Wednesday, June 30, 2021

எழுந்து நட

இன்றைய (1 ஜூலை 2021) நற்செய்தி (மத் 9:1-8)

எழுந்து நட

இயேசு மீண்டும் மறுகரைக்கு வருகின்றார். இப்போது அவர் தன் சொந்த ஊருக்கு வருகின்றார். வருகின்ற வழியில் முடக்குவாதமுற்ற மனிதர் ஒருவரைக் கட்டிலில் கொண்டுவருகின்றனர். 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று சொல்லி, அவருக்கு நலம் தருகின்றார் இயேசு. ஒருவரின் பாவமே அவருடைய நோய்க்குக் காரணம் என்பது அன்றைய நம்பிக்கை. 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' என்ற கேள்வி அவர்களிடம் எழுகின்றது. தன்னை மானிட மகன் என இயேசு முன்வைக்கின்றார். மக்கள் கூட்டமோ, 'மனிதருக்கு அதிகாரம் தந்த கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர்.'

இயேசுவை ஒரு மனிதராக அவர்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு தன் சொந்த ஊரில் மனிதராக மட்டுமே இருக்க விரும்பியிருப்பார்.

கட்டிலில் கிடத்தப்பட்டு வந்தவர் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார். கட்டிலுக்கு அவர் அடிமை இல்லை. இயேசுவைச் சந்திக்கும் அவருடைய வாழ்வு புரட்டிப் போடப்படுகின்றது.

நம் வாழ்வில் நாம் இயேசுவை இறைவார்த்தையிலும், நற்கருணையிலும் சந்திக்கின்றோம். நாம் இன்னும் கட்டிலேயே படுத்திருக்கின்றோமா? அல்லது எழுந்து நடக்கின்றோமா?


Tuesday, June 29, 2021

மக்களைப் பிடித்த பேய்

இன்றைய (30 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:28-34)

மக்களைப் பிடித்த பேய்

'மறுகரைக்குச் செல்கின்ற' இயேசு கதரேனர் வாழ்ந்த பகுதிக்குச் செல்கின்றார். 'மறுகரைக்குச் செல்தல்' என்பது இயேசுவுக்குப் பிடித்தமான ஒரு செயல். 'மறுகரை' ஒரே நேரத்தில் நமக்கு ஈர்ப்பாகவும், கண்ணியாகவும் இருக்கிறது. நம் முதற்பெற்றோருக்கு விலக்கப்பட்ட கனி ஒரு மறுகரை. மறுகரைக்குச் சென்றவர்களில் மலர்ந்து மணம் வீசியவர்கள் பலர். அவர்களில் ஒருவர் முதல் ஏற்பாட்டு யோசேப்பு. அடிமையாகச் சென்ற அவர் ஆளுநராக மாறுகிறார். இளைய மகன் சொத்துகளை எடுத்து மறுகரைக்குச் செல்கின்றார். மீண்டும் தான் புறப்பட்ட மறுகரைக்கே மீண்டும் வருகின்றார்.

மறுகரைக்குச் செல்கின்ற இயேசு, 'பேய் பிடித்த நிலை' என்ற கரையிலிருந்து, 'விடுதலை பெற்ற நிலை' என்ற மறுகரைக்கு இரு இனியவர்களை அனுப்புகின்றார். பேய் பிடித்த இருவரும் இயேசுவைத் தங்களிடமிருந்து விலகுமாறு வேண்டுகின்றனர். பன்றிக் கூட்டத்திற்குள் பேய்கள் அனுப்பப்பட அவர்கள் விடுதலை பெறுகின்றனர். இப்போது மக்கள் கூட்டத்தினர் இயேசுவைத் தங்கள் நகரிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகின்றனர். வெளியேறிய பேய் பன்றிக்கூட்டத்திற்குள் போகவில்லை. மாறாக, ஊருக்குள்தான் சென்றிருக்கிறது.

எதற்காக அவர்கள் இயேசு தங்கள் நகரை விட்டு அகலுமாறு வேண்டினர்?

(அ) மறுகரையில் இருக்கின்ற அவர் தங்கள் கரைக்குள் வருவதை அவர்கள் விரும்பவில்லையா?

(ஆ) பன்றிக்கூட்டத்தின் இழப்பைப் போல இன்னும் பல இழப்புகளைச் சந்திக்க வேண்டும் என அஞ்சினார்களா?

(இ) பேய் பிடித்தவர்கள் பேய் பிடித்தவர்களாகவே இருத்தல் நலம் என அவர்கள் விரும்பினார்களா?

'ஏன் இங்கு வந்தீர்?' எனக் கேட்டனர் பேய் பிடித்தவர்கள்.

'எப்போது இங்கிருந்து செல்வீர்?' எனக் கேட்டனர் ஊரார்.

மறுகரைக்குச் சென்ற இயேசு மீண்டும் தன் கரைக்கு வருகின்றார். மறுகரையிலிருந்து பார்த்தால் தன் கரையும் மறுகரையே.

முதல் வாசகத்தில், ஆகாரும் அவருடைய அன்புக் குழந்தையும் சாரா மற்றும் ஆபிரகாம் ஆகியோரால் தங்கள் இல்லத்திலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கடவுளின் தெரிவு ஈசாக்கு என இருந்தாலும், பச்சிளங் குழந்தையை வீட்டை விட்டு வெளியேற்றுவதை நம் மனம் ஏற்க மறுக்கின்றது. ஓர் அப்பத்தையும் தோற்பை நிறையத் தண்ணீரையும் கொடுத்து அவர்களை அனுப்பும் ஆபிரகாமும் நம் பார்வையில் சிறியவராகவே தெரிகிறார். அப்பமும் தண்ணீரும் தீர்ந்துவிட அந்த அபலைப் பெண் ஆண்டவரை நோக்கி அழுகிறார். ஆண்டவரின் தூதர், 'அஞ்சாதே!' என அவரைத் தேற்றி, நீருள்ள கிணற்றை அவருக்குக் காட்டுகின்றார்.

நகரிலிருந்தும் வீட்டிலிருந்தும் வெளியே அனுப்பப்படுகிறவர்கள் அனைவரையும் ஆண்டவரின் தூதர் எதிர்கொள்வதில்லை.

அவர்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தொடங்கித் தொடர முயற்சி செய்கின்றனர்.

பேய் என்னவோ இன்னும் எல்லாரையும் பிடித்துக்கொண்டே இருக்கிறது!


Monday, June 28, 2021

திருத்தூதர்கள் பேதுரு-பவுல்

இன்றைய (29 ஜூன் 2021) திருநாள்

திருத்தூதர்கள் பேதுரு-பவுல்

உரோமைத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்கள் புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் திருநாளை இன்று நாம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:

(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்

நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.

(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்

பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.

(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்

தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.

புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின.

நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.


Sunday, June 27, 2021

சீடத்துவம்

இன்றைய (28 ஜூன் 2021) நற்செய்தி (மத்தேயு 8:18-22)

சீடத்துவம்

'முழுமையான இழப்பு,' 'முதன்மையான இலக்கு' - இவ்விரண்டும் சீடத்துவத்தின் இரு தூண்கள் என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் நமக்குத் தெளிவுபடுத்துகின்றார்.

மறைநூல் அறிஞர் ஒருவர் இயேசுவைப் பின்தொடர விரும்புகின்றார். இயேசுவின் சீடர்கள் குழாமில் மறைநூல் அறிஞர் ஒருவர் இருப்பது அவருக்கு நல்லதாக இருந்திருக்கும். யூத சமூகத்தில் மறைநூல் அறிஞர்கள் நிறைய மொழிகள் கற்றவர்களாக இருந்தனர். யூதர்களின் தோரா, இறைவாக்கினர்கள், மற்றும் திருப்பாடல்கள் நூல்களை விரித்துரைக்கும் ஆற்றலும் அதிகாரமும் அவர்களுக்கே இருந்தது. அத்தகையோரில் ஒருவர் இயேசுவின் சீடராக இருந்தால், இயேசுவின் போதனைகளுக்கு மக்கள் நடுவே இன்னும் வரவேற்பு இருக்கும். ஆனால், அந்த மறைநூல் அறிஞர் தன்னைப் பின்பற்றுவதைத் தடைசெய்கின்றார் இயேசு: 'நரிகளுக்கு பதுங்கு குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்குத் தலைசாய்க்கக்கூட இடமில்லை.'

இயேசுவின் சமகாலத்துப் போதகர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்திருந்தனர். அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப் படிப்பதுண்டு. அப்படி மாணவர்களாக வருகின்றவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் என எல்லாவற்றுக்கும் உத்தரவாதம் உண்டு. அந்தப் பின்புலத்தில் அவர் இயேசுவைப் பின்பற்ற விரும்பியிருக்கலாம். எனவே, இயேசு சீடத்துவத்துக்கான விலையைத் தெளிவுபடுத்துகின்றார். மனிதத் தேவைகளில் முதன்மையானதாக உணவு இருந்தாலும், சமூகவியலில் இருப்பிடமே முதன்மையான தேவை என மொழியப்படுகிறது. ஏனெனில், சொந்தமாக ஒரு வீடு இருந்தால் அந்த வீட்டுக்குள் அவர் உணவின்றியோ, அல்லது ஆடையின்றியோ கூட தன்மானத்தோடு இருந்துவிடலாம். இருப்பிடமும் இல்லாத நிலையே சீடத்துவம் என்கிறார் இயேசு. இன்னொரு வகையில், இப்படி இருப்பதில் மிகப்பெரிய கட்டின்மை இருக்கிறது.

இரண்டாவதாக, இன்னொருவரிடம் இயேசு தன்னைப் பின்பற்றுமாறு சொல்ல, அவரோ, 'நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' எனக் கேட்கின்றார். அவருடைய தந்தை இப்போது இறந்திருக்கலாம், அல்லது இறக்கும் நிலையில் இருக்கலாம். அல்லது யூத சமூக வழக்கத்தின்படி இறந்த ஓராண்டுக்குப் பின்னர் இறந்தவரின் எலும்புகளைச் சேகரிக்கும் சடங்கு ஒன்று உண்டு. அதை மனத்தில் வைத்து அவர் சொல்லியிருக்கலாம். ஆனால், இது சீடத்துவத்தின் கவனச்சிதறல் என எச்சரிக்கின்றார் இயேசு. மேலும், முதன்மையான இலக்காக சீடத்துவம் மட்டுமே இருக்க வேண்டும் என்பது இயேசுவின் அறிவுரை.

சீடத்துவம் என்பதை நாம் பல நேரங்களில் அருள்பணியாளர்கள் அல்லது துறவறத்தாருக்கு ஒதுக்கப்பட்ட பணி என நாம் நினைத்து ஒதுங்கிக்கொள்கிறோம்.

இயேசு விடுக்கும் சீடத்துவத்துக்கான அழைப்பு அனைவருக்கும் பொதுவானது.

முழுமையான இழப்பும், முதன்மையான இலக்குமே சீடத்துவத்தின் பாடம்.


Saturday, June 26, 2021

இருவகை வாழ்க்கை

ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் வாரம்

I. சாலமோனின் ஞானம் 1:13-15, 2:23-24  

II. 2 கொரிந்தியர் 8:7,9,13-15  

III. மாற்கு 5:21-43

இருவகை வாழ்க்கை

மனித குலம் தோன்றியது முதல் நாம் விடை தேடுகின்ற கேள்விகளில் ஒன்று, 'தீமை எங்கிருந்து வந்தது?' கடவுள் அனைத்தையும் நல்லதெனக் கண்டார் எனில், தீமை எப்படி வந்தது? கடவுள் நல்லவர் என்றால், அவர் தீமையை ஏன் அனுமதிக்கிறார்? தீமை இந்த உலகில் இருக்கிறது என்றால் கடவுள் வலிமை அற்றவரா? - இப்படி நிறைய மெய்யியல் கேள்விகளை மனுக்குலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. தீமைகளில் கொடிய தீமையாகக் கருதப்படுவது இறப்பு.

இறப்பை யாருக்கும் பிடிப்பதில்லை. பிறப்பு நமக்குப் பிடிப்பது போல இறப்பு பிடிப்பதில்லை. ஸ்டீவ் ஜாப்ஸ் சொல்வது போல, 'நீ இறந்தவுடன் விண்ணகத்திற்குச் செல்வாய்' என்று ஒருவரிடம் சொன்னாலும்கூட, அவருக்கு இறப்பதற்குப் பிடிப்பதில்லை. இந்த உலகை விட மறுவுலகம் நன்றாக இருக்கும் என்ற உறுதியைத் தந்தால்கூட இறப்பை யாரும் விரும்புவதில்லை. இந்த இறப்பு எப்படி வந்தது? என்ற கேள்விக்கு நிறைய இலக்கியங்களும் சமயங்களும் தத்தம் முறைகளில் விடை காண முயற்சி செய்கின்றனர். எடுத்துக்காட்டாக, கில்கமேஷ் என்ற சுமேரிய அக்காடிய இலக்கியத்தில், 'கடவுள் உலகைப் படைத்தபோதே இறவாமையைத் தனக்கென வைத்துக்கொண்டு இறப்பை நமக்குத் தந்துவிட்டார். ஆக, குறுகிய இந்த வாழ்க்கையில், நன்றாகக் குளி, நல்ல ஆடை அணி, நறுமணத் தைலம் பூசு, காதல் மனையாளைத் தழுவிக்கொள், அவள் பெற்றெடுக்கும் பிள்ளைகளைப் பேணி வளர். அதுவே இறவாமை' என்று இறவாமைக்கு புதிய பொருள் தரப்படுகின்றது.

இணைத்திருமுறை நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற சாலமோனின் ஞானநூல் இறப்பு எப்படி வந்தது என்பதற்கான விடையைச் சொல்லும் பகுதியே இன்றைய முதல் வாசகம். கிறிஸ்து பிறப்பதற்கு மிகவும் சில மாதங்களுக்கு முன்பு வடிவம் பெற்ற நூல் இது. கிரேக்கமயமாக்கலின் பின்புலத்தில் எழுதப்பட்ட நூல் மனித இறப்பு பற்றி பேசுகின்றது. நூலின் ஆசிரியர் இறப்பு எப்படி வந்தது என்பதை மிக எளிமையாகப் பதிவு செய்கின்றார்: 'சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை. அழிவில் அவர் மகிழ்வதில்லை. கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார். அலகையின் பொறாமையால் சாவு உலகில் வந்தது.' அதாவது, படைப்பின் தொடக்கத்தில் ஆதாம்-ஏவாள் பாம்பால் சோதிக்கப்பட்ட நிகழ்வை, அலகையின் பொறாமை என்று மொழிகின்றார் ஆசிரியர். அலகை இருக்கிறதா? என்ற அடுத்த கேள்விக்கு நாம் சென்றுவிட வேண்டாம். மாறாக, அனைத்தும், அனைவரும் வாழ வேண்டும் என விரும்புகின்றார்.

