Thursday, June 30, 2022

என்னைப் பின்பற்றி வா!

இன்றைய (1 ஜூலை 2022) நற்செய்தி (மத் 9:9-13)

என்னைப் பின்பற்றி வா!

மத்தேயு நற்செய்தியாளரின் அழைப்பு நிகழ்வை இன்றைய நற்செய்திப் பகுதியில் வாசிக்கின்றோம். 'இயேசு கண்டார்,' 'வா! என்றார்,' 'மத்தேயு பின்பற்றிச் சென்றார்' என்று வரிசையான மூன்று வினைச்சொற்களால் நிகழ்வைப் பதிவு செய்கின்றார் மத்தேயு. 

மத்தேயுவின்மேல் இயேசுவின் பார்வைதான் முதலில் விழுகின்றது. இயேசுவே மத்தேயுவை முதலில் காண்கின்றார். அவர் நம்மைக் காணாமல் அவரை நாம் காணுதல் சாத்தியமில்லை என்கிறார் இயேசு. 

இரண்டாவதாக, 'என்னைப் பின்பற்றி வா!' என்னும் இயேசுவின் குரலைக் கேட்கின்றார் மத்தேயு. மத்தேயு தன் பணியில் மும்முரமாக இருக்கின்றார். வரி தண்டும் பணி மிகவும் மோசமான பணி. யூதர்களால் இழிதொழில் எனக் கருதப்பட்ட பணிகளில் வரிதண்டுவதும் ஒன்று. ஏனெனில், யூதர்களிடமிருந்து பெறப்பட்ட வணிக வரி, நில வரி, சொத்து வரி, விளைச்சல் வரி போன்றவை உரோமைப் பேரரசுக்குக் கொடுக்கப்பட்டது. இயேசுவின் சமகாலத்தில் உரோமை அரசு விதித்த அதிக வரி முறைகளால் பலர் முணுமுணுத்தனர். மேலும், உரோமை அரசுக்கு வேலை பார்க்கின்ற வரி தண்டும் யூதர்கள் தங்கள் சொந்த மக்களாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பின்புலத்தில், ரபி அல்லது போதகர் ஒருவர், 'என்னைப் பின்பற்றி வா!' என்று சொல்வதை மத்தேயு மிக ஆச்சர்யமாகப் பார்த்திருப்பார். மேலும், வரி வசூலிக்கின்ற இடத்தில் உள்ள சண்டை, சத்தம், சச்சரவுகளுக்கு நடுவே மத்தேயுவால் இயேசுவின் குரலை எப்படிக் கேட்க முடிந்தது?

மூன்றாவதாக, 'அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்'. அதாவது, இயேசுவின் குரல் கேட்டவுடன் அதற்கேற்ற பதிலிறுப்பைச் செய்கின்றார் மத்தேயு. உடனடியாகப் புறப்பட்டுச் செல்கின்றார். மேலும், இந்த இடத்தில் மத்தேயுவின் நேர்மை அல்லது நாணயத்தையும் காண முடிகிறது. தனக்கென்ற எந்தப் பணமும் எடுத்துக்கொள்ளாமல், இருக்கின்ற பணத்திற்கான கணக்கை உடனடியாக எழுதி வைப்பவராகவும், தன் பணியை அப்படியே விட்டுவிட்டுச் செல்லும் அளவுக்குத் துணிச்சல் பெற்றவராகவும் இருக்கின்றார். 

வரிக் கணக்கை எழுதிய கைகள் இனி கடவுளின் நெறிக் கணக்கை எழுதப் போகின்றன என அவருக்குத் தெரிந்ததா?

தன் பழைய காலத்தை விட்டு எழுகின்ற மத்தேயு, தன் பழைய நண்பர்களை அழைத்து விருந்து கொடுக்கின்றார். எலிசா தன் குடும்பத்தாருக்கு வழங்கிய பிரியாவிடை விருந்தை ஒத்துள்ளது இது. 'இவர்கள்தாம் என் நண்பர்கள்!' என்று தன் நண்பர்களை இயேசுவுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாகவும், 'இதுதான் இயேசு!' என்று இயேசுவைத் தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இருக்கிறது மத்தேயு அளிக்கின்ற விருந்து.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் சமூகத்தில் நிலவிய சமூக அநீதியைச் சாடுகின்ற இறைவாக்கினர் ஆமோஸ், ஆண்டவர் அனுப்பப் போகின்ற பஞ்சத்தை உரைக்கின்றார். உணவுக்கான அல்லது நீருக்கான பஞ்சம் அல்ல அது. மாறாக, இறைவார்த்தைக்கான பஞ்சம் என உரைக்கின்றார் ஆமோஸ். அதாவது, இனி இறைவன் அவர்களோடு பேச மாட்டார். 

இறைவனின் வார்த்தையே இவ்வுலகைப் படைத்தது, தங்களை எகிப்திலிருந்து மீட்டது, தங்களோடு பயணம் செய்தது என அனுபவித்த இஸ்ரயேல் மக்களுக்கு இது மிகப் பெரிய சாபமாக இருந்திருக்கும். ஏனெனில், இறைவன் பேசவில்லை என்றால் அவர்களுடைய இருத்தல் இல்லாமல்போய்விடும். 

இஸ்ரயேல் மக்கள் தங்கள் வாழ்வில் அநீதச் செயல்கள் செய்துவிட்டு, இறைவனின் ஆலயத்திற்குச் சென்று அவரைப் புகழ்ந்து பாடவும், வழிபடவும் செய்தனர். இவ்வார்த்தைகள் அனைத்தும் வெற்று வார்த்தைகள் என அவர்களுக்கு உணர்த்துவதற்காக, இறைவன் ம்யூட் மோடுக்குச் செல்கின்றார். 

மத்தேயு நற்செய்தியாளரின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம், பணி, வேலையாள்கள் என எல்லாம் இருந்தது. ஆனால், 'இறைவார்த்தை' இல்லை. ஆகையால்தான் இயேசுவின் சொல்லைக் கேட்டவுடன் எழும்பிச் செல்கின்றார்.

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்குச் சொல்லும் பாடங்கள் எவை?

(அ) இறைவன் என்னைக் காணுமாறு நான் அனுமதித்துள்ளேனா?

(ஆ) இறைவனின் குரலை மற்ற அனைத்துக் குரல்களிலுமிருந்து வேறுபடுத்தி அறிய என்னால் இயலுமா? அவரின் குரலை நான் கேட்காதவாறு என்னைச் சுற்றி எழுப்பும் ஒலிகள் எவை?

(இ) உடனடியாக இயேசுவை நான் பின்பற்றுவதற்கு உள்ள தடைகள் எவை?

இன்று பிறக்கும் புதிய மாதத்தில், உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றுடன் இறைவார்த்தையும் நமக்கும் நிறைவாகக் கிடைப்பதாக!


Wednesday, June 29, 2022

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

இன்றைய (29 ஜூன் 2022) பெருவிழா

திருத்தூதர்கள் பேதுரு, பவுல்

உரோமன் கத்தோலிக்கத் திருஅவையின் இருபெரும் தூண்கள் என அழைக்கப்படுகின்ற திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் பெருவிழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம்.

'உன் பெயர் பேதுரு. இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா' (காண். மத் 16:18) என்று பேதுருவையும், 'பிற இனத்தவருக்கும் அரசருக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் முன்பாக எது பெயரை எடுத்துச் செல்ல நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாய் இருக்கிறார்' (காண். திப 9:15) என்று பவுலையும் தேர்ந்தெடுத்தார் ஆண்டவராகிய இயேசு.

இவர்கள் நமக்குத் தருகின்ற வாழ்வியல் பாடங்கள் எவை?

அ. உயிர்ப்பு அனுபவம்

பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார். பவுல் இயேசுவின் இயக்கம் சார்ந்தவர்களை அழிக்கச் செல்கின்றார். ஆனால், உயிர்த்த இயேசுவைச் சந்தித்தபின் இவர்களுடைய இருவரின் வாழ்வும் தலைகீழாக மாறுகின்றது. மாறிய வாழ்வு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. ஆக, இயேசுவின் உயிர்ப்பு அனுபவம் பெறுதல் மிக அவசியம். இதையே பவுலும் பிலிப்பியருக்கு எழுதுகின்ற திருமடலில், 'கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறிய விரும்புகிறேன்' (காண். பிலி 3:10) என்கிறார். இந்த அனுபவம் நம் துன்பங்களில், செபங்களில், உறவுநிலைகளில், திடீரென தோன்றும் ஒரு உந்துசக்தியில் கிடைக்கலாம்.

ஆ. பொருந்தக் கூடிய தன்மை

பேதுருவும் பவுலும் எதிரும் புதிருமானவர்கள். குடும்ப பின்புலம், தொழில், படிப்பு, ஆள்பழக்கம், குணம் போன்ற அனைத்திலும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்களாக இருந்தனர். அவர்கள் இருவருக்கும் பணிசார்ந்த வாக்குவாதங்களும் எழுந்துள்ளன. இதை பவுலே கலாத்தியருக்கு எழுதிய திருமடலில் குறிப்பிடுகின்றார்: 'ஆனால், கேபா (பேதுரு) அந்தியோவுக்கு வந்தபோது அவர் நடந்துகொண்ட முறை கண்டனத்துக்கு உரியது எனத் தெரிந்ததால் நான் அவரை நேருக்கு நேராய் எதிர்த்தேன் ... யூதர்களின் வெளிவேடத்தில் அவர் பங்குகொண்டார் ... நான் எல்லார் முன்னிலையிலும் கேபாவிடம், 'நீர் யூதராயிருந்தும் யூத முறைப்படி நடவாமல் பிற இனத்தாரின் முறைப்படி நடக்கிறீரே! அப்படியிருக்க பிற இனத்தார் யூத முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நீர் எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?' என்று கேட்டேன்' (காண். கலா 2:11-14). இப்படியாக இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், நற்செய்தி அறிவிப்புப் பணி என்ற புள்ளியில் அவர்கள் இருவர் ஒருவர் மற்றவரோடு இயைந்து பொருந்தினர்.

இ. எழுத்துக்கள்

'பேசுபவர்கள் மறைந்துவிடுவார்கள். எழுதுபவர்கள் என்றும் வாழ்வார்கள்' என்பது ஜெர்மானியப் பழமொழி. இவர்களின் எழுத்துக்களில் இவர்கள் இன்றும் வாழ்கிறார்கள். ஆகையால்தான், இவர்களின் திருமுகங்களை நாம் வாசிக்கும்போது, வாசிக்கத் தொடங்கிய ஓரிரு நிமிடங்களில் வாசிப்பவரின் குரலை நாம் மறந்து, இவர்களின் குரலைக் கேட்கத் தொடங்குகிறோம். இவர்கள் தங்களுடைய குழுமங்களுக்கு, அவற்றின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளின் பின்புலத்தில் எழுதிய திருமடல்கள் இன்று நம் குழுமங்களுக்கும், நம் சூழல்களுக்கும் மிக அழகாகப் பொருந்துகின்றன. எழுதுபொருள்கள் முழுமையாக உருப்பெறாத நிலையில், நெருப்பு, தண்ணீர், கள்வர் என ஏட்டுச்சுருள்களுக்கு நிறைய எதிரிகள் இருந்தாலும், நீங்காமல் நிறைந்திருக்கின்றன இவர்களுடைய எழுத்துக்கள்.

'ஒன்றின் தொடக்கமல்ல. அதன் முடிவே கவனிக்கத்தக்கது' என்கிறார் சபை உரையாளர் (7:8). புனித பேதுரு மற்றும் பவுல் ஆகியோரின் தொடக்கம் மிகவும் சாதாரணமாக இருந்தது. கலிலேயக் கரையில் வலைகளை அலசிக்கொண்டிருந்தவர் பேதுரு. தன்னுடைய அவசர மனநிலையால் இயேசுவால் கடிந்துகொள்ளப்பட்டவர். இயேசுவை மறுதலித்தவர். ஆனால், இறுதியில், 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணாகதி அடைந்தவர். கிறிஸ்தவம் என்ற புதிய வழியைப் பின்பற்றியவர்களை அழிக்கச் சென்றவர் பவுல். வழியிலேயே தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். 'வாழ்வது நானல்ல. என்னில் கிறிஸ்துவே வாழ்கிறார்' என்று தன் வாழ்க்கையைக் கிறிஸ்துவிலும், கிறிஸ்துவைத் தன் வாழ்க்கையிலும் ஏற்றார்.

இவர்கள் இருவருக்கும் பொதுவான மூன்று விடயங்களை நம் வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொள்வோம்:

(அ) அவர்கள் தங்கள் இறந்தகாலத்தை ஏற்றுக்கொண்டனர்

நம் கடந்தகாலத்தை நாம் இரண்டு நிலைகளில் எதிர்கொள்ள முடியும். ஒன்று, எதிர்மறை மனநிலையில். கடந்தகாலத்தை நினைத்து குற்றவுணர்வு, பழியுணர்வு, அல்லது பரிதாப உணர்வு கொள்வது எதிர்மறை மனநிலை. இந்த மனநிலையில் நாம் எப்போதும் நம் கடந்தகாலத்தோடு போரிட்டுக்கொண்டே இருப்போம். 'ச்சே! அப்படி நடந்திருக்கலாமே! இப்படி நடந்திருக்கலாமே! நான் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாமே!' என்று நம்மை நாமே குறைசொல்லிக்கொண்டு வாழ்வது இந்த மனநிலையில்தான். ஆனால், இரண்டாவது மனநிலை நேர்முக மனநிலை. 'ஆமாம்! நான் அப்படித்தான் இருந்தேன். ஆனால், அதை நான் இப்போது மாற்றிக்கொண்டேன். அதுவும் நான்தான். இதுவும் நான்தான்' என்ற மனநிலையில் எந்தவொரு எதிர்மறை உணர்வும் இருக்காது. வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பேதுருவும் பவுலும் ஒருபோதும் குற்றவுணர்வால், பழியுணர்வால், பரிதாப உணர்வால் தங்களுடைய கடந்த காலத்திற்குள் தங்களைக் கட்டிக்கொள்ளவில்லை. மாறாக, தங்கள் கடந்த காலத்தை அருளோடு கடந்து வந்தனர்.

(ஆ) அவர்கள் தங்கள் பாதையை மாற்றிக்கொண்டனர்

பேதுருவும் பவுலும் இறையனுபவம் பெற்றவுடன் தங்களுடைய பாதைகளை மாற்றிக்கொண்டனர். மாற்றிக்கொண்ட பாதையிலிருந்து அவர்கள் திரும்பவில்லை. பேதுரு மீன்பிடிக்கத் திரும்பிச் சென்றார். ஆனால், 'உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சொல்லி இயேசுவிடம் சரணாகதி அடைந்த அடுத்த நொடி முதல் திரும்பவே இல்லை. ஆண்டவரை நோக்கி வாளேந்திய பவுல் ஆண்டவருக்காக வாளை ஏற்கின்றார். ஆண்டவர் மட்டுமே அவருடைய பாதையாக மாறினார்.

(இ) அவர்கள் தங்கள் நம்பிக்கைக்குச் சான்று பகர்ந்தனர்

தங்களுடைய பணிவாழ்வில் இருவரும் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். இறுதியாக, 'இயேசுவே இறைமகன்' என்ற தங்களுடைய நம்பிக்கை அறிக்கைக்காக இறப்பை ஏற்கின்றனர். இயேசு பற்றிய நற்செய்தி நம் காதுகளுக்கு வந்து சேர இவர்களுடைய நம்பிக்கையே முக்கியக் காரணம்.

புனித பேதுரு மற்றும் பவுல் - வலுவற்ற இரு துரும்புகள் இறைவனின் கரம் பட்டவுடன் வலுவான தூண்களாயின.

நம் தொடக்கமும் வளர்ச்சியும் துரும்பாக இருக்கலாம். ஆனால், நம் இலக்கு நம்மைத் தூணாக மாற்றிவிடும். ஏனெனில், அவரின் கரம் என்றும் நம்மோடு.


Monday, June 27, 2022

சாகப் போகிறோம்!

இன்றைய (28 ஜூன் 2022) நற்செய்தி (மத் 8:23-27)

சாகப் போகிறோம்!

இயேசு படகில் ஏற, சீடர்களும் உடன் ஏறுகின்றனர். படகை அவர்கள் முன்னால் செலுத்த, அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்குகின்றார். வந்திருந்தவர்கள் அனைவரும் மீன்பிடி அல்லது கடல்தொழில் செய்பவர்கள். கடலில் புயல் எழுந்தது கண்டு அவர்கள் பயப்பட, தச்சரோ தூங்கிக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு அதிசயமும், சிரிப்பும், கோபமும் ஒருசேர வந்திருக்கும்.

கடலின் இரைச்சலுக்கு மேல் இருக்கிறது அவர்களுடைய இரைச்சல்: 'ஆண்டவரே, காப்பாற்றும்! சாகப் போகிறோம்!'

வாழ்வு கொடுக்க வந்தவரிடம், 'நாம் சாகப்போகிறோம்' என்று அவரையும் தங்களோடு இணைத்துக்கொள்கின்றனர். எழுந்த இயேசு, இரைந்த அவர்களைக் கடிந்துகொள்ளாமல், இரையும் கடலைக் கடிந்துகொள்கின்றார். 

'மிகுந்த அமைதி உண்டாயிற்று'

ஒரே வாக்கியத்தில் ஒட்டுமொத்த விளைவையும் சுருக்கிவிடுகின்றார் மத்தேயு.

ஆனால், சீடர்களின் மனத்தில் அப்போதுதான் காற்று அடிக்கத் தொடங்குகிறது.

'நம்மோடு இருப்பவர் யார்? காற்றும் கடலும் கீழ்ப்படிகின்றனவே? தீமையின் ஆதிக்கம் இவருடைய ஒற்றைச் சொல்லுக்குக் கீழ்ப்படிகின்றதே இவர் யார்?' 

இயேசுவை நோக்கி சற்றுமுன் 'ஆண்டவரே' என அழைத்தவர்கள், 'இவர் எத்தகையவரோ?' என வியக்கின்றனர்.

இரு கட்டளைகள் இடுகின்றார் இயேசு.

ஒன்று, அச்சம் அகற்ற வேண்டும்.

இரண்டு, நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில், 'காரணம் இன்றி காரியம் நடக்குமா?' எனஆண்டவர் கேட்பதைச் சுட்டிக் காட்டி, இஸ்ரயேல் செய்த தீங்குக்கு எதிராக ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு வரும் என முன்னுரைக்கிறார் ஆமோஸ்.

இன்றைய நற்செய்தி வாசகம் தரும் பாடம் என்ன?

