்பிறப்பாளர் என்ற நிலை.

Sunday, July 18, 2021

அடையாளம் ஒன்று

இன்றைய (19 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:38-42)

அடையாளம் ஒன்று

மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் அடையாளம் ஒன்று கேட்கின்றனர். ஒருவருடைய போதனை மற்றும் செயல்பாட்டை ஏற்றுக்கொள்வதற்கும் நம்புவதற்கும் அடையாளங்கள் தேவைப்பட்டன அன்று. இன்றும் அடையாளங்கள் இல்லாமல் நம்மால் வாழ முடிவதில்லை. 'நான் ஓர் அருள்பணியாளர்' என்று மற்றவர்கள் நம்புவதற்கு, 'நான் அங்கி அணிய வேண்டும்,' அல்லது 'என் மறைமாவட்டம் தருகின்ற அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்,' அல்லது 'நான் அருள்பணியாளராக இருக்கும் புகைப்படம் ஒன்றைக் காட்ட வேண்டும்'.

இயேசுவிடம் வருகின்ற பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவரை நம்புவதற்காக அல்ல, மாறாக, அவரைச் சோதிப்பதற்காக அடையாளம் கேட்கின்றனர்.

இயேசு அவர்களை இரண்டு நிலைகளில் சாடுகின்றார்.

நேரிடையாக, அவர்களை 'தீய விபசாரத் தலைமுறையினர்' என்கின்றார். இது அவர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்திருக்கும். இங்கே, 'விபசாரம்' என்பதை நாம் 'பிரமாணிக்கத்தில் இரட்டை வேடம்' என்று புரிந்துகொள்ள வேண்டும். இஸ்ரயேல் மக்களை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் விபசாரர்கள் எனக் கடிந்துகொள்கின்றனர். அதாவது, ஆண்டவராகிய கடவுளை மறந்துவிட்டு மற்ற தெய்வங்கள் அல்லது சிலைகள் பின்னார் அவர்கள் சென்றபோது இறைவாக்கினர்கள் அவர்களை அப்படி அழைத்தனர். அதாவது, ஆண்டவருக்கும் பிரமாணிக்கம், பாகாலுக்கும் பிரமாணிக்கம் என்ற நிலையே விபசாரம். அந்தத் தலைமுறையில் வந்தவர்கள்தாம் நீங்கள் என்று இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களைக் கடிந்துகொள்கின்றார்.

மறைமுகமாக, இரு எடுத்துக்காட்டுகள் வழியாக அவர்களைச் சாடுகின்றார்.

யோனா நற்செய்தி அறிவித்த நினிவே மக்கள், மற்றும் சாலமோனைத் தேடி வந்த சேபா நாட்டு அரசி. இவ்விருவருமே புறவினத்தார்கள். நினிவே மக்கள் அசீரியர்கள். அசீரியர்களுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நெடுங்காலமாக பகை இருந்து வந்தது. ஆனாலும், யோனா தங்கள் நாட்டில் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்தபோது எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அவரையும் அவருடைய செய்தியையும் அப்படியே ஏற்றுக்கொண்டு மனம் மாறுகிறார்கள். சேபா நாட்டு அரசி சாலமோனுடைய ஞானத்தைக் கேட்டு அவரைக் காண வருகின்றார். அவருடைய ஞானத்தில் மெய்மறந்து போகின்றார். ஆக, நினிவே மக்களும், சேபா நாட்டு அரசியும் புறவினத்தார்களாக இருந்தாலும் அவர்கள் முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள் என்கிறார் இயேசு.

மேலும், 'யோனாவை விடப் பெரியவர், சாலமோனை விடப் பெரியவர்' என்று தன்னை அழைக்கிறார் இயேசு. அதாவது, யோனாவையும் சாலமோனையும் நம்பியவர்களே அடையாளங்கள் எதுவும் கேட்காமல் இருந்தபோது, அவர்களைவிடப் பெரியவரான தன்னை நம்புவதற்கு ஏன் அடையாளம் கேட்கிறீர்கள்? என்பது போல இருக்கிறது இயேசுவின் சொல்லாட்சி.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் செங்கடலைக் கடப்பதற்கு முன் நிகழ்ந்ததை வாசிக்கின்றோம். எகிப்து நாட்டில் மிகப்பெரும் அடையாளங்கள் செய்து தங்களை அங்கிருந்து யாவே இறைவன் வெளியேற்றினாலும், தங்களைத் தொடர்ந்து பாரவோனின் படைகள் வருவதைக் காண்கின்ற இஸ்ரயேல் மக்கள், 'எகிப்தில் சவக்குழிகள் இல்லையென்றா நீர் எங்களைப் பாலைநிலத்தில் சாவதற்கு இழுத்து வந்தீர்?' என ஆண்டவரை நோக்கிக் கேட்கின்றனர்.

என்னவொரு நம்பிக்கையின்மை!

பல நேரங்களில் நம் வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கின்றது. நம் இருத்தல், இயக்கம் என அனைத்திலும் இறைவனின் கரம் செயல்பட்டாலும், அவர் நம்மிடம் இருக்கிறாரா? என்பதை அடையாளங்கள் வைத்தே சோதித்து அறிகின்றோம். செங்கடல் போல பிரச்சினைகள் நம் முன்னே நிற்கும்போது, 'நான் இறந்து போக வேண்டுமா?' என அச்சப்படுகின்றோம்.

ஆனால், நம் நம்பிக்கையின்மையை இறைவன் தன் இயங்குதளமாக மாற்றுகின்றார்.

'ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் அமைதியாயிருங்கள், சும்மாயிருங்கள்!' என்று மோசே கூறுகின்றார்.

மிகவும் நம்பிக்கை தருகின்ற வார்த்தைகள் இவை.

ஏறக்குறைய 430 ஆண்டுகளாக எகிப்தில் அடிமைகளாகவும், செங்கல் தயாரிப்பாளர்களாகவும் இருந்தவர்களுக்கு போரிடுதலும், போர்க்கருவிகள் கையாளுதலும் தெரியுமா என்ன? அவர்களின் வலுவின்மையில் இறைவன் செயலாற்றுகின்றார். அவர்கள் சும்மாயிருந்தாலே போதும்.

நம் வாழ்வின் கலக்கமான தருணங்களிலும் நாம் சும்மாயிருந்தாலே போதும்! அவர் நமக்காகப் போரிடுவார்.


Saturday, July 17, 2021

கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்!

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

இரண்டு ஆண்டுகளுக்கு முன் புனித பவுல் இறையியல் கல்லூரியில் நடைபெற்ற அருள்பணியாளர்களுக்கான கூடுகையை நெறிப்படுத்த செங்கை மறைமாவட்ட அருள்பணியாளர் பேரருள்திரு பாக்கிய ரெஜிஸ் அவர்கள் வந்திருந்தார்கள். அறிவர் அம்பேத்கர் அவர்கள் 1942ஆம் ஆண்டு ஆற்றிய உரையில் பயன்படுத்தி அவருடைய ட்ரேட் மார்க் ஸ்லோகன் என உயர்ந்த, 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் மூன்று சொல்லாடல்களை எடுத்து, அருள்பணியாளர்களின் 'எளிமை – கீழ்ப்படிதல் - கன்னிமை' என்னும் மூன்று வாக்குறுதிகளோடு இணைத்து மிக அழகான செய்தியைத் தந்தார்கள். 'எந்த வயிறும் சோறில்லாமல் காயக் கூடாது. எந்தக் கண்ணும் எழுதப்படிக்கத் தெரியாமல் இருக்கக் கூடாது' என்று தன் தாய் தன் குருத்துவ அருள்பொழிவு அன்று சொன்னதையும் அருள்பணியாளர் நினைவுகூர்ந்தார்.

'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்!' என்னும் சொல்லாடல்கள் முதன் முதலாக எஸ்.டி.எஃப் (சமூக சனநாயகக் கூட்டமைப்பு) என்ற அமைப்பின் இலச்சினையாக 1883ஆம் ஆண்டு வெளி வந்தது. 'கற்பி – ஏனெனில் நம் எல்லா அறிவும் நமக்குத் தேவை! கலகம் செய் - ஏனெனில் நம் எல்லா ஆர்வமும் நமக்குத் தேவை! ஒன்றுசேர் – ஏனெனில் நம் எல்லா ஆற்றுலும் நமக்குத் தேவை!' என்று இலச்சினையின் பொருள் விளக்கப்பட்டது. ஆக, அறிவு, ஆர்வம், மற்றும் ஆற்றலின் ஒருங்கியக்கமே மேற்காணும், 'கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்' என்னும் சொல்லாடல்களின் உட்பொருளாக இருக்கின்றது.