நாம் அனைவரும் வாழ வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார். இருந்தாலும், நாம் வாழும் இந்த உலகில் வாழ்வை அழிக்கக் கூடிய முதல் காரணியாக அன்று இருந்தது நோய். இன்றும், நோய்தான் முதன்மையான காரணி. அறிவியல் மற்றும் மருத்துவத் துறைகளில் நாம் முன்னேறினாலும் இன்று நோய்தான் வெல்ல முடியாத எதிரியாக நம் முன் உள்ளது.

இரு வகை நோய்களால் துன்பப்பட்டவர்கள் எப்படி இயேசுவால் நலம் பெற்றார்கள் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம். இரத்தப் போக்குடைய பெண் இயேசுவின் ஆடையைத் தொட்டவுடன் நலம் பெறுகின்றார். தொழுகைக் கூடத் தலைவரின் மகள் இயேசு தொட்டவுடன் உயிர் பெறுகின்றார். இரண்டு நிகழ்வுகள் ஒரே இடத்தில் பதிவு செய்யப்பட்டது பற்றி நிறையக் கருத்துகள் உள்ளன. இரண்டு நிகழ்வுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை. பெண் 12 ஆண்டுகள் நோயினால் வருந்துகிறார். இளவலுக்கு வயது 12. இரத்தம் உயிர் சார்ந்தது. இளவல் உயிர் துறக்கின்றார். இரண்டு இடங்களிலும் கூட்டம் தடையாக இருக்கின்றது. இரண்டு நிகழ்வுகளிலும் நம்பிக்கை வலியுறுத்தப்படுகின்றது. இளவல் இறப்பதற்கான தளத்தை பெண் நிகழ்வு ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொழுகைக்கூடத் தலைவரின் அவசரத்தைக் குறைப்பதற்காக நிகழ்வு நடக்கிறது. கூட்டம், பெண், இயேசுவின் உரையாடல் என அனைத்தும் இளவல் உயிர் பெறுவாரா? என்ற கேள்வியை வாசகரில் எழுப்புகிறது.

நம் வாழ்க்கையில் துன்பம் உண்டு என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய எதார்த்தம். நோய், முதுமை, இறப்பு போன்ற உடலியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது சோர்வு, தயக்கம், பயம், குற்றவுணர்வு, வெறுமை, தனிமை போன்ற உளவியல் துன்பங்களாக இருக்கலாம். அல்லது பாவம், உடனடி இன்பம் போன்ற ஆன்மிகத் துன்பங்களாக இருக்கலாம். துன்பங்களை நாம் தவிர்க்க முடியாது. ஆனால், துன்பங்களை நாம் இரண்டு முறைகளில் எதிர்கொள்ளலாம். அல்லது துன்பம் நிறைந்த இவ்வாழ்க்கையை நாம் இரண்டு முறைகளில் வாழலாம்.

ஒன்று, இரத்தப் போக்குடைய பெண் வாழ்ந்தது போல.

இரண்டு, தொழுகைக் கூடத் தலைவர் வாழ்ந்தது போல.

முதலில், இரத்தப் போக்குடைய பெண் போல எப்படி வாழ்வது?

நிகழ்வில் வரும் இந்தப் பெண் மூன்று நிலைகளில் துன்பம் அனுபவிக்கின்றார்: உடல்சார் துன்பம். உயிர் குடியிருக்கிறது என்று மக்கள் நம்பிய இரத்தம் அன்றாடம் வெளியேறிக்கொண்டிருக்க, இந்தப் பெண் வெளிறிப் போயிருப்பாள். இரண்டாவது, பொருள்சார் துன்பம். மருத்துவரிடம் தன் பணத்தை எல்லாம் செலவிட்டதாக நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார். ஆன்மிகம்சார் துன்பம். உடலில் ஒழுக்கு இருப்பது தீட்டு எனக் கருதப்பட்ட நிலையில் இந்தப் பெண் கடவுளிடமிருந்து தான் அந்நியப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்திருப்பார். உடல் வலி பொறுக்காமல், கையில் காசு இல்லாமல், கடவுளால் கைவிடப்பட்ட உணர்வில், தனக்கிருந்த இறுதி வாய்ப்பாக இயேசுவின் மேலாடையைப் பார்த்தார். தன் இயலாமையில், தன் இல்லாமையில் இயேசுவால் எல்லாம் இயலும் என்றும், அவர் வழியாகவே தன் இருத்தல் சாத்தியம் என்றும் உணர்ந்த அவர் கூட்டத்தை ஊடுருவுகின்றார். கூட்டம் இங்கே ஒரே நேரத்தில் தடையாகவும் வாய்ப்பாகவும் இருக்கிறது. கூட்ட மிகுதியால் இயேசுவை நெருங்க முடியவில்லை. அதே வேளையில் கூட்டம் இருந்ததால் தன் முகத்தை இயேசுவிடமிருந்து மறைத்துக்கொள்ளவும் இவரால் முடிந்தது. இயேசுவின் மேலாடையைத் தொட்ட அந்த நொடியில் தன் உடலில் மாற்றத்தை உணர்கின்றார் பெண். என்னே ஒரு ஞானம்! தன் உடலின் இயக்கத்தைத் தெளிவாக உணர்ந்தவராக இருக்கிறார். உடல் நலம் பெற்ற மகிழ்ச்சி சற்று நேரத்தில் களைகிறது. 'யார் என்னைத் தொட்டது?' என்ற இயேசுவின் கேள்வி இவளுடைய காதுகளில் விழுகிறது. இவ்வளவு நேரம் தன் உடல் போராட்டத்தை மட்டுமே எதிர்கொண்ட அவள், இப்போது, 'மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற உள்ளப் போராட்டம் அனுபவிக்கின்றாள். இருந்தாலும், இயேசுவிடம் சரணடைகின்றார். தனக்கு நடந்தது அனைத்தையும் சொல்கின்றார். 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என அனுப்புகிறார் இயேசு.

இந்தப் பெண், தன் பார்வையை இயேசுவின்மேல் பதிய வைத்தாள். தனக்கு முன் இருந்த கூட்டம் என்ற தடையை வாய்ப்பு எனப் பயன்படுத்தினார். இயேசுவிடம் சரணாகதி அடைந்தார். இயேசுவின் மேலாடைக்கும் நலமாக்கும் ஆற்றல் உண்டு என உணர்ந்தார். பாதியில் வந்தார். பாதியில் சென்றார். நலமற்று வந்தவர், உடலிலும் உள்ளத்திலும் நலம் பெற்றுச் செல்கின்றார்.

இரண்டாவதாக, தொழுகைக்கூடத் தலைவர் போல எப்படி வாழ்வது?

இயேசுவின் தொடுதல்தான் தன் மகளுக்கு நலம் தரும் என நம்புகிறார் தலைவர். இயேசு உடனடியாக அவருடன் செல்வது நமக்கு ஆச்சர்யம் தருகிறது. ஆனால், வேகம் உடனடியாகக் குறைகிறது. கூட்டம் ஒரு தடையாக மாறுகிறது. பாதியில் வந்து நலம் பெற்ற பெண் தடையாக இருக்கிறார். ஆனாலும், அந்த நிகழ்வைக் கண்டவுடன் தலைவரின் நம்பிக்கை உறுதியாகியிருக்கும். ஆனால், சற்று நேரத்தில் வந்த மகளின் இறப்புச் செய்தி அவருக்குப் பயம் தருகிறது. 'அஞ்சாதீர்! நம்பிக்கையை மட்டும் விட்டுவிடாதீர்!' என அவருக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. வீட்டில் இருந்த கூட்டம் இன்னொரு தடை. அவர்கள் பேசிய கேலிப்பேச்சு மற்றுமொரு தடை. தடைகளைத் தாண்டிச் சென்றவர் தன் மகளை நலமுடன் பெற்றுக்கொள்கின்றார்.

இந்த நிகழ்வில், நம்பிக்கையில் இவர் நிலைத்து நிற்க கடவுளின் துணை தேவைப்படுகிறது. ஆனால், முதல் நிகழ்வில், நம்பிக்கையால் உந்தப்பட்டு அந்தப் பெண் வருகின்றார். அங்கே, நம்பிக்கை பாராட்டப்படுகிறது. தலைவர் நிகழ்வில் நம்பிக்கை அறிவுறுத்தப்படுகின்றது.

ஆக, இரத்தப் போக்குடைய பெண் போல நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வாழ்வது முதல் வகை.

தலைவர் போல கடவுள் நமக்கு நம்பிக்கை தந்தால்தான் அவருடன் பயணிப்பது இரண்டாவது வகை.

இன்னொரு வகையான வாழ்க்கை முறையும் இருக்கிறது. கூட்டத்தின் மனநிலை. இயேசுவின் உடனிருப்பும் நம்பிக்கை நிறைந்த சொற்களும் அவர்களுக்குக் கேலியாக இருக்கின்றன. வாழ்க்கையின் துன்பத்தைக் கண்டே பழகிப் போனவர்கள் விரக்தியாகச் சிரிக்கிறார்கள்.

இவர்களுக்கு வேலைக்காரர்கள் பரவாயில்லை. 'உம் மகள் இறந்துவிட்டாள். போதகரைத் தொந்தரவு செய்யாதீர்!' என எதார்த்தமாகச் சொல்கின்றனர். 'பால் கொட்டிவிட்டது! இனி அழுது புலம்பி என்ன செய்ய?' என்பது அவர்களுடைய மனநிலை. பல நேரங்களில் இதுதான் நம் மனநிலையாகவும் இருக்கிறது.

ஆக, பெண், தொழுகைக்கூடத் தலைவர், கூட்டம், வேலைக்காரர்கள் என நாம் நம் வாழ்க்கையை நான்கு நிலைகளில் எதிர்கொண்டாலும், நம்பிக்கையின் பாடங்களைக் கற்பிப்பவர்கள் பெண்ணும் தலைவரும். பெண் கொண்டிருந்த நம்பிக்கை போல நம் நம்பிக்கை இருந்தாலும், அங்கே சில சஞ்சலங்கள் எழவே செய்கின்றனர். இறைவனின் உடனிருப்பால் அதைத் தக்கவைக்கின்றார் தலைவர்.

நம்பிக்கை என்பது கொடை. கடவுள் கொடுத்தாலன்றி அதை எவரும் பெற்றுக்கொள்ள இயலாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, கடவுளின் உடனிருப்பு மேலோங்கி நிற்கிறது. நாம் நோயுற்றாலும் இருந்தாலும் நாம் தொடும் தூரத்தில் கடவுள் இருக்கிறார், கடவுளின் மேலாடை இருக்கிறது.

இதுவே இயேசு கிறிஸ்துவின் அருள்செயல் என்று கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்றார் பவுல்: 'அவர் செல்வராய் இருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார்!'

இறுதியாக,

தீமை கண்டும், சாவு கண்டும், நோய் கண்டும் நாம் அஞ்சத் தேவையில்லை. இவை நம்மோடு இருந்தாலும், நமக்கு அருகில் இறைவன் இருக்கின்றார். கையை நீட்டி அவரைத் தொட்டாலோ, அவர் தன் கையை நீட்டி நம்மைத் தொட்டாலும் நாம் நலம் பெறுவோம்!

இதையே திருப்பாடல் ஆசிரியர் (காண். 30), 'நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்!' என்று பாடுகின்றார்.


Friday, June 25, 2021

இத்தகைய நம்பிக்கையை

இன்றைய (26 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:5-17)

இத்தகைய நம்பிக்கையை

தன் வார்த்தையின் ஆற்றலை அறிந்திருந்த நூற்றுவர் தலைவர், இயேசுவின் வார்த்தையின் ஆற்றலை அறிந்தவராக இருக்கின்றார். நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கை நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசுவும் அதை மிகவும் பாராட்டுகின்றார். இஸ்ரயேலில் அத்தகைய நம்பிக்கையைத் தான் கண்டதில்லை என்கிறார்.

தெருக்களில் போதித்துக்கொண்டிருக்கும் ஒரு போதகர் தன் வீட்டில் உள்ள பணியாளனைக் குணமாக்க இயலும் என்று எப்படி அத்தலைவனால் அறிந்துகொள்ள முடிந்தது? அறிந்துகொண்டாலும் அவருக்குக் கீழ் தன்னையே நிறுத்திக்கொள்ளும் தாழ்ச்சி எங்கிருந்து வந்தது?

தன் பணியாளன்மேல் உள்ள அக்கறை, இயேசுவில் அவர் கண்ட இறைமகன், தன் தகுதியற்ற நிலை அறிதல் என எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறார் இவர்.

இவருடைய வார்த்தைகளே நம் அன்றாட வார்த்தைகளாக திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம் பெறுகின்றன. இன்று இதே வார்த்தைகளைச் சொல்லும் நாம் அவரின் அதே நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முன்வருவோம்.


Thursday, June 24, 2021

உமது நோய் நீங்குக!

இன்றைய (25 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:1-4)

உமது நோய் நீங்குக!

இயேசுவிடம் நெருங்கி வருகின்ற தொழுநோய் பிடித்தவருக்கு இயேசுவின் ஆற்றல் தெரியும். இருந்தாலும் அவருடைய விருப்பம் பற்றிய தயக்கம் கொள்கின்றார். 'நீர் விரும்பினால் உம் நோய் நீங்குக!' என்கிறார் அவர். இயேசு தன் விருப்பத்தைத் தன் சொல்லாலும் செயலாலும் காட்டுகின்றார். இறைவனை நாடி வருகின்ற நம் வாழ்விலும் சில நேரங்களில் அவருடைய விருப்பம் பற்றிய தயக்கம் இருக்கிறது.

நம் அனைவருடைய வாழ்விலும் தூய்மை பெற வேண்டியவை நிறைய இருக்கின்றன. அவருடைய கைகள் நம்மேல் பட நாம் தூய்மை அடைகின்றோம். கடவுளின் வல்ல செயல்கள் பற்றிய பதிவுகளை வாசிக்கும்போதெல்லாம், இறைவனின் ஆற்றலுக்கு நாம் தயாராக இருக்கும்போது அவர் செயல்படுகிறார் என்பது தெளிவாகிறது.