இறைவனை நோக்கி நாம் எழுப்பும் மன்றாட்டுகள் அல்லது நமக்கு நாமே பேசிக்கொள்ளும் சொற்கள் எதிர்மறையாக இருக்கின்றனவா? அச்சம் மற்றும் நம்பிக்கைக் குறைவினால் நாம் எதிர்மறையாக யோசிக்கத் தொடங்குகிறோம் எனில், அச்சம் தவிர்த்து நம்பிக்கையில் வளர்வது நலம்.


Sunday, June 26, 2022

என்னைப் பின்பற்றி வாரும்!

இன்றைய (27 ஜூன் 2022) நற்செய்தி (மத் 8:18-22)

என்னைப் பின்பற்றி வாரும்!

இயேசுவின் சீடர்கள் பற்றிய நிகழ்வில் புரிதல்கள் இரு நிலைகளில் உள்ளன. சில சீடர்களை இயேசுவே அழைக்கின்றார். அவர்களும் அவரைப் பின்தொடர்கின்றனர். சிலர் தாங்களாகவே அவரைப் பின்பற்ற விரும்பும்போது இயேசு அவர்களைத் தடை செய்கின்றார். இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதியை இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம்.

மறைநூல் அறிஞரும், இயேசுவின் இன்னொரு சீடரும் இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றனர். இருவரையும் தன்னைப் பின்பற்றுமாறு அழைக்கிறாரா அல்லது இல்லையா என்பதை நம்மால் தெளிவுறக் காண இயலவில்லை. 

இந்நற்செய்திப் பகுதியில் இயேசு சீடத்துவம் பற்றிய இரு பாடங்களைத் தருகின்றார்:

ஒன்று, 'மானிட மகனுக்கோ தலைசாய்க்கக் கூட இடமில்லை.' இடம் என்பது மானிடரின் வாழ்வில் மிக முக்கியமானது. நேரம் இறைவனுக்கு உரியது. இடம் மானிடருக்கு உரியது. இந்த உலகில் நாம் நமக்கென ஓர் உள்ளங்கை இடத்தையாவது உரிமையாக்கிக்கொள்ள விரும்புகின்றோம். இடம்தான் நம் வேரூன்றுதலுக்கு அடிப்படையாக இருக்கிறது. இடம் இல்லாத நிலை நம்மை மற்றவர்களின் இரக்கத்தில் வாழுமாறு தள்ளி விடுகிறது. ஆக, சீடத்துவம் என்பது ஒருவரை முற்றிலுமான கையறுநிலைக்குத் தள்ளுகிறது.

இரண்டு, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்.' இறந்தோர் என்பது நம் பழைய வாழ்க்கையின் உருவகமாக இருக்கிறது. இறந்த காலத்தைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒருவர் நிகழ்காலத்திற்குள் கால் வைக்க இயலாது. நிகழ்காலத்தில் நிற்க இயலாத ஒருவரால் இயேசுவின் சீடராக இருத்தல் இயலாது.

இந்த இரு சீடத்துவப் பாடங்களையும் நம் வாழ்வுக்கு எப்படிப் பொருத்திப் பார்ப்பது?

ஒன்று, கையறுநிலைக்கு நம்மை உட்படுத்துவது. பல நேரங்களில் நாம் அசௌகரியங்களை விலக்கிக் கொள்வதையே விரும்புகின்றோம். அதாவது, அசௌகரியங்கள் தேவையற்றவை என ஒதுக்கிவிட நினைக்கின்றோம். ஆனால், அப்படி விலக்காமல் அசௌகரியங்கள் வழியாக வாழக் கற்றுக்கொள்வது நல்லது. 

இரண்டு, கடந்த காலம் பல நேரங்களில் நினைவாக நம் மூளையில் அமர்ந்துகொள்கிறது. கடந்த காலத்தின் மகிழ்ச்சி, கவலை, துன்பம் ஆகியவை நம் நிகழ்காலத்தின்மேல் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த காலத்தைக் கைவிடல் நலம்.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆமோஸ் ஆண்டவர் மக்களுக்குத் தரவிருக்கின்ற தண்டனை பற்றி முன்மொழிகின்றார். இவர் பயன்படுத்தும் உருவகம் ஒன்று அழகாக உள்ளது: 'வைக்கோல் பொதி நிறைந்த வண்டி அழுந்துவது போல, உங்களையும் நீங்கள் இருக்கும் இடத்திலேயே அழுத்துவேன்.'

நம் கடந்தகாலம் நம்மை இது போல அழுத்துவிட வாய்ப்பிருக்கிறது. நம் வண்டியில் உள்ள வைக்கோலைக் காலி செய்வது நலம்.


Saturday, June 25, 2022

முறிவுகளே முடிவுகளாக

ஆண்டின் பொதுக்காலம் 13ஆம் ஞாயிறு

I. 1 அரசர்கள் 19:16, 19-21 II. கலாத்தியர் 5:13-18 III. லூக்கா 9:51-62

முறிவுகளே முடிவுகளாக

ஓர் உருவகத்தோடு இன்றைய சிந்தனையைத் தொடங்குவோம். நாம் ஒரு வீட்டை உரிமையாக்கிக்கொள்ள வேண்டுமானால், அதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று, ஓர் வெற்றிடத்தை வாங்கி, அவ்விடத்தின் அளவு மற்றும் பண்பிற்கிற்பேத் திட்டமிட்டு நிலம் வீணாகாமல் கட்டுவது. இப்படிக் கட்டுவதில் பிரச்சினை என்னவென்றால், நிலத்தை தூய்மைப்படுத்தி ஒழுங்குபடுத்துதல், வானம் தோண்டுதல், அடித்தளம் இடுதல், வரைபடம் உருவாக்குதல், கட்டுதல், பூசுதல், மேற்கூரையிடல், தளமிடல், வர்ணம் பூசுதல், தண்ணீர் மற்றும் மின்சார திட்டமிடல் என எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும். இதற்கு நிறைய உழைப்பும் விடாமுயற்சியும் தேவை. இரண்டு, ஏற்கனவே கட்டப்பட்ட ஒரு வீட்டை விலைக்கு வாங்கி, அதை நம் தேவைக்கு ஏற்ப சிறு மாற்றங்கள் செய்வது. இது ரொம்பவே எளிது. நம்முடைய வேலை வர்ணம் பூசுவதும், இங்கே அங்கே என சிலவற்றை சரி செய்வதும்தான். ஆனால், நாம் ஏன் சொந்தமாக வீடு கட்டுகிறோம்? காரணம் ரொம்ப எளிது. முதல் வழியில் பிரச்சினைகள் நிறைய இருந்தாலும் நம்முடைய படைப்பாற்றலைப் பயன்படுத்தி, நம்முடைய எண்ணத்திற்கு ஏற்ப வீட்டைக் கட்டலாம். ஆனால், இரண்டாம் வழியில் பிரச்சினைகள் குறைவு என்றாலும், நாம் புதிதாக அவ்வீட்டில் எதையும் செய்ய முடியாது. அதன் அமைப்பு பிடிக்கவில்லை என்றால் மாற்ற முடியாது. மேலே மாடி கட்டுவதற்காக அடித்தளத்தை உறுதி செய்ய முடியாது. வீணாக்கப்பட்ட இடத்தை ஒன்றும் செய்ய முடியாது. தண்ணீர் மற்றும் மின்சார அமைப்புக்களை மாற்ற முடியாது. சில நேரங்களில் புது வீட்டைக் கட்டுவதை விட பழைய வீட்டைப் பராமரிப்பதற்கு அதிகம் செலவாகிவிடும். எனவேதான், பழைய வீட்டை வாங்கினாலும் அதைப் பராமரிப்பதற்குப் பதிலாக முற்றிலும் அதை இடித்துவிட்டு புதிதாகக் கட்டுகின்றனர்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு மேற்காணும் உருவகத்தை நேரடிப் பொருளில் சொல்கிறது. எப்படி?

வாழ்க்கை மாற்றம் வேண்டுமென்றால் பழைய வாழ்க்கையோடு உள்ள உறவை முழுமையாக முறிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க வேண்டும். முறிவுகளே முடிவுகள் என்பது சொல்வதைப் போல அவ்வளவு எளிதல்ல.

'முறிவு' என்ற வார்த்தை நமக்கு பயம் தருகிறது. 'எலும்பு முறிவு,' 'மண முறிவு,' 'நட்பு முறிவு' போன்றவற்றை நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால், முறிவு இல்லாமல் வாழ்க்கை இல்லை. எப்படி? நாம் பிறந்தவுடன் நம்மையும் நம் தாயையும் இணைக்கும் தொப்புள் கொடி முறிக்கப்படுகிறது. இந்த முறிவு இல்லை என்றால், நம் வாழ்க்கையும், நம் தாயின் வாழ்க்கையும் ஆபத்தில் முடியும். பள்ளிக்குள் நுழையும்போது வீட்டில் அனுபவித்த நம் சுதந்திரம் முறிக்கப்படுகிறது. கல்லூரிக்குள் நுழையும்போது பள்ளியின் உறவு முறிவுபடுகின்கிறது. படிப்பு முடிந்து திருமணம் என்றவுடன் பல நட்பு உறவுகள் முறிகின்றன. திருமணத்திற்குள் நுழையும்போதும் நாம் பல பேரின் உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இறுதியில், ஒட்டுமொத்தமாக எல்லா உறவுகளையும் முறித்துக்கொண்டு நாம் இவ்வுலகை விட்டுச் செல்கின்றோம். நாம் பேசும்போது பேசுகின்ற முதல் வார்த்தை முறிந்து இரண்டாம் வார்த்தை பிறந்தால்தான் உரையாடல் இனிக்கும். நாம் நடக்கும்போது எடுக்கின்ற முதல் அடி முறிந்து இரண்டாம் அடி பிறந்தால்தான் பயணம் தொடங்கும். நம் உடலின் செல்கள் ஒவ்வொரு நாளும் தங்களுடைய பழைய இயல்பை முறித்தால்தான் உயிர் இருப்பு சாத்தியமாகும். ஆக, முறிவுகள் நம் வாழ்வின் எதார்த்தங்கள்.

இறைவனைப் பின்பற்றுதல் அல்லது இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கடந்த கால வாழ்க்கையை, கடந்த கால உறவுகளை முறித்துக்கொள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்குக் கற்பிக்கிறது. கடந்தகாலத்தோடு இருக்கும் தொடர்பை முறிக்கும்போதுதான் புதிய வாழ்க்கையையும் புதிய பணியையும் தொடங்க முடியும். அருள்பணி நிலையில் இணையும் ஒருவர் தன் குடும்பத்தோடு இணைந்திருக்கும் இணைப்பை முறிக்கிறார். புதிய வாழ்வைத் தொடங்குகிறார். திருமண உடன்படிக்கையில் இணையும் மணமக்கள் தத்தம் குடும்பங்களோடு உள்ள உறவுகளை முறிக்கும்போதுதான் தங்களுக்கிடையே உள்ள குடும்ப உறவைத் தொடங்குகிறார்கள்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். 1 அர 19:16,19-21) எலியா தன்னுடைய இறைவாக்குப் பணியை நிறைவு செய்கிறார். பணியின் இறுதியில், நிம்சியின் மகன் ஏகூவை இஸ்ரயேலுக்கு அரசராகவும் சாபாற்றின் மகன் எலிசாவை இறைவாக்கினராகவும் அருள்பொழிவு செய்யுமாறு பணிக்கிறார் ஆண்டவராகிய கடவுள். எலிசா ஒரு விவசாயி. கடவுளால் உந்தப்பட்ட எலியா, தன்னுடைய உழவுத்தொழிலில் மூழ்கியிருந்த எலிசாவைச் சந்தித்து அவர்மேல் தன் போர்வையைப் போடுகின்றார். புதிய ஆடையை ஒருவர்மேல் போர்த்துவது என்பது புதிய பணிக்கு ஒருவரை அனுப்பவது என்பது பொருளாகும். ஆகையால்தான், அருள்பணியாளர் திருநிலைப்படுத்தப்படும் நிகழ்விலும் அவருக்கு புதிய திருவுடை அணிவிக்கப்படுகிறது. அந்தத் திருவுடையும் ஏறக்குறைய போர்வையைப் போலத்தான் இருக்கிறது. தன்மேல் போர்வை போர்த்தப்பட்டவுடன் தன் வாழ்வு மாற வேண்டும் என்பதை உடனடியாக உணர்கிறார் எலிசா. 

ஆகையால், எலியாவின் அனுமதியின்பேரில் அவர் தன்னுடைய எருதுகளை அப்படியே விட்டுவிட்டு, தன் பெற்றோர்களை முத்தமிட - பிரியாவிடை கொடுக்க - வீட்டிற்குச் செல்கின்றார். அந்தக் காலத்தில் வீடுகளும் தோட்டங்களும் தூரமாக இருந்திருக்க வேண்டும். இவருடைய பிரியாவிடை இவருடைய குடும்பத்தின்மேல் உள்ள உறவை முறிக்கும் நிகழ்வாக அமைகிறது. தன்னுடைய உழவுத் தொழிலுக்கு இன்றியமையாதவையாக இருந்த ஏரை விறகாக்கி, மாடுகளை உணவுப் பொருளாக்கி தன் மக்களுக்கு விருந்து படைக்கின்றார் எலிசா. தன்னுடைய ஏரை உடைப்பதாலும், எருதுகளைக் கொல்வதாலும் தன்னுடை கடந்த காலத்தோடு தான் கொண்டுள்ள உறவை முறிக்கிறார் எலிசா. இனி அவர் நிலத்தை உழப்போவதில்லை. தான் தன்னுடைய ஏர் மற்றும் எருதுகளால் சமைத்த உணவை மக்களுக்குக் கொடுத்ததன் வழியாக, இனி தான் காய்கறிகளும் தானியங்களும் அவர்களுக்குத் தரப் போவதில்லை என்றும், இறைவார்த்தையே இனி அவர்களுக்கு அவர் வழங்கும் உணவாக இருக்கும் என்றும் உருவகமாக முன்னுணர்த்துகின்றார். எலிசாவின் இச்செயல்கள் அவர் தன்னுடைய வாழ்வுப் பாதையை முற்றிலும் மாற்றியதை உருவகங்களாக உணர்த்துகின்றன. இந்த மாற்றத்தின் முதல்படி தன்னுடைய பழைய வாழ்விலிருந்து அவர் தன்னையே முறித்துக்கொண்டதுதான்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். கலா 5:13-18), பவுல் தன்னுடைய வாழ்வில் எடுத்த மிகப்பெரிய முடிவின் சூழலைப் பின்புலமாகக் கொண்டுள்ளது. கலாத்தியருக்கு எழுதும் திருமுகத்தில் பவுல், ஒருவர் கடவுள் முன் எப்படி ஏற்புடையவராகிறார் என்பதைப் பற்றி அதிகம் பேசுகிறார் பவுல். இயேசுவைச் சந்திக்குமுன் பவுல் யூதச் சட்டத்தையும், முறைமைகளையும் கடைப்பிடிப்பவராக இருக்கிறார். ஏனெனில், கடவுளுக்கு பணி புரிவதற்கும் அவருக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் இதுவே சரியான மற்றும் ஒரே வழி என அவர் எண்ணினார். ஆனால், உயிர்த்த கிறிஸ்துவைச் சந்தித்தவுடன் அவருடைய வாழ்க்கை தலைகீழாகிறது. ஒரு காலத்தில் சட்டத்திற்கு மிகவும் பிரமாணிக்கமாக இருந்த பவுல் இயேசுவின் திருத்தூதராகிறார். மேலும், கிறிஸ்துவின்மேல் கொண்ட நம்பிக்கையால் மட்டுமே ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றார் என்று அறிவிக்கத் தொடங்குகிறார். இப்படியாக அவருடைய வாழ்வு முற்றிலும் மாறுகிறது. திருச்சட்டத்தின் மேல் வெறிகொண்ட பரிசேயராக இருந்த பவுல் கிறிஸ்துவின் அர்ப்பணமிக்க பணியாளனாக மாறுகிறார்.

இன்றைய வாசகத்தில் - ஒட்டுமொத்த திருமடலில் குறிப்பிடுவதுபோல - கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை கொண்டாலும் யூதச் சட்டத்தையும் மரபுகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொன்ன சில யூத கிறிஸ்தவர்களை எதிர்க்கின்றார். 'கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து - சட்டத்திலிருந்து - நம்மை விடுவித்துள்ளார்' என்று சொல்லும் இடத்தில் 'சட்டத்தை,' 'அடிமைத்தளை எனும் நுகம்' என்கிறார். இச்சுதந்திரத்தில் நம்பிக்கையாளருக்குத் தேவையானதெல்லாம் கிறிஸ்துவின்மேல் கொள்ளும் நம்பிக்கை மட்டுமே. கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒட்டுமொத்த யூதச் சட்டமும், 'உன்மீது நீ அன்புகூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வாயாக' என்ற ஒரே கட்டளையில் அடங்கிவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்வை உந்தித்தள்ளுவது யூதச்சட்டம் அல்ல. மாறாக, தூய ஆவி. கிறிஸ்தவ வாழ்விற்கான அடித்தளங்களின் மேல் அழுத்தம் கொடுக்கும் பவுல், தன்னுடைய பரிசேயக் கடந்த கால வாழ்வோடு தனக்குள்ள உறவை முறித்துக்கொள்வதோடு, கலாத்திய நகர் திருச்சபையும் அவ்வாறே தன்னுடைய யூதச் சட்ட பிரமாணிக்கத்தை முறித்துக்கொள்ள அழைக்கிறார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 9:51-62), இயேசுவின் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனை வருகிறது: 'விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, தன் பயணத்தைத் தொடங்குகிறார்.' தன்னுடைய இறப்பு அங்கே காத்திருக்கிறது என்றாலும் துணிவுடன் இப்பயணத்தை மேற்கொள்கிறார் இயேசு. இப்படிச் செய்வதன் வழியாக தன்னுடைய அமைதியான, வெற்றிகரமான கலிலேயப் பணியை முறித்து, தன்னுடைய இறப்பு மற்றும் உயிர்ப்பு நோக்கி நகர்கின்றார். இனி இவர்  யாருக்கும் நலம் அளிக்கமாட்டார். இறையாட்சி பற்றி அறிவிக்க மாட்டார். மாறாக, சீடத்துவம் பற்றிப் போதித்து, தன்னுடைய இறப்புக்காக தன்னையும் தன் சீடர்களையும் தயாரிப்பார்.

