Tuesday, August 31, 2021

சிங்கத்தின் தேன் - 6

சிம்சோன் புதிரும் புதினமும்

நாசீர்

இவள் கருத்தரிப்பாள் என்று சொன்ன வானதூதர் மறைந்துவிட்டார். தன் கணவனிடம் அவள் ஓடுகிறாள். அச்சமும் மகிழ்ச்சியும், கலக்கமும் துள்ளலும் கலந்த ஓர் உணர்வு அவள் வயிற்றில் நெளிந்துகொண்டிருக்கிறது. அவள் கருத்தரித்துவிட்டாள். அல்லது சீக்கிரம் கருத்தரிப்பாள். ஆனால், அந்தக் குழந்தை? எப்படிச் சொல்வது? அந்தக் குழந்தை அவளுடையது அல்ல. மற்ற எல்லாத் தாய்மார்களுக்கும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தை அவர்களுடையது. ஆனால், பாவம் இவள்! இவளின் குழந்தை இவளுடையது அல்ல! பத்து மாதங்கள் ஒரு குழந்தையைப் பாதுகாக்கும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகம் அவள். அவ்வளவுதான்! அவள் ஒரு சேமிப்புப் பெட்டகம்! அவளுக்குத் தெரியும்! சேமிக்கப்படும் அனைத்தும் அதன் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். பெட்டி அவளுடையது! ஆனால், பணம் அவளுடையது அன்று! நிலம் அவளுடையது! ஆனால், புதையல் அவளுடையது அன்று!

ஏதோ ஓர் இனம் புரியாத சுமையால் அவள் சுமத்தப்படுகிறாள். அவளின் நடை தளர்கிறது. அவளுடைய வயிற்றில் வளரும் அந்தக் குழந்தை யார்? அவனுடைய உடல் உருவாக்கத்திற்குக் காரணம் யார்? தன் தந்தையின் விந்திலும், தாயின் சுரோணிதத்திலும் பிறந்தவனா அவன்? அவன் அவர்களின் எலும்பின் எலும்பா? சதையின் சதையா? அவன் யார்? அசாதாரணமான, அவிழ்க்க முடியாத முடிச்சாய் இருக்கின்ற, புரிந்துகொள்ள முடியாத புதிராய் இருக்கின்ற அவன் யார்? அவன் அசாதாரணமான மனிதனா? முதலில் அவன் மனிதனா?

அவனுடைய உருவில், உடலில் எத்தனை சதவிகிதம் என்னுடையது? நான் இந்தக் குழந்தைக்காகத்தான் கடவுளிடம் கண்ணீர் சிந்தி மன்றாடினேனா? இயற்கையான, இயல்பான, தாய்மைக்குரிய அன்பை இவனுக்கு நான் கொடுக்க முடியுமா? நான் என் அன்பை அள்ளி இறைக்க ஒரு மகனுக்காகக் காத்திருந்தேனே! ஆனால், இப்போது மகன் கிடைத்துவிட, அன்பை அள்ளி இறைக்க என்னால் ஏன் இயலவில்லை? – தன் கணவனிடம் நற்செய்தி சொல்ல ஓடிய அந்த இளவலின் எண்ணங்களில் உதித்த கேள்விகள் இவை.

தன் கணவனைச் சந்தித்து, அவள் அவனிடம் பேசத் தொடங்கியவுடன், அமுக்கி வைத்த வார்த்தைகளை அவள் அடுக்கத் தொடங்கியவுடன், மூடையை அவிழ்த்துக் கொட்டிய நெல்லிக்காய்களாக, அவை இங்குமங்கும் சிதறி ஓடுகின்றன. எண்ணங்களின் பேரிரைச்சல் ஆற்றலோடு அவளை அமுக்குகிறது. 'பையன், கருவில் உருவாகும் நாள் முதல்' என்று சொல்லத் தொடங்கியவளின் கழுத்தில் ஏதோ முள் சிக்கியது போல, துப்பவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல், விழிபிதுங்கி நின்ற அவள், தனக்கு வானதூதர் சொன்ன வார்த்தைகளைச் சொல்வதற்குப் பதிலாக, அவற்றை விழுங்கிவிட்டு, முற்றிலும் மாறுபட்ட, யாரும் எதிர்பார்த்திராத, ஏன், அவளையே ஆச்சர்யத்திற்குள்ளாக்கிய அந்த வார்த்தைகளை உதிர்க்கிறாள்: 'அவன் இறக்கும் நாள் வரை!'

இதோ! இந்தத் தாய்! பிறக்குமுன்னே தன் மகனின் இறப்பு நாள் பற்றிப் பேசி, அவனுக்கு தாலாட்டு பாடும் முன்பே ஒப்பாரி வைத்துத இந்தத் தாய்! மோகனம் பாடுவதற்கு முன்பே முகாரி பாடிய இந்த அபலைப் பெண், இனி தன் குழந்தையோடு சொல்ல முடியாத நிலையில் அந்நியப்பட்டு நிற்பாள். அவளின் தொப்புள்கொடி அவனை இணைத்தாலும், அந்த முடிச்சு போட்ட நொடியிலேயே அவிழ்ந்து போயிற்று. இனி அவன் அவளுக்குச் சொந்தமில்லை. இல்லை! அவன் எப்போதுமே அவளுக்குச் சொந்தமில்லை. தன் தாயிடமிருந்து பிறப்பிலேயே அந்நியப்பட்ட அவன், சிம்சோன், இனி தன் வாழ்நாள் முழுவதும் அந்நியப்பட்டே நிற்பான். அவனுக்கு அவன் தாயே சொந்தமில்லை. ஆக, அவனுக்கு யாருமே சொந்தமில்லை. அவன் இனி சந்திக்கும் எல்லாரும் அவனை ஏமாற்றுவார்கள், காட்டிக் கொடுப்பார்கள், மறுதலிப்பார்கள், பயன்படுத்துவார்கள், வேடிக்கை பார்ப்பார்கள், கேலி செய்வார்கள். தன் இனத்தின் மீட்புக்காய்ப் பிறந்த அவன், தனக்கே அந்நியனாய் இறந்து போவான். சிம்சோன், தன் வாழ்வின் இறுதியில் சொல்வதுபோல, அவன் 'மற்ற மனிதர்களைப் போல அல்ல!' அவன் ஒருபோதும் மற்றவர்களைப் போல இருக்க முடியாது. ஏனெனில், மற்றது என்ற முதல் உறவே அவனுக்கு அந்நியமாய்ப் போயிற்று.

ஆக, சிம்சோனின் பிறப்பால் அவனுடைய தாயின் மலட்டுத்தன்மை குணமானாலும், அந்நியப்படுத்தப்படுதல் என்னும் மலட்டுத்தன்மையை, அவள் தன்னை அறியாமலேயே தன் மகனின் செல்லுக்குள் கடத்தி விட்டாள். உடலின் மலட்டுத்தன்மை அவளுக்கு நலமானது. ஆனால், உறவின் மலட்டுத்தன்மை அவளுடைய மகனைப் பற்றிக்கொண்டது. பாவம்! மலட்டுத்தன்மை சிம்சோனின் குடும்ப நோயாகிப்போனது!

இருந்தாலும், கடவுள்தான், சிம்சோனின் தாய் அல்ல, அவளுடைய மகனை நாசீர் நிலைக்கு எடுத்துக்கொள்கின்றார். அவனுக்கும் அவனுடைய வாழ்க்கைக்கும் இடையே இணைக்க முடியாத ஒரு பிளவை ஏற்படுத்துபவர் கடவுளே. 'நாசீர்' என்ற எபிரேய வார்த்தை, 'நாடர்' ('பொருத்தனை') என்ற வார்த்தையிலிருந்தும், 'ஸ்சார்' ('அந்நியன்') என்னும் வார்த்தையிலிருந்தும் வருகிறது. இந்தப் பிளவு யாரும் கடக்க முடியாத பிளவாக சிம்சோனுக்கு இருக்கும். அவனுக்கு அருகில் யாரும் வர முடியாது. வருகிற எவரும் அவனைவிட்டுத் தப்ப முடியாது. இனி அவன் தன் வாழ்நாள் முழுவதும் இருதுருவங்களால் இழுக்கப்பட்டுக்கொண்டே இருப்பான். கடவுள் அவனை நாசீர் எனத் தனக்கென எடுத்துக்கொண்டாலும், தன்னுடைய வயிற்றின் கரு முளையைப் பார்த்து, அவள் சொன்ன அந்தக் குளிர்ந்த வார்த்தைகள், 'அவன் இறக்கும் நாள் வரை' என்னும் வார்த்தைகள், கடவுளின் கட்டளையை உறுதி செய்வதுபோல ஆக்கிவிட்டன.

(தொடரும்)


Monday, August 30, 2021

சிங்கத்தின் தேன் - 5

சிம்சோன் புதிரும் புதினமும்

இறக்கும் நாள் வரை

மனேவாகின் மனைவி அவனிடம் சென்று தான் வானதூதரைச் சந்தித்த நிகழ்வைப் பற்றிச் சொல்கிறாள். அவளுடைய பேச்சு மன்னிப்பு கோரும் நடையில் இருப்பதாகவும், அவள் நிறைய வார்த்தைகளைக் கையாளுகிறாள் என்றும் நாம் ஏற்கெனவே பார்த்தோம். எல்லாவற்றையும் சொல்வதுபோல இருந்தாலும், அவள் நிறையவற்றை மறைக்கவே செய்கிறாள். இந்த நிகழ்வை விளக்கும் நிறைய விளக்கவுரையாளர்களும், சிம்சோன் கதையாடலைத் தங்களுடைய பாடல், ஓவியம், புதினம், மற்றும் திரைப்படத்தில் கையாண்டவர்களும், சிம்சோன் பிறந்தது அவனுடைய தாய் மற்றும் 'கடவுளின் மனிதருக்கும்' இடையேயான 'உறவில்தான்' என்று சொல்லத் தவறவில்லை. இன்னும் சிலர், குறிப்பாக, விலாடிமிர் யாபோடின்ஸ்கி தன்னுடைய நாசீராகிய சிம்சோன் என்னும் புதினத்தில், சிம்சோன், அவனுடைய தாய்க்கும் பெலிஸ்தி ஆண் ஒருவனுக்குமான உறவில் பிறந்தவன் என்று குறிப்பிடுகின்றார். இந்தப் பின்புலத்தில் பார்த்தால், 'கடவுளின் மனிதர் என்னிடம் வந்தார்' என்று அவள் தன் கணவனிடம் சொல்வது, பெலிஸ்திய ஆண்மகனால் தான் கருத்தரித்ததை மறைப்பதற்கான புனைவு என்று சொல்லலாம். ஏனெனில், 'அந்நாள்களில் இஸ்ரயேல் மீது அதிகாரம் செலுத்தி வந்த பெலிஸ்தியரைத் தண்டிக்க ஆண்டவர் வாய்ப்பு தேடிக் கொண்டிருந்தார்.' பெலிஸ்திய ஆண்மகன் ஒருவனையே ஆண்டவர் பயன்படுத்தி மனோவாகின் மனைவியை கருத்தரிக்கச் செய்திருக்கலாம். இந்தக் குறிப்பு, சிம்சோன் நிகழ்வின் சாரத்தைச் கூட்டுவதுடன், சிம்சோனுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையே இருந்த உறவுநிலைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது. ஏனெனில், சிம்சோன், தன் இனத்து மக்களிடம் இணைந்திருக்கும் நேரத்தைவிட, பெலிஸ்தியரிடமே அதிகமாக இணைந்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், தன் இனத்து மக்களை அவர் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறார். ஆனால், நாம், மேற்காணும் புரிதலை ஏற்றுக்கொண்டாலும், சிம்சோனின் தாய் சொன்ன வார்த்தைகளை அப்படியே நம்பி ஏற்றுக்கொள்வோம். ஏனெனில், அவள் உண்மையே பேசியிருந்தாலும், இறுதியில், இன்னும் பெரிய சிக்கலையே சந்திக்கிறாள்.

தங்களுக்கு ஒரு மகன் பிறப்பான் என்று மனோவாகிடம் அவள் சொல்லி முடித்தவுடன், வானதூதர் சொன்ன செய்தியின் இரண்டாம் பகுதியையும் சொல்லத் தொடங்குகிறாள். ஆனால், வானதூதர் சொன்ன வார்த்தைகளை அவள் தெளிவாகவும் முழுமையாகவும் சொல்லவில்லை. 'சவரக்கத்தி குழந்தையின் தலைமேல் படக்கூடாது' என்ற குறிப்பை மறைக்கிறாள். அவர்களின் மகன் நாட்டின் மீட்பராக மாறுவான் என்பதையும் அவள் சொல்லவில்லை. 'பையன், கருவில் உருவாகும் நாள் முதல்' எனத் தொடங்கும் அவள், தன்னை அறிந்தும் அறியாமல், 'அவன் இறக்கும் வரை கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என முடிக்கிறாள்.

அவளின் இறுதி வார்த்தைகள் நமக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன. 'பையன் இறக்கும் வரை' என்கிறாள். 'பையனின் இறப்பைப் பற்றி' வானதூதர் ஒன்றும் குறிப்பிடவில்லையே. பின் ஏன் இவள் அப்படிச் சொன்னாள்? குழந்தைப் பேற்றுக்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் எந்தத் தாயாவது, தனக்கு ஒரு மகன் பிறப்பான் என்ற வாக்குறுதி கிடைத்தபோது, அதைத் தன் கணவனிடம் மகிழ்ச்சியாகப் பகிரும் அந்த நொடியில், அந்த ஆசை மகனின் இறப்பைப் பற்றிப் பேசுவாளா

அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? பிறக்கின்ற அனைத்தும் இறக்க வேண்டும் என்ற சபை உரையாளரின் ஞானமும், நம் ஊர் பட்டினத்தாரின் ஞானமும் அவளுக்கு இருந்ததா? அல்லது தன் மகன், தன் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கான நாசீராக இருக்க வேண்டும் என்பதை, உருவகமாக, 'பிறப்பு முதல் இறப்பு வரை' என்று சொன்னாளா? அல்லது பிறக்கின்ற மகன் தனக்கானவன் அல்ல என்று அவளின் பெண்ணுக்குரிய உள்ளுணர்வு சொன்னதால், மகன் பிறக்குமுன்பே அவனது இறப்பைப் பற்றி எண்ணத் தொடங்கினாளா அந்த ஏழைத்தாய்!

குழந்தையைப் பெற்றெடுக்காத யாரும்கூட, ஒரு குழந்தை கருவில் இருக்கும்போது, அதன் இறப்பைப் பற்றிப் பேசியிருக்க மாட்டார்கள். இந்த உலகம் பற்றியும், உலகில் உள்ள துன்பங்கள் பற்றியும் அறிந்து, அவற்றைத் தன் குழந்தை படக்கூடாது என்று அக்கறைப்படும் தாய்கூட, தன் குழந்தையின் இறப்பை எதிர்பார்க்க மாட்டாள். அவள், தன் குழந்தை வளர்ந்து, படித்து, ஆளாகி, நல்ல நிலையில் இருப்பதைக் கற்பனை செய்வாளே தவிர, தன் குழந்தை இறந்து போவது பற்றிக் கற்பனை செய்திருக்க மாட்டாள்.

சிம்சோன் பாவம்! எல்லாக் குழந்தைகளும் பிறந்து இறக்கின்றன! அவனோ, இறப்பதற்காகவே பிறக்கிறான்! தாயின் இந்த வார்த்தைகள் வயிற்றில் குழந்தையாய் இருந்த அவனின் காதுகளிலும் விழுந்தததோ என்னவோ, பிறப்பு முதல் இறப்பு வரை அவன் தன் தாயுடன் ஒட்டவே இல்லை. தான் சாவதற்காகப் பிறந்ததால், ஒவ்வொரு நொடியும் இறப்பு என்ற அந்த முள்ளை நோக்கி ஓடிப் போய் அதில் விழ முயல்கின்றான். அல்லது தன் இறப்பு உறுதி என்பதால் எதையும் அசாத்திய துணிச்சலோடு செய்கிறான்.

தாய்மைக்குரிய வாஞ்சையிலிருந்து அந்நியப்பட்டு நின்ற சிம்சோனின் தாய், அந்நியப்பட்டு நின்ற தன் மகன்மேல், தொடுக்கும் வன்ம அம்புதான், அவனுடைய இறப்பைப் பற்றி அவள் பேசியது.

ஒரு பெண் உணர்ச்சியற்றவளாக இருந்தால் மட்டுமே, தன் வயிற்றில் உரு எடுக்கத் தொடங்கியிருக்கும் சிசுவின் இறப்பு நாள் பற்றி இவ்வளவு வெளிப்படையாகவும் சத்தமாகவும் பேச முடியும். அவள் அப்படித்தான் இருந்தாள். தன் குழந்தையிடமிருந்தும், இவ்வார்த்தைகளைக் கேட்கும் தன் குழந்தையின் தந்தையிடமிருந்தும், ஏன், தன்னிடமிருந்துமே அவள் அந்நியப்பட்டு நின்றாள்! பாவம் அவள்! கடவுள் அவளை ஏமாற்றிவிட்டார்! குழந்தையைக் கொடுத்த அதே நொடியில் அவர் எடுத்துக்கொண்டார்! அந்தக் கோபத்தின் உச்சியில்தான் அவள், அவர் கொடுத்த குழந்தையை அவரிடமே, அந்த நொடியே, தூக்கி எறிகின்றாள். 

இல்லை என்றால், அவள் எப்படி இந்த வார்த்தைகளைப் பேசியிருப்பாள்?