அண்ணல் அம்பேத்கர் மேற்காணும் சொல்லாடல்களைத் தன் 1942ஆம் ஆண்டு உரையில் பின்வருமாறு பயன்படுத்துகின்றார்:

'என் இறுதி அறிவுரை வார்த்தைகள் இவையே: கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! உன்மேல் நீ நம்பிக்கை கொள்! நீதி நம் பக்கம் இருக்க, நாம் தோல்வியடைய முடியாது. என்னைப் பொருத்தவரையில் போராட்டம் என்பது மகிழ்ச்சி. போராட்டம் என்பது ஆன்மிகம். அது பொருள்வகையோ சமூகவகையோ அல்ல. நம் போராட்டம் பணத்திற்கோ அல்லது அதிகாரத்துக்கோ அல்ல. மாறாக, கட்டின்மைக்கு. நம் மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கு!'

கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர்! என்னும் சொல்லாடல்கள் இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மூன்று வாசகங்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. அறிவர் அம்பேத்கர் குறிப்பிடுவது போல, இவ்வார்த்தைகளில் ஒரு தனிமனிதர் ஆன்மிக எழுச்சியைக் காண முடியும் என்றால், இன்றைய இறைவார்த்தை வழிபாட்டோடு இணைத்துப் பார்ப்பதில் தவறில்லை.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மாற் 6:30-34), 'அவர்கள் (மக்கள் கூட்டத்தினர்) ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்' என்று நிறைவு பெறுகின்றது. இன்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக வரும் பகுதியில் இயேசு ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளிக்கின்றார். வயிற்றுக்கு உணவு கொடுக்குமுன் செவிக்கு உணவு கொடுக்கின்றார் இயேசு. இயேசு எதைக் கற்பித்தார் என்பதைப் பற்றிய நற்செய்தியாளர் பதிவிடவில்லை. ஆனால், 'பலவற்றைக் கற்பித்தார்' என்று மாற்கு நற்செய்தியாளர் மிகவும் திருத்தமாக எழுதுகின்றார்.

'டிடாஸ்கெய்ன்' (கற்பித்தல்) என்ற கிரேக்கச் சொல்லாடல் புதிய ஏற்பாட்டில் 13 முறை வருகின்றது. அவற்றில் 4 முறை மாற்கு நற்செய்தியில் வருகின்றது. ஓரிடத்தில் இயேசு உவமைகள் வழியாக விண்ணரசு பற்றிக் கற்பிக்கின்றார். இன்னொரு முறை மானிட மகன் பட வேண்டிய துன்பங்கள் பற்றிப் பேசுகின்றார். இரு இடங்களில் வெறும் 'கற்பித்தல்' மட்டும் நடைபெறுகிறது. 'கற்பித்தல்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தி நற்செய்தியாளர் இயேசுவைப் பற்றிய மூன்று புரிதல்களைக் கொடுக்கின்றார்: (அ) முதல் ஏற்பாட்டில் மோசே ஆண்டவராகிய கடவுளின் திருச்சட்டத்தை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்பிக்கின்றார் (காண். இச 4). அவ்வகையில், இயேசு ஒரு புதிய மோசே என முன்மொழியப்படுகின்றார். மத்தேயு நற்செய்தியாளர் இந்தக் கருத்துருவை மிக நேர்த்தியாகக் கையளாளுகின்றார் (காண். மத் 5). (ஆ) இயேசுவின் சமகாலத்தில் ரபிக்கள் திருச்சட்டங்களைப் பற்றிய விளக்கவுரைகளை தங்கள் சீடர்களுக்குக் கற்பித்தனர். பெரிய அலெக்சாந்தரின் காலத்திற்குப் பின்னர் பாலஸ்தீனாவில் நிறைய தெருப் போதகர்கள் தங்களுக்கென சீடர்களைச் சேர்த்துக்கொண்டு போதித்து வந்தனர். இயேசுவை ஒரே நேரத்தில் ரபி என்றும், தெருப் போதகர் என்றும் காட்டுவதற்காக நற்செய்தியாளர்கள், 'கற்பித்தல்' என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். (இ) இயேசுவின் எளிய பின்புலம் அறிந்தவர்கள் அவருக்குக் கற்பிக்கத் தெரியாது என்று இடறல்பட்டனர். அக்கருத்தை எதிர்ப்பதற்காகவும் நற்செய்தியாளர்கள் இயேசு கற்பித்தார் எனப் பதிவு செய்கின்றனர்.

இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரு குழுவினருக்குக் கற்பிக்கின்றார்: முதல் குழுவினர் சீடர்கள். அவர்களுக்குத் தன் வார்த்தையால் கற்பிக்கின்றார். பணி முடிந்து வெற்றியோடு வந்தவர்களிடம், 'நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்!' என்று கற்பிக்கின்றார். இரண்டாம் குழுவினர் மக்கள். அவர்களுக்குத் தன் பரிவு என்னும் உணர்வால் கற்பிக்கின்றார். இவ்விரண்டிலுமே கற்பித்தல் என்பது ஒருவருடைய இருத்தலை அவருக்குச் சுட்டிக்காட்டுகிறது.

கற்பித்தலின் நோக்கம் இதுதான். 'நீ இப்போது இங்கே, இப்படி இருக்கிறாய்!' என்ற மெய்யறிவை நான் மற்றவருக்குத் தரும்போது அவருக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன். அந்த மெய்யறிவு அவருக்கு வந்தவுடன் அவர் அந்தநிலையிலிருந்து தன்னையே விடுவித்துக்கொள்வார். தங்கள் பணிகளோடு சீடர்கள் தங்களையே ஒன்றிணைத்துக்கொண்டு அதுவே தங்களுடைய அடையாளம் என நினைக்கின்றனர். ஆனால், பணி மட்டுமே அடையாளம் அல்ல. அதையும் தாண்டிய ஓய்வு இருக்கிறது என்று அவர்களுக்கு மெய்யறிவு அளிக்கின்றார் இயேசு. தாங்கள் யாவே இறைவனால் தேர்ந்தெடுத்த மக்கள் என்ற பெருமையில் இருந்தனர் இயேசுவின் சமகாலத்தவர். ஆனால், தங்களை உரோமையர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என்பதை மறந்துவிட்டனர். அரசியல், பொருளாதாரம், மற்றும் சமய அடிமைத்தனங்களால் அல்லல்பட்டவர்களுக்குக் கற்பித்தலின் வழியாக அவர்களின் மெய்நிலையை உணரச் செய்கின்றார் இயேசு.

புனித அகுஸ்தினாரின் வாழ்வில், 'நான் இப்படி இருக்கிறேனே!' என்ற மெய்யறிவுதான் அவருடைய பழைய வாழ்க்கையை உதறிவிட அவருக்குத் துணைநிற்கிறது. ஆக, கற்பித்தல் என்பது வெளியிலிருந்து உள்ளேயோ, அல்லது ஒருவருக்கு உள்ளே புறப்பட்டு உள்ளேயே நகர்வதாகவோ இருக்கலாம்.

இரண்டாவதாக, கலகம் செய்.