இன்றைய வாசகத்தின் இரண்டாம் பகுதி நோக்கு மாற்றத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. எலியா மற்றும் எலிசா நிகழ்வின் கூறுகள் இங்கேயும் காணப்படுகின்றன. முதலில், இயேசுவின் சீடர்கள் யாக்கோபும் யோவானும், எலியாவைப் போல சமாரிய நகர் மேல் நெருப்பு பொழியப்பட விரும்புகின்றனர் (காண். 2 அர 1:10). ஆனால், எலியாவுக்கு மாறாக, இயேசு, சீடர்களைக் கடிந்துகொள்வதுடன் பகைவர்க்கும் அன்பு என்ற கட்டளையின் அடிப்படையிலேயே அவர்கள் நடக்க வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகின்றார். 

தொடர்ந்து, இயேசு எருசலேம் நோக்கிச் சென்றபோது மூன்று நபர்களைச் சந்திக்கின்றார். முதலாமவர் தானாகவே முன்வந்து இயேசுவைப் பின்பற்ற விரும்புகின்றார். தன்னைப் பின்பற்றுபவர்கள் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார் இயேசு. இயேசு தன்னுடைய மக்கள் மட்டுமல்ல சமாரியர்களின் நிராகரிப்பையும் அனுபவித்தார். அவருக்கு 'தலை சாய்க்க இடமில்லை.' அவரைப் பின்பற்றுபவர்களும் அதே நிலைக்க ஆளாகத் தயாராக இருக்க வேண்டும். அடுத்ததாக, தன்னைப் பின்பற்றுமாறு ஒருவரை அழைக்கிறார் இயேசு. ஆனால், அவர் தன்னுடைய தந்தையை அடக்கம் செய்ய அனுமதி கோருகின்றார். அவர் எலிசாவைப் போல தன்னுடைய குடும்பத்தின் உறவை முறிக்க நினைக்கின்றார். ஆனால், இது ஒரு சாக்குப்போக்காக இருக்கின்றது. தன்னுடைய தந்தை இருக்கும் அளவு இயேசுவைப் பின்பற்றுதல் சாத்தியம் இல்லை என்று மறைமுகமாகச் சொல்கின்றார் அந்த நபர். இவருடைய பதிலிலிருந்து இவர் தன்னுடைய குடும்பத்தையே முதன்மைப்படுத்துவது தெரிகிறது. எலிசா தன்னுடைய குடும்ப உறவை முறித்ததுபோல இவர் செய்ய மறுத்ததால் இவர் தகுதியற்றவராக மாறுகிறார். மூன்றாம் நபர் இயேசுவைப் பின்பற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறார். ஆனாலும், தன் வீட்டாரிடம் பிரியாவிடை பெற அனுமதிக்குமாறு வேண்டுகிறார். 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப்பார்ப்பவர்' உருவகத்தின் வழியாக, இயேசு அவரை முன்நோக்கிப் பார்க்க அழைக்கிறார். இவ்வாறாக, இயேசுவைப் பின்பற்றும் சீடர்கள் தங்களுடைய கடந்த காலத்தை முறித்தவர்களாகவும், தங்களுடைய முதன்மைகளை மறுவரையறை செய்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆக, இன்றைய இறைவாக்கு வழிபாடு கடினமான சவாலை நமக்குக் கொடுக்கிறது. சீடத்துவத்துடன் இணைந்துவரும் 'முறிவு என்னும் முடிவை' நமக்கு வலியுறுத்துகிறது. தன்னுடைய அமைதியான உழவுத் தொழிலை முறிப்பதால்தான் எலியா இறைவாக்கினராக மாறுகிறார். பவுல் தன்னுடைய பரிசேய பிரமாணிக்கத்தையும், யூத சட்டத்தையும் முறித்தால்தான் இயேசுவின் திருத்தூதராக மாற முடிகிறது. இயேசு தன்னுடைய பணி வாழ்வை முறித்துக்கொண்டதால்தான் அவரால் தன்னுடைய பாடுகள் நோக்கி பயணம் செய்ய முடிகிறது. மேலும், தன்னைப் பின்பற்ற விரும்பும் தன் சீடர்களும் முறித்துக்கொள்ள வேண்டியவை பற்றி அவர்களுக்குக் கற்பிக்கின்றார் இயேசு. கடவுள் நம் வாழ்வைத் தன் கைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டுமென்றால், நாம் கைகளை உதறிவிட்டு நம் கைகளை அவரை நோக்கி நீட்டுவது அவசியம். தங்களுடைய கடந்த காலத்தை முறித்துக்கொள்ளும் ஒருவரே புதிய வாழ்க்கை நோக்கி, புதிய பணியை நோக்கி முன்னேறிச் செல்ல முடியும். இப்படிப்பட்ட ஒருவரின் மனநிலையைத்தான் இன்றைய பதிலுரைப்பாடலில் ஆசிரியர், 'வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர். உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு' (காண். திபா 16:11) என்று பாடுகின்றார்.

நம் வாழ்வில் முறிவுகளை முடிவுகளாக எடுப்பது எப்படி?

1. எலிசா போல நம்முடைய பாதுகாப்பு வளையத்தை உடைக்க வேண்டும்

எலிசா ஒருவேளை தன்னுடைய ஏரை உடைக்காமல், எருதுகளைக் கொல்லாமல் இருந்திருந்தால் என்ன நடக்கும்? தனக்கு ஒரு ஃபால் பேக் வைத்திருப்பார். தன்னுடைய இறைவாக்குப் பணி தோல்வியாக இருந்த நேரத்தில் உழவுத்தொழிலுக்குத் திரும்பியிருப்பார். அல்லது இதைச் செய்து கொண்டே அதைச் செய்யலாமே என்று இரண்டையும் செய்ய முயற்சித்து விரக்தியடைந்திருப்பார். அல்லது இவர் இறைவாக்குப் பணி செய்யும்போது இவருடைய எண்ணமெல்லாம் ஏரின் மேலும் எருதுகள்மேலும்தான் இருக்கும். 'ஆனால் தேவையானது ஒன்றே' என்பது வாழ்வின் பாடமாக இருக்கிறது. தாயின் வயிற்றில் இருப்பது குழந்தைக்கு என்றும் பாதுகாப்பு தான். ஆனால், அந்தப் பாதுகாப்பு வளையம் முறியவில்லை என்றால் அது குழந்தைக்கே ஆபத்தாக முடியும். இன்று அருள்பணி நிலையில் இருக்கும் நான் எனக்கென உருவாக்கி வைத்திருக்கும் ஃபால் பேக் மெக்கானிஸம் எவை? என்னுடைய குடும்பமா? நட்பு வட்டமா? படிப்பா? இன்று இறைப்பணி செய்யும்போது என்னுடைய மனம் எங்கே செல்கிறது? என்னுடைய மனம் செல்லும் இடத்திற்காக நான் என் பணியோடு சமரசம் செய்கிறேனா? என்னுடைய பாதுகாப்பு வளையத்தை நான் உறுதியாக்கிக்கொள்வதில் கருத்தாயிருக்கிறேனா? அல்லது வளையத்திலிருந்து வெளியே வர முயற்சிக்கிறேனா?

2. பவுல் போல துணிச்சல்

இரண்டு தெரிவுகளுக்கு இடையே நிற்பது நமக்கு மனஉளைச்சலை உண்டாக்குவதோடு, 'ஒன்றுக்கொன்று எதிராக உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய இயலவில்லை' என்கிறார் பவுல். நாம் பழையது ஒன்றை முறித்து முன்னே செல்வதை ஆங்கிலத்தில் 'ப்ரேக் த்ரூ' என்கிறார்கள். அதாவது, ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற ஒருவர் தன்னுடைய பழைய சாதனையை முறிக்கும்போது 'ப்ரேக் த்ரூ' அடைகிறார். இதை அவர் அடைவதற்குச் செய்ய வேண்டிய ஒன்று, 'ப்ரேக்கிங் வித்.' தன்னுடைய பழைய பழக்கம், அல்லது பழைய செய்முறையை அவர் விட வேண்டும். 'ப்ரேக்கிங் வித்' செய்வதற்கு நிறைய துணிச்சல் தேவை. 

3. இயேசு போல சமநிலை

கலிலேயாவில் இயேசுவின் பணி நன்றாக இருக்கிறது. நிறையப் பேர் குணம் பெறுகிறார்கள். அவருடைய புகழ் எங்கும் பரவுகிறது. இதைக் கண்டு தேங்கிவிடவில்லை அவர். தன்னுடைய இலக்கில் அவர் தெளிவாக இருக்கின்றார். சமாரியாவைக் கடந்து செல்லும்போது எதிர்ப்பு வருகிறது. ஆனால், எதிர்ப்பைக் கண்டு அவர் பின்வாங்கவில்லை. கலிலேயர்களைத் திருப்திப்படுத்த அவர்களோடு தங்கவில்லை. சமாரியர்களை எதிர்த்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை, பயப்படவில்லை. ஆக, யாரையும் திருப்திப்படுத்த நினைக்காத, யாரையும் கண்டு பயப்படாத ஒருவர் சமநிலை பெற்றிருப்பார். இந்தச் சமநிலை கொண்டு அவர் தன்னுடைய எந்த நிலையிலும் எதையும் முறித்து முன்னேறத் தயாராக இருப்பார்.

இறுதியாக,

ஒரு பழமொழி உண்டு: 'பறக்க நினைக்கின்ற புறா மண்ணிலிருந்து எழும்பி எறும்புப் புற்றில் அமர்ந்தால் அது பறந்தது என்றாகிவிடாது.' மண்ணும் எறும்பும் புற்றும் ஒன்றுதான். இன்று சீடத்துவத்திற்கு மட்டுமல்ல. நான் விட்டுவிடுகின்ற எந்த தீய பழக்கத்திற்கும் முறிவு மிக அவசியம். இன்று நான் இறைவனைப் பின்தொடர்வதிலிருந்து என்னைப் பின்னிழுக்கும் பழக்கம் எது? நான் இவ்வுலகில் மிகவும் மதிப்புக்குரியவர்கள் அல்லது அன்புக்குரியவர்கள் என்று யாரைக் கருதுகிறேன்? நான் கிறிஸ்துவைப் பின்பற்றுவதிலிருந்து இவர்கள் என்னைப் பின்நோக்கி இழுக்கிறார்களா?
எல்லாரையும் சேர்த்து இழுத்துக்கொண்டு முன்னே செல்ல முடியும் என்கிறது மூளை. இல்லை முறித்துவிடத்தான் வேண்டும் என்கிறது மனம். மூளைக்கும் மனத்திற்குமான போராட்டத்திலேயே நகர்கிறது வாழ்க்கை.

முறிவுகளே முடிவுகள் ஆனால் முன்னேறுவது எளிதாகும்!

Friday, June 24, 2022

மரியாவின் மாசற்ற இதயம்

இன்றைய (25 ஜூன் 2022) நினைவு

மரியாவின் மாசற்ற இதயம்

இயேசுவின் திருஇதயத் திருநாளுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது மரியாளின் மாசற்ற இதயம். இயேசு தன் அன்பை மனுக்குலத்திற்குக் காட்டியதை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியா இயேசுவையும் இறைத்தந்தையையும் அன்பு செய்ததை அவருடைய இதயம் சுட்டிக்காட்டுகிறது. மரியாவின் இதயத்தின் வழியாக நம் அனைவருடைய இதயங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே இத்திருவிழாவின் நோக்கம்.

லூக்கா நற்செய்தி 2ஆவது பிரிவில், 'மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்' என இருமுறை வாசிக்கின்றோம். மேலும், மரியாவின் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும் என்று சிமியோன் இறைவாக்குரைக்கின்றார். 'இயேசுவின் சிலுவையின் கீழ் நின்ற மரியா தன் உள்ளத்தால் தன்னையே அவருடன் சிலுவையில் அறைந்துகொண்டார்' என மொழிகின்றார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைத் தன் உடலில் ஏந்தியதை விட, உள்ளத்தில் ஏந்தியதால்தான் வணக்கத்துக்குரியவர் ஆனார் எனத் தொடர்கிறார் அகுஸ்தினார். 

மரியாளின் மாசற்ற இதயத்தை நினைவாக மட்டுமே திருச்சபை கொண்டாடுகிறது. சில இடங்களில் இதற்கு விழா அல்லது பெருவிழாவும் எடுக்கப்படுகிறது.

மரியாளின் இதயத் துடிப்பை நாம் நற்செய்தி நூல்கள் மற்றும் திருத்தூதர் பணிகளில் நிறைய வாசிக்கின்றோம்.

வானதூதரின் வார்த்தை கேட்டு, 'இது எத்தகையதோ?' என்று வியப்பில் கலங்குகிறது இதயம்.

'இது எங்ஙனம் ஆகும்?' என்று கேள்வி கேட்டு தயங்குகிறது இதயம்.

'எலிசபெத்துக்கு குழந்தையா?' என்று துள்ளிக் குதித்து உதவ ஓடுகிறது இதயம்.

'சத்திரத்தில் இடமில்லையா?' - பயம் கொள்கிறது இதயம்.

'வந்த இடையர்களுக்கு இடம் எப்படித் தெரிந்தது?' - வியப்பு கொள்கிறது இதயம்.

'பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் என் குழந்தைக்கா!' - ஆச்சர்யம் கொள்கிறது இதயம்.

'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்கக் கூடாதா?' - மகனின் கேள்வி கேட்டு குழம்புகிறது இதயம்.

'உன் மகனுக்கு பித்து பிடித்துவிட்டது!' - ஊராரின் உளறல் கேட்டு பதைபதைக்கிறது இதயம்.

'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது!' - இல்லத்தாரின் இழுக்கு பற்றிக் கவலை கொள்கிறது இதயம்.

'இதோ! உம் மகன்!' - மேலே பார்ப்பதா? கீழே பார்ப்பதா? குழம்புகிறது இதயம்.

'மகனுக்குப் பின் இறையாட்சி இயக்கத்திற்கு என்ன ஆகும்?' - மேலறையில் பெந்தகோஸ்தே பெருவிழாவில் செபிக்கிறது இதயம்.

இவ்வாறாக, இயேசுவின் பிறப்புக்கு முன், இயேசுவின் பிறப்பில், வாழ்வில், பணியில், இறப்பில், உயிர்ப்பில், விண்ணேற்றத்திற்குப் பின் என அவருக்காகவே துடிக்கிறது அன்னை கன்னி மரியாளின் இதயம்.

'உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்!' என்று தன் உள்ளம் வாளால் காயம்படக் கையளித்தார் அன்னை.

காயம்படுவதற்கும், குணமாக்குவதற்கும் இதயங்கள் நமக்கு என்று நினைவூட்டுகிறது மரியின் இதய நினைவு.


Thursday, June 23, 2022

இயேசுவின் திருஇதயம் - நம் இல்லத்தின் தலைவர்

'நம் இல்லங்களில் திருஇருதய ஆண்டவரின் திருவுருவத்தை படம் அல்லது சுரூபமாக வைத்து, நம் இல்லத்தையும் இல்லத்தில் உள்ளவர்களையும் அவருக்கு அர்ப்பணமாக்குவது ஏன்?' - இந்தக் கேள்வி எனக்கு நெடும் நாள்களாக எழுவதுண்டு. சில நாள்களுக்கு முன் அதற்கான விடை இதுவாக இருக்குமோ? என்ற எண்ணமும் தோன்றியது.

அது என்ன?

'கிளாடியேட்டர்' என்னும் ஆங்கிலத் திரைப்படத்தில் கொமாதுஸ் (மார்க்கு அவுரேலியுவின் மகன்) தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடந்துகொண்டிருப்பான். ஏனெனில், அவனுடைய மனதில் மாக்ஸிமுவை அழிக்க வேண்டும் என்ற வன்மம் நிறைய இருக்கும் இந்த நேரத்தில் கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும் தன் அக்காவின் மகன் லூசியுஸ் அருகில் வருவான். அங்கு நிற்கின்ற அக்காவிடம், 'இவன் நன்றாகத் தூங்குகிறான். ஏனெனில், இவன் அன்பு செய்யப்படுகின்றான்' என்பார்.

நாம் நம் இல்லத்தில் நன்றாகத் தூங்குகிறோம். ஏனெனில், நாம் அன்பு செய்யப்படுகிறோம். நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகின்றோம். நம்மை நோக்கி இறைவனின் இரு கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. ஆகையால் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அந்த இரு கண்கள்தாம் திருஇருதய ஆண்டவரின் கண்கள்.

ஆண்டவராகிய இயேசுவின் திருவுருவம் நம் இல்லத்தில் வீற்றிருந்து நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கின்றார். அவரின் பார்வை நாம் கடவுளால் அன்பு செய்யப்படுகிறோம் என்ற உறுதியான நம்பிக்கையைத் தருகின்றது. அந்த நம்பிக்கையில் நம் வாழ்க்கை நகர்கிறது.

பார்வைக்கும் கடவுளுக்கும் நிறையத் தொடர்பு இருக்கின்றது?

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகின்ற ஆபிரகாமின் பணிப்பெண் ஆகார் பாலைவனத்தில், 'என்னைக் காண்கின்றவரை நான் இங்கே கண்டேன்' என்று சொல்லி, தன் இறைவனை, 'காண்கின்ற இறைவன்' அல்லது 'காணும் கடவுள்' என அழைக்கின்றார் (காண். தொநூ 16:13).

மெய்யியல் அறிஞர் ஸ்பினோசா என்பவர் ஒரு புதிய தத்துவத்தைக் கண்டுபிடித்தார் – 'காணியல்வாதம்.' காண்கின்ற ஒன்றுதான் உண்மை இவரைப் பொருத்தவரை. அல்லது நான் காணும் ஒன்றுதான் உயிர்வாழ்கின்றது. நான் கண்டுகொள்ளாதது எனக்கு ஒரு பொருட்டல்ல. எடுத்துக்காட்டாக, எனக்கு முன் ஒரு பேனா இருக்கிறது. எப்படி இருக்கிறது? அதை நான் காண்பதால் இருக்கிறது. ஆனால், நான் உணவறைக்குப் போகிறேன். அந்த நேரத்தில் என் அறையில் இந்தப் பேனா இருக்குமா? இருக்கும். இருக்குமா? எப்படி? நான்தான் அதைப் பார்க்கவில்லையே? இல்லை! ஆனால், கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறாரே! என்கிறார் ஸ்பினோசா.

ஆக, கடவுள் பார்க்கும் எதுவும் வாழ்கிறது. இருக்கிறது. இயங்குகிறது.

கடவுள் நம்மைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற இனிய செய்தியைத் தருகின்றது நாம் இம்மாதம் 24ஆம் தேதி கொண்டாடுகின்ற இயேசுவின் திருஇதயத் திருநாள்.

