Sunday, July 31, 2022

மக்களை அனுப்பிவிடும்

இன்றைய (1 ஆகஸ்ட் 2022) நற்செய்தி (மத் 14:13-21)

மக்களை அனுப்பிவிடும்

'நாம் ஒன்று நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கும்' என்பது நம்மிடையே வழங்கப்படும் பழமொழி. இயேசு போதித்துக் கொண்டிருக்கின்றார். மாலை நேரம் ஆகின்றது. இடமும் பாலை நிலமாக இருக்கின்றது. இதைக் காண்கின்ற சீடர்கள் தாங்களாகவே முன்வந்து, 'உணவு வாங்கிக்கொள்ள மக்களை அனுப்பிவிடும்' என்று சொல்கின்றனர். வாழ்வுதரும் உணவைத் தங்களருகே வைத்துக்கொண்டு வயிற்றுக்கான உணவை மக்கள் வாங்கிக்கொள்வதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகின்றனர்.

தங்கள் அருகில் இருப்பவரின் வல்லமையை அவர்கள் மறந்துவிட்டனர். அதை விட, ஒரு பிரச்சினைக்கு இதுதான் வழி, இதுமட்டும்தான் வழி என்ற எண்ணத்தில் அவர்கள் மாற்று எண்ணங்களைச் சிந்திக்க மறந்துவிட்டனர்.

சீடர்கள் தங்கள் முன்னே உள்ள மூன்று பிரச்சினைகளைக் காண்கின்றனர்: ஒன்று, பாலை நிலம். இரண்டு, மாலை நேரம். மூன்று, மக்கள் கூட்டத்தின் பசி. பிரச்சினைகள் மூன்று என்றாலும் அவர்கள் தீர்வு என்னவோ ஒன்றாக - 'மக்களை அனுப்பிவிடுதல்' - இருக்கின்றது. இயேசு இன்னொரு தீர்வைக் காண முயற்சி செய்கின்றார். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.' இப்போதுதான் சீடர்கள் தங்கள் கைகளில் இருப்பதைக் காண முயற்சி செய்கின்றனர்.

அவர்களின் ஆலோசனையை இயேசு ஏற்க மறுத்ததுடன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பொறுப்பை அவர்களிடமே கொடுக்கின்றார்.

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பல நேரங்களில் நாம் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினையை அப்படியே ஒதுக்கி அல்லது கூட்டித் தள்ளிவிட நினைக்கின்றோம்.

ஏன்?

நம் திறன்மேல் நம்பிக்கையின்மை.

தோல்வி பற்றிய பயம்.

முயற்சி எடுப்பதற்கான தயக்கம்.

இம்மூன்று காரணங்களுக்காக நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ள மறுக்கின்றோம். நமக்கு நாமே பொய்க்காரணங்களை உருவாக்கிக்கொள்ளவும், மாயமான எண்ணங்களை ஏற்படுத்திக்கொள்ளவும் செய்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில் இரு இறைவாக்கினர்களைக் காண்கின்றோம். அனனியா என்னும் பொய் இறைவாக்கினர், எரேமியா என்னும் உண்மையான இறைவாக்கினர். மக்கள், அரச அலுவலர்கள், மற்றும் அரசர்களின் நல்லெண்ணத்தைப் பெறும் பொருட்டு, 'எருசலேமுக்கு எதுவும் நேராது' எனப் பொய்யுரைக்கின்றார். அடிமைத்தனத்தின் அடையாளமாக எரேமியா அணிந்திருந்த மரத்தாலான நுகத்தை உடைத்துப் போடுகின்றார். ஆனால், எரேமியாவோ மரத்தாலான நுகம் இரும்பு நுகமாக மாறிவிட்டது என எச்சரிக்கின்றார்.

எதிரிகளின் படையெடுப்பு வரப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தாலும், படையெடுப்பு நடைபெறாது என்று பிரச்சினையை அப்படியே முழுவதுமாக ஒதுக்கி விடுமாறு அரசருக்குக் கற்பிக்கின்றார்.

இன்றைய வாசகங்கள் நமக்கு வழங்கும் பாடங்கள் எவை?

(அ) என் வாழ்வின் பிரச்சினைகளை நான் எதிர்கொள்கிறேனா? அல்லது பிரச்சினைகளைத் தவிர்க்க முயற்சி செய்கிறேனா?

(ஆ) என் பிரச்சினைகளை இறைவனின் கண்கொண்டு பார்க்கும்போது தீர்வுகளுக்கான வழிகள் அதிகம் என்பதை உணர்கின்றேனா?

(இ) மற்றவர்களை திருப்திப்படுத்த முயன்ற அனனியா உண்மையிலிருந்து பிறழ்கின்றார். மற்றவரைத் திருப்திப்படுத்துதல் அவருக்கே ஆபத்தாக முடிகிறது. எனவே, பிறரைத் திருப்திப்படுத்தும் பழக்கம் விடுதல் நலம்.


Saturday, July 30, 2022

செல்லும் செல்வம்!

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

I. சபை உரையாளர்  1:2, 2:21-23 கொலோசையர் 3:1-5, 9-11 லூக்கா 12:13-21

செல்லும் செல்வம்!

'செல்வம்' என்பது எப்போது நம் கைகளை விட்டுச் 'செல்வோம்' என்று நிற்பதால்தான், செல்வத்திற்கு 'செல்வம்' என்று பெயர் வந்தது என 'அர்த்தமுள்ள இந்துமதம்' நூலில் பதிவு செய்கிறார் கவியரசு கண்ணதாசன்.

செல்வம் என்று வரும்போதெல்லாம் விவிலியம் இரண்டுவகை கருத்துக்களைக் கொண்டிருக்கிறது: ஒரு பக்கம், செல்வம் அறவே கூடாது என்றும், 'பண ஆசையை அனைத்து தீமைக்கும் ஆணிவேர்' என்றும் கற்பிக்கின்றது. மறு பக்கம், பயன்படுத்தப்படும் உருவகங்கள் எல்லாம் 'புதையல்,' 'முத்து' என்று செல்வம் பற்றியதாகவே இருக்கிறது.  ஒரு பக்கம், செல்வம் என்பது இறைவனின் ஆசீர் என்று சொல்லப்படுகிறது. மறு பக்கம், ஏழையரின் அருகில்தான் இறைவன் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எதை எடுத்துக் கொள்வது? எதை விடுவது? செல்வத்தைப் பிடித்துக் கொள்வதா? விட்டுவிடுவதா? செல்வத்தை நாடுவதா? அல்லது அதை விட்டு ஓடுவதா?  செல்வம் நமக்குத் தருகின்ற வாழ்வை நாடுவதா? அல்லது வாழ்வு தருகின்ற செல்வத்தை நாடுவதா? செல்வம் தரும் வாழ்வா? வாழ்வு தரும் செல்வமா?

இன்றைய நற்செய்தியில் கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார் கூட்டத்திலிருக்கும் ஒருவர். 'பெயரில்லாத இந்த நபரில்' நாம் நம் ஒவ்வொருவரையும் வைத்துப் பார்க்கலாம். 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் அண்ணனுக்குச் சொல்வீரா?' என்று கேட்கின்றார் அந்த ஒருவர். அண்ணனுக்கு இரு பகுதியும், தம்பிக்கு ஒரு பகுதியும் சொத்து என்பது இணைச்சட்டம் சொல்லும் விதிமுறை (21:27). கேள்வி கேட்பவரின் அண்ணன் தன் தம்பிக்குச் சேர வேண்டியதைக் கொடுக்க மறுக்கிறார். அதன் காரணம் இங்கே சொல்லப்படவில்லை. இயேசு விடையாக மற்றொரு கேள்வியைப் போடுகின்றார்: 'என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?' முதல் ஏற்பாட்டில் இம்மாதிரி வேலையை மோசே செய்திருக்கிறார் (காண். விப 2:14, எண் 27:1-11). இயேசுவின் கேள்வி அறிவுரையாக மாறுகின்றது: 'எவ்வகைப் பேராசைக்கும் இடம் கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது!' என்கிறார்.

இயேசுவின் அறிவுரை இரண்டு கூறுகளைக் கொண்டிருக்கிறது: (அ) பேராசை அறவே கூடாது. (ஆ) உடைமைகள் ஒருவருக்கு வாழ்வு தருவதில்லை.

தொடர்ந்து இயேசு ஓர் உருவகம் தருகின்றார். 'அறிவற்ற செல்வன்' என்று இந்த உருவகத்திற்கு பெயர் தரப்படுகின்றது. ஆனால், இந்த செல்வன் அறிவற்றவர் அல்லர். அறிவானவர்தான்! அறிவற்ற ஒருவரால் எப்படி தன் கிடங்குகளே கொள்ளாத அளவிற்கு தானியத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தச் செல்வன் அறிவாளி மட்டுமல்ல. கடின உழைப்பாளி. 'என் வயிற்றுக்கு நான் உழைக்க வேண்டும்,' 'உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது!' என்று தன் வயிற்றுக்குத் தான் உழைக்கின்றார். இவன் யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்கவில்லை. தனக்காக உழைத்தவர்களின் கூலியை மறுக்கவில்லை. மேலும், இவர் நல்ல மேனேஜர். திட்டமிடுவதில் கைதேர்ந்தவர். ஆகையால்தான், 'தானியத்தைக் கொள்வதற்கு கிடங்கு போதாது' என்று அதை மேம்படுத்த முயற்சி செய்கின்றார். இதுவரைக்கும் அவர் செய்தது சரிதான். ஆனால், இதற்குப் பின் அவர் தன் உள்ளத்தைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைகள்தாம் இயேசுவைப் பொறுத்தவரையில் தவறாகின்றன.

செல்வரின் உள்ளக்கிடக்கையை 'தன் உள்ளம் பேசுதல்' (சோலியோலோக்வி) என்ற இலக்கியப் பண்பைக் கொண்டு பதிவு செய்கின்றார் லூக்கா. ஒவ்வொருவரின் உள்ளத்திலிலும் இருப்பதை அறிபவர் இறைவன் என்று நாம் இங்கே பொருள் கொள்ள முடிந்தாலும் (காண். 12:2-3, 1:51, 2:35, 3:15), நம் ஒவ்வொருவரின் உள்ளமும் ஒவ்வொரு நொடியும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறது என்பதையும் நாம் மறுத்துவிட முடியாது.

'நான் என்ன செய்வேன்?' என்று கேட்கின்றார் செல்வர். இந்தக் கேள்வியில் அவரது ஏக்கமும், ஏதாவது செய்ய வேண்டும் என்னும் ஆர்வமும் தெரிகிறது. அவரின் கேள்விக்கு அவரே பதிலும் சொல்கின்றார். அவரின் பதிலில் மூன்று எதிர்கால நிகழ்வுகள் உள்ளன: 'நான் களஞ்சியத்தை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்,' 'என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்,' என் நெஞ்சிடம் சொல்வேன்!' மேலும், 'நான்,' 'என்,' 'எனது' என்னும் வார்த்தைகள் இந்தச் செல்வர் எந்த அளவுக்கு தன்னை மட்டுமே மையப்படுத்தியவர் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

'என் நெஞ்சமே! உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. நீ ஓய்வெடு! உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு!' என்கிறார் செல்வர். பணம் பெற்றவரின் வாழ்வு 'உண், களி, கொண்டாடு' என்று இருப்பதாக விவிலியத்தில் மற்ற நூல்களும் சான்று பகர்கின்றன (காண். சீரா 11:19, 1 ஏனோக் 97:9, எசா 22:12-14, தோபி 7:10-11, 1 கொரி 15:32). இவர் தன் நெஞ்சிலும், எண்ணத்திலும் இருந்து மற்ற எல்லாரையும் வெளியேற்றி விடுகிறார். 

இவரும், இவரின் செல்வங்கள் மட்டுமே உண்மை என்று அவர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் அங்கே ஒலிக்கிறது கடவுளின் குரல்: 'அறிவிலியே! இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?' என்று கேட்கிறார் கடவுள். 'என் எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்!' என்று செல்வர் நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அவரின் மற்றொரு எதிர்காலத்தை அவருக்குச் சுட்டிக் காட்டுகிறார் கடவுள். 'மகிழ்ந்திரு' (எஃப்ராய்ன்) என்ற செல்வரின் இறுதி வார்த்தையை 'முட்டாள்' (அஃப்ராய்ன்) என தன் முதல் வார்த்தையாக மாற்றிப் போடுகின்றார் கடவுள். 'எல்லாம் எனக்கே' என்று நினைத்த செல்வரிடம், 'இதெல்லாம் வேறொருவருடையதாகும்!' என்கிறார் கடவுள். 

12:21ல் கதையின் அறநெறி சொல்லப்படுகிறது: 'கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே!' ஒருவர் சேர்க்கும் செல்வம் அவருக்காக என்று இருந்தாலும், அவர் இறந்தபின் மற்றவருக்கு விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்தில்தான் இருக்கின்றார். மேலும், தனக்காக செல்வம் சேர்ப்பவர் கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவர் என்று சொல்லப்படுகின்றார்.

நாம் சேர்த்து வைக்கும் சொத்துக்களை, செல்வத்தை நாம் எடுத்துச் செல்ல முடியாது, அதை நாம் எடுத்துச் செல்ல முடியாதது மட்டுமல்ல, அதற்கு உரிமை இல்லாத ஒருவருக்கு அனைத்தையும் விட்டுச்செல்ல வேண்டும் என்பதே வாழ்வின் எதார்த்தம். இந்த எதார்த்தத்தை இன்றைய முதல் வாசகமும் (காண். சஉ 1:2, 2:21-23) பதிவு செய்கின்றது. 'வீண், முற்றிலும் வீண்!' என தன் நூலைத் தொடங்குகின்ற சபை உரையாளர், 'வீண்' என்ற வார்த்தையை 35 முறை பதிவு செய்கின்றார். 'உழைப்பு,' 'இன்பம்,' 'ஞானம்,' 'அறிவு,' 'சட்டம்' என அனைத்தும் 'வீண்' என்று காரசாரமாக விவாதிக்கின்றார். 'வீண்' என்பதன் எபிரேய வார்த்தை 'ஹேபல்.' இந்த வார்த்தைக்கு 'காற்று' அல்லது 'மூச்சு' என்றும், 'நகரக்கூடியது' என்றும் பொருள். எல்லாமே காற்றைப் போல கடந்து செல்லக் கூடியது என்னும் பொருளை இது உணர்த்துவதால் இதை 'வீண்' என்று மொழிபெயர்க்கிறோம். 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியேதான் காயினின் சகோதரர் ஆபேலும் அழைக்கப்படுகின்றார். ஆபேலுக்கு நேர்ந்த கொடுமை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கடவுளுக்கு ஏற்புடைய பலியைச் செலுத்தி, அவருக்கு நல்ல பிள்ளையாய் வாழ்ந்த ஆபேல் காட்டில் கேட்பாரற்றுக் கொலை செய்யப்பட்டுக் கிடக்கின்றார். அந்தக் கொடூரமான கொலையைச் செய்தது அவரின் உடன்பிறந்த சகோதரன் காயின். ஆபேலின் நல்ல செயல்களும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. வாழ்க்கையில் 'இவை எல்லாம் என்னைக் காப்பாற்றும்!' என்று நாம் நினைக்கும் எதுவும் நம்மைக் காப்பாற்றாமல் போகலாம் என உணர்ந்த சபை உரையாளர், அதே 'ஹேபல்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வாழ்வின் வீணானவைகளைச் சுட்டிக்காட்டுகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதியில், 'உழைப்பு வீண்' என வாதிடும் சபை உரையாளர், 'ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், உழைத்துச் சேர்த்த சொத்து அனைத்தையும் உழைக்காத ஒருவருக்கு அவர் விட்டுச் செல்ல வேண்டும். அவரது உழைப்பு வீண் என்பது மட்டுமல்ல. இது ஓர் அநீதியுமாகும். 'எனக்கு உரிமை இல்லாத ஒன்றை நான் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?' மேலும், ஞானத்தோடும், அறிவாற்றலோடும், திறமையோடும் ஒருவர் உழைத்தாலும், அவருக்கு துன்பமும், அமைதியின்மையும், தூக்கமின்மையும், மனச்சோர்வும்தான் மிஞ்சுகிறது.

இவ்வாறாக, நம் செல்வம் நமக்கும் மகிழ்வைத் தருவதில்லை. அது உரிமையில்லாத, உழைக்காத ஒருவரிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.

'நிலையானவை-நிலையற்றவை' என்று முதல் மற்றும் மூன்றாம் வாசகங்கள் பேசுவதை, 'மேல்-கீழ்' என்னும் உருவகத்தின் வழியாகப் பதிவு செய்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 3:1-5, 9-11). கிறிஸ்தவ வாழ்வின் பண்புகள் பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்து உயிர் பெற்றதன் அடையாளம் 'மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது' என்கிறார். நாம் இருப்பது கீழுலகம் என்றாலும், நம் எண்ணங்கள் மேலுலகு சார்ந்தவையாக இருக்க வேண்டும். மேலுலகு சார்ந்தவையாக என்பது 'மேலே பார்த்துக் கொண்டிருப்பது' என்ற பொருள் அன்று. மாறாக, காண்பவை யாவும் இவ்வுலகம் சார்ந்தவை. காணாதவை அவ்வுலகம் சார்ந்தவை. காண்பவை நிலையற்றவை. காணாதவை நிலையானவை. 'இவ்வுலகப் போக்கிலான பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலைவழிபாடான பேராசை' அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும் (3:5) என்றும் எச்சரிக்கின்றார். இந்த ஐந்து செயல்களுமே பல நேரங்களில் செல்வச் செழிப்பின் வெளிப்பாடாக இருக்கிறது என்பது கண்கூடு. இந்தச் செயல்கள் எல்லாம் பழைய இயல்பு என்று சொல்கின்ற பவுல், 'புதிய மனித இயல்பை நீங்கள் அணிந்திருக்கிறீர்கள்!' என அவர்களுக்கு நினைவூட்டுகின்றார்.

ஆக, நிலையற்றவற்றை நாடுவது பழைய இயல்பு. நிலையானவற்றை நாடுவது புதிய இயல்பு.

இவ்வாறாக, இன்றைய இறைவார்த்தை வழிபாடு, செல்வம் என்பது வாழ்வு தராமல் செல்லும் என்றும், அது தரும் வாழ்வும் வேகமாகச் செல்லும் என்றும் நமக்கு உணர்த்துகிறது.