அறிவர் அம்பேத்கரைப் பொருத்தவரையில் கலகம் செய் என்பது போராட்டம் செய்தல், அல்லது கிளர்ச்சி செய்தல் என்று பொருள் அல்ல. மாறாக, ஆர்வத்தை ஒருங்கிணைப்பது. கலகம் செய்தல் ஒவ்வொருவருடைய தனி மனிதருக்கு உள்ளே நடக்கின்ற செயல். மெய்யறிவு பெற்ற ஒருவர் தன்னிலை உணர்ந்தவுடன், தன் இருத்தலுக்கும் செல்ல வேண்டிய இடத்திற்கும் இடையே ஓர் இழுபறி நிலை உருவாகிறது. அதுவே 'கலகம்.' எடுத்துக்காட்டாக, இளைய மகன் பன்றிகள் மேய்த்துக்கொண்டிருக்கும்போது, அறிவு தெளிகின்றார். அது கற்பித்தல். 'என் தந்தையிடம் செல்வேன்' என்று தனக்குள்ளே பேச ஆரம்பிக்கின்றார். அதுதான் கலகம். யாக்கோபு தன் மாமனார் லாபானின் வீட்டிலிருந்து தப்பி ஓடி வந்தபோது ஆடவர் ஒருவர் அவருடன் இரவு முழுவதும் போரிடுகின்றார். அங்கே அந்தக் கலகம் யாக்கோபின் உள்ளத்தில் நிகழ்கிறது. ஆக, மெய்யறிவு பெற்ற ஒவ்வொருவரும் கலகத்தைத் தன் உள்ளத்தில் உணர்கின்றார்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியா வழியாக ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேலின் ஆயர்களைச் சாடுகின்றார். எரேமியா பாபிலோனியப் படையெடுப்பு பற்றி எச்சரிக்கை விடுத்ததுடன், அப்படையெடுப்பை தானே நேருக்கு நேராகக் காண்கின்றார். இஸ்ரயேலின் அரசர்கள், குருக்கள், மற்றும் தலைவர்களின் சிலைவழிபாட்டால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படுகின்றனர். நாடுகடத்தப்படுகின்றனர். 'ஆயர்கள் மந்தையைச் சிதறடித்தார்கள்' என்ற சொல்லாடல் இஸ்ரயேல் மக்கள் நாடுகடத்தப்பட்டதையே குறிக்கின்றது. மேலும், 'நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் ... யூதா விடுதலை பெறும் ... ஆண்டவரே நமது நீதி என்னும் பெயரால் நாடு அழைக்கப்பெறும்' என இறைவாக்குரைக்கின்றார் எரேமியா. இறைவாக்கினர் எரேமியாவின் இவ்வார்த்தைகள் எருசலேம் நகரில் ஒரு கலகத்தை ஏற்படுத்துகிறது. அரசர்கள், குருக்கள், மற்றும் மக்கள் தலைவர்களுக்கு நடுவே ஒரு சலசலப்பை ஏற்படுத்துகின்றார் எரேமியா. ஒரு பக்கம் ஆண்டவராகிய கடவுளுக்கு தாங்கள் கொண்டிருக்கின்ற பிரமாணிக்கம், இன்னொரு பக்கம் தங்களுடைய வேற்றுத் தெய்வ வழிபாடு என இவ்விரண்டுக்கும் நடுவே எதைத் தெரிவு செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளத்தில் கலங்கித் தவிக்கின்றனர்.

'யாவே சித்கேனு – ஆண்டவரே நமது நீதி' என்பது இந்நகரின் பெயர் என்றால், நீதி என்னவாயிற்று? என்று தங்களுக்குள்ளே கேள்வி கேட்கின்றனர். இதுதான் கலகம் செய்தல். ஆக, கலகம் என்பது இங்கே பொதுவான ஓர் உணர்வாகத் தொடங்கி ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் அரங்கேறுகிறது.

ஆக, கலகம் செய்தல் என்பது மாற்றத்திற்கான வழியை முன்னெடுப்பதைக் குறிக்கின்றது.

மூன்றாவதாக, ஒன்றுசேர்.

எபேசு நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல், அவர்கள் கிறிஸ்து வழியாகப் பெற்ற மீட்பு என்னும் பேறு பற்றிப் பாராட்டிவிட்டு, கிறிஸ்து வழியாக ஏற்பட்ட ஒப்புரவு பற்றி எடுத்துரைக்கின்றார்: 'அவரே (கிறிஸ்து) இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் (ஒன்று சேர்த்தார்).' அதாவது, மீட்பு என்பது யூதர்களுக்கு மட்டுமே என்று எண்ணி, புறவினத்தாரை ஒதுக்கி வைத்த, அல்லது தள்ளி வைத்த நிலையைத் தகர்த்தெறிகின்றார். யூதர்களும் புறவினத்தார்களும் கிறிஸ்துவில் ஒன்றுசேர்கின்றனர். இப்படி அவர்கள் ஒன்று சேர்வதால் பாவத்திலிருந்து மீட்பு அல்லது விடுதலை பெறுகின்றனர்.

ஆக, ஒன்று சேர்தல் என்பது தனிமனித விடுதலைக்கும் குழும விடுதலைக்கும் வழிகோலுகிறது.

இந்த ஒன்று சேர்தல் எப்படி நடக்கிறது? 'பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்ததன் வழியாக' கிறிஸ்து மக்களை ஒன்றுசேர்க்கின்றார். அதாவது, பிரிக்கின்ற அனைத்தையும் தகர்க்கின்றார். இங்கே ஒருவருடைய ஆற்றல் இன்னொருவருடைய ஆற்றலோடு இணைகின்றது.

ஒன்று சேர்தல் என்பதை இங்கே, நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, யூதர்களும் புறவினத்தார்களும் மீட்பில் ஒன்றுசேர்கின்றனர். இரண்டு, கிறிஸ்துவின் வழியாக இவர்கள் அனைவரும் கடவுளோடு ஒன்றுசேர்கின்றனர். மனிதர்கள் ஒருவர் மற்றவரோடு ஒன்றுசேர்தலே ஆற்றலின் குவியலாக இருக்கிறது என்றால், இறைவனோடு நாம் சேரும்போது நம் ஆற்றல் இன்னும் பெருகும் அல்லவா!

ஆக, இயேசு தன் சீடர்களுக்கு வார்த்தையும், தன்னைத் தேடி வந்த மக்களுக்கு பரிவு என்னும் உணர்வாலும் கற்பிக்கின்றார்.

எரேமியா, தன் சமகாலத்தவர்கள் நடுவே கலகம் செய்கின்றார். ஒருவிதமான பாதுகாப்பின்மையை உருவாக்குகின்றார்.

பவுல், கிறிஸ்து வழியாக மனுக்குலம் ஒன்றுசேர்ந்ததையும், இறைவனோடு அது ஒப்புரவாக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

கற்பித்தல் - கலகம் செய்தல் - ஒன்று சேர்தல் என்னும் சொல்லாடல்கள் இன்று நம் ஆன்மிக வாழ்வுக்கு எப்படி சவால் விடுகின்றன?

(அ) கற்பி: இன்று நான் மெய்யறிவு பெற வேண்டிய தேவை என்ன? எதில் எனக்கு கற்பித்தல் தேவைப்படுகிறது? எதை நான் கற்க வேண்டும்? பரபரப்பான என் வாழ்விலிருந்து, பக்தி முயற்சிகளில் மட்டுமே மூழ்கிக் கிடந்து, 'பூசை பார்த்தேனா? செபமாலை செய்தேனா? நவநாள் செய்தேனா?' என்னும் செயல்பாடுகளின் பரபரப்பிலிருந்து விடுபட்டு, ஆண்டவர் தருகின்ற ஓய்வு பற்றிய மெய்யறிவைப் பெறுகின்றேனா? என்னைச் சுற்றி நிற்கும் மக்களின் கண்களின் வழியாக அவர்களுடைய இதயங்களை என்னால் கண்டு அவர்கள்மேல் பரிவு கொள்ள நான் கற்றுள்ளேனா?

(ஆ) கலகம் செய்: இறைவனுக்கு நான் கொடுக்க வேண்டிய அர்ப்பணம் மற்றும் பிரமாணிக்கத்திலிருந்து என்னைப் பிரித்து வைப்பது எது? என் உள்ளே எழும் பாதுகாப்பின்மை குறித்தும், அச்சம் குறித்தும் நான் கவனமாக இருக்கின்றேனா?

(இ) ஒன்றுசேர்: ஒருவர் மற்றவரோடு நான் ஒன்றுசேர்வதற்குத் தடையாக இருக்கின்ற காரணிகள் எவை? இறைவனிடமிருந்து நான் அந்நியப்பட்டுக் கிடந்தால் என் வாழ்வை நான் எப்படிச் சரி செய்வேன்?

