Wednesday, June 17, 2015

ஐந்து கேள்விகள்

நான் மதுரை ஞானஒளிவுபுரம் தூய வளனார் ஆலயத்தின் வளாகத்திலிருந்த, பத்தாம் பத்திநாதர் குருமட மாணவர்களின் கண்காணிப்பாளராக இருந்தபோது, அங்கே குருமட இயக்குநராக இருந்தவர் அருட்பணி. பிரிட்டோ பாக்கியராஜ் அவர்கள். அவரைப் பார்க்க யாரேனும் வரும்போது, நான் அவரிடம் போய், 'ஃபாதர் உங்களைப் பார்க்க யாரோ ஒருவர் வந்திருக்கிறார்?' என்று சொல்வேன். 'யார் வந்தாலும், அவங்க யாரு, என்ன, எங்கிருந்து வந்திருக்காங்க, ஏன் வந்திருக்காங்க, கண்டிப்பா பார்க்கணுமா என ஐந்து கேள்வி கேட்கணும்!' என்று சொல்வார் அவர். 'உங்களைப் பார்க்க வந்தவங்ககிட்ட நான் ஏன் கேள்வி கேட்கணும்!' என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே அவரின் அறையை விட்டு வெளியே வருவேன்.

விவிலியத்தின் எந்த ஒரு பகுதியை ஆராய்ச்சி செய்யும்போதும் நாம் ஐந்து கேள்விகள் கேட்க வேண்டும்:

1. யார் எழுதினார்?
2. யாருக்கு எழுதினார்?
3. என்ன எழுதினார்?
4. எப்படி எழுதினார்?
5. ஏன் ஏழுதினார்?

இந்த ஐந்து கேள்விகளும் எழுதியவரை மையப்படுத்திய கேள்விகள்.

1. யார் எழுதினார்?

எழுதுகின்ற நபரை வைத்து எழுதப்பட்டதை ஏறக்குறைய புரிந்து கொள்ளலாம். பவுலின் நடை ஆசிரிய நடை போல இருக்கும். யோவானின் நடை காற்றில் எழுதியது போல இருக்கும். லூக்காவின் நடை கதை சொல்லி போல இருக்கும். ஆக, எழுதியவர் யார், அவரின் பின்புலம் என்ன என்பது முதல் கேள்வி.

2. யாருக்கு எழுதினார்?

விவிலியத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் யாரோ ஒருவரை மனதில் வைத்து எழுதப்பட்டது. நற்செய்தியாளர் தங்கள் நற்செய்திகளை முதலில் தங்கள் திருச்சபைகளுக்குத்தான் எழுதுகின்றனர். இரண்டாயிரம் வருடத்திற்குப் பின்னும் இந்த நூல்களை மக்கள் படிப்பார்கள் என அவர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆக, ஒவ்வொரு நற்செய்தி நூலிலும் அந்தந்த நற்செய்தியாளரின் திருச்சபை சந்தித்த வாழ்வியல் பிரச்சினைகள் பிரதிபலிக்கின்றன.

3. என்ன எழுதினார்?

எழுதியது உரைநடையா அல்லது பாடலா என்று நாம் பார்க்க வேண்டும். உரைநடையையும், பாடலையும் ஒரே மாதிரி நாம் புரிந்து கொள்ள முடியுமா? இல்லை.

4. எப்படி எழுதினார்?

'மையை வைத்து எழுதினார்!' அல்லது 'பேனாவை வைத்து எழுதினார்' என்பது இதற்கு விடையல்ல. 'எப்படி' என்பது எழுத்து அமைப்பை ஆராய்ச்சி செய்வது. அவன் கட்டடம் கட்;டினான் என்று சொல்கிறோம் என வைத்துக்கொள்வோம். எப்படிக் கட்டினான்? செங்கலை வைத்து என்று சொல்லக் கூடாது. அவன் அதை வீடாகக் கட்டினானா, அல்லது மருத்துவமனையாகக் கட்டினானா, அல்லது பள்ளிக்கூடமாகக் கட்டினானா என்று நாம் சொல்ல வேண்டும். எல்லாம் கட்டிடம்தான். ஆனால், 'அமைப்பு' தான் வீட்டை, வகுப்பறையிலிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. ஒவ்வொரு இலக்கிய அல்லது விவிலியப் பகுதியிலும் ஒரு அமைப்பு இருக்கும். அந்த அமைப்பைக் கண்டுபிடித்துவிட்டால் அதன் பொருளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

5. ஏன் எழுதினார்?

நாம் பேசும் வார்த்தைகளுக்குக் காரணம் அல்லது நோக்கம் இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. ஆனால், நாம் எழுதும் ஒவ்வொன்றுக்கும் காரணம் அல்லது நோக்கம் இருக்க வேண்டும். 'நான் சும்மாதான் எழுதினேன்!' என்று நாம் எதையும் சொல்ல முடியாது. நாம் எழுதும் கடிதம், மறையுரை, ஏன் டோபி லிஸ்ட் அல்லது மளிகை லிஸ்ட் கூட ஒரு காரணம் அல்லது நோக்கத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த ஐந்து கேள்விகளின் அடிப்படையில் மத்தேயு 20:1-16ஐயம் பார்க்க வேண்டும்?

1. யார் எழுதினார்? மத்தேயு.
2. யாருக்கு எழுதினார்? அவரின் திருச்சபைக்கு.
3. என்ன எழுதினார்? ஒரு உவமை.
4. எப்படி எழுதினார்? திருச்சபையில் நிலவிய இரட்டிப்புத்தன்மையை பிரதிபலித்து.
5. ஏன் எழுதினார்? தன் திருச்சபையின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண.



2 comments:

  1. மூன்று நீண்ட வருடங்கள் முட்டி மோதித் தான் படித்ததை ...தான் கற்றதை.....தான் பெற்ற இன்பத்தை ...இவ்வையகத்துக்கும் தர நினைக்கும் தந்தையின் பெரிய மனதுக்கு ஒரு சபாஷ்!!! கண்டிப்பாக இனி எந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தாலும்,படிக்க நினைத்தாலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள ஐந்து கேள்விகளை மையப்படுத்துவோம் என்பதை சொல்ல விழைகிறேன்.நெற்பயிருக்காகப் பாய்ச்சப்பட்ட நீர் என்போன்ற புற்பூண்டுகளுக்கும் கூடப் பாய்ந்தால் நல்ல விஷயம்தானே!

    ReplyDelete
  2. Thank you, Father.

    ReplyDelete