(தொடரும்)

 

Sunday, August 29, 2021

சிங்கத்தின் தேன் - 4

சிம்சோன் புதிரும் புதினமும்

வாடகைத் தாய்

அவளுக்கு ஒரு மகன் பிறப்பான். ஆம்! அவளுக்கு! இந்த நிமிடம் வரை, உண்மையாகவே அது பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. அச்செய்தியைச் சொன்ன வானதூதருக்கே அது முதலில் தெரியும். அவர் அச்செய்தியை அவளுக்குச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய வயிற்றில் ஏதோ ஒன்று உருண்டு புரள்வதை அவள் அறிந்திருப்பாள். ஏனெனில், வெளிப்பாடு நடந்தவுடன் செயல்பாடும் நடந்துவிடும். இஸ்ரயேலைக் காப்பாற்றப் போவது தன் மகன்தான் என்று அறிந்த அந்த நொடி அவள், ஓர் ஆண்மயில்போலப் பெருமையில் தன் கழுத்தை அப்படியே நீட்டியிருப்பாள். கடவுளின் மக்களை மீ;ட்கும் ஒருவன் தன் வயிற்றில் பிறப்பது பற்றி எந்தத் தாய் பெருமை கொள்ளாமல் இருப்பாள்? ஆனால், ஒருவேளை, அவளுடைய உள்ளத்தின் ஒரு மூலையில், ஏதோ ஒரு வருத்தம் சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும். ஆம்! அவளுடைய மகிழ்ச்சி நிறைவானது அல்ல!

இன்னொரு துன்பமான, ஆனால் வெளிப்படுத்த இயலாத விடயம் அவள் நெஞ்சைப் பிழிந்திருக்கும். அவள் கருத்தாங்கியிருப்பது அவளின் தனிஅன்புக்குரிய, நெஞ்சுக்கு நெருக்கமான மகன் அல்ல. மாறாக, ஒரு 'நாட்டின் நம்பிக்கை நட்சத்திரத்தை,' கடவுளின் நாசீரை, இஸ்ரயேல் மக்களின் மீட்பரை அவள் கருத்தாங்கியிருக்கிறாள். அவனுடைய இந்த அடையாளம், அவன் பிறந்து, வளர்ந்து, வயதானபின் அவனுக்கு வருவது அல்ல. இதோ! அவள் கருத்தரிக்கத் தொடங்கும் அந்த நொடியே அவனுடைய அடையாளமும் உருவாகத் தொடங்குகிறது. ஒருவேளை அவன் வளர்ந்தபின் அந்த அடையாளத்தைப் பெற்றால், அவனோடு இணைந்து அவனுடைய தாயும் வளர்ந்திருப்பாள். ஆனால், தாய் இங்கே அப்படியே இருக்க மகன் மட்டும் வேகமாக வளர்கிறான். அவனோடு இணைந்து அவளும் வளர்ந்திருந்தால், நாட்டின் மீட்பரை உருவாக்கியது தன் பொறுப்புணர்வு என்று பெருமிதம் கொண்டிருப்பாள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. இதோ! அவன் இப்போதே, வயிற்றிலேயே அந்த அடையாளத்தோடு வளர்ந்துகொண்டிருக்கிறான். ஏனெனில், 'கருவறையிலிருந்தே கடவுளுக்கான நாசீராக இருப்பான்' என்றே அவளுக்குச் சொல்லப்பட்டது.

அவள் புரிந்துகொள்ள முயல்கிறாள். இந்த மகன், அவள் நீண்டகாலம் காத்திருந்த அன்பு மகன், அவன் அவளிடம் கொடுக்கப்பட்ட அந்த நொடியே, அவளின் வயிற்றில் முளைவிட ஆரம்பித்துவிட்டான். அவன் முளைவிடத் தொடங்கிய அந்தப் பொழுதே அவனை வெளியிலிருந்து யாரோ ஒருவர் அவனைத் தொட்டுத் தழுவிக்கொண்டார். ஆக! அவளுடைய வயிற்றில் வளர்வது அவளுக்கே அந்நியமானது! அவளுடைய வயிற்றில் அது வளர்ந்தாலும், அது அவளுடைய குழந்தை அல்ல! அவளுடைய குழந்தையாக அது ஒருபோதும் இருக்காது!

இதை அவள் உடனடியாகப் புரிந்துகொள்கிறாளா? அவள் புரிந்துகொண்டாளா என்பது நமக்குத் தெரியாது. கனவுபோல நடந்த அந்த நிகழ்வு அவளை அப்படியே ஆக்கிரமித்துக்கொண்டது. அந்த நொடிப் பொழுதில், அளவில்லா மகிழ்ச்சியும், கறையில்லாப் பெருமையும் கொண்ட அவள், தன் வயிற்றில் பிறக்கும் சிறப்புக்குரிய அந்த மகன் குறித்துப் பூரித்துப் போனாள். ஏனெனில், அவளுக்கு, ஆம்! அவளுக்கு, அவளுடைய குலத்தில் உள்ள வேறெந்தப் பெண்ணுக்கும் அல்ல, அவளுக்கு, 'மலடி' என அழைக்கப்பட்ட அவளுக்கு, குழந்தைப் பேறு இல்லாத அவளுக்கு, அந்தக் குழந்தை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பெண்ணுக்குரிய உள்ளுணர்வுடன் - இது நம்பிக்கை அல்லது சமயம்சார் அறிவு அல்ல – அவளுக்குத் தெரியும். தனக்கு குழந்தை கொடுக்கப்பட்ட அந்த நொடியே அது தன்னிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டது என்பது அவளுக்குத் தெரியும். அவள் தனக்குத்தானே வைத்து, நினைத்து, ரசித்து அனுபவிக்கின்ற நெருக்கமான அந்தப் பொழுது, பெண்மை தாய்மையாகக் கனியும் அந்தப் பொழுது, அவளிடமிருந்து திருடப்பட்டு, பொதுவான செய்தியாக்கப்பட்டு, அந்நியர்களோடு (பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இக்கதையை வாசிக்கும் நாமும் இதில் அடக்கம்) பகிரப்படுகிறது. இந்தக் காரணத்திற்காகவே, தான் அந்நியமாக்கப்பட்ட, தன்னுடைய பெண்மையின் தனிமை நெறிக்கப்பட்ட இந்தக் காரணத்திற்காகவே, அவள் தனக்கு நெருடலாய் இருந்த அச்செய்தியைத் தானே விழுங்கிக்கொள்கிறாள். தன் கணவனோடு பகிர்ந்துகொள்ள மறுக்கிறாள்

இத்தாயின் நிலையில்தான், விவிலியத்தில் நாம் வாசிக்கும் இன்னொரு கதைமாந்தரான அன்னாவும் இருக்கிறாள். கண்ணீரோடு, இறைவேண்டல் செய்கின்ற அன்னா, தனக்கொரு மகன் பிறந்தால் அவனை, நாசீராகக் கடவுளுக்கே அர்ப்பணம் செய்வதாகப் பொருத்தனை செய்கிறாள். பொருத்தனையின் விளைவாக, சாமுவேல் பிறக்கிறான். அவன் பால்குடி பிறந்தவுடன் அவனை எடுத்துக்கொண்டு ஏலியிடம் கொண்டு செல்லும் கட்டாயத்திற்கு ஆளாகிறாள். வியத்தகு முறையில் நடந்தேறிய இந்த இரு கருத்தரிப்புக்களிலும், கடவுள் இவர்களைத் தனக்கெனப் பயன்படுத்திக் கொண்டார் என்ற கோபமே நமக்கு எழுகிறது. இரு தாய்மார்களின் இதய ஏக்கத்தை, மனப் புழுக்கத்தை, உள்ளத்தின் விரக்தியை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் கடவுள். குழந்தைப்பேற்றுக்காக ஏங்கும் இத்தாய்மார்கள் தனக்காக எதையும் செய்வார்கள் என்ற அவர்களுடைய நன்மைத்தனத்தை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை, வெற்றிகொண்டு தன் திட்டத்திற்குள் அவர்களை வளைத்துப்போடுகின்றார் கடவுள். இன்றைய நம் மருத்துவ வார்த்தைகளில் சொன்னால், கடவுளின் மாபெரும் திட்டங்களுக்கான 'வாடகைத் தாய்மார்களாக' தங்களையே 'விரும்பிக்' கையளிக்குமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

சிம்சோனின் தாய் ஒரு வாடகைத்தாய். கடவுளின் நாசீரை, இஸ்ரயேல் மக்களை பெலிஸ்தியர்களிடமிருந்து காப்பாற்றவிருக்கும் மீட்பரைப் பெற்றெடுக்கத் தன் வயிற்றைக் கொடுக்கிறாள். குழந்தையைக் கொடுத்த அந்த நொடியே கடவுள் குழந்தையை பறித்துக்கொள்கிறார்

பாவம் சிம்சோன்! அவன் யாருக்கும் சொந்தமல்ல! இந்த அநாதை உணர்வே வாழ்நாள் முழுவதும் யாரையாவது அரவணைத்துக்கொள்ளுமாறு அவனை உந்தித் தள்ளுகிறது! இந்த அநாதை உணர்வினாலேயே அவன் தாயின் மடிக்கு ஏங்குகிறான்! அவன் தூங்கிய அனைத்து மடிகளுமே அவனுக்கு உரியவை அல்ல! ஏனெனில், அவன் அவர்களுக்கு உரியவன் அல்லன்!

(தொடரும்)


Saturday, August 28, 2021

இதய உருவாக்கம்

ஆண்டின் பொதுக்காலம் 22ஆம் ஞாயிறு

I. இணைச்சட்டம் 4:1-2,6-8 II. யாக்கோபு 1:17-18,21-22,27 III. மாற்கு 7:1-8,14-15,21-23

இதய உருவாக்கம்

'கல்வியின் இதயம் என்பது, இதயத்திற்குக் கல்வி புகட்டுவது' என்பது ஆங்கிலப் பழமொழி. சமயங்களின் விதிமுறைகளின் நோக்கம் இதய உருவாக்கமே என்று முன்மொழிகிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

முதல் மற்றும் இரண்டாவது ஏற்பாடுகளில் 'கட்டளை' என்ற வார்த்தை முதன்மையானதாக இருக்கின்றது. முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். இரண்டாம் ஏற்பாட்டில் இயேசு இரண்டு கட்டளைகளாக இவற்றைச் சுருக்கித் தருவதுடன், புதிய கட்டளை என்று அன்புக் கட்டளை ஒன்றையும் வழங்குகின்றார்.

இன்றைய முதல் வாசகத்தின் சூழல் மோசேயின் இரண்டாம் கட்டளை வழங்குதல். அதாவது, சீனாய் மலையில் ஆண்டவராகிய கடவுள் பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் பயணத்தில் அத்தலைமுறை மறைந்து புதிய தலைமுறை பிறக்கின்றது. புதிய தலைமுறைக்கு ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளையும் விதிமுறைகளையும் நியமங்களையும் மீண்டும் அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் மோசே. மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமையாக்கிக் கொள்ளவும், அதில் நீடித்து வாழவும் வேண்டுமென்றால் இக்கட்டளைகளை அவர்கள் கடைப்பிடித்தல் அவசியம்.

விவிலியத்தில் சட்டம் என்பதை நாம் இன்றைய சட்டம் பற்றிய புரிதலிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக, கொரோனா பெருந்தொற்று தடுப்பு பற்றிய விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் அரசு வெளியிடுகின்றது. அதன்படி, சிலவற்றைத் தடுக்கிறது. சிலவற்றை அனுமதிக்கிறது. அரசுக்கு மக்கள்மேல் உள்ள அக்கறையினால் இதைச் செய்தாலும், அரசுக்கும் மக்களுக்கும் நேரடியான எந்த உறவும் இல்லை. ஆனால், முதல் ஏற்பாட்டில் சட்டங்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றை நாம் உடன்படிக்கையோடு இணைத்துப் பார்க்க வேண்டும். 'நாம் உங்கள் கடவுளாக இருப்போம். நீங்கள் எம் மக்களாக இருப்பீர்கள்' என்று இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்துகொள்கின்ற ஆண்டவராகிய கடவுள், அவர்களைத் தம் உரிமைச் சொத்து என ஆக்கிக்கொள்கின்றார். ஆண்டவர் தருகின்ற உணவும், பாதுகாப்பும், உறவும் உடன்படிக்கை அவர்களுக்கு வழங்குகின்ற உரிமைகள் ஆகும். உரிமைகளின் மறுபக்கமே கடமைகள். இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்க சில கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஆக, கட்டளைகளை மீறுவது என்பது உடன்படிக்கை உறவை மீறுவதற்கு ஒப்பானது.

ஆகையால்தான், 'இஸ்ரயேலரே! கேளுங்கள்!' என்கிறார் மோசே. ஏனெனில், 'கேள்' என்பதற்கு, தமிழில் இருப்பது போலவே, 'செவிகொடு' மற்றும் 'கீழ்ப்படி' என்று இரு பொருள்கள் உண்டு. ஆக, கட்டளைகளைக் கேட்டுக் கீழ்ப்படிதலின் முதல் நோக்கம் உடன்படிக்கை உறவில் நிலைத்து நிற்பது. இதையே, 'மக்களுக்கு நெருங்கிய கடவுளைக் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?' என்று மோசே கேட்கின்றார். இரண்டாவதாக, கட்டளைகள் வழியாக இஸ்ரயேல் மக்கள் ஞானமும் அறிவாற்றலும் பெற்றனர். அறிவாற்றல் என்பது தேர்ந்து தெளிதல். எடுத்துக்காட்டாக, திருமண உறவில் பிரமாணிக்கமாக இருக்கவா அல்லது வேண்டாமா என்ற குழப்பம் வரும்போது, 'விபசாரம் செய்யாதே!' என்ற கட்டளை, அவர்கள் எளிதாகத் தேர்ந்து தெளிய உதவி செய்தது.

இவ்வாறாக, கட்டளைகள், நெறிமுறைகள், மற்றும் நியமங்கள் இஸ்ரயேல் மக்களின் இதயங்களை நெறிப்படுத்தி உடன்படிக்கை உறவில் அவர்கள் நிலைத்திருக்கவும், ஒவ்வொரு சூழலிலும் தேர்ந்து தெளியவும் அவர்களுக்கு உதவி செய்கின்றன.

இரண்டாம் வாசகம் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருத்தூதர் யாக்கோபு எருசலேம் திருஅவையின் தலைவராக விளங்கியவர். இவர் இயேசுவின் சகோதரர். இவருடைய பெயரில் இத்திருமுகம் எழுதப்பட்டுள்ளது எனவும், இத்திருமுகத்தின் ஆசிரியர் ஒரு யூதக் கிறிஸ்தவராக இருந்திருக்கலாம் என்பது பரவலான கருத்து. இணைச்சட்ட நூலில் நாம் காண்பது போலவே, பல வாழ்வியல் பாடங்களும் அறிவுரைகளும் இத்திருமுகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. முதல் ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்கள் தங்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையைக் கடவுளிடமிருந்து கொடையாகப் பெற்றனர். இரண்டாம் ஏற்பாட்டில் புதிய இஸ்ரயேல் மக்கள் பெற்றிருக்கின்ற மீட்பு என்ற கொடை கடவுளிடமிருந்து வருகின்றது என்பதை ஆசிரியர் முதலில் பதிவு செய்கின்றார்: 'நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன.' உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் பெற்றெடுக்கப்பட்ட மக்கள், இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் அல்லாமல், அதன்படி நடக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.

சமய வாழ்வு என்பது இரண்டு நிலைகளில் வெளிப்பட வேண்டும் என ஆசிரியர் அறிவுறுத்துகின்றார்: ஒன்று, 'துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனிக்க வேண்டும்.' அன்றைய கிரேக்க-உரோமை சமூகத்தில் சொத்துரிமையும் சமூக மேனிலையும் ஆண்களை மையப்படுத்தியதாகவே இருந்தது. தந்தையரை இழந்த பிள்ளைகளும், கணவர்களை இழந்த மனைவியிரும் எந்தவொரு உரிமையும் இன்றி இருந்தனர். ஆக, சமூக மற்றும் பொருளாதார ஆதாரத்தை இவர்களுக்கு நம்பிக்கையாளர்கள் வழங்க வேண்டும். அல்லது சமூக நீதியுணர்வு கொண்டிருக்க வேண்டும். இரண்டு, 'உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வது.' தங்களைச் சுற்றியுள்ள புறவினத்து மக்களின் சமய மற்றும் அறநெறி வாழ்வியல் முறையை விட நம்பிக்கையாளர்கள் சிறந்த வாழ்வியல் முறையைக் கொண்டிருக்க வேண்டும்.

ஆக, கிறிஸ்தவர்கள் தாங்கள் பெற்றுள்ள சமய அடையாளம் அல்லது கிறிஸ்தவ நம்பிக்கையைக் கொண்டு, தாங்கள் சமூக நீதியுணர்விலும், மேலான வாழ்வியல் நெறியிலும் வளர்வதே இதய உருவாக்கம்.

இயேசுவுக்கும் அவருடைய சமகாலத்து சமயத் தலைவர்களுக்கும் இடையே எழுந்த உரசல் ஒன்றை நம் கண்முன் கொண்டு வருகின்றது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவின் சமகாலத்துப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் கட்டளைகளை மிகவும் நுணுக்கமாகக் கடைப்பிடித்தனர். கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருக்க வேண்டும் என்ற பேராவலில் கட்டளைகளின் பின்புலத்தில் நிறைய சடங்குகள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு, 'மூதாதையர் மரபு' என்று பெயரிட்டனர். அப்படிப்பட்ட மரபில் ஒன்றுதான் கைகளைக் கழுவுதல், கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்றவை. இயேசுவின் சீடர்கள் அவற்றைப் பொருட்படுத்தவில்லை. தங்களைப் போன்ற போதகர் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட இயேசு அவர்களின் செய்கையைக் கண்டிக்காமல் இருப்பதை அவர்கள் இயேசுவிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இச்சூழலைப் பயன்படுத்திக்கொள்கின்ற இயேசு, கடவுளின் கட்டளையின் நோக்கம் என்ன என்பதையும், அதை எப்படிப் பின்பற்றுவது என்பதையும் அவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

கட்டளைகளைப் பின்பற்றுவதை இயேசு தடை செய்யவில்லை. மாறாக, அதற்கு ஒரு புதிய புரிதலைக் கொடுக்கின்றார். வெளிப்புறச் செயல்பாடுகளும் நடைமுறைகளும் சட்டத்தைப் பின்பற்றுவதற்கான அடையாளங்கள் என்று பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் முன்மொழிந்தபோது, இதய உருவாக்கமே சட்டத்தைப் பின்பற்றுவதன் அடையாளம் என்ற புதிய புரிதலைக் கொடுக்கின்றார். பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வெளிப்புறச் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த போது, இயேசு மேன்மையான அறநெறி வாழ்வுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்.