இறுதியாக,

கற்பி – கலகம் செய் - ஒன்றுசேர் என்னும் சொல்லாடல்களின் ஊற்று நம் இறைவனே எனக் கற்றுக்கொடுக்கின்றது இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 23).

'தம் பெயர்க்கேற்ப அவர் என்னை நீதி வழி நடத்துகிறார்' - இதுவே கற்பித்தல்!

'என் எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றார். என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றார்' - இதுவே கலகம் செய்தல்!

'உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள்நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும். நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்' - இதுவே ஒன்று சேர்த்தல்!


Friday, July 16, 2021

இவ்வாறு நிறைவேறின

இன்றைய (17 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:14-21)

இவ்வாறு நிறைவேறின

பகுப்பாய்வு உளவியலில், 'வாழ்க்கைக் குறிப்பு எழுதுதல்' என்ற ஒரு பயிற்சி உண்டு. அந்தப் பயிற்சியில், 'நீங்கள் பிறந்தபோது உங்களைப் பற்றிய ஏதாவது கதை, புனைவு, வாக்கு சொல்லப்பட்டதா?' என்ற கேள்வியும் உண்டு. நம் ஒவ்வொருவருடைய பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்களைக் கேட்டால் இக்கேள்விக்கான விடையை நாம் அறிய முடியும். ஜாதகம் எழுதுவதும், ஜோதிடம் பார்ப்பதும் கூட இதை ஒட்டிய நிகழ்வுதான். ஒரு குழந்தை இப்படி இருக்கும், அல்லது இப்படித்தான் இருக்கும் என்ற வரையறையை ஜோதிடம் தருகின்றது.

இது ஒரு பக்கம் இருக்க, ஒரு சிலர் தங்களுக்குத் தாங்களே ஒரு குறிப்பை எழுதி அதை வாழ்வாக்கிக்கொள்வர்.

எடுத்துக்காட்டாக, அருள்திரு. ஸ்டேன் சாமி அவர்கள். இவர் தன் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டும், தன் பணி இந்த இலக்கு மக்களுக்காகத்தான் இருக்க வேண்டும் என்று வரையறை செய்து அதன்படி வாழ்ந்து, அந்த வரையறையை வாழ்ந்ததற்காகக் கொல்லப்படுகின்றார்.

இன்னொரு பக்கம், மற்றவர்கள் நம்மைப் பார்த்து, 'இவர் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கிறார்' என்று அவர்களாக ஒரு குறிப்பை தங்கள் மனத்திற்குள் எழுதிக்கொள்வதுண்டு.

மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவை, இறைவாக்கினர் எசாயாவின் இறைவாக்கின் நிறைவாக முன்வைக்கின்றார். 'இதோ! என் ஊழியர்' என்று சொல்லப்படுகின்ற துன்புறும் ஊழியனின் பாடலின் பின்புலத்தில் இயேசுவைத் தன் குழுமத்திற்கு அறிமுகம் செய்கின்றார் மத்தேயு.

ஒரு கதையை எடுத்து வாழ்தல் என்பது நாம் எல்லாரும் நம்மை அறியாமல் செய்யக் கூடிய ஒன்று. அந்தக் கதையை வாழ்வதனால் ஒட்டுமொத்த மானுடமும் நலம் பெறுகிறது என்றால் அது நல்ல கதையே.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்வின் கதையைத் திருத்தி எழுதுகின்றார். எகிப்தில் அடிமைகளாக இருந்த அவர்கள் செங்கடலைக் கடந்து வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் நுழைகின்றனர்.

மக்களோடு மக்களாக விழித்திருக்கின்ற ஆண்டவராகிய கடவுள், அடிமைத்தனம் என்னும் அவர்களுடைய கதையை ஒரே நாளில் மாற்றி விடுதலை என எழுதுகின்றார்.

மானுட வரலாற்றில் பலரின் வாழ்வில் இத்தகைய மாற்றங்களை நாம் காண்கின்றோம்.

இன்று நான் எந்தக் கதையை வாழ்வாக்குகிறேன்? – என நாம் ஒவ்வொருவரும் கேட்போம்.

அந்தக் கதையை நான் என் வாழ்வில் நிறைவேற்ற நான் எப்படி முயற்சி செய்கிறேன்? – என்பது அடுத்த கேள்வி.

Thursday, July 15, 2021

கோவிலைவிடப் பெரியவர்

இன்றைய (16 ஜூலை 2021) நற்செய்தி (மத் 12:1-8)

கோவிலைவிடப் பெரியவர்

இயேசு தன் சமகாலத்தவர்கள்மேல் ஒரு பக்கம் பரிவு காட்டினாலும், இன்னொரு பக்கம் அவர்களை உரசிக்கொண்டும் இருந்தார்.

ஓய்வுநாள் பற்றிய சட்டத்தை இயேசுவும் அவருடைய சீடர்களும் மீறுவதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். மீறல் நடக்கும்போதுதான் மாற்றம் நடக்கிறது. எடுத்துக்காட்டாக, நம் மண்ணில் உள்ள சாதியப் பாகுபாடு. ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தங்களை உயர்வகுப்பினர் எனக் கருதி மற்றவர்களைத் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லி, அதை நியாயப்படுத்த புனித நூல்களைக் கையிலெடுக்கின்றனர். 'ஆம்! நீங்கள் சொல்வது சரி!' என்று சொல்லிக்கொண்டே மற்றவர்கள் இருந்தால் இன்னும் நாம் அடிமைத்தனத்தில்தான் இருந்திருப்போம். 'ஏன் இப்படி இருக்க வேண்டும்?' என்ற கேள்வி எழுந்தவுடன் மீறல் நடக்கிறது. மீறல் நடந்தவுடன் மாற்றம் வருகிறது.

இயேசுவின் சமகாலத்தில் சமயம் நிறைய அதிகாரம் கொண்டிருந்தது. இன்றுவரையும் அப்படியே.

அறிவியலைப் பொருத்தவரையில் ஒரு நாள் என்பது 24 மணி நேரங்கள் அல்லது, கோளின் சுழற்சி என்று இருந்தாலும், இத்தனை மணி நேரம் நல்ல நேரம், இத்தனை மணி நேரம் கெட்ட நேரம் என வரையறுப்பது சமயம். ஆண்டுக்கு இவ்வளவு நாள்கள் என அறிவியல் கணக்குச் சொன்னாலும், அவற்றில் சிலவற்றைப் புனித நாள்கள், திருநாள்கள், ஓய்வுநாள்கள் என சமயம் வரையறுத்து மனிதர்களில் ஒருவித அச்சத்தை உருவாக்குகிறது.

பசியாக இருந்த சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.

தங்கள் வயல்கள் கதிர்களைக் கொய்தனரா? அல்லது இன்னொருவரின் வயல்களின் கதிர்களைக் கொய்தார்களா? என்று தெரியவில்லை. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நம் கிராமங்களிலும் யாரும் யார் வயலுக்குள்ளும் நுழைந்து தங்கள் வயிற்றுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளலாம் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. இப்போது வயலும் இல்லை, கதிரும் இல்லை, கிராமத்தில் ஆள்களும் இல்லை.

தாவீது செய்தார், தாவீதோடு இருந்தவர்கள் செய்தனர், குருக்கள் செய்தனர் எனச் சுட்டிக்காட்டுவதன் வழியாக, தன்னைத் தாவீதின் மகன் என இயேசு முன்நிறுத்துகின்றார்.

மேலும், அவர்கள் மேல் இரக்கம் காட்டுமாறும் அழைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய முதல் பாஸ்கா விழாவைக் கொண்டாடத் தயாராகின்றனர். பகிர்தலே இத்திருவிழாவின் முதன்மையான இலக்காக இருக்கிறது.

இன்று நாம் கார்மேல் அன்னையின் திருநாளைக் கொண்டாடுகின்றோம். பாகாலின் பொய் இறைவாக்கினர்களை கார்மேல் மலையில் எதிர்கொள்கின்ற இறைவாக்கினர் எலியா, உண்மையான தன் இறைவனுக்குத் தன் அர்ப்பணத்தை வாக்களிக்கின்றார். உத்தரிய அன்னை என்றழைக்கப்படும் கார்மேல் அன்னை என்றும் தன் இறைவனுக்கு அர்ப்பணத்தை வாக்களித்தார்.