இயேசுவின் இதய அதிர்வுகளை நாம் இங்கே அறிந்துகொள்ள முடிகிறது. பலர்முன் செய்துகாட்டப்பட்டு, பலரைத் தன்னிடம் ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு வல்ல செயலை, இயேசு யாரும் இல்லாத ஒரு நிலையில் தனி நபரிடம் செய்கின்றார். மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட தொழுநோயாளர் இறைவனின் தனிக்கவனம் பெறுகின்றார்.

அந்நியப்பட்டுக் கிடந்த நபரை மீண்டும் அவருடைய இல்லத்தின், சமூகத்தின் உறுப்பினர் ஆக்குகின்றார் இயேசு.

தன் வாழ்வில் மாற்றம் வேண்டும் என நினைத்தார் தொழுநோயாளர். நினைத்த அவர் அதை வெறும் எண்ணமாக வைத்துக்கொள்ளாமல் செயலில் இறங்குகின்றார். தன் தயக்கத்தையே இறைவனின் இயங்குதளமாக மாற்றுகின்றார்.

நம் வாழ்வில் நாம் தயக்கத்தினாலும் பயத்தினாலும் முற்சார்பு எண்ணத்தினாலும் நம்மையே அடைத்துக்கொண்டு வாழத் தவறிய பொழுதுகள் எத்தனை? எண்ணங்கள் செயல்களாக மாறவில்லை என்றால் அவை வெறும் எண்ணங்களாகவே மடிந்துவிடும்!

Wednesday, June 23, 2021

திருமுழுக்கு யோவான் பிறப்பு

இன்றைய (24 ஜூன் 2021) திருநாள்

திருமுழுக்கு யோவான் பிறப்பு

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் தொடங்கப்பட்ட ஒரு கருத்தியலின் பெயர் 'ஆன்ட்டிநேடலிசம்'. அதாவது, குழந்தை பிறப்பைத் தவிர்ப்பது. எதற்காக குழந்தைப் பிறப்பைத் தவிர்க்க வேண்டும்? இந்த உலகத்தில் நாம் படும் துன்பத்தை, நாம் எதிர்கொள்ளும் அநீதியை, நம்மை ஏமாற்றும் அரசியல் தலைவர்களை இனி வரும் குழந்தைகள் படக்கூடாது என்பதற்காக, குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் இருக்கத் தொடங்கினர் சிலர். ஆர்தர் ஸோப்பன்ஹவர் போன்ற மெய்யியலாளர்கள் இந்தக் கருத்தியலை மிகவும் அதிகமாக ஆதரித்தனர். குழந்தைகள் பிறப்பதை நிறுத்திக்கொள்வது அல்லது அதற்கு முயற்சி செய்வது ஒட்டுமொத்த மனுக்குலம் தற்கொலை செய்வதற்குச் சமம் என இன்னொரு குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

குழந்தைகள் இவ்வுலகில் வளர்ந்த பின்னர், அல்லது சிலர் பிறக்கும்போதே பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதிருந்தாலும், குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கும் சுற்றத்தாருக்கும் மகிழ்ச்சி தருகின்றது என்பதை நாம் மறுக்க இயலாது.

இன்று நம் தாய்த்திருஅவை புனித திருமுழுக்கு யோவானின் பிறப்பு பெருவிழாவைக் கொண்டாடுகிறது. யோவான், அன்னை கன்னி மரியா, மற்றும் இயேசு என்னும் மூவரின் பிறப்பை பெருவிழாவாக நாம் கொண்டாடுகின்றோம். இயேசுவின் பிறப்போடு தொடர்புடையது என்பதால், யோவான் மற்றும் அன்னை கன்னி மரியாவின் பிறந்த நாள்கள் கொண்டாடப்படுகின்றன.

திருமுழுக்கு யோவான் என்ற நபரின் பிறப்பு தருகின்ற செய்தி மகிழ்ச்சி என்ற ஒற்றைச் சொல்தான்.

தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான்.

ஆக, மகிழ்ச்சி என்பது எதில் அடங்கியுள்ளது என்பதை யோவான் நமக்குக் கற்றுத் தருகின்றார்:

(அ) தாழ்ச்சியில்

'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.

(ஆ) அடையாளங்கள் தவிர்ப்பதில்

'வரவிருப்பவர் நீர் தாமே?' என்று தம்மிடம் வந்தவர்களிடம், 'ஆம்! நான்தான்!' என்று சொல்லியிருந்தால், யோவானைக் கொண்டாடியிருப்பார்கள் மக்கள். ஆனால், தன் அடையாளம் எது என்று அறிந்த அவர், மற்ற அடையாளங்களைத் தவிர்க்கின்றார். இல்லாத ஒன்றை தனதாக்க அவர் விரும்பவில்லை.

(இ) குரல் கேட்பதில்

மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.

(ஈ) இரண்டாம் இடத்தில் இருப்பதில்

தன் வாழ்க்கை முழுவதும் தன் குழந்தை இரண்டாம் இடத்தில்தான் இருக்கும் என்று சக்கரியாவுக்கும் எலிசபெத்துக்கும் தெரிந்தது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயங்கியிருக்கலாம். ஆனால், இரண்டாம் இடத்தில் இருப்பதில் மகிழ்ந்தார் யோவான்.

(உ) தன் பணியைச் செய்வதில்

எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.

(ஊ) துன்பம் ஏற்பதில்

ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை.

மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு.

நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம்.

இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், 'ஒரு குழந்தை பிறந்துள்ளது!'


Tuesday, June 22, 2021

செயல்கள்

இன்றைய (23 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:15-20)

செயல்கள்

எரேமியா நூலில் அனனியா என்னும் போலி இறைவாக்கினர் பற்றி நாம் வாசிக்கின்றோம். பாபிலோனியாவுக்கு யூதா நாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள் என்ற செய்தியை எரேமியா அறிவிக்கின்றார். ஆனால், எரேமியாவின் செய்தி போலியானது என்றும், அவர் பொய் இறைவாக்கினர் என்றும், அரசருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றும் நடக்காது என்ற தவறான செய்தியை அனனியா உரைக்கின்றார். அனனியாவின் சொற்கள் அரசருக்குப் பிடித்துப் போக, எரேமியாவை கிணற்றில் தூக்கி எறிகின்றார். ஆனால், சில ஆண்டுகளில் எரேமியா சொன்னவாறே பாபிலோனியப் படையெடுப்பு நடந்தேறுகிறது. அந்த நேரத்தில்தான் மக்கள், அனனியாதான் போலி இறைவாக்கினர் என அறிந்துகொள்கின்றனர்.

இங்கே, சொல்கின்ற செய்தியும் நடக்கின்ற செயலும் ஒன்றோடொன்று ஒத்துப் போனால் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்கள் பற்றி எச்சரிக்கின்றார் இயேசு. அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லிவிட்டு, நல்ல மரம், நல்ல கனி என்னும் உருவகத்தைத் தருகின்றார்.

மரத்தின் இயல்பை வெளியில் காட்டுவது கனி. மனிதரின் இயல்பை வெளியில் காட்டுவது அவருடைய சொல்லும் செயலும். மனத்தில் எண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவர் யாரென்று நாம் அறிந்துகொள்கின்றோம். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட நம் இயல்பில் நாம் பேசும் சொற்களும் செய்யும் செயல்களும் நன்மையாகவே வெளிப்படும். அதுபோல நம் வாழ்வில் மாற்றம் வேண்டி நாம் பல முயற்சிகள் செய்கின்றோம். வெறும் செயல்களை மட்டும் மாற்ற முயற்சி செய்கின்றோம். ஆனால், உள்ளார்ந்த இயல்பு மாறினால்தான் வெளிப்புறத்திலும் மாற்றம் இருக்கும். எடுத்துக்காட்டாக, திருடுகின்ற ஒருவர் திருட்டுச் செயலை மட்டும் நிறுத்தினால் போதாது. அப்படி நிறுத்துவது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பேராசை என்ற உள்ளார்ந்த இயல்பு அகற்றப்பட்டால் வெளிப்புறத்தில் மாற்றம் வந்துவிடும் எளிதாக.


Monday, June 21, 2021

மூன்று இயல்பு உணர்வுகள்

இன்றைய (22 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:6, 12-14)

மூன்று இயல்பு உணர்வுகள்

உனக்கு மதிப்பு மிக்கது என நீ அறியும் ஒன்றை, அதன் மதிப்பு தெரிந்த ஒருவரிடம் பகிர்தல் வேண்டும். மதிப்பும் நோக்கமும் இணைந்தே செல்கின்றன. எனக்குப் பசி எடுக்கும்போது உணவு என் நோக்கமாக இருக்கிறது. அந்த நேரத்தில் மட்டுமே உணவுக்கு மதிப்பு உண்டு. பசி என்ற நோக்கம் இல்லை என்றால் உணவு என்பது வெறும் சுமையே. முத்துகளால் பன்றிகளுக்கு எந்த நோக்கமும் இல்லை. தூய்மையானது எதுவும் நாய்களுக்கு மதிப்பாகத் தெரிவதில்லை.

மற்றவர் எனக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புவதை நான் செய்வதே திருச்சட்டமும் இறைவாக்கும் என்கிறார் இயேசு. மற்றவர் என்னை மதிப்புடனும் மாண்புடனும் நடத்த வேண்டும் என நான் விரும்பினால் அவர்களையும் நான் அப்படியே நடத்த வேண்டும். என்னை அடுத்தவருடைய இடத்திலும் அடுத்தவரை என்னுடைய இடத்திலும் மாற்றி மாற்றி நிற்க வைத்து நான் வாழ வேண்டும். வழியில் செல்கிறேன். மற்றவர் என்னிடம் பேச வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் அடுத்தவரிடம் பேச முற்படலாமே! மற்றவர் என்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் மற்றவரை மன்னிக்கலாமே!

இடுக்கமான வாயில்! வாயில் உடலுக்கு இடுக்கமானது அல்ல. மாறாக, என் உள்ளத்துக்கு இடுக்கமானது. அதாவது, என் உடல் வாயிலுக்குள் நுழைந்துவிடும். பல நேரங்களில் நிறைய எண்ணங்களால் பிதுங்கி வழியும் என் தலை, என் மூளை, என் மனம் வாயிலுக்குள் நுழைய முடியாது. மிகக் குறுகலான அந்த வழியில் நான் நுழைய வேண்டுமெனில், அதீத எண்ணங்களை நான் விடுத்தல் வேண்டும். என் மூளையில் ஓடும் எண்ணங்கள் குறைந்தால் நான் நுழைந்துவிடலாம்.


Sunday, June 20, 2021

குறை சொல்வதும் களைவதும்

இன்றைய (21 ஜூன் 2021) நற்செய்தி (மத் 7:1-5)

குறை சொல்வதும் களைவதும்

'நம் தவறுகளுக்கு நாம் வழக்கறிஞர்களாகவும், மற்றவர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாகவும் இருக்கிறோம்' என்பதே பல நேரங்களில் நம் வாழ்வியல் எதார்த்தமாக உள்ளது. தவறு என்பது இன்று தனிநபர் சார்ந்தது என்றாகிவிட்டது. இது ஓர் அறநெறிப் பிறழ்வாகவும் மாறிவிட்டது. ஒருவர் கண்ணுக்குத் தவறு எனத் தெரிவது மற்றவரின் கண்ணுக்குச் சரி எனத் தெரிகிறது. நாம் அறியாத குறைகளை நமக்குச் சுட்டிக்காட்டுபவர் நம் உள்ளத்திற்கு அருகில் இருப்பவரே. ஏனெனில், என் முதுகை நானே பார்க்க முடியாது. அதைப் பார்க்க அடுத்தவரின் துணை தேவைப்படுகிறது. நான் அடுத்தவரின் முதுகைப் பார்த்து அவருடைய குறையைச் சுட்டிக்காட்டுமுன், எனக்கும் ஒரு முதுகு இருக்கிறது என்பதையும், அதில் குறை இருக்கிறது என்பதையும் ஏற்றுக்கொள்தல் அவசியம். மேலும், நான் அடுத்தவரின் குறையைச் சுட்டிக்காட்டுமுன், சற்றே யோசித்து, அதே அளவை எனக்கும் பயன்படும் என உணர்தல் வேண்டும்.

அடுத்தவரின் குறைகளைச் சுட்டிக்காட்டவே கூடாதா? பெற்றோர் குழந்தைகளைக் கடிந்துகொள்ளக் கூடாதா? ஆசிரியர்கள் மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டக் கூடாதா? குறைகள் சுட்டுதல் அவசியம். நிறைகளையும் கண்டு குறைகளையும் கண்டால் நலம். அடுத்தவரின் குறைகள் அவரின் முத்திரைகளாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறுவதற்குக் காரணம் நாம் இடும் தீர்ப்பே. 'விவாகரத்து பெற்றவர்,' 'பெண்,' 'கொரோனா நோயாளர்,' 'ஆண்,' 'முதியவர்,' 'குழந்தை,' 'நெறி கெட்டவர்,' 'பணமோசடிக்காரர்,' 'ஓரினச் சேர்க்கையாளர்,' 'திருநங்கை,' 'உடல் ஊனமுற்றவர்' என நாம் அடுத்தவரைப் பார்த்து உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லும் ஒரு தீர்ப்பே, ஒரு முத்திரையே.

முத்திரைகள் முகத்திரைகளாக மாறிவிட்டால் அடுத்தவரின் முகத்தைக் காண இயலாமற்போய்விடும். தன் இல்லம் வந்த இளைய மகனுக்கு எந்த முத்திரையும் குத்தவில்லை தந்தை. நிறைய இரக்கமும் நிறைய மௌனமும் இருந்தால் இது நமக்கும் சாத்தியம்.


Saturday, June 19, 2021

உன் அலைகள் எங்கே?

ஆண்டின் பொதுக்காலம் 12ஆம் ஞாயிறு

I. யோபு 38:1,8-11 II. 2 கொரிந்தியர் 5:14-17 III. மாற்கு 4:35-41

உன் அலைகள் எங்கே?