'நான் ஒருவரால் அன்பு செய்யப்படுகிறேன்' என்று உணர்வதே நமக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையையும் தன்மதிப்பையும் கொடுக்கிறது என்கிறார் ப்ராய்ட். ஒரு குழந்தை நிம்மதியாக உணரக் காரணம் தாயால் அன்பு செய்யப்படுகின்ற உணர்வே.

இன்று, நிபந்தனைகள் இல்லாமல் நம்மை அன்பு செய்ய ஒருவர் இருக்கிறார் என்ற செய்தியை நாம் பெறுகிறோம். 'இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்புகூர்ந்தேன் ... நடைபயிற்றுவித்தேன் ... கையில் ஏந்தினேன் ... பரிவு என்னும் கட்டால் பிணைத்தேன் ... அன்புக் கயிறுகளால் கட்டி வந்தேன் ...' என இஸ்ரயேல் மக்களைப் பார்த்து ஆண்டவராகிய கடவுள் சொல்கின்றார் (காண். ஓசே 11). ஆக, இஸ்ரயேலின் மேன்மையான நிலை அவர்களுடைய தகுதியால் வந்தது அல்ல, மாறாக, ஆண்டவராகிய கடவுளின் இரக்கப் பெருக்கால் வந்தது. நாம் அன்பு செய்யும்போதும் அப்படித்தான்! நம் அன்புக்குரியவரை ஒரு குழந்தைபோல அள்ளிக்கொள்கின்றோம், கையில் ஏந்துகின்றோம், நடை பயிற்றுவிக்கின்றோம், பரிவு காட்டுகின்றோம். அதாவது, நிர்கதியில் இருக்கின்ற இஸ்ரயேலைத் தன் மகன் என்று கொண்டாடுகின்றார் கடவுள்.

கடவுளின் இந்த அன்பைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'கிறிஸ்துவுடைய அன்பின் ஆழம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக!' (எபே 3:18) என்கிறார். இங்கே, 'அன்பு' மற்றும் 'அறிவு' என்ற இரண்டு தளங்களில் உரையாடுகின்றார். கிறிஸ்துவின் அன்பை அறிவுக்கு எட்டாதது என்கிறார். அதாவது, 'ஒன்றும் ஒன்றும் இரண்டு' என்ற கணிதம் போல கடவுளின் அன்பைப் புரிந்துகொண்டால் எத்துணை நலம். அப்படி புரிந்துகொள்வதே கடவுளின் முழு நிறைவு என்கிறார்.

இயேசுவின் குத்தப்பட்ட விலாவிலிருந்து இரத்தமும் தண்ணீரும் வெளிவருகின்றன. குத்தப்பட்ட இதயம் நமக்கு அழகான செய்தியைத் தருகின்றது. அதாவது, அந்த இதயம் தன் கண்களைத் திறந்து நம்மைப் பார்க்கிறது. ஆக, காயம் பட்டாலும் அன்பு தன் இதயத்தைத் திறந்து அடுத்தவரைப் பார்க்கத் தொடங்குகிறது.

இயேசுவின் திருஇருதயம் நமக்கு மூன்று செய்திகளைத் தருகின்றது:

(அ) அவர் நம்மைக் காண்கின்ற கடவுள். அவரின் கருணைக்கண்கள் நம்மேல் பட, நாம் வாழ்கிறோம். ஆக, ஒரு சிறிய படத்தையாவது நம் முன் வைத்துக்கொள்வோம்.

(ஆ) அவர் நிபந்தனை இல்லாமல் நம்மை அன்பு செய்கிறார். 

(இ) அவரைக் காயப்படுத்தினாலும் அவர் நம்மை அன்பு செய்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ், 'கடவுளை அன்பு செய்வது எளிது. ஆனால், அவர் நம்மை அன்பு செய்ய அனுமதிப்பதுதான் கடினம்' என்கிறார். அவரை அனுமதித்தல் நலம்.

இத்திருநாள் அன்று இயேசுவின் திருஇதயத்தை நம் இல்லங்களின் தலைவராக அணி செய்வோம். இந்த ஆண்டு, இதே நாளில் (24 ஜூன் 2022), நம் இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை, நம் மண்ணின் கோதுமை மணி புனித தேவசகாயம் அவர்கள் புனிதர்நிலைக்கு உயர்த்தப்பட்டதற்கு நன்றி கூறி இறைவேண்டல் செய்கிறது. இயேசுவின் திருஇதயத்திற்கு நம் குடும்பங்களை அர்ப்பணம் செய்யும் நிகழ்வும் இதில் அடங்கியுள்ளது.

இயேசுவின் திருஇருதயமே! எங்கள் இதயங்கள் உம் இதயத்தைப் போல இருக்கச் செய்தருளும்!


Wednesday, June 22, 2022

திருமுழுக்கு யோவான் பிறப்பு

இன்றைய (23 ஜூன் 2022) பெருவிழா

திருமுழுக்கு யோவான் பிறப்பு

இந்த ஆண்டு, ஜூன் மாதம் 24ஆம் தேதி இயேசுவின் திருஇருதயப் பெருவிழா வருவதால், அன்று கொண்டாடப்பட வேண்டிய திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழாவை இன்று (23 ஜூன் 2022) நாம் கொண்டாட திருஅவை நம்மை அழைக்கிறது.

திருஅவை மூவரின் பிறந்தநாள்களைத் தான் கொண்டாடுகிறது: இயேசு, இயேசுவின் தாய் மரியா, இயேசுவின் முன்னோடி திருமுழுக்கு யோவான். இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:57-66,90) திருமுழுக்கு யோவானின் பிறப்பு நிகழ்வையும், பெயரிடுதல் நிகழ்வையும் வாசிக்கின்றோம்.

'இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?' 

- இதுதான் சக்கரியா-எலிசபெத்து இல்லத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் உள்ளத்தில் எழுந்த ஒரே கேள்வி.

இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சக்கரியாவின் பாடலிலிருந்து வாசகர் தெரிந்துகொள்ள முடியும்: 'நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய். ஏனெனில், பாவமன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய்!'

திருமுழுக்கு யோவான் பின்வரும் வாழ்க்கைப் பாடங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றார்:

1. தன் இலக்கு எது என்பதை தன்னுடைய செயல்களில் வெளிப்படுத்தினார்.

இயேசுவின் செயல்கள் பல நேரங்களில் அவருடைய இலக்கை மக்களுக்குத் தெளிவாகச் சொல்லவில்லை. 'இவர் யாரோ?' என்று மக்கள் எண்ணும்படியாகவே அவர் வைத்திருந்தார். ஆனால், திருமுழுக்கு யோவான் யார் என்பதை மக்கள் தெளிவாக அறிந்திருந்தனர். ஏனெனில், அவருடைய செயல்கள் அவருடைய இலக்கை அப்படியே வெளிப்படுத்தின.

2. இரண்டாம் இடத்தில் இருப்பது

இன்றைய உலகில் நாம் நம்மிடம் இல்லாத ஒன்றையும் இருப்பதாகச் சொல்லிப் பெருமைப்படுகிறோம். ஆனால், அவர், 'நீர் மெசியாவா?' என்று மக்கள் கேட்டபோது, 'இல்லை' என்றும், 'மிதியடி வாரை அவிழ்ப்பவர்' என்றும் சொல்கின்றார். மேலும், மணமகனுக்கு அருகில் நிற்கும் தோழன் என்கிறார். திருமண நிகழ்வுகளில் மணமகனின் மேல் அள்ளி எறியப்படும் வெளிச்சம் தோழன்மேல் விழுவதில்லை. மணமகன் தோழர்களை யாரும் பார்ப்பதில்லை. தன்னை இரண்டாம் இடத்தில் வைத்துக்கொள்வதன் வழியாக, 'இரண்டாம் இடத்தில் இருந்தால் என்ன தவறு?' என்று நம்மைக் கேட்கத் தூண்டுகின்றார் யோவான்.

3. செயல்கள் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன

இதையே நம் இன்றைய வாழ்வியல் பாடமாக எடுத்துக்கொள்வோம். ஆங்கிலத்தில், .... என்ற ஒரு சொல்அடை உண்டு. என்னுடைய இலக்குகள் என் வெறும் எண்ணங்களாக மட்டுமே இருந்தால் நான் இலக்கை அடைய முடியாது. நான் ஓர் எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற இலக்கை வைத்திருக்கிறேன் என்றால், நான் தினமும் ஒரு பக்கமாவது எழுத வேண்டும். எழுதவே செய்யாமல் நான் எழுத்தாளன் ஆக முடியாது. ஆக, 'எழுத்தாளன் ஆக வேண்டும்' என்ற என்னுடைய எண்ணம் 'எழுதுதல்' என்னும் செயலில் வெளிப்பட வேண்டும். அப்படி வெளிப்பட்டால்தான் அது என்னுடைய முதன்மை என்பது தெளிவாகும்.

திருமுழுக்கு யோவானின் செயல்கள் அவருடைய இலக்கை நோக்கியதாகவே இருந்தன. பாலைநிலத்தில் 'மறைந்து' வாழ்கின்றார். ஏனெனில், அது அவருடைய பணி. வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு, ஒட்டக மயிராடையை அணிகின்றார். அதுதான் அவருடைய எளிய வாழ்க்கை முறை. திருமுழுக்குக் கொடுக்கின்றார். அதுதான் அவருடைய பணி. தலை வெட்டுண்டு இறந்து போகின்றார். அதுதான் அவருடைய நியதி. தான் மெசியாவின் முன்னோடி எனக் கனவு காணவில்லை அவர். முன்னோடியாகச் செயல்படுகிறார்.

ஆக, செயல்கள் நம் முதன்மைகளை வெளிப்படுத்துகின்றன. திருமுழுக்கு யோவானின் பிறப்பு திருவிழாவில் நம் முதன்மைகளைச் சரிசெய்வதோடு, இலக்குகளுக்கு ஏற்றச் செயல்களைச் செய்ய முற்படுவோம்.

4. மகிழ்ச்சி

திருமுழுக்கு யோவான் தாயின் வயிற்றில் இருக்கும்போது மகிழ்கின்றார். இவருடைய பிறப்பால் சுற்றத்தார் மகிழ்கின்றனர். மணமகனுக்கு அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்டு மகிழும் நண்பனே தான் எனத் தன்னைப் பற்றி எடுத்துரைக்கின்றார் யோவான். மகிழ்ச்சி என்பது பின்வருவனவற்றில் அடங்கியுள்ளது எனக் கற்பிக்கிறார் யோவான்.

(அ) தாழ்ச்சியில்

'எனக்குப் பின் வருபவர் எனக்கு முன்பே இருந்தவர். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை' என்று ஒரே நேரத்தில் இயேசுவை மணமகனாகவும் (காண். ரூத் 4), தன்னை அடிமையாகவும் முன்வைக்கின்றார் திருமுழுக்கு யோவான். தான் மிகப் பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டாலும், தனக்கென்று சீடர்கள் இருந்தாலும், தன்னைத் தேடி ஆட்சியாளர்களும் அரச அலுவலர்களும் வந்தாலும் தாழ்ச்சியில் மிளிர்கின்றார் யோவான்.

(ஆ) குரல் கேட்பதில்

மணமகன் குரல் கேட்பதில் மகிழும் மாப்பிள்ளைத் தோழர் இவர். அவருடைய குரல் கேட்டால் போதும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் யோவான்.

(இ) தன் பணியைச் செய்வதில்

எளிமையான உணவுப் பழக்கம், அமைதியான பாலைவனம் என அவருடைய வாழ்க்கை ஒரு சிறுநுகர் வாழ்வாக இருந்தது. அந்த நிலையில்தான் அவர் மனமாற்றத்தின் செய்தியை அறிவித்து திருமுழுக்கு கொடுத்தார். வாழ்வு தரும் தண்ணீராக வந்த மெசியாவுக்கே தண்ணீரால் திருமுழுக்கு கொடுத்தார்.

(ஈ) துன்பம் ஏற்பதில்

ஏரோதுவின் தவற்றைச் சுட்டிக்காட்டியதால் சிறைத்தண்டனைக்கும் மரணத்திற்கும் ஆளானார். ஏனெனில், தன் வாழ்க்கையின் இலக்கோடு அவர் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. 

மகிழ்ச்சி என்பது ஒரு மாபெரும் உணர்வு. நாம் பிறந்தபோதும் நம் பெற்றோர் மகிழ்ந்தனர். நம் உதடுகள் அழகாகச் சிரித்தன. ஆனால், அன்றாட அலுவல்களின் அழுத்தத்திலும், வாழ்வியல் போராட்டத்திலும் நம் சிரிப்பை நாம் மறந்துவிட்டோம். இன்று நன்றாகச் சிரிப்போம்! ஏனெனில், 'ஒரு குழந்தை பிறந்துள்ளது!'


Tuesday, June 21, 2022

செயல்கள்

இன்றைய (22 ஜூன் 2022) நற்செய்தி (மத் 7:15-20)

செயல்கள்

எரேமியா நூலில் அனனியா என்னும் போலி இறைவாக்கினர் பற்றி நாம் வாசிக்கின்றோம். பாபிலோனியாவுக்கு யூதா நாட்டினர் நாடுகடத்தப்படுவார்கள் என்ற செய்தியை எரேமியா அறிவிக்கின்றார். ஆனால், எரேமியாவின் செய்தி போலியானது என்றும், அவர் பொய் இறைவாக்கினர் என்றும், அரசருக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும் ஒன்றும் நடக்காது என்ற தவறான செய்தியை அனனியா உரைக்கின்றார். அனனியாவின் சொற்கள் அரசருக்குப் பிடித்துப் போக, எரேமியாவை கிணற்றில் தூக்கி எறிகின்றார். ஆனால், சில ஆண்டுகளில் எரேமியா சொன்னவாறே பாபிலோனியப் படையெடுப்பு நடந்தேறுகிறது. அந்த நேரத்தில்தான் மக்கள், அனனியாதான் போலி இறைவாக்கினர் என அறிந்துகொள்கின்றனர்.

இங்கே, சொல்கின்ற செய்தியும் நடக்கின்ற செயலும் ஒன்றோடொன்று ஒத்துப் போனால் அது உண்மை என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இன்றைய நற்செய்தியில் போலி இறைவாக்கினர்கள் பற்றி எச்சரிக்கின்றார் இயேசு. அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல்லிவிட்டு, நல்ல மரம், நல்ல கனி என்னும் உருவகத்தைத் தருகின்றார். 

மரத்தின் இயல்பை வெளியில் காட்டுவது கனி. மனிதரின் இயல்பை வெளியில் காட்டுவது அவருடைய சொல்லும் செயலும். மனத்தில் எண்ணங்கள் பலவாக இருக்கலாம். ஆனால், எண்ணங்கள் சொற்களாகவும் செயல்களாகவும் வெளியில் வரும்போது ஒருவர் யாரென்று நாம் அறிந்துகொள்கின்றோம். நம் உள்ளார்ந்த இயல்பு புதுப்பிக்கப்பட வேண்டும். புதுப்பிக்கப்பட்ட நம் இயல்பில் நாம் பேசும் சொற்களும் செய்யும் செயல்களும் நன்மையாகவே வெளிப்படும். அதுபோல நம் வாழ்வில் மாற்றம் வேண்டி நாம் பல முயற்சிகள் செய்கின்றோம். வெறும் செயல்களை மட்டும் மாற்ற முயற்சி செய்கின்றோம். ஆனால், உள்ளார்ந்த இயல்பு மாறினால்தான் வெளிப்புறத்திலும் மாற்றம் இருக்கும். எடுத்துக்காட்டாக, திருடுகின்ற ஒருவர் திருட்டுச் செயலை மட்டும் நிறுத்தினால் போதாது. அப்படி நிறுத்துவது சில நாட்கள் மட்டுமே நீடிக்கும். ஆனால், பேராசை என்ற உள்ளார்ந்த இயல்பு அகற்றப்பட்டால் வெளிப்புறத்தில் மாற்றம் வந்துவிடும் எளிதாக!


Monday, June 20, 2022

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய (21 ஜூன் 2022) நற்செய்தி (7:6,12-14)

பன்றிகள்முன் முத்துக்கள்

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

அ. பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்

ஆ. பொன்விதி

இ. குறுகிய வழி

இதில், 'அ' வை மட்டும் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

'பன்றிகள்முன் முத்துக்களை எறிதல்'

யாராவது பன்றிகள் முன் முத்துக்களை எறிவார்களா? பன்றிகள் முன் முத்துக்களை எறியும் அளவுக்கு யாரிடமாவது முத்துக்கள் இருக்குமா?

இந்த வாக்கியத்தை நேரடிப் பொருளிலும், உருவகப் பொருளிலும் புரிந்துகொள்வோம்.

நேரடிப் பொருள்:

'தூய்மையானது எதையும் நாய்களுக்குப் போட வேண்டாம்'

'முத்துக்களை பன்றிகள்முன் எறிய வேண்டாம்'

இவ்விரண்டு வாக்கியங்களும் ஒருபோகு இணை வாக்கியங்களாக உள்ளன. அதாவது, முன்னதன் பொருளே பின்னதிலும் சொல்லப்படுகிறது. இயேசுவின் சமகாலத்தில், 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்' என அழைக்கப்பட்டவர்கள் புறவினத்தார்கள் அழைக்கப்பட்டனர். புறவினத்தார் என்றால் யாரோ ஒருவர் என நினைக்காதீர்கள். நீங்களும் நானும் புறவினத்தார்தான். யூதர்களைத் தவிர அனைவரும் 'நாய்கள்' அல்லது 'பன்றிகள்.'இயேசுவின் சமகாலத்து ரபிக்கள் நடுவே, 'உன் தங்க மோதிரத்தை பன்றியின் மூக்கில் அணிந்துவிடாதே!' என்ற வாக்கியமும் இருந்தது. இங்கே, 'தங்க மோதிரம்' என்பது 'இறைவாக்குகளை' குறிக்கிறது. ஆக, இறைவாக்குகள் புறவினத்தாருக்கு அறிவிக்கப்படக்கூடாது என்பதைச் சொல்வதாக இந்த வாக்கியம் இருக்கிறது.

உருவகப் பொருள்:

'முத்துக்களைப் பன்றிகள்முன் எறிதல்'

என்னிடம் விலைமதிப்பு என இருக்கின்ற ஒன்றை தூய்மையற்றதன்முன் எறிவது.

வாழ்க்கைப் பாடங்கள் இரண்டு:

அ. எனக்கு அடுத்திருப்பவரை நான் தாழ்வாக அல்லது இழிவாகக் கருதுவது தவறு.