Wednesday, July 14, 2021

பெருஞ்சுமை

இன்றைய (15 ஜூலை 2021) நற்செய்தி (மத் 11:28-30)

பெருஞ்சுமை

நாம் விருப்பப்பட்டுச் செய்தால் அது நம் வாழ்வின் நோக்கமாகவும், விருப்பமின்றிச் செய்தால் அது நம் வாழ்வின் சுமையாகவும் மாறிவிடுகிறது என்பது எதார்த்தம்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களைத் தன்னிடம் வருமாறு அழைக்கின்றார் இயேசு. 'சுமை' என்று இயேசு எதைக் குறிப்பிடுகிறார்? என்ற கேள்விக்கு பல விடைகள் தரப்படுகின்றன. இயேசுவின் சமகாலத்திலிருந்த உரோமை அரசின் ஆதிக்கம் என்னும் அரசியல் சுமை, அதிகமான வரிவிதிப்பு மற்றும் வறுமையால் நாளுக்கு நாள் அதிகரித்த பொருளாதார சுமை, மதத் தலைவர்கள் மக்கள்மேல் ஏற்றி வைத்த மதம்சார் கடமைகள் என்னும் சமயம்சார் சுமை என பல விடைகள் தரப்படுகின்றன. சில அருங்கொடை இல்லங்களில், 'பெருஞ்சுமை' என்பது பாவச்சுமை என்றும் சொல்லப்படுகிறது.

மொத்தத்தில், நாம் விரும்பாத ஒன்று, ஆனால் நம்மை அழுத்துகின்ற ஒன்று சுமை எனக் கருதப்படுகிறது.

இயேசு ஓர் ஆறுதலும் ஒரு பாடமும் தருகின்றார்:

'நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்பது ஆறுதல்.

'என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், கனிவையும் மனத்தாழ்மையையும்' என்பது பாடம்.

சுமைகளை நீக்குவதாக இயேசு வாக்களிக்கவில்லை. ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு நாம் பெரிய மூடை ஒன்றைத் தூக்கிச் செல்கின்றோம். செல்லும் வழியில் ஒரு மரம் நிழல் தந்தால், அல்லது ஒரு நபர் தண்ணீர் தந்தால் அது இளைப்பாறுதல். அவர்களால் அவ்வளவுதான் செய்ய முடியும். சுமையை நாம்தான் சுமக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, இயேசுவின் சிலுவைப் பாதையில் அவரோடு உடன் வந்த அவருடைய தாய், சீரேன் ஊரைச் சார்ந்த சீமோன், வெரோணிக்கா, எருசலேம் நகர்ப் பெண்கள் இவர்கள் அனைவரும் இளைப்பாறுதல்கள். அவர்கள் இளைப்பாறுதல் தருவார்களே அன்றி சுமையைக் குறைக்கமாட்டார்கள். ஆக, சுமைகளை நாம்தான் சுமக்க வேண்டும். வாழ்வின் சுமைகளிலிருந்து நமக்கு விதிவிலக்கு கிடையாது.

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுமையை வரையறுக்கிறது. சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் இதை மிக அழகாக வரையறுக்கிறார்: 'கருஞ்சிவப்பு உடையும் பொன்முடியும் அணிந்தோர் முதல் முரட்டுத்துணி உடுத்தியோர் வரை எல்லாருக்கும் சீற்றம், பொறாமை, கலக்கம், குழப்பம், சாவு பற்றிய அச்சம், வெகுளி, சண்டை ஆகியவை உண்டு' (காண். சீஞா 40:4). மேற்காணும் எதிர்மறை எண்ணங்கள்கூட நாம் சுமக்க வேண்டிய சுமைகளே.

இயேசுவின் இளைப்பாறுதலைக் கண்டடைய நாம் இரண்டு விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்: (அ) கனிவு. (ஆ) மனத்தாழ்மை.

'கனிவு' அல்லது 'இரக்கம்' நமக்கு நாமே முதலில் நாம் காட்ட வேண்டியது. அதாவது, நம்மேல் கோபம் இல்லாத நிலையே கனிவு. கோபம் இருக்கின்ற இடத்தில் கனிவுக்கு இடமில்லை. நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னைக் கோபமின்றி ஏற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இந்தியாவில் பிறந்த ஒரே குற்றத்திற்காக நான் பெட்ரோல் லிட்டருக்கு 104 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால், என்மேல் கோபம் இல்லாமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்வது. ஏற்றுக்கொள்வது என்பது இங்கே பொறுத்துக்கொள்வது அல்ல. மாறாக, 'இதுதான் எதார்த்தம்' எனக் கோபமின்றி எதிர்கொள்வது.

'மனத்தாழ்மை' என்பது 'எனக்கும் இது வரலாம்! எனக்கும் இது வரும்!' என எதார்த்தத்தை ஏற்றுக்கொள்வது. 'அருள்பணியாளராக இருக்கும் எனக்கு எல்லாரும் வணக்கம் சொல்ல வேண்டும்' என நான் நினைத்தால், என் அருள்பணிநிலையை முன்வைத்து நான் என்னையே உயர்வாகக் கருதுகிறேன். ஆனால், எதார்த்தம் அப்படி இருக்கத் தேவையில்லை. எதுவும் எனக்கு நேரலாம் என்று அன்றாட எதார்த்தத்தை நான் எதிர்கொள்வது மனத்தாழ்மை.

இந்த இரண்டும் வந்துவிட்டால் எதுவும் சுமையாகத் தெரிவதில்லை.

என்னை ஏற்றுக்கொள்வதில் கனிவு.

என்னை அடுத்தவரில் ஒருவராக ஏற்றுக்கொள்வதில் மனத்தாழ்மை.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் அனுபவித்த சுமைக்கு இளைப்பாறுதலாக மோசேயை அனுப்புகின்றார் ஆண்டவராகிய கடவுள். பாரவோனுக்குப் பணிந்திருந்த அவர்கள் இனி ஆண்டவராகிய கடவுளுக்குப் பணிந்திருப்பார்கள். அதுவும் அவர்களுக்குச் சுமையே.

ஒரு சுமையைச் சுமந்த அவர்கள் இனி மற்றொரு சுமையைச் சுமக்க வேண்டும்.

சுமைகள் நீங்குவதில்லை.

இளைப்பாறுதலும் நீங்குவதில்லை.


Tuesday, July 13, 2021

தந்தையே

இன்றைய (14 ஜூலை 2021) நற்செய்தி (மத் 11:25-27)

தந்தையே

தன் வாழ்வின் இருத்தல், இயக்கம் என அனைத்தும் தன் தந்தையால்தான் என்று வாழும் இயேசு தன் வாழ்வின் வெற்றியையும் அதனால் வரும் நேர்முகமான உணர்வையும் நன்றியாக தன் தந்தையிடம் எழுப்புகின்றார்.

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், தன் செய்தி கேட்டு மனம் மாறாத நகரங்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. இன்றைய வாசகத்தில், தன் செய்தி தன் திருத்தூதர்கள் வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களுக்காக நன்றி கூறுகின்றார்.

நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் கடவுளின் கைகளிலிருந்து வருகின்றன என்பதை உணர்வதும், அந்த உணர்வில் வாழ்வதும் நம்பிக்கைப் பயணம். நம்பிக்கை கொண்டிருப்பவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

 

Monday, July 12, 2021

மனம் மாறவில்லை

இன்றைய (13 ஜூலை 2021) நற்செய்தி (மத் 11:20-24)

மனம் மாறவில்லை

தன் போதனைகளைக் கேட்டு, வல்ல செயல்களைக் கண்டு மனம் மாறாத நகரங்களை இயேசு சபிக்கின்றார். 'ஐயோ! கேடு!' என்று இயேசு சாபமிடுதல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

'பகைவருக்கும் அன்பு' என்று கற்பித்த இயேசு எப்படி சாபம் கொடுக்க முடியும்? என்ற கேள்வியும் எழுகின்றது.

