Wednesday, March 31, 2021

இறுதி வரை அன்பு

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி (பெரிய வியாழன்)

I. விடுதலைப் பயணம் 12:1-8,11-14 II. 1 கொரிந்தியர் 11:23-26 III. யோவான் 13:1-15

இறுதி வரை அன்பு

ஒரு கணவன் மனைவி. கணவன்மேல் அந்த மனைவிக்கு நிறைய மதிப்பு உண்டு. கணவனும் அவரை மிகவே அன்பு செய்தார். உடல்நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்ற ஒரு நாளில் கணவருக்கு சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என அறிகிறார்கள். இருவருக்குமே கவலை. கணவரின் உறவினர்கள் நடுவில் யாராவது ஒருவர் சிறுநீரக தானம் செய்வார்களா எனப் பார்க்கிறார்கள். யாருமே முன்வரவில்லை. ஒரு கட்டத்தில், மனைவி கணவருக்குத் தெரியாமல் மருத்துவமனைக்குச் சென்று தன் சிறுநீரகம் பொருந்துமா என்பதை அறிகின்றார். பொருந்தும் என்று தெரிந்தவுடன் தானே சிறுநீரக தானம் செய்ய முன்வருகிறார். தன் உடலின் ஒரு பகுதி குறைந்தாலும், தான் இதற்காக நிறைய மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் தன் கணவன்மேல் கொண்ட மதிப்பினால் அந்த மனைவி அவருக்காகத் துன்பம் ஏற்கின்றார். தன் கணவரை 'இறுதி வரை' - சிறுநீரகம் தானம் கொடுக்கும் அளவுக்கு - அன்பு செய்கிறார்.

அவர் ஒரு மகன். வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். திடீரென தாய்க்கு உடல்நலம் சரியில்லை எனக் கேள்விப்பட்டு, வீட்டிற்கு வருகின்றார். தன் தாயின் அருகிலிருந்து அவர் கவனித்துக்கொள்கிறார். தாய் இறக்கும் வரை அவரோடு உடனிருக்கிறார். தாயை அவருடைய 'இறுதி வரை' - இறப்பு வரை - அன்பு செய்கிறார்.

மத்திய அமெரிக்காவில் உள்ள எல் சால்வடோர் நாட்டில் சான் சால்வடோர் உயர்மறைமாவட்டத்தில் பேராயராக இருந்தவர் ஆஸ்கர் ரொமேரோ. சால்வடோர் குடியுரிமைப் போர் நடந்த போது சாதாரண மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கின்றார். 1980ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அன்று திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அவரை எதிர்த்தவர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்துபோகின்றார். தன் நாட்டின் மக்களை அவர் 'இறுதி வரை' - தன் இறப்பு வரை - அன்பு செய்கிறார்.

இன்றைய நாள் நான்கு நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது:

ஒன்று, இந்த இரவில்தான் இயேசு, 'இது என் உடல், இது என் இரத்தம்!' என்று சொல்லி, நற்கருணையை ஏற்படுத்துகின்றார்.

இரண்டு, 'இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்று பணிக்குருத்துவத்தை ஏற்படுத்துகின்றார்.

மூன்று, 'இதை நீங்கள் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்' என்று தன் சீடர்களின் பாதங்கள் கழுவி பணிபுரியும் தலைமைத்துவத்தைக் கற்றுக்கொடுக்கின்றார்.

நான், 'நான் உங்களுக்கு அன்பு செய்தது போல நீங்கள் ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்' என்று அன்புக் கட்டளையை புதிய கட்டளையாக வழங்குகின்றார்.

இந்த நான்கு முக்கியத்துவங்களையும், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் நாம் காணும் சொல்லாட்சி வழியாகச் சிந்திப்போம்.

முதலில், 'அவர் இறுதிவரை அன்பு செய்தார்' என்னும் வாக்கியத்தின் பொருள் என்ன?