ஆ. என்னிடம் மதிப்புக்குரியது என நான் கருதுவதையும், மதிப்புக்குரிய என்னையும் மதிப்பற்றவற்றின்முன் எறிவதும் தவறு.

ஆங்கிலத்தில், 'டியர்' என்ற ஒரு வார்த்தை உண்டு. இதற்கு, 'அரிது' என்ற பொருளும், 'நெருக்கம்' என்ற பொருளும் உண்டு. உலகில் 'அரிதாக' இருப்பவர்கள்தாம் நமக்கு 'நெருக்கமாக' இருக்க வேண்டும். நான் 'நெருக்கமாக' இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'அரிதாக' (மதிப்புள்ளதாக) இருக்க வேண்டும்.


துரும்பை எடுக்கட்டுமா?

இன்றைய (20 ஜூன் 2022) நற்செய்தி (மத் 7:1-5)

துரும்பை எடுக்கட்டுமா?

'கண்ணாடி மாளிகையில் வசிப்பவர்கள் கல் எறியக்கூடாது' என்று ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று உண்டு.

அடுத்தவரின் குறையைச் சுட்டிக்காட்டுமுன் ஒருவர் தன்னுடைய குறையை அறிதல் அவசியம் என்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

'நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குற்றங்களுக்கு வழக்கறிஞர்களாகவும், மற்றவர்களின் குற்றங்களுக்கு நீதிபதிகளாகவும் இருக்கிறோம்' என்றும் சொல்லப்படுவதுண்டு. என்னுடைய குற்றம் என்றால் அதை நான் நியாயப்படுத்தவும், மற்றவர் குற்றம் செய்யவில்லை என்றாலும் அவருக்குத் தீர்ப்பு எழுதவும் நான் வேகமாகத் துடிக்கிறேன்.

இந்த மனப்பாங்கைத் தன்னுடைய சீடர்கள் கொண்டிருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறார் இயேசு. இன்றைய நற்செய்திப் பகுதி மத்தேயு நற்செய்தியாளரின் மலைப்பொழிவுப் பகுதியில் அமைந்துள்ளது. 'தீர்ப்பு அளித்தல் - அளவையால் அளத்தல் - குறை காணுதல்' என்னும் மூன்று பகுதிகளாக இன்றைய நற்செய்தி அமைந்துள்ளது.

தன் கண்ணில் மரக்கட்டை வைத்திருக்கும் ஒருவர் இன்னொருவரின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கும் நோக்கில், 'துரும்பை எடுக்கட்டுமா?' என்று கேட்டால் என்ன ஆகும்?

அ. இவருடைய கண்கள் ஏற்கனவே மரக்கட்டையால் மறைக்கப்பட்டிருப்பதால் மற்றவரின் கண்ணில் உள்ள துரும்பு தெரியாது.

ஆ. அப்படி அவர் எடுக்கும் முயற்சியில் அடுத்தவருடைய கண்களைக் காயப்படுத்துவதோடு தனக்கே தீங்கு விளைவிக்கவும் சாத்தியம் உண்டு.

இ. துரும்பு தானாகவே விழுந்துவிடும். மரக்கட்டையை எடுக்கத்தான் முயற்சி தேவை.

இயேசு இன்றைய நாளில் நம் பார்வையைச் சரி செய்ய அழைக்கின்றார்.

அகுஸ்தினார் தன்னுடைய 'ஒப்புகைகள்' நூலின் இறுதியில், தூய்மைப்படுத்துதல் பற்றிப் பேசுகின்றார். முதன்மையாக அவர் எழுதுவது, 'நம் புலன்களைத் தூய்மைப்படுத்துதல்' - குறிப்பாக, நம் பார்வையைச் சரி செய்தல். பார்வையைச் சரி செய்தல் என்பது, அடுத்தவரை இறைவனின் சாயலாகப் பார்த்தல், முற்சார்பு எண்ணங்களை அகற்றிவிட்டுப் பார்த்தல், தீர்ப்பிடும் கண்ணோட்டம் இல்லாமல் பார்த்தல். மேலும், நம்முடைய பார்வைக்கு தடையாக இருப்பது நம் தனிநபரின் பெருமை அல்லது இறுமாப்பு என்கிறார் அகுஸ்தினார்.

இன்று, எல்லார் கண்களிலும் துரும்பு அல்லது மரக்கட்டை இருக்கத்தான் செய்யும். நான் சகோதர அன்பில் அடுத்தவரைத் திருத்துகிறேன் என்றால், முதலில் என் தவற்றை நான் சரிசெய்தல் அவசியம். என் தவற்றை நான் சரிசெய்ய, 'நானும் தவறக்கூடியவன்' என்று ஏற்றுக்கொள்ளும் தாழ்ச்சி அவசியம்.


Saturday, June 18, 2022

முழுமையான அக்கறை

கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழா

I. தொடக்க நூல் 14:18-20 II. 1 கொரிந்தியர் 11:23-26 III. லூக்கா 9:11-17

முழுமையான அக்கறை

இன்றைய நாளில் நாம் ஆண்டவராகிய கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். நம் ஆண்டவராகிய கிறிஸ்து தன் உடலோடும், இரத்தத்தோடும் அப்ப, இரசத்தில் வீற்றிருக்கிறார் என்ற மறைபொருளே இன்றைய திருநாளின் பின்புலத்தில் இருக்கிறது. இருந்தாலும், இந்த நாள் மனிதர்கள் மிக அடிப்படையான ஓர் உணர்வான பசியோடு தொடர்புடையது. பசி என்ற மனித உணர்வை எதிர்கொள்கின்ற கடவுள், மனிதர்களின் ஆன்மாவிற்கு மட்டுமல்லாமல், உடலுக்கும் உணவு கொடுக்கிறார் என்பதே மறைபொருளின் நீட்சி. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 14:18-20) ஆபிராமும் அவருடைய சகோதரர் லோத்தும் நான்கு அரசர்களை வெற்றி கொண்ட நிறைவுப் பகுதியை வாசிக்கின்றோம். இந்த நான்கு அரசர்களும் லோத்து மற்றும் அவருடைய ஆள்களைக் கொண்டு, அவரையும் அவருடைய உடைமைகள் மற்றும் கால்நடைகளையும் சிறைப்பிடிக்கின்றனர் (காண். தொநூ 14:12). அவர்கள் தன்னைவிட வலிமை வாய்ந்தவர்களாக இருந்தாலும், ஆபிராம் தன்னுடைய துணிச்சலாலும், இராணுவ யுத்தியாலும் ஆபிராம் அவர்களைத் தோற்கடிக்கின்றார். தோற்கடித்து வீடு திரும்பும்போது உள்நாட்டுக்காரர்கள் அவரை சிறப்பாக வரவேற்கின்றனர். உள்நாட்டின் அரசராக இருந்த சாலேம் அரசர் மெல்கிசெதேக்கும் அங்கே வந்து ஆபிராமை வாழ்த்துகின்றார். 'மெல்கிசெதேக்கு' என்பது ஓர் உருவகப் பெயர். 'நீதியின் அரசர்' என்பது இதன் பொருள். மேலும், 'சாலேம்' என்றால் 'அமைதி.'  இவ்வாறாக, மெல்கிசெதேக்கு நீதியின், அமைதியின் அரசராக இருக்கும் இவர், உன்னத கடவுளின் அர்ச்சகராகவும் இருக்கிறார். அருள்பணியாளரின் முதல் ஆசீர் இப்பகுதியில்தான் வருகிறது. ஆபிராமிற்கு ஆசி வழங்குகின்ற இவர், ஆபிராமை வாழ்த்துவதோடு, ஆபிராமிற்கு வெற்றியைத் தந்த உன்னத கடவுளுக்கும் வாழ்த்துக் கூறுகிறார். மேலும், அப்பமும் திராட்சை இரசமும் கொடுத்து ஆபிராமையும் அவருடன் வந்தவர்களையும் வரவேற்கின்றார். போரினாலும், பசியாலும் துவண்டு போயிருந்து ஆபிராமுக்கும் அவருடைய வீரர்களுக்கும் இவ்வுணவு ஊட்டம் தருவதாக இருந்திருக்கும்.

ஆபிராமுக்கு மெல்கிசெதேக்கு அளித்த வரவேற்பு அவருடைய முழுமையான அக்கறையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆபிராமையும் கடவுளையும் வாழ்த்தியதன் வழியாக, ஆபிராமின் வெற்றிக்குக் காரணம் உன்னத கடவுளே என்று வெற்றியின் ஆன்மீக அடித்தளத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார் மெல்கிசெதேக்கு. உன்னத கடவுள் ஆபிராமோடு உடன் இருந்ததால்தான் அவரால் போரில் வெற்றிபெற முடிந்தது. உன்னத கடவுளே அந்நான்கு அரசர்களையும் ஆபிராமின் கைகளில் ஒப்புவித்தார். மேலும், ஆபிராமுக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொடுத்ததன் வழியாக ஆபிராம் மற்றும் அவரோடு உடனிருந்தவர்களின் உடல் தேவையையும் நிறைNவுற்றுகிறார் மெல்கிசெதேக்கு. இவ்வாறாக, கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுபவர்களின் ஆன்மாவுக்கும், உடலுக்கும் உணவு தந்து முழுமையாக அக்கறை காட்டுகிறார் என்பதை மெல்கிசெதேக்கின் செயல் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். 1 கொரி 11:23-26), பவுல், ஆண்டவரின் இறுதி இராவுணவு எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் என கொரிந்தியத் திருச்சபைக்கு அறிவுறுத்துகின்றார். இதன் பின்புலத்தில் இருப்பது கொரிந்து நகர மக்களின் பிறழ்வான செயல்பாடு? அது என்ன பிறழ்வான செயல்பாடு? இயேசுவின் இறுதி இராவுணவை நினைவுகூரும் வகையில் கொரிந்து நகர மக்கள் கூடி விருந்து உண்டனர். அந்த விருந்திற்கு ஆன்மீக மற்றும் சமூக அர்த்தம் இருந்தது. ஆன்மீக அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கூடி வரும் போது அந்த இடம் கூட்டு செபத்திற்கான இடமாகவும், இயேசுவின் பாடுகள் மற்றும் உயிர்ப்பு பற்றிய அறிவைப் பெறுகின்ற இடமாகவும் மாறியது. சமூக அர்த்தம் என்னவென்றால், உணவையும் பானத்தையும் சாதாரண மக்களோடு பகிர்ந்துகொள்ளும் இடமாக அது இருந்தது.

ஆனால், காலப்போக்கில் ஆன்மீக அர்த்தம் மறைய ஆரம்பித்தது. பணக்காரர்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்ததை உண்டு குடித்து, மது மயக்கத்தில் இருந்ததோடு ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் உணவு கிடைக்காமல் செய்துவிட்டனர். வேலை முடிந்து வந்து பார்க்கின்ற ஏழைகளும், அடிமைகளும் ஒன்றும் கிடைக்காமல் பசியால் வாடினர். ஆக, கிறிஸ்துவை மையமாக வைத்திருந்த கூடுகை மதுபானக் கூடுகையாக மாறிப் போனது (காண். 1 கொரி 11:17-22).

இந்தப் பின்புலத்தில் அவர்களுக்கு அறிவுறுத்துகின்ற பவுல், கூடுகையின் நோக்கம் இயேசுவின் பாடுகளையும் தியாகத்தையும் நினைவுகூறுவதே என்று நினைவூட்டுகிறார். இயேசு செய்ததை தாங்கள் செய்யும்போது அதனால் ஆன்மீக ஊட்டம் பெறுகிறார்கள் என்றும், இதை அவர்கள் இயேசு வரும் நாள் மட்டும் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றார். ஆன்மீக அப்பமானது சாதாரண உணவிற்கு முன் அல்லது பின் உண்ணப்பட்டது. இப்படிப்பட்ட இடங்களில்தான் சாதாரண மக்கள் நல்ல விருந்து உண்ணும் வாய்ப்பு பெற்றனர். ஆக, நற்கருணைக் கொண்டாட்டத்தின் நோக்கம் ஆன்மீக உணவு என்றாலும், உடல்சார் உணவும் பகிர்வும் முக்கியம் என்பதை அறிவுறுத்துகின்ற பவுல், ஒன்று மற்றதை விலக்கிவிட முடியாது என்கிறார். ஆக, ஆன்மீக அக்கறையும், உடல்சார் அக்கறையும் இணைந்தே செல்வதே முழுமையான அக்கறை. 

இன்றைய நற்செய்தி (காண். லூக் 9:11-17), இயேசு அப்பம் பலுகும் நிகழ்வை லூக்கா பதிவு செய்யும் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எல்லா நற்செய்தியாளர்களும் ஏறக்குறைய ஒருமித்த கருத்தோடு எழுதப்படும் அறிகுறி இது ஒன்றுதான். தன்னுடைய போதனையைக் கேட்க வந்த மக்களுக்கு இயேசு உணவளிக்கின்றார். ஆக, ஆன்மாவுக்குப் பயன்படும் தன்னுடைய போதனையைப் போல, உடலுக்குப் பயன்படும் உணவும் முக்கியமானது என்பதை உணர்கின்ற இயேசு, அவர்களுக்குக் காட்டும் முழுமையான அக்கறையின் வெளிப்பாடே இந்த அற்புதம்.

இயேசு உணவளிக்கும் நிகழ்வு இரண்டு விடயங்களை அடிக்கோடிடுகிறது: ஒன்று, அப்பத்தை பலுகச் செய்யுமுன் இயேசு கடவுளுக்கு நன்றி கூறி செபிக்கிறார். உணவு என்பது கடவுளின் கொடை. அவரே, ஊட்டம் அனைத்தின் ஊற்று. இரண்டு, சீடர்களே உணவைப் பகிர்ந்து கொடுக்கிறார்கள். ஆக, கடவுளிடமிருந்து வருகின்ற உணவு மனிதர்கள் கைகளால் பகிரப்படுகின்றது. இங்கே, ஆன்மாவும் உடலும் ஒருசேர ஊட்டம் பெறுகிறது. தன்னுடைய திருத்தூதர்கள் பிற்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இயேசு இதன்வழியாக அவர்களுக்குக் கற்பிக்கிறார். ஆகையால்தான், திருத்தூதர் பணிகள் நூலில் கைம்பெண்கள் விருந்தில் கண்டுகொள்ளப்படாமல் இருந்தபோது திருத்தூதர்கள் உடனடியாகச் செயல்பட்டு திருத்தொண்டர்களை ஏற்படுத்துகின்றனர் (காண். திப 4:32-37).

ஆன்மாவின் அக்கறையும், உடலின் அக்கறையும் இணைந்தே செல்கின்றன என்பதை இன்றைய இறைவார்த்தை வழிபாடு இனிதே நமக்குக் கற்பிக்கிறது. ஆபிராமின் வெற்றி கடவுளிடமிருந்தே வருகிறது என்று அவருக்கு நினைவூட்டுகிற மெல்கிசெதேக்கு ஆபிராமின் உடல் தேவைக்கான அப்பத்தையும் திராட்சை இரசத்தையும் வழங்குகின்றார். ஆண்டவருடைய பாடுகளின் உயிர்ப்பின் நினைவுகூறுதலோடு, எளியவர்க்கு உணவளிப்பதும் நற்கருணையின் நோக்கம் எனக் கொரிந்து நகரத் திருச்சபைக்கு வலியுறுத்திறார் பவுல் (காண். 1 கொரி 11:33). இயேசு தன்னுடைய இறையாட்சிப் போதனையைப் பற்றிக் கருத்தாய் இருந்தாலும், பசியால் வாடிய மக்களுக்கு உணவு தருகின்றார். ஆக, கடவுளின் அக்கறை ஆன்மாவையும், உடலையும் தழுவிய முழுமையான அக்கறையாக இருக்கிறது. இறைமனிதர்களான மெல்கிசெதேக்கு, பவுல், இயேசு போல, ஆன்மா-உடல் என்னும் முழுமையான அக்கறையைக் காட்டும் இஸ்ரயேல் அரசனையும், நம்மையும், 'மெல்கிசெதேக்கின் முறைமைப்படி நீர் என்றென்றும் குருவே' என அழைக்கிறது இன்றைய பதிலுரைப் பாடல் (திபா 110).

இன்றைய திருநாள் நமக்கு வைக்கும் பாடங்கள் எவை?

1. தேவையை அறிதலும், அக்கறை காட்டுதலும்

பசியால் இருக்கும் ஒருவருக்கு உணவும், நாடோடியாய் இருக்கும் ஒருவருக்கு பாதுகாப்பும், தனிமையாய் இருக்கும் ஒருவருக்கு அன்பும், தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவருக்கு தன்மதிப்பும் தேவையாக இருக்கிறது. ஒவ்வொரு தேவையும் நிறைவு செய்யப்பட வேண்டும். தேவைகளில் ஆன்மா வேறு, உடல் வேறு என்றல்ல. பசியால் இருக்கும் வயிற்றுக்கு உணவுதான் முக்கியமே தவிர கடவுள் பற்றிய போதனை முக்கியமல்ல. ஆக, இன்று உடலையும், ஆன்மாவையும் நாம் ஒருசேர முக்கியமாக எடுத்து அக்கறை காட்ட வேண்டும். பல நேரங்களில் நம் ஆன்மாவைக் காக்கும் முயற்சியில் உடலை வதைக்கிறோம், வருத்துகிறோம். உடல் என்பது பாவத்தின் காரணி என்றும், பாவத்திற்கான வழி என்றும் கருதுகின்றோம். இது தவறு. உடல் இல்லாமல் நம் ஆன்மா இருக்க முடியாது. ஆன்மா இல்லாமல் உடல் உயிரற்றதாகிவிடும். இரண்டும் ஒன்று மற்றொன்றை நிரப்பக் கூடியது. ஆக, இரண்டம் சரியான விகிதத்தில் கவனிக்கப்பட வேண்டும். நற்கருணை நாம் பசிக்காக சாப்படவில்லை என்றாலும், அதில் உடலுக்கான உணவுதான் முதலில் இருக்கிறது. நற்கருணையை மட்டுமே உண்டு உயிர்வாழ்ந்த புனிதர்கள், மனிதர்கள் இந்த உலகில் இருந்திருக்கிறார்கள். ஆக, இன்று நான் என் உடல்மேல் எப்படி அக்கறை காட்டுகிறேன்? என்பது முதல் கேள்வி. அத்தோடு இணைந்து, எனக்கு அருகிருப்பவரின் உடலை நான் எப்படிப் பார்க்கிறேன்? உடலை வெறும் பொருளாகப் பார்த்து அதை அடைய விரும்புகிறேனா? அல்லது உடலை நான் தீண்டத்தகாதவர் என்ற சாதீய அடிப்படையில் பார்க்கிறேனா? அல்லது குழந்தையின் உடலைப் பார்த்துவிட்டு, அவர்கள் வளர்ச்சியற்றவர்கள் என்று அவர்களை நடத்துகிறேனா? அல்லது பசி, நோய், முதுமை என்று உடல்சார் துன்பம் கொண்டவர்களை நான் எப்படி அணுகுகிறேன்? 