'நான் என் சுண்டுவிரலை நகர்த்தும்போது எங்கோ இருக்கின்ற நட்சத்திரத்தை நகர்த்துகிறேன்' என்பது தாவோ எண்ணம். அதாவது, நானும் பிரபஞ்சமும் ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றோம். செல்டிக் பண்பாட்டின் புரிதல்படி நாம் வானில் காண்கின்ற விண்மீன்கள் யாவும் இந்த உலகைக் கடந்து சென்றவர்கள் ஏற்படுத்திச் சென்ற பிரபஞ்சத் துவாரங்கள். அவற்றின் வழியே அவ்வுலகின் ஒளி இவ்வுலகை நோக்கிக் கடந்து வருகின்றது. அவர்கள் அவ்வுலகிற்குச் சென்றாலும் அத்துவாரங்கள் வழியே இவ்வுலகைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். நம்முடைய பிரபஞ்சமும் நாமும் ஏதோ ஓர் ஒருங்கமைவு இணைப்பில் இருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. நாள் விடிகின்றது, நாள் முடிகின்றது. நாம் பிறக்கின்றோம், நாம் இறக்கின்றோம். ஏதோ ஒரு பாடலின் இசை போல, ஓவியத்தின் ஒளி-இருள் போல எல்லாம் அதனதன் நேரத்தில் நடந்துகொண்டிருக்கின்றது.

இந்த ஒருங்கியக்கத்தில் ஏதாவது ஒரு தடை வரும்போது நம் மனம் பதைபதைக்கின்றது. அப்படி வரும் தடைகளை பதற்றமின்றி நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் இன்னொருவருடன் இணைந்திருக்கின்றோம். ஒருவர் மறையும்போது அவரைச் சுற்றி பிண்ணப்பட்ட வலை கிழிந்து போவதோடு, அதைத் திரும்பப் புதுப்பிக்க முடியாத நிலையும் உருவாகிவிடுகிறது.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களை நோக்கி, 'அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்!' என்றழைத்து, அவர்களோடு இணைந்து படகில் ஏறுகின்றார். அந்த நேரத்தில் புயல் அடிக்கின்றது. கெனசரேத்து ஏரி என அழைக்கப்படும் கலிலேயக் கடல் உண்மையில் ஓர் ஏரி. சுற்றிலும் மலை சூழ்ந்திருப்பதாலும், கடல்மட்டத்திற்குக் கீழே இருப்பதாலும் பெருங்காற்று வீசும்போது இந்நீர்த்தேக்கத்தில் ஏறக்குறைய 20 அடி உயரத்திற்கு அலைகள் எழுவதுண்டு. இயேசுவின் சீடர்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித்தொழில் செய்தவர்கள், அல்லது இக்கடலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். ஆக, அவர்கள் அலைகளை அடிக்கடி எதிர்கொண்டதுண்டு. இந்த நிகழ்வில், பெரும் புயல் அடித்தது எனச் சொல்கின்ற மாற்கு, அங்கு நிலவிய இரண்டு சூழல்களை நம்முன் கொண்டு வருகின்றார்: ஒன்று, அமைதியான சூழல். அந்தச் சூழலில் இயேசு படகில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருக்கின்றார். அதற்கு எதிர்மாறான சூழல் இரண்டாவது. பரபரப்பான சூழல். அங்கே சீடர்கள் பரபரப்பாக, பயந்து போய் இருக்கின்றனர். 'போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?' எனக் கேட்கின்றனர். இவர்கள் இயேசுவை வெறும் போதகராக (ரபி) பார்க்கின்றனர். மேலும், தங்கள் கவலையில் இயேசுவையும் இணைத்துக்கொள்ள முயற்சி செய்கின்றனர்.

இயேசு எழுந்து கடலைக் கடிந்துகொள்கின்றார். 'இரையாதே! அமைதியாயிரு!' என்பது பேயோட்டுவதற்கான வாய்ப்பாடு. அதே வார்த்தைகளைச் சொல்லி இயேசு கடலை அமைதியாக்குகின்றார். ஏனெனில், யூத மக்களைப் பொருத்தவரையில் கடல் என்பது பேய்கள் வாழும் இடமாகக் கருதப்பட்டது. தொடர்ந்து தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு: 'ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?' இவ்வார்த்தைகள் வழியாக அவர்களின் நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கின்றார் இயேசு. அதாவது, இயேசு தங்களோடு இருக்கும்போது தங்களுக்கு இறப்பு இல்லை என்பதை அவர்கள் நம்ப மறுத்தனர். இதுதான் அவர்களின் நம்பிக்கைக் குறைவான நிலை. இந்தக் கேள்விகள் சீடர்களைப் பார்த்து மட்டும் கேட்கப்படவில்லை. இந்நிகழ்வை வாசிக்கும் நம் ஒவ்வொருவரையும் பார்த்துக் கேட்கப்படுகின்றன. இவ்விரண்டு வினாக்களுக்கும் நானும் நீங்களும் தனித்தனியாக விடை அளிக்க வேண்டும். நாம் அளிக்கும் விடையைப் பொருத்தே, 'படகில் தூங்குபவரும் காற்றைக் கடிந்துகொள்பவரும் யார்?' என்ற வினாவுக்கான விடை அமையும்.

தங்களுடைய வாழ்க்கை இயல்பாகக் கடந்து போன போது இரண்டு துன்பங்களை எதிர்கொள்கின்றனர் சீடர்கள்: ஒன்று, 'அக்கரைக்குச் செல்கின்றனர்.' இக்கரையில் இருந்த தங்களுடைய பெற்றோர், பிள்ளைகள், உடன்பிறந்தோர், உறவினர்கள், நண்பர்கள், தொழில், மக்கள் ஆகிய அனைத்தையும், அனைவரையும் விடுத்து, முன்பின் தெரியாத அக்கரை நோக்கிச் செல்கின்றனர். இரண்டு, இயல்பான அமைதியில் இருக்கின்ற கடல் இயல்பு நிலையை இழந்து கொந்தளிக்கிறது. இவ்விரண்டு துன்பங்களும் அவர்களுக்கு அச்சமும் கவலையும் அளிக்கின்றன. ஆகையால்தான், 'போதகரே, சாகப்போகிறோமே!' என்கின்றனர்.

முதல் வாசகத்தில், யோபுவுக்கு ஆண்டவராகிய கடவுள் சூறாவளியினின்று அருளிய பதிலின் ஒரு பகுதியை வாசிக்கின்றோம். 'நேர்மையாளர் துன்புறுவது ஏன்?' என்ற கேள்வியைக் கேட்டு விடையைத் தேடுகிறது யோபு நூல். நேர்மையாளர் துன்புறுதலுக்கான விடையை யோபுவின் மூன்று நண்பர்கள் பாரம்பரிய இறையியலைக் கொண்டு தர முயற்சி செய்கின்றனர். அவர்களின் விடை யோபுவுக்கு ஏற்புடையதாக இல்லை. சூறாவளியில் தோன்றுகின்ற ஆண்டவர் யோபுவின் கேள்விக்கு விடையளிக்காமல் சுற்றி வளைத்து நிறையக் கேள்விகளைத் தொடுக்கின்றார். தானே அனைத்துக்கும் ஆண்டவர் என்றும், வாழ்வின் மறைபொருள் அனைத்தவர் தான் மட்டுமே என்றும் யோபுவை உணரச் செய்கின்றார். விளைவு, யோபு சரணடைகின்றார். கடல்மேல் ஆண்டவராகிய கடவுள் கொண்டிருக்கின்ற ஆற்றலை இவ்வாசகப் பகுதியில் காண்கின்றோம்.

யோபுவின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகின்றது. அவர் தனக்குரியது அனைத்தையும் அனைவரையும் இழந்து இறந்தவர் போல, அல்லது இறப்புக்குத் துயரப்படுவது போல சாம்பலில் அமர்ந்திருக்கின்றார். பிரபஞ்சத்திற்கும் தனக்குமான நெருக்கம் உடைக்கப்பட்டது போல உணர்ந்த அந்த நேரத்திலும் இறைவனின் உடனிருப்பைக் காண்கின்றார் யோபு.

இரண்டாம் வாசகத்தில், தன்னுடைய நற்செய்தியின் மேன்மை குறித்து கொரிந்து நகரத் திருஅவைக்கு எழுதுகின்ற பவுல் தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் முன்வைக்கின்றார். தான் படுகின்ற துன்பங்கள் அனைத்தையும் இயேசுவின் உயிர்ப்பின் ஒளி கொண்டு காண்கின்றார் பவுல். கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக பழையது மறைந்து புதியது பிறக்கின்றது என அறிக்கையிடுகின்றார்.

பெருந்தொற்றின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், நம் அன்புக்குரிய பலரை நாம் அன்றாடம் இழந்துகொண்டிருக்கும் வேளையில், இரண்டாம் அலையைப் பார்த்து, ஆண்டவராகிய கடவுள், 'உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!' என்று கட்டளையிடுகின்றார்.

நாம் இன்று கேட்க வேண்டிய கேள்வி எல்லாம், 'போதகரே, நாங்கள் சாகப்போகிறோமே!' என்பதல்ல, மாறாக, 'ஆண்டவரே, நாங்கள் வாழப்போகிறோமே! நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்பதுதான்.

நமக்கும் கடவுளுக்கும், நமக்கும் ஒருவர் மற்றவருக்கும், நமக்கும் பிரபஞ்சத்திற்குமான ஒருங்கியக்கம் தடைபடும்போதெல்லாம் இறைவன் அங்கே இருக்கின்றார் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். சில நேரங்களில் அவர் யோபுவிடம் பேசியது போல இறங்கிவந்து பேசுகின்றார். சில நேரங்களில் தலையணை வைத்துத் தூங்குகின்றார்.

திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து, 'ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு ... புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார். கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன' (திபா 107) என்று பாடுவோம்.

அக்கரைக்கு நாம் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. அவருடைய உடனிருப்பு நம் இருத்தலையும் இயக்கத்தையும் உறுதி செய்கிறது.

Friday, June 18, 2021

கவலைகளும் நினைவுகளும்

இன்றைய (19 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:24-34)

கவலைகளும் நினைவுகளும்

'நாளைக்காகக் கவலைப்படாதீர்கள்' என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு.

யாருக்குப் பணிவிடை செய்வது? என்ற கேள்வியோடு தொடங்கும் இன்றைய நற்செய்திப் பகுதி, கவலைகளற்ற வாழ்வுக்கு நம்மை அழைக்கிறது.

எது நமக்குக் கவலை தருகிறதோ அதுவே நம் நினைவில் நிற்கிறது. எடுத்துக்காட்டாக, நாம் அணியும் ஆடை. அது நம் உடலோடு பொருந்தினால் அதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை. அதைப் பற்றி நாம் நினைப்பதே இல்லை. அது பொருந்தாவிட்டால் அதைப் பற்றியே நாம் எண்ணுகிறோம். நம் கையில் உள்ள ஐந்து விரல்களில் ஒரு விரலில் அடிபட்டுவிட்டால் அந்த விரல் பற்றிய கவலையே நம் எண்ணத்தில் இருக்கின்றது. ஆக, கவலைகள்தாம் நம் நினைவுகளாக இருக்கின்றன. நாம் எதை அதிகம் நினைக்கின்றோமோ அது நமக்கு கவலை தருகின்றது என்று பொருள்.

செல்வமா? கடவுளா? என்ற கேள்வியைக் கேட்கின்ற இயேசு, தொடர்ந்து நம் பார்வையை வானத்துப் பறவைகளை நோக்கியும், வயல்வெளி மலர்களை நோக்கியும் இட்டுச்செல்கின்றார். 

கடவுளின் பராமரிப்பை சீடர்கள் உணர வேண்டும்.

இதுதான் ஏழையரின் உள்ளம். ஏழையரின் உள்ளம் என்பது அடுத்தவர்களைச் சார்ந்திருக்கின்ற உள்ளம். இன்று நாம் தற்சார்பு பற்றி அதிகம் பேசுகின்றோம். ஏனெனில், பிறரிடமிருந்து நாம் நம்மையே ஒதுக்கிக்கொள்ள நினைக்கின்றோம். 

முதல் வாசகத்தில், தன் உடலில் தைத்த ஒரு முள் பற்றிப் பேசுகின்றார் பவுல். ஆனால், அந்த வலியே இறைவன் செயலாற்றும் தளமாக மாறுகிறது பவுலுக்கு.

நம் வலுவின்மைகள் நமக்குக் கவலை தரலாம். ஆனால், அவை இறைவன் செயலாற்றும் தளங்கள்.

அனைத்திற்கும் மேலாக அவருடைய ஆட்சியையும் அதற்கு ஏற்புடையவற்றையும் நாடினால் கவலைகள் மறையும்.


Thursday, June 17, 2021

செல்வமும் உள்ளமும்

இன்றைய (18 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:19-23)

செல்வமும் உள்ளமும்

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மிடம் இரு கேள்விகளை முன்வைக்கின்றது: 'உன் செல்வம் எங்கே?' 'உன் இதயம் எங்கே?' என்ற கேள்விக்கான விடையே, செல்வம் எங்கே இருக்கிறது என்பதற்கான விடை. ஏனெனில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார் இயேசு.

இரண்டாவது கேள்வி, 'உன் பார்வை எங்கே?' – 'உன் கண்கள் எங்கே?' என்பதற்கான விடையே இக்கேள்விக்கான விடை. 'கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்' என்கிறார் இயேசு.

இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எப்படி?

தாவீது அரசர் உரியாவின் மனைவி பத்சேபாவுடன் உறவு கொண்ட நிகழ்வை எடுத்துக்கொள்வோம். அவருடைய பார்வை முதலில் அந்த இளவல்மேல் இருந்தது. ஆனால், அந்தப் பார்வையை ஆசை மறைத்துவிட்டதால், அவருடைய உடல் ஒளியை இழந்துவிட்டது. இளவல்தான் அவருடைய செல்வமாகத் தெரிந்தார். ஏனெனில், தாவீது அரசரின் உள்ளம் அந்த இளவல்மேல் இருந்தது. ஆக, நான் எதைப் பார்க்கிறேனோ அது என் செல்வமாகிறது. அந்தச் செல்வத்தின்மேல் என் உள்ளம் பதிந்துவிடுகிறது.

யோசுவா நூலில் (அதி. 16) ஒரு நிகழ்வு உண்டு. எரிக்கோ நகருக்கு எதிராக மக்கள் போரிடுகின்றனர். அங்கிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுமாறு ஆண்டவராகிய கடவுள் அறிவுறுத்துகின்றார். ஆனால், ஆக்கான் என்பவரின் கண்கள் அங்கிருந்த பொன் மற்றும் வெள்ளிமேல் படிகிறது. அவற்றை அவர் எடுத்து மறைத்துவைத்துக் கொள்கின்றார். அவருடைய எண்ணமெல்லாம் மறைத்து வைக்கப்பட்ட பொன் மேல் இருக்கின்றது. விளைவு, ஏய் நகருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோல்வியடைகின்றனர்.