இங்கே, 'அன்பு' என்பதற்கு, யோவான் நற்செய்தியாளர், 'அகாபே' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றார். கிரேக்க மொழியில் அன்பைக் குறிக்க நான்கு சொற்கள் உள்ளன. முதல் சொல், 'ஈரோஸ்' என்பது. இது உடல்சார்ந்த ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'காதல்' எனலாம். இனிமைமிகு பாடல் நூலில் உள்ள பெரும்பான்மையான பாடல்கள் இத்தகைய அன்பைப் பற்றியே பாடுகின்றன. நம் தமிழ் இலக்கியத்தில் உள்ள அகநானூறு மற்றும் குறுந்தொகை நூல்களும் இத்தகைய பாடல்களைத்தான் கொண்டிருக்கின்றன. இரண்டாம் சொல், 'ஃபிலியா' என்பது. இது உள்ளத்து ஈர்ப்பால் வரும் அன்பைக் குறிக்கிறது. இதை 'நட்பு' எனலாம். விவிலியத்தில் நாம் காணும் யோனத்தான்-தாவீது அன்பு இத்தகையது. மூன்று, 'ஸ்டார்கே'. இது உடன்பிறப்புகள் மற்றும் இரத்த உறவுக்குள் நிகழும் அன்பு. எடுத்துக்காட்டாக, தன் சகோதரன் லோத்துக்கு எதிராகப் பகைவர்கள் புறப்பட்ட போது அவர்களை எதிர்கொண்டு தன் சகோதரனைக் காப்பாற்ற ஆபிரகாம் விரைந்து சென்றது இத்தகைய அன்பால்தான். நான்காவது சொல், 'அகாபே.' இரத்த உறவு, திருமண உறவிலும், அவ்விரு உறவுகளையும் தாண்டி, முழுக்க முழுக்க தன்னையே பிறருக்குக் கையளிக்கின்ற உடன்படிக்கை அன்பு இது. கிரேக்கர்கள் பெரும்பாலும் இதைக் கடவுள் அல்லது பிரபஞ்சம் மனிதர்களை அன்பு செய்வதைக் குறிக்கப் பயன்படுத்தினர். அதாவது, மனிதர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் கதிரவன் அனைவர்மேலும் தன் ஒளியை அள்ளி வீசுகிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் மழை யாவருக்கும் பொழிகிறது. கதிரவனும், கடவுளும், மழையும் அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் தங்கள் இயல்பை மாற்றிக்கொள்ளாமல், தங்களிடம் உள்ளதை அப்படியே எந்தவொரு நிபந்தனையும் இன்றி வழங்குகின்றார்கள். ஆக, 'அகாபே' என்பது நிபந்தனையற்ற, தற்கையளிப்பு செய்யும் அன்பு. இன்றைய நற்செய்தி வாசகத்தில், யோவான் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது இயேசுவின் தற்கையளிப்பைக் காட்டுவதற்கே. இதே தற்கையளிப்பையே நாம் முதலில் சொன்ன மூன்று எடுத்துக்காட்டுகளில் - கணவன் மனைவி, மகன் தாய், ஆஸ்கார் ரொமேரா மக்கள் - பார்க்கின்றோம்.

அடுத்ததாக, 'இறுதி வரை' (கிரேக்கத்தில், 'எய்ஸ் டெலோஸ்') என்ற சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. 'இறுதி' என்பது மூன்று பொருளைக் குறிக்கிறது. ஒன்று, நேரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, ஒரு மாணவன் இறுதி வரை தேர்வு எழுதினான் என்று சொல்லும்போது, அவன் 10 முதல் 1 மணி வரை எழுதினான். இடையில் எழுந்து செல்லவில்லை என்பது பொருள். இரண்டு, இடம் அல்லது தூரம் சார்ந்தது. எடுத்துக்காட்டாக, நான் பேருந்து இல்லாமல் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என்னைத் தன் காரில் ஏற்றிக்கொண்டவர் இறுதி வரை வந்தார். இதில், இறுதி வரை என்பது நாம் செல்ல வேண்டிய இடம் அல்லது கடக்க வேண்டிய தூரத்தைக் குறிக்கின்றது. மூன்று, நிறைவு அல்லது முழுமை சார்ந்தது. பிறந்த நாள் கொண்டாடுகிறோம். கேக் வெட்டுகிறோம். அழைக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு, ஆனால் கேக் பெரியதாக இருக்கிறது. அங்கிருந்த ஓர் இளவல் அந்த கேக்கை இறுதிவரை உண்கின்றார். அதாவது, முழுமையாக உண்கின்றார். 