இன்று இந்த வாசகங்கள் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

1. செல்வம் என்னும் விநோதம்

'செல்வம் சேர்ப்பது' என்பது எல்லா உயிரினங்களின் வாழ்வியல் தேவை. அரிசியைச் சேகரிக்கும் எறும்பு, கூடு கட்டுவதற்கு முள்களை சேகரிக்கும் காகம், குழியைப் பறித்து சுகமாக அமர்ந்து கொள்ளும் நாய்க்குட்டி, புற்றுக்களைக் கட்டி குடிபுகும் கரையான், பாம்பு என தாழ்நிலை உயிரினங்களும் ஏதோ ஒரு வகையில் உணவையும், உறைவிடத்தையும் சேகரிக்கின்றன. ஆக, செல்வம் சேர்த்தல் என்பது உயிரின் ஒரு பரிமாணம். சேர்த்து வைத்தால்தான் உயிர் வாழ முடியும் என்பது வாழ்க்கை நியதி. இப்படியிருக்க, செல்வம் சேர்த்தல் எப்படி மனித இனத்திற்குப் பாவமாக முடியும்? 'அவனன்றி அணுவும் அசையாது' என்பது முதியோர் வாக்கு. 'அவனன்றி கூட எல்லாம் அசைந்துவிடும். ஆனால், அது (பணம்) அன்றி எதுவும் அசையாது' என்பது இன்றைய வாக்கு. 'செல்வம் தேவையில்லை' என்று நான் இப்போது எழுதுவதற்குக் கூட செல்வம் தேவை - கணினி, மென்பொருள், என் ஓய்வு நேரம், மின்சாரம், அறை, இணைய இணைப்பு, மோடம், சிம்கார்ட். இந்த இரண்டு வார்த்தைகளை நான் எழுதி அவை உங்களை வந்து சேர்வது செல்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். ஆக, செல்வம் தேவையில்லை என்று நான் சொன்னால் அது அறிவன்று. செல்வம் வேண்டும், செல்வம் வேண்டாம் என்னும் இரண்டு வட்டங்களின் வரையறை மயிரிழை அளவு வித்தியாசமே. பொய்யாமொழிப் புலவர் வள்ளுவரும், 'அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்கிறார். 'அவ்வுலகம்' இருக்கிறது என்ற நம்பிக்கை இப்போது வேகமாக மறைந்து வருகிறது. ஆனால், இவ்வுலகமும், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்பதும் வேகமாக நினைவிற்கு வருகிறது!

2. 'நான்' என்னும் செல்வம்

நாம் கண்களுக்கு அணியும் மூக்குக் கண்ணாடியும், முகம் பார்த்து சிகை சீவும் கண்ணாடியும் ஒரே கண்ணாடிதான். ஆனால், மூக்குக் கண்ணாடி வழியாகப் பார்த்தால் நமக்கு அடுத்தவர் தெரிகிறார். முகம் பார்க்கும் கண்ணாடி வழி பார்த்தால் நாம் மட்டுமே தெரிகிறோம். எப்படி? கண்ணாடியின் பின் இருக்கும் வெள்ளிப்பூச்சு. வெள்ளி நம்மை மட்டுமே நமக்குக் காட்டுகிறது. இதுதான் வெள்ளியின் ஆபத்து. நாம் இன்றைய நற்செய்தியில் காணும் செல்வருக்குத் தெரிவதெல்லாம் அவரும், அவருடைய வயலும், அறுவடையும், தானிய மூட்டைகளும், களமும், கிடங்கும், நெஞ்சமும், மகிழ்ச்சியும்தான். அவருடைய வேலியைத் தாண்டி அவரால் யோசிக்க முடியவில்லை. ஒருவர் நாய்க்குட்டியைப் பிடித்து நடந்து செல்கிறார் என்றால், கொஞ்ச நேரத்தில் 'அவர் நாய்க்குட்டியைப் பிடித்திருக்கிறார்' என்ற நிலை, 'நாய்க்குட்டி அவரைப் பிடித்திருக்கும்' நிலையாக மாறிவிடுகிறது. செல்வமும் அப்படித்தான். நாம் கொஞ்சம், கொஞ்சமாக வைத்திருக்கும் செல்வம், காலப்போக்கில் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக வைத்துக்கொள்ள ஆரம்பிக்கிறது. 

3. 'உழைப்பு' என்னும் 'வீண்'

'முயற்சி திருவினையாக்கும்,' 'தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்,' 'கடின உழைப்புக்கு ஈடு இணையில்லை' என்று கடின உழைப்பு பற்றியும், முயற்சியும் பற்றி நமக்கு அறிவுறுத்தப்படுகின்றது. இந்த எல்லா அறிவுரைகளையும் 'வீண்' என்ற ஒற்றை வார்த்தையில் எழுதி முடித்து பேனாவை வீசி எறிகின்றார் சபை உரையாளர். உழைப்பு வீணா? உழைப்பால் பயனில்லையா? உழைப்பு இல்லை என்றால் இன்று நாம் குரங்குகளாகத்தானே இருந்திருப்போம். நாம் இரண்டு கால்களில் நிற்கத் தொடங்கியது முதல், இன்று கால்களே இல்லாமல் பறக்கத் தொடங்கியது வரை எல்லாவற்றுக்கும் காரணம் உழைப்பும், முயற்சியும்தானே. நாம் இன்று கவினுறு முறையில் படைத்திருக்கும் உலகம், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, மருத்துவம், அரசியல், பொருளாதார வளர்ச்சி எல்லாவற்றுக்கும் காரணம் நம் முயற்சியும், உழைப்பும்தானே. உழைப்பு வீண் அல்ல. ஆனால், உழைப்புதான் எல்லாம் என நினைத்து ஓய்வு, குடும்பம், உறவுகள், நட்பு, மகிழ்ச்சி ஆகியவற்றை மறப்பது சால்பன்று. உழைப்பு மட்டும் எல்லாம் அல்ல. உழைப்பின் கனிகளையும் சுவைக்க ஒருவர் நேரம் ஒதுக்க வேண்டும். நாம் 60 வருடங்கள் வாழ்கிறோம் என வைத்துக்கொள்வோம். இந்த 60 வருடங்களுக்குத் தேவையானவற்றை நாம் உழைத்து வைத்தால் போதாதா? 'நாளை என்ன நடக்கும்?' என்ற பயமும், 'இது போதாது!' என்ற எண்ணமும், 'அவனிடம் அதிகம் இருக்கிறது' என்ற ஒப்பீடும் நம்மை உழைத்துக்கொண்டே இருக்க வைக்கிறது. 'என்ன நடந்தாலும் எனக்குக் கவலையில்லை' என்ற துணிச்சலும், 'இது போதும்!' என்ற எண்ணமும, 'என்னிடமும் எல்லாம் இருக்கிறது!' என்ற நிறைவும்தான் மாற்று மருந்து.

4. புது விளையாட்டு விதி

'விளையாட்டு முடியும்போது யாரிடம் அதிகம் பொம்மைகள் இருக்கிறதோ அவரே வெற்றியாளர்' என்று நாம் ஒரு விதியை உருவாக்கி வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறோம். வீடு, வாசல், பெயர், புகழ், பொன், நிலம் என நிறைய பொம்மைகளைச் சேர்த்து வைக்கின்றோம். ஆனால், அந்த பொம்மைகள் நம்மிடம் நிறைய இருந்தாலும் அவற்றை அப்படியே அடுத்த விளையாட்டுக்காரருக்கு (வீட்டுக்காரருக்கு) விட்டுச் செல்கின்றோம். பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புதிய விளையாட்டு விதியை அறிமுகம் செய்கின்றார்: 'இவ்வுலகில் நாம் விளையாடிக் கொண்டிருந்தாலும், நம் கண்கள் எப்போதும் மேலுலகு என்னும் கோல்-போஸ்டில் தான் இருக்க வேண்டும்!' நம் எண்ணங்கள், ஓட்டங்கள், திட்டங்கள் அனைத்தும் அதை நோக்கியே இருக்க வேண்டும். நம் பழைய ஜெர்ஸியை அகற்றவிட்டு, புதிய ஜெர்ஸியை அணிந்து கொள்ள வேண்டும். அப்படி அணிந்து கொண்டால், 'இவர் பெரியவர், அவர் சிறியவர்' என்ற வேற்றுமை எண்ணமும், 'இந்த இன்பம் மட்டும் போதும்!' என்ற இன்பத் தேடலும் முடிவுக்கு வரும்.

நாம் ஒரு நாணயத்தைக் காட்டி, 'இது செல்லுமா!' என்கிறோம். 'செல்லும்' நாணயங்கள்தாம் நம் 'செல்வம்.' 'செல்லா' நாணயங்கள் நம் செல்வங்கள் அல்லவே! ஆக, 'செல்வதும்,' 'செல்வமும்'  நாணயத்தின் இரண்டு பக்கங்கள்போல எப்போதும் இணைந்தே இருக்கின்றன. 'நம் கையைவிட்டு செல்வதால்தான் அது செல்வம்' என்றும், 'செல்வம் கண்டிப்பாக செல்லும்' என்றும் உணரத்தொடங்கினால், நாம் 'அறிவான செல்வர்கள்!


Friday, July 29, 2022

தப்பிய தலை

இன்றைய (30 ஜூலை 2022) முதல் வாசகம் (எரே 26:11-16:24)

தப்பிய தலை

இன்றைய முதல் வாசகத்திற்கும் நற்செய்தி வாசகத்திற்கும் சில தொடர்புகள் இருக்கின்றன.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எரேமியாவை, குருக்களும் இறைவாக்கினர்களும் சிறைப்பிடித்து மக்கள்முன் நிறுத்துகின்றனர். நற்செய்தி வாசகத்தில், இறைவாக்கினர் எனத் தான் கருதிய திருமுழுக்கு யோவானை, ஏரோது தன் சகோதரனின் மனைவியின் பொருட்டுச் சிறையில் அடைக்கின்றார்.

முதல் வாசகத்தில், தான் கொல்லப்பட்டால் தன் இரத்தப்பழி நகர்மேல் விழும் என்று தன்னுடைய களங்கமின்மையை எடுத்துரைக்கின்றார் எரேமியா. நற்செய்தி வாசகத்தில், திருமுழுக்கு யோவானின் களங்கமின்மையை நினைத்து ஏரோது வருந்துகிறார்.

முதல் வாசகத்தில், மக்கள் தங்களுடைய உணர்ச்சிகளின் அடிமைகளாக இருக்கின்றார்கள். நற்செய்தி வாசகத்தில், ஏரோது தன்னுடைய உணர்ச்சிகளின் அடிமையாக இருக்கின்றார்.

முதல் வாசகத்தில், எரேமியா கொல்லப்படாதவாறு காக்க, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருக்கிறார். நற்செய்தி வாசகத்தில், ஆனால், திருமுழுக்கு யோவான் கொல்லப்படாதவாறு காக்க, அவருக்கு யாரும் உறுதியாய் இல்லை.

முதல் வாசகத்தில், தன்னுடைய இறைவாக்கினரைக் காப்பாற்றிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் அவரைக் காப்பாற்றவில்லை.

கடவுளின் வழிகள் ஆச்சர்யமாகவே இருக்கின்றன.

சாப்பானின் மகனை அனுப்பி ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் வாயை அடைத்த கடவுள், குடிபோதையில் இருந்த ஒற்றை ஏரோதுவின் வாயை அடைத்து, திருமுழுக்கு யோவானைக் காப்பாற்றாதது ஏன்?

அல்லது, இவை இரண்டுமே இயல்பான நிகழ்வுகள்தாம். இவற்றில் கடவுளுக்கு எந்தவொரு தொடர்பும் கிடையாது என்று சொல்லலாமா?

இல்லை.

முதல் வாசகத்தில் சாப்பானின் மகன் அகிக்காமை அனுப்பிய கடவுள், நற்செய்தி வாசகத்தில் இயேசுவை அனுப்புகின்றார்.

ஏனெனில், திருமுழுக்கு யோவானுடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்த சீடர்கள், இயேசுவிடம் போய் அதை அறிவிக்கின்றனர்.

இனி, இயேசு திருமுழுக்கு யோவானின் வேலையைச் செய்யப் புறப்படுவார்.

ஆக, நீதிக்கான, நேர்மைக்கான, உண்மைக்கான போராட்டத்தில் தோல்வி என்பது இல்லை. தீமை நன்மையை வெல்வது போலத் தெரிந்தாலும், நன்மை தீமையை வெற்றி கொள்ளும் என்பதே வாழ்வியல் எதார்த்தம்.

'தொடங்கும் அனைத்தும் நன்றாகவே நிறைவுபெறும். நன்றாக நிறைவுபெறவில்லை என்றால், அது இன்னும் நிறைவுபெறவில்லை என்றே பொருள்' என்கிறார் ஆஸ்கார் வைல்ட்.


Tuesday, July 26, 2022

மகிழ்ச்சியுடன் போய்

இன்றைய (27 ஜூலை 2022) நற்செய்தி (மத் 13:44-46)

மகிழ்ச்சியுடன் போய்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் விண்ணரசு பற்றிய இயேசுவின் உவமைகள் தொடர்கின்றன. மறைந்திருந்த புதையல், விலை உயர்ந்த முத்து என்னும் இரு வார்த்தைப் படங்கள் வழியாக விண்ணரசு பற்றிய செய்தியைத் தருகின்றார் இயேசு.

வயலில் புதையலைக் காண்கின்றார் ஒருவர். நல்முத்தைக் கண்டடைகின்றார் இன்னொருவர். முந்தையவருக்கு அது தற்செயலாக நடக்கிறது. பிந்தையவர் தானே விரும்பித் தேடிச் செல்கின்றார். முந்தையவர் தனக்கு உள்ள அனைத்தையும் விற்று நிலம் முழுவதையும் உரிமையாக்கிக்கொள்கின்றார். பிந்தையவர் மதிப்பு குறைந்த முத்துகளை விடுத்து மதிப்பு நிறைந்த முத்தைத் தனதாக்கிக்கொள்கின்றார். 

'புதையலைக் கண்டவர் மகிழ்ச்சியுடன் போகின்றார்' - புதையல் கண்டவரின் மகிழ்ச்சியைப் பற்றி இன்றைய நாளில் சிந்திப்போம்.

இந்த நபரின் மகிழ்ச்சிக் காரணம் என்ன?

புதையல் கிடைத்தது. அதாவது, அவருடைய அதிர்ஷ்டம் அல்லது நல்ல நேரம் அல்லது கடவுளின் செயல் என ஏதோ ஒன்றால் புதையல் கிடைக்கிறது. அந்தப் புதையலுக்காக அவர் உழைக்கவில்லை. அவரின் உழைப்பால் சேர்ந்த பொருள் அல்ல அந்தப் புதையல். திடீரென புதையல் கண்டதால் அவரை மகிழ்ச்சி பற்றிக் கொள்கின்றது.

புதையல் என்னவோ தற்செயலாகக் கிடைத்தாலும் அவர் அதை உரிமையாக்கிக் கொள்வதற்காகத் தனக்குள்ள யாவற்றையும் விற்கின்றார்.

முதல் வாசகத்தில் (எரே 15:10,16-21) குழப்பமும் சோர்வும் அடைந்த இறைவாக்கினர் எரேமியாவைச் சந்திக்கின்றோம். தன் பிறப்பையே சபிக்கின்ற எரேமியா, தொடர்ந்து, 'நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன். அவற்றை உட்கொண்டேன். உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன. என் உள்ளத்திற்கு உவகை அளித்தன' என்கிறார். மேலும், ஆண்டவராகிய கடவுள் இந்த நிகழ்வில் எரேமியாவுக்குத் தன் உடனிருப்பை முன்மொழிகின்றார்.

மனதில் குழப்பம் கொண்டிருந்த எரேமியா மகிழ்ச்சி அடைகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் அந்த நபருக்குப் புதையல் மகிழ்ச்சி தருகின்றது.

முதல் வாசகத்தில் இறைவார்த்தை எரேமியாவுக்கு மகிழ்ச்சி தருகின்றது.

முன்னும் பின்னும் நடக்கின்ற பயணத்தில் இவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் கண்டடைகின்றார்கள்.

விண்ணரசும் இறைவன் சார்ந்த ஒன்றும் எனக்கு எப்போதும் மகிழ்ச்சி தர வேண்டும்.

இறைவனை நான் புதையல்போலக் கண்டு மகிழ்ச்சி அடைகின்றேனா? 

நாம் இழந்து போன மகிழ்ச்சியை இன்று மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

சில நேரங்களில் திடீரென வந்த புதையல்போல மகிழ்ச்சி நமக்கு வருகின்றது. சில நேரங்களில் நல்முத்தைத் தேடுவது போல அதைத் தேடிக் கண்டடைய வேண்டியதாக இருக்கிறது.

Sunday, July 24, 2022

புனித பெரிய யாக்கோபு

இன்றைய (25 ஜூலை 2022) திருவிழா

புனித பெரிய யாக்கோபு

நாளை திருத்தூதரான தூய யாகப்பரின் - யாக்கோபு - திருநாளைக் கொண்டாடுகிறோம்.

ஆங்கிலத்தில் 'ஜேம்ஸ்', இஸ்பானியத்தில் 'ஹைமே', இத்தாலியனில் 'யாக்கோமோ' என அழைக்கப்படும் இவரின் லத்தீன் பெயர் 'சான்க்து இயாக்கோபு' - இதுவே மருவி சந்தியாகு அல்லது சந்தியாகோ என ஆகிவிட்டது.

இவர் திருஅவை பாரம்பரியத்தில் 'யாக்கோப் மயோர்' (பெரிய யாகப்பர்) எனவே அறியப்படுகின்றார். இவர்தான் செபதேயுவின் மகன். யோவானின் சகோதரர். அப்படியென்றால் 'யாக்கோப் மினோர்' (சின்ன யாகப்பர்) என்று சொல்லப்படுபவர் யார்? அவர் அல்ஃபேயுவின் மகன் யாக்கோபு (காண். மத் 10:2).

இயேசுவுக்கு பன்னிரண்டு திருத்தூதர்கள் இருந்தார்கள். ஆனால் அந்தப் பன்னிரண்டு பேரில் மூன்று பேர் இயேசுவின் 'பவர் ஹவுஸ்' போல அவருக்குப் பக்கத்திலேயே இருந்தார்கள்: பேதுரு, சந்தியாகு மற்றும் யோவான். இந்த மூவரும் தான் இயேசு உருமாற்றம் பெற்றபோது அவரோடு உடனிருக்கின்றனர். இந்த மூவரையும் தான் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் வைத்துக்கொள்கின்றார். மேலும் இந்த மூவர்தாம் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருக்கின்றனர்.

மேலும், இவர்தான் முதல் மறைசாட்சி என்கிறது பாரம்பரியம்.