எசாயாவின் இறைவாக்குப் பகுதியை மேற்கோள் காட்டி அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கின்றார். மனிதக் கட்டளைகளைக் கடவுளின் கோட்பாடுகள் என்று கற்பிக்கும் அவர்களின் ஆன்மிகம் உதட்டளவில் மட்டுமே உள்ளது என்று எச்சரிக்கின்றார். முதல் ஏற்பாட்டில் ஆண்டவராகிய கடவுள் கட்டளைகளை வழங்கியதன் நோக்கம் உடன்படிக்கை உறவை நிலைப்படுத்தவே. கைகளைக் கழுவுவதாலும், பாத்திரங்களைக் கழுவுவதாலும் அந்த உடன்படிக்கை உறவு மேம்படுவதில்லை. மாறாக, தூய்மையான மனச்சான்றும், சமத்துவமான பார்வையுமே உடன்படிக்கை உறவை மேம்படுத்துகின்றன. யூதர்கள்-புறவினத்தார்கள், ஆண்கள்-பெண்கள் என்று மனிதர்களை வெளிப்புறத்தில் தூய்மை-தீட்டு என்று பாகுபடுத்திய பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்திலிருந்த தீட்டு பற்றிக் கண்டுகொள்ளவில்லை. அல்லது அகத்தீட்டு அவர்களிடம் அதிகம் இருந்ததால்தான் மக்களை புறத்தில் தீட்டாக்கிப் பார்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.

ஆக, அவர்கள் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால் இதய உருவாக்கம் நடைபெறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

இவ்வாறாக, முதல் வாசகத்தில், கட்டளைகளைக் கடைப்பிடிப்பது என்பது உடன்படிக்கை உறவை ஆழப்படுத்தி, இஸ்ரயேல் மக்களின் அறிவாற்றலைக் கூர்மைப்படுத்துகின்றது. இவ்வாறாக, இதய உருவாக்கம் நிகழ்கிறது.

இரண்டாம் வாசகத்தில், கிறிஸ்தவர்கள், தங்களுடைய சமய வாழ்வை நீதியான சமூகத்தைக் கட்டியெழுப்புவதிலும், மேன்மையான அறநெறி வாழ்வை வாழ்வதிலும் வெளிப்படுத்த வேண்டும். அதுவே, இதய உருவாக்கம்.

நற்செய்தி வாசகத்தில், கட்டளைகளை நுணுக்கமாகக் கடைப்பிடிக்கின்றோம் என்ற எண்ணத்தில், கடவுள் நம்மிடம் பார்க்கின்ற அகத்தின் தூய்மையைக் கண்டுகொள்ளாமல் விடக் கூடாது. புறத்தூய்மையை விடுத்து, அகத்தைத் தூய்மையாக வைக்க முயற்சி செய்யும்போது இதய உருவாக்கம் நடைபெறுகின்றது.

பெருந்தொற்றுக் காலத்தில், சமூக இடைவெளி, முகக்கவசம், கிருமி நாசினி ஆகியவற்றைப் பயன்படுத்துவது நெறிமுறையில் இருக்கின்றது. இவை சடங்குகள் அல்ல. மாறாக, இவற்றால் தூய்மை பற்றிய உணர்வும், மற்றவர்கள்மேல் நாம் கொள்ள வேண்டிய பொறுப்புணர்வும் தூண்டப்படுகின்றது. இப்படியாக, சமூக வாழ்வு, சமய ஆன்மிகம், அரசியல், பொருளாதாரம், மற்றும் சட்டம் என அனைத்து நிலைகளிலும் விதிமுறைகள் நம் இதயங்களை உருவாக்குவதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. அந்த நோக்கத்தை நாம் மறந்துவிடும்போது, நாம் அகம் நோக்கிப் பார்ப்பதை விடுத்துப் புறம் நோக்கிப் பார்த்து மற்றவர்களைத் தீர்ப்பிடத் தொடங்குகின்றோம்.

இதய உருவாக்கம் என்றால் என்ன?

கடவுளுக்கும் நமக்கும், நமக்கும் பிறருக்கும் உள்ள உறவின் ஒழுங்கமைவே இதய உருவாக்கம். இயேசு சுட்டிக்காட்டுகின்ற 'பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு' ஆகியவை மேற்காணும் உறவின் ஒழுங்கமைவைச் சீர்குலைக்கின்றன.

பல நேரங்களில் இதய உருவாக்கத்தை விடுத்து, மரபு உருவாக்கத்திற்கும், சடங்குகள் உருவாக்கத்திற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். ஏனெனில், அது நமக்கு எளிதாகவும், மற்றவர்களால் பாராட்டப்படக் கூடியதாகவும் இருக்கிறது.

'ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்திடத் தகுதியுள்ளவர் யார்?' என்று திருப்பாடல் ஆசிரியர் கேட்கும் கேள்வியே (காண். திபா 15) நம் உள்ளத்திலும் எழ வேண்டும். அந்தக் கேள்விக்கு விடையளிக்கின்ற கடவுள், 'அவரையும் மற்றவர்களையும் நோக்கிய நேரிய இதயத்தின் உருவாக்கமே தகுதி' என வரையறுக்கின்றார்.

மரபுகள் நம்மைத் தன்மையம் கொண்டதாகவும், தற்பெருமை கொள்பவர்களாகவும், மற்றவர்களைத் தீர்ப்பிடுபவர்களாகவும் மாற்றிவிடுகின்றன.

நாம் வாசிக்கின்ற இறைவார்த்தை, பங்கேற்கின்ற திருப்பலி, மேற்கொள்கின்ற திருப்பயணம், உச்சரிக்கின்ற செபங்கள், உருட்டுகின்ற செபமாலை மணிகள் அனைத்தும் நம் இதய உருவாக்கத்தை நோக்கியதாக இருந்தால் நலம். அவை வெறும் 'மூதாதையர் மரபு அல்லது வெளிப்புறச் சடங்கு' என்று சுருங்கிவிட்டால் நம் இதயம் அவரிடமிருந்து தூரமாகி விட்டது என்று பொருள்.


Friday, August 27, 2021

சிங்கத்தின் தேன் - 3

சிம்சோன் புதிரும் புதினமும்

கணவனுக்குப் புரியுமா?

அதோ! அவள் அனைத்தையும் சொல்லிவிட்டாள். தான் சொன்னது தன் கணவனுக்குப் புரியுமா என்று புரியாமலேயே அனைத்தையும் சொல்லிவிட்டாள். தன் மனத்தில் தான் வைத்திருந்த சுமை அனைத்தையும், தான் கண்ட அரிய காட்சியின் அனைத்துச் செய்திகளையும், ஒரே மூச்சில் அவன் முன் இறக்கிவிட்டு, பெருமூச்சி இரைந்து அமைதி காத்தாள். ஆனால், அவள் பேசி முடித்தவுடன் அவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த எந்தவொரு உணர்வுப் பரிமாற்றத்தையும் விவிலியம் பதிவு செய்யவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்களா என்ற குறிப்பும் கூட இல்லை. இது நமக்கொன்றும் வியப்பல்ல. ஏனெனில், விவிலியம் பெரும்பாலும் தன் கதைமாந்தர்களின் உணர்வுகளைப் பதிவுசெய்வது இல்லை. செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புதான் விவிலியமே தவிர, கதைமாந்தர்களின் உணர்வுப் பரிமாற்றங்களை வாசகர்களின் கற்பனைத்திறத்திற்கு விட்டுவிடுகிறது. கற்பனைத்திறத்தின் ஆர்வத்தில் சில நேரங்களில் அங்கே மிகைப்படுத்துதலும் நடந்துவிடும். இருந்தாலும், நாம் கொஞ்சம் கற்பனையோடு நிகழ்வுகளை வாசிக்கத் துணிவோம். ஏனெனில், நமக்கு முன் விவிலியத்தை வாசித்த அனைவருமே தங்கள் கற்பனைத்திறத்தோடுதான் அதை வாசித்துள்ளார்கள். ஆகையால்தான், இன்றும் விவிலியம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொருளைத் தருகின்றது. ஒவ்வொருவரும் தன்னுடைய நம்பிக்கையின் பின்புலத்தில், தன் முற்சார்பு எண்ணங்களோடு, தன் பின்புலத்தோடு, தன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களோடு விவிலியப் பாடங்களை அணுகி, தான் விரும்பும் பொருளை, அதன் ஒவ்வொரு வார்த்தை மற்றும் அசையின்மேல் சுமத்தி, தனக்கான முடிவை எடுத்துக்கொள்கின்றார். சில நேரங்களில், அப்பொருள் அவருடைய விருப்பமாக இருக்கும். சில நேரங்களில், அவர் தேர்ந்துகொண்ட பொருள் அவரையே ஏமாற்றும்.

ஆகவே, கொஞ்சம் எச்சரிக்கையோடும், கற்பனைத்திறம் தரும் நிறைய ஆர்வத்துடனும், அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின்மேல் நம் சிந்தனையைப் பதிப்போம். அவள் பேச, அவன் கேட்கிறான். பெண்ணுக்கே உரிய இயல்போடு அவள் பேசிக்கொண்டே இருக்க, ஆணுக்கே உரிய இயல்போடு அவன் அமைதியாக கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவள் நீளமாய் அடுக்கிக் கொண்டே போக, அவன் அமைதியாக அவளுடைய உதடுகள் பார்க்கிறான். அவளின் கண்களையும் இடையிடையே பார்த்துக்கொள்கிறான். ஏனெனில், பெண்களின் இதழ்கள் பொய் பேசுவதை அவர்களின் கண்கள் காட்டிக்கொடுத்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். அவளுடைய இதழ்களுக்கும் கண்களுக்கும் இடையே அவனுடைய கண்கள் ஓடிக்கொண்டே இருக்க, அவளுடைய வார்த்தைகளும் அவனுடைய ஓட்டத்தைக் கவனிக்காதவாறு ஓடிக்கொண்டே இருக்கின்றன. அவனுடைய அமைதியில் அவன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகள் எவை? ஆச்சர்யம் கொண்டானா? அக்களித்து எழுந்தானா? 'அப்படியா!' என அவளை ஆரத் தழுவிக்கொண்டானா? அல்லது முன்பின் தெரியாத அந்நியன் ஒருவனிடம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அதையே என்னிடம் வந்து பெருமையாகப் பேசுகிறாள் என்று அவள்மேல் கோபம் கொண்டானா? அவள் தன் கணவனுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவனுடைய கண்களை நேருக்கு நேர் பார்த்தாளா? அல்லது தாழ்வாரத்தின் கூரையில் தன் கண்களைப் பதித்துக் கொண்டாளா? அல்லது குனிந்து தன் பாதங்களைப் பார்த்துக் கொண்டே பேசி முடித்தாளா? தன் கணவனிடமிருந்து – ஏதோ ஒரு காரணத்திற்காக கடவுளின் மனிதர் அவனுக்குத் தோன்றவில்லை – தன் கண்களைத் திருப்பிக் கொண்டாளா? அவர்கள் கேட்ட செய்தி – அவள், தூதரிடம் கேட்டது, அவன், மனைவியிடம் கேட்டது - அவர்கள் இருவரையுமே கொஞ்சம் உலுக்கித்தான் விட்டது. இவ்வளவு நாள்கள் அவள் மலடியாய் இருந்தது பற்றிய நினைவு அவனுக்கு வந்த நொடி, அவள் இப்போது கருத்தரிக்கிறாள் என்ற செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கும். தான் கருத்தரித்திருப்பதைப் பற்றிய நினைவு வந்து அவள் மகிழ்ந்த அந்த நொடி, தன் கணவனின் வலுவின்மையும் இயலாமையும் அவளுடைய உள்ளத்தில் ஓர் இகழ்சிரிப்பை உண்டாக்கியிருக்கும். ஆனால், அமைதியான அந்த சில நிமிடங்களில் அவர்களுக்கு இடையே நிறைய உணர்வுப் பரிமாற்றங்கள் நடந்திருக்கும். 

இந்த உணர்வுப் பரிமாற்றங்கள் பற்றி நாம் சிந்தித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில், அவள் அவனிடம் பேசிய வார்த்தைகளில், அவள் தவறவிட்ட சில தரவுகளைக் கவனிக்க மறந்துவிட வேண்டாம். அவள் தன் கணவனிடம் அனைத்தையும் சொல்வதுபோலத் தெரிந்தாலும், அவள் அனைத்தையும் சொல்லவில்லை. பெண்கள் தாங்கள் விரும்புவதை மட்டுமே சொல்வார்கள்! தாங்கள் கேட்டதை அல்ல! அவளும் அப்படித்தான் செய்கிறாள். முக்கியமான இரண்டு தரவுகளைத் தன் கணவனிடம் சொல்லாமல் மறைக்கின்றாள் அவள். பரபரப்புடனும் கலக்கத்துடனும் அவள் அவனிடம் பேசினாலும், தான் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்பதை அறிந்தவளாகவே இருந்தாள். அவள் மறைத்த முக்கியமான குறிப்புக்கள் இரண்டு: பிறக்காத அந்த மகனின் தலைமேல் சவரக்கத்தி படக்கூடாது என்ற குறிப்பையும், இந்த மகன் 'இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரிடமிருந்து விடுவிக்கத் தொடங்குவான்' என்ற குறிப்பையும் தன் கணவனிடமிருந்து மறைத்துவிடுகிறாள். 

முக்கியமான இந்தக் குறிப்புக்களை அவள் சொல்லத் தவறியது ஏன்?

தான் பெற்ற ஆச்சர்யமான அனுபவத்திலும், அந்த அனுபவம் தந்த ஆர்வத்திலும் குழப்பத்திலும் அவள் சவரக்கத்தி பற்றி முழுமையாக மறந்துவிட்டாள் என்று சொல்லலாமா? அவள் குழப்பத்துடன்தான் இருந்தாள். அல்லது, 'நாசீர்' என்ற வார்த்தையிலேயே, 'சவரக்கத்தி தலையில் படக்கூடாது' என்ற குறிப்பைத் தன் கணவன் அறிந்திருப்பான் என்று அவள் ஊகித்துக்கொண்டாள் என வைத்துக்கொள்வோம். ஏனெனில், ஆண்டவருக்கென நாசீராக ஒருவர் அர்ப்பணிக்கப்படும்போது அவருடைய தலையில் சவரக்கத்தி படக்கூடாது என்பது மோசேயின் நூல்களில் எழுதப்பட்டிருந்தது (காண். எண் 6:1-15). அவள் மறைத்த இரண்டாவது குறிப்பை எப்படிப் புரிந்துகொள்வது? ஒரு பெண் தன் கணவனிடமிருந்து தன் மகனைப் பற்றிய அந்த முக்கியமான குறிப்பை எப்படி மறைக்க முடியும்? அத்தகவலை அவள் தனக்கென எப்படி வைத்துக்கொள்ள இயலும்? தங்களுடைய எதிர்கால மகன் செய்யப்போகும் அந்த அரிய பெரிய செயல் அவனுக்கு நிறைவையும் பெருமையையும் கொடுத்திருக்குமே! மலட்டுத்தன்மையுடன் கடந்த பல ஆண்டுகள் ஏற்படுத்திய கசப்புணர்வை அது துடைத்திருக்குமே!

இதைப் புரிந்துகொள்ளவும், அவளைப் புரிந்துகொள்ளவும், நாம் கொஞ்சம் பின்நோக்கிப் போய், அவளுடைய கண்கள் வழியே கதையை வாசிக்க வேண்டும். விவிலியப் பாடம் அவளுடைய பெயரைக் குறிப்பிடவே இல்லை. அவளுடைய பெயர் யாருக்கும் ஒரு பொருட்டே இல்லை. 'மலடி' என்ற குறிப்பைத் தவிர வேறு எந்தக் குறிப்பும் அவளைப் பற்றி இல்லை. இன்னும் கொடுமையாக, 'அவள் மலடி,' 'அவள் குழந்தை பெறவில்லை' என்று அவளுடைய 'குறை' இரட்டிப்பாக்கிப் பேசப்பட்டது. இந்தக் குறிப்பிலிருந்து, அவள், பிறக்காத தன் குழந்தைக்காக எவ்வளவு ஆண்டுகளாகக் காத்திருந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. தனக்கு ஒரு நாள் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையைக் கூட அவள் இழந்திருக்கலாம். மேலும், 'மலடி' (எபிரேயத்தில், 'அகாரா') என்ற அந்தப் பெயர், மற்றவர்களால் அவளுக்குக் கொடுக்கப்பட்ட பட்டம், 'காரணப் பெயர்.' அவளுடைய குடும்பத்தில், குலத்தில், ஊரில் மற்றவர்கள் அவளை அப்படித்தான் அழைத்தார்கள். ஏன்! ஒருவேளை, அவளுடைய கணவன்கூட, தன் இயலாமையை மறைப்பதற்காகவும், தன் கோபத்தின் வெளிப்பாடாகவும், சில நேரங்களில், அவளை, 'மலடி' என அழைத்திருப்பான். 'ஏய்! மலடி! இங்க வாடி! இதை எடுத்து உள்ளே வை!' என்று மற்றவர்கள்முன் வசைபாடியிருப்பான். 'மலடி' என்பதே தன்னுடைய பெயராய் நிலைத்துவிட்டதை எண்ணி அவள் முதலில் வருந்தியிருப்பாள். பின் இதுவே தன் நியதி என்றும், இதுவே தன் விதி என்றும் தன்மேல் விரும்பி ஏற்று, தானே மௌனமாய்ச் சுமந்துகொண்டிருந்திருப்பாள். தான் தனியே ஓய்ந்திருந்த பொழுதுகளில், தன்னைப் பற்றியும், தன் கையறுநிலை பற்றியும் அவள் எண்ணிய பொழுதெல்லாம், 'மலடி' என்ற அந்த வார்த்தை தேனீயாய் அவளைக் கொட்டியிருக்கும்

இப்போது, இதே 'குழந்தை பெறாத மலடி' திடீரென்று வானதூதர் ஒருவர் தோன்றியதால் அருள் பெறுகிறாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள் என்ற செய்தியை அவரே கொண்டுவருகின்றார். இருந்தாலும், அதே பொழுதில், அவளுடைய நீண்டநாள் கனவு நிறைவேறிய அந்தப் பொழுதில், அவள் அளவில்லா மகிழ்ச்சி அடைந்த அந்தப் பொழுதில், வானதூதர் தொடர்கிறார்: 'ஏனெனில், பையன் பிறப்பிலிருந்து கடவுளின் நாசீராக இருக்க வேண்டும். அவனே இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியர்களின் கைகளிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்.'