அக்கறை காட்டுதல் என்பது கொடுத்தல். கொடுத்தல் எப்போதும் திரும்பப் பெறப்படுவதில்லை. அப்பமும் இரசமும் கொடுத்த மெல்கிசெதேக்கு அதைத் திரும்பப் பெறுவதில்லை. பத்தில் ஒரு பகுதி கொடுத்த ஆபிராம் அதைத் திரும்பப் பெறுவதில்லை. இயேசுவின் உடலாகவும் இரத்தமாகவும் மாறிய அப்பமும் இரசமும் திரும்ப பழைய நிலைக்குச் செல்வதில்லை. கொடுத்தல் ஒரு வழிதான். தன்னைப் பின்பற்றிய மக்களுக்கு உணவளித்த இயேசு திரும்பப் பெறுவதில்லை. வழியில் காயம்பட்டக் கிடந்தவனுக்கு செய்த உதவியை நல்ல சமாரியன் திரும்பப் பெறுவதில்லை. கொடுத்தல் எப்போதும் ஒருவழிப் பயணமாகவே இருக்க வேண்டும். அப்போதுதான் கொடுத்தலில் நிறைவு இருக்கும். நற்கருணை காட்டும் அக்கறை இதுதான். ஆன்மா-உடல் என்று முழுமையான அக்கறையை நான் எனக்கும் பிறருக்கும் கொடுக்கிறேனா?

2. வினைச்சொற்கள்

ஒரு குறிப்பிட்ட பலிபீடத்தில், ஒரு குறிப்பிட்ட ஆடை அணிந்து, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு ஃபார்முலாவை, ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் நின்று சொல்லிக் கைகளை விரித்தால், அப்பமும், இரசமும், இயேசுவின் உடலாகவும், இரத்தமாகவும் மாறிவிடும் என்ற மேஜிக் சிந்தனையை நாம் விட வேண்டும். இந்த மேஜிக் சிந்தனை பல நேரங்களில் அருள்பணியாளரையும், மக்களையும் இயேசுவிடமிருந்து அந்நியமாக்கிவிடுகிறது. அதாவது, அருள்பணியாளராகிய நான், உடல் அல்லது மனதளவில் என் வாழ்க்கை நிலைக்குத் தகுதியற்று இருந்தாலும், கைகளை விரித்து மந்திரம் சொன்னால் அப்பம் இயேசுவின் உடலாகிவிடும் என்றால், என்னில் மாற்றம் வருவது சாத்தியமா? இல்லை. நான் எப்படி இருந்தாலும், எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், மந்திரம் சொல்லி, கைகளை விரித்தால் எல்லாம் நடந்துவிடும் என்று நான் நினைப்பது தவறல்லவா? அதேபோலவே, இந்த அப்பம் பிட்குதலில் பங்கேற்கும் மக்களும் இதை ஒரு மேஜிக் நிகழ்வாகக் கருதக் கூடாது. அப்படி மேஜிக்காக நினைக்கும்போது, நாம் நம் வழிபாட்டு முறைமைகள் மட்டும் சடங்குகளுக்கு அடிமையாகிவிடுகிறோம். ஒன்பது நாள் நற்கருணை உட்கொண்டால் நான் கேட்டது நடக்கும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கிவிடுகின்றோம். நற்கருணை விடுதலையின் விருந்து. அதை நாம் ஒரு சடங்காகப் பார்த்து அந்தச் சடங்கிற்கு அடிமையாகிவிடக்கூடாது.

நற்கருணை வழிபாட்டை நடத்தும் அருள்நிலை இனியவரும், அதில் பங்கேற்கும் பொதுநிலை இனியவர்களும் இன்றைய நற்செய்தியில் நாம் காணும் ஐந்து வினைச்சொற்களை வாழ்வாக்குபவர்களாக இருக்க வேண்டும். அந்த ஐந்து சொற்கள் எவை? 'எடுத்தல்,' 'அண்ணாந்து பார்த்தல்,' 'ஆசிகூறுதல்,' 'உடைத்தல்,' 'கொடுத்தல்' இந்த ஐந்து சொற்களும், இயேசுவின் பிறப்பு, பணி, இறப்பு என்னும் மூன்று நிகழ்வுகளையும் உள்ளடக்கி நிற்கிறது. இயேசு மனுவுரு 'எடுத்தார்.' 'அண்ணாந்து பார்த்து' தன் தந்தையோடு இணைந்திருந்தார். எந்நேரமும் 'இறைவனைப் புகழ்ந்து அவரை ஆசீர்வதித்தார்.' தன் வாழ்வு முழுவதும் தன்னை மற்றவர்களுக்காக 'உடைத்தார்.' இறுதியில், தன்னையே நமக்காகக் 'கொடுத்தார்.'

இந்த ஐந்து சொற்களில் இன்று நமக்கு அதிகம் தேவைப்படுவது 'அண்ணாந்து பார்ப்பது.' ஏன்?

இன்றைய நம் தொடுதிரைக் கலாச்சாரம் நம்மை 'குனிந்தே பார்ப்பவர்களாக' மாற்றிவிட்டது. எல்லாவற்றையும் சின்ன சின்ன செயலிகளைக் (ஆப்ஸ்) கொண்டு செய்து முடிக்க நமக்குக் கற்றுக்கொடுக்கிறது ஸ்மார்ட்ஃபோன். 'உனக்கு யார் துணையும் வேண்டாம் - கடவுளும் வேண்டாம், மனிதர்களும் வேண்டாம். என்னையே பார்த்துக் கொண்டிரு. உனக்கு எல்லாம் நடக்கும்' என்று சொல்கிறது தொடுதிரை என்னும் மாயக்கண்ணாடி. அந்த மாயக்கண்ணாடியில் நாம் பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், குனிந்து பார்க்கும் ஒவ்வொரு நிமிடமும், நாம் கடவுளுக்கும், மற்றவர்களுக்கும், ஏன், நமக்கு நாமே அந்நியமாகிவிடுகின்றோம். இக்கண்ணாடியை விட்டுவிட வேண்டும் என நான் சொல்லவில்லை. அப்பப்போ அண்ணாந்து பார்க்க வேண்டும் என்றே நான் சொல்கிறேன்.

3. 'யாரைப் போல பேசுகிறேன்?'

'எல்லாரையும் போகச் சொல்லுங்க!' 'இருட்டாயிடுச்சு!' 'இது பாலை நிலம்!' 'பாம்பு, பல்லியெல்லாம் வந்துடும்!' 'இங்க சாப்பாடு ஒன்றுமில்லை!' என்று இயேசுவுக்கு ரிமைண்டர் கொடுக்கின்றனர் சீடர்கள். 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்று கட்டளை கொடுக்கின்றார் இயேசு.

இன்று நாம் இயேசுவைச் சந்தித்தபின், உட்கொண்டபின் அவரிடம் செபிக்கின்றோம். நம் செபங்கள் எல்லாம் ரிமைண்டர்களாகவே இருக்கின்றன. 'எனக்கு அது இல்லை. இது இல்லை. அவன் சரியில்லை. இவள் சரியில்லை. க்ளைமேட் சரியில்லை. சாப்பாடு சரியில்லை. சுகர் கூடிடுச்சு. பிரஷ்ஷர் கூடிடுச்சு. காசு இல்லை' - இப்படிப்பட்ட ரிமைண்டர்களை நாம் அவருக்குக் கொடுக்கும்போது அவர் சொல்லும் பதில் என்ன தெரியுமா? 'நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்!' நாம்தான் பார்க்க வேண்டும் நம் வாழ்க்கையை. ஆனால் அதில் என்ன அற்புதம் என்றால், நாம் நம் வாழ்வைப் பார்க்கத் தொடங்கிய உடனே அவர் அற்புதம் செய்யத் தொடங்குகிறார். 'ஆண்டவரே, இங்க பாருங்க ஐந்து அப்பங்கள், இரண்டு மீன்கள் இருக்கு!' என்று சொன்னவுடன், அவர் 'எல்லாரையும் அமரச் சொல்லுங்கள்' என அற்புதம் செய்கின்றார். 

ஆக, நற்கருணையை உண்டபின் நம் பதிலும் இப்படித்தான் இருக்க வேண்டும்: 'ஆண்டவரே, இங்க பாருங்க சுகர் மாத்திரை இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க பர்சில் கொஞ்சம் பணம் இருக்கு!' 'ஆண்டவரே, இங்க பாருங்க, கொஞ்சம் அரிசி இருக்கு!' என நம்மிடம் இருப்பவற்றை அவர்முன் கொண்டுவர வேண்டும். இல்லாத ஒன்றிலிருந்து புதிதாக புறப்பட்டு வருவது அல்ல நற்கருணை. ஏற்கனவே இருக்கும் அப்பமும், இரசமும் உருமாறுவதே நற்கருணை. ஆக, நம்மிடம் இருக்கும் ஒன்றிலிருந்துதான் அவரின் அற்புதம் தொடங்கும்.

இறுதியாக,

உணவு - மனித வாழ்வின் கையறுநிலையைக் குறிக்கும் ஒரு குறியீடு. பசி, தாகம் என்னும் உணர்வுகள்தாம் நாம் மற்றவர்களைச் சார்ந்து நிற்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றன. இந்த இரண்டு உணர்வுகளின் நீட்சிகள்தாம் மற்ற எல்லா உணர்வுகளும். இந்த அடிப்படை உணர்வுகளை நிறைவு செய்யத் தேவையான உணவு என்ற குறியீட்டையே தன் நிலையான உடன்படிக்கையின் அடையாளமாகத் தெரிந்துகொள்கிறார் இயேசு. ஆன்மாவும் உடலும் இணைவது உணவில்தான். 

நமக்குப் பசி இருக்கும் வரை இந்த உணவின் தேவை இருக்கும்! கையை நீட்டி இவரை உணவாகக் கொள்ளுமுன்,  என் கையை நீட்டி மற்றவருக்கு என்னையே உணவாக நான் தந்தால், நானும் அவரின் திருவுடல், திருஇரத்தமே!

Friday, June 17, 2022

நாளைக்காக

இன்றைய (18 ஜூன் 2022) நற்செய்தி (மத் 6:24-34)

நாளைக்காக

இன்றைய நற்செய்தி வாசகத்தை மேலோட்டமாக வாசித்தால் அதில் இரு பிரிவுகள் உள்ளன: (அ) இரு தலைவர்களுக்கு - கடவுளுக்கும் செல்வத்துக்கும் - நாம் பணிவிடை செய்ய இயலாது. (ஆ) நாளைய தினத்தைப் பற்றிய கவலையை விடுக்க இயேசுவின் அறிவுரை. மேலோட்டமான வாசிப்பில் இப்பகுதி இரு பிரிவுகளாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆழமாக வாசித்தால் இரு பிரிவுகளுக்கும் உள்ள தொடர்பு புரிகிறது. 

அந்தத் தொடர்பு என்ன? செல்வத்துக்குப் பணிவிடை புரிபவர் நாளைய தினத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றார். கடவுளுக்குப் பணிவிடை புரிபவர் அத்தகைய கவலையை எளிதில் களைகின்றார்.

நாளைய தினத்தைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது என்றால் என்ன?

(அ) சார்வாகா அல்லது எபிகூரியன் மெய்யியல் சொல்வது போல, 'உண்டு, குடி, நாளை என்பது கிடையாது' என்பதா? இல்லை.

அல்லது

(ஆ) நாளைக்கான எந்தத் திட்டமும் அல்லது எதிர்காலத்துக்கான எந்த இலக்கும் இல்லாமல் இருப்பதா? இல்லை.

அல்லது

(இ) சும்மா அமர்ந்துகொண்டு, கடவுள் அனைத்தையும் பார்த்துக்கொள்வார் என ஓய்ந்திருப்பதா? இல்லை.

மாறாக,

(அ) ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்னும் நம்பிக்கை கொண்டிருப்பது. 'பலிப்பொருள் எங்கே?' என்று தன்னிடம் கேட்ட தன் மகன் ஈசாக்கிடம், 'பலிப்பொருளைப் பொருத்த மட்டில் மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்' என்கிறார் ஆபிரகாம். 'நாம் செய்ய வேண்டிய வேலையைச் செய்வோம். நாம் மேற்கொள்ள வேண்டிய பயணத்தை மேற்கொள்வோம். பலிப்பொருளை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்' என்பதே ஆபிரகாமின் நம்பிக்கைப் பார்வை.

(ஆ) நம் கவலையை விடுப்பது. இத்தாலிய மொழியில், 'கவலை' என்பதை 'ப்ரெஓக்குபாட்சியோனே' என்னும் சொல்லால் வழங்குகின்றனர். இந்தச் சொல்லின் பொருள், 'நாற்காலியில் முன்சென்று அமர்வது.' அதாவது, நாம் கவலைப்படும்போது என்ன நடக்கிறது? நம் மூளையில் பல சிந்தனைகள் நாற்காலியில் முன்சென்று அமர்ந்துகொள்கின்றன. இவை அமர்ந்துகொள்வதால் மற்ற சிந்தனைகளுக்கு, குறிப்பாக நேர்முகமான சிந்தனைகளுக்கும், தீர்வு தருகின்ற சிந்தனைகளுக்கும் அங்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது. விளைவு, நம் மூளை தொடர்ந்து கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

(இ) நம் முதன்மைகளை நெறிப்படுத்துவது. நாம் கவலைகள் கொள்ளலாம். ஆனால், முதன்மையானவற்றைப் பற்றிக் கவலைப்படுதல் வேண்டும். மேன்மையானது எது தாழ்வானது எது என நம் தேவைகளை வகைப்படுத்தி விட்டால், தாழ்வானவை பற்றிய கவலைகளிலிருந்து நம்மால் விடுபட இயலும். உணவை விட உயிரும், உடையை விட உடலும் மேன்மையானது என எண்ணி அவற்றுக்கேற்றாற் போல நம் தேவைகளை வரையறுத்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாளைய பற்றிய கவலை ஏன் தேவையற்றது?

(அ) கவலைப் படுவதால் நம் வாழ்நாளின் நாளையோ, நம் வளர்த்தியில் ஒரு முழத்தையோ கூட்ட இயலாது. அதாவது, நம்மால் எதுவும் செய்ய இயலாது. ஆக, கவலைப்படுதல் பயனற்றது.

(ஆ) கவலை கவனச் சிதறல்களை ஏற்படுத்துகிறது. ஒரே வேலையில் நம் மனம் ஈடுபடுவதற்குப் பதிலாக பற்பலவற்றைச் சிந்தித்திக் கொண்டே இருக்கிறது. இப்படியாக நம் ஆற்றல் வீணாகிறது.

(இ) கவலை நம் கவனத்தை நம்மேல் திருப்பி அங்கேயே உறைய வைத்து விடுகிறது. நமக்கு வெளியே உள்ள உலகையும், மனிதர்களையும், கடவுளையும் மறக்கச் செய்கிறது.

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி ஒன்றே: நான் யாருக்குப் பணிவிடை செய்கிறேன்? செல்வத்துக்கா? கடவுளுக்கா?

கடவுளுக்குப் பணிவிடை செய்பவர் நாளைய கவலையை விடுக்கின்றார், இன்றைய பொழுதை இனிதே வாழ்கின்றார், தன் கவனச் சிதறல்களை விடுக்கின்றார்.

செல்வத்துக்குப் பணிவிடை செய்பவர் நாளைய பற்றிய கவலையோடு திரிகிறார், இன்று என்பதைச் சுமையாகப் பார்க்கிறார், கவனம் சிதறியவராய்ப் பரபரப்புடன் காணப்படுகின்றார்.

Thursday, June 16, 2022

உள்ளமும் உடலும்

இன்றைய (17 ஜூன் 2022) நற்செய்தி (மத் 6:19-23)

உள்ளமும் உடலும்

'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்'

'கண் நலமாயிருந்தால் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்'

இரு நாள்களுக்கு முன்னர் காணொலி ஒன்று கண்டேன். அதன் ஆசிரியர், 'நம் உள்ளத்தில் ஓடும் ஓர் எண்ணத்திற்கும் மற்றோர் எண்ணத்திற்கும் உள்ள இடைவெளியே நாம் யார் என்பதை உணர்த்துகிறது. இரண்டுக்கும் உள்ள இடைவெளி எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஒருவர் மன அமைதியுடன் இருக்கிறார். இரண்டுக்கும் உள்ள இடைவெளி குறைவாக இருந்தால் அவர் அமைதியற்று இருக்கிறார்' என்கிறார்.

நாம் கொஞ்ச நேரம் அமர்ந்து ஓடுகின்ற நம் எண்ணங்களைக் கவனித்தால், ஒரு நொடியில் பத்து இருபது என எண்ணங்கள் தோன்றி மறைகின்றன. வெளிப்புறத்தில் நாம் அமர்ந்திருப்பதாகத் தோன்றினாலும், நம் மூளையில் நாம் ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அங்கே ஒரு வித பரபரப்பு இருக்கிறது. சில நேரங்களில் நாம் தூங்கும்போதும் எண்ணங்கள் திரையில் ஓடுவது போல ஓடிக்கொண்டே இருக்கின்றன.

இவற்றை எப்படி நெறிப்படுத்துவது?

இயேசு மிக அழகான வாழ்க்கைப் பாடத்தைத் தருகின்றார். அதாவது, நம் உள்ளம் இங்கும் அங்கும் அலைபாயக் காரணம், இங்கும் அங்கும் நாம் செல்வத்தை அல்லது முதன்மையை வைத்திருப்பதால்தான். 'இது செல்வம்! இது செல்வம்! அவர் செல்வம்! அவள் செல்வம்! அது செல்வம்! இதைப் பிடி! அதை முடி! இப்பவே செய்!' என்று நம் உள்ளம் பல்வேறு செல்வங்கள் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கின்றது. இச்செல்வங்கள் எல்லாம் பூச்சியும் துருவும் ஏறக்கூடிய செல்வங்கள். மற்றவர்கள் கன்னமிட்டுத் திருடிவிடக் கூடிய செல்வங்கள். ஆனால், இப்படி அழிவுக்குட்படாத ஒன்றின்மேல் நம் உள்ளத்தைப் பதிய வைத்தால் நம் உள்ளம் அலைபாய்வதை நிறுத்திவிடும்.