இரு சவால்கள்:

ஒன்று, நம் கண்கள் நலமானதாக இருக்க வேண்டும். அதாவது, பொறாமை, பகைமை, ஆசை, கோபம் கொண்டதாக இருத்தல் கூடாது.

இரண்டு, நம் செல்வம் இறைவனாக வேண்டும். அவரில் நம் இதயம் இருக்க வேண்டும்.


Wednesday, June 16, 2021

நீங்கள் மன்னீப்பர்களானால்

இன்றைய (17 ஜூன் 2021) நற்செய்தி (மத் 6:7-15)

நீங்கள் மன்னீப்பர்களானால்

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பிரிவுகளாக அமைந்துள்ளது. முதல் பிரிவில் இயேசு, 'நீங்கள் இறைவனிடம் இவ்வாறு வேண்டுங்கள்' என்று அவர்களுக்கு இறைவேண்டல் ஒன்றைக் கற்பிக்கின்றார். தொடர்ந்து, 'மற்ற மனிதர்கள் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார்' என்று அறிவுறுத்துகின்றார்.

இரண்டாம் பிரிவை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'நீங்கள் மன்னித்தால் உங்கள் தந்தை உங்களை மன்னிப்பார்' என்று இயேசு சொல்கிறாரே! அப்படி என்றால் கடவுளின் மன்னிப்பு நிபந்தனைக்குட்பட்டதா? – என்று வகுப்பில் மாணவர் ஒருவர் கேட்டார்.

கடவுள் நம்மை நிபந்தனையற்ற நிலையில் மன்னிக்கின்றார் என்பது மறுக்க முடியாத ஒன்று. இளைய மகன் எடுத்துக்காட்டில் வருகின்ற தந்தை, தன் மகனை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றார். இந்த நிகழ்வு மன்னிப்பு பற்றியது அல்ல என்றாலும், தந்தையின் பரிவு மகனுடைய பழைய வாழ்க்கையை அப்படியே மறந்துவிடுகிறது என்பதால், மன்னிப்பு என எடுத்துக்கொள்வோம். 'என்னை உங்கள் பணியாளனாக எடுத்துக்கொள்ளுங்கள்!' என இளைய மகன் நிபந்தனை விதித்தாலும் தந்தை அதைப் புறந்தள்ளி அவனைத் தழுவிக்கொள்கின்றார்.

இரண்டாவதாக, கடவுளின் மன்னிப்பை நாம் உணர வேண்டுமெனில், நாம் ஒருவர் மற்றவரை மன்னித்தல் நலம்.

இன்றைய முதல் வாசகத்தில், கொரிந்தியத் திருஅவையிடம் மனம் திறக்கின்ற பவுல், தான் அந்தக் குழுமத்தால் ஒருவகையில் புறக்கணிக்கப்பட்டதையும், அவர்கள் புதிய நற்செய்தி ஒன்றை ஏற்றுக்கொண்டதையும் எண்ணி வருந்துகின்றார். ஆனால், அதற்காக அவர் அவர்களை வெறுக்கவில்லை.

நாம் அதிகமாக அறிந்த ஒன்றை அல்லது ஒருவரை மன்னித்தல் எளிதன்று என்பது என் வாழ்க்கை அனுபவம். அல்லது அதிகம் புரியும் ஒன்றை நாம் மன்னிக்க இயலாது.

இருந்தாலும் மன்னித்தல் நலம்.

'மறப்போம், மன்னிப்போம்' என்றும் சிலர் சொல்வர். ஆம், நம்மால் மன்னிக்க இயலாதபோது அந்த நபரையே மறந்துவிட்டால் மன்னித்தல் அங்கே எளிதாகிவிடுகிறது.

இந்தப் புரிதலும் சில நேரங்களில் நலம் பயக்கும்.


Saturday, June 12, 2021

எதுவும் செய்யாமலே!

ஆண்டின் பொதுக்காலம் 11ஆம் ஞாயிறு

I. எசேக்கியேல் 17:22-24      II. 2 கொரிந்தியர் 5:6-10      III. மாற்கு 4:26-34

எதுவும் செய்யாமலே!

'கொரோனா' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், நம் அன்புக்குரியவர்களை அது அள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கும்போது, அதை ஓர் எதார்த்தமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானோம்.

'தடுப்பூசி' என்பது ஒரு புனைகதை என்று பேசப்பட்டது. ஆனால், இப்போது தடுப்பூசி தவிர வேறு வழியில்லை என்ற நிலையில் வேகமாக நாம் அதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம்.

நாம் போட்ட தடுப்பூசி நாம் அறியாமலேயே தன் வேலையைச் செய்கின்றது. நிலத்தில் விதைக்கப்பட்ட விதை போல.

இன்றைய முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் ஒரு மரத்தின் வளர்ச்சி பற்றிப் பேசுகின்றன.

கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்காட்டாகக் கொள்வோம். இந்த ஊசியின் மருந்தின் வழியாக நம் உடலில் செலுத்தப்படுவது சிம்பன்சி குரங்கிலிருந்து எடுக்கப்பட்ட சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸ். இந்த வைரஸூக்கும் கோவித்-19 வைரஸூக்கும் உள்ள புரதக் கோடு ஒன்று போல இருக்கும். உடலுக்குள் செலுத்தப்படும் இந்த வைரஸ் தன்னைத் தானே பெருக்கிக்கொள்ளும். நோய் எதிர்ப்பு சக்திக்குக் காரணமாக இருக்கும் வெள்ளை அணுக்களுடன் இணைந்து கோவித்-19க்கு எதிரான புரதக் கோட்டை உருவாக்கும். கோவித்-19 வகை வைரஸ் உள்ளே நுழையும்போது உள்ளே இருக்கும் எதிர் உடல்கள் (anti-bodies) அதைத் தடுக்கின்றன.

இந்த அறிவியல் முழுமையாகப் புரியாவிட்டாலும், 'நமக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற வைரஸ் நம்மை அறியாமலேயே வளர்கிறது' என்பது மட்டும் தெளிவாக இருக்கட்டும்.

இயற்பியலில் 'என்ட்ராபி' (entropy) (thermodynamics) என்று ஒரு விதி உண்டு. அதன்படி ஒரு பொருளை நாம் அப்படியே அதன் இருப்பிலேயே (வெப்பநிலையிலேயே) விட்டால் அது தன் இயல்பை இழந்து, மறைந்துவிடும். எடுத்துக்காட்டாக, சுடுதண்ணீரைப் பிடித்து நாம் ஒரு வாளியில் வைக்கிறோம். அந்த நீரின் மேல் மேலும் வெப்பம் செலுத்தப்படாவிட்டால் அது தன் சூட்டை இழந்து விரைவில் குளிர்ந்துவிடும். என் அறையில் ஒரு புத்தகம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் புத்தகம் வருடக்கணக்கில் அப்படியே அதே இடத்தில் இருந்தால் அது அப்படியே அழிந்துவிடும். ஆக, ஒன்றை நாம் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டால் அது காலப்போக்கில் மறைந்துவிடும். இது பெரும்பாலும் பொருள்களுக்குப் பொருந்தும். இதே விதி சில நேரங்களில் நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை வருகிறது என வைத்துக்கொள்வோம். அந்தப் பிரச்சினையை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் அது காலப்போக்கில் அப்படியே மறைந்துவிடும். இதைத்தான், 'காலம் காயங்களை ஆற்றும்' என்ற பழமொழியும் சொல்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 4:26-34) இரண்டு உருவகங்களைச் சொல்கின்றார். இரண்டும் இறையாட்சிக்கான உருவகங்கள். ஒன்று, தானாக முளைத்து வளரும் விதை. இரண்டு, கடுகு விதை. மாற்கு நற்செய்தியில் இந்தப் பகுதியில் மட்டுமே உவமைகளைக் கையாளுகின்றார் இயேசு.

இந்த இரண்டும் சொல்லக்கூடிய செய்தி என்னவோ ஒன்றுதான்:

(அ) விதைக்கு ஆற்றல் உண்டு.

(ஆ) விதையின் இயக்கத்தை யாரும் தடுக்கவோ, திருப்பவோ இயலாது.

(இ) விதையைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது வளரும்.

இம்மூன்றுமே மேற்காணும் 'என்ட்ரோபி' விதிக்கு எதிர்மாறாக இருக்கிறது.

விதைகளுக்கு உள்ளே ஒளித்துவைக்கப்படும் ஆற்றல் நமக்கு மிகுந்த ஆச்சர்யம் தருகிறது. நம் வீட்டில் பப்பாளி வாங்குகிறோம் என வைத்துக்கொள்வோம். பப்பாளியை அறுத்துப் பார்த்தால் உள்ளே ஒரு விதையும் இல்லை. மரபணு மாற்றம் செய்யப்பட்டு, விதைகள் நீக்கப்படுகின்றன. விதைகள் இல்லையேல் அது மலட்டுத்தன்மை உடையதாக இருக்கிறது. பழங்கள், முட்டை என அனைத்தும் மலட்டுத்தன்மை உடையனவாக இருப்பதால், இவற்றை உண்ணும் நாமும் நம் ஆற்றலை இழந்துகொண்டே இருக்கின்றோம். இன்று நம்மைச் சுற்றிப் பார்க்கும் 'செயற்கை கருத்தரிப்பு மையங்களே' இவற்றுக்குச் சான்று. ஒரு காலத்தில் செயற்கைக் கருத்தரிப்பு மையத்திற்குச் செல்வதே குற்றம் என்று கருதப்பட்டது. ஆனால், இன்று அதுவே நாகரீகம் மற்றும் பெருமிதம் என்றாகிவிட்டது. நம் பெண்களின் குழந்தை ஆசையை வியாபாரமாக்கிவிடுகின்ற இந்த மருத்துவமனைகள். இன்றைய நற்செய்தியில் வரும் விதைகள் ஆற்றல் மிக்கவை. இறையாட்சியும் அப்படிப்பட்டதே. இறையாட்சி தன்னிலே மிகுந்த ஆற்றல் கொண்டது.

இரண்டாவதாக, விதை வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டேதான் இருக்கும். அதன் வளர்ச்சியை நான் நிறுத்தவோ, தடுக்கவோ இயலாது. வளர்ந்துவிட்ட விதையை மீண்டும் சுருக்கி விதையாக்க முடியாது. இறையாட்சியின் நிலையும் அப்படித்தான். வளரத் தொடங்கிவிட்டால் அது தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும்.

மூன்றாவதாக, விதைகளை யாரும் கண்டுகொள்ளாவிட்டாலும் அவை வளர்கின்றன. காடுகளிலும் மலைகளிலும் உள்ள மரங்களே இவற்றுக்குச் சாட்சிகள். தோட்டக்காரர் இல்லாமலேயே, உரம் எதுவும் இடாமNலுயே தண்ணீர் எதுவும் பாய்ச்சாமலேயே மரங்கள் வளர்கின்றன. இறையாட்சியும் அப்படியே!

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசே 17:22-24), இஸ்ரயேல் மக்களை கேதுரு மரத்திற்கு ஒப்பிட்டு இறைவாக்குரைக்கின்றார் எசேக்கியேல். இஸ்ரயேல் என்னும் இனம் அக்கால மக்களின் நடுவில் ஒரு சிறிய நுனிக் கிளை போல இருக்கின்றது. வலுவற்றதாகவும், காற்றால் ஆட்டுவிக்கப்படுவதாகவும் இருக்கிறது. ஆனால், கடவுளின் கரம் பட்டவுடன், கடவுள் அதை எடுத்து நட்டவுடன் அது வளரத் தொடங்குகிறது. அனைத்து வகைப் பறவைகளும் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாக வளர்கின்றது.

இரண்டாம் வாசகத்தில் (காண். 2 கொரி 5:6-10), புனித பவுல், 'நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல. மாறாக, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம்' என எழுதுகின்றார். விதைக்குள் நடக்கும் வளர்ச்சி காணக்கூடியது அல்ல. மாறாக, காண இயலாத தளத்திலேயே அதன் வளர்ச்சியும் இயக்கமும் இருக்கிறது.

ஆக,

தடுப்பூசி, விதை, கடுகு விதை, கேதுரு மரம் ஒரு பக்கம்.

சுடுதண்ணீர், பிரச்சினைகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்.

முந்தையவற்றில் வளர்ச்சி உண்டு. பிந்தையதில் வளர்ச்சி இல்லை.

இறையாட்சி முந்தையது சார்ந்தது.

இன்றைய பதிலுரைப்பாடலின் (காண். திபா 92) ஆசிரியர், நம் ஒவ்வொருவரையும் மரம் என உருவகப்படுத்துகின்றார்: 'நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர். லெபனோனின் கேதுரு மரமெனத் தழைத்து வளர்வர் ... அவர்கள் முதிர் வயதிலும் கனி தருவர். என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்.'

நம்மைச் சுற்றி நிற்கும் மரங்கள் நமக்கு இறையாட்சியின் வளர்ச்சியையும், நாம் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சியையும் நினைவூட்டுவனவாக!

Friday, June 11, 2021

மரியாவின் மாசற்ற இதயம்

இன்றைய (12 ஜூன் 2021) திருநாள்

மரியாவின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇதயத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது மரியாளின் மாசற்ற இதயம். இயேசு தன் அன்பை மனுக்குலத்திற்குக் காட்டியதை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியா இயேசுவையும் இறைத்தந்தையும் அன்பு செய்ததை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கம்.

லூக்கா நற்செய்தி 2ஆவது பிரிவில், 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' என இருமுறை வாசிக்கின்றோம். மேலும், மரியாவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சிமியோன் இறைவாக்குரைக்கின்றார். 'இயேசுவின் சிலுவையின் கீழ் நின்ற மரியா தன் உள்ளத்தால் தன்னையே அவருடன் சிலுவையில் அறைந்துகொண்டார்' என மொழிகின்றார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைத் தன் உடலில் ஏந்தியதை விட, உள்ளத்தில் ஏந்தியதால்தான் வணக்கத்துக்குரியவர் ஆனார் எனத் தொடர்கிறார் அகுஸ்தினார். 

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.

'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.