அவள் அப்படியே எண்ணங்களுக்கும், உணர்ச்சி ஓட்டங்களுக்கும் கீழே ஆழ்ந்து அமிழ்ந்து போகிறாள்.


(தொடரும்)

Thursday, August 26, 2021

சிங்கத்தின் தேன் - 2

சிம்சோன் புதிரும் புதினமும்

அவள் ஒரு மலடி

இப்படிப்பட்ட சுழற்சியின் நடுவில், தாண் குலத்து ஆண் ஒருவனும், பெண் ஒருத்தியும் வாழ்ந்து வந்தனர். யூதேயாவின் பள்ளத்தாக்குப் பகுதியான சோராவில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். குழாயைத் திறந்தால் இரத்தம் ஓடும் கொடுமையான வன்முறை நிறைந்த பகுதி அது. அந்நாள்களில் இஸ்ரயேலுக்கும் பெலிஸ்தியருக்கும் இடையேயான எல்கையாக இருந்தது அது. இஸ்ரயேல் மக்களைப் பொருத்தவரையில், பெலிஸ்தியரிடமிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் முதல் வரிசை அது. பெலிஸ்தியரைப் பொருத்தவரையில், யூதேயா மலைநாட்டுக்குள் நுழையத் தாக்க வேண்டிய முதல் பகுதி அது. அந்த ஆணின் பெயர் மனோவாகு. பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. அவள் 'ஒரு மலடி, குழந்தை பெறவில்லை' என்ற குறிப்பைத் தவிர, வேறு எந்த அடையாளமும் அவளுக்கு இல்லை. அந்த அடையாளமே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அல்லது அந்த அடையாளமே தனக்குப் போதும் என அவள் நினைத்துக் கொண்டாள். 'அவள் ஒரு மலடி, குழந்தை பெறவில்லை' என்னும் இவ்வார்த்தைகளே போதும்! தன்னுடைய மற்ற துன்பங்களோடு, திருமணமே ஒரு துன்பமாகி, அதையும் மற்ற துன்பங்களோடு தன் முதுகில் தூக்கித் தெரிந்தாள்.

எபிரேய விவிலியம் படிக்கும் அனைவருக்கும், அந்த விவிலியத்தின் 'மலடி குழந்தை பெறுதல்' என்னும் இலக்கியக்கூறு உடனே பிடிபடும். ஏனெனில், எப்போதெல்லாம் அது 'மலடியாயும் குழந்தை பெறாமலும்' இருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், தொடர்ந்து, 'அவள் வியத்தகு முறையில் குழந்தை பெற்றெடுப்பதையும்' குறிப்பிடும். ஒரு நாள், 'இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்து கொண்டிருந்த அந்நாள்களில்' ஒரு நாள், அவள் தனியாக இருந்தபோது, ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றுகிறாள். இந்தப் பெண்ணிண் இன்னொரு விந்தை என்னவென்றால், அவள் பெரும்பாலும் தனியாகவே இருப்பாள். குறிப்பாக, ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றும்போதெல்லாம் அவள் தனியாகவே இருப்பாள். தனிமையை ஏன் அவள் தழுவிக்கொண்டாள்? கணவனோடு இருந்தபோதெல்லாம் தன் மலட்டுத்தன்மையும், குழந்தைபெற இயலாத நிலையும் அவளுக்கு நெருடலாக இருந்ததால், அவனிடமிருந்து தள்ளிச் சென்றாளா? அல்லது அவளின் இருப்பை அவளுடைய இல்லத்தின் சுற்றத்தார் விரும்பவில்லையோ? அல்லது அவள் வயலில் வேலை பார்ப்பவளாக இருந்ததால், இல்லத்தை விட்டுத் தூரமாக வசித்தாளோ? அல்லது யாருடனும் இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லையோ? அல்லது தன்னோடு தான் இருக்கும் நேரத்தை அவள் விரும்பினாளா? அல்லது இப்படி ஒரு நாள் ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றுவார் என அவளுக்குத் தெரிந்திருந்ததா? ஆனால், அவள் தனியே இருந்தாள்.

அவளிடம் வந்த ஆண்டவரின் தூதர், 'நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை. ஆனால், இனி நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்' என்றார். தொடர்ந்து அவளுக்கு நிறைய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுக்கின்றார்: 'இப்பொழுது கவனமாயிரு! திராட்சை இரசமோ, மதுபானமோ அருந்தாதே! தீட்டான எதையும் உண்ணாதே! ஏனெனில், நீ கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுப்பாய். சவரக்கத்தி அவன் தலைமீது படக் கூடாது. ஏனெனில், பையன் பிறப்பிலிருந்தே கடவுளுக்கென 'நாசீர்' ஆக இருப்பான். அவன் இஸ்ரயேல் மக்களைப் பெலிஸ்தியரின் கையிலிருந்து விடுவிக்கத் தொடங்குவான்.'

தன் கணவனிடம் வந்த அவள், 'கடவுளின் மனிதர் ஒருவர் என்னிடம் வந்தார்' என்கிறாள். இவளின் இந்த வார்த்தைகள் வாசகரின் கவனத்தைத் தட்டி எழுப்புகின்றன. ஏனெனில், 'ஆண்டவரின் தூதர் அவளுக்குத் தோன்றினார்' என ஆசிரியர் பதிவு செய்ய, இவளோ, 'கடவுளின் மனிதர்' என்று சொல்வதோடு, 'தோன்றினார்' என்பதை, 'என்னிடம் வந்தார்' என்கிறாள். ஏனெனில், விவிலியத்தில், 'ஆண் பெண்ணிடம் வருவது' என்பதற்கு, 'ஆண் பெண்ணிடம் உடலுறவு கொள்வது' என்பது பொருள்.

அவளுடைய கணவனின் கவனமும் தட்டி எழுப்பப்படுகின்றது. வீட்டின் திண்ணையில், ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த அவனுடைய கவனம், ஓடி வந்து, நின்றும் நிற்காமலும் தன்னிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவியின்மேல் குவிகிறது. பேசிக்கொண்டிருந்தவளே, அவன் எதுவும் கேட்காமலேயே, தொடர்கிறாள்: 'அவரது தோற்றம் கடவுளின் தூதரின் தோற்றம் போல் பெரிதும் அச்சத்திற்குரியதாய் இருந்தது. அவர் எங்கிருந்து வந்தவர் என்று நான் கேட்கவில்லை. அவரும் எனக்குத் தம் பெயரை அறிவிக்கவில்லை.' அவளுடைய வார்த்தைகளுக்கு இடையே, அவள் ஏதோ மன்னிப்புக்காய் இறைஞ்சுவதாயும், தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று முன்னதாகவே கணவனிடம் சரணாகதி ஆவது போலவும் அவள் பேசுவதை, நாம் கண்டுபிடித்துவிட முடியும். வந்திருந்த தூதரின் தோற்றம் அச்சத்திற்குரியதாய் இருந்தால், அவள் எங்கிருந்து வருகிறார் என்றும், அவருடைய பெயர் என்ன என்றும் அவள் கேட்கத் துணியவில்லை.

மனோவாகு எப்படி இதற்கு எதிர்வினை ஆற்றினான்? அவளுடைய வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தில் ஏற்படுத்திய சலனங்கள் எவை? தன் சலனங்களைச் சத்தமில்லாமல் தன் அமைதிக்குள் அவன் அடக்கிக்கொள்வதன் பொருள் என்ன? அல்லது அவன் அரைத் தூக்கத்தில் இருந்ததால் அவள் பேசியது அவனுக்குப் புரியவில்லையா? தன் புருவங்களை மெதுவாக உயர்த்திக் கொண்டு, தன்னை இப்படிப்பட்ட ஒரு குழப்பத்திற்குள் தள்ளிய தன்னுடைய மனைவியின் வார்த்தைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல், அவளிடம் என்ன கேள்வி கேட்பது என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் அந்த நொடியில், அவளே தொடர்கிறாள். அவன் ஏதாவது கேட்பான் என்று அவள் காத்திருக்கவோ, அவனுடைய கேள்வியை அவள் எதிர்பார்க்கவோ இல்லை. வேகமாக, ஆனால், சற்றே கலக்கத்தோடு, புதிய தகவல்களைச் சொல்லத் தொடங்குகிறாள்: 'நீ கருத்தரிப்பாய்!' என்று கடவுளின் மனிதர் சொன்னார். எனக்கு ஒரு மகன் பிறப்பான் என்று வாக்குறுதி தந்த அவர், நான் திராட்சை இரசமோ, மதுபானமோ அருந்தக் கூடாது என்றும், தீட்டானது எதையும் உண்ணக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஏனெனில், பையன் கருவில் உருவான நாள் முதல் இறக்கும் நாள் வரை நாசீராக இருப்பான் ...

(தொடரும்)

Wednesday, August 25, 2021

சிங்கத்தின் தேன் - 1

சிம்சோன் புதிரும் புதினமும்

தேன் பாட்டிலைத் திறக்குமுன்

'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது.

வலியவனிடமிருந்து இனியது வந்தது'

... ... ...

'தேனினும் இனியது எது?

சிங்கத்தினும் வலியது எது?'

(நீதித் தலைவர்கள் 14:14,18)

என் நெடுநாள் கனவு ஒன்றை இன்று நான் நிறைவேற்றத் தொடங்குகிறேன். 

சிம்சோன் பற்றிய ஒரு புதினத்தை தமிழில் எழுதிப் பார்க்கும் என் அவா, எழுதினால்தான் நிறைவேறும் என்பதால் இன்று எழுதத் தொடங்குகிறேன்.

நீதித்தலைவர், வீரர், பலசாலி, தெய்வமகன், சபலன், நாசீர் என பல பெயர்களால் நம் காதுகளில் ஒலித்தாலும் சிம்சோன் இன்றும் ஒரு புதிராகவே இருக்கின்றார். விவிலியம் காட்டும் இக்கதைமாந்தர் பற்றி நிறைய புதினங்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றில், டேவிட் க்ரோஸ்மான் அவர்கள் எபிரேயத்தில் எழுதி, ஸ்டூவர்ட் ஸ்ஷாப்மேன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 'லயன்ஸ் ஹனி: தெ மித் ஆஃப் சாம்சன்' என்னும் நூலைத் தழுவி, நான் என்னுடைய எபிரேய வகுப்புகளில் இக்கதையாடல்கள் பற்றிக் கற்றறிந்ததைக் கலந்து, ஓர் அழகியல் தொடராகப் பதிய விரும்புகிறேன். மேற்குறிப்பிட்ட நூலையும் என் ஆசிரியர்களின் விளக்கக் குறிப்புகளையும் நான் எடுத்தாளுகிறேன் என்பதை இங்கே குறிப்பிட்டு அவர்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகிறேன்.

'ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்!' (சஉ 7:18)

ஒரே நேரத்தில் இரு தூண்களுக்கு இடையே நின்றவர் சிம்சோன்.

ஒரே நேரத்தில் நாசீர் அர்ப்பணத்தையும் அதை மீறுதலையும் பற்றிக்கொண்டவர் அவர்.

ஒரே நேரத்தில் பெலிஸ்தியப் பெண்களையும் தன் இனத்து மக்களையும் அரவணைத்துக்கொண்டவர் அவர்.

சிங்கமும் தேனுமாக அவர் இருந்தாரா?

அல்லது சிங்கத்தின் தேனாக அவர் இருந்தாரா?

கடவுளே சிங்கமா? அவருடைய பிரமாணிக்கமே தேனா?

அல்லது சிம்சோன்தான் சிங்கமும் தேனுமா?

சிங்கத்தின் தேனைச் சுவைக்க முயற்சி செய்வோம்.

முதலில் கதையைத் தொடங்குவோம்.


சிம்சோன் தெலீலாவின் மடியில் படுத்துறங்கும் அந்தப் பொழுது

அந்தப் பொழுதுதான் சிம்சோன் கதையாடலில் அனைவரின் கவனத்தையும் ஒரே புள்ளியில் குவிக்கும் பொழுது! தன்னுடைய வன்மம், வன்முறை, உணர்வுப் பேரார்வம் அனைத்தையும் முடக்கி ஒரு குழந்தைபோல் மடியில் தூங்குகிறார்

இந்தப் பொழுதில்தான் அவருடைய விதியும் முத்திரையிடப்படுகிறது. அவருடைய தலைமுடியை ஒரு கையிலும், சவரக்கத்தியை இன்னொரு கையிலும் தெலீலா ஏந்தியிருக்கும் அந்த நேரத்தில், அந்த அறைக்கு வெளியே பிலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள். விரைவில் அவருடைய கண்கள் பிடுங்கப்பட்டு, அவர் தன்னுடைய ஆற்றல் அனைத்தையும் இழப்பார். விரைவில் சிறையில் அடைக்கப்பட்டு, எதிரிகளின் முன் விளையாட்டுப் பொருளாக நிற்பார். அவருடைய நாள்கள் விரைவில் முடிவுக்கு வரும்

ஆனால், இங்குதான், தன் வாழ்வில் முதன்முறையாக, அமைதியைக் காண்கிறார். இங்கே, துரோகத்தின் நடுவில் - இதற்காகத்தான் இவ்வளவு நாள்கள் காத்திருந்தார் - இக்கொடிய துரோகத்தின் நடுவில்தான் அவர் நிறைவான அமைதியைப் பெறுவார். தன்னிடமிருந்தும், புயலடிக்கும் தன் வாழ்வு என்ற நாடகத்திலிருந்தும் அவர் விடுவிக்கப்படுவார்.

ஒருவேளை சிம்சோன் தெலீலாவைக் காதலிக்கவில்லை என்றால்,

அவளின் மடியில் அவர் தூங்கவில்லை என்றால்,

அவரின் தலைமுடி மழிக்கப்படவில்லை என்றால்,

அவரின் கண்கள் பிடுங்கப்படவில்லை என்றால்,

அவர் தூண்கள் நடுவே நிறுத்தப்படவில்லை என்றால்,

'என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்' எனச் சொல்லி அவர் தன்னை மாய்த்துக்கொல்லவில்லை என்றால்,

சிம்சோனுடன் கடவுள், அவரின் தாயின் தொப்புள்கொடி வழியாகக் கட்டியிருந்த நாசீர் என்னும் அர்ப்பணத்தின் முடிச்சு அவிழ்ந்துபோகவில்லை என்றால்,

என்ன ஆகியிருக்கும்?

தெலீலா என்ற முள்ளின்மேல் சிம்சோன் என்ற பறவை சாகும் வரை மோதிக்கொள்ளும் அவசியம் ஏன்?

பெலிஸ்தியரிடமிருந்து தன் மக்களின் உயிரைக் காக்க வேண்டிய சிம்சோன், அவர்களோடு தன் உயிரை மாய்த்துக்கொண்டது ஏன்?

ஆண்டவராகிய கடவுள் என்னும் சிங்கம், தானாகத் தேர்ந்து தயாரித்த சிம்சோன் என்னும் தேன் கொட்டப்பட்டதா? கொண்டாடப்பட்டதா?

பிரிவு 1

அந்த நாள்களில், ஏறக்குறைய கி.மு. 12ஆம் நூற்றாண்டின் இறுதியில், 11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இஸ்ரயேலில் அரசன் யாரும் இல்லை. அதிகார மையம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவரும் தன் பார்வையில் சரி எனப் பட்டதைச் செய்துகொண்டிருந்தனர். மிதியான், கானான், மோவாபு, அம்மோன், மற்றும் பெலிஸ்தியா போன்ற அண்டை நாடுகள், எபிரேய குலங்களின்மேல் அவ்வப்போது படையெடுத்து, வெற்றி கொண்டு, தங்களுடைய ஆதிக்கத்தை அவர்கள்மேல் செலுத்தினர். அந்த நாள்களில் அக்குலங்களிலிருந்து ஒருவர் எழுவார். அல்லது கடவுள் ஒருவரை எழுப்புவார். அவர் தன்னுடைய குலத்தை, தனியாகவோ, அல்லது மற்ற குலங்களின் துணையாகவோ, அண்டை நாடுகளின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுப்பார். அவர் வெற்றி பெற்றால், அவரே அக்குலத்தின் நீதித்தலைவராக இருப்பார். எபிரேயத்தில் 'ஷோஃபெட்' என அழைக்கப்படுவார். கிதியோன், இப்தா, கேராவின் மகன் ஏகூது, அனாத்தின் மகன் சம்கார், இலப்பிதோத்தின் மனைவி தெபோரோ போன்றவர்கள் அப்படித்தான் நீதித்தலைவர்களாக இருந்தனர். இவ்வாறாக, இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திற்கும் விடுதலைக்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தனர். நீதித்தலைவர்கள் நூல் முழுவதுமே, பாவத்திற்கும் மனமாற்றத்திற்கும் இடையே அவர்கள் ஆடிய ஊசலாட்டம் பற்றித்தான் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வட்டம் போலச் சுற்றிக்கொண்டே இருக்கும். முதலில், அவர்கள் சிலைகளை வழிபடுவார்கள், கம்பங்களுடன் விபச்சாரம் செய்வார். அவர்களைத் தண்டிக்கும் பொருட்டு, கடவுள் அவர்களுக்கு அருகில் இருக்கின்ற ஒரு எதிரி நாட்டைத் தூண்டி விடுவார். எதிரியின் கொடுமையைத் தாங்க முடியாமல் மக்கள் ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்புவர். அவர்களின் குரலுக்குச் செவிகொடுக்கின்ற ஆண்டவர், அவர்கள் நடுவே ஒருவரை எழுப்ப, அவர் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுவார். எதிரிகள் அழிக்கப்பட்டு, நிலம் சிறிது காலம் அமைதியில் இளைப்பாறும். மீண்டும் இஸ்ரயேல் மக்கள், ஆண்டவர் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்வர். எதிரிகளின் கைகளில் மீண்டும் அவர்களை ஆண்டவர் விற்றுவிடுவார். இப்படியே சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும்.