ஆக, முதலில், 'இதுவே என் செல்வம்' என்று நாம் நம் முதன்மையை வரையறுப்பதோடு, மற்ற செல்வங்களைப் புறந்தள்ள வேண்டும். மேலும், 'இதன் மேல் கவனத்தைச் செலுத்து!' என்று நம் உள்ளத்துக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, இயேசு தன் சமகாலத்தில் விளங்கிய சொலவடை ஒன்றை எடுத்து, அதைத் தன் சீடர்களுக்குக் கற்பிக்கின்றார். 'கண்தான் உடலுக்கு விளக்கு' என்பது கிரேக்க மெய்யியல் சிந்தனை. விளக்கின் ஒளி கொண்டு நாம் பொருள்களைப் பார்க்கின்றோம். கண் ஒளி கொண்டிருப்பதால்தான் பொருள்களை நாம் பார்க்கின்றோம். மேலும் கண்களின் வழியாகத்தான் மூளை நிறைய தகவல்களைப் பெறுகிறது. எடுத்துக்காட்டாக, என் முன் இருப்பது மேடு, பள்ளம் என்பதை கண் அறிந்து மூளைக்குச் சொன்னால்தான், மூளை அதற்கேற்றாற் போல என் கால்களை இயக்கும். மனித அறிவும், தெரிவும், தகவல் சேகரிப்பும் கண்களைப் பொருத்தே அமைகின்றன. இத்தகைய திறன் வாய்ந்த கண் இருளாகி விட்டால், அல்லது ஒளி இழந்துவிட்டால், உடல் முழுவதும் இருளாகிறது. அது, கைகளும் கால்களும் எங்கு செல்வதென்று தெரியாமல் நின்று விடுகின்றன. 

இயேசு முன்வைக்கும் இரண்டாவது சவால்: நாம் எத்தகையவற்றைப் பார்க்கிறோம்? எத்தகைய தகவல்களை மூளைக்கு அனுப்புகிறோம்? என்று ஆராய்ந்து பார்த்து, நாம் பார்வையைத் திருத்திக்கொள்வது, ஒளியுள்ளதாக்கிக் கொள்வது.

ஆக,

நற்செய்தி வாசகம் தரும் பாடங்கள் இரண்டு:

(அ) உள்ளத்தை அழியாத செல்வத்தில் பதிய வைப்பது.

(ஆ) உள்ளத்திற்குத் தகவல்கள் அனுப்பும் கண்கள் பற்றிக் கவனமாக இருப்பது.


Wednesday, June 15, 2022

தந்தையின் உள்ளம்

இன்றைய (16 ஜூன் 2022) முதல் வாசகம் (சீஞா 48:1-15)

தந்தையின் உள்ளம்

நாம் கடந்த சில நாள்களாக வாசித்து வந்த எலியா நிகழ்வுகள் முடிவுற்ற வேளையில், இன்றைய முதல் வாசகத்தில், எலியாவுக்கு சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் செலுத்தும் புகழாஞ்சலியை வாசிக்கின்றோம். அவருடைய கவிதைக் கதம்பத்தில் ஒரு வாக்கியம் என்னை ஈர்க்கிறது:

'தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கு' ... 'நீர் இஸ்ரயேலின் குலங்களைக் கடிந்துகொள்வீர்'

'தந்தையின் உள்ளம் மகன் நோக்கி'

இதே சொல்லாடலை நாம் மலாக்கி 4:6 மற்றும் லூக் 1:17இல் வாசிக்கின்றோம்.

தந்தையின் உள்ளம் எப்போதும் மகன் நோக்கித்தானே இருக்கும்? தன் மகனை மறக்கின்ற தந்தை யாராவது உண்டா? இந்தச் சொல்லாடலின் பொருள் என்ன?

முதலில், இதன் இறையியல் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். 

விவிலியத்தில் 'ஊழ்வினை' என்பது உண்டு. சிலப்பதிகாரத்திலும், 'ஊழ்வினை உகுத்து வந்து ஊட்டும்' என்று சொல்லப்பட்டுள்ளது. திருக்குறளில் வள்ளுவர் 'ஊழ்' என்பதற்கென ஒரு அதிகாரமே வைத்துள்ளார். அதாவது, தந்தை செய்கின்ற செயல் மகனைப் பாதிக்குமா, பாதிக்காதா? என்பதுதான் ஊழ்வினையின் கேள்வி. விவிலியம் இதை இரண்டு நிலைகளில் புரிந்துகொள்கிறது: ஒன்று, தந்தையின் குற்றத்திற்காக கடவுள் மகனைத் தண்டிக்கிறார். எடுத்துக்காட்டாக, தாவீது பத்சேபாவுடன் பாவம் செய்து பிறந்த குழந்தை இறந்து போகிறது. ஆனால், தவறு செய்த தாவீது உயிர் வாழ்கிறார். இரண்டு, ஒருவர் ஈச்சம் பழம் சாப்பிட்டால் இன்னொருவருக்கா பல் புளிக்கும் என்று கேட்கின்ற எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாகப் பேசுகின்ற கடவுள், அவரவருடைய பாவங்களுக்கான தண்டனை அவரவருக்கே என்கின்றார்.

ஆக, தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவது என்பது, எலியா நிகழ்வின் பின்புலத்தில், ஒருவர் தன்னுடைய மகனையும் மனத்தில் கொண்டு தன் வாழ்வை நன்முறையில் கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதே. என் பாவம் என்னுடன் போனால் பரவாயில்லை. ஆனால், அது என் மகனையும் பாதிக்கும் என்றால், நான் இன்னும் அதிகக் கவனமுடன் நடந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, இதை மிக சாதாரண உலகியல் உறவு அடிப்படையில் புரிந்துகொள்வோம்.

ஒரு தந்தை தன் மகனுக்கு மூன்று காரியங்களைச் செய்ய வேண்டும் அல்லது செய்கிறார்:

அ. தான்மை அல்லது அடையாளம்

'நான் யார்?' என்ற என் அடையாளத்தையும், என் தான்மையையும் கொடுப்பவர் என் தந்தையே. தந்தை தன்னுடைய பெயரை மட்டும் எனக்குத் தருவதில்லை. மாறாக, நான் கொண்டிருக்கும் விழுமியங்கள், மதிப்பீடுகள், மற்றும் பண்புகள் அனைத்தும் அவரிடமிருந்தே வருகின்றன.

ஆ. வாக்குறுதி

தந்தை தன் மகனுக்கு தன்னுடைய உடனிருப்பை வாக்குறுதியாக அளிக்கின்றார். 'எந்த நேரத்திலும் நான் உன்னுடன் இருக்கிறேன்' என்ற உறுதியைத் தருகின்றார். மேலும், மகன் செய்வது அனைத்தையும் தந்தை ஏற்றுக்கொள்கின்றார். நேர்முகமான காரியங்களைப் பாராட்டி மகிழ்கின்றார்.

இ. தொடுதல்

தந்தை தன் மகனைத் தன்னுடைய உடல் மற்றும் உணர்வுகளால் தொடுகின்றார். இத்தொடுதலே மகனுக்கு உந்துசக்தியாக இருக்கிறது.

ஆக, இரண்டாவது நிலையில், எலியா ஒவ்வொரு தந்தையையும் பொறுப்புடன் வாழ அழைக்கின்றார்.

இன்று நாம் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்:

மகன் அல்லது மகள் என்பவர் தந்தை மற்றும் தாயின் நீட்சி. நல்ல மரம் நல்ல கனி கொடுக்கும். பெற்றோர்கள் என்னும் மரங்கள் நன்மரங்கள் என்றால் பிள்ளைகள் நற்கனிகளே. நாம் எத்தகைய மரங்களாய் இருக்கிறோம்? எத்தகைய கனிகளைக் கொடுக்கிறோம்?


Tuesday, June 14, 2022

கடவுள் எங்கே?

இன்றைய (15 ஜூன் 2022) முதல் வாசகம் (1 அர 2:1,6-14)

கடவுள் எங்கே?

'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்ற கேள்வி நம்மில் பல நேரங்களில் எழுவதுண்டு. இந்தக் கேள்வி எழும்போதெல்லாம், நம் தேடல் பெரும்பாலும், 'கடவுள் எங்கே இருக்கிறார்?' என்று அவரைத் தேடுவதில் அல்ல. மாறாக, 'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலில்தான் இருக்கின்றது.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலியாவின் பணி முடிந்து, எலிசாவின் பணி தொடங்குகிறது. நிகழ்வில் எலியா உயிருடன் தேரில் எடுத்துக்கொள்ளப்படுகின்றார். அந்த நேரத்தில், தனக்கு இரண்டு மடங்கு ஆவி வேண்டும் என எலியாவிடம் கேட்கின்றார். எலியாவைப் பார்த்துக்கொண்டே இருந்தால் அது நடக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

மேலிருந்து கீழே விழுந்த எலியாவின் மேலாடையை எடுத்துத் தன்னுடன் வைத்துக்கொள்கின்றார் எலியா.

தன்னிடம் உள்ள ஆற்றலைச் சோதிப்பதற்காக, அல்லது தன் அருகில் இருக்கின்ற இறைவாக்கினர் குழுவினர் ஐம்பது பேரின் முன் தன் ஆற்றலை அறிவிப்பதற்காக, அவர் இவ்வாறு செய்கின்றார்.

எலியா தன்னுடைய மேலாடையை அடித்துபோது யோர்தான் ஆற்றின் தண்ணீர் இரண்டாகப் பிரிகிறது. இப்போது எலிசா அடிக்கும்போதும் அவ்வாறே நடக்கிறது.

ஆண்டவரின் ஆவி இவ்வாறாக காணக்கூடிய ஓர் அடையாளத்தை நிகழ்த்திக் காட்டுகின்றார்.

இதற்கு மாறாக,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்கள் தாங்கள் செய்யும் அனைத்தையும் - இறைவேண்டல், இரக்கச் செயல்கள், நோன்பிருத்தல் - மறைவாகச் செய்யுமாறு கற்பிக்கின்றார். இங்கே காண்பவர் இறைவனாக மட்டுமே இருக்க வேண்டும்.

'கடவுள் என்னோடு இருக்கிறாரா?' என்ற தேடலை விட, 'நீர் என்னோடு இருப்பதால்' என்ற நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கையில் மறைவாய் உள்ள இறைவனிடம் நாம் உரையாடவும் உறவாடவும் முடியும். அந்த நம்பிக்கைப் பயணம் சில நேரங்களில் எளிதானது அல்ல.


Monday, June 13, 2022

உன்னையே விற்றுவிட்டாய்

இன்றைய (14 ஜூன் 2022) முதல் வாசகம் (1 அர 21:17-29)

உன்னையே விற்றுவிட்டாய்

நேற்றைய முதல் வாசகத்தில் நடந்த நிகழ்வின் தொடர்ச்சியை இன்று வாசிக்கின்றோம். நாபோது இறந்துவிட்ட செய்தி கேட்டு, அவருடைய திராட்சைத் தோட்டத்தை உரிமையாக்கிக் கொள்ள ஆகாபு புறப்பட்டுச் செல்கின்றார். அவரைச் சந்திக்க எதிரில் வருகின்றார் இறைவாக்கினர் எலியா.

இந்த வாசகத்தில் இரண்டு, மூன்று பாடப் பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, 'நீ அவனிடம் சொல்ல வேண்டியது' என்று ஆண்டவர் எலியாவுக்கு இரண்டு முறை சொல்கின்றார் (காண். 21:19). ஆண்டவர் எதைத்தான் சொன்னார்? இரண்டையும் சொன்னார் என்றால், ஏன் அவர் தொடர்ச்சியாகச் சொல்லவில்லை. இரண்டு, ஆகாபு அரசன் தண்டிக்கப்படுவது அவன் மறைமுகமாகச் செய்த இக்கொலைக்காகவா அல்லது அவன் இஸ்ரயேல் மக்களை சிலைவழிபாட்டுக்குத் தூண்டி எழுப்பியதாலா? மூன்று, ஆண்டவர் நிகழ்வின் இறுதியில் ஆகாபை மன்னிக்கின்றார். ஆனால், நூலின் இறுதியில் ஆகாபின் இரத்தத்தை நாய்கள் நக்குகின்றன. 

இப்படிப்பட்ட முரண்களை வாசிக்கும்போதெல்லாம் நாம் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். அரசரைப் பற்றிய எந்தப் பதிவுகளையும் நாம் இருப்பதுபோல அப்படியே எடுத்துக்கொள்ளக் கூடாது. அரசவைக் கவிஞர்கள் அல்லது அரசர்கள் தங்களுடைய அரசனை ஏற்றிப் போற்றி எழுதுவது மரபு. எடுத்துக்காட்டாக, சாலமோன் ஞானத்திற்காக மன்றாடுகின்றார். ஆனால், அவருடைய வாழ்வின் இறுதியில் மிகவும் மதிகேடான செயல் செய்து இறந்து போகின்றார். சாலமோன் ஞானத்திற்காக மன்றாடியிருப்பாரா? தெரியாது? அவருடைய அரசவை ஆசிரியர் ஒருவர், சாலமோனிடம் 'வெரி குட்' வாங்குவதற்காக எழுதியிருக்கலாம். மேலும், பல ஞான ஆசிரியர்கள் தங்கள் எழுத்துக்களை சாலமோனின் எழுத்துக்களாக வார்த்தளித்திருக்கலாம். இங்கேயும், ஆகாபு அரசன் இழிவான இறப்பை எதிர்கொண்டாலும், தொட்டும் தொடாமலும் எழுதுகின்றனர் ஆசிரியர்கள்.

நாபோத்திடம் திராட்சைத் தோட்டம் இருந்தது உண்மை. அதை ஈசபேல் தட்டிப் பறித்தது உண்மை. அதற்கு மறைமுகமான தூண்டுதலாக ஆகாபு இருந்தது உண்மை. எலியா இறைவாக்குரைத்ததும் உண்மை. ஆனால், ஆகாபை கடவுள் மன்னித்தாரா? அல்லது தண்டித்தாரா? என்பது உறுதியாக இல்லை.

இன்றைய வாசகத்தில் உள்ள மூன்று சொல்லாடல்களை நாம் சிந்திப்போம்:

அ. 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?'

எலியா ஆண்டவரின் வாக்கைத் தனக்கு உரைத்தபோது, ஆகாபு, 'என்னைக் கண்டுபிடித்துவிட்டாயா?' எனக் கேட்கின்றார். ஆண்டவரின் கண்கள் ஆயிரம் சூரியன்களுக்கு ஒப்பானவை என்றும், அவற்றுக்கு மறைவானது எதுவும் இல்லை எனவும் சொல்கின்றன ஞானநூல்கள். ஆக, நாம் செய்கிற செயல்கள் அனைத்தையும் இறைவன் காண்கின்றார். குறிப்பாக, வறியவர்களுக்கு துன்பம் இழைக்கப்படும்போது ஆண்டவர் அவர்கள் சார்பாக செயலாற்றுகிறார். ஆனால், நாபோத்து உயிரோடு இருக்கும்போது தன்னை நோக்கி அவர் அழைத்தபோது, அவரைக் காப்பாற்ற வராத கடவுள், இப்போது அந்த நிகழ்வைக் கண்டுபிடித்து தண்டனை கொடுத்தால் என்ன? கொடுக்காவிட்டால் என்ன?

ஆ. 'உன்னையே விற்றுவிட்டாய்'

பாவம் செய்தல் என்பதை 'விற்றுவிடுதல்' என்ற சொல்லாடல் வழியாக பல நிகழ்வுகளில் பதிவு செய்கிறது முதல் ஏற்பாடு. பாவம் செய்யும்போது நான் என்னுடைய தான்மையை, அறிவை, சுதந்திரத்தை என்னுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் விற்றுவிடுகிறேன். எடுத்துக்காட்டாக, நான் கோபத்தில் யாரையாவது அடித்துவிடுகிறேன் என வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில், நான் அந்தக் கோபத்தின் அடிமையாக என்னை விற்றுவிடுகிறேன். ஆனால், நாம் எந்த உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், நபர்களுக்கும், கருத்தியல்களுக்கும் நம்மை விற்றல் ஆகாது.

இ. 'நாய்கள் நக்கும்'

இது ஒரு பக்கம் தண்டனையாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதுதான் வாழ்வின் எதார்த்த நிலை. நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைப் பறித்த ஆகாபு, அதில் காய்கறி போடப் போவதாகச் சொன்னார். அவர் காய்கறி போட்டாரா, போடவில்லையா, எவ்வளவு விளைச்சல் கிடைத்தது, கிடைக்கவில்லை என்று எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், ஆகாபு இறந்தபோது அவர் பறித்துக்கொண்ட தோட்டம் அவரைக் காப்பாற்றவில்லை. அவர் அடைத்த வேலிகள் நாய்களைத் தள்ளி வைக்கவில்லை. இறப்பின் முன், நாய்களின் முன் ஆகாபு கையறுநிலையில் கிடக்கின்றார். தான் பறித்துக்கொண்டு அதே நிலத்தில் தன் இரத்தத்தைச் சிந்துகின்றார். இதையே பட்டினத்தார், 'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே' என்கிறார். காதறுந்த ஊசி கூட கடைசியில் உடன் வராதபோது, தோட்டத்தைப் பறிப்பதும், தோட்ட உரிமையாளரைக் கொல்வதும் ஏன்?

நற்செய்தி வாசகத்தில் (மத் 5:43-48), நம்மை வெறுப்பவர்மேலும் அன்பு காட்டுமாறு நமக்குக் கற்பிக்கின்றார் இயேசு. விண்ணகத் தந்தையைப் போல நிறைவாய் இருப்பது என்பது இரக்கம் காட்டுவதில்தான் உள்ளது.

சில நேரங்களில் கடவுள் நீதியின்படி செயலாற்றுகின்றார் (முதல் வாசகத்தில்போல). சில நேரங்களில் இரக்கத்தின்படி செயலாற்றுகின்றார் (நற்செய்தி வாசகத்தில் போல)



Saturday, June 11, 2022

ஏன் கடவுள்? என் கடவுள்!

மூவொரு இறைவன் பெருவிழா

I. நீதிமொழிகள் 8:22-31 II. உரோமையர் 5:1-5 III. யோவான் 16:12-15

ஏன் கடவுள்? என் கடவுள்!