இவர் தொடக்ககாலத்தில் திருச்சபையின் முக்கியத் தலைவராக இருந்திருக்கின்றார். மேலும் முதன்முதலாக கூட்டப்பட்ட எருசலேம் சங்கத்தின் தலைவராகவும் (திப 15) இருந்து பிறஇனத்தாருக்கும் மீட்புத் திட்டத்தில் பங்கு உண்டு என்ற கருத்தை அழுத்தமாக முன்வைக்கின்றார்.

இவர் தன் திருச்சபைக்கு ஒரு திருமடலும் வரைகின்றார். இந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. 'கம்போஸ்தெலா' என்றாலே 'உடலின் எலும்புகளின் மிச்சம்' என்பதே பொருள். இந்தச் சாலை 'சான் டியாகோவை நோக்கிய சாலை' என இன்றும் அழைக்கப்பட்டு நிறையப்பேர் ரோமிலிருந்தும், லூர்துவிலிருந்தும், ஃபாத்திமாவிலிருந்தும் பாதயாத்திரையாகச் செல்கின்றனர். தங்களின் வாழ்வின் நோக்கம் தெளிவாகும் அல்லது தெளிவாக வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்தப் பயணத்தில் காட்சி கிடைப்பதாக இன்னும் நம்பப்படுகிறது.

சந்தியாகப்பர் நம் வாழ்வின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள அருள்புரிவாராக!

நாளைய நற்செய்தியில் இவரின் வாழ்வின் அர்த்தம் என்ன என்பதை அறிய இவரின் தாய் இவரையும், இவரின் தம்பி யோவானையும் அழைத்துக்கொண்டு இயேசுவிடம் சென்று, 'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும் அமருமாறு செய்யும்' என்கிறார்.

பள்ளியின் ஆண்டுவிழா அல்லது கலைவிழா நேரத்தில் தன் குழந்தையைக் கூட்டி வரும் தாய் தலைமை ஆசிரியர் அல்லது வகுப்பாசிரியரிடம், 'என் மகளுக்கு, மகனுக்கு இந்த டான்ஸ் வேண்டும், அந்த நாடகத்தில் இந்த வேடம் வேண்டும்' எனக் கேட்பதுபோல இருக்கிறது இந்நிகழ்வு.

இப்படி ஒரு அம்மா கிடைக்க இந்த இரண்டு மகன்களும் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

'என் மகன் உன் பின்னாலே திரியுறானே, வீட்டிற்கும் வருவதில்லை, மீன்பிடிக்கவும் செல்வதில்லை. இப்படியே போனால் என்ன ஆவது? ரெண்டுல ஒன்னு சொல்லு!' என்று இயேசுவிடம் முறையிடுகின்றார் இந்த அன்புத்தாய்.

ஆனால், இயேசு கழுவுற மீனுல நழுவுற மீனாய் 'நீங்க கிண்ணத்துல குடிப்பீங்களா?' 'தட்டுல சாப்பிடுவீங்களா?' என்கிறார். 'என் வாழ்வின் பொருள் என்ன?' என்று நான் இயேசுவிடம் செல்லும்போதும் அவர் இப்படி என்னை அலைக்கழிக்க வாய்ப்புகள் நிறைய உண்டு. பின் எதன்தான் செய்வது? யாருக்கு எது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கோ அது அவருக்கு அருளப்படும். அதுவரைக்கும்?

செய்ற வேலையைச் செய்வோம் - யாக்கோபும், யோவானும், நாமும்.

இறுதியில், இவர் இயேசுவுக்கான மறைசாட்சியாக உயிர்விடுகின்றார். இவருடைய கல்லறையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் பெட்டியில், 'இயேசுவின் சகோதரர் யாக்கோபு' என்று எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள்தாம், இயேசு என்ற வரலாற்று நபர் வாழ்ந்தார் என்பதற்கான, விவிலியத்திற்குப் புறம்பான சான்றாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் (2 கொரி 4:7-15), 'கடவுளின் மாட்சியாகிய செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை, அது கடவுளுக்கே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது' என எழுதுகிறார்.

'மண்பாண்டத்தில் செல்வம்' என்னும் இந்த உருவகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இந்த உருவகத்தைப் புரிந்துகொள்ள பவுலின் சமகாலச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம். பவுலின் சமகாலத்தில் கடவுள் வழிபாட்டுக்குப் பொன், உணவு உண்ண வெள்ளி, மலம் மற்றும் சிறுநீர் சேகரிக்க மண், உமிழ்நீர் துப்ப மரம் என்று நான்கு வகைகளான பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இவற்றில், வீட்டுத் தலைவர் பொன் மற்றும் வெள்ளி பாத்திரங்களைக் கையாள்வார். மண் மற்றும் மரப் பாத்திரங்களை அடிமைகள் கையாள்வர். மண் மற்றும் மரப் பாத்திரங்கள் தாழ்வானவற்றுக்குப் பயன்பட்டதால் அவை வீட்டிற்கு வெளியே வைக்கப்படும். மழை மற்றும் வெயில் என அனைத்துக் காலங்களிலும் வெளியே கிடக்கும். மதிப்பற்றவற்றுக்குப் பயன்படுவதால் அவை மதிப்பின்றிக் கிடக்கும்.

பவுல் தான் அப்படிப்பட்ட நிலையில் இருந்ததாகத் தன் பழைய வாழ்க்கையை நினைவுகூர்ந்து, கடவுளின் அழைப்பு தனக்குச் செல்வம் போல வந்தது என்கின்றார். 

மலம் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மண்பாண்டத்தில் திடீரென பொன் மற்றும் புதையலை வைத்தால் என்ன ஆகும்? மண்பாண்டத்தின் மதிப்பு கூடும். மண்பாண்டம் வீட்டிற்குள் வைத்துப் பாதுகாக்கப்படும். ஆனால், அந்த மண்பாண்டத்தின் மதிப்பைக் கூட்டுவது அதன் உள்ளே இருக்கும் பொன் மற்றும் புதையல்தாம். ஆக, திருத்தூதர்கள் எளியவராக இருந்தபோது இறைவன் அவர்களைத் தெரிவு செய்து, தன் அழைத்தல் என்னும் பொன்னை அவர்களுக்குக் கொடுத்து அவர்களின் மதிப்பை உயர்த்துகின்றார்.

மண்பாண்டம் தன்னிலே வலுவற்றது, மதிப்பற்றது, தாழ்வானது. இருந்தாலும், வீட்டுத் தலைவர் அதைத் தெரிந்துகொள்கின்றார்.

திருத்தூது நிலைக்கு உயர்த்தப்பெற்ற யாக்கோபு கடற்கரையில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது மண்பாண்டம் போல இருக்கின்றார். ஆண்டவராகிய இயேசு அவர்களைத் தன் இறையாட்சிக்குப் பணிக்கு அழைக்கின்றார். மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் மனிதரைப் பிடிப்பவர் ஆகின்றார்.

இந்த உருவகமும் திருநாளும் நமக்குச் சொல்வது என்ன?

(அ) கடவுள் நம் எளிய நிலையில் நம்மைத் தெரிந்துகொள்கின்றார். நம் மதிப்பை உயர்த்துகின்றார். 

(ஆ) மண்பாண்டம் போல நாமும் வலுவற்று நொறுங்குநிலையில் இருக்கின்றோம். இறைவன் நம் நொறுங்குநிலையைத் தழுவிக்கொள்கின்றார்.

(இ) மண்பாண்டத்தில் இப்போது செல்வம் இருப்பதால் அது முன்பு இருந்ததை விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தனக்கு உள்ளே இருக்கின்ற அந்தப் புதையலைத் தற்காத்துக்கொள்ளும் வண்ணம் அது தன்னையே தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். உயர்மதிப்புக்கு ஒதுக்கப்பெற்ற அந்த மண்பாண்டம் இனி தாழ்வானவற்றின் பக்கம் செல்தல் கூடாது.

திருத்தூதர் யாக்கோபிடம் விளங்கிய துணிவும் மனத்திடமும் நாமும் பெற இறைவேண்டல் செய்வோம்.

Saturday, July 23, 2022

விரல் தொடும் குரல்!

ஆண்டின் பொதுக்காலம் 17ஆம் ஞாயிறு

தொநூ 18:20-32 கொலோ 2:12-14 லூக் 11:1-13

விரல் தொடும் குரல்!

செபம் அல்லது இறைவேண்டல். இந்த வார்த்தைகளைக் கேட்டவுடன் என்னில் நிறையக் கேள்விகள் எழுவது உண்டு: எதற்காக நாம் செபிக்க வேண்டும்? கடவுள் எல்லாவற்றையும் அறிந்தவர் என்றால், அவர் நம்மைப் பாதுகாப்பவர் என்றால், அந்த வேலையை அவர் சரியாகச் செய்யலாமே! நாம் தினமும் அவரிடம், 'என்னைக் காப்பாற்று!' என்று நினைவுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டுமா? கடவுள் தம்மிடம் செபிப்பவர்களைப் பாதுகாக்கிறார், செபிக்காதவர்களை அழிக்கின்றார் என்றால், அவரின் கடவுள் குணம் நம் செபத்தால் வரையறை செய்யப்பட்டதா? தம்மைப் புகழாதவர்களை அவர் பழிவாங்குகின்றார் என்றால், மனிதரைப் போலத்தானே அவரும் செயல்படுகிறார். இல்லையா? நம் வாழ்வில் நடக்கும் எல்லாம் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. அப்படி இருக்க நம் செபம் நம் வாழ்வின் போக்கை எப்படி மாற்ற முடியும்? செபிப்பது என்றால், எப்படி செபிப்பது? திருஅவை வரையறுத்துக் கொடுத்த செபங்கள் வழியாகவா? அல்லது நானாக என் மனத்தின் ஆழத்திலிருந்தா? அமைதியாக செபிப்பது சரியா? சத்தம் போட்டு செபிப்பது சரியா? கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார் என்றால், நான் ஏன் ஆலயத்திற்கு வந்து செபிக்க வேண்டும்? என் வீட்டிலும், நான் பயணம் செய்யுமிடத்திலும், பணி செய்யும் இடத்திலும் இயல்பாக செய்யும் செபத்தை அவர் கேட்க மாட்டாரா?

நிற்க.

விடைகளை விட கேள்விகளே நிறைய இருப்பது போலத் தோன்றினாலும், இன்றைய இறைவாhர்த்தை வழிபாடு சொல்லும் சுருக்கமான விடைகள் இரண்டு:

ஒன்று: இறைவேண்டல் அல்லது செபம் என்பது ஒரு உறவு. இறைவனைத் தந்தையாகவும், நம்மையே மகனாகவும், மகளாகவும் பாவித்து ஒருவர் மற்றவரோடு பேசிக் கொள்ளும் உரையாடல் தளமே செபம்.

இரண்டு: சிரிப்பு, சிந்தனை போன்ற உணர்வுகள் எப்படி மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானதோ, அப்படியே செபமும் மனித இனத்திற்கு மட்டுமே உரித்தானது. கோழிகள் செபம் செய்வதாகவோ, நாய்க்குட்டிகள் முழங்கால்படியிட்டு இறைவேண்டல் செய்வதாகவோ நாம் பார்த்ததில்லை. ஏனெனில் அவை தங்களின் வரையறையை (லிமிட்) அனுபவிக்க முடியாது. நம்மால் மட்டுமே நம் வரையறையை அனுபவிக்க முடியும். நம்மால் நம் வரையறையை அனுபவிப்பது மட்டுமல்லாமல், அந்த வரையறையைக் கடந்து சிந்திக்கவும் முடியும். எடுத்துக்காட்டாக, நான் ஒருவரிடம் 1 லட்சம் கடன் பட்டிருக்கிறேன் என வைத்துக்கொள்வோம். அதை திருப்பிச் செலுத்த இன்றே கடைசி நாள். ஆனால் என்னிடம் இன்று வெறும் 10 ரூபாய் மட்டுமே இருக்கின்றது. இந்த 10 ரூபாய்க்கு மேல் என்னால் ஒரு ரூபாய் கூட இன்று புரட்ட முடியாது என்பது என் வரையறை அனுபவம். அதே வேளையில், இன்று நான் கடனைத் திரும்ப செலுத்தாததால் நாளை நான் சிறைக்கு அனுப்பப்படுவேன் என்று, நாளை நடப்பதை இன்றே என்னால் சிந்திக்க முடியும். என் வரையறையைக் கடந்து சிந்திக்க என்னால் முடியும்போது, நான் என்னை அறியாமாலே என் மனத்தை இறைவனிடம் எழுப்புகின்றேன். இதுவே இறைவேண்டல்.

மெம்ரே என்ற இடத்தின் தேவதாரு மரங்கள் அருகே ஆபிரகாமை மூன்று மனிதர்கள் சந்தித்ததை கடந்த ஞாயிறன்று வாசிக்கக் கேட்டோம். அந்த நிகழ்வின் தொடர்ச்சியே இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:20-32). ஆபிரகாமைச் சந்தித்த மனிதர்கள் நேராக சோதோம், கொமோரா நகரங்கள் நோக்கிச் செல்கின்றனர். அந்த இரண்டு நகரங்களிலும் பாவம், குறிப்பாக பாலியல் பிறழ்வு பெருகியிருந்ததால், அதை அழிக்கப் புறப்பட்டுச் செல்கின்றனர் இந்த இறைமனிதர்கள். அவர்கள் அவ்விதம் போய்க்கொண்டிருக்க, சோதோம்-கொமோரா அழிவைப் பற்றி கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துவதும், சோதோம்-கொமோரா நகரங்களின் நீதிமான்களுக்காக ஆபிரகாம் இறைவனிடம் பரிந்து பேசுவதுமே இன்றைய முதல் வாசகம்.

மூன்று தூதர்கள் ஆபிரகாமின் இல்லத்திற்கு வந்திருந்தாலும் (காண். 18:2), சோதோம்-கொமோரா நகரங்களை நோக்கிச் சென்ற தூதர்கள் இரண்டுபேர் (காண். 19:1) மட்டுமே. மூன்றாம் நபராகிய கடவுளே அல்லது அவரின் தூதரே இப்போது ஆபிராமுடன் உரையாடுபவர். ஆபிரகாம் நீதிமானாகவும், நேர்மையாளராகவும் இருந்ததால், கடவுள் தாம் செய்யவிருப்பதை அவருக்கு வெளிப்படுத்துகின்றார் (காண். 18:19). ஆபிரகாம் இறைவன் திருமுன் நின்று கொண்டிருப்பது அவரின் பரிந்து பேசும் செயலையும், இறைவேண்டலையும் அடையாளப்படுத்துகிறது.

'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?' என்று தொடங்குகிறது ஆபிரகாமின் உரையாடல். இந்தக் கேள்வியின் பின்புலத்தில் இருப்பது முதல் ஏற்பாட்டு தோரா நூல்களின் இறையியல். 'தீயவர்கள் அழிவார்கள். நீதிமான்கள் வாழ்வார்கள்' என்றும் 'தீயவர்களை அழிக்கும் கடவுள் நீதிமான்களை அழிக்க மாட்டார்' என்பதே அந்த இறையியல். ஆக, பாவம் செய்தால் அழிவு. நீதியாக நடந்தால் வாழ்வு. இந்தப் பின்புலத்தில் 50 நீதிமான்கள், 45 நீதிமான்கள், 40 நீதிமான்கள், 30 நீதிமான்கள், 20 நீதிமான்கள், 10 நீதிமான்கள் இருந்தாலும் அந்நகரங்களை அழித்துவிடுவீரோ என்று பேரம் பேசுகின்றார் ஆபிரகாம். '10 நீதிமான்கள் இருந்தால்கூட அந்நகரங்களை அழிக்க மாட்டேன்' என வாக்குறுதி தருகின்றார் இறைவன்.

ஆபிரகாமின் இந்த உரையாடல் அல்லது செபம், அவருக்கும் இறைவனுக்கும் இருந்த உறவின் நெருக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றது. ஆனால், ஆபிரகாமின் செபம் கடவுளின் மனத்தை மாற்றவில்லை. நகரங்களை அழிப்பதற்காக தூதர்கள் புறப்பட்டுச் செல்கின்றனர். 10 நீதிமான்கள் கூட அந்நகரங்களில் இல்லை என்பதைக் காட்டவே இந்நிகழ்வு எழுதப்பட்டது போல இருக்கிறது. 

ஆபிரகாம் கடவுளின் முன்னிலையில் நின்று இறைவனிடம் பரிந்து பேசினாலும், கடவுளுக்கும் அவருக்கும் இடையே ஒரு திரை இருக்கின்றது. இந்தத் திரை இயேசுவின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் வழியாக அகற்றப்பட்டுவிட்டது என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கொலோ 2:12-14). 'கிறிஸ்துவால் வரும் நிறைவாழ்வு' பற்றி கொலோசை நகரத் திருச்சபைக்கு அறிவுறுத்தும் பவுல், திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவோடு இறந்தவர்கள், அவரோடு உயிர்பெற்று எழுந்துள்ளார்கள் எனவும் சொல்லிவிட்டு, 'இறப்பு', 'கடன் பத்திரம்' என்ற இரண்டு உருவகங்கள் வழியாக, இறைவனுக்கும் மனிதருக்கும் நடுவே இருக்கும் திரை அகற்றப்பட்டதை விளக்குகின்றார்.

இறப்பு என்பது ஒரு திரை. ஏனெனில் அந்தத் திரைக்குப் பின் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவை அறிந்தவர்கள் அவரோடு இறப்பதால், அவர் உயிர்ப்பைக் கண்டுகொண்டதுபோல இவர்களும் கண்டுகொள்வார்கள். அதுபோல, கடன் பத்திரம் என்பது ஒப்பந்த விதிகள் கொண்டது. ஒப்பந்தம் கடவுள்-மனித உறவுக்கு நடுவே திரையாக இருக்கின்றது. கிறிஸ்து நம் குற்றங்களை மன்னித்ததால் அந்த கடன் பத்திரம் கிழிக்கப்பட்டு திரை அகற்றப்படுகிறது.

இவ்வாறாக, முதல் ஏற்பாட்டில் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே நின்ற திரை கிறிஸ்து வழியாக கிழிக்கப்பட்டதால்தான், நம்மால் கடவுளை 'அப்பா, தந்தையே' என அழைக்க முடிகிறது.

'தந்தையே' எனக் கடவுளை அழைத்து அவரோடு உரையாடுதல் பற்றியும், அந்த உரையாடலுக்குத் தேவையான காரணிகள் பற்றியும் சொல்கிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 11:1-13). இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக உள்ளது: (அ) ஆண்டவர் கற்றுக் கொடுத்த செபம் (11:2-4), (ஆ) வெட்கமில்லாத நண்பர் பற்றிய உவமை (11:5-8), மற்றும் (இ) கடவுள் நம் செபங்களைக் கேட்கிறார் என்ற வாக்குறுதி (11:9-13).