(தொடரும்)


Tuesday, August 24, 2021

வெள்ளையடித்த கல்லறைகள்

இன்றைய (25 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 23:27-32)

வெள்ளையடித்த கல்லறைகள்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மீண்டும் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைச் சாடுகின்றார். இயேசுவின் காலத்துக்குப் பின்னர் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் தொடக்கத் திருஅவை நம்பிக்கையாளர்களைப் பல நிலைகளில் துன்புறுத்தினர். இதன் பின்புலத்தில்தான் இயேசுவின் சாடுதலை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

'வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்' என்ற சொல்லாடலை நாம் இரு நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, உள்ளே ஒன்றும் வெளியே இன்னொன்றுமாக இருப்பது. இரண்டு, வெளியே தூய்மையாக இருந்துகொண்டு உள்ளே அழுக்குகளால் நிறைந்திருப்பது.

முதல் வாசகத்தில் (காண். 1 தெச 2:9-13) பவுல் தன் நேர்மையான வாழ்வு பற்றி தெசலோனிக்க நகர் மக்களிடம் எடுத்துச் சொல்கின்றார். உள் ஒன்றும், புறம் வேறும் என்ற மனநிலை பவுலிடம் இல்லை.


Sunday, August 22, 2021

குருட்டு வழிகாட்டிகளே

இன்றைய (23 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 23:13-22)

குருட்டு வழிகாட்டிகளே

இன்று நாம் பேசும் அனைத்து வார்த்தைகளும் 'பொலிட்டிக்கலி கரெக்ட்டாக' இருக்க வேண்டும். 'குருட்டு வழிகாட்டிகள்' என்று சொல்வது கூட பார்வையற்றவர்களைத் தவறாகப் பேசுவது போல ஆகிவிடும். 'கண்களைக் கட்டிக்கொண்டு வழிகாட்டுவது போல' அல்லது 'பார்வையற்றோர் வழிகாட்ட முயற்சி செய்வது போல' என்றுதான் நாம் சொல்ல வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மறைநூல் அறிஞரையும், பரிசேயரும், 'குருட்டு வழிகாட்டிகளே' என்று சாடுகின்றார். 'வழியும் தெரியாமல் வழி தெரிந்த போல' வழிகாட்டுவதும், அல்லது 'வழி தெரிந்தும் நடக்க இயலாமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பதுமே' இந்த நிலை.

இது மற்றவர்களுக்கு வழிகாட்டும் நிலையிலும், நம் வாழ்க்கையை நாம் மேலாண்மை செய்யும் நிலையிலும் இது நேரலாம்.

இலக்கு தெளிவில்லாமல் நாம் நகரும் ஒவ்வொரு நொடியும் தொடங்கிய இடத்திலேயேதான் நிற்கின்றோம்.


Saturday, August 21, 2021

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல்

ஆண்டின் பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

I. யோசுவா 24:1-2,15-17,18 II. எபேசியர் 5:21-32 III. யோவான் 6:60-69

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல்

'தெரிவு' (சாய்ஸ்) என்ற ஒற்றைச் சொல் நம்மை மற்ற உயிர்களிலிருந்து வேறுபடுத்துகிறது. 'எனக்கு எது வேண்டும்' என்பதை நான் என் உணர்வுத்தூண்டுதலால் அல்லாமல், அறிவுப்பூர்வமாக ஆய்ந்து தேர்ந்துகொள்ள முடியும். இதுவே மனுக்குலம் பெற்றிருக்கின்ற விருப்புரிமை. இந்த விருப்புரிமையின் அடிப்படையில் நாம் அனைத்திலும் இறைவனை மட்டுமே தெரிந்துகொண்டால் வாழ்க்கை எத்துணை இனிமையாக இருக்கும் என்று, இறைவனைத் தெரிந்துகொள்ள நம்மை அழைக்கிறது இன்றைய இறைவார்த்தை வழிபாடு.

இன்றைய முதல் வாசகத்தில் யோசுவா செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். உடன்படிக்கையைப் புதுப்பிக்கும் முன் மக்களைத் தூய்மைப்படுத்தும் சடங்கு நடக்கிறது. யோசுவா மோசேயின் சாயலாக இரு நிலைகளில் முன்மொழியப்படுகின்றார்: முதலில், மோசே இஸ்ரயேல் மக்களைப் பாதம் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்தது போல, யோசுவா அவர்களைப் பாதம் நனையாமல் யோர்தான் ஆற்றைக் கடக்கச் செய்கின்றார். இரண்டாவதாக, மோசே ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையை நிறைவேற்றியது போல, செக்கேமில் ஆண்டவராகிய கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் நடுவே நின்று உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்றார். மோசே உடன்படிக்கை செய்யும்போது புறத்தூய்மையை வலியுறுத்துகின்றார். ஆனால், யோசுவா அகத்தூய்மையை வலியுறுத்துகின்றார்.

சிலைவழிபாட்டிலிருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்பதே யோசுவாவின் அழைப்பு. லாபான் வீட்டிலிருந்து தப்பி ஓடி வருகின்றார் யாக்கோபு. அவரை விரட்டி வருகின்ற லாபான் தன் வீட்டுச் சிலைகளை அவர் தூக்கி வந்ததாகக் குற்றம் சுமத்துகிறார். வீட்டுச் சிலைகளைத் தூக்கி வந்தது ராகேல். சிலைகள் வைத்திருந்த சாக்கின்மேல் அமர்ந்துகொண்டு தனக்கு மாதவிலக்கு உள்ளதாகச் சொல்லி, அந்தச் சாக்கையும் சிலைகளையும் காப்பாற்றுகின்றாள். அன்று தொடங்கி இஸ்ரயேல் மக்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்படும் வரை சிலைகள் அவர்களுக்குப் பெரும் கண்ணியாக இருக்கின்றன. இஸ்ரயேல் மக்கள் யாவே என்ற ஏகக்கடவுளை வழிபடுமுன் ஏகப்பட்ட கடவுளர் நம்பிக்கையே கொண்டிருந்தனர். அவர்களால் மற்ற தெய்வங்களை எளிதாக விட இயலவில்லை. குறிப்பாக கானான் நாட்டில் விளங்கிய வளமை வழிபாடு அவர்களை மிகவும் ஈர்த்தது. நிலத்தின் வளமைக்கும், கால்நடைகளின் பலுகுதலுக்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் எனக் கானானியர் கடவுளர்களை வைத்திருந்தனர். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் தங்கத் தொடங்கியபோது விவசாய சமூகமாக உருவெடுத்ததால் மற்றவர்களின் வளமை வழிபாட்டிலும் பங்கேற்பதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. இந்தப் பின்புலத்தில்தான், 'யாருக்கு ஊழியம் புரிவீர்கள்?' என்று கேட்கின்றார் யோசுவா.

'ஊழியம் புரிதல்' என்பது விடுதலைப் பயண நூலில் மிக முக்கியமான வார்த்தை. ஏனெனில், எகிப்தில் பாரவோனுக்கு ஊழியம் புரிந்துகொண்டிருந்த மக்களைத் தனக்கு ஊழியம் புரியமாறு அழைத்துச் செல்கின்றார் ஆண்டவராகிய கடவுள். ஆண்டவருக்கு ஊழியம் புரிவதை விடுத்து மற்ற தெய்வங்களுக்கு ஊழியம் புரிவது 'பிரமாணிக்கமின்மை' அல்லது 'விபசாரம் செய்தல்' என்ற பெரிய பாவமாகக் கருதப்பட்டது. இஸ்ரயேல் மக்கள் இரு நிலைகளில் உந்தப்பட்டு, 'நாங்கள் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று சொல்கின்றனர்: முதலில், தங்கள் தலைவராகிய யோசுவாவின் முன்மாதிரி. யோசுவா இங்கே ஒரு நல்ல தலைவராக இருக்கிறார். 'நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் புரிவோம்' என்று நிபந்தனைகள் எதுவுமின்றி முன்மொழிகின்றார். இரண்டாவது, இஸ்ரயேல் மக்கள் தங்கள் ஆண்டவராகிய கடவுள் எகிப்தில் செய்த வியத்தகு அடையாளங்களை எண்ணிப்பார்க்கின்றனர். ஏறக்குறைய இப்போது இரண்டாவது அல்லது மூன்றாவது தலைமுறையினர் இங்கே நிற்கின்றனர். தங்கள் மூதாதையர் தங்களுக்குச் சொன்னவற்றை நினைவுகூர்கின்றனர்.

ஆக, முதல் வாசகத்தில் தங்கள் சிலைகளை விடுத்து ஆண்டவராகிய கடவுளைத் தெரிந்துகொள்கின்றனர் இஸ்ரயேல் மக்கள்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர திருஅவைக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர் (பவுல்), புதிய இயல்பு, ஒளிபெற்ற வாழ்க்கை ஆகியவை பற்றிய கருத்துருக்களை முன்வைத்த பின்னர், குடும்ப உறவு பற்றிப் பேசுகின்றார். இது ஒரே நேரத்தில் குடும்ப வாழ்வு பற்றிய அறநெறிப் போதனையாகவும், திருஅவையியல் பற்றிய கருதுகோளாகவும் இருக்கிறது.

'திருமணமான பெண்களே, கணவருக்குப் பணிந்திருங்கள் ... திருமணமான ஆண்களே உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள்' என்ற போதனை பலருக்கு நெருடல் தருகின்ற பகுதியாக இருக்கின்றது. பெண்கள் ஏன் பணிந்திருக்க வேண்டும்? இது ஆணாதிக்க சிந்தனை என்று சில பெண்ணியவாதிகள் தங்கள் எதிர்ப்பைப் பல தளங்களில் பதிவு செய்கின்றனர். உண்மையில் இது பெண்ணடிமைத்தன அல்ல, பெண் விடுதலை சிந்தனையே. எப்படி? இந்தப் பாடத்தின் பின்புலத்தில் இருப்பது கிரேக்க-உரோமை குடும்ப வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையின்படி, 'பெண்' அல்லது 'மனைவி' என்பவர் கணவருடைய ஒரு உடைமை. அதாவது, கணவன் தனக்கென்று ஆடு, மாடு, வீடு, வைத்திருப்பதுபோல, 'பெண்' அல்லது 'மனைவியை' வைத்திருப்பார். மனைவிக்கென்று எந்தச் சொத்துரிமையும் கிடையாது. ஆக, பொருள் போலக் கருதப்பட்டு பயன்படுத்தப்பட்ட பெண்ணை, ஆள் போலக் கருதி அன்பு செய்யுமாறு பணிக்கின்றார் பவுல். தன்னை அன்பு செய்கிற ஆணின்மேல் உரிமை கொண்டாடும் பெண், அந்த உரிமையை மதிப்பு என்று பதிலிறுப்பு செய்ய வேண்டும். ஆக, ஆணின் உரிமை அன்பு என்றும், பெண்ணின் உரிமை பணிவு என்றும் வெளிப்படுகின்றது.

இந்த உறவுக்கு உதாரணமாக, கிறிஸ்துவைக் கணவர் என்றும், திருச்சபையை மனைவி என்றும் உருவகிக்கின்றார் ஆசிரியர். கிறிஸ்து திருச்சபைக்காகத் தன்னையே ஒப்புவிக்கின்றார். அத்தகையே தற்கையளிப்பை கணவர் மனைவிக்குத் தர வேண்டும். மேலும், அத்திருச்சபை கறைதிறையோ, வேறு எக்குறையோ இல்லாமல் இருப்பதுபோல மனைவியும் பிளவுபடா உள்ளத்துடன் தன் கணவருக்குப் பணிந்திருக்க வேண்டும். கணவரின் உடைமை அல்ல மனைவி. மாறாக, அவருடைய உடல் என்று வரையறுக்கின்ற ஆசிரியர், இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது என்று வியக்கின்றார்.

ஆக, திருச்சபையின் நம்பிக்கையாளர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கிறார்கள் என்றால், ஆண்டவரின் தற்கையளிப்பை உணர்கிறார்கள் என்றால், அதை அவர்கள் தங்கள் குடும்ப உறவில் காட்ட வேண்டும்.

நற்செய்தி வாசகத்தில், நாம் கடந்த நான்கு வாரங்களாகக் கேட்டு வந்த, 'வாழ்வுதரும் உணவு நானே' என்னும் இயேசுவின் பேருரை நிறைவுக்கு வருகின்றது. பேருரையின் இறுதியில், கேட்டுக்கொண்டிருந்த மக்கள் முடிவெடுக்க வேண்டும். மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் இறுதியில், 'இருவகை அடித்தளங்கள்' உருவகத்தின் வழியாக, தன் சீடர்கள் எவ்வகையான அடித்தளத்தைத் தெரிவு செய்கிறார்கள் என்ற கேள்வியை விடுக்கிறார் இயேசு. அவ்வாறே, இங்கும் தன் சீடர்கள் தன்னைத் தெரிவு செய்கிறார்களா? இல்லையா? என்ற கேள்வியை முன்வைக்கின்றார் இயேசு. 'வாழ்வுதரும் உணவு' பேருரையின் தொடக்கத்தில் ஐயாயிரம் பேர் இருந்தனர். பின்னர் அது ஒரு சிறிய கூட்டமாக மாறுகிறது. பின் தொழுகைக்கூடத்தில் உள்ள சிறிய குழுவாக மாறுகிறது. தொடர்ந்து இயேசுவின் சீடர்கள். இறுதியில் பன்னிரு திருத்தூதர்களுடன் பேருரை நிறைவு பெறுகிறது. அகன்ற இடத்தில் தொடங்கும் உரை, குறுகிய இடத்தில் முடிகிறது. அப்படி முடியும் உரை வாசகரின் உள்ளம் நோக்கி நகர்கிறது. அதாவது, தனது வாசிப்பின் இறுதியில் வாசகர், இயேசுவைத் தெரிந்துகொள்கிறாரா அல்லது இல்லையா என்பதை அவரே முடிவுசெய்ய வேண்டும்.

இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்ற சீடர்கள், 'இதை ஏற்றுக்கொள்வது கடினம். இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?' என்று இடறல்படுகின்றனர். மூன்று காரணங்களுக்காக இயேசுவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை: ஒன்று, நாசரேத்தூரில் பிறந்த ஒருவர் தன்னையே எப்படி வானினின்று இறங்கி வந்த உணவு என்று சொல்ல முடியும்? என்ற இடறல். இரண்டு, இயேசுவைப் பின்பற்றுவதால் உடனடி பரிசு அல்லது வெகுமதி என்று எதுவும் இல்லை. மூன்று, அவர்கள் இயேசுவின்மேல் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் ஏமாற்றங்களாக முடிகின்றன. 'வாழ்வு தருவது தூய ஆவியே. ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது' என்ற மிக அழகான வாக்கியத்தை மொழிகின்றார் இயேசு. அதாவது, காணக்கூடிய இயல்பு மறையக்கூடியது. காணாதது நிலையானது. அவர்கள் இயேசுவின் உடலை மட்டுமே கண்டு, அந்த உடலின் சதையை நினைத்து இடறல்பட்டனர். 'வார்த்தை மனுவுருவானர்' என்பதை அவர்கள் காணவில்லை.

ஆனால், பேதுரு அதைக் கண்டுகொள்கின்றார். 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று இயேசு பன்னிருவரைக் கேட்டவுடன், 'ஆண்டவரே, நாங்கள் யாரிடம் போவோம்?' என்று தன் கேள்வியால் விடை அளிக்கின்றார் பேதுரு. மேலும், 'வாழ்வுதரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன' என்கின்றார். ஆக, பேதுரு இயேசுவில் வார்த்தையைக் காண்கின்றார். வார்த்தை மனுவுருவாயிருப்பதைக் காண்கின்றார். தொடர்ந்து, 'நீரே கடவுளின் தூயவர் அல்லது கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்ற நம்பிக்கை அறிக்கை செய்கின்றார்.

ஆக, இயேசுவின் போதனை கேட்டு இடறல்பட்டு, அவரை விட்டு விலகிய சீடர்கள் ஒரு பக்கம். இயேசுவை மட்டுமே தெரிந்துகொண்ட பன்னிருவர் இன்னொரு பக்கம்.

இவ்வாறாக,

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் சிலைகளை விடுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில், எபேசு நகர மக்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். தங்கள் குடும்ப உறவுகளில் உள்ள வேறுபாட்டையும், மேட்டிமை உணர்வையும் களைகின்றனர்.

நற்செய்தி வாசகத்தில், பன்னிரு திருத்தூதர்கள் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றனர். அவரிடம் வாழ்வையும் தூய்மையையும் கண்டுகொள்கின்றனர்.

இன்று நாம் ஆண்டவரைத் தெரிந்துகொள்கின்றோமா?

நம் தெரிவு வழக்கமாக மூன்று விதிமுறைகளால் கட்டப்படுகின்றது: (அ) இன்பம்-வலி. இன்பமான ஒன்றைத் தெரிவு செய்து துன்பமான மற்றொன்றை விட்டுவிடுவது. (ஆ) நன்மை-தீமை. நன்மையானதைப் பற்றிக்கொண்டு தீமையானதை விட்டுவிடுவது. (இ) பரிசு-தண்டனை. நமக்குப் பரிசாக உள்ளதை எடுத்துக்கொண்டு, தண்டனை போல இருப்பதை விட்டுவிடுவது.