நாம் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, நம் நண்பர்களைச் சந்திக்கும்போது, 'எப்படி இருக்குற?' என்று கேட்கிறோம். என்றாவது ஒருநாள் அவர்களிடம், 'ஏன் இருக்குற?' என்று கேட்டுப்பார்த்தால் அது விபரீதத்தில் போய் முடியும். இல்லையா? ஓர் ஆய்வகத்தில் இருக்கிறோம். தண்ணீரின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கண்டுபிடிக்கிறோம். 'தண்ணீர் உருவாவது எப்படி?' என்று கேட்டால், 'ஒரு பகுதி ஆக்ஸிஜனும், இரு பகுதி ஹைட்ரஜனும் இணையும்போது தண்ணீர் உருவாகிறது' என்று பதில் சொல்லலாம். ஆனால், இதையே கொஞ்சம் மாற்றி, 'தண்ணீர் ஏன் உருவாகிறது?' என்று கேட்டால் நமக்குப் பதில் தெரியாது. ஆக, மனிதர்கள் மற்றும் இயற்பியல்சார் உலகில், 'எப்படி?' என்ற கேள்விக்குத்தான் பொருள் கிடைக்குமே தவிர, 'ஏன்?' என்ற கேள்விக்கு அல்ல.

ஆனால், கடவுள் மற்றும் இறைசார் உலகு இதற்கு எதிர்மாறானது. இங்கே, 'ஏன்?' என்ற கேள்விக்குத்தான் விடையே தவிர, 'எப்படி?' என்ற கேள்விக்கு விடையில்லை. 'ஏன் விண்ணேற்றம்?' என்று கேட்கலாம். 'எப்படி விண்ணேற்றம்?' என்று கேட்க முடியாது. 'ஏன் நற்கருணை?' என்று கேட்கலாம். 'எப்படி நற்கருணை?' என்று கேட்க முடியாது. 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம். 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்க முடியாது.

இன்று நாம் மூவொரு இறைவன் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

'இவ்வாறு உண்மையான, நிலையான கடவுள் தன்மையை நாங்கள் அறிக்கையிடும்போது

வகையில் தனித்தன்மையையும் இறை இயல்பில் ஒருமையையும்

மாண்பில் சமத்துவத்தையும் போற்றுகின்றோம்' என்று பாடும் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரை ஓரளவுக்கு மூவொரு இறைவன் என்னும் மறையுண்மையை விளக்கினாலும் நம்மால் இதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

நான் புனேயில் இறையியல் பயின்றபோது, மூவொரு இறைவன் பற்றி ஓர் ஆயர் வகுப்பெடுக்க, அங்கிருந்த மாணவர் ஒருவர், 'ஆயரே! மூவொரு இறைவன் பற்றித்தான் நம்மால் அறிந்துகொள்ள முடியாதே. அப்படி இருக்க அவர் மூன்று பேராக இருந்தால் என்ன? நான்கு பேராக இருந்தால் என்ன? வாட் டஸ் இட் மேட்டர்?' என்று கேட்டார்.

'வாட் டஸ் இட் மேட்டர்?' என்று நம் மூளை ஒதுங்கிக்கொள்ளவே நினைக்கிறது.

'தந்தை-மகன்-தூய ஆவியார்' என்று நாம் பயன்படுத்தும் வார்த்தைகளும் இன்றைய நாள்களில் ஏற்புடையவை அல்ல. இவ்வார்த்தைகள் கடவுள் ஆண்பாலைச் சார்ந்தவர் என்று அறுதியிட்டுக் கூறுகின்றன. கடவுளை எப்படி பாலினத்திற்குள் அடக்க முடியும்?

மேலும், 'மூவொரு இறைவன்' என்பது 'கடவுளைப் புரிந்துகொள்வதற்கான' ஓர் 'ஒர்க்கிங் மாடல்.' அவ்வளவுதான். நாம் பள்ளியில் படிக்கும்போது, மிக்ஸி போன்ற ஒரு மாடல் செய்கிறோம் என வைத்துக்கொள்வோம். அதில் ஒரு சிறிய மோட்டார், ஒரு சிறிய கத்தி என்று வடிவமைக்கிறோம். இதை 'ஒர்க்கிங் மாடல்' என்கிறோம். இது என்னதான் அழகாக, நேர்த்தியாக இருந்தாலும், இந்த 'மாடலை' வைத்து நாம் சட்னி அரைக்க முடியுமா? அல்லது 'மூவொரு இறைவனின் தந்தை மகனை அன்பு செய்கிறார்' எனச் சொல்கிறோம். ஆனால், வீட்டில் என் அப்பா என்னை அன்பு செய்யவே இல்லை என்றால், கண்டிப்பாக என்னால் தந்தையையும் அன்பு செய்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது. 

கிளாவர் மலர், தண்ணீர்-பனிக்கட்டி-நீராவி, அப்பா-அம்மா-மகன், வெப்பம்-ஒளி-கதிர்வீச்சு என எவ்வளவோ உருவகங்களைப் பயன்படுத்தினாலும், திருவிவிலியத்திலிருந்து மேற்கோள்கள் காட்டினாலும் நம்மால் இம்மறைபொருளைப் புரிந்துகொள்ளவே முடியாது.

ஆக, 'எப்படி மூவொரு இறைவன்?' என்று கேட்பதை விடுத்து, 'ஏன் இறைவன்?' அல்லது 'ஏன் மூவொரு இறைவன்?' என்று கேட்கலாம்.

இன்று கடவுள் நமக்குத் தேவையா? கடவுள் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா?

நாம் கடவுள் தேவையை மூன்று நிலைகளில் அல்லது வழிகளில் உணர்கின்றோம்: (அ) நம்முடைய வரையறை அனுபவம். 'என்னால் ஐம்பது கிலோதான் தூக்க முடியும்' என வைத்துக்கொள்வோம். ஆனால், அறுபது கிலோ தூக்க வேண்டும் என்ற நிர்பந்தம் வரும்போது, நம் மனம் இயல்பாகவே கடவுளை நோக்கி எழும்புகிறது. என்னால் முடியாத ஒன்றைச் செய்ய நான் இறைவனின் துணையை நாடுகிறேன். (ஆ) தனிமை. விலங்குகள் ஒருபோதும் தனிமையை உணர்வதில்லை. அவை எதிரிகளைக் கண்டுதான் பயப்படுமே தவிர தனியாய் இருக்கப் பயப்படுவதில்லை. ஆனால், நாமோ எதிரிகளோடு விருந்துண்டு, பயணம் செய்து, வழி நடந்து, இருந்தாலும் மனதில் தனிமையாய் உணர்வதண்டு. கடவுள் ஆதாமிடம் விரும்பாத உணர்வும் தனிமை தான். தனிமைக்குத் துணையாக ஏவாள் படைக்கப்பட்டாலும், முதற்பெற்றோரின் தனிமையைப் போக்குபவராக கடவுள் இருக்கிறார். (இ) நினைவு. கடவுள் பற்றிய உணர்வு நம்முடைய நினைவில் இருக்கிறது. இந்த நினைவு தனிநபர் சார்ந்ததாக இருக்கலாம். அல்லது ஒட்டுமொத்த குழும உணர்வாக இருக்கலாம். என்னுடைய அம்மாவும், அப்பாவும் 'கடவுள் என்றால் இது அல்லது இவர்' என்று தங்கள் நினைவில் இருந்ததை எனக்கு கொடுக்கிறார்கள். அவர்கள் அதை ஒட்டுமொத்த குழும நினைவிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். ஆக, நினைவு இருக்கும் வரை தான் கடவுள் இருப்பார். எனக்கு நினைவு போய்விட்டால் என்னைப் பற்றியே எனக்குத் தெரியாதபோது கடவுளைப் பற்றி எனக்கு என்ன தெரியும்?

ஆக, நம்முடைய வரையறை அனுபவம், தனிமை, நினைவு இம்மூன்றும் கடவுள் என்னும் தேவையை அறியவும், தேடவும் நம்மைத் தூண்டுகின்றன.

'கடவுளை யாரும் என்றுமே கண்டதில்லை. தந்தையின் நெஞ்சத்திற்கு நெருக்கமானவரும் கடவுள்தன்மை கொண்டவருமான ஒரே மகனே அவரை வெளிப்படுத்தியுள்ளார்' (காண். யோவா 1:18) என யோவான் நற்செய்தியாளர் அறிக்கையிடுகின்றார். ஆக, காணக்கூடிய இயேசுவிடமிருந்து நாம் காணக்கூடாத இறைவனை நோக்கிச் செல்கின்றோம். இதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இயேசு சிலுவையில் அறையப்பட்ட அன்று அவர் அவருடைய மனித தன்மையில் அறையப்பட்டாரா அல்லது இறைத்தன்மையில் அறையப்பட்டாரா? மனிதத் தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறைவன் இல்லையா? இறைத்தன்மையில் அறையப்பட்டார் என்றால் அவர் இறந்த அன்று மூவொரு இறைவனில் ஒரு ஆள் இறந்துவிட்டாரா? அல்லது மூவொரு இறைவனுமே இறந்துவிட்டாரா? இவை நம் கேள்விகள் அல்ல. வரலாற்றில் ஆரியஸ் போன்றவர்கள் கேட்ட கேள்விகளே.

ஆக, இயேசுவிடமிருந்து அல்லது இயேசு வழியாக மூவொரு இறைவனை அறிந்துகொள்வதும் கடினமாக இருக்கிறது. 

இன்றைய இறைவார்த்தை வழிபாடு நமக்கு ஒரு வழியைக் காட்டுகிறது. மூவொரு இறைவனின் மூன்று பண்புகளை இது பட்டியல் இடுகிறது: (அ) இணைச்சார்புநிலை, (ஆ) இணைவுநிலை, மற்றும் (இ) உள்முகப்பார்வை. 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். நீமொ 8:22-31) 'ஞானம் என்னும் பெண்' தன் வரலாறு கூறுகிறாள். இந்த ஞானமே படைப்புச் செயலில் முக்கியமான பங்கு வகிக்கிறது. ஒழுங்கற்ற உலகில் ஒழுங்கை ஏற்படுத்தும் நில வரைபடமாக இருக்கின்றாள் ஞானம். இவள் வழியாகவே கடவுள் உலகை உருவாக்கி அதற்கு உயிர் கொடுக்கிறார். நீதிமொழிகள் ஆசிரியர் படைப்புச் செயல் பல நிலைகளில் நடந்ததாக எழுதுகிறார். முதலில், ஞானம் படைக்கப்படுகிறாள். படைக்கப்பட்ட ஞானம் கடவுள் முன் அகமகிழ்கிறாள். மூவொரு இறைவனின் முதல் நபராக இருக்கின்ற தந்தையாகிய கடவுள் ஞானத்தைப் பெற்றெடுக்கிறார். இங்கே இரண்டும் வேறு வேறு அல்ல. உதாரணத்திற்கு, சிலந்தியின் வாயிலிருந்து வரும் ஒருவித பிசுபிசுப்பான பசை சிலந்திக் கூடாக மாறுகின்றது. சிலந்திக் கூட்டின் ஒரு நுனியைப் பிடித்து நாம் கவனமாகச் சென்றால் சிலந்தியை அடைந்து விடலாம். சிலந்தியும் பசையும் வேறு வேறு எனத் தோன்றினாலும், அவை வேறல்லவே. ஞானம் கடவுளின் பிரதிபலிப்பாகவும் வெளிப்பாடாகவும் இருக்கிறது. தந்தை தன்னிடமிருந்தே ஞானத்தைப் படைத்தாலும், உலகைப் படைப்பதற்காக, அவர் ஞானத்தோடு இணைச்சார்புநிலையில் இருக்கின்றார்.

இரண்டாம் வாசகம் (காண். உரோ 5:1-5) இரண்டாம் நபரான இயேசுவை மையப்படுத்தியதாக இருக்கிறது. கடவுளுடைய படைப்பு மனிதர்களின் பாவத்தால் பாழ்படுகிறது. இதனால் கடவுளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு நிலை பாதிக்கப்படுகிறது. முதற்பெற்றோரின் பாவத்திற்குப் பின் பயமும் குற்றவுணர்வும் மனிதர்களைத் தொற்றிக்கொள்ள, இறப்பும் அழிவும் தவிர்க்கமுடியாதவையாகின்றன. கடவுள் தன் மக்களை மீட்டு மீண்டும் தன்னோடு இணைத்துக் கொண்டதை, பவுல், 'ஏற்புடையவராதல்' என்ற வார்த்தையால் விளக்குகின்றார். பவுலைப் பொருத்தவரை, 'நாம் நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவராகி, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம்' (காண். உரோ 5:1). இயேசுவின் வழியாக நாம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றோம். இந்த எதிர்நோக்கு நாம் இவ்வுலக வாழ்வை இனிதே வாழத் துணைசெய்கிறது. இயேசு, பாவத்தால் ஏற்பட்ட பிரிவை அகற்றி, கடவுளக்கும் நமக்கும், நமக்கும் மற்றவர்களுக்கும் இணைவுநிலையை உருவாக்குகின்றார். 

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 16:12-15) தமதிருத்துவத்தின் மூன்றாம் நபரான தூய ஆவியாரை மையமாகக் கொண்டுள்ளது. தூய ஆவியார் திருத்தூதர்களை உண்மையை நோக்கி வழிநடத்துவதோடு, அவர் இயேசுவையும் மாட்சிப்படுத்துகிறார். ஆவியார் ஒரு மனிதரின் உள்இயல்பாக மாறி, உண்மையை நோக்கி அவருடைய இதயத்தைத் திருப்புகிறது. வெளிநோக்கிய ஒரு நபரை உள்நோக்குப் பார்வை கொள்ளச் செய்கிறார் தூய ஆவியார்.

மூவொரு இறைவன் இன்றைய நம் வாழ்வுக்குத் தரும் பாடங்கள் எவை? 

அ. ஆதிக்கத்திலிருந்து இணைச்சார்புநிலைக்கு

இன்று நம் உறவுகள் - குடும்பம், சமூகம் - சீக்கிரம் கசந்துபோவதற்குக் காரணம் ஆதிக்கம். சிறு வயதில் காதல், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், சோர்வு, விரக்தி போன்று இளையோரும் ஒருவர் மற்றவரை உரிமையாக்கிக் கொள்ள நினைக்கும் பண்பு அதிகமாகிறது. மேலும், என் உறவுக்கு நானே பொறுப்பு, என் வாழ்வுக்கு நானே பொறுப்பு என்ற மனநிலையில், அதை உரிமையாக எடுத்துக்கொண்டு அடுத்தவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வளர்கிறது. உறவு நிலையில் இருப்பவர் மற்றவர்மேல் உள்ள உரிமையை முன்னிறுத்தி, மற்றவரைத் தன்னுடைய உடைமை எனக் கருதும் போக்கும் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது. மூவொரு இறைவன் ஒருவர் மற்றவர்மேல் ஆதிக்கம் செலுத்தும் நபர்கள் அல்லர். மாறாக, ஒருவர் மற்றவரோடு இணைச்சார்புநிலை கொண்டிருப்பவர்.

ஆ. அந்நியப்படுத்துதலிலிருந்து இணைவிற்கு

பாவத்தால் ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்பட்டு நின்று நம்மை ஒருவர் மற்றவரோடும், கடவுளோடும் இணைக்கிறார் இயேசு. அந்நியப்படுதல் என்பது விலகி நிற்றல். இன்று தகவல் தொழில்நுட்பம் நம்மை எந்த அளவிற்கு அருகில் கொண்டுவந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மை ஒருவர் மற்றவரிடமிருந்து அந்நியப்படுத்தியிருக்கிறது என்பதும் உண்மை. இணைவை நோக்கி நாம் செல்ல ஒருவர் மற்றவருக்கு அருகில் வந்து நிற்கும் நற்குணம் பெறுதல் வேண்டும்.

இ. வெளிப்புறப்பார்வையிலிருந்து உள்முகப்பார்வைக்கு

நாம் அனைவரும் வெளிப்புறத்தில் தோற்றத்தில் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபட்டு இருந்தாலும் நம்மிடையே குடிகொண்டிருக்கும் கடவுள் ஒருவர்தான். இதையே, 'தத்வமசி' என்கிறது உபநிடதம். நான் ஒருவர் மற்றவரைச் சந்திக்கும்போது, என்னில் இருக்கும் கடவுள் அவரில் இருக்கும் கடவுளைச் சந்திக்கிறார். ஆக, அடுத்தவரை நான் வெளிப்புறத் தோற்றம் மற்றும் பின்புலம் கொண்டு மதிப்பிடாமல், அவரின் உள்முகத்தைக் கண்டு அன்பு செய்தல் நாம் கற்க வேண்டிய மூன்றாவது பாடம்.

இறுதியாக, மூவொரு இறைவன் என்னும் மறைபொருள் கடவுளுக்குத் தேவையோ, இல்லையோ, அது நம் ஒவ்வொருவருக்கும் தேவை. இம்மறைபொருளில் நாம் கடவுளை அல்ல. நம் ஒவ்வொருவரையுமே கண்டுகொள்கிறோம். இப்படிக் கண்டுகொள்ளும் நாம் பகிர்வு, சார்பு, சமத்துவம் என்று ஒருவர் மற்றவரை அரவணைக்கிறோம். ரொம்ப பிராக்டிகலாக சொல்ல வேண்டுமென்றால், மூவொரு இறைவனின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் மேலோர்-கீழோர் என்று வேற்றுமை பாராட்டுவதில்லை, சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை, மூட நம்பிக்கைகள் கொண்டிருப்பதில்லை, தங்களுடைய சமய மரபுகளைப் பிடித்துக்கொண்டிருப்பதில்லை, தான் செய்வதே சரி என்று சொல்வதில்லை, யார்மேலும் வன்முறை பாராட்டுவதில்லை. அவர்கள் அனைவரையும் மதிப்பர், கனிவோடு நடத்துவர், தன்னைப் போல நடத்துவர்.

மூவொரு இறைவனைப் பற்றி அறிந்து கொள்வது என்பது, என்னைத் துரத்திக்கொண்டே ஒரு மரத்தைச் சுற்றிக்கொண்டு நான் ஓடுவது போன்றது. நான் எத்துணை வேகமாக ஓடினாலும், என்னை நான் பிடிக்க முடியாது. ஏனெனில் 'நான்' என்பதும், 'எனது' என்பதும் ஒன்றே. இவ்வாறே, மூவொரு இறைவனைப் பற்றிப் புரிந்து கொள்ள முயலும் ஒவ்வொரு நொடியும் நான் என்னையே புரிந்துகொள்கிறேன். என்னையும், என்னைச் சுற்றி இருக்கும் சமூகத்தையும் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நான் என் மூவொரு இறைவனையே புரிந்து கொள்கிறேன். ஏனெனில், ஏன் கடவுள்? என்ற கேள்வியிலிருந்து என் கடவுள் யார் என்று நான் கண்டுகொள்கின்றேன்.

உங்களையும், என்னையும் போலவே மூவொரு இறைவனும் ஒரு மறைபொருள்!