இயேசு தன் சீடர்களுக்கு செபிக்கக் கற்றுக் கொடுக்கும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக (மத் 6:9-13) இருக்கிறது. ஆனால், லூக்காவில் அப்படி இல்லை. இயேசுவை 'இறைவனிடம் வேண்டிக்கொண்டிருப்பவராக' (11:1) முன்வைத்து, அந்த இறைவேண்டலின் தொடர்ச்சியாக அவர் தன் சீடர்களுக்குச் செபிக்கக் கற்றுக்கொடுப்பதாக எழுதுகின்றார் லூக்கா. 'எங்கள்,' 'விண்ணகத்திலிருக்கும்,' 'உம் திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக,' 'எங்களைத் தீமையிலிருந்து விடுவித்தருளும்' என்னும் சொல்லாடல்கள் லூக்கா எழுதும் செபத்தில் இல்லை. இரண்டு புகழ்ச்சி ('தூயது உம் பெயர்,' 'உமது ஆட்சி வருக,' மூன்று விண்ணப்பம் ('உணவு,' 'மன்னிப்பு,' 'விடுதலை') என இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கிறது லூக்காவின் செபம். இறைவனின் மேன்மையை அறிக்கையிடுவதும், அவரிடம் நம் உடல், உள்ள நலனுக்காக வேண்டுவதாகவும் இருக்கின்றது இச் செபம். 

செபத்தைக் கற்றுக்கொடுத்த இயேசு, தொடர்ந்து ஓர் உவமையைச் சொல்கின்றார். இரண்டு நண்பர்கள். ஒரு நண்பருக்கு அப்பம் தேவையாக இருக்கின்றது. அதைக் கடனாகப் பெறுவதற்காக மற்ற நண்பரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். முதலில் எழ மறுக்கும் அந்நண்பர், இந்நண்பரின் விடாத தட்டுதலால், 'நட்பின் பொருட்டு அல்ல, மாறாக, தொல்லையின் பொருட்டு அப்பங்களைக் கடன் கொடுக்கிறார்!' (11:8). இங்கே நாம் பார்க்க வேண்டிய ஒரு கிரேக்க வார்த்தை 'அநைடெய்யா'. இதை 'விடாமுயற்சி,' 'துணிச்சல்,' 'வெட்கத்தை விட்டு' என மொழிபெயர்க்கலாம். இந்த உவமையில் 'வெட்கத்தை இழந்த' நண்பர் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருப்பவரே. நாளை இந்த நண்பரை அவர் வெளியில் சந்திக்கும்போது எந்த முகத்துடன் அவரைச் சந்திப்பார்? தன் தூக்கம் மற்றும் சுகத்திற்காக தன் நட்பை அவர் விட்டுக் கொடுத்தது ஏன்?

இந்த உவமையை மட்டும் சொல்லிவிட்டு அது தரும் செய்தியைச் சொல்லாமல் விடுகின்றார் இயேசு.

நண்பர்கள் தங்கள் மேலான நட்பை மறுதலித்தாலும் இறைவன் தன்னிடம் கேட்கும் பிள்ளைகளை மறுதலிக்காதவர் என்பதே பாடம். ஆக, நட்பையும் மிஞ்சுவது இறைவனின் உறவு. நண்பர்கூட உறங்கி விடுவார். ஆனால், 'இஸ்ரயேலைக் காக்கும் இறைவன் கண்ணயர்வதுமில்லை, உறங்குவதுமில்லை' (திபா 121:4).

மேற்காணும் உவமை, 'விடாமுயற்சிக்கான' எடுத்துக்காட்டாக இருந்தாலும், தொடர்ந்து இயேசு விடாமுயற்சி பற்றி பேசுகின்றார்: 'கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்' எனச் சொல்லும் இயேசு, 'விடாமுயற்சியுடன்' கேட்கவும், தேடவும், தட்டவும் அழைக்கின்றார். 

அடுத்ததாக, கடவுள் நம் செபங்களைக் கேட்டு, நாம் கேட்பதை நமக்கு அருள்கிறார் எனத் தொடர்கின்றார் இயேசு. 'உங்கள் தந்தை மீனுக்குப் பதிலாக பாம்பையும், முட்டைக்குப் பதிலாக தேளையும் கொடுப்பாரா?' எனக் கேட்கும் இயேசு, 'தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள்' என்று சுட்டிக்காட்டி, தன் தந்தையை நல்லவராகவும், நற்கொடைகள் அளிப்பவராகவும் முன் நிறுத்துகின்றார். எல்லா நற்கொடைகளிலும் மேலாக இருக்கின்ற 'தூய ஆவியானவரை' கொடையாக அளிப்பார் வானகத் தந்தை.

இவ்வாறாக, 'தந்தையே' என கடவுளை அழைக்கக் கற்றுத் தரும் இயேசு, அந்த அழைப்பில் நாம் கொண்டிருக்க வேண்டிய விடாமுயற்சியையும், அந்த அழைப்பின் கொடையாகிய தூய ஆவியையும் பற்றிச் சொல்கின்றார்.

நட்பு செய்ய முடியாததை செபம் செய்து முடிக்கிறது. நட்புக்காக திறக்காத கதவு நண்பனின் விடாமுயற்சிக்காகத் திறக்கிறது. நட்பை மிஞ்சுகிறது செபம். தந்தையின் விரலை எட்டித் தொட நாம் கொடுக்கும் குரலே செபம்.

நாம் முதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை என்ன?

1. இறைவேண்டல் என்பது ஓர் உறவு

மனிதர்கள் நாம் ஒருவர் மற்றவரோடு உறவு கொள்ள படைக்கப்பட்டாலும், பல நேரங்களில் நம் உறவு நம் வரையறையாக இருக்கிறது. நம் உறவைவிட நாம் மேலெழும்பிச் செல்ல நினைத்தாலும் நம்மால் முடிவதில்லை. மற்றொரு பக்கம், நாம் நம்பியிருக்கும் உறவுகள் நமக்குப் பல நேரங்களில் கை கொடுப்பதில்லை. நம்மை நம்பியிருக்கும் உறவுகளுக்கு நாம் கைகொடுப்பதில்லை. இதில் யாரும் மற்றவர்களைக் குறை சொல்லத் தேவையில்லை. ஏனெனில் நாம் எல்லாருமே வரையறைக்குட்பட்டவர்களே. ஆக, வரையறைக்குட்படாதவரின் உறவுதான் செபத்தின் அடித்தளம். இந்த உறவுக்காரர் என்னும் இறைவன் எப்படிப்பட்டவர் என்பதைத்தான் விளக்குகிறது இன்றைய முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும். தன் உள்ளத்தில் இருப்பதை தன் பணியாளர் ஆபிரகாமுடன் பகிர்ந்து கொள்கிறார் இறைவன். தன் பிள்ளைகள் தட்டியவுடன் கதவைத் திறந்து அப்பம் அளிக்கின்றார் இறைவன். இறைவன் என் தந்தை. அவருக்கும் எனக்கும் உள்ள உறவே செபம். தங்கள் வரையறையை உணர்ந்தவர்களும், கடவுளை தந்தை என ஏற்றுக்கொள்பவர்களும் மட்டுமே செபிக்க முடியும்.

2. செபம் என்பது மந்திரக்கோல் அல்ல!

செபம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கோ, அலிபாபா குகை வாசலோ, மாயவித்தைக்காரனின் கோலோ அல்ல! செபத்தால் எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என நினைப்பது சால்பன்று. பிள்ளைக்குரிய திறந்த மனம் செபத்தில் மிக அவசியம். 'எனக்கு அது வேண்டும், இது வேண்டும்' என நம் பிள்ளைகள் நம்மிடம் கேட்கின்றன. ஆனால், அவர்கள் கேட்டது அவர்களுக்குக் கிடைக்கவில்லையென்றாலும் அதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நம்மோடு அவர்கள் உறவை முறித்துக்கொள்வதில்லை. வயது வந்தவுடன் சிலர் முறித்துக்கொள்கிறார்கள்! குழந்தைகளாக இருக்கும் வரை நம்மிடம் 'சார்பு எண்ணம்' (டிபென்டன்சி) மேலோங்கி இருக்கிறது. இந்த உணர்வுதான் நமக்கு திறந்த மனத்தையும் தருகின்றது. செபத்தில் நாம் எதைக் கேட்டாலும் நம்மிடம் இந்த உள்ளமே இருக்க வேண்டும். அடுத்ததாக, இயேசு கற்றுக்கொடுத்த இறைவேண்டல் என்பது மந்திரம் அல்ல. 100 தடவை இதை எழுதினால், அல்லது சொன்னால் நான் விரும்பியது கிடைக்கும் என நினைத்தல் கூடாது. இந்த செபம் நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை நமக்கு நினைவுபடுத்துகிறது. அவ்வளவுதான்! 

3. கேளுங்கள் - தேடுங்கள் - தட்டுங்கள்

நம் கடவுள் கொடுப்பவர், கண்டடையச் செய்பவர், திறப்பவர். இந்த வார்த்தைகள் திறந்த காசோலை போன்றவை. நாம் இதை கருத்தாய்ப் பொருள் கொள்ளல் வேண்டும். கடவுள் நம் விண்ணப்பங்களுக்குச் செவிகொடுக்கிறார் என்று இயேசு சொல்கிறாரே தவிர, நாம் கேட்கும் அனைத்தும் கிடைக்கும் என்று நமக்கு உத்திரவாதம் தரவில்லை. நம் கேட்டல், தேடல், தட்டுதல் அனைத்தும் மேலான ஒரு மதிப்பீட்டிற்காக - இறையாட்சிக்காக - இருத்தல் நலம் (காண். 12:31-32). நாம் மட்டுமல்ல. கடவுளும் நம்மிடம் கேட்கின்றார். நம்மைத் தேடி வருகின்றார். நம்மைத் தட்டுகின்றார். நாம் அவரின் கேட்டலுக்கும், தேடலுக்கும், தட்டுதலுக்கும் பதில் தருதல் அவசியம். 

4. விடாமுயற்சி

முதல் வாசகத்தில் ஆபிரகாம் சோதோம்-கொமோரா நகரங்களுக்காகப் பரிந்து பேசுவதில் மனந்தளரவில்லை. இந்த மனந்தளரா நிலையைத் தான் நண்பர்கள் உவமையிலும், கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்னும் கட்டளை வழியாகவும் சொல்கின்றார். இரண்டு நண்பர்களுக்கிடையே நடக்கும் இந்த கொடுக்கல்-வாங்கலை நமக்கு நாமே ஏன் ஒப்பீடு செய்து பார்க்கக் கூடாது. எடுத்துக்காட்டாக, எதையுமே தள்ளிப் போட்டுக்கொண்டே சோம்பித்திரியும் என் மனத்தோடோ, அல்லது விடமுடியாத ஒரு பழக்கத்தோடோ (குடிப்பழக்கம்), 'இல்லை! நான் இனிமேல் சுறுசுறுப்பாக இருப்பேன். குடிக்க மாட்டேன்' என்று சொல்லிக்கொண்டே வந்தால் அந்த மனம் நம் தொந்தரவின் பொருட்டாவது மாறும் என்பது நிச்சயம். விடாமுயற்சி இறைவேண்டலில் மட்டுமல்ல. நம் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளிலும் இருத்தல் அவசியம்.

5. தந்தை உள்ளம்

மண்ணுலகின் தந்தையரே தம் பிள்ளைகள் நன்மை கேட்டால் தீமை செய்யத் துணியாதபோது வானகத்தந்தை இன்னும் எவ்வளவு மேன்மையானவராக இருப்பார்? வானகத் தந்தையின் தாராள உள்ளம் இன்று நமக்குக் கற்றுக்கொடுப்பது 'உறவுகளில் தாராள மனம்.' மற்றொரு வகையில் நாம் வேண்டும் செபங்களும், ஒப்புக்கொடுக்கும் திருப்பலிகளும், மேற்கொள்ளும் திருயாத்திரைகளும் நம் எண்ணங்களை நிறைவு செய்யாதபோது 'வானகத் தந்தை' மறுத்துவிட்டார் என்று இறைவன்மேல் கோபமாக மாறுகின்றதா? ஏமாற்றமாக உருவெடுக்கின்றதா? அல்லது இறைவன் நாம் கேட்கும் நலன்களைவிட மேலானதைத் தருவார் என்ற நம்பிக்கையை உதிக்கச் செய்கிறதா? இறைவேண்டலில் ஏமாற்றம் ஏற்பட்டாலும் பரந்த உள்ளத்தோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளலாமே!

இறுதியாக, 'இதுதான் நான்!' என்று இறைவனின் பிரசன்னத்தில் அமர்ந்து, என் இயல்பை, என்னால் இயல்பவற்றை, இயலாதவற்றை அவரிடம் கொண்டுவருவதும், 'அவர் என்னைப் பார்க்கிறார்,' 'நான் அவரைப் பார்க்கிறேன்' என்று ஒருவர் மற்றவரின் கண்கள் பணிப்பதும், எழுவதும்தான் செபம். என் வரையறை இதுதான் என்று என் வாழ்க்கை சொல்ல, அந்த கையறு நிலையிலிருந்து எட்டி என் தந்தையின் விரல் தொட நான் எழுப்பும் என் ஏக்கப் பெருமூச்சே செபம்! விரல் தொடும் குரல் செபம்! அந்த விரல் மேல் நோக்கி இருந்தாலும் கீழ் நோக்கி இருந்தாலும்!


Friday, July 22, 2022

இரண்டையும் வளர விடுங்கள்

இன்றைய (23 ஜூலை 2022) நற்செய்தி (மத் 13:24-30)

இரண்டையும் வளர விடுங்கள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு விண்ணரசு பற்றிய உவமை ஒன்றைத் தருகின்றார். அந்த உவமையின்படி, ஒருவர் தன் வயலில் நல்ல விதைகளை விதைக்கின்றார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது பகைவன் கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிடுகின்றார். வளர்ந்த களைகளைப் பிடுங்குவது பற்றி பணியாளர்கள் எச்சரித்தபோது, அவற்றை அப்படியே வளர விடுமாறு சொல்கின்றார் தலைவர்.

இறைப் பராமரிப்பு, இறை அறிவு, இறைப் பொறுமை என்னும் மூன்று கூறுகளை இன்றைய உவமை விண்ணரசின் மதிப்பீடுகளாக முன்வைக்கின்றது.

(அ) இறைப் பராமரிப்பு

இறைவன் தன் நிலத்தை, அதாவது உலகத்தை, வெறுமையாக வைத்திருப்பதில்லை. மாறாக, அதை நன்மையால் நிறைத்துப் பராமரிக்கின்றார். அவருடைய பிள்ளைகளாக இருக்கின்ற நம் அனைவருடைய வாழ்வின் ஊற்றாக இருப்பவர் அவரே.

(ஆ) இறை அறிவு

இந்த உலகில் உள்ள தீமை பற்றியும், தீமையின் ஊற்று பற்றியும் இறைவன் அறிந்தவராக இருக்கின்றார். விண்ணரசு என்பது தீமையிலிருந்து ஒதுங்கி நிற்கின்ற, அந்நியப்படுத்தப்பட்ட நிலை அல்ல, மாறாக, தீமையோடு கலந்து நிற்கின்ற நிகழ்வு என்பதை நாம் அறியவும் சொல்கின்றார்.

(இ) இறைப் பொறுமை

களைகளை உடனடியாக நீக்கிவிடாமல், இறுதி நாள் வரை பொறுமை காக்கின்றார் கடவுள். களைகள் நாள்கள் கூடக் கூட மிகவும் வன்மையாக மாறிவிடுகின்றன. களைகள் நீடித்து விடப்பட்டாலும் அவற்றின் இயல்பு மாறி, அவை கோதுமைப் பயிர்களாக மாறிவிடுவதில்லை. கோதுமைப் பயிர்களுக்கு உரிய தண்ணீரையும், மற்ற சத்துகளையும் களைகள் உறிஞ்சுகின்றன. கோதுமைப் பயிர்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கின்றன. இருந்தாலும், தலைவர் பொறுமை காக்கின்றார். நம்மைச் சுற்றி தீமைகள் மலிந்திருந்தாலும் கடவுள் உடனடியாகச் செயலாற்றுவதில்லை. தீமையை அப்படியே வளர விடுகின்றார். மனிதர்கள் தங்கள் தீய இயல்பை மாற்றிக்கொள்ளுமாறு அவர் அவர்களுக்குக் கால இடைவெளி தருகின்றார். இறைப் பொறுமை என்பது கடவுளின் கண்டுகொள்ளாத்தன்மை அல்ல, மாறாக, அவருடைய கருணையின் வெளிப்பாடு.

இன்றைய முதல் வாசகத்தில் (எரே 7:1-11), இறைவாக்கினர் எரேமியா, எருசலேம் ஆலயத்தின் முன்பாக நின்று யூதா மக்களுக்கு இறைவாக்குரைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் நடுவே மலிந்து கிடந்த அநீதச் செயல்களைக் களையுமாறு அழைப்பு விடுக்கின்ற அவர், தொடர்ந்து, எருசலேம் ஆலயத்தில் நடைபெற்ற வேற்றுத் தெய்வ - பாகால் - வழிபாட்டையும் சுட்டிக் காட்டுகின்றார்.

'நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்!' என்று சொல்லி, அவர்கள் ஒதுங்கும் இடம் பாதுகாப்பற்றது என எச்சரிக்கின்றார்.

இறுதியாக, 'என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வர் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்!' என்கிறார் ஆண்டவர்.

இறைவனுடைய பராமரிப்புச் செயலால் இஸ்ரயேல் மக்கள் தங்களுக்கென்று நாட்டை உரிமையாக்கி உள்ளனர். அவர் தன் மக்களின் தீச்செயல்களை அறிந்தவராக இருக்கின்றார். அதே வேளையில், 'நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்' என்று தன் பொறுமையை வெளிப்படுத்துகின்றார்.

இவ்விரண்டு வாசகங்களும் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) நம் இயல்பு கோதுமையின் இயல்பு என்றால் அதை அப்படியே இறுதி வரை தக்கவைத்துக்கொள்வது. 'நானும் களையப் போல இருக்கக் கூடாதா!' என்ற எண்ணத்தில் தீமையோடு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அதே வேளையில் தீமையின் நடுவேதான் நாம் வாழ வேண்டிய கட்டாயம் என்னும் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

(ஆ) இறைவன் போல நம் வாழ்விலும் பொறுமையுடன் செயலாற்ற வேண்டும். பணியாளர்களின் பேச்சைக் கேட்டு உடனடியாகச் செயலாற்றியிருந்தால் தலைவர் களைகளோடு சேர்த்து கோதுமைகளையும் அறுக்க நேர்ந்திருக்கும். பதறிய காரியம் சிதறிப் போகும் என்பது நாம் அறிந்த ஒன்று. பொறுமை மிக அழகிய அணிகலன்.