கடவுளைத் தெரிந்துகொள்தல் வலி தருவதாலும், உடனடி பரிவு எதுவும் இல்லாததாலும் அவரை நாம் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம். அல்லது தெரிந்துகொள்வதைத் தள்ளி வைக்கின்றோம். நன்மை-தீமை என்ற தளத்தில் இயங்கும்போது மட்டுமே நம்மால் அவரைத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நாம் நம்மை அறியாமல் தூக்கி வருகின்ற குட்டி தெய்வங்கள், நம் உள்ளத்தில் உள்ள மேட்டிமை உணர்வு, அல்லது கடவுள் பற்றிய முற்சார்பு எண்ணம் ஆகியவற்றால் நாம் அவரைத் தெரிந்துகொள்ள மறுக்கின்றோம்.

தெரிவு செய்தல் என்பது மூன்று நிலைகளில் நடக்க வேண்டும்: ஒன்று, நம் முன் இருப்பவற்றைச் சீர்தூக்கிப் பார்ப்பது. இரண்டு, அல்லவை விடுத்து நல்லவை பற்றுவது. மூன்று, அந்தப் பற்றுதலில் நிலைத்து நிற்பது.

தெரிவுகளே நமக்கு ஆற்றல் தருகின்றன. தெரிவுகள் பலவாக இருக்கும்போது நம் ஆற்றல் சிதைந்து போகிறது. ஒன்றைத் தெரிந்தால், நன்றைத் தெரிந்தால் ஆற்றல் சிதைவு மறைந்து பொறுப்புணர்வு கூடும். நம் தெரிவுக்கு நாமே பொறுப்பு. அந்தப் பொறுப்புணர்வே நமக்கு ஆற்றல் தருகிறது. அந்த ஆற்றல் நம்மை தலைசிறந்த மனிதர்களாக வாழவும், மகிழ்ச்சியுடனும் அமைதியுடனும் ஒருவர் மற்றவருடன் இணைந்து வாழவும் தூண்டுகிறது.

ஆண்டவரைத் தெரிந்துகொள்தல் என்பது நம்மையே தெரிந்துகொள்ளும் புதுப்பிறப்பு போன்றது. அகுஸ்தினார் ஆண்டவரைத் தெரிந்துகொண்ட அன்று தான் தன்னையே தெரிந்துகொண்டார்.

Friday, August 20, 2021

தொண்டராக இருத்தல்

இன்றைய (21 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 23:1-2)

தொண்டராக இருத்தல்

மேலாண்மையியல் எழுத்தாளர் திரு. ராபின் ஷர்மா, மேலாளராக இருப்பதை விட பணியாளராக இருப்பது நல்லது என்று அலுவலக மேலாண்மையில் கற்பிக்கின்றார். அதாவது, ஓர் அலுவலகத்தின் நெளிவு சுளிவுகளை அறிந்துகொள்ள வேண்டுமெனில், அங்கு பணியாற்றும் மேலாளர்களை விட, பணியாளர்களைக் கேட்டால் நல்லது என்றும், பணியாளர்களின் பார்வையில் அலுவலகச் செயல்பாடுகளைப் பார்த்தால் நிறைய ஆதாரங்களைச் சேகரிக்கலாம் என்றும் சொல்கின்றார்.

ஒரு மேலாளர் தனக்கு உள்ள நிலையில்தான் யோசிப்பார். எடுத்துக்காட்டாக, அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடத்துகிறோம் என வைத்துக்கொள்வோம். அந்தக் கூட்டத்திற்கு சிற்றுண்டி ஏற்பாடு செய்ய வேண்டும். மேலாளர் தனக்குத் தெரிந்த பெரிய அளவில்தான் அதற்கான ஏற்பாட்டை யோசிப்பார். ஆனால், கடைநிலைப் பணியாளர் தன் நிதிக்கு ஏற்றாற் போல திட்டமிட்டு சிற்றுண்டி உட்கொள்வார். அவரிடம் கேட்டால், மிக மலிவான விலையில் சிற்றுண்டியை ஏற்பாடு செய்துவிடுவார். சிற்றுண்டி ஒன்றுதான்.

மேலும், கடைநிலைப் பணியாளரோடு தன்னையே ஒன்றித்துக்கொள்ளும் தலைவரே சிறந்த தலைவராக இருக்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்' என்கிறார் இயேசு.

இதற்கு மாறாக, பரிசேயர்களை எடுத்துக்காட்டிச் சொல்கின்ற இயேசு அவர்கள் இருநிலைகளில் தவறுவதாகச் சுட்டிக் காட்டுகின்றார்: ஒன்று, தாங்கள் சொல்வதை அவர்கள் செய்வதில்லை. இரண்டு, தங்களையே அனைத்திலும் முன்னிலைப்படுத்துகின்றனர். தங்களுக்கென்று தலைப்புகளையும் பெயர்களையும் விரும்பிப் பெற்றுக்கொள்கின்றனர்.

தங்கள் பெயர்களை மறைத்து இடத்திற்கு அழகு சேர்ப்பவர்கள் பணியாளர்கள்.

ஓர் இல்லத்திற்கு வருகின்ற நபர் அங்கிருக்கும் உணவு நன்றாக இருப்பது பற்றி இல்லத்தலைவரைப் பாராட்டுகின்றார். ஆனால், பாராட்டுக்கு உரியவர் தலைவர் அல்லர். மாறாக, அடுப்பின் வெப்பம் பொறுத்து சமையல் செய்தவரே. அவர் தன் செயலில் சரியாக இருக்கிறார். அடுப்பின் புகை போலவே அவருடைய உழைப்பும் பல நேரங்களில் மறக்கப்படுகிறது.

தங்களையே மறைத்துக்கொண்டு நம் நலனுக்காகப் பாடுபடும் அனைவரையும் எண்ணிப்பார்த்தல் நலம்.

Thursday, August 19, 2021

பெத்லகேமில் பஞ்சம்

இன்றைய (20 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (ரூத்து 1)

பெத்லகேமில் பஞ்சம்

இன்றைய முதல் வாசகம் ரூத்து நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 'அந்நாள்களில் இஸ்ரயேலில் அரசர் இல்லை. ஒவ்வொருவரும் தம் கண்களில் சரியெனப்பட்டதைச் செய்தனர்' என்ற வரியோடு நீதித்தலைவர்கள் நூல் முடிவடைகிறது. யாரும் ஆண்டவருடைய கண்களில் சரி எனப் படுவதைச் செய்ய முயற்சி செய்யவில்லை.

விளைவு, அப்பத்தின் வீடு என்றழைக்கப்பட்ட பெத்லகேமில் பஞ்சம் வருகிறது.

பஞ்சம் பிழைப்பதற்காக அவ்வூரைச் சார்ந்த ஒருவர் தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக்கொண்டு புறவினத்து நாடான மோவாபுக்குச் செல்கின்றார். மோவாபு நாட்டைச் சார்ந்த பெண்கள் இருவரைத் தன் மைந்தருக்கு மணமுடிக்கின்றார். அவர்களுள் இளையவர் ரூத்து.

இந்த ரூத்து தாவீது அரசரின் தாத்தாவைப் பெற்றெடுக்கின்றார். புறவினத்துப் பெண் ஒருவர் இஸ்ரயேல் மக்களின் மீட்பு வரலாற்றுக்குள் நுழைகின்றார்.

ஆண்டவர் தம் மக்களைக் கருணையுடன் கண்ணோக்கினார் எனக் கேள்வியுறுகின்ற நகோமி தன் கணவரை இழந்தவராய், தன் மகன்கள் இருவரையும் இழந்தவராய், தனியாக பெத்லகேம் வரை விழைகின்றார். மூத்த மருமகள் தன் வழியே செல்கின்றாள். ரூத்து நகோமியைப் பற்றிக்கொள்கின்றாள்.

'உன் கடவுளே என் கடவுள்' என்று ரூத்து இஸ்ரயேலின் கடவுளை ஏற்றுக்கொள்கின்றார்.

இரு பெண்கள், இரு கைம்பெண்கள் பெத்லகேம் நகருக்குள் நுழையும் வேளையில் வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

இனி அங்கு வளமைதான்.

வறுமையால் நாட்டை விட்டுப் புறப்பட்டவர்கள், வளமையில் மீண்டும் வந்து சேர்கின்றனர். ஆண்டவரின் கருணை வளமை தருகின்றது.

நற்செய்தி வாசகத்தில் இறையன்பு மற்றும் பிறரன்பு பற்றிய கட்டளைகள் முதன்மையான கட்டளைகளாக முன்வைக்கப்படுகின்றன. ரூத்து தன் ஒற்றைச் சொல்லால் இஸ்ரயேலின் இறைவனையும் தன் மாமியார் ரூத்தையும் பற்றிக்கொள்கின்றார்.

Wednesday, August 18, 2021

அதைப் பொருட்படுத்தவில்லை

இன்றைய (19 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 22:1-14)

அதைப் பொருட்படுத்தவில்லை

நாம் வளர்கிறோம் என்பதற்கான முக்கியமான அடையாளம் நம் வார்த்தையைக் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ண முதிர்ச்சியே. சிறு வயதில் அல்லது இளம் வயதில் நாம் நிறையப் பேசுகிறோம். ஆனால், நாம் வளர வளர வார்த்தைகள் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்கின்றோம்.

வார்த்தைகளின் முக்கியத்துவம் தெரியாமல் பேசிவிட்டு பின்பு கஷ்டப்படுகின்ற இருவரை இன்றைய வாசகங்களில் நாம் பார்க்கின்றோம்.

முதல் வாசகத்தில், இப்தா என்ற நீதித்தலைவரை நாம் எதிர்கொள்கின்றோம். இவர் ஒரு விலைமாதுவின் மகன். ஆணின் உதவி இல்லாமல் வெறும் பெண் மட்டுமே குழந்தை வளர்க்கும் இடத்தில், குழந்தைகள் இயல்பாகவே அதிகம் பேசுவார்கள். ஏனெனில் வார்த்தை அல்லது பேச்சு என்பது பெண்ணின் முதல் ஆயுதம் (அவளது கடைசி ஆயுதம் கண்ணீர்). மேலும், முன்பின் விளைவுகளை யோசிக்காமல் அந்த நேரத்தில் தனக்குச் சரி எனத் தோன்றுவதையும், ஓர் இறுக்கத்தை இலகுவாக்கவும் வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் பெண்கள் சிறந்தவர்கள். இப்தா தன் தாயிடம் இப்படித்தான் வளர்க்கப்படுகின்றார்.

அவரை அவருடைய ஊரார் ஒதுக்கிவைக்கிறார்கள். ஆனால், தேவை என்று வரும்போது அவரைத் தேடிச் செல்கின்றனர். தன்னைத் தலைவராக ஏற்றுக்கொண்டால் தான் வருவதாகக் கூறுகிறார் இப்தா. தலைவராக அவர்கள் ஏற்றுக்கொண்டவுடன் மகிழ்ச்சியில் ஆண்டவர் முன் ஒரு வாக்குறுதி கொடுக்கின்றார். 'நான் அம்மோனியர்களை வென்றால், அல்லது ஆண்டவர் அம்மோனியர்கள்மேல் வெற்றி தந்தால், தன் வீட்டுக்கு வெளியே முதலில் வருவதை அல்லது வருபவரை எரிபலியாகக் கொடுக்கிறேன்!'

ஆண்டவர் அவரிடம் எந்த வாக்குறுதியும் கேட்கவில்லை. ஆனால், விலைமாதுவினால் வளர்க்கப்பட்டதால் நிபந்தனை விதித்தே பழகிவிட்டார். ஏனெனில், 'நீ எனக்கு இதைத் தந்தால் நான் உனக்கு அதைத் தருவேன்' என்பதுதான் விலைமாதுவின் பேச்சாக பெரும்பாலும் இருக்கும். பாவம் இப்தா! ஆண்டவரிடம் நிபந்தனை விதிக்கின்றார். தன் வாக்குறுதியின் பின்விளைவை அவர் யோசிக்கவில்லை. போர் முடிந்து வீடு திரும்பும்போது அவருடைய ஒரே மகள், கன்னிப் பெண், ஆணுறவு கொள்ளாதவள் (இப்படித்தான் விவிலியம் சொல்கிறது) வீட்டை விட்டு வெளியே வருகின்றாள் ஆடிப் பாடிக்கொண்டு. தந்தையின் வாக்குறுதி பற்றி அவள் அறியவில்லை. 'நீ எனக்கு மோசம் செய்துவிட்டாயே!' என்று தன் மகளைச் சொல்கின்றார் இப்தா. என்ன ஓர் அநியாயம்! மோசம் செய்தவர் இப்தா. தன் வாக்குறுதியால் மோசம் செய்துவிட்டு, சற்றே பொறுப்புணர்வின்றி பழியைத் தன் மகள்மேல் போடுகிறார். ஆனால், மகள் தந்தையின் வாக்குறுதியின்படி எரிபலியாக்குவதற்கு தன்னையே கையளிக்கிறார். அவர் எரிபலி ஆக்கப்பட்டாரா என்பது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

அவசரமான பேச்சு, தேவையற்ற வார்த்தை பிரவாகம் - இப்தா தன் மகளை இழக்கிறார்.

நற்செய்தி வாசகத்தில் திருமண விருந்து எடுத்துக்காட்டில், திருமண விருந்துக்கு வருகிறேன் என்று சொன்னவர்கள் தங்கள் வார்த்தையைப் பொருட்படுத்தவில்லை. 'வருகிறேன்' என்று வாக்குக் கொடுத்துவிட்டு, இப்போது வர மறுத்ததால் அரசரின் கோபத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், வந்தவர்களில் ஒருவர் திருமண ஆடையின்றி வருகின்றார். அதாவது, பாதிப் பொறுப்புணர்வு. 'வருகிறேன் ஆனால் நிபந்தனையோடு' என்று வருகின்றவரும் அரசரின் கோபத்திற்கு ஆளாகின்றார்.

வார்த்தை மிகவும் முக்கியம்.

வார்த்தையின் முக்கியத்துவம் பற்றி சபை உரையாளர் மிகவே எச்சரிக்கின்றார்: 'கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே. எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார். நீயோ மண்ணுலகில் இருக்கிறாய். எனவே, மிகச் சில சொற்களே சொல். கவலை மிகுமானால் கனவுகள் வரும். சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்' (சஉ 5:2-3).

வார்த்தைகளை நாம் எப்படிப் பயன்படுத்துகின்றோம்?

நமக்குத் தேவையானதைச் சாதித்துக்கொள்வதற்காக வார்த்தையை நம் நோக்கத்திற்குப் பயன்படுத்துவது தவறு. இன்னொரு பக்கம் நம் வார்த்தைகளுக்கு நாமே பொறுப்பு என்று உணர்ந்து, மிகச் சில சொற்கள் சொல்வதும், சொல்லும் சொற்களை செயல்களாக்குவதும் நலம்.

இப்தா அளவிற்குப் பெரிய விலை கொடுக்கவில்லை என்றாலும், நாம் கொடுக்க வேண்டிய விலை மிகப் பெரியதே!

Tuesday, August 17, 2021

நல்லவனாய் இருப்பதால்?

இன்றைய (18 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 20:1-16)

நல்லவனாய் இருப்பதால்?

மத்தேயு நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்ற விண்ணரசு பற்றிய உவமை ஒன்றை இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம். காலையிலிருந்து மாலை வரை வேலை செய்த அனைவருக்கும் ஒரே கூலி கொடுக்கப்படுகின்றது. நமக்கு நெருடலான ஒரு வாசகம். இது அநீதி! என்று குரல் எழுப்ப நம்மைத் தூண்டும் ஒரு வாசகம். அநீதி எதுவும் நடக்கவில்லையே! என்று நம்மையே சாந்தப்படுத்த நம்மைத் தூண்டும் வாசகம். நிலக்கிழார் அனைவருக்கும் இரக்கம் காட்டியிருக்கலாமே! முதலில் வந்தவர்களை நீதியோடும் கடைசியில் வந்தவர்களை இரக்கத்தோடும் அவர் அணுகுவது ஏன்? என்று கேட்கத் தூண்டும் வாசகம்.

இந்த வாசகத்தின் வரலாற்றுப் பின்னணி, மத்தேயு நற்செய்தியாளரின் குழுமத்தில் நிலவிய வேறுபாடு அல்லது பிரிவினையாக இருக்க வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின்னர் நற்செய்தியை அறிவிக்கின்ற திருத்தூதர்கள் முதலில் யூதர்களுக்கும், பின்னர் புறவினத்தாருக்கும் அறிவிக்கின்றனர். ஆக, முதலில் கிறிஸ்தவராக மாறியவர்கள் நாங்கள், நீங்களோ கடைசியில் அல்லது பின்னர் வந்தவர்கள் என்ற, 'நாங்கள்-நீங்கள்' பாகுபாடு அங்கே எழுந்திருக்கலாம். 'முதலில் வந்த நாங்கள் பெரியவர்களா? கடைசியில் வந்த நீங்கள் பெரியவர்களா?' என்ற கேள்விக்கு விடையாக மத்தேயு நற்செய்தியாளர் இந்த உவமையை உருவாக்கியிருக்கலாம். அல்லது இயேசு இதைச் சொல்லியிருக்க, மற்ற நற்செய்தியாளர்கள் இதை எழுதாமல் விட்டிருக்கலாம்.