கொராசின் மற்றும் கப்பர்நாகூம் நகரங்கள் மனம் மாறாமல் இருக்கக் காரணங்கள் மூன்று என்று குறிப்பிடலாம்: (அ) தங்களுடைய பழைய வாழ்க்கை போதும் என்ற மனநிலையில் இருந்திருப்பார்கள். (ஆ) புதியது பழையதை விட ஈர்ப்பானதாகத் தோன்றாமல் இருந்திருக்கும். (இ) தன் கவனத்தை தன் வளர்ச்சியின்மேல் மட்டும் காட்டியிருப்பார்கள்.

இயேசுவின் போதனை அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைக்கிறது. மனமாற்றம் நடைபெறாதபோது இயேசுவின் சாபம் நம்மேல் விழுகிறது. அவருடைய சாபம் நமக்கு அவர் விடுக்கும் எச்சரிக்கையே அன்றி, நம்மேல் அவர் இடும் கண்டனம் அல்ல.

இன்றைய முதல் வாசகத்தில் மோசே வியத்தகு முறையில் காப்பாற்றப்படுவதையும், அவர் தன் இனத்தாருக்கு எதிராகக் குரல் எழுப்புவதையும் வாசிக்கின்றோம். தன் பாரவோனின் அரண்மனையில் வளர்ந்தாலும் தன் மனத்தை தன் இனத்தின்மேலேயே பதிய வைக்கின்றார் மோசே.

Sunday, July 11, 2021

ஆண்டவரின் பெயரே

இன்றைய (12 ஜூலை 2021) நற்செய்தி (மத் 10:34-11:1)

ஆண்டவரின் பெயரே

இன்றைய பதிலுரைப்பாடல் (காண். திபா 124), 'ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே!' என்ற மிக அழகான வாக்கியத்தைக் கொண்டிருக்கிறது.

போர் மற்றும் இயற்கைச் சூழலில் தங்களுக்குத் துணை என்று யாரும் இல்லாத சூழலில், 'ஆண்டவரின் பெயரே' தங்களுக்குத் துணை என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இதை நாம் இரண்டு நிலைகளில் புரிந்துகொள்ளலாம். ஒன்று, 'ஆண்டவரின் பெயர்' எருசலேம் ஆலயத்தில் குடியிருந்தது என்று இஸ்ரயேல் மக்கள் நம்பினர். இரண்டு, ஒருவரின் பெயர் என்பது அவருடைய உடனிருப்பைக் காட்டுகிறது.

நற்செய்தி வாசகத்தில், தன் பெயரின் பொருட்டு சீடர் ஒருவரின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்படும் தாக்கத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றார் இயேசு. மேலும், இதன் பின்புலத்தில் சீடத்துவத்திற்கான பாடங்களையும் முன்வைக்கின்றார்: (அ) இயேசுவை முதன்மையானதாக் தெரிந்துகொள்ள வேண்டும். (ஆ) தன் சிலுவையைச் சுமக்க வேண்டும். (இ) தன் உயிரை இழக்கத் துணிய வேண்டும்.

முதல் வாசகத்தில், யோசேப்பை அறிந்திராத பாரவோன் ஒருவர் எழுந்து இஸ்ரயேல் மக்களை ஒடுக்க முயற்சி செய்கின்றார்: (அ) கடும் வேலையைக் கொடுக்கின்றார். (ஆ) கொடுமைப்படுத்துகின்றார். இதனால் அவர்களின் வாழ்வு கசந்துபோகும்படி செய்கின்றார். (இ) குழந்தைகளை நைல் நதியில் எரிந்துவிடுமாறு சொல்கின்றார்.

ஒட்டுமொத்தமாக ஆண்டவரின் பெயரே துணையாக இருக்கிறது.

Saturday, July 10, 2021

வியத்தகு மாற்றங்கள்

ஆண்டின் பொதுக்காலம் 15ஆம் ஞாயிறு

வியத்தகு மாற்றங்கள்

பழைய பொருள்கள் விற்கக்கூடிய கடை ஒன்றில் வயலின் ஒன்று நெடுநாள்களாகக் கிடந்தது. அதை எப்படியாவது விற்றுவிட வேண்டும் என்பதற்காக கடை உரிமையாளர் அதன் விலையைக் குறைத்துக்கொண்டே வந்தார். அதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. ஒரு கட்டத்தில் அதை யாராவது ஒருவருக்கு இலவசமாகக் கொடுத்துவிடவும் நினைத்தார். 'இதை வைத்து அடுப்புதான் எரிக்க முடியும்' என்று பலர் அதை வாங்குவதைத் தவிர்த்தனர். ஒருநாள் வயலின் இசைக்கலைஞர் ஒருவர் அவ்வழியே செல்ல நேரிட்டது. கடையில் ஓரமாகக் கிடந்த வயலின் அவருடைய பார்வையை ஈர்த்தது. 'இதை நான் பார்க்கலாமா?' எனக் கேட்ட அவர், அங்கிருந்த பழைய துணியால் அதை நன்றாகத் துடைத்து, அறுந்துபோன கம்பிகளை இழுத்துக் கட்டி, அந்த வயலினை மீட்டத் தொடங்குகின்றார். வயலின் இசை கேட்ட மக்கள் அப்படியே மெய்மறந்து நிற்கின்றனர். சிறிது நேரம் மீட்டிய அவர் அதை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வழியே தொடர்கின்றார். 'இந்த வயலின் எனக்கு வேண்டும்' என்று ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு அதை வாங்க விரும்புகின்றனர். உரிமையாளரோ அதைத் தனக்கென வைத்துக்கொள்ள விரும்பினார்.

அடுப்பெரிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்று சொல்லப்பட்ட வயலின் வியத்தகு இசை எழுப்பும் இசைக்கருவியாக மாறியது எப்படி?

இசைக்கலைஞனின் தொடுதல் அதன் மதிப்பை மாற்றுகிறது.

இறைவனின் தொடுதல் மனிதரில் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது எனச் சொல்கிறது இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தை அதன் வரலாற்றுப் பின்னணியில் காண்போம். சாலமோனுக்குப் பிறகு ஒருங்கிணைந்து இஸ்ரயேல் பேரரசு, வடக்கே 'இஸ்ரேல்', தெற்கே 'யூதா' என்று இரண்டாக உடைகின்றது. எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதாவில் தாவீது அரசரின் தனிப்பெரும் வழிமரபினர் என்றும், உடன்படிக்கையின் பணியாளர்கள் என்றும் தன்னை அழைத்துக்கொண்ட அவருடைய மைந்தர்கள் ஆட்சி செலுத்துகின்றர். வடக்கே சமாரியாவைத் தலைநகரமாகக் கொண்டு தாவீது அரசரின் நேரடி வழிமரபில் வராதவர்கள் ஆட்சி செய்கின்றனர். வடக்கே இருந்த பல முதன்மையான வழிபாட்டுத் தலங்களில் பெத்தேலும் ஒன்று. குலமுதுவர் யாக்கோபின் காலத்திலிருந்து பெத்தேல் ஒரு வழிபாட்டுத் தலமாக இருந்துவந்தது.

வடக்கே நிலவிய உடன்படிக்கைப் பிறழ்வுகளையும், கடவுளின் திருச்சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளையும் கண்டிக்கவும், வடக்கே உள்ள அரசர்களையும் தலைவர்களையும் எச்சரிக்கவும் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் ஆமோஸை அனுப்புகின்றார். ஆமோஸ் தெற்கே உள்ள யூதாவைச் சார்ந்தவர். அவருடைய சமகாலத்தவரான ஓசேயா போல அன்று நிலவிய சமூக அநீதியையும் பிறழ்வுகளையும் கண்டிக்கின்றார் ஆமோஸ். தெற்கே இருந்த வந்த ஒருவன் நமக்கு அறிவுரை சொல்வதா என்று நினைக்கின்றனர் வடக்கே உள்ள தலைவர்கள்.

இந்தப் பின்புலத்தில் பெத்தேலின் தலைமைக்குருவான அமட்சியாவுக்கும் ஆண்டவராகிய கடவுளின் இறைவாக்கினரான ஆமோஸூக்கும் இடையே ஏற்படும் முரண்தான் இன்றைய முதல் வாசகம். பெத்தேலின் தலைமைக்குரு என்ற நிலையில் அமட்சியா அதிகாரம் பெற்றிருந்தவராகவும், வடக்கே உள்ள அரசர்களின் ஆலோசகராகவும் இருந்தார். அரச அலுவலர் என்ற அடிப்படையிலும் அதிகாரம் பெற்றிருந்தார். அரசரின் எண்ணங்களை நிறைவேற்றுவதும், அரசருடைய பெயரால் அவ்வழிபாட்டுத் தலத்தை நிர்வாகம் செய்வதும் அவருடைய பணியாக இருந்தது.