(இ) பணியாளர் மனநிலை விட வேண்டும். தலைவனே தூங்கிவிட ஊழியக்காரர்கள் இங்கே ஆரவாரம் செய்கிறார்கள். நம் தலைவரை விட நாம் பெரியவர்கள் அல்லர். அவர் அனைத்தையும் அறிவார். எதை எப்போது செய்ய வேண்டும் என்பதை அறிந்தவர் அவர். அப்படி இருக்க, பணியாளர்களைப் போல நாம் ஏன் பரபரப்புடன் இருக்க வேண்டும்?


Thursday, July 21, 2022

மகதலா மரியா

இன்றைய (22 ஜூலை 2022) திருநாள்

மகதலா மரியா

இன்று நாம் நினைவுகூர்ந்து கொண்டாடும் இளவல் விவிலியத்தின் பக்கத்தை பல நூறு ஆண்டுகளாக அலங்கரித்துக்கொண்டிருப்பவர். விவிலியத்திற்குள் வராத நூல்களிலும் இவரைப் பற்றிய நிறைய தகவல்கள் உள்ளன. இவர் இப்படி இருந்திருப்பார் என்று சில பதிவுகள், இவர் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று சில பதிவுகள், இப்படித்தான் இவர் இருந்தார் என்று சில பதிவுகள். ஓவியம், நாடகம், புதினம், திரைப்படம் என்னும் பல தளங்களில் பலரின் கற்பனைத் திறனைத் தட்டி எழுப்பியவர் இவர். இவருடைய அறநெறி, பண்புகள், செயல்கள், நம்பிக்கை ஆகியவை பற்றி நிறைய சொல்லப்பட்டாலும் ஒன்றை மட்டும் நாம் உறுதியாக அறிந்துகொள்ள முடிகிறது: 'உயிர்த்த இயேசுவைத் தொடுகின்ற தூரத்தில் மகதலா மரியா இருந்தார்!'

சுதந்திரமான பெண் இவர்.

அது என்ன சுதந்திரம்? ஏனெனில், விவிலியம் இவருடைய பெயரை ஊரின் அடைமொழி கொண்டு அறிமுகம் செய்கிறது. அன்றைய காலத்தில் பெண்கள் தங்களுடைய தந்தை அல்லது மகன் அல்லது கணவருடைய பெயராலே அறிமுகம் செய்யப்படுவர். எ.கா. 'கூசாவின் மனைவி யோவன்னா' (லூக் 8:3), 'இயேசுவின் தாய் மரியா' (காண். யோவா 2:2). எந்தவொரு இரத்த உறவும் திருமண உறவும் இவருடைய பெயராக ஒட்டிக்கொள்ளாததால், இவர் 'ஒரு மாதிரியான' பெண் என்று சொல்கிறது மரபு. இதன் பின்புலத்திலேயே இயேசுவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் ஏற்றுக்கொள்ளப்படாத நற்செய்தி நூல்கள் முன்மொழிகின்றன. 

இவரைப் பிரதிபலிக்கும் ஓவியங்கள் அனைத்திலும் இவர் செந்நிற ஆடை அணிந்தவராக இருக்கின்றார். ஏனெனில், அன்றைய காலத்தில் விலைமாதர்கள் செந்நிற ஆடையே அணிந்திருந்தனர். யோசுவா நூலில் வருகின்ற இராகாபு கூட தன் இல்லத்தை அடையாளப்படுத்துவதற்காக செந்நிற நூல் ஒன்றைத் தன் ஜன்னலில் கட்டி வைக்கின்றார். லூக்கா 7:39இல் வருகின்ற பாவியான பெண் இவர் என்று சிலர் சொல்கின்றனர். இன்னும் சிலர் யோவான் 12இல் வரும் மரியாவுடன் இணைத்துப் பார்க்கின்றனர். 

இன்னொரு புறம், 'ஏழு பேய்கள் நீங்கள் பெற்ற மகதலா மரியா' என்று நற்செய்தியாளர்கள் (காண். லூக் 8:2, மாற் 16:9) இவரை வரையறுப்பதும் நமக்கு நெருடலாக இருக்கின்றது. 'ஏழு' என்பது அவர் அனுபவித்த துன்பத்தைக் குறிக்கும் அடையாளமே தவிர, அவரைப் பற்றிய நலக்குறைவான பார்வையை நாம் பெறவேண்டியதில்லை. 

இன்றைய நற்செய்தி அவரைப் பற்றிய மிக அழகான பதிவாக இருக்கின்றது.

'வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே கல்லறைக்குச் செல்கின்றார்' இளவல். சிலுவையில் கொடூரமாகக் கொல்லப்பட்ட இறந்த தன் போதகரின் உடலுக்கான இறுதி மரியாதையைச் செலுத்தச் செல்கின்றார் மரியா. தன் போதகரின், தன் தலைவரின் உடலின் வெற்றிடங்களில் நறுமணத் தைலம் பூச வேண்டும் என்று நினைத்தவர் வெற்றுக்கல்லறை கண்டு வியந்து நிற்கின்றார். 

விரைந்து வந்த சீடர்கள் வெற்றுக் கல்லறை கண்டவுடன் விரைந்து இல்லம் செல்கின்றனர்.

உள்ளத்தில் வெறுமை, கண்முன் வெற்றுக் கல்லறை.

தனக்கு ஆறுதல் சொல்ல யாரும் இல்லாத நிலையில் அங்கே நின்று அழத் தொடங்குகின்றார் இளவல். அவளுடைய கண்ணீர் அவளது வாழ்க்கையைச் சுற்றியிருந்த துணிகளையும் அவள் அணிந்திருந்த துணிகளையும் சேர்த்தே நனைக்கின்றது. 'உன் கண்ணீரின் வழியாக மட்டுமே வானதூதரைக் காணமுடியும்' என்ற அன்றைய சொலவடையை அவள் அறிந்திருந்தாளோ என்னவோ, தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறாள். வானதூதர்கள் வரமாட்டார்கள் என்று அவருடைய மூளை சொல்லத் தொடங்குகிறது.

ஆனால், வானதூதரை அவள் காணவில்லை. உயிர்த்த ஆண்டவரையே காண்கின்றார். அவ்வளவு ஆற்றல் மிக்கது அவளுடைய கண்ணீர். 

கல்லறையிலிருந்து திரும்பிப் பார்க்கிறார். அங்கே இயேசு நிற்கின்றார். 

உரையாடல் தொடர்கிறது. 

'மரியா' என இயேசு சொல்ல, 'ரபூனி' எனத் திரும்புகின்றார் மரியா.

ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கின்றார். அப்புறம் ஏன் திரும்புகிறார்?

இவ்வளவு நேரம் இவளுடைய உடல்தான் திரும்பியிருந்தது. இப்போது இவளுடைய உள்ளம் இயேசுவை நோக்கித் திரும்புகிறது. 

அவளுடைய அழுகை மகிழ்ச்சியாக மாறுகிறது.

சுதந்திரமாக இருந்த அவள் சுதந்திரமாகவே மாறுகிறாள்.

கட்டின்மையில் தன் வாழ்க்கையை நகர்த்தியவள் கட்டின்மைக்குள் நுழைகின்றாள்.

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்னும் அவளுடைய சொற்களே அதற்குச் சான்று.

இந்த இளவலின் திருநாள் நமக்குத் தரும் செய்தி என்ன?

(அ) நாம் இன்று இந்த இளவலைப் போலவே நிறைய பேருடைய எண்ணங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றோம். நம் அறநெறி, மதிப்பீடுகள், இருத்தல், இயக்கம், வேலை பற்றி நிறையப் பேர் எந்நேரமும் எதுவோ சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். பல வாரங்களாக தெருவில் நிற்கப்பட்ட வாகனம் ஒன்றில் அன்றாடம் தூசி அடுக்கடுக்காகப் பதிந்துகொண்டிருப்பதுபோல, நம்மைப் பற்றிய பார்வைகளும் எண்ணங்களும் நம்மேல் படிந்துகொண்டே இருக்கின்றன. இப்படிமங்களால் வாகனம் தன் இயல்பை ஒருபோதும் இழப்பது இல்லை. மறுபடியும் தூசு தட்டினால் வாகனம் ஓடும். 

(ஆ) இன்னொரு பக்கம் நாம் மற்றவர்கள்மேல் தூசிப் படிமங்களை ஏற்றிக்கொண்டிருக்கின்றோம். மற்றவர்களின் மதிப்பீடுகள், வாழ்க்கைத் தரம், பணி, செயல்பாடுகள் ஆகியவை பற்றிய விமர்சனங்களை வைத்துக்கொண்டே இருக்கின்றோம். எப்படி மற்றவர்களுடைய விமர்சனங்கள் நம்மைப் பாதிக்காதோ, அப்படியே நம்முடையவையும் மற்றவர்களைப் பாதிக்காது என்பதே உண்மை. அப்படியிருக்க நாம் ஏன் தூசுப் படிமங்களை அவர்கள்மேல் சுமத்த வேண்டும்? நம் கைகளும் அல்லவா தூசியாகின்றன!

(இ) எல்லாவற்றுக்கும் மேலாக, 'கிறிஸ்து வாழ்கிறார்' என்று திருத்தூதர்களுக்கும் உலகுக்கும் அறிவித்த முதல் நபர், முதல் பெண்ணாகிய இந்தப் புனிதை நமக்குச் சொல்வது இதுதான். இயேசுவின் சீடராக இருப்பது. எந்த நிலையில் தன் வாழ்க்கை புறப்பட்டாலும் கண்களை இயேசுவின்மேல் மட்டுமே பதித்து, அவருடைய சிலுவைப் பாதையில் பின்தொடர்ந்தாள் மகதலா மரியா. இறுதியில், தன் அழுகையும் வெற்றுக் கல்லறையும் அவருடைய இறையனுபவத்தின் தளங்களாக மாறின. தனிமையிலும் வெறுமையிலும் கையறுநிலையிலும் இருளிலும் குளிரிலும் நாம் வடிக்கும் கண்ணீர் வானதூதர்களை அல்ல, கடவுளையே நம்முன் கொண்டுவந்து நிறுத்தும் என்று உணர்த்துகிறார் இந்த மாமனிதை. நம் எதிர்பார்ப்புகள் விரக்தியாக மாறுகின்றபோது, நம் முயற்சிகள் தோல்வியாக முடிகின்றபோது நாம் செய்ய வேண்டியதெல்லாம் உட்கார்ந்து அழவேண்டியது மட்டும்தான். அங்குதான் கிறிஸ்து வாழ்கின்றார். அவர் நம்மைச் சந்திக்கின்றார். நம்மைச் சந்திக்கும் அவர் நம் உலகுக்கு நம்மை மீண்டும் அனுப்புகின்றார்.

கட்டுகள் அறுபட்டம் நாமும், இளவலோடு இணைந்து,

'நான் ஆண்டவரைக் கண்டேன்' என்று சொல்ல முடியும்.

Wednesday, July 20, 2022

'நோ' சொல்வது

இன்றைய (21 ஜூலை 2022) முதல் வாசகம் (எரே 2:1-3, 7-8, 12-13)

'நோ' சொல்வது

ஈசோப்பு கதைகளில் நம் அனைவருக்கும் அறிமுகமான ஒரு கதை: 'அப்பாவும், மகனும் கழுதை சுமக்கும் கதை.' கழுதையின்மேல் ஏறிச்சென்ற இருவரும் ஊரார் பேச்சைக் கேட்டு, கடைசியில் ஒரு கம்பில் கழுதையைக் கட்டி, இருவரும் தூக்கிச் செல்ல, கழுதை மிரண்டு இவர்களையும் கீழே தள்ளி, அதுவும் கிணற்றில் விழுந்துவிடும்.

எல்லாரையும் திருப்திப்படுத்த முயல்வது ஆபத்து என்பது கதையின் பொருளாகச் சொல்லப்படும்.

எல்லாரையும் திருப்திப்படுத்த அவர்கள் முயன்றதற்குக் காரணம், அவர்கள், மற்றவர்களுக்கு 'நோ' சொல்லத் தவறியதுதான்.

நாம் 'நோ' சொல்லத் தவறிய நேரங்கள் ஏராளம் இருக்கலாம்.

மற்றவர்களுக்கு 'நோ' சொல்லாமல், மற்றவர்கள் மனம் நோகக்கூடாது என நினைத்து, மற்றவர்கக்காக சுமைகள் சுமந்த நேரங்கள் நிறைய இருக்கலாம். 

ஆனால், 'நோ' சொல்வது எல்லா நேரத்திலும் சரியா?

இஸ்ரயேல் மக்கள் சொன்ன 'நோ' என்ன என்பதை அவர்களுக்கு இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சுட்டிக்காட்டுகிறார் ஆண்டவராகிய கடவுள்:

'பொங்கி வழிந்தோடும் நீரூற்றாகிய என்னைப் புறக்கணித்தார்கள்.

தண்ணீர் தேங்காத, உடைந்த குட்டைகளைத் தங்களுக்கென்று குடைந்து கொண்டார்கள்!'

மிக அழகான உருவகம் இது. இது ஒரு விவசாய சமூக உருவகம். எனக்கு ஒரு தோட்டம் இருக்கிறது. அந்தத் தோட்டத்தின் ஒரு புறம் வற்றாத நீரூற்று இருக்கிறது. தோட்டத்தின் இன்னொரு புறம், தண்ணீர் தேங்காத, அல்லது ஆழம் குறைந்த, அல்லது மடைகள் உடைந்து போன கண்மாய் அல்லது ஊருணி இருக்கிறது. நான், நீரூற்றுடன் உள்ள தொடர்பை அறுத்துக் கொண்டு, என்னைக் கண்மாயுடன் இணைத்துக் கொண்டால் என்ன ஆகும்? கண்மாய் சீக்கிரம் வற்றிவிடும். அல்லது உடைந்த மதகுகள் வழியே தண்ணீர் வெளியேறிக் காய்ந்துவிடும். எந்த நிலையிலும் இழப்பு என் தோட்டத்திற்குத்தான்.

நான் ஏன் நீரூற்றைப் புறக்கணித்தேன்?

நீரூற்று காணக்கூடிய அளவில் இல்லை. அது மிகச் சிறிய அளவில் இருந்தது. அதில் எந்தவொரு ஈர்ப்பும் இல்லை. 

ஆனால், கண்மாய் பார்ப்பதற்குப் பெரிதாகவும், அகலமானதாகவும், ஆழமாகவும் இருந்தது. இருந்தாலும் அது உடைந்து போயிருந்தது எனக்குத் தெரியவில்லை.

இஸ்ரயேலில் இதே பிரச்சினைதான் இருந்தது.

ஆண்டவராகிய கடவுள் அவர்களுக்கு வாழ்வுதரும் நீரூற்றாக இருந்தாலும், அவர் சிறிய நீரூற்று போல மறைந்து இருந்தார்.

ஆனால், அவர்கள் கண்முன் இருந்த பிற தெய்வங்களின் சிலைகளும், அவற்றின் ஆலயங்களும், வழிபாடுகளும் மிகவும் ஈர்ப்பதாக இருந்தன.

ஆகவே, இஸ்ரயேல் மக்கள், குறிப்பாக, யூதா நாட்டினர், தங்கள் கடவுளுக்கு, 'நோ' சொல்லிவிட்டு, பிற தெய்வங்களுக்கு, 'யெஸ்' சொல்கிறார்கள்.

குருக்கள், திருச்சட்டத்தைப் போதிப்போர், ஆட்சியாளர், இறைவாக்கினர் என மேல்தளத்தில் நிற்பவர்கள் கடவுளுக்கு 'நோ' சொல்கிறார்கள். அவர்களை மற்றவர்களும் பின்பற்றுகிறார்கள்.

இன்று நான் என் வாழ்வில், கண்மாய்களுக்கும், உடைந்த ஊரணிகளுக்கும் 'நோ' சொல்லலாம். ஆனால், வாழ்வுதரும் ஊற்றாகிய கடவுளுக்கு 'நோ' சொல்வது தவறு.

புனித அகுஸ்தினார் தன் வாழ்வில், தன்னுடைய அறிவுசார் தேடல்கள் என்னும் கண்மாய்களிலும்,  புலனின்பங்கள் என்னும் உடைந்த குட்டைகளிலும், இறுமாப்புநிறை பேரார்வம் என்னும் மதகுகள் இல்லாத ஊரணிகளிலும் தன் வாழ்விற்கான ஆதாரத்தைத் தேடினார். ஆனால், அவைகளால் அவருக்கு நிறைவுதர முடியவில்லை. தன் பார்வையை அவற்றிலிருந்து திருப்பும் அவர், வாழ்வுதரும் நீரூற்றைக் கண்டடைகின்றார். பின்னதற்கு 'யெஸ்' சொன்ன அதே நொடி, முன்னவற்றுக்கு 'நோ' சொல்கிறார்.

ஒரே நேரத்தில், இரண்டிற்கும் 'யெஸ்' சொல்வது, தோட்டத்திற்கும் நீர் கிடைக்காமல், நீரும் சேமிக்கப்படாமல் வீணாகும் ஆபத்தில் முடியும்.

ஒன்றுக்கு 'நோ' என்பது, இன்னொன்றுக்கு 'யெஸ்.' எதற்கு எனப் பகுத்தாய்ந்து தெரிவு செய்வதே ஞானம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 13:10-17) உவமைகளின் வழியாக பேசுவதன் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார் இயேசு. 'விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது' என்று தன் சீடர்களிடம் சொல்கின்றார் இயேசு. இயேசுவின் சீடர்கள் அவரைத் தேர்ந்துகொண்டதால் நேரடியாக அவரிடமிருந்து மறைபொருளைக் கற்றுக்கொள்கின்றனர். மற்றவர்களோ தூரத்தில் நிற்கின்றவர்கள். தூரத்தை நிரப்புகின்றன உவமைகள்.

Tuesday, July 19, 2022

எரேமியாவின் அழைப்பு

இன்றைய (20 ஜூலை 2022) முதல் வாசகம் (எரே 1:1,4-10)

எரேமியாவின் அழைப்பு

எரேமியா தன் அழைப்பு நிகழ்வைப் பதிவு செய்வதை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இந்த அழைப்பு நிகழ்வை மூன்று நிலைகளில் சிந்தித்துப் பொருள்கொள்வோம்.

1. இறைவனின் முன்னெடுப்பு

இறைவன்தாமே இறைவாக்கினர் எரேமியாவை அழைக்கின்றார். எரேமியா தான் சிறுபிள்ளை என்று தயக்கம் காட்டுகின்றார். இறைவனின் முன்னெடுப்பு மூன்று சொல்லாடல்கள் வழியாகத் தரப்பட்டுள்ளது.