இந்த உவமையை நாம் பல கோணங்களில் பார்;த்திருக்கின்றோம். திராட்சைத் தோட்டம் என்பது பொதுவாக இஸ்ரயேல் மக்களைக் குறிக்கின்ற உருவகம். ஆக, புதிய இஸ்ரயேலாகிய திருச்சபை என்னும் திராட்சைத் தோட்டத்தை இது குறிப்பதாக நாம் எடுத்துக்கொள்ளலாம். வேலைக்கு முதலில் வந்தவர்களின் பார்வையில் நாம் இந்த உவமையைப் பார்த்தால், அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது போல நமக்குத் தெரிகிறது. கடைசியில் வந்தவர்களின் பார்வையில் பார்த்தால், கடவுள் அவர்களுக்கு இரக்கம் காட்டியது நமக்குத் தெரிகிறது. அவர்களின் தேவை அறிந்து அவர்களுக்குக் கூலி கொடுத்தது தெரிகிறது. நிலக்கிழாரின் பார்வையில் பார்த்தால், அவர் தன் திராட்சைத் தோட்டப் பணியையே முதன்மைப் படுத்துகின்றார். பணம் அவருக்கும் பெரிதாகத் தெரியவில்லை. ஆகையால்தான், குறைவான அளவு வேலை செய்தவர்களுக்கும் அவர் முழுமையான கூலியைக் கொடுக்கினின்றார். ஒரு சிலரை நீதியோடும் - பேசிய அளவு கூலி, இன்னும் சிலரை இரக்கத்தோடும் - குறைவான வேலைக்கும் நிறைவான கூலி என்று அவர் கொடுக்கின்றார்.

இரக்கத்திற்கும் நீதிக்குமான ஒரு பிரச்சினை தீர்க்க முடியாத பிரச்சினை.

எடுத்துக்காட்டாக, தேர்வில் ஒரு மாணவன் பார்த்து எழுதுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்த மாணவன் ஏழைப் பின்புலத்திலிருந்து வருபவன். அவன் நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் அவன் விரும்புகிற அல்லது இலவசமான படிப்பு அவனுக்குக் கிடைக்கும். அவன் ஏழை என்பதற்காக அவன்மேல் இரக்கப்பட்டு அவனைப் பார்த்து எழுதுமாறு அனுமதித்தால் அவன் இன்னொரு மாணவனின் இடத்தைப் பறித்துக்கொள்வான் அல்லவா! அல்லது அவன் செய்த செயலுக்கான தண்டனை என்று நீதியோடு தண்டித்தால் அவன் தன் எதிர்காலத்தையே இழந்துவிடக் கூடும் அல்லவா!

'சாலையில் பச்சை விளக்கு எரிகிறது. உன் வாகனம் செல்லலாம்!' என்கிறது நீதி.

'முதியவர் ஒருவர் சாலையைக் கடந்துகொண்டிருக்கின்றார். பொறு!' என்கிறது இரக்கம்.

இதே பிரச்சினைதான் லூக்கா நற்செய்தி 13இல் நாம் காணும் காணாமல் போன மகன் உவமையிலும் வருகின்றது. 'சொத்தை எல்லாம் அழித்தவனுக்கு அல்லது குற்றம் செய்தவனுக்குத் தண்டனையே தவிர, மன்னிப்பு அல்ல!' என்கிறது நீதி கேட்டு நிற்கும் அண்ணனின் மனது. 'அவனாவது வந்தானே! சொத்து போனா பரவாயில்லை!' என்கிறது இரக்கம் காட்டி நிற்கும் அப்பாவின் மனது. இரண்டு பேரின் விவாதமும் அவரவரின் தளத்திலிருந்து பார்த்தால் சரி.

இந்த உலகத்தில் இரக்கம் மட்டுமே காட்டிக்கொண்டிருந்தால் எந்தவொரு ஒழுங்கும் இல்லாமல் போய்விடுமே!

நீதியைக் கொண்டு மட்டுமே நடத்த முயன்றால் எல்லாரும் இயந்திரங்கள் ஆகிவிடுமே!

'நான் நல்லவனாய் இருப்பதால் பொறாமையா?' எனக் கேட்கிறார் நிலக்கிழார்.

'நான் நீதியைக் கேட்பதால் உனக்குக் கோபமா?' என்று அந்த வேலைக்காரர் கேட்டிருந்தால் நிலக்கிழார் என்ன பதில் அளிப்பார்?

காலையிலேயே வந்தவர் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வெளியேறுகிறார். மாலையில் வந்தவர் தன் தலைவர் இரக்கம் காட்டியதாக மகிழ்ச்சியோடு வெளியேறுகிறார்.

வாழ்க்கை இப்படித்தான் குண்டக்க மண்டக்க நம்மை நடத்துகிறது. 'இது ஏன்?' என்ற கேள்வியை நம்மால் கேட்க முடிவதில்லை.

நமக்கு அருகில் உள்ள ஆப்கான் நாட்டில் இந்நாள்களில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு அச்சத்தைத் தருகின்றன. உலக நாடுகள் எல்லாம் அமைதியாக நிற்கின்றன. சமயத்தின் பெயரையும் கடவுளின் பெயரையும் சொல்லிக்கொண்டு அமைதி சீர்குலைக்கப்படுகிறது. எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில், வானூர்தியின் சக்கரத்தில் அமர்ந்துகொண்டு தப்பிக்க முயன்று, உயரத்திலிருந்து கீழே விழுந்து மடிகின்றனர். இவர்களை வாழ்க்கை நீதியின் அடிப்படையில் நடத்தவும் இல்லை! இரக்கத்தின் அடிப்படையில் நடத்தவும் இல்லை!

நீதியையும் இரக்கத்தையும் தாண்டி வாழ்க்கை தன் வழியில் நம்மை இழுத்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய முதல் வாசகத்தில் கிதியோனின் கடைசி மகன் இஸ்ரயேல் மக்களைப் பார்த்துப் புலம்புகின்றான். அரசாள வேண்டிய நான் இங்கே இருக்க, முன்பின் தெரியாத முள்செடி போன்ற ஒருவனை வைத்து நீங்கள் உங்களை ஆளுகிறீர்களே! எனப் புலம்புகின்றான். பாவம்! அந்தக் கடைசி மகனின் புலம்பல் யாருடைய காதுகளிலும் விழவில்லை.

அவனுக்கு நீதியும் கிடைக்கவில்லை! இரக்கமும் கிடைக்கவில்லை!

'நான் நல்லவனாய் இருப்பதால் உனக்குப் பொறாமையா?' என்று கடவுள் என்னவோ கேட்டுக்கொண்டே இருக்கிறார்.

'உன்னை நல்லவன் என்று யார் சொன்னா?' என்ற நம் புலம்பலும் திராட்சைத் தோட்டத்திற்குள் தோன்றி மறைகிறது.

Monday, August 16, 2021

கிதியோன்

இன்றைய (17 ஆகஸ்ட் 2021) முதல் வாசகம் (நீத 6:11-24)

கிதியோன்

நீதித்தலைவர்கள் நூலில் உள்ள சுழற்சியை நேற்றைய முதல் வாசகத்தில் வாசித்தோம். மிதியானியர்கள் கையிலிருந்து இஸ்ரயேல் மக்களை விடுவிக்க ஆண்டவராகிய கடவுள் பயன்படுத்திய கருவியே கிதியோன். 'வலிமை மிக்க வீரராகிய இவர்', மிதியானியர்களுக்கு அஞ்சி திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக்கொண்டிருக்கின்றார். திராட்சை ஆலையில் மறைந்து நின்று கதிர்களை அடிக்கக் காரணம் மிதியானியர்களைக் குறித்த அச்சம். பிழிவுக் குழியில் நின்று கதிர்களை அடித்தால் அது கதிர்களை அடிப்பவருக்கே ஆபத்தாக முடியும். அந்த ஆபத்தையும் சகித்துக்கொள்ளத் துணிகின்றார் கிதியோன்.

'ஆண்டவர் உன்னுடன் இருக்கிறார்' என்று தூதர் சொன்னவுடன், 'ஆண்டவர் எங்களோடு இருக்கிறார்' என்றால் ஏன் எங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது? எனக் கேள்வி கேட்கின்றார் கிதியோன். ஆண்டவர் அவர்களோடுதான் இருந்தார். ஆனால், அவர்கள்தான் ஆண்டவரோடு இல்லை.

கிதியோனின் இத்துணிச்சலைப் பாராட்டுகின்ற கடவுளின் தூதர் அவருக்குத் தன் உடனிருப்பை அடையாளங்கள் வழியாக வெளிப்படுத்துகின்றார்.

கிதியோன் தன்னுடைய ஆற்றலால் இயலாது என்ற அச்சத்தில்தான் ஆண்டவரின் உடனிருப்பை நாடுகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் செல்வம் பற்றிய இயேசுவின் போதனையைக் கேட்கின்றோம்.

செல்வத்தின் பெரிய வரமும் சாபமும் ஒன்றுதான்: அது ஒருவருக்கு தற்சார்பை உருவாக்கிவிடும். 'என்னால் இது முடியும்' என்ற ஆற்றலை ஒருவருக்குத் தருவதோடு, 'உன்னைத் தவிர உனக்கு வேறு யாரும் தேவையில்லை' என்ற எண்ணத்தையும் உருவாக்கிவிடும்.

கண்ணாடியில் உள்ள சில்வர் பூச்சு மற்றவரை மறைத்து ஒருவருக்கு அவரை மட்டுமே காட்டுகிறது. காலப் போக்கில் அவரால் மற்ற எவரையும் காண இயலாமல் போய்விடும்.

இறைவனின் உடனிருப்பு தருகின்ற ஆற்றலை நம் வாழ்வில் உணர நாம் என்ன செய்ய வேண்டும்?

அவர் நம்மைத் தேடி வருகின்ற நேரம் அவரைப் பற்றிக்கொள்ள வேண்டும்.


Sunday, August 15, 2021

நிறைவுள்ளவராதல்

இன்றைய (16 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 19:16-22)

நிறைவுள்ளவராதல்

விண்ணரசைப் பொருத்தமட்டில், நிறைவுள்ளவராதல் என்பது குறைவுள்ளவராதலில் அடங்கியுள்ளது என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

செல்வரான இளைஞர் செல்வத்தில் நிறைவாக இருக்கிறார். ஆனால், அதுவே அவருடைய குறையாகிறது. தன்னிடம் உள்ளதை குறைத்துக்கொண்டு நிறைவுள்ளவராக அவருக்கு மனம் இல்லை. பாதி வழி வந்தவர் மீதி வழி செல்ல முடியாமல் தவிக்கிறார்.

செல்வரான இளைஞரைப் பற்றிய வாசகம் வரும்போதெல்லாம், இவரைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சர்யமாக இருப்பதுண்டு. 'செல்வத்தை வைத்துக்கொண்டு நன்றாக இருக்க வேண்டியதுதானே!' ஏன் இப்படிக் கடவுளைத் தேடி நேரத்தை வீணடிக்க வேண்டும்?

'ஞானம் பொன்னைவிட மேலானது' என்றும், 'உம் திருச்சட்டம் பொன்னினும் பசும்பொன்னினும் மேலானது' என்றும் விவிலியம் சொல்லும் இடங்களில் எல்லாம் நாம் கவனமாக இருக்க வேண்டும். செல்வம் இல்லாதவர்கள் இதை எழுதியிருக்கலாம். அல்லது செல்வத்தைப் பெற இயலாதவர்கள் இதை எழுதியிருக்கலாம். இன்று பிரிவினை சகோதரர்கள், 'வளமை நற்செய்தி' பற்றி அதிகம் பேசுகின்றனர். இந்த நாள்களில் 'வளமை நற்செய்தி' நமக்குத் தேவைதான். ஏழ்மை போதும்!

ஏழ்மையும் பிரச்சினை. செல்வமும் பிரச்சினை.

ஏழ்மையும் செல்வமும் நம்மைக் கடவுளை விட்டுத் தூரமாக்கி விடுகின்றன. ஆகையால்தான், ஆகூர், 'எனக்குச் செல்வம் வேண்டாம். வறுமையும் வேண்டாம். எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும். எனக்கு எல்லாம் இருந்தால், 'உம்மை எனக்குத் தெரியாது' என்று மறுதலித்து, 'ஆண்டவரைக் கண்டது யார்?' என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்' (காண். நீமொ 30:8-9).

என்னைப் பொருத்தவரையில், இந்தச் செல்வந்த இளைஞர் ஆச்சர்யமாக இருக்கக் காரணம், அவர் தன்னை அறிந்தவராக இருக்கிறார். தான் இதுவரை எதைச் செய்து வந்தேன் என்றும், தன்னால் என்ன செய்ய முடியும் என்று அவருக்குத் தெரிகிறது. தன்னால் இயலாது என்பதை இயலாது என்று ஏற்றுக்கொள்கின்றார்.

இதை ஒன்றையே நான் இவரிடம் இன்று கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

இன்றைய முதல் வாசகத்தில் இதுதான் இஸ்ரயேல் மக்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. இன்று தொடங்கி, வருகின்ற நாள்களில் நாம் நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வாசிக்கவிருக்கின்றோம். நீதித்தலைவர்கள் நூலில் ஒரு சக்கரம் சுற்றிக்கொண்டே வரும்: 'நிலம் அமைதியில் இருக்கும் - மக்கள் பாவம் செய்வார்கள் - கடவுள் எதிரியிடம் அவர்களை ஒப்புவிப்பார் – அவர்கள் மீண்டும் கடவுளை நோக்கி குரல் எழுப்புவார்கள் - கடவுள் நீதித்தலைவரை அனுப்பி எதிரிகளை அழிப்பார் – நிலம் மீண்டும் அமைதி பெறும்!'

'பருத்தி மூடை அந்த குடோனிலேயே இருந்திருக்கலாம்!' என்று சொல்லத் தோன்றகிறது. கடவுளுக்கு மக்கள் வேலை கொடுக்க, மக்களுக்கு கடவுள் தொல்லை கொடுக்க என்று நீதித்தலைவர்கள் நூல் நகர்கின்றது.

மக்கள் இருமனத்தவராக இருந்தனர். கடவுளும் இருமனத்தவராகவே இருக்கின்றார்.

மக்கள் கடவுளுக்குப் பணி செய்கின்றனர், பாகாலுக்கும் பணி செய்கின்றனர்.

கடவுள் மக்களுக்கு அமைதி அருள்கின்றார், எதிரிகளைக் கொண்டு அமைதியைக் குலைக்கவும் செய்கின்றார்.

மக்களோடு சேர்ந்து கடவுளும் வளர்கின்றார் பழைய ஏற்பாட்டில். மக்களின் வளர்ச்சிதானே கடவுளின் வளர்ச்சி.

ஆக, செல்வம் களைய வேண்டாம். ஏழ்மை விரும்ப வேண்டாம்.

'நான் இதுதான்! என்னால் இது இயலும்! என்னால் இது இயலாது!' என்று சொல்லும் துணிச்சலும், அந்தத் துணிவைக் காத்துக்கொள்ள பிளவுபடா மனமும் இருந்தால் நலம்.

Saturday, August 14, 2021

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது

புனித கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

I. திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10 II. 1 கொரிந்தியர் 15:20-26 III. லூக்கா 1:39-56

(இந்த மறையுரையானது 'லெக்ஷியோ திவினா' (lectio divina - lectio [read], oratio [pray], meditatio [meditate], contemplatio [contempl-act] என்ற ஆன்மிக-இறைவழிபாட்டு முறையில் எழுதப்பட்டுள்ளது)

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது  


1. இறைவேண்டல்

'அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்.

ஓபிரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்து கேள்!

உன் இனத்தாரை மறந்துவிடு. பிறந்தகம் மறந்துவிடு.

உனது எழிலில் நாட்டங் கொள்வர் மன்னர்.

உன் தலைவர் அவரே. அவரைப் பணிந்திடு!

மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள்

மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்!'

(திபா 45:9,10-11,15)

2. இறைவார்த்தை கேட்டல்

முதல் வாசகம் (திருவெளிப்பாடு 11:9, 12:1-6, 10)

பத்மு தீவில் காட்சி காண்கின்ற யோவான் வரவிருக்கின்ற ஏழு அடையாளங்கள் பற்றி எழுதுகின்றார். அவற்றில் முதல் அடையாளமே இன்றைய வாசகப் பகுதி. இதை பெரிய அடையாளம் என அவர் அழைக்கின்றார். கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண் இஸ்ரயேலைக் குறிக்கின்றது. ஏனெனில், விவிலியத்தில் சமய அடையாளங்கள் பெண் உருவகமாகவே கொடுக்கப்பட்டுள்ளன: ஈசபெல் - பாகால் வழிபாடு (திவெ 2:20), விலைமகள் - போலி சமயம் (திவெ 17:2), மணமகள் - கிறிஸ்துவின் திருச்சபை (19:7-8).  'கதிரவனை ஆடையாக அணிந்திருக்கும் பெண்' கத்தோலிக்க மரபில் அன்னை கன்னி மரியாள் என பல ஓவியங்களில் நாம் பார்க்கின்றோம். அன்னை கன்னி மரியாளின் பல திருவுருவங்கள் அவர் நிலவின்மேல் நிற்பவராகவும், கதிரவனின் ஒளியை ஆடையாக அணிந்திருப்பவராகவும், அவருடைய தலையைச் சுற்றி 12 விண்மீன்கள் இருப்பதாகவும் சித்தரிக்கின்றன. ஆனால், இது இஸ்ரயேலையே குறிக்கிறது. யோசேப்பு காண்கின்ற கனவில் (தொநூ 37:9-11) யாக்கோபு கதிரவனாகவும், ராகேல் நிலவாகவும், அவர்களுடைய பிள்ளைகள் பன்னிரு விண்மீன்களாகவும் உள்ளனர். மற்ற இடங்களிலும் சீயோன் அல்லது எருசலேம் அல்லது இஸ்ரயேல் பெண்ணாக உருவகிக்கப்பட்டுள்ளது (காண். எசா 54:1-6, எரே 3:20, எசே 16:8-14, ஓசே 2:19-20).

இஸ்ரயேலிடமிருந்து பிறக்கும் குழந்தை இயேசுவைக் குறிக்கிறது. இந்தக் குழந்தை இயேசுவைக் குறிப்பதால் இந்தப் பெண் அன்னை கன்னி மரியா என்றும் கூறலாம். நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒட்டுமொத்த தீமையின் உருவகமாக உள்ளது. தானியேல் 7:7-8இன் பின்புலத்தில், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உள்ள இந்தப் பாம்பு உரோமை அரசைக் குறித்தது. இந்தக் குழந்தையை விழுங்க உரோமை அரசு துடிக்கிறது. பெண் பாலைவனத்துக்குத் தப்பி ஓடுகிறார். பாலைவனம் என்பது இங்கே இறைவன் தருகின்ற பாதுகாப்பைக் குறிக்கிறது. 1260 நாள்கள் (மூன்றரை வருடங்கள்), தானியேல் 9இன் பின்புலத்தில் இறைவாக்கு நிறைவேறும் ஆண்டைக் குறிக்கிறது. 'கடவுள் இடம் ஏற்பாடு செய்தல்' என்பது கடவுளின் பராமரிப்புச் செயலைக் காட்டுகிறது.