ஆனால், அமட்சியாவுடன் ஒப்பிடும் போது ஆமோஸ் ஆடு மேய்ப்பவர், தோட்டக்காரர். இறைவாக்கினர் பணி அல்லது இறைவாக்கினர் குடும்பப் பின்புலம் என்ற எந்த அதிகாரமும் அவருக்கு இல்லை. ஆனால், அவருடைய இறைவாக்கினர் அதிகாரத்தின் ஊற்றாக இருந்தது கடவுளின் அழைப்பு. ஆமோஸ் தன் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என அரசரின் அதிகாரத்தின் பெயரால் ஆணையிடுகின்றார் அமட்சியா. ஆனால், ஆமோஸ் தன் அதிகாரம் தன்னுடையது அல்லது இறைவனுடையது எனத் துணிந்து நிற்கின்றார். மேலும், ஆமோஸ் இறைவாக்கினரின் பணியின் உண்மைத்தன்மையை விளக்குவதாகவும் இப்பகுதி உள்ளது. கடவுளின் குறுக்கீடு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரை அரசருக்குச் சவால்விடும் இறைவாக்கினராக மாற்றுகிறது. ஆற்றல் இல்லாத ஒருவரை ஆற்றல்படுத்துகின்றது.

ஆக, இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றத்தை ஆமோஸ் வாழ்வில் ஏற்படுத்துகிறது.

இரண்டாம் வாசகம் எபேசியருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற கடிதங்களைப் போல இக்கடிதம் வாழ்த்து மற்றும் முன்னுரையுடன் தொடங்குவதில்லை. இதன் ஆசிரியர், இறைவனை நோக்கி எழுப்பப்படும் புகழாஞ்சலி போல இக்கடிதத்தைத் தொடங்குகின்றார். நம்பிக்கையாளர்கள்மேல் 'கடவுள் பொழிந்துள்ள விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி' அனைத்தையும் அவர் அறிந்து ஏற்றுக்கொள்கின்றார்.

'தூயாராகவும் மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்' எனச் சொல்கின்றார் ஆசிரியர். ஆக, நம்பிக்கையாளர்கள் தூய்மையாகவும் மாசற்றும் இருந்ததால் கடவுள் அவர்களைத் தேர்ந்துகொள்ளவில்லை. மாறாக, அவர்கள் எந்நிலையில் இருந்தாலும் தூய்மையான மற்றும் மாசற்ற நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்துகொள்கின்றார். இந்த நோக்கம் கிறிஸ்து வழியாக நிறைவேறுகிறது. கிறிஸ்துவே தன் இரத்தத்தால் அவர்களை மீட்டுத் தூய்மைப்படுத்துகின்றார். கிறிஸ்துவின் வழியாகக் கடவுளோடு ஒப்புரவான அவர்கள் மேன்மையான எதிர்காலத்தைப் பெறுகின்றனர்.

இரண்டாவதாக, கிறிஸ்து வழியாக அனைத்தும் ஒன்றுசேர்க்கப்பட வேண்டும் என்பது இறைவனின் திருவுளம் என எழுதுகின்றார். ஆக, நம்பிக்கையாளர்கள் வழியாக இறைவனின் திருவுளம் நிறைவேறுகிறது. இறைவனின் மீட்புத் திட்டத்தில் நம்பிக்கையாளர்கள் முதன்மையான பங்காற்றுகின்றனர்.

இறுதியாக, இந்த அழைப்பு அல்லது மேன்மையான நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றார் ஆசிரியர். வேற்று தெய்வங்களை வணங்கி, தாழ்வான வாழ்க்கை நிலையில் இருந்த மக்கள் இப்போது தூய ஆவியால் முத்திரையிடப்பட்டவர்களாக இருக்கின்றனர். 'முத்திரையிடப்படுதல்' என்பது முதன்மையாக தெரிவுசெய்யப்படுதலைக் குறிக்கிறது. அதாவது, அவர்கள் எல்லாரையும் போன்றவர்கள் அல்லது முகமற்றவர்கள் அல்லர். மாறாக, தங்களுக்கென ஒரு மேன்மையான அடையாளத்தைக் கொண்டிருந்தவர்கள். இந்த மேன்மை இறைவனின் அழைப்பால் வருகின்றது.

ஆக, கிறிஸ்துவின் ஒப்புரவுச் செயல் வழியாக புறவினத்து மக்களையும் தன்னோடு ஒப்புரவாக்கிக்கொள்கின்ற கடவுள், நம்பிக்கையாளர்களுக்கு முத்திரையிடப்பட்டவர்கள் என்ற மேன்மையை வழங்குகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம், திருத்தூதர்கள் வாழ்வில் நிகழ்ந்த வியத்தகு மாற்றத்தை நம் கண்முன் கொண்டுவருகின்றது. மாற்கு நற்செய்தியின் இப்பகுதி வரை இயேசுவே நற்செய்தியைப் போதித்துக்கொண்டும், பிணிகளை நீக்கிக்கொண்டும், பேய்களை ஓட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால், இதுமுதல் அவருடைய சீடர்கள் அப்பணிகளைச் செய்வர். கலிலேயப் பகுதியில் மீன்பிடித் தொழில் செய்துகொண்டும், வரி வாங்கிக்கொண்டும், அல்லது தீவிரவாதிகளாகவும் இருந்தவர்களை தான் செய்த அனைத்துப் பணிகளையும் செய்யுமாறு ஆற்றல்படுத்துகின்றார். கடவுளின் ஆற்றல் இவ்வுலகில் செயல்படுகிறது என்பதற்கு அடையாளமாக அவர்கள் பேய்களை ஓட்ட வேண்டும். தங்களுடைய வாழ்வாதாரங்களாக இருக்கின்ற அனைத்தையும் விலக்கிவைத்துவிட்டு இறைவனின் பராமரிப்பை மட்டும் நம்பி அவர்கள் பயணம் செய்ய வேண்டும். அவரைப் போலவே அவர்கள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புறவினத்துப் பகுதிகளுக்குப் பயணம் செய்கின்ற யூதர்கள் புறவினத்து நகரங்களை விட்டு வெளியேறும்போது, தங்கள் கால்களில் ஒட்டியுள்ள தூசியை உதறிவிட்டுத்தான் தங்கள் ஊருக்குள் நுழைவர். இதே செயலைத் தன் சீடர்களும் செய்ய வேண்டும் எனச் சொல்வதன் வழியாக, நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் புறவினத்தார் போலக் கருதப்படுவர் என மறைமுகமாகச் சொல்கின்றார் இயேசு.

இயேசுவின் அதிகாரத்தை ஏற்றுச் சென்றவர்கள் போதிக்கின்றனர், பேய்களை ஓட்டுகின்றனர், பிணிகளை நீக்குகின்றனர்.

சாதாரண மனிதர்களாக இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் அதிகாரத்தால் வியத்தகு ஆற்றல் பெற்றவர்களாக மாறுகின்றனர்.

ஆக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, இறைவனின் தொடுதல் அல்லது அதிகாரம் சாதாரண மனிதர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் வியத்தகு மாற்றங்களை நம் கண்முன் கொண்டுவருகின்றது. தெக்கோவா நகரத்தின் ஆடு மேய்ப்பவர் இஸ்ரயேலின் இறைவாக்கினராக மாறுகின்றார். சிலைவழிபாட்டிலும் அறநெறிப் பிறழ்விலும் கிடந்த எபேசு நகர மக்கள் தூயோராகவும் மாசற்றோராகவும் மாறுகின்றனர். கலிலேய மீனவர்களும் பாவிகள் எனக் கருதப்பட்டவர்களும் இறைவன் மட்டுமே செய்யக்கூடிய நலம் தரும் பணியையும், தீமை அகற்றும் பணியையும் செய்கின்றனர்.