(அ) நான் உன்னை அறிந்திருந்தேன்

இது இறந்த கால அல்லது கடந்த கால நிகழ்வு. ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எரேமியாவை அவருடைய தாயின் வயிற்றில் உருவாக்குமுன்பே அறிந்திருந்ததாக மொழிகின்றார். மாந்தரின் வாழ்வு அனைத்தும் ஆண்டவரின் கையில்தாம் உள்ளது என்பதையும், ஆண்டவர் நமக்கென ஓர் இலக்கை முன்குறித்து வைக்கிறார் என்பதும் இங்கே புலப்படுகிறது.

(ஆ) நான் உன்னைத் திருநிலைப்படுத்தினேன்

இது நிகழ்காலத்தில் நடக்கக் கூடியது. 'திருநிலைப்படுத்துதல்' என்பது 'ஒதுக்கி வைத்தலை' குறிக்கிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட பணிக்கென ஆண்டவராகிய கடவுள் எரேமியாவை ஒதுக்கி வைக்கின்றார். அத்தகைய பணிக்கு ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் தன் கவனம் முழுவதையும் தன் பணியில் செலுத்த வேண்டும். இது ஒரே நேரத்தில் இறைவன் தருகின்ற கொடையாகவும், எரேமியா ஆற்றுகின்ற பணியாகவும் இருக்கின்றது.

(இ) நான் உன்னோடு இருக்கின்றேன்

'நான் உன்னை விடுவிக்க உன்னோடு இருக்கிறேன்' என்னும் ஆண்டவரின் சொற்கள் எரேமியாவுடன் அவர் எதிர்காலத்தில் உடனிருக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. இறைவாக்கினர் பணியின் சவால்களையும் இது உள்ளடக்கியுள்ளது. 'உனக்கு இடர்கள் வராது' என ஆண்டவர் முன்மொழியவில்லை. மாறாக, இடர்கள் வரும்போது உடனிருக்கிறேன் என்கின்றார்.

2. இறைவனின் கட்டளைகள்

இறைவன் எரேமியாவுக்கு மூன்று கட்டளைகள் தருகின்றார்:

(அ) 'சிறுபிள்ளை நான் எனச் சொல்லாதே!'

அதாவது, இயலாமையை முதன்மைப்படுத்தாதே என்கிறார் ஆண்டவர். மேலும், இலக்கை அடைவதற்கு இத்தகைய சாக்குப் போக்குகள் தடையாக இருக்கும் என்பதாலும், ஒருவருக்குத் தாழ்வு மனப்பான்மையை இது ஏற்படுத்தும் என்பதாலும் இதைக் கடிந்துகொள்கின்றார் ஆண்டவர். ஆண்டவரின் அழைப்பை பெற்ற ஒருவர் அந்த அழைப்பின் வழியாகப் பெறுகின்ற முதல் கொடை தன்மதிப்பு. தன்மதிப்பு கொண்ட நபர் தன்னைத் தாழ்வாக மதிப்பிடல் கூடாது.

(ஆ) 'யாரிடமெல்லாம் அனுப்புகிறேனோ அவர்களிடம் செல்!'

அழைக்கப்பட்ட எரேமியா அனுப்பப்படுகின்றார். எரேமியா மக்களுக்கு இறைவாக்கு உரைத்ததை விட அரசர்களுக்கும் குருக்களுக்கும் அமைச்சர்களுக்குமே இறைவாக்குரைத்தார். இது அவருக்குக் கடினமான பணியாக இருந்தது. அவர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டார். கிணற்றில் தூக்கி எறியப்பட்டார். ஆனால், அனைவரையும் அவர் எதிர்கொள்ள வேண்டும் என்பது இறைவனின் கட்டளையாக இருந்தது.

(இ) 'நான் கட்டளையிடுவதைச் சொல்ல அஞ்சாதே!'

பேசத் தெரியாது எனச் சொன்னவரிடம் பேச அஞ்ச வேண்டாம் எனக் கட்டளையிடுகின்றார் ஆண்டவர். அச்சம் பல நேரங்களில் நம் வாயைக் கட்டி விடுகிறது. நம் மனத்தில் தோன்றுவது மனத்திலேயே மறைந்துவிடுகின்றது. சொல் ஒன்றுதான் நமக்கும் மற்றவர்களுக்கும் முதல் இணைப்பை ஏற்படுத்துகின்றது. நம் சொற்களே நம் எண்ண ஓட்டங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகின்றன. எண்ண ஓட்டங்களை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம் என்கிறார் கடவுள்.

3. இரு தலைப்புகள் அல்லது பெயர்கள்

ஆண்டவராகிய கடவுள் எரேமியாவுக்கு இரு தலைப்புகள் அல்லது பெயர்களை வழங்குகின்றார்:

(அ) இறைவாக்கினன்

இறைவாக்கினர் என்பவர் மூன்று நிலைகளில் அன்றைய நாளில் புரிந்துகொள்ளப்பட்டார்: (அ) இறைவனின் வார்த்தைகளை மக்களுக்கு அறிவிப்பவர், (ஆ) வரவிருக்கும் நிகழ்வுகளை மக்களுக்கு முன்னுரைப்பவர், (இ) மாயவித்தைகள் செய்பவர். எரேமியா முதல் இரு நிலைகளில் இறைவாக்கினராகத் திகழ்கின்றார். மோசேயைப் போன்ற இறைவாக்கினர் என எரேமியா அறியப்படுகின்றார். மேலும், புதிய உடன்படிக்கையை முன்னுரைத்ததன் வழியாக இயேசுவின் முன்னோடியாகவும் திகழ்கின்றார்.

(ஆ) பொறுப்பாளன்

மக்களினங்கள் மேலும் அரசுகள் மேலும் பொறுப்பாளனாக நியமிக்கப்படுகின்றார் எரேமியா. பொறுப்பாளர் என்பவர் கணக்குக் கொடுப்பவர், கணக்குக் கேட்பவர். அவர் இவ்விரு கடமைகளையும் சரியாகச் செய்ய வேண்டும். ஆனால், அவரால் எதன்மேலும் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில், ஆண்டவர் அவரை உரிமையாக்கிக் கொண்டார்.

இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

நாம் அனைவருமே இருமுறை வாழ்கின்றோம். முதல் வாழ்க்கை நாம் பிறந்த அன்று தொடங்குகின்றது. இரண்டாவது வாழ்க்கை நம் அழைப்பை உணர்ந்த நாளில் தொடங்குகின்றது. நாம் பிறப்பதற்கு முன்பே கடவுள் நம் வாழ்வின் நோக்கத்தை வரையறுத்துள்ளார். அந்த நோக்கத்தை அறிதலும், அறிதலின்படி வாழ்தலும், வாழ்ந்து அதை நிறைவேற்றுதலும் நலம்!

நற்செய்தி வாசகத்தில் (மத் 13:1-9), இயேசு, விதைப்பவர் எடுத்துக்காட்டை முன்மொழிகின்றார். நல்ல நிலத்தில் விழுந்து நற்பலன் தருபவர்கள் தங்கள் வாழ்வியல் நோக்கத்தை அடைந்தவர்களே!

வாழ்வின் நோக்கத்தைப் பறவைகள் எடுத்து உண்ணா வண்ணம், கதிரவன் சுட்டெரிக்கா வண்ணம், முள்கள் நெரித்துவிடா வண்ணம் காத்துக்கொள்தல் அவசியம்.


Monday, July 18, 2022

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்

இன்றைய (19 ஜூலை 2022) நற்செய்தி (மத்தேயு 12:46-50)

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்

தன்னுடன் பேசுவதற்கு வந்த தன் தாய் மற்றும் சகோதரர்களைப் பேச விடாமல், இயேசுவே பேசி விடுகின்றார். மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கவனிக்கின்ற ஒருவர் அதை இயேசுவிடம் சொல்கின்றார். இயேசு அவருக்குப் பதிலளிப்பதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

இயேசு தன் பதிலை அவரை நோக்கி ஏன் கொடுக்க வேண்டும்?

நான் இந்நிகழ்வை இப்படிப் புரிந்துகொள்கின்றேன்.

இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நபர் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருக்கின்றார். ஆனால், இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கண்டவுடன் தன்னை அறியாமலேயே ஏதோ ஒரு வகையில் அந்நியப்படுத்தப்பட்டதாக உணர்ந்திருப்பார். அதாவது, தான் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருந்தாலும், அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், இன்னும் நெருக்கமான இரத்த உறவு இருக்கிறது என்று உணர்ந்த அந்த நொடி தன் நிலை தாழ்ந்தது என உணர்கின்றார்.

ஆனால், இயேசு, இறைத் திருவுளம் நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரர்களும் என்று சொல்வதன் வழியாக, ஒரு பக்கம் மரியா இறைத் திருவுளம் நிறைவேற்றியதை - இரத்த உறவையும் தாண்டிய ஒன்றை - மக்களுக்கு உணர்த்துகின்றார். இன்னொரு பக்கம், இரத்த உறவை விட இறையாட்சி உறவு மேலானது என உணர்த்துகின்றார்.

இரத்த உறவு பல நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது. நம் சாதிய மற்றும் குழு அடையாளங்கள் இரத்த மற்றும் திருமண உறவுகள் வழியாகவே உறுதி செய்யப்படுகின்றன. இறையாட்சி உறவு நம்மை மற்றவர்களோடு இணைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:

(அ) இயேசுவிடம் பேசிய அந்த நபரைப் போல, மற்றவர்களை அடையாளம் கண்டு இயேசுவிடம் என்னால் சொல்ல முடிகிறதா? நான் ஏன் தயக்கம் காட்டுகிறேன்?

(ஆ) இறைத்திருவுளம் நிறைவேற்றுவதே இறையாட்சி உறவுக்கான நுழைவாயில்.

(இ) இறையாட்சி உறவில் இணையும் நான் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபாடு பாராட்டுதல் தவறு.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மீக்கா, ஆண்டவராகிய கடவுள் மக்களின் பாவங்களை ஆழ்கடலில் தூக்கி எறிந்துவிட்டதாக மொழிகின்றார். ஆண்டவரின் இரக்கப் பெருக்கத்தை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்தனர். ஆண்டவருக்கும் அவர்களுக்கும் இருந்தது இரத்த உறவோ, திருமண உறவோ அல்ல. மாறாக, இறையாட்சி உறவே.

இரத்த உறவையும் திருமண உறவையும் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் வெளியேதான் நிற்க வேண்டும். அல்லது வெளியே நிற்கும் வரை நாம் இரத்த மற்றும் திருமண உறவுகளையே பிடித்துக்கொண்டிருக்கின்றோம்.

உள்ளே நுழையும்போது இயேசுவுடன் இறையாட்சி உறவுக்குள் நுழைகின்றோம். 


Saturday, July 16, 2022

ஆனால் தேவையானது ஒன்றே!

ஆண்டின் பொதுக்காலம் 16ஆம் ஞாயிறு

தொடக்கநூல் 18:1-10 கொலோசையர் 1:24-28 லூக்கா 10:38-42

ஆனால் தேவையானது ஒன்றே!

ஏறக்குறைய பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன், என் குருத்துவப் பயிற்சியின் ஆன்மிக ஆண்டில், தியானம் கற்பிக்க வந்த அருள்பணியாளரிடம், 'கண்களை மூடிக்கொண்டே அமர்ந்திருப்பதால் என்ன பயன்? இப்படிச் செய்வதால் என்ன மாற்றம் நடக்கும்? உலகில் அநீதி மறையுமா? புதிய கண்டுபிடிப்புக்கள் நடக்குமா? நாம் பல இடங்களைச் சுற்றிப் பார்க்க முடியுமா? பலருக்குப் பணி செய்ய முடியுமா? புதியவற்றைக் கற்க முடியுமா? சும்மா யார் வேண்டுமானாலும் கண்களை மூடிக்கொண்டு உட்கார முடியும். இல்லையா?' என்று நான் விவாதித்தது என் நினைவில் இருக்கிறது. பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. அருள்பணி வாழ்வில் பதிமூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. நான் விழித்திருந்தது, பரபரப்பாக வேலை செய்தது, புதிதாகக் கற்றது போன்றவற்றால் உலகில் எந்த மாற்றமும் நடக்கவில்லை என்பதை இன்று நான் கற்றுக்கொண்டேன். உலகம் தன் போக்கில் இயங்குகிறது. என் வேகத்தால் என்னில் மாற்றம் ஏற்பட்டதைவிட என் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்றே நான் உணர்கிறேன்.

நிறைய வேகம். நிறைய செயல்பாடுகள். எந்நேரமும் எதையே செய்துகொண்டிருக்க வேண்டும் என்று உலகம் சொல்கிறது. நேர மேலாண்மை, உறவு மேலாண்மை, இட மேலாண்மை என்று தன்னுதவி புத்தகங்கள் குவிகின்றன. யூடியூபில் காணொளிகள் நிறைகின்றன. 'உங்கள் நேரத்தை சேமிப்பது எப்படி?' 'உங்கள் பணத்தைச் சேமிப்பது எப்படி?' 'நிறைய நண்பர்களைச் சம்பாதிப்பது எப்படி?' 'குறைவான நேரத்தில் மிகுதியான செயல்களைச் செய்வது எப்படி?' என்று நிறைய 'எப்படி' இருக்கின்றது. நான் வேகமாகச் செல்ல விரும்பவில்லையென்றாலும் நான் எடுத்திருக்கின்ற பொறுப்புக்கள் என்னை வேகமாக இயக்கிக்கொண்டே இருக்கின்றன. கொஞ்ச நேரம் கோவிலில் அமர்ந்தாலும் என் வேலைகளில்தான் என் எண்ணம் இலயிக்கின்றது. என் வேலைகளுக்காக நான் தியாகம் செய்யும் நேரம் என் செப நேரமாகவே இருக்கின்றது.

ஏன் இந்த வேகம்? ஏன் இவ்வளவு செயல்பாடுகள்? எனக்கு ஏன் நிறையப் பேரைத் தெரிய வேண்டும்? நான் ஏன் எல்லாரிடமும் நட்போடு இருக்க வேண்டும்? நான் ஏன் எல்லாக் குறுஞ்செய்திகளுக்கும் பதில் அனுப்ப வேண்டும்? நான் ஏன் எல்லா ஃபோட்டோக்களையும் விரும்ப வேண்டும்? நான் ஏன் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக்கொள்ள வேண்டும்? நான் ஏன் ஆன்லைன் பேங்கிங் செய்ய வேண்டும்?

ஒன்றுமே செய்யாமல் ஓய்ந்திருத்தல் தகாதா?

இலக்குகளே இல்லாமல் வாழ்வது கூடாதா?

வாழ்வே இலக்கு என்று இருக்கும் போது வாழ்வதற்கு ஏன் இலக்குகள்?

என்னுடைய இன்றையே நான் முழுமையாக வாழாதபோது எதற்காக நாளைக்கான சேமிப்புகள்? என் நண்பர்கள் நாளை என்னோடு இருப்பார்கள் என்பதற்காக நான் அவர்களோடு இன்று பழகுகிறேனா? ஏன் எல்லாவற்றையும் நான் நாளைக்காகச் செய்ய வேண்டும்?

ஒரு பக்கம் செய்ய வேண்டிய வேலை. இன்னொரு பக்கம் எடுக்க வேண்டிய ஓய்வு. இப்படிப்பட்ட குழப்பமான தருணத்தில் ஆண்டவரின் வார்த்தை இன்று நமக்கு ஆறுதலாக வருகிறது: 'ஆனால் தேவையானது ஒன்றே' என்கிறார் ஆண்டவர்.

'தேவதாரு மரங்களருகே ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றினார்' என்று தொடங்குகிறது இன்றைய முதல் வாசகம் (காண். தொநூ 18:1-10). 'டைட்டன் ஷோரூம்,' 'கீர்த்தி டென்டல் கிளினிக்,' 'வோடஃபோன் ஷோரூம்,' 'சித்தி விநாயகர் கோவில்' என்று லேன்ட்மார்க்குகள் தோன்றாத அந்த நாள்களில் மரங்களை வைத்தேதான் இடங்கள் அடையாளம் சொல்லப்பட்டன. ஆண்டவர் ஆபிரகாமுக்குத் தோன்றிய இடம் அப்படிப்பட்ட ஒரு லேன்ட்மார்க் தான். தன் கூடாரத்தின் வாயிலில் அமர்ந்திருக்கும் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்க 'மூன்று மனிதர்கள் நிற்கின்றார்கள்.' இந்த 'மூன்று மனிதர்கள்'தாம் 'மூவொரு இறைவனின்' முதல் அடையாளம் என்கிறது நம் கத்தோலிக்க இறையியல். 'ஆபிரகாமின் காத்திருத்தல்' பற்றி வாசிக்கின்ற வாசகருக்கு இரண்டு விடயங்கள் புரிகின்றன: (அ) ஆபிரகாம் வாழ்வில் ஏதோ முக்கிமான நிகழ்வு ஒன்று நடக்கப் போகிறது. (ஆ) ஆபிரகாமின் காத்திருத்தல் அவரின் விருந்தோம்பல் பண்புக்குச் சான்றாக அமைகிறது. 

முதலில் ஆபிரகாமின் காத்திருத்தலைப் புரிந்து கொள்வோம். தொடக்க கால சமூகத்தில், குறிப்பாக பாலைநிலங்கள் மிகுந்திருந்த மத்திய கிழக்கு பகுதியில் 'விருந்தோம்பல்' முதன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டது. 'நீ இன்று ஒருவருக்குக் கொடுக்கும் தண்ணீரை நாளை உனக்கு வேறொருவருக்குக் கொடுப்பார்' என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆகையால் வழிப்போக்கர்கள் யார் வந்தாலும், அவர்களுக்கு விருந்தோம்பல் செய்வது மத்திய கிழக்கு நாட்டு மரபு. விருந்தோம்பல் மிக மேன்மையான மதிப்பீடாகக் கருதப்பட்டதால்தான், லோத்து தன் இல்லத்தில் வந்திருக்கும் விருந்தினர்களைக் காப்பாற்றுவதற்காக தன் இரு மகள்களை பாலியல் பிறழ்வுக்கு உட்படுத்தத் தயாராக இருக்கின்றார் (காண். தொநூ 19). ஆக, ஆபிரகாமின் காத்திருத்தலும், அந்நியர்களைக் கண்டவுடன் அவர்களை ஓடிச் சென்று வரவேற்றலும், உணவு தந்து உபசரிப்பதும் அவரின் விருந்தோம்பலைக் காட்டுகின்றது. தன் வேலையை அவர் சாராவுடன் பகிர்ந்து செய்கின்றார். இவ்வாறாக, விருந்தோம்பலில் பெண்களும் சம உரிமை பெறுகின்றனர்.