Thursday, June 10, 2021

இயேசுவின் திருஇதயம்

இன்றைய (11 ஜூன் 2021) திருநாள்

இயேசுவின் திருஇதயம்

'நம் இல்லங்களில் திருஇருதய ஆண்டவரின் திருவுருவத்தை படம் அல்லது சுரூபமாக வைத்து, நம் இல்லத்தையும் இல்லத்தில் உள்ளவர்களையும் அவருக்கு அர்ப்பணமாக்குவது ஏன்?' - இந்தக் கேள்வி எனக்கு நெடும் நாள்களாக எழுவதுண்டு. இரண்டு நாள்களுக்கு முன் அதற்கான விடை இதுவாக இருக்குமோ? என்ற எண்ணமும் தோன்றியது.

அது என்ன?

'கிளாடியேட்டர்' திரைப்படத்தில் கொமாதுஸ் (மார்க்கு அவுரேலியுவின் மகன்) தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பான். ஏனெனில், அவனுடைய மனதில் மாக்ஸிமுவை அழிக்க வேண்டும் என்ற வன்மம் நிறைய இருக்கும் இந்த நேரத்தில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் அக்காவின் மகன் லூசியுஸ் அருகில் வருவான். அங்கு நிற்கின்ற அக்காவிடம், 'இவன் நன்றாகத் தூங்குகிறான். ஏனெனில், இவன் அன்பு செய்யப்படுகின்றான்' என்பார்.

நாம் நம் இல்லத்தில் நன்றாகத் தூங்குகிறோம். ஏனெனில், நாம் அன்பு செய்யப்படுகிறோம். நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகின்றோம். நம்மை நோக்கி இறைவனின் இரு கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஆகையால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அந்த இரு கண்கள்தாம் திருஇருதய ஆண்டவரின் கண்கள்.

ஆண்டவராகிய இயேசுவின் திருவுருவம் நம் இல்லத்தில் வீற்றிருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். அவரின் பார்வை நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகின்றது. அந்த நம்பிக்கையில் நம் வாழ்க்கை நகர்கிறது.

பார்வைக்கும் கடவுளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கின்றது?

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகின்ற ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார் பாலைவனத்தில், 'என்னைக் காண்கின்றவரை நான் இங்கே கண்டேன்' என்று சொல்லி, தன் இறைவனை, 'காண்கின்ற இறைவன்' அல்லது 'காணும் கடவுள்' என அழைக்கின்றார் (காண். தொநூ 16:13). மதுரையை ஆளும் மீனாட்சியைக் கொண்டே நாம் மதுரையை தூங்கா நகரம் என அழைக்கின்றோம். ஏனெனில், மீனின் கண்கள் மூடாமல் இருப்பது போல, அம்மாளின் கண்களும் மூடாமல் மதுரையைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.

மெய்யியல் அறிஞர் ஸ்பினோசா என்பவர் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார் – 'காணியல்வாதம்.' காண்கின்ற ஒன்றுதான் உண்மை இவரைப் பொருத்தவரை. அல்லது நான் காணும் ஒன்றுதான் உயிர்வாழ்கின்றது. நான் கண்டுகொள்ளாதது எனக்கு ஒரு பொருட்டல்ல. எடுத்துக்காட்டாக, எனக்கு முன் ஒரு பேனா இருக்கிறது. எப்படி இருக்கிறது? அதை நான் காண்பதால் இருக்கிறது. ஆனால், நான் உணவறைக்குப் போகிறேன். அந்த நேரத்தில் என் அறையில் இந்தப் பேனா இருக்குமா? இருக்கும். இருக்குமா? எப்படி? நான்தான் அதைப் பார்க்கவில்லையே? இல்லை! ஆனால், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறாரே!

ஆக, கடவுள் பார்க்கும் எதுவும் வாழ்கிறது. இருக்கிறது. இயங்குகிறது.

கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற இனிய செய்தியைத் தருகின்றது இன்றைய திருநாள்.

'நான் ஒருவரால் அன்பு செய்யப்படுகிறேன்' என்று உணர்வதே நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது என்கிறார் ப்ராய்ட். ஒரு குழந்தை நிம்மதியாக உணரக் காரணம் தாயால் அன்பு செய்யப்படுகின்ற உணர்வே.

என்னைப் பொருத்தவரையில் இரண்டு நிலை அன்பைத் தவிர மற்ற எல்லா அன்பும் நிபந்தனையான அன்பே: ஒன்று, கண்டவுடன் வருகின்ற காதலின் தொடக்கநிலை. எனக்கு யாராவது ஒருவர்மேல் 'க்ரஷ்' வருகிறது என வைத்துக்கொள்வோம். அவரை நான் பின்பற்றத் தொடங்குவேன், பார்ப்பேன், இரசிப்பேன். அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை என்றாலும் நான் அவரைக் கண்டுகொள்வேன். அவ்வளவுதான்! அதற்கு அடுத்து வருகின்ற நிலை நிபந்தனைக்கு உட்பட்டது. 'நான் தொடர்ந்து 10 நாள்களுக்கு ஒருவருக்கு குட் மார்னிங் செய்தி அனுப்பவில்லை என்றால் மற்றவர் என்னை மறந்துவிடுவார்' என்பது உண்மை. 'க்ரஷ்' காதலாக கனிந்துவிட்டால் அது நிபந்தனைக்கு உட்பட்டதாகிவிடுகிறது. இரண்டு, தாயன்பு. இது தனிநபரைப் பொருத்தது. தன் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இன்னொரு கணவரோடு வாழச் செல்லும் மனைவியர் இருக்கின்ற இந்நாள்களில் தாயன்பை நிபந்தனைக்குட்பட்டது என்றும் சொல்லலாம். தாயன்பை மன்னிப்பு என்ற நிலையில் எடுத்துக்கொண்டால் அங்கே நிபந்தனை இல்லை. தன் மகன் எவ்வளவு பெரிய பொய்யனாக, திருடனாக, கொலைகாரனாக இருந்தாலும் தாய் அவனைத் தன் மகன் என்று மட்டுமே பார்ப்பார். இதை நான் கண்கூடாக மத்திய சிறைச்சாலையில் பார்த்ததுண்டு. தூக்குத்தண்டனை பெறக்கூடிய தவற்றை அவன் செய்திருந்தாலும் அத்தாயின் நீதிமன்றத்தில் அவன் என்றும் நிரபராதியே! அல்லது அவன் மன்னிக்கப்பட்டவனே!

நிபந்தனைகளால் மட்டுமே நாம் அன்பு செய்கிறோம், அன்பு செய்யப்படுகின்றோம் - இதை நாம் மறுத்தாலும்!

இன்று, நிபந்தனைகள் இல்லாமல் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை இத்திருநாள் தருகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் (ஓசே 11), 'இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன் ... நடைபயிற்றுவித்தேன் ... கையில் ஏந்தினேன் ... பரிவு என்னும் கட்டால் பிணைத்தேன் ... அன்புக் கயிறுகளால் கட்டி வந்தேன் ...' என இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ஆண்டவராகிய கடவுள் சொல்கின்றார். ஆக, இஸ்ரயேலின் மேன்மையான நிலை அவர்களுடைய தகுதியால் வந்தது அல்ல, மாறாக, ஆண்டவராகிய கடவுளின் இரக்கப் பெருக்கால் வந்தது. நாம் அன்பு செய்யும்போதும் அப்படித்தான்! நம் அன்புக்குரியவரை ஒரு குழந்தைபோல அள்ளிக்கொள்கின்றோம், கையில் ஏந்துகின்றோம், நடை பயிற்றுவிக்கின்றோம், பரிவு காட்டுகின்றோம். அதாவது, நிர்கதியில் இருக்கின்ற இஸ்ரயேலைத் தன் மகன் என்று கொண்டாடுகின்றார் கடவுள்.

இரண்டாம் வாசகத்தில், கடவுளின் இந்த அன்பைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'கிறிஸ்துவுடைய அன்பின் ஆழம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!' என்கிறார். இங்கே, 'அன்பு' மற்றும் 'அறிவு' என்ற இரண்டு தளங்களில் உரையாடுகின்றார். கிறிஸ்துவின் அன்பை அறிவுக்கு எட்டாதது என்கிறார். அதாவது, 'ஒன்றும் ஒன்றும் இரண்டு' என்ற கணிதம் போல கடவுளின் அன்பைப் புரிந்துகொண்டால் எத்துணை நலம். அப்படி புரிந்துகொள்வதே கடவுளின் முழு நிறைவு என்கிறார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் குத்தப்பட்ட விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவருகின்றன. குத்தப்பட்ட இதயம் நமக்கு அழகான செய்தியைத் தருகின்றது. அதாவது, அந்த இதயம் தன் கண்களைத் திறந்து நம்மைப் பார்க்கிறது. ஆக, காயம் பட்டாலும் அன்பு தன் இதயத்தைத் திறந்து அடுத்தவரைப் பார்க்கத் தொடங்குகிறது.

ஆக, இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:

(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.

(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார்.

(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், 'கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்' என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.

திருநாள் நல்வாழ்த்துகள்!


Wednesday, June 9, 2021

சிறந்த நெறி

இன்றைய (10 ஜூன் 2021) நற்செய்தி (மத் 5:20-26)

சிறந்த நெறி

நேற்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தான் திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க அல்ல, மாறாக, நிறைவேற்ற வந்ததாகக் குறிப்பிடுகின்றார். இயேசு மூன்று நிலைகளில் திருச்சட்டத்தை நிறைவேற்றுகின்றார்: (அ) திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிவதன் வழியாக. எடுத்துக்காட்டாக, இயேசு குழந்தையாக இருந்தபோது அவரை அவருடைய பெற்றோர்கள் எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிக்கின்றனர். மேலும், இயேசு ஆண்டுதோறும் பாஸ்கா விழா கொண்டாட எருசலேமுக்குச் செல்கின்றார். இங்கே, இயேசு திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிபவராக இருக்கின்றார். (ஆ) திருச்சட்டத்தை மாற்றுகின்றார். 'முற்காலத்தில் சொல்லப்பட்டதைக் கேட்டீர்கள். ஆனால், நான் உனக்குச் சொல்கிறேன்' என்று சில பகுதிகளை மாற்றுகின்றார். (இ) திருச்சட்டத்தை நீட்டுகின்றார். 'இன்னும் கொஞ்ச தூரம் பயணம் செய்வது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுவது' என்ற போதனைகளில், இயேசு கொஞ்சம் எக்ஸ்ட்ரா செய்யுமாறு அழைப்பு விடுக்கின்றார்.

இன்று தொடங்கி நான்கு நாள்களுக்கு, இயேசு எப்படி திருச்சட்டத்தை மாற்றுகின்றார் என்பதை வாசிக்கின்றோம். மாற்றுகின்றார் என்றால், திருச்சட்டத்தின் வேருக்குச் செல்கின்றார்.

'கொலை செய்யாதே! கொலை செய்கிறவர் எவரும் தண்டனைக்கு உள்ளாவர்' என்பது மோசேயின் சட்டம்.

இயேசு இதைச் சற்றே மாற்றி, 'சினம் கொள்ள வேண்டாம்! முட்டாளே என அழைக்க வேண்டாம்! அறிவிலியே எனச் சொல்ல வேண்டாம்!' என்கிறார்.

அதாவது, கொலை என்பது செயல். கோபம் என்பது உணர்வு.

உணர்வுதான் செயலாக வெளிப்படுகின்றது. ஆக, உணர்வைக் கட்டுப்படுத்திவிட்டால் செயலுக்கு இடமில்லை என்பது இயேசுவின் புதிய போதனை.

கொலை என்ற செயலுக்கு முன்னர் நடக்கும் மூன்று விடயங்களைத் தடுத்துவிடுமாறு தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்றார் இயேசு:

(அ) கோபம் அகற்றுதல்

(ஆ) வசைச் சொல் அகற்றுதல்

(இ) மனத்தாங்கல் அகற்றுதல்

இம்மூன்றையும் அகற்றுவதில் நிறைய வேகம் வேண்டும் என்கிறார் இயேசு.

கொலை என்பது வேகமாக நடந்தேறக்கூடியது.

கொலை என்னும் கொடிய செயலில் காட்டும் வேகத்தை உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் காட்டுமாறு சொல்கின்றார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 2 கொரி 3), புனித பவுல், 'கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றுள்ளோம். ஆகையால், மனந்தளராமல் இருக்கிறோம்' என்கிறார்.

நாம் ஏமாற்றம் அடையும் போது நம் மனம் தளர்கிறது. அந்த ஏமாற்றம் கோபமாகவும் மாறுகிறது. புனித பவுல் தன் பணித்தளத்தில் நிறைய எதிர்ப்பைச் சந்திக்கின்றார். அந்த எதிர்ப்பு அவருக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் தருகின்றது. ஆனாலும் அவர் கடவுளின் இரக்கத்தால் தான் பெற்ற திருப்பணியை தன் கோபத்தைக் கொண்டு அழித்துவிடக் கூடாது என நினைக்கின்றார்.

இன்று நாம் அடுத்தவரைக் கொலை செய்யும் அளவுக்குத் துணிவதில்லை என்றாலும், கோபம் நிறையவே கொள்கின்றோம்.

'அடுத்தவரின் தவற்றுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனையே கோபம். கோபத்திற்குத் தண்டனை எதுவும் இல்லை, ஏனெனில், ஒருவர் கொள்ளும் கோபமே அவருடைய தண்டனை' என்கிறார் புத்தர்.

கோபம் அகற்றுதல் நலம். கோபம் அகற்ற, எதிர்பார்ப்புகள் குறைத்தல் இன்னும் நலம்.


Tuesday, June 8, 2021

எங்கள் தகுதி

இன்றைய (9 ஜூன் 2021) முதல் வாசகம் (2 கொரி 3:4-11)

எங்கள் தகுதி

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதுகின்ற இரண்டாம் திருமடலில் வருகின்ற ஒரு சொல்லாடல், 'புதிய உடன்படிக்கையின் பணியாளர்.' கற்களில் பொறிக்கப்பட்ட பழைய உடன்படிக்கையின் மாட்சியைவிட, இதயங்களில் பொறிக்கப்பட்ட புதிய உடன்படிக்கையின் மாட்சி மேன்மையாக இருக்கிறது என்பது பவுலின் கருதுகோள்.