இறைவனின் தொடுதல் வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்துவதை நாம் விவிலியத்தின் பல இடங்களில் வாசிக்கின்றோம். தன் மாமனாரின் மந்தையைப் பராமரித்து வந்த மோசே மிகப்பெரும் தலைவராக மாறுகின்றார். சக்கேயு அனைத்தையும் இழக்க முன்வருகின்றார். சமாரியப் பெண் முதன்மையான நற்செய்திப் பணியாளர் ஆகின்றார்.

இறைவன் நம் வாழ்வில் எப்படி வியத்தகு மாற்றங்களை நிகழ்த்துகிறார்?

(அ) நம் வாழ்க்கைப் பாதையை மாற்றுவதன் வழியாக

ஆடுமேய்க்கும் பணி செய்துகொண்டிருந்த ஆமோஸின் வாழ்க்கைப் பாதையை மாற்றி வடக்கே இஸ்ரயேலுக்கு இறைவாக்கினராக அனுப்புகின்றார் கடவுள். ஆசிரியப் பணி செய்ய வந்த அன்னை தெரசாவின் பாதையை மாற்றுகின்றார். பேராசிரியப் பணி செய்துகொண்டிருந்த சவேரியாரின் பாதை மாற்றப்படுகிறது. போரில் குண்டடிபட்டுக் கிடந்த இனிகோவின் பாதை மாறுகிறது. ஆக, பாதை தவறுவதில் அல்ல, மாறாக, பாதை மாறுவதில் இறைவனின் அருள்கரம் இருக்கிறது.

(ஆ) புதிய நோக்கு அல்லது இலக்கை நிர்ணயம் செய்வதன் வழியாக

எபேசு நகர மக்களின் வாழ்வியல் நோக்கு அல்லது இலக்கை மாற்றுகின்றார் கடவுள். தங்கள் சிலைகளின்மேல் இருந்த பார்வையை அவர்கள் இனி இயேசுவின் சிலுவை நோக்கித் திருப்ப வேண்டும். நம் வாழ்வின் நோக்கங்களையும் இலக்குகளையும் சில நேரங்களில் இறைவனின் திருப்புகின்றார், அல்லது கூர்மைப்படுத்துகின்றார்.

(இ) நம்மை வெறுமையாக்குவதன் வழியாக

உணவு, பை, செப்புக்காசு, உடை போன்றவற்றால் தங்கள் கைகளை நிரப்பிக்கொண்டனர் திருத்தூதர்கள். வெறுமையான கைகளே இறைவனின் அருளை நிறைவாகக் கொள்ள முடியும் என்பதற்காக, அவர்களின் நிறைந்த கைகளை வெறுமையாக்குமாறு பணிக்கின்றார். 'இது ஏன் இன்று நம்மை விட்டுப் போனது!' என்று நாம் எதையாவது குறித்து ஏங்கி, வெறுமையை உணர்கின்றோம் என்றால், கடவுள் அதைவிட மேன்மையான ஒன்றை நம் கைகளில் கொடுக்கப்போகிறார் என்பது பொருள். ஒரே கையில் செப்புக்காசையும் இறைவனின் அருளையும் பெற்றுக்கொள்ள இயலாது என்பது இயேசுவின் போதனை.

இறுதியாக,

இன்று நாம் பலருடைய வாழ்வில் வியத்தகு மாற்றங்களைக் கொண்டுவருகிறோம். பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டுவருகின்றனர். ஆசிரியருடைய உடனிருப்பு மாணவரின் அறிவைப் பெருக்குகிறது. அருள்பணியாளரின் உடனிருப்பு இறைமக்களின் ஆன்மிக மாற்றத்திற்கு உதவுகிறது. மருத்துவரின் இருத்தல் நோய் நீக்குகிறது. இவை அனைத்திற்கும் மேலாக இறைவனின் உடனிருப்பும் தொடுதலும் நம்மை முழுமையாகப் புரட்டிப்போட்டு, வியத்தகு மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

நாம் பாதை மாறத் தயாராக இருக்கும்போதும், நம் இலக்கு மற்றும் நோக்கைக் கூர்மைப்படுத்தும்போதும், நம் கைகளை வெறுமையாக்கும்போதும் அவரின் தொடுதலை உணர முடியும்.

'ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்!' என்னும் திருப்பாடல் ஆசிரியரின் (காண். திபா 85) விண்ணப்பமே நம் விண்ணப்பமாகவும் இருப்பதாக!

Thursday, July 8, 2021

இறுதிவரை மனவுறுதி

இன்றைய (9 ஜூலை 2021) நற்செய்தி (மத் 10:16-23)

இறுதிவரை மனவுறுதி

'ஆண்டவரை நம்பு. நலமானதைச் செய். நாட்டிலேயே குடியிரு.
நம்பத் தக்கவராய் வாழ். ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்.
உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.'

இன்றைய பதிலுரைப் பாடல் (காண். திபா 37) வரிகள் இன்றைய வாசகங்களின் பொருளை மிக அழகாக விளக்குகின்றது. இயேசுவால் பணிக்கு அனுப்பப்படும் திருத்தூதர்கள் இயேசுவின் காலத்திலும், இயேசுவின் காலத்திற்குப் பின்னும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்ப்புகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் எப்படி பதிலிறுப்பு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இன்றைய நற்செய்தியின் கருத்துரு இயேசுவின் காலத்திற்குப் பின்னர் மத்தேயு குழுமத்தில் எழுந்த பிரச்சினைகளைப் பற்றியதாகவே இருக்கிறது.

இயேசுவின் காலத்திற்குப் பின்னரே அவருடைய திருத்தூதர்கள் மிக அதிகமான துன்பங்களை எதிர்கொண்டனர். புதிய நம்பிக்கையாளர்களும் துன்பங்களுக்கு ஆளாகினர். இவற்றைப் பற்றி இயேசுவே முன்னுரைத்ததாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

'ஓநாய்களிடையே ஆடுகள்' என்பதுதான் திருத்தூதர்களின் உருவகம். அதாவது, முற்றிலுமான கையறு நிலையில் சீடர்கள் தங்கள் பணியை எதிர்கொள்ள வேண்டும். ஓநாய்களிடமிருந்து அவர்கள் இரக்கத்தை எதிர்பார்க்க முடியாது. சீடர்கள் முன்மதி மற்றும் கபடற்ற தன்மை கொண்டிருத்தல் வேண்டும்.

ஆக, பிரச்சினைகள் இருக்காது என்ற போலியான வாக்குறுதியை இயேசு கொடுக்கவில்லை. மாறாக, பிரச்சினைகள் இருக்கும் என்பது எதார்த்தம் என்கிறார். தூய ஆவியாரின் உடனிருப்பு இருக்கும் என்ற ஆறுதலை அவர்களுக்கு வழங்குகிறார்.

'இறுதிவரை மனவுறுதி' என்பதுதான் இயேசுவின் இறுதிப்பாடமாக இருக்கிறது.
நம் மனவுறுதியைப் பாதிக்கக்கூடிய காரணிகள் அல்லது எதிர்மறை உணர்வுகள் மூன்று: ஒன்று, தாழ்வு மனப்பான்மை, இரண்டு, பயம், மூன்று, குற்றவுணர்வு.

திருத்தூதர்கள் அல்லது மத்தேயுவின் குழும உறுப்பினர்கள் மேற்காணும் எதிர்மறை உணர்வுகளால் மனவுறுதியை இழந்திருப்பார்கள். அந்த நேரத்தில்தான் மத்தேயு அவர்களுக்கு ஊக்கம் தருகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், யாக்கோபு தன் மகன் யோசேப்பைக் கண்டுகொள்கின்றார்:

'இப்போது நான் சாகத் தயார். நீ உயிரோடுதான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!'

மேற்காணும் வார்த்தைகளில் யாக்கோபின் ஏக்கமும் எதிர்பார்ப்பும் அவர் அனுபவித்த துன்பமும் தெரிகிறது.

தன் மகனைக் காண்போம் என்ற எண்ணம் அல்ல, மாறாக, தன் இறைவன் நம்பிக்கைக்குரியவர் என்ற மனவுறுதியே அவரைத் தன் மகனின் மடியில் சேர்த்தது.