இரண்டாவதாக, ஆபிரகாமின் வாழ்வில் நடக்கப் போகும் முக்கியமான நிகழ்வு. ஆபிரகாமின் விருந்தோம்பலில் நிறைவு பெற்ற மூன்று மனிதர்கள் ஆபிரகாமிடம், 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' (18:10) என அவருக்கு ஒரு மகனை வாக்களிக்கின்றனர். இந்த வாக்குறுதியைக் சாராவும் கேட்கின்றார். கேட்ட சாரா டக்கென சிரித்து விடுகின்றார். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மகன் 'ஈசாக்கின்' பெயரின் பொருளும் அதுவே - 'அவன் என் சிரிப்பு' அல்லது 'அவன் என் மகிழ்ச்சி.' இவர்களின் இந்த வாக்குறுதி ஆபிரகாம் வாழ்வில் மிக முக்கியமானது. ஏனெனில், ஆபிரகாம்-சாரா தம்பதியினிரின் முதிர்வயதைக் கணக்கில் கொண்டு, இந்த வாக்குறுதி நிறைவேறுமா, இல்லையா என்ற சந்தேகம் வாசகர்களின் மனதில் எழுகின்றது. மேலும், தொநூ 12ல், 'உன் இனத்தைப் பலுகிப் பெருகச் செய்வேன்' என்று ஆண்டவர் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேறப்போகிறது என்ற நம்பிக்கை எழுகின்றது.

தன்னுடைய முதிர்வயதில், தன்னுடைய விருந்தோம்பலில் கருத்தாயிருந்து, தன்னுடைய குழந்தையின்மை பற்றி வருந்திக்கொண்டிருந்த ஆபிரகாம் அந்த மூவரின் பாதங்களில் அமர்ந்ததால் சிரிக்கும் செய்தியைப் பெறுகின்றார். 'தேவையான ஒன்றை' பெற்றுக்கொள்கின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். கொலோ 1:24-28), கிறிஸ்துவின் துன்பம் மற்றும் மாட்சி பற்றிய இறையியலை கொலோசை நகரத் திருஅவைக்கு எழுதும் பவுல், தான் இந்த நேரத்தில் பட்டுக் கொண்டிருக்கும் துன்பமும், திருஅவையினர் பட்டுக்கொண்டிருக்கும் துன்பமும் கிறிஸ்துவில் அவர்கள் இணைந்திருப்பதற்கான அடையாளம் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்பத்தைப்போல மாட்சியும் பின்தொடரும் என வாக்குறுதி தருகின்றார். வெளியே தங்களுடைய ஆறுதலைத் தேடிக்கொண்டிருந்த கொலோசை நகர மக்களிடம், 'உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்து' என்று பவுல் அவர்களைத் தங்களுக்கு உள்ளே கடந்து செல்லத் தூண்டுகின்றார். வெளியில் இருப்பவை தேவையற்றவை என உணர்கின்ற பவுல், உள்ளிருக்கும் அந்தத் தேவையானது நோக்கி அவர்களை அனுப்புகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (லூக் 10:38-42), கடந்த வாரம் நாம் வாசித்த 'திருச்சட்ட அறிஞரின் கேள்வி மற்றும் நல்ல சமாரியன் எடுத்துக்காட்டின்' (லூக் 10:25-37) தொடர்ச்சியாக இருக்கிறது. 'உன்னை அன்பு செய்வது போல உனக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்வாயாக!' என்ற பிறரன்புக் கட்டளையின் விளக்கமாக 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' இருக்கிறது என்றால், 'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் ஆண்டவரை அன்பு செய்வாயாக என்ற இறையன்புக் கட்டளையின் விளக்கமாக இருக்கிறது 'மார்த்தா-மரியா எடுத்துக்காட்டு.' 'ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார்' (10:30) என்று 'நல்ல சமாரியன் எடுத்துக்காட்டு' தொடங்குவதுபோல, 'பெண் ஒருவர் இயேசுவை தன் இல்லத்தில் வரவேற்றார்' (10:38) என்று தொடங்குகிறது. பெண்ணின் வரவேற்பை ஏற்று அவரின் இல்லத்திற்குள் நுழைந்த இயேசுவின் செயல், இயேசு தனது சீடர்களுக்குக் கொடுத்த மறைத்தூது அறிவுரையை அவரே வாழ்ந்து காட்டுவதாக இருக்கின்றது: 'உங்களை வரவேற்பவர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். உங்கள் முன் வைப்பவற்றை உண்டு, நலமற்றவர்களுக்கு நலம் தந்து, இறையரசு வந்துவிட்டது என அறிவியுங்கள்!' (லூக் 10:8). நற்சீடரின் பண்பு 'பார்ப்பது' என்று 'நல்ல சமாரியனும்,' நற்சீடரின் இன்னொரு பண்பு 'பாதத்தில் அமர்ந்து கேட்பது' என்று 'மரியாவும்' சீடத்துவ பாடம் கற்றுத்தருகின்றனர். ஆணாதிக்கமும், தூய்மை-தீட்டு வித்தியாசம் காணுதலும் மேலோங்கி நின்ற யூத மரபுக்குமுன், ஒரு பெண்ணையும், ஒரு சமாரியனையும் சீடத்துவத்தின் முன்மாதிரிகள் என்று நிறுத்துவது இயேசுவின் மரபுமீறலுக்குச் சான்று.

மார்த்தா இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்று விருந்தோம்பல் செய்கின்றார். மார்த்தாவைப் பற்றி தொடர்ந்து எதையும் பதிவு செய்யாமல், அவரின் சகோதரி மரியாவை வாசகருக்கு அறிமுகம் செய்கின்றார் லூக்கா. இயேசுவின் பாதங்கள் அருகே அமர்ந்து அவரின் வார்த்தைக்குச் செவிமடுப்பவராக அறிமுகம் செய்யப்டுகின்றார் மரியா. 'பாதத்தில் அமர்வதும்,' 'வார்த்தைகளைக் கேட்டலும்' சீடத்துவத்தின் இரண்டு முக்கிய பண்புகளாகக் கருதப்பட்டன (காண். திப 22:3, லூக் 5:1, 8:11, 21).

யூதர்கள் நடுவில் துலங்கிய ரபிக்களின் பின்புலத்தில் இந்த நிகழ்வைப் பார்ப்போம். யூதர்களின் மிஷ்னா, 'உங்கள் இல்லம் ஞானியரின் சந்திப்பு இல்லமாக இருப்பதாக. ஞானியர் உங்கள் இல்லத்திற்கு வந்தால் அவர்களின் காலடிகளில் அமர்ந்து அவர்களின் வார்த்தைகளால் உங்கள் தாகம் தீர்த்துக்கொள்ளுங்கள். பெண்கள் அதிகம் பேசவேண்டாம்' என்று கூறுகின்றது. ரபிக்கள் இல்லங்களுக்குள் நுழைவதுபோல இயேசுவும் நுழைகின்றார். ஆனால், மரியா இயேசுவின் காலடிகளில் அமர்வது ஒரு மரபு மீறல். ஏனெனில் ரபிக்களின் வருகையின் போது அவர் அருகில் அமர்ந்து போதனையைக் கேட்க தகுதி பெற்றவர்கள் விருத்தசேதனம் செய்யப்பட்ட யூத ஆண்கள் மட்டுமே. யூத சிந்தனையின்படி, இங்கே சரியாகச் செயல்பட்டவர் மார்த்தா தான். ரபியின் வருகையின் போது அவரை உபசரிப்பதில் காட்ட வேண்டிய அக்கறையையும், பரபரப்பையும் சரியாகக் கொண்டிருக்கின்றார் மார்த்தா. ஆனால் இயேசு, மரியாவின் செயலை மேன்மையானதாகக் காட்டி, மார்த்தாவின் பரபரப்பையும், கவலைகளையும் சுட்;டிக்காட்டி மீண்டும் ஒரு புரட்டிப்போடுதலைச் செய்கின்றார். 

முள்செடிகளின் நடுவே விழுந்த விதைக்கு உதாரணமாக இருக்கின்றார் மார்த்தா. ஏனெனில் கனி கொடுக்க விடாமல் அவரின் 'கவலையும், வாழ்வின் கவர்ச்சிகளும்' தடுக்கின்றன (காண். லூக் 8:14). தன் சமூகம் தனக்குக் கொடுத்த வேலையை சிரமேற்கொண்டு செய்பவராக மார்த்தா இருந்தாலும், 'மனிதர் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை' (காண். 4:4) என்று உணர்ந்த அவரின் சகோதரி மரியா, 'எல்லாவற்றையும் துறந்தவராய் இயேசுவை மட்டும் பின்பற்றத் துணிகின்றார்' (காண். 5:11, 28). திருத்தூதர் பணிகள் நூலிலும், 'எந்தப் பணி முக்கியமானது? உணவு பரிமாறுவதா? அல்லது இறைவார்த்தையை அறிவிப்பதா?' என்ற கேள்வி எழும்போது, 'இறைவார்த்தை அறிவிப்பை' தேர்ந்து கொள்ளும் திருத்தூதர்கள், 'உணவு பரிமாறுவதற்காக' திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். 6:1-6).

'மார்த்தா, மார்த்தா' என இருமுறை அழைத்து அவரைக் கடிந்து கொள்ளும் இயேசு, 'இறையன்பும், இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலும்' எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று உணர்த்துகின்றார். ('செவிக்கு உணவில்லாதபோது வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்' – குறள் 412 - என்று வள்ளுவப் பெருந்தகை சொல்வதும் இதற்கு ஒத்து இருக்கின்றது).மரியாள் 'தேர்ந்துகொள்ளப்பட்டவரையே' (9:35) தேர்ந்து கொள்கின்றார். அதுவே அவர் தேர்ந்து கொள்ளும் நல்ல பங்கு. அது அவரிடமிருந்து எடுக்கப்படாது.

இன்று நான் 'தேவையானது அந்த ஒன்றை தேர்ந்துகொள்வது' எப்படி?

1. தேவையானது எது என்பதை முதலில் நான் அறிய வேண்டும்

'இறைவன் ஒருவரே தேவையானவர். மற்றவர் அல்லது மற்றவை தேவையற்றவர்கள் அல்லது தேவையற்றவை' என்று எளிதாகச் சொல்லிவிட முடியுமா? தேவையான அந்த இறைவன் இன்று மற்றவர்கள் வழியாகத் தானே வருகின்றார். மருத்துவமனையில் நோயுற்றிருக்கும் நம் நண்பர் அல்லது உறவினர் அருகில் இருப்பது தேவையற்றதா? சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவருக்கு உதவிக்கரம் நீட்டுவது தேவையற்றதா? அழுதுகொண்டிருக்கும் என் நண்பரின் அழுகையைத் துடைப்பது தேவையற்றதா? ஆலயத்தில் அமர்ந்துகொண்டிருப்பது மட்டுமே தேவையானதா? சில நேரங்களில் நம்முடைய பொறுப்பைப் தட்டிக்கழித்துவிட்டு ஆலயத்தில் அமர்வதே பாவமாகி விடும். என்னைப் பொருத்தவரையில் 'என் மூளை சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையற்றதை நான் நாடுகிறேன். என் மனம் சொல்வதை நான் கேட்கும்போதெல்லாம் தேவையானது ஒன்றை நான் நாடுகிறேன்.' 'அவனைப் பார். நிறையப் படிக்கிறான். நீயும் படி!' - இது மூளையின் சொல். 'அவளைப் பார். உன்னைவிட அழகாக இருக்கிறாள். அதை வாங்கு!' 'அவன் உன்னைவிடப் பணக்காரன். நீ பணம் சம்பாதி!' 'அவன் வெற்றியாளன். நீயும் கடினமாக உழை!' இப்படி மூளை சொல்வது எல்லாமே நம்மைப் பரபரப்பாக்கிவிடும். ஒருவர் மற்றவரோடு நம்மை ஒப்பீடு செய்யத் தூண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி புகார் அளிக்கத் தூண்டும். ஆனால், மனம் சொல்வதைக் கேட்பவர் மௌனமாகிறார். அல்லது மௌனமாக இருக்கும் ஒருவரே மனம் சொல்வதைக் கேட்க முடியும். ஆக, என் மூளையின் ஓசைகளைக் குறைத்து மனத்தின் மௌனம் நோக்கி நான் செல்ல வேண்டும்.

2. அமர வேண்டும்

அமர்தல் என்பது கீழை மரபில் செவிமடுத்தலின், பணிவிடையின், ஏற்றுக்கொள்தலின் அடையாளம். மார்த்தா நின்று கொண்டிருப்பதால் அமர்ந்திருக்கும் இயேசுவுக்கு மேல் இருக்கிறாள். மரியாள் அமர்ந்திருப்பதால் இயேசுவுக்கு கீழ் இருக்கிறாள். நின்றுகொண்டிருப்பது நல்லதுதான். ஆனால் அது மேட்டிமை உணர்வையும் பரபரப்பையும் உண்டாக்கிவிடும். 'தலைவன் நானே இங்கு அமர்ந்திருக்கிறேன். ஊழியக்காரி நீ ஏன் நின்றுகொண்டிருக்கிறாய்?' என்று மார்த்தாவை மனதிற்குள் கேட்டிருப்பார் இயேசு. ஆக, வாழ்வில் எதற்கும் நாம் தலைவர்கள் அல்லர். தலைவர் இறைவனே அமர்ந்திருக்கிறார். ஊழியன் நான் ஏன் பரபரப்பாக நின்றுகொண்டிருக்க வேண்டும்.

3. கேட்க வேண்டும்

அடுத்தவர் சொல்வதை நான் கேட்க வேண்டும் என்றால், இறைவனின் வார்த்தையை நான் கேட்க வேண்டும் என்றால் என் மனம் அமைதியாக வேண்டும். ஒரே நேரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் எட்டு ப்ரொஜெக்டர்களையும் ஒவ்வொன்றாக நான் அணைக்க வேண்டும். அப்போதுதான் குரல் கேட்கும், படம் தெரியும். இன்று நான் நிறையப் பாடல்கள் கேட்கிறேன், காணொளிகள் காண்கிறேன், உரையாடல்கள் செய்கிறேன். ஆனால், எல்லாம் முடிந்தவுடன் வெறுமையே மிஞ்சுகிறது. அப்படி என்றால் என் மனம் இன்னும் எதையோ கேட்க விரும்புகிறது. அதுதான் அவரின் குரல்.

இறுதியாக,

இன்று நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் அனைத்தையும் பட்டியலிடுகிறேன். 'ஏன் பரபரப்பாகிப் பதறுகிறாய்?' என்று அவரின் குரல் என்னில் கேட்கிறது. ஒன்றும் செய்யாமல் அவரின் பாதங்களில் அமர்வதே அவர் எனக்கு விடுக்கும் அழைப்பாக இருக்கிறது.

நான் கொஞ்ச நேரம் அமர்ந்து பார்க்கிறேன். என் மௌனம் என்னைக் கொல்கிறது. எனவே, மெதுவாக என் இயர்ஃபோனை எடுத்து நான் காதுகளில் மாட்டுகிறேன். யாரோ எதையோ சத்தமாகப் பாடிக்கொண்டிருக்கிறார்.

'ஆனால், தேவையானது ஒன்றே!'

Friday, July 15, 2022

எளியோர்பக்கம் இறைவன்

இன்றைய (16 ஜூலை 2022) முதல் வாசகம் (மீக்கா 2:1-5)

எளியோர்பக்கம் இறைவன்

மீக்கா நூலிலிருந்து நாம் வாசிக்கத் தொடங்குகின்றோம். அநீதிகளும் வழிபாட்டுப் பிறழ்வுகளும் மேலோங்கி நின்ற காலத்தில் இறைவாக்குரைக்கின்றார் மீக்கா. 

தன் சமகாலத்து மக்கள் செய்த மூன்று தீச்செயல்களைச் சுட்டிக் காட்டுகின்றார்: (அ) வயல்கள்மேல் ஆசை, (ஆ) வீடுகள்மேல் இச்சை, (இ) ஆண்கள்மேல் (மனிதர்கள்மேல்) ஒடுக்குமுறை.

இத்தீச்செயல்களால் பாதிக்கப்படுகின்ற எளியோர்பக்கம் துணைநிற்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆற்றுகின்ற நற்செயல்களைக் காண்கின்ற பரிசேயர்கள் அவரை அழித்துவிடத் துணிகின்றனர். ஆனால், இயேசுவோ தொடர்ந்து நன்மைகள் செய்துகொண்டே செல்கின்றார். மேலும், அவர் எளியோர் பக்கம் நிற்கின்றார். மற்றவர்களின் இகழ்ச்சி அல்லது புகழ்ச்சி கண்டு அவர் தன் பாதையை மாற்றிக்கொள்வில்லை.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) மீக்கா காலத்து மக்கள் போல படுக்கையில் படுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு நாம் தீங்கிழைக்க திட்டங்கள் தீட்டுதல் தவறு.

(ஆ) மற்றவர்களின் தீச்செயல் அல்லது தீய இயல்பு கண்டு நம் நற்செயலையும் நற்குணத்தையும் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை.

(இ) ஒவ்வொரு நிலையிலும் வலுவற்றவர்கள் அல்லது எளியவர்களைக் கண்டு அவர்கள்பக்கம் துணை நிற்றல்.


Thursday, July 14, 2022

அத்திப் பழ அடை

இன்றைய (15 ஜூலை 2022) முதல் வாசகம் (எசா 38)

அத்திப் பழ அடை

நோய்வாய்ப்படுதல் ஒரு கொடுமையான அனுபவம். மூன்று விடயங்களுக்காக இது ஒரு கொடுமையான அனுபவம்:

அ. நோய் தருகின்ற வருத்தம் அல்லது துன்பம். நாம் எவ்வளவுதான் மாத்திரை, மருந்துகள் எடுத்தாலும், நம்முடைய இருத்தல் மற்றும் இயக்கத்தில் ஒருவகையான அசௌகரியத்தை நோய் ஏற்படுத்துகிறது.

ஆ. நோய் உருவாக்கும் சார்புநிலை. மற்றவர்களைச் சார்ந்து வாழும் நிலைக்கு நோய் நம்மைத் தள்ளிவிடுகிறது. மருத்துவர், செவிலியர், உணவு தருபவர், அருகே அமர்ந்து பணிவிடை செய்பவர் என எல்லாரும் நம்மைச் சூழ்ந்து நிற்பது நமக்கு நல்லது எனத் தெரிந்தாலும், அவர்களைச் சார்ந்திருக்க நம்முடைய தான்மை நம்மை அனுமதிப்பதில்லை.