அரக்கப்பாம்பு தோல்வியுறுகிறது. விண்ணகத்தில் பெரியதொரு புகழ்ச்சி அல்லது வாழ்த்துப் பாடல் ஒலிக்கிறது.

இரண்டாம் வாசகம் (1 கொரிந்தியர் 15:20-26)

கொரிந்து ஒரு பணக்கார குடியேற்ற நகரம். பவுல் தன்னுடைய இரண்டாம் தூதுரைப் பயணத்தில் ஏறக்குறைய 18 மாதங்கள் இங்கே பணியாற்றினார் (காண். திப 18). கொரிந்து நகர்த் திருஅவையில் உள்ள பிரச்சினைகள் பற்றி அறிகின்ற பவுல், அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க கடிதம் ஒன்றை எழுதுகின்றார். பவுலின் அதிகாரம், திருஅவையில் பிரிவுகள், பாலியல் பிறழ்வு, பரத்தைமை, சிலை வழிபாடு, அப்பம் பிட்குதல், கொடைகள் மற்றும் தனிவரங்கள் என்னும் பிரச்சினைகளின் வரிசையில், இறந்தோர் உயிர்த்தெழுதல் என்ற பிரச்சினையும் உள்ளது. முந்தையவை அனைத்தும் அறநெறி சார்ந்த பிரச்சினைகளாக இருக்க, 'இறந்தோர் உயிர்த்தெழுதல்' என்பது இறையியல் அல்லது கொள்கைசார் பிரச்சினையாக இருக்கிறது. கிறிஸ்துவின் சிலுவை மற்றும் இறப்பு பற்றித் தொடக்கத்தில் (அதி. 2) பேசுகின்ற பவுல், கிறிஸ்துவின் உயிர்ப்பு பற்றி இறுதியில் (அதி. 15) பேசுகின்றார்.

இறந்தோர் உயிர்ப்பு பற்றிய புரிதலுக்கு இரு தடைகள் இருந்தன: ஒன்று, யூத சமயத்தில் இறந்தோர் உயிர்ப்பு பற்றிய தெளிவான கருத்து இல்லை. 'ஷெயோல்' அல்லது 'பாதாளம்' என்பது இறந்தோர் வாழும் இடம் என்று கருதப்பட்டது. 'எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணினின்றே தோன்றின. எல்லாம் மண்ணுக்கே மீளும்' (காண். சஉ 3:20). ஆண்டவர் உயிர் தருவார் (காண். இச 32:39) என்ற புரிதல் பிந்தைய காலத்தில்தான் வருகின்றது. இரண்டு, கொரிந்து நகர மக்கள் பிளேட்டோவின் மெய்யியல் அறிந்தவர்களாக இருந்தனர். பிளேட்டோவின் புரிதல்படி 'உடல்-ஆன்மா' என்று இருநிலைகள் உள்ளன. இவற்றில், உடல் அழியக் கூடியது. ஆன்மா எப்போதும் உயிரோடு இருக்கக் கூடியது. அப்படி என்றால், அழியக் கூடிய உடல் எப்படி அழியாமல் உயிர்த்தெழ இயலும்? என்று அவர்கள் கேட்டனர்.

இந்தப் பின்புலத்தில் இரண்டாம் வாசகத்தைக் காண வேண்டும். ஆதாம் வழியாக இறப்பு வந்தது போல, கிறிஸ்து வழியாக இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர் என்கின்ற பவுல், சாவு அழிக்கப்பட்டவுடன் அனைத்தும் கடவுளுக்கு அடிபணியும் என்கிறார். அதாவது, இறந்தோர் உயிர்த்தல் என்பது எப்படி என்று சொல்லாமல், இறந்தோர் உயிர்த்தெழுதல் 'ஏன்' என்ற நிலையில் பதிலிறுக்கிறார் பவுல்.

நற்செய்தி வாசகம் (லூக்கா 1:39-56)

இன்றைய நற்செய்தி வாசகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதியில் எலிசபெத்து கன்னி மரியாவை வாழ்த்துகிறார். இரண்டாம் பகுதியில் மரியா கடவுளைப் புகழ்ந்து பாடுகின்றார். வானதூதர் கபிரியேலிடமிருந்து இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு கேட்டவுடன் விரைவாக யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் மரியா. மரியாவின் வாழ்த்து கேட்டவுடன் எலிசபெத்து தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றார். எலிசபெத்தின் வாழ்த்துச் செய்தி தன் நோக்கி வர, மரியா, தன் வாழ்த்துச் செய்தியை இறைநோக்கித் திருப்புகின்றார். மரியாவின் புகழ்ச்சிப்பாடல் முதல் ஏற்பாட்டு அன்னாவின் பாடலோடு (காண். 1 சாமு 1-2) நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தாலும், இங்கே மரியாவின் பாடல் மூன்று நிலைகளில் கடவுளை வாழ்த்துகின்றது: ஒன்று, தனக்குக் கிடைத்த பேற்றுக்காக. இரண்டு, அவர் செய்யும் புரட்சிக்காக (புரட்டிப் போடுதலுக்காக). மூன்று, அவர் நிறைவேற்றும் வாக்குறுதிக்காக.

3. இறைவார்த்தை தியானித்தல்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். 'கடவுளாக மாறுவீர்கள்' என்ற பாம்பின் பொய் கேட்டு, விலக்கப்பட்ட கனி உண்ட ஏவாள் மனுக்குலத்தின் தாயாக மாறுகின்றார். 'இதோ ஆண்டவரின் அடிமை!' என்று வானதூதருக்குச் சொல்லி, மீட்பின் கனியைத் தன் வயிற்றில் தாங்கிய மரியா இறைவனின் தாயாக மாறுகின்றார்.

'நான் கடவுளைப் போல ஆவேன்!' என்று தன்னை உயர்த்தியதால் ஏவாள் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

'நான் ஆண்டவரின் அடிமை!' என்று தன்னைத் தாழ்த்தியதால் மரியா தோட்டத்திலிருந்து விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.

முதல் வாசகத்தில், பெண் அரக்கப் பாம்பிடமிருந்து பாதுகாக்கப்பட்டது போல, மரியா தீமையிடமிருந்து வியத்தகு முறையில் பாதுகாக்கப்படுகின்றார். இரண்டாம் வாசகத்தில், சாவு என்னும் பகைவன் கிறிஸ்துவால் அழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்த சாவைத் தழுவாமல் மரியா விண்ணேற்பு அடைகின்றார். நற்செய்தி வாசகத்தில் நாம் காண்பது போல, எப்போதும் தன் கண்களை விண்ணகத்தின்மேலேயே பதித்திருந்த மரியா, அந்த விண்ணகத்திற்கே எடுத்துக்கொள்ளப்படுகின்றார்.

4. இறைவார்த்தை வாழ்தல்

(அ) தீமையிடமிருந்து விலகி நிற்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் விண்ணேற்பு அடைகின்றோம். ஆக, தீமையிலிருந்து விலகி நிற்க எண்ணுதல், மற்றும் முயற்சி செய்தல் நலம்.

(ஆ) இறப்பு என்பது நாம் எதிர்கொள்ள வேண்டிய எதார்த்தம். உயிர்ப்பு என்ற ஒன்றுதான் இறப்புக்கு பொருள் தருகின்றது. அந்த உயிர்ப்பை எதிர்நோக்கி வாழ்தல்.

(இ) மரியா தன் உறவினர் நோக்கி உடலிலும், தன் இறைவன் நோக்கி உள்ளத்திலும் நகர்கின்றார். நம் வாழ்விலும் இவ்விரு வகை நகர்வுகளை நமக்குப் பொருள் தருகின்றன.

5. செயல்பாடு

தன்னாய்வு: இறப்பின் காரணிகளால் நான் அலைக்கழிக்கப்படுவது ஏன்? இன்று நான் விண்ணகத்தை நோக்கிக் காண இயலாதவாறு என் பார்வையைத் தடுப்பது எது? காண்பவற்றை மட்டுமே பற்றிக்கொள்ளும் நான் அவற்றை விடுவதற்கு என்ன முயற்சிகள் செய்கின்றேன்?

இறைநோக்கிய பதிலிறுப்பு: இறைவன் தரும் பராமரிப்பையும் பாதுகாவலையும் உணர்தல்.

உலகுநோக்கிய பதிலிறுப்பு: இந்த உலகமும் உடலும் என் இயக்கத்திற்குத் தேவை. இவற்றின் துணைகொண்டே நான் விண்ணேற முடியும்.

6. இறுதிமொழி

துன்பங்கள் தாங்கும் திறன் கற்றுத்தந்தார் ஏவாள். துன்பங்கள் தாண்டும் திறன் கற்றுத்தந்தார் மரியா. தாங்கிய முன்னவர் தங்கிவிட்டார். தாண்டிய பின்னவர் விண்ணேறினார்.

Friday, August 13, 2021

சிறு பிள்ளைகள்

இன்றைய (14 ஆகஸ்ட் 2021) நற்செய்தி (மத் 19:13-15)

சிறு பிள்ளைகள்

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் மண உறவு, மணமுறிவு, மற்றும் மணத்துறவு பற்றி வாசித்தோம். அதன் தொடர்ச்சியாக, குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

எபிரேயத்தில் குழந்தையைக் குறிக்க, 'பென்,' 'யேலத்,' மற்றும் 'நஆர்' என்னும் பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'டெக்னோன்' அல்லது 'பைதியோன்' என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்கத்தில் 'குழந்தை' என்ற வார்த்தை 'அஃறிணை' (அதாவது, திணையில் வராதவை, பொருந்தாதவை) வார்த்தையாகவே உள்ளது. தமிழிலும், 'குழந்தை' என்பதை 'அது' என்றே நாம் அழைக்கின்றோம். எபிரேய சமூகத்தில் 12 வயது நிரம்பும் வரை இளவல், 'குழந்தை' என்றே அழைக்கப்பட்டார்.

யூத சமூகம் குழந்தைகள் குடும்பங்களுக்கு இறைவன் வழங்கும் ஆசீர் என்று கருதியது (காண். தொநூ 15:2, 30:1, 1 சாமு 1:11, திபா 127:3, லூக் 1:7). குழந்தைகள் அதிகமாக இருப்பது பொருளாதார அடிப்படையிலும் நல்லது என்று பார்க்கப்பட்டது. ஏனெனில், விவசாய சமூகத்தில் உடனுழைப்புக்கு மனித ஆற்றல் நிறையத் தேவைப்பட்டது. மேலும், போர், வன்முறை, புலம்பெயர்தல், பாதுகாப்பற்ற இயற்கைச் சூழலில் நிறையக் குழந்தைகள் இருந்தால் அது குடும்பத்திற்கு பாதுகாப்பு என்றும், இனவிருத்திக்கு உதவி என்றும் மக்கள் நம்பினர். ஒரு பெண் குழந்தை பெற இயலாமல் போனால், இன்னொரு பெண்ணின் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள யூத சமூகம் அனுமதித்தது. ஒவ்வொரு யூதப் பெண்ணும் தன் மகன் ஒருவேளை மெசியாவாக வருவான் என்ற எண்ணத்திலேயே குழந்தைகள் பெற்றெடுத்தனர். குடும்பத்தலைவர் மகப்பேறின்றி இறந்து போனால், அவருடைய தம்பி தன் அண்ணனின் மனைவியை மணந்து குழந்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கடமையும் இருந்தது.

குழந்தைகள் கடவுளுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டனர் (காண். 1 சாமு 1:11). குழந்தைகளுக்கு இடும் பெயர்கள் முக்கியமானதாகக் கருதப்பட்டன: மோசே (விப 2:10), சாமுவேல் (1 சாமு 1:20). தலைப்பேறு ஆண்டவருக்கு உரியது என்று வழங்கப்பட்டது (காண். எண் 3:44). குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சிநிலையும் குடும்ப மற்றும் சமூக விழாவாகக் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் தாயிடம் வளர்ந்தனர். ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. உயர்குடி மக்கள் தங்கள் இல்லங்களிலேயே ஆசிரியர்களைப் பணிக்கு அமர்த்தினர் என்ற வரலாற்று ஆசிரியர் யோசேபு எழுதுகின்றார்.

இயேசுவின் சமகாலத்தில் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருந்தன. வாசிக்கவும், எழுதவும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது. தோரா வாசிப்பு, விவசாயம், திறன்கள் வளர்த்தல் ஆகியவற்றுக்கும் பயிற்சி தரப்பட்டது. ஒரு குழந்தை பேசத் தொடங்கியவுடன் (4 வயதில்) சமயக் கல்வி வழங்கப்பட்டது. குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் ஓய்வுநாள் மற்றும் பாஸ்கா போன்ற திருவிழாக்களில் பங்கேற்றனர். குழந்தைகள் தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்களுக்கு அளிக்கும் மதிப்பும் கீழ்ப்படிதலும் நல்லொழுக்கமாகக் கருதப்பட்டது.

ஆண்டவராகிய கடவுளும் இஸ்ரயேல் மக்களை தன் குழந்தைகள் என்று கொண்டாடுகின்றார். ஒரு தந்தை தன் குழந்தையைத் தூக்கி வளர்ப்பதுபோல, அதற்கு நடை பயிற்றுவிப்பது போல தான் இஸ்ரயேலுக்குச் செய்ததாக உச்சி முகர்கின்றார்.

இன்று குழந்தைகளைப் பற்றிய பார்வை மிகவும் மாறிவிட்டது. ஒருபக்கம், குழந்தைகள் தொழிலாளர்கள், குழந்தைகள்மேல் வன்முறை, வல்லுறவு ஆகியவை திணிக்கப்படுகின்றன. குழந்தைகள் வலுவற்றவர்களாக இருக்கின்றனர். இன்று வலுவற்ற இவர்களைக் குறிவைத்து கார்பரேட்கள் தங்கள் வன்முறையை காணொலி விளையாட்டுகள் வழியாகவும், வலைத்தளங்கள் வழியாகவும் திணிக்கின்றனர்.

இன்னொரு பக்கம், 'ஆன்ட்டி நேடலிசம்' (குழந்தை மறுப்பு மனநிலை) வேகமாக வளர்கின்றது. திருமண நாளன்று, மணமக்கள், 'நமக்கு குழந்தை வேண்டுமா? நாய்க்குட்டி வேண்டுமா?' என்று திட்டமிடுகின்றனர். 'நான் படும் கஷ்டத்தை என் பிள்ளையும் பட வேண்டுமா?' என்ற நினைப்பில் குழந்தைகள் வேண்டாம் என்று மணமக்கள் முடிவெடுக்கின்றனர். மேலும், கருத்தடை, கருக்கலைப்பு, சிசுக்கொலை என்று குழந்தைகள் பிறக்குமுன்னரே, அல்லது பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர்.

இந்தப் பின்புலத்தில், இயேசு குழந்தைகளை ஆசீர்வதிக்கும் நிகழ்வைக் காண்போம்.

குழந்தைகளை எபிரேயக் குடும்பங்கள் கொண்டாடினாலும், அவர்கள் 'ஆள் கணக்கில் சேராதவர்களாகவே' சமூகத்தில் பார்க்கப்பட்டனர். ஆகையால்தான், மத்தேயு தவிர மற்ற நற்செய்தியாளர்கள், 'அப்பம் உண்ட ஆண்கள் தொகை ஐயாயிரம்' எனப் பதிவு செய்கின்றனர். குழந்தைகளும் பெண்களும் எண்ணிக்கையில் கொள்ளத் தகுதியற்றவர்கள். இந்த மனநிலை சீடர்களுக்கும் இருக்கிறது. ஆகையால்தான், குழந்தைகள் இயேசுவிடம் வருவதை அவர்கள் கண்டிக்கின்றனர். இன்னொரு பக்கம், ரபி ஒருவரிடம் குழந்தைகள் பொதுவில் அமரக் கூடாது என்ற விதியும் இருந்தது. ஆனால், குழந்தைகளின் பெற்றோர், இயேசுவிடம் கடவுளையே காண்பதால், ஆசீர்வதிக்கப்படுமாறு தங்கள் குழந்தைகளை அழைத்து வருகின்றனர். இயேசுவும் ஆசீர்வதிக்கின்றார்.

மேலும், 'விண்ணரசு இத்தகையோருக்கு' என்கிறார்.

அதாவது, 'திருச்சட்டமே இவர்களுக்கு இல்லை' என்ற நம்பிக்கை நிலவிய இடத்தில், 'விண்ணரசு இவர்களுக்கு' என்று இயேசு சொன்னது அவர்களுக்குப் புதுமையாகவும் புரட்சியாகவும் இருந்திருக்கும்.

இன்றைய முதல் வாசகத்தில், செக்கேமில் உடன்படிக்கையைப் புதுப்பிக்கின்ற யோசுவா, 'யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்று முடிவு செய்யுங்கள்' என்று இஸ்ரயேல் மக்களை ஒரு தீர்க்கமான முடிவுக்கு அழைக்கின்றார்.

இன்று மாக்ஸிமிலியன் மரிய கோல்பேயின் திருநாளைக் கொண்டாடுகிறோம். நாசி வதைமுகாமில் தன் உடன்கைதிக்குப் பதிலாகத் தன் உயிரை இழக்கத் துணிகின்றார்.

எதையும் பற்றிக்கொள்ளாத மனநிலையே குழந்தை மனநிலை. இந்தக் குழந்தை மனநிலை வந்தால் சிலைகளை நம்மால் அகற்றவும், நம் உடனிருப்பவருக்காகத் தியாகம் செய்யவும், இவ்வாறு விண்ணரசை உரிமையாக்கவும் முடியும்.