இன்றைய முதல் வாசகத்தில் இரண்டு சொல்லாடல்கள் நம்மைக் கவர்கின்றன:

(அ) எங்கள் தகுதி

பவுல் தன்னுடைய தகுதி கடவுளிடமிருந்து வருவதாக எழுதுகின்றார். இப்பகுதியின் தொடக்கத்தில், பல்வேறு தகுதிகள் பற்றி எழுதுகின்றார்: சிலருடைய தகுதி நற்சான்றுக் கடிதங்கள் வழியாக வருகின்றது, சிலருக்கு தங்களுடைய படிப்பு அல்லது பணியிலிருந்து வருகின்றது. இங்கே தன்னுடைய தகுதியைக் கடவுளின் கொடை எனக் காண்கின்றார் பவுல். அதாவது, தான் தகுதியற்ற நிலையில் இருந்தாலும் கடவுள் தன்னை அழைத்துத் தகுதிப்படுத்தியுள்ளார் என்பதே பவுலின் நம்பிக்கை.

(ஆ) மறையப்போவதும் நிலையாக இருப்பதும்

'மறையப்போவது மாட்சி உடையதாக இருந்தால் நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாக இருக்கும்'. இக்கடிதத்தில் பவுல் இதையொத்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகின்றார். 'காண்பவை – காணாதவை,' 'குறுகிய காலம் - நீண்ட காலம்' போன்ற சொல்லாடல்களைப் பயன்படுத்தும்போதெல்லாம் அங்கே பவுலின் நம்பிக்கைப் பார்வை நமக்குத் தெரிகிறது.

ஒரு புத்தகத்தின் பின்பக்கத்தை, ஓர் இலையின் பின்பக்கத்தை, ஒரு சிற்பத்தின் பின்பக்கத்தை என நாம் காணாதவை நிறைய இருக்கின்றன. காணாதவையும் இருத்தலைக் கொண்டிருக்கின்றன. காணத் தொடங்கும் அந்த நொடி காட்சி மறைந்துவிடுகிறது. ஆனால், காணாதது எப்போதும் நிலையாக இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:17-19), தான் திருச்சட்டத்தை அழிக்க அல்ல, மாறாக நிறைவேற்றவே வந்தேன் என மொழிகிறார் இயேசு.

கற்களால் எழுதப்பட்ட சட்டத்தை, இதயத்தால் எழுதப்பட்ட சட்டத்தைக் கொண்டு நிறைவுசெய்கிறார் இயேசு.


Monday, June 7, 2021

உங்கள் ஒளி

இன்றைய (8 ஜூன் 2021) நற்செய்தி (மத் 5:13-16)

உங்கள் ஒளி

இயேசு தன்னுடைய மலைப்பொழிவின் தொடக்கத்தில், 'பேறுபெற்றவர்கள்' பகுதியைத் தொடர்ந்து, தன் சீடர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருகின்றார்: 'உப்பு,' 'ஒளி,' 'மலைமேல் நகரம்.'

இம்மூன்று உருவகங்களும் தரும் பொருள் ஒன்றுதான். சீடர்களுடைய இயல்பு அப்படியே அவர்களுடைய செயல்களில் வெளிப்படுகிறது. அதை அவர்கள் மறைத்து வைக்க முடியாது. ஆனால், இயல்பு குறைந்துவிட்டால் இயக்கம் குறைந்துவிடும்.

ஒளி குறைந்துவிட்டால் இருள் உருவாகிவிடும்.

உவர்ப்பு குறைந்துவிட்டால் உப்பு சாரம் இழந்துவிடும்.

மலைமேல் உள்ள நகரத்திற்கு எதிராக இன்னொரு நகரம் உருவாகிவிட்டால் அது மறைந்துவிடும்.

ஆக, சீடர்கள் தங்களுடைய அகம் மற்றும் புறக்காரணிகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அப்படி எச்சரிக்கையாக இருந்த பின்னர், அவர்கள் செய்ய வேண்டியது ஒன்று: 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!'

அந்த ஒளிர்தல் நற்செயல்கள் வழியாக வெளிப்படுகிறது. அதைக் காணுகின்ற அனைவரும் ஒளியின் ஊற்றாகிய வானகத் தந்தையைப் புகழ்வார்கள். ஒருவர் ஒளிர மறுக்கும்போது, நற்செயல்கள் செய்ய மறுக்கிறார். அப்படி மறுத்தல் வானகத்தந்தையை மறுதலிப்பதாகும்.

இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், கடிதத்தின் பொருளை மிக அழகாகத் தொடங்குகின்றார்: 'நான் ஒரே நேரத்தில் 'ஆம்' என்றும், 'இல்லை' என்றும் உங்களிடம் பேசுவதில்லை. கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பது போல நான் சொல்வதும் உண்மையே.'

நான் அண்மையில் வாசித்த நூல் ஒன்றின் ஆசிரியர், தன் வாழ்க்கையைப் பற்றி எழுதுகின்றார்: 'வாழ்வின் இளமைக் காலத்தில் நாம் அகல உழுகின்றோம். நிறையப் பேரிடம் உறவாட வேண்டும். நிறையப் பயணம் செய்ய வேண்டும். நிறைய நாடுகளுக்குச் செல்ல வேண்டும். இப்படியாக நாம் அனைத்தையும் பற்றிக்கொள்ள நினைக்கின்றோம். ஆனால், வாழ்வின் மகிழ்ச்சி அகல உழுவதில் அல்ல. மாறாக, ஆழமாக உழுவதில்தான் உள்ளது. நிறையப் பேரிடம் உறவாடுவது விடுத்து ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது. நிறையப் பயணம் விடுத்து ஒரே இடத்தில் தங்குவது. நிறைய நாடுகள் விடுத்து ஒரே கனவு அல்லது பணியைப் பற்றிக்கொள்வது. இப்படிச் செய்வது கடினம். ஏனெனில், ஒன்றை நான் பற்றிக்கொள்ளும்போது இன்னொன்றை நான் விட வேண்டும். ஒரே நேரத்தில் நான் பலவற்றுக்கு, 'ஆம்' என்று சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் நான் ஒன்றுக்கு, 'ஆம்' என்றும், 'இல்லை' என்றும் சொல்லும் நிலையில் இருப்பேன். வாகனத்தில் செல்கிறேன். வலது புறத்திற்கு 'ஆம்' என்றால், இடது புறத்திற்கு 'இல்லை' என்று சொல்ல வேண்டும். ஒரே நேரத்தில் ஆம் என்றும் இல்லை என்றும் சொல்ல முற்பட்டால் நான் அதே இடத்தில்தான் நின்றுகொண்டிருப்பேன்.'

பவுல்மீது கொரிந்து நகர மக்கள் வைத்த குற்றச்சாட்டு இதுவே. பவுல் ஒரே நேரத்தில் இரு நற்செய்தியை அறிவித்தார் என்று. ஆக, பவுல் அக்குற்றச்சாட்டை மறுத்து, தன்விளக்கக் கடிதமாக இதை எழுதுகின்றார்.

நாம் வளரத் தொடங்கும்போது, 'இல்லை' எனச் சொல்லிப் பழக வேண்டும்.

ஒளி ஒரே நேரத்தில் ஒளியாகவும் இருளாகவும் இருப்பதில்லை.

உப்பு ஒரே நேரத்தில் உவர்ப்புத்தன்மையோடும் உவர்ப்பற்றும் இருப்பதில்லை.

மலைமேல் நகரம் ஒரே நேரத்தில் மேலேயும் கீழேயும் இருப்பதில்லை.

ஒன்று தன் இயல்பைத் தக்கவைக்க வேண்டுமென்றால், இயல்புக்குப் பொருந்தாததைக் களைய வேண்டும். அதுவே நற்செயல்களின் தொடக்கப்புள்ளி.


Sunday, June 6, 2021

கண்களை மூடி

இன்றைய (7 ஜூன் 2021) நற்செய்தி (மத் 5:1-12)

கண்களை மூடி

கடவுளின் ரேகைகள் மனித முகங்கள் எங்கும் பதிந்து கிடக்கின்றன. அந்த முகங்களைப் பார்க்கும்போதெல்லாம், கண்ணுக்குப் புலப்படாத ஒன்றையும் தாண்டிப் பார்த்தால் எத்துணை நலம்!

'வண்டியில் மாம்பழம் விற்பவர்களே! இன்று மாலைப் பொழுதுக்குள் உங்களுக்கு எல்லாம் விற்றுவிடும்!'

'அழுகின்ற குழந்தைகளைக் கைகளில் ஏந்துபவர்களே! இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்கள் குழந்தை சிரிக்கும்!'

'உறவுகளை இழந்து நிற்பவர்களே! உங்கள் உறவுகள் மீண்டும் வரும்!'

'மருந்துக் கடைகளில் ஏக்கமான முகத்துடன் நிற்பவர்களே! உங்கள் நோய் விரைவில் குணமாகும்!'

'வழியில் இரந்து உண்பவர்களே! உங்களுக்கு இரவு உணவு கிடைக்கும்!'

'முதுமையின் தனிமையில் யாரும் இல்லாமல், பால்கணியில் அமர்ந்து சாலையைப் பார்த்துக்கொண்டிருப்பவர்களே! நீங்கள் ஆறுதல் பெறுவீர்கள்!'

இயேசுவின் மலைப்பொழிவுகள் ஏறக்குறைய இதே தொனியில்தான் இருக்கின்றன. தன்னைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளைப் பார்க்கின்றார் இயேசு. ஏழையர், துயருறுவோர், கனிவுடையோர், தூய்மையான உள்ளத்தோர், இரக்கமுடையோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறத்தப்படுவோர், மக்களால் இகழ்ந்து பேசப்படுவோர் என எண்ணற்ற நபர்கள் அவரைச் சுற்றி இருக்கின்றனர். கண்களால் அவர்களைப் பார்க்கும் இயேசு, கண்களை மூடிக்கொண்டு அவர்களின் பேறுபெற்ற நிலையைக் காண்கின்றார்.

கண்களை மூடும் எவரும் பேறுபெற்ற நிலையைக் கண்டுகொள்வார்.

ஏனெனில், கண்களை மூடும்போது நம் ஆன்மாவின் கண்கள் திறக்கின்றன. ஆழ்ந்த மறைபொருள்கள் அங்கே வெளிப்படுகின்றன.

இயேசுவின் வார்த்தைகள் வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, அவை இங்கேயே இப்போதே நிகழக்கூடியவை.

எடுத்துக்காட்டாக, அமைதியை ஏற்படுத்துவோர். இவர்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை ஏற்படுத்துபவர்கள் அல்லர். மாறாக, தங்கள் அன்றாட உறவுகளில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மன்னித்து, ஆறுதல் சொல்லி வாழ்பவர்கள். இவர்கள் பகைமை பாராட்டுவதில்லை. வஞ்சகம் நினைப்பதில்லை. வன்மம் வளர்ப்பதில்லை. காத்திருந்து தாக்குவதில்லை. மாறாக, உடனுக்குடன் அமைதியை ஏற்படுத்த விழைபவர்கள். இவர்கள் கடவுளின் மக்கள். ஏனெனில், தங்களைப் போல மற்றவர்களைப் பார்க்கிறார்கள் இவர்கள். தங்களில் உள்ள கடவுளை மற்றவர்களில் காண்கின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமடலின் தொடக்கப் பகுதியை வாசிக்கின்றோம். வருகின்ற நாள்களில் நாம் இதிலிருந்தே வாசிக்கவிருக்கின்றோம். 'கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கின்றார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்க முடிகிறது' எனச் சொல்கிறார் பவுல். அதாவது, தன் இன்னல் கண்டு வருந்தாமல், மற்றவர்களின் இன்னல்களைப் புரிந்துகொள்ள இது தனக்கு வாய்ப்பளிக்கிறது என்கிறார் பவுல். இத்திருமடல் மிகவும் சோகமானதாகவும், அதே வேளையில் நம்பிக்கை தருவதாகவும் இருக்கிறது. பவுல் தன்னிலை விளக்கக் கடிதமாகவே இதை எழுதுகின்றார்.

கண்களை மூடிக் காண முடிந்தது பவுலால். ஆகையால்தான், இருத்தலில் இல்லாத ஒன்றைக் கண்டு மகிழ்ந்தார்.

நம் கண்களுக்கு எதிரில் உள்ளவை கரடுமுரடாக இருக்கும்போது, சற்றே கண்களை மூடினால் பேறுபெற்ற நிலை தெரியும்.


Saturday, June 5, 2021

பயணத் தொடக்கம்

ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

பயணத் தொடக்கம்

'கிறிஸ்துவை உணவாக உட்கொண்டு ஊட்டம் பெறும் யாரும், தினசரி உணவின்றி வாடுவோர்மீது அக்கறையின்றி இருக்க இயலாது' – ஆண்டவரின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா அன்று நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு இது.

இன்றைய முதல் வாசகத்தில், உடன்படிக்கையின் ஏட்டை மக்கள் முன் வாசித்த மோசே, உடன்படிக்கையின் இரத்தத்தை அவர்கள்மேல் தெளிக்கின்றார். இரண்டாம் வாசகத்தில், எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலில், இயேசு தன் சொந்த இரத்தத்தைக் கொண்டு ஒரே முறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்துக்குமான பலியைச் செலுத்தினார் என மொழிகின்றார். மேலும், இயேசு புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கின்றார் என எழுதுகின்றார். அது என்ன புதிய உடன்படிக்கை? இத்திருமடலைப் பொருத்தவரையில், பழைய உடன்படிக்கை விலங்குகளின் இரத்தத்தால் நிறைவேற்றப்பட்டது. ஆனால், புதிய உடன்படிக்கை வானதூதர்களுக்கும் மேலான ஆனால், தன்னையே மனுக்குலத்தோடு ஒன்றிணைத்துக்கொண்டு இறைமகன் இயேசு கிறிஸ்துவின் உயர்மிகு இரத்தத்தால் நிறைவேற்றப்பட்டது. நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் சீடர்களுடன் இராவுணவை உண்ணும் நிகழ்வில், அப்பத்தை எடுத்து, 'இது என் உடல்,' என்றும், கிண்ணத்தை எடுத்து, 'இது எனது உடன்படிக்கையின் இரத்தம்' என்றும் அளிக்கின்றார். மூன்று வாசகங்களிலும், உடன்படிக்கை என்ற வார்த்தை மையமாக இருக்கின்றது.