இ. நோயின்போது கிடைக்கும் ஓய்வின் விளைவு. ஓய்வு உடலுக்கு நலம் தந்தாலும், உள்ளத்தை அமைதிப்படுத்தினாலும், அந்த ஓய்வின்போது, நம் வாழ்வில் நிறைய எண்ணங்கள் ஓடும். நாம் செய்த தவறுகள் நம் மனத்திற்கு வரும். நம் தவறுகளுக்காக நாம் தண்டிக்கப்பட்டுவிட்டோமா என்ற குற்றவுணர்வு வரும். கடவுள் இருக்கிறாரா என்ற எண்ணம் வரும். 

மேற்காணும் ஒரு கொடுமையான அனுபவத்தை இன்றைய முதல் வாசகத்தில் எதிர்கொள்கிறார் எசேக்கியா. 'எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்' என வாசகம் சொல்கிறது. ஆனால், எந்த வகை நோய் என்று இங்கே குறிப்பிடப்படவில்லை. ஆனால், இங்கே பயன்படுத்துகின்ற மருத்துவ முறையை வைத்துப் பார்க்கும் போது, போர்க்களத்தில் பட்ட காயம், அல்லது தன்னுடைய வயது மூப்பால் பெற்ற புண் அல்லது காயத்தால் அவர் கஷ்டப்பட்டார் என்பதை நாம் உணர முடிகிறது. ஏனெனில், எசாயா, 'ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டுவந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்' எனக் கூறுகின்றார். காய வைக்கப்பட்ட அத்திப்பழ அடை, புண்களின் எரிச்சல், அரிப்பு, மற்றும் நீர்கோர்த்தலைக் குணமாக்க வல்லது என்பது அன்றைய எகிப்திய மருத்துவம். 

ஆனால், கொஞ்ச நாள்களுக்கு முன் இதே எசாயா, எசேக்கியா அரசனிடம், 'நீர் உம் வீட்டை ஒழுங்குபடுத்தும். ஏனெனில், நீர் சாகப் போகிறீர், பிழைக்க மாட்டீர்!' என்கிறார். 'உம் வீட்டை ஒழுங்குபடுத்தும்' என்று கடவுள் வெகு சிலருக்கே வாய்ப்பு கொடுக்கிறார். எனவே, வீட்டை நாம் எப்போதும் ஒழுங்குபடுத்தி வைத்தல் அவசியம். ஒழுங்குபடுத்துதல் என்பது, இங்கே, அரச காரியங்களை ஒழுங்குபடுத்துவதையும், கருவூலம் மற்றும் படை இரகசியங்களை மற்றவர்களுக்குச் சொல்வதையும் குறிக்கிறது.

எசேக்கியா உடனடியாக ஆண்டவரிம் மன்றாடுகின்றார். ஆண்டவர் அவருடைய செபத்தைக் கேட்கின்றார். 'உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். உனக்கு நலம் தந்தேன்' என விடை தருகின்றார். மேலும் பதினைந்து ஆண்டுகள் அவருக்கு அளிக்கின்றார். இதன் அடையாளமாக, 'சாயும் கதிரவனின் நிழல் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்கின்றார்.'

எசாயாவின் பின்வரும் பாடலே அருள்பணியாளர்களின் கட்டளை செபத்தில், இரண்டாம் வாரம் செவ்வாய்க் கிழமை காலைச் செபமாக வருகிறது:

'என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே!

... ...

என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல பெயர்க்கப்பட்டு என்னைவிட்டு அகற்றப்படுகிறது.

நெசவாளன் பாவைச் சுருட்டுவதுபோல என் வாழ்வை முடிக்கிறேன்.

தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்.

காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவு கட்டுவீர்.

... ...

என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்.

எனக்கு உடல்நலம் நல்கி நான் உயிர்பிழைக்கச் செய்வீர்.

இதோ, என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்!'

நம் வாழ்நாளின் குறுகிய நிலையை நாம் எண்ணிப்பார்க்க, நம் நோயும் இயலாமையும் நமக்கு வாய்ப்பளிக்கிறது.

எசேக்கியா தன் நோயின் காலத்தில், தன்னைப் பார்க்காமல், இறைவனைப் பார்த்தார்.

இறைவன் அவருடைய கண்ணீரைக் கண்டார், மன்றாட்டைக் கேட்டார்.

நம் கண்ணீரைக் காண்பவரும், நம் மன்றாட்டைக் கேட்பவரும் அவரே!

'ஏனெனில், அவரே நம்மைக் காண்கின்ற இறைவன்!' (காண். தொநூ 16:13)

நற்செய்தி வாசகத்தில், ஓய்வு நாளில் கதிர்களைக் கொய்து உண்கின்ற தன் சீடர்களைக் கடிந்துகொள்கின்ற பரிசேயர்களிடம் உரையாடுகின்ற இயேசு, இரக்கத்தின் பொருளை உணர்ந்துகொள்ளுமாறு அவர்களை அழைக்கின்றார்.

கடவுளின் இரக்கம் மனிதர்களின் சட்டங்களையும் மிஞ்சி நிற்கிறது.


Wednesday, July 13, 2022

காற்றைப் பெற்றெடுத்தல்

இன்றைய (14 ஜூலை 2022) முதல் வாசகம் (எசாயா 26:7-9,12,16-19)

காற்றைப் பெற்றெடுத்தல்

கடந்த வாரம் புனேயில் எனக்குக் கற்றுக்கொடுத்த அருள்பணியாளர் ஒருவரைச் சந்தித்தேன். உரையாடலின் இடையே, 'நாம் எழுதும் எழுத்துகள், தயாரிக்கும் உரைகள், எடுக்கும் வகுப்புகள், ஏன் வாழும் வாழ்க்கையும் கூட, நண்டு சாப்பிடுவது போல உள்ளன(து)' என்றார். அவரே தொடர்ந்தார், 'நண்டு சாப்பிடும்போது நாம் நிறைய முயற்சி செய்கின்றோம். நண்டைத் தட்டில் எடுத்து வைத்தல், கையிலும் குத்தி விடாமல் அதே நேரத்தில் வன்மையாகவும் ஓட்டை உடைத்தல், உடைந்த துண்டுகளைப் பிரித்தல், பிரித்தவற்றிலிருந்து சதையைத் தனியே எடுத்தல் என நிறைய வேலை செய்தாலும், வாய்க்குச் செல்வது என்னவோ ஒரு விரல் அளவே!'.

நாம் செய்யும் செயல்களில் உள்ள துன்பம் செயல்களின் விளைவைவிட அதிகமாக இருக்கும்போது நம்மை அறியாமல் சோகமும் விரக்தியும் நம்மைப் பற்றிக்கொள்கின்றன.

இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களின் புலம்பலாக இருக்கின்றது.

நாடுகடத்தப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்கள் தங்கள் தாய்நாடு திரும்புவதற்கான முயற்சிகள் அனைத்தும் நண்டு சாப்பிடுவது போல ஆகிவிட்டது எனப் புலம்புகிறார் எசாயா.

இன்றைய முதல் வாசகத்தில் மூன்று உருவகங்கள் என்னைக் கவர்கின்றன:

(அ) காற்றைப் பெற்றெடுத்தல்

'ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம் ... பேறுகாலம் நெருங்குகையில் கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவது போல, ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம். ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்.' 

'காற்றைப் பெற்றெடுத்தல்' என்றால் என்ன?

இன்று நாம் வைத்திருக்கும் அல்ட்ரா ஸ்கேன் வசதிகள் அன்று கிடையாது. பெண்ணின் வயிறு பெரிதாக இருந்தால் அவர் கருவுற்றிருப்பதாக எண்ணினர். பேறுகால வலி அவருக்கு வந்துவிட்டது எனக் காத்திருந்து, கடைசியில் அது வயிற்றில் உள்ள 'வாயு' என்ற நிலை அறியப்பட்டது. இதற்கு மருத்துவத்தில், 'எம்னெயுமாடோஸிஸ் இன்டெஸ்டினாலிஸ்' என்பது பெயர். இந்த ஒரு மருத்துவ நிலையை இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையோடு பொருத்துகிறார் எசாயா.

வயிறு பெரிதாக இருப்பது, வலி எடுப்பது, வலியால் துடிப்பது என அனைத்தும் உண்மை. ஆனால், குழந்தைக்குப் பதில் வயிற்றில் இருப்பது காற்று. இஸ்ரயேல் மக்கள் இறைவனை நோக்கிக் கதறி அழுவது, தங்கள் துன்பங்களால் வருந்தி வாடுவது அனைத்தும் உண்மை. ஆனால், அவற்றால் பயன் எதுவும் இல்லை. ஏனெனில், அவர்கள் தங்கள் பழைய வாழ்வை விட்டுத் திரும்பவில்லை.

நம் முயற்சிகள் இப்படி இருந்தால் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள் நாம்!

(ஆ) உலகில் குடியிருக்க

'நாடு விடுதலை பெற நாங்கள் எதையும் சாதிக்கவில்லை. உலகில் குடியிருக்க எவரும் பிறக்கப் போவதில்லை.'

தங்கள் இயலாமையை மக்கள் உணர்வதோடு, வாழ்வின் எதார்த்த நிலையையும் உணர்கின்றனர். அதாவது, இந்த உலகில் பிறக்கும் எவரும் இங்கேயே குடியிருப்பதில்லை. அப்படிக் குடியிருப்பதற்காக இங்கே யாரும் பிறக்கவில்லை. வாழ்வின் நிரந்தரமற்ற நிலையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். தங்களின் தற்காலிக வாழ்க்கை நிலையில் தங்களால் எதுவும் செய்ய இயலவில்லையே எனப் புலம்புகின்றனர்.

(இ) புழுதியில் வாழ்வோரே

இறந்தவர்களை மரியாதை நிமித்தமாக அழைக்கும் சொல்லாடலே 'புழுதியில் வாழ்பவர்.' புழுதி என்பது தண்ணீர்ப் பசை இல்லாத நிலையையும், காற்றால் அடித்துச் செல்லப்படும் நிலையையும், கால்களில் மிதிபடும் நிலையையும் குறிக்கிறது. இஸ்ரயேல் மக்களின் வாழ்வு இப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் எழுப்பி ஒளி தருவதாகப் பாடுகின்றார் எசாயா. ஆக, புலம்பலோடு இணைந்து நம்பிக்கையையும் அள்ளித் தெளிக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (மத் 11:28-30), 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, என்னிடம் வாருங்கள்' என அழைக்கின்றார் இயேசு. அவரிடம் நமக்கு இளைப்பாறுதல் கிடைக்கின்றது.

நம் வாழ்வின் எதார்த்த நிலை எப்படி இருந்தாலும், கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால் நம்பிக்கை ஒளி தெரியத்தான் செய்கின்றது.


Tuesday, July 12, 2022

ஆண்டவரின் கருவி

இன்றைய (13 ஜூலை 2022) முதல் வாசகம் (எசாயா 10:5-7,13-16)

ஆண்டவரின் கருவி

புனித இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகள் (The Spiritual Exercises) நூலின் ஒரு பகுதியில், 'கடவுள் பயன்படுத்தும் மருத்துவர் கத்தி' (surgeon's knife) என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். மருத்துவரின் கத்தி அடுத்தவரை வெட்டிக் காயப்படுத்தும். ஆனால், அப்படி அந்தக் கத்தி வெட்டிக் காயத்தை ஏற்படுத்தினால்தான் மற்றவர் நலம் பெறுவார். ஆக, மருத்துவரின் கத்தி தரும் வலி எப்போதுமே நலமானது. சிறிது நேர துன்பத்தை அது தந்தாலும், நீண்ட நலனை அது பின்நாளில் ஒருவருக்குத் தரும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மருத்துவர் கத்தியாக அசீரியா நாடு இருக்கிறது. தன்னுடைய சொந்த இஸ்ரயேல் மக்களின் தவறுகளைக் கண்டிக்க, ஆண்டவராகிய கடவுள், அசீரியாவை மருத்துவர் கத்தியாகப் பயன்படுத்துகின்றார். ஆண்டவர் கொடுக்கும் மருந்து நோயைவிடக் கசப்பானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.

ஆனால், அதே மருத்துவர் கத்தி, கொலை செய்யும் கத்தியாக மாறியபோது, ஆண்டவர் தன் மக்களைக் காப்பாற்ற இறங்கி வருகின்றார்.

இவ்வாறாக, 'கொல்வதும் நானே, உயிர்தருவதும் நானே' என்று தன்னை எல்லாம் வல்ல இறைவனாகக் காட்டுகின்றார்.

இதுவே மறைபொருள்.

எல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:25-27), விண்ணரசின் மறைபொருள் குழந்தைகளுக்கு (சீடர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டது பற்றி மகிழ்கின்றார் இயேசு. வாழ்வில் நமக்கு நடப்பவை அனைத்திற்குமான பொருளை அறிந்திருப்பவர் இறைவனே. அவற்றை நாம் நம் அறிவால் அல்ல, அவருடைய வெளிப்பாட்டலே அறிந்துகொள்ள முடியும்.

நமக்குத் தேவையான மனநிலை என்ன?

குழந்தைகளைப் போல, நம் கைகளை விரித்து அவரிடம் நீட்டுவது.


Monday, July 11, 2022

பாதுகாப்பின்மை

இன்றைய (12 ஜூலை 2022) முதல் வாசகம் (எசாயா 7:1-9)

பாதுகாப்பின்மை

நீங்கள் பைக் அல்லது கார் ஓட்டுவீர்களா? முதன்முதலாக அதை ஓட்டத் தொடங்கிய நாளில், அந்த பைக் அல்லது கார் நம் கன்ட்ரோலில் இருக்கிறதா? நிச்சயமாக இல்லை! கொஞ்சம் கொஞ்சமாக அது நம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் பைக் அல்லது கார் ஓட்டுவது நம் இயல்பாகவே மாறிவிடுகிறது.

இசைக்கருவி மீட்டுவது, பொதுவில் பேசுவது, மொழி கற்பது என எல்லாச் செயல்பாடுகளிலும், முதலில் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத ஒன்று கட்டுப்பாட்டுக்கள் வருகிறது.

அப்படி வரும்போது என்ன நடக்கிறது?

நம் பயம் மறைந்து நம்பிக்கை பிறக்கிறது. 

ஆக, நாமே உருவாக்கும் ஒரு சிறிய பாதுகாப்பின்iயால் உருவாகும் பயம், கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நம்பிக்கை பிறக்கிறது. 

இதை அப்படியே தலைகீழாக்கினால், நம்பிக்கை குறைந்தால், பயம் அதிகமாகி, நாம் பாதுகாப்பின்மையை உணர்கிறோம்.

நான்கு வழிச் சாலையில் காரை ஓட்டிச் செல்லும்போது, திடீரென்று கார் ஓட்டுவது மறக்கத் தொடங்கினால் என்ன ஆகும்? பயம் பற்றிக்கொள்ளும்.

இன்றைய முதல் வாசகத்தில், கடவுள் தங்களோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு, யூதாவின் தலைநகரான எருசலேமிலிருந்து ஆட்சி செய்துகொண்டிருக்கின்றார் ஆகாசு. இந்த நேரத்தில், சுற்றிலும் படையெடுப்பு நடக்கிறது. யூதா நாடு எகிப்திற்கும் பாபிலோனியாவுக்கும் இடையில் இருந்ததால், எந்நேரமும் போர் மேகங்கள் சூழ்ந்த வண்ணம் இருந்தன. வடக்கிலிருந்த அசீரியாவும், அதன் சார்பு நாடான இஸ்ரயேலும் எருசலேமின் மேல் படையெடுக்கின்றனர். இதைக் கண்டவுடன், ஆகாசும், மக்களும் அச்சத்தால் நடுங்குகின்றனர். 

'பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வு கொள்வது போல, ஆகாசின் உள்ளமும் அவர் நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன' எனப் பதிவு செய்கிறார் எசாயா.

விழுவோமோ? நிற்போமோ? சாய்ந்து நிற்போமோ? தரையிலிருந்து பெயர்ந்து விழுவோமோ? என்ற அச்சத்தில் இருக்கின்றனர் யூதா நாட்டினர். 

மேலும், அந்த நேரத்தில் ஆகாசு என்ன செய்கின்றார்?

'வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய்' என இறைவாக்கினர் எசாயாவுக்குச் சொல்கின்றார் ஆண்டவர்.

வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில் அரசனுக்கு என்ன வேலை?

தன்னுடைய பயத்தில், தான் செய்வதறியாது, ஒளிந்துகொள்வதற்கும், அல்லது இறைவாக்கினரைத் தேடியோ, அல்லது மாறுவேடம் தரிக்கவோ ஆகாசு அங்கே சென்றிருக்கலாம்.

ஆண்டவர் மிகவும் மேலான செய்தியைத் தருகிறார்: 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில் நீங்கள் நிலைத்து நிற்க மாட்டீர்கள்!' அல்லது நேர்முகமாக, 'உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருந்தால் நீங்கள் நிலைத்திருப்பீர்கள்!'

நீங்கள் நிலைக்க, நீங்கள் உங்கள் நம்பிக்கையில் நிலைத்திருங்கள்.

பயம் விலக வேண்டும் எனக் கற்பிக்கின்றார் கடவுள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:20-24), இதற்கு மாறாக, கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்கள் தவறான பாதுகாப்புக்களைக் கொண்டிருக்கின்றன. இதுவும் ஆபத்து.

அதாவது, கார் ஓட்டத் தெரியாமலேயே, 'எனக்குக் கார் ஓட்டத் தெரியும்' என்று சொல்வது பெரிய ஆபத்து. தாங்கள் இயேசுவை நம்பாமலேயே, தங்கள் நம்பிக்கையால் தாங்கள் மீட்படைவோம் என்ற பொய்யான நம்பிக்கையில் இருக்கின்றனர் அந்நகரத்தினர். அவர்களைக் கடிந்துகொள்கின்றார் இயேசு.

சோதோம், மற்றும் கொமோரா நகரங்கள் பரவாயில்லை. ஏனெனில், அவை தவறான பாதுகாப்புக்களைத் தேடிச் செல்லவோ, பொய்யுரைக்கவோ இல்லை.

என் பயம் மற்றும் பாதுகாப்பின்மை மறைய நம்பிக்கை அவசியம். நம்பிக்கை வந்துவிட்டால் என் வாழ்க்கை என் கட்டுப்பாட்டில் இருக்கும். அந்த நம்பிக்கைக்குப் பதிலாக, பொய்யான நம்பிக்கையை நான் பற்றிக்கொண்டால் ஆபத்து இன்னும் அதிகமாகும்.

மேலும், ஒரு பக்கம் பயம் வரும்போது, நாம் வண்ணான் கால்வாயை நோக்கி ஓடும்போது, கால்வாயின் அக்கரையில் நமக்காக நிற்கின்றார் கடவுள்.