'உடன்படிக்கை' என்பது ஓர் அரசியல் அல்லது உலகியல் சொல். வெற்றி பெற்ற அரசன் தான் வெற்றி கொண்ட மக்களுடன் உடன்படிக்கை ஏற்படுத்துவார். அதன்படி, இருவருக்கும் சில உரிமைகளும் கடமைகளும் வரையறுக்கப்படும். உடன்படிக்கையின் அடையாளமாக இரத்தம் தெளிக்கப்படும். ஏனெனில், உடன்படிக்கையை மீறுபவர்கள் கொல்லப்பட்;ட ஆட்டைப் போல கொல்லப்படுவார்கள் என்ற மறைமுக எச்சரிக்கையும் இதன் வழியாக விடப்பட்டது.

இயேசுவின் புதிய உடன்படிக்கை தரும் உரிமை என்ன? கடமை என்ன?

உரிமை என்னவெனில், அது பலருக்காகச் சிந்தப்படுகின்றது. அதாவது, அவருடைய துன்பத்தில், இரத்தத்தில் மற்றவர்கள் நலம் பெறுகின்றனர். கடமை என்னவெனில், அவரோடு, நாம் ஒலிவ மலைக்கு ஏறிச் செல்ல வேண்டும்.

இயேசுவின் வாழ்க்கையில் இறுதி இராவுணவு அவருடைய பணி வாழ்வின் இறுதி நிகழ்வாக இருந்தாலும், துன்பம் ஏற்றலுக்கான தொடக்கமாக அது இருக்கிறது. ஆக, இயேசுவுடன் பந்தியில் அமர்தல் நம் உரிமை எனில், அவருடன் எழுந்து ஒலிவ மலைக்குச் செல்தல் நம் கடமை.

திருத்தந்தையின் டுவிட்டர் பதிவின் உட்கருத்தும் இதுவே: நற்கருணை உணவை உண்ணுதல் நம் உரிமை. உணவில்லாதவர்களுக்கு நம் உணவைப் பகிர்தல் நம் கடமை. அதுவே நாம் ஏற வேண்டிய ஒலிவ மலை.

பல நேரங்களில் நம் நற்கருணைக் கொண்டாட்டம் மேலறையிலேயே முடிந்துவிடுகிறது. ஒலிவ மலைக்குச் செல்ல நாம் மறந்துவிடுகின்றோம்.

நம் தாய்த்திருஅவையின் மறைக்கல்வி, நற்கருணையை பலி, உணவு, உடனிருப்பு என்று நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. திருஅவையின் தந்தையர்களும், திருதந்தையர்களும் தங்கள் போதனைகளில் நற்கருணையின் இயல்பு, ஆற்றல், உள்பொருள் பற்றி நிறையப் பேசியுள்ளனர். நற்கருணையை மையமாக வைத்து நிறைய வல்ல செயல்கள் நடந்தேறியுள்ளன. நற்கருணைமேல் தனிப்பட்ட பக்தி கொண்ட நிறையப் புனிதர்கள் வரலாற்றை நாம் வாசித்துள்ளோம். நற்கருணை பலருடைய வாழ்வைப் புரட்டிப் போட்டுள்ளது.

நற்கருணையை நாம் கொண்டாடும்போதெல்லாம் நாம் இயேசுவால் வெற்றி கொள்ளப்பட்ட மக்கள் என்பதையும், அவருடைய வெற்றிகொள்தல் ஏற்படுத்திய உடன்படிக்கையின் மக்கள் என்பதையும் மறந்துவிட வேண்டாம்.

பெருந்தொற்றுக் காலத்தில், நற்கருணை இன்று தொட முடியாத தூரத்தில் இருக்கின்றது. ஒளிரும் திரைகளில் நற்கருணைக் கொண்டாட்டத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த காணொலிக்கு நகரும் நிலைக்கு நாம் வந்துவிட்டோம். 'இதுவே நன்றாகத்தானே இருக்கிறது!' என்ற எண்ணமும் மெதுவாக உதிக்கத் தொடங்குகிறது. ஆனால், நற்கருணையை இயேசு தன் குழுமத்தில் கொண்டாடினார். தன் சீடர்களை அனுப்பித் தயாரித்தார். அமர்ந்து உண்டார். பேசி விளக்கினார்.

நற்கருணை அனுபவம் என்பது பற்றி இன்று எண்ணிப் பார்ப்போம். நான் உண்ணும் நற்கருணையும், நான் இன்று காணும் நற்கருணையும் என்னில் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது? 'திருப்பலி' அல்லது 'நற்கருணை' நம் அன்றாட வாழ்வின் ஆன்மிகக் கடமையாக மாறிவிட வேண்டாம். என் ஆன்மிக நிறைவுக்காக நான் பயன்படுத்திக்கொள்ளும் 'பயன்பாட்டுப் பொருளாக' அது மாறிவிட வேண்டாம். நாம் அன்றாடம் உண்ணும் இந்த உணவு இயேசுவின் இறுதி உணவு. அங்கே எவ்வளவு உணர்ச்சிப் பெருக்கும், வேகமும் இருந்திருக்கும்!

சிலுவையின்மேல் ஏறி அமர்வதற்கும், சிலுவையைத் தாண்டி உயிர்த்துச் செல்வதற்கும் இயேசு பயன்படுத்திய உந்துபலகையே நற்கருணையே. அது அவருடைய பயணத் தொடக்கம் எனில், அதுவே நம் வாழ்வின் பயணத் தொடக்கமாகவும் இருக்கட்டும். ஆகையால்தான், நற்கருணைக் கொண்டாட்டத்தின் நிறைவில், 'சென்று வாருங்கள்!' என அருள்பணியாளர் மக்களை பயணம் செய்யுமாறு அனுப்புகின்றார்.

திருப்பாடல் ஆசிரியரோடு இணைந்து (திபா 116), 'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?' என்று பாடும் நாம், நம் கட்டுகள் அவிழ்க்கப் பெற்ற நாம் ஒருவர் மற்றவரின் கட்டுகளை அவிழ்க்கப் பயணம் செய்வோம்.

நம் முகக்கவசங்களின் கட்டுகள் விரைவில் அகலவும், நற்கருணையை நாம் உட்கொள்ளவும் இறைவன்தாமே தன் இரக்கத்தை நமக்கு அருள்வாராக!


Friday, June 4, 2021

இளைஞருக்கு சம்பளம்

இன்றைய (5 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபி 12)

இளைஞருக்கு சம்பளம்

தோபியாவுடன் வழி நடந்தது யார் என்று வாசகருக்குத் தெரியும். ஆனால், கதைமாந்தர்களுக்குத் தெரியாது. நூலின் இறுதியில் அசரியா தன்னை யாரென்று அறிமுகம் செய்கின்றார். தோபித்தையும், தோபியாவையும் தனியாக அழைத்துச் சென்ற இரபேல் தன்னை வெளிப்படுத்துகின்றார்:

'நல்லதைச் செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. நீதியுடன் இணைந்த தர்மம் அதைவிடச் சிறந்தது ... தர்மம் சாவினின்று காப்பாற்றும், பாவத்திலிருந்து தூய்மையாக்கும்' என அறிவுரை பகர்கின்றார் தூதர். மேலும், அவர்களின் வாழ்வில் தான் உடனிருந்த பொழுதுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அறநெறி, வானதூதர் பற்றிய நம்பிக்கை, கடவுளின் உடனிருப்பு ஆகிய கருத்துருக்களை நாம் இங்கே காண்கின்றோம்.

இன்று இந்நூலை வாசிக்கும்போது நமக்குள் சில கேள்விகள் எழலாம்: 'ஏன் கடவுள் இன்று தூதர்களை அனுப்புவதில்லை? ஏன் இன்று அறிகுறிகளும் வல்ல செயல்களும் நடந்தேறுவதில்லை? கடவுள் ஏன் தூரமாக நிற்கிறார்? நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது ஏன்?'

இக்கேள்விகளுக்கு விடையாக வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம்.

இன்றைய வாசகத்தில் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். காணிக்கைப் பெட்டியில் இவரே அதிகம் போட்டார் எனப் பாராட்டுகின்றார் இயேசு.

இக்கைம்பெண் இவ்வாறு தனக்குள்ளதையெல்லாம் காணிக்கையாகப் போடக் காரணம் என்ன?

தன்னிடம் இல்லாதவற்றைப் பார்க்கவில்லை இந்தப் பெண். மாறாக, தன்னிடம் இருப்பவற்றைப் பார்த்தார். தன் வாழ்வு, தன் உயிர், தன் இருத்தல், தன் இயக்கம் அனைத்தும் தனக்கு இன்று இருக்கக் காரணம் இருக்கின்றவராகிய இறைவனே என அவர் உணர்ந்துகொண்டார்.

'இல்லை' என்பவர்க்கு எதுவும் இல்லை தான்!

ஆனால், 'இருக்கிறது!' என்பவருக்கு வெறும் கையும் கூட இருக்கிறது தான்.

தங்கள் வெற்றுக் கைகளால் இறைவனைத் தவிர வேறெதையும் பிடிக்க விரும்பவில்லை தோபியாவும் ஏழைக் கைம்பெண்ணும்.


Thursday, June 3, 2021

என் கண்ணின் ஒளியே

இன்றைய (4 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபி 11:5-17)

என் கண்ணின் ஒளியே

தோபித்து நூலின் கதையின் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிட்டது. சாராவுக்குத் திருமணம் நடந்துவிட்டது. வானதூதர் இரபேல் அலகையைக் கட்டிப்போட்டுவிடுகின்றார். தோபியா உயிர் பிழைக்கின்றார். அந்த வீட்டில் விருந்து அரங்கேறுகிறது. விருந்தின் களிப்பு முடிந்தவுடன் தந்தையை நினைவுகூர்கின்றார் தோபியா. உடனடியாகத் தந்தையின் இல்லம் திரும்ப ஏற்பாடுகள் நடக்கின்றன. நிறையப் பரிசுப் பொருள்கள் மற்றும் கடன் தொகையுடன் இல்லம் திரும்புகிறார் தோபியா. சாராவும் பணிப்பெண்களும் ஆடு, மாடுகளும் மெதுவாக வந்து சேர்கின்றன.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் இரபேலின் வார்த்தைகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றார் தோபியா. தன் தந்தையின் கண்களில் மீனின் பித்தப்பையைத் தேய்க்க, அவர் பார்வை பெறுகின்றார். மீனுக்கும் கண்ணுக்கும் தொடர்பு உண்டு. கண் பார்வை சிறக்க மீன் எண்ணெய் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

கண் பார்வை கிடைத்தவுடன், 'என் மகனே, என் கண்ணின் ஒளியே, உன்னைப் பார்த்துவிட்டேன்!' என உள்ளம் மகிழ்கின்றார் தோபித்து. திருமணம் நிகழ்ந்த செய்தி கேட்டு உடனடியாக நகரின் வாயில் நோக்கிச் செல்கின்றார். அவர் தனியே செல்வதைக் காண்கின்ற ஊரார் வியக்கின்றனர்.

'ஆண்டவர் தன்மேல் இரக்கம் காட்டியுள்ளார்' என அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அறிக்கையிடுகின்றார் தோபித்து.

இதுதான் தோபித்தின் நம்பிக்கைப் பார்வை.

தன் வாழ்வில் நடக்கின்ற அனைத்திலும் கடவுளின் கரத்தைப் பார்க்கின்றார். இப்படிப் பார்ப்பதற்கு அசாத்தியத் துணிவும் நம்பிக்கையும் வேண்டும். நம் மனித உள்ளம் இயல்பாக, நம் வெற்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தன்னால்தான் இயன்றது என அறிவித்துக்கொள்ள முயற்சி செய்கின்றது. 'எல்லாம் என் கையால்!' என்ற எண்ணம் தான் பல நேரங்களில் நம் எண்ணமாக இருக்கிறது.

நம்பிக்கைப் பார்வை நமக்கு எளிதாக வருவதில்லை.

தாவீது அரசரின் வாழ்க்கையில் இதைப் பார்க்கின்றோம். தாவீதின் நம்பிக்கைப் பயணத்தை, 'பத்சேபாவுக்கு முன்' 'பத்சேபாவுக்குப் பின்' என்று பிரிக்கலாம். பத்சேபா நிகழ்வுக்கு முன் வரை, அனைத்தும் தன் கையால், அனைத்தும் தனக்கு என்று நினைக்கின்றார் தாவீது. தானே முடிவெடுக்கின்றார். தானே செயல்படுகின்றார். தானே உரியாவைக் கொல்கின்றார். ஆனால், ஆண்டவராகிய கடவுளின் இரக்கத்தை அனுபவித்த அந்த நொடி முதல் அவருடைய வாழ்க்கை மாறுகிறது. நிறைய சோக நிகழ்வுகள் நடக்கின்றன. சொந்த மகனே அவரைக் கொல்லத் தேடுகின்றான். தன் சொந்த நாட்டிலேயே நாடோடியாக, பித்துப் பிடித்தவராகச் சுற்றித் திரிகின்றார், நிறைய பாலியல் பிறழ்வுகளும் வன்முறை நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. சவுலின் வீட்டார் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்கின்றனர். ஆனாலும், அவர் அனைத்தையும் இறைவனின் செயல் எனப் பார்க்கின்றார்.

எடுத்துக்காட்டாக, சவுலின் உறவினரான சிமயி, தாவீதைப் பழித்துரைக்கும்போது, 'அவனை விட்டுவிடு! அவன் பழிக்கட்டும்! ஏனெனில், ஆண்டவரே அவனைத் தூண்டியுள்ளார்' என்கிறார்.

தோபித்து தன் மருமகளையும் கண்டு இல்லத்திற்குள் வரவேற்கின்றார். 'நலம், பேறு, மகிழ்ச்சி' ஆகிய அனைத்தும் உன்னோடு வருக! என வரவேற்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், தாவீதுக்கும் மெசியாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி பேசப்படுகிறது.

தாவீது ஒரே நேரத்தில் மெசியாவின் தந்தையாகவும், மெசியாவின் பணியாளராகவும் இருக்கின்றார்.

இறைவனின் கரத்தின் செயலை நம் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் கண்டு, அவருடைய இரக்கத்தைப் போற்றவது நலம்.

ஒவ்வொரு நாள் துயில் எழும்போதும் நமக்கு புதியதொரு நாள் கிடைக்கின்றது. அலெக்சாந்தர் அரசரின் பெரும்படை கூட ஒரு நாளுக்கு ஈடாகாது. அந்த நாளில் இறைவனின் இரக்கத்தை காணுதலும், அதே இரக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதும் இன்றைய நம் உறுதிப்பாடாக இருக்கலாம்.