'இறுதிவரை இயேசு அன்பு செய்தார்' என்பதை நாம் மேற்காணும் மூன்று பொருள்களிலும் எடுத்துக்கொள்ளலாம். தன் வாழ்வின் இறுதி நேரம் வரை அன்பு செய்தார். கலிலேயாவில் தொடங்கிய தன் பயணத்தின் இலக்கான எருசலேம் வரை அன்பு செய்தார். முழுமையாக, எந்தவிதக் குறையுமின்றி, 'தன் உயிரைக் கொடுக்கும் அளவுக்கு' அன்பு செய்தார்.

இயேசு யாரை அன்பு செய்தார்?

'உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர்' என எழுதுகிறார் யோவான்.

யோவான் நற்செய்தியில், 'உலகம்' என்றால் 'கடவுளுக்கு எதிரான நிலை' என்றும், 'கடவுள் இயங்கும்தளம்' என்றும் பொருள். இங்கே, இரண்டாவது பொருளில்தான் நாம் இந்த வார்த்தையை எடுக்க வேண்டும். 'தமக்குரியோர்' என்றால் அது திருத்தூதர்களையோ, தனிப்பட்ட யூத இனத்தையோ மட்டும் குறிக்கவில்லை. மாறாக, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட அனைவரையும் - அதாவது, எல்லாரையும் - குறிக்கிறது. ஆனால், இந்த நிலை ஒரு சிறப்புரிமை மட்டுமல்ல. மாறாக, ஒரு பொறுப்புணர்வும் கூட. இந்தச் சிறப்புரிமையைப் பெறுபவர்கள் அதற்கேற்றாற் போல வாழ்ந்த அந்த நிலையைத் தக்கவைக்க வேண்டும். யோவான், தன் நற்செய்தியின் தொடக்கத்தில், 'அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை' எனப் பதிவு செய்கின்றார். இங்கே, மக்கள் தங்களிடம் வந்தவருக்குச் செய்த எதிர்மறையான பதிலிறுப்பையே நாம் காண்கின்றோம்.

நாம் எல்லாருமே அவருக்கு உரியவர்கள். நம் அனைவரையும் அவர் இறுதி வரை அன்பு செய்கிறார்.

அவர் நம்மை இறுதி வரை எப்படி அன்பு செய்கின்றார்?

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் கொண்டாட வேண்டிய முதல் பாஸ்கா விருந்து அல்லது விழா பற்றி மோசே மற்றும் ஆரோன் வழியாக கடவுள் வழங்கும் அறிவுரையைக் கேட்கின்றோம். விருந்து எப்படிக் கொண்டாடப்பட வேண்டும் எனச் சொல்கின்ற ஆண்டவராகிய கடவுள் தொடர்ந்து, 'இது ஆண்டவரின் பாஸ்கா. ஏனெனில், நான் இன்றிரவே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்' என்று சொல்கின்றார். ஆக, ஆண்டவராகிய கடவுள் கடந்து செல்வதையும், அவருடைய கடந்து செல்தலால் தீமை அழிவதையும், கடவுளின் வல்லமை எதிரிகளின் முன் வெளிப்படுவதையும் நாம் காண்கின்றோம். ஆக, தீமையை அழிப்பவராக கடவுள் நம் முன் கடந்து சென்று நம்மை அன்பு செய்கின்றார்.

இரண்டாம் வாசகத்தில், கொரிந்து நகரில் வாழ்ந்து வந்த கிறிஸ்தவர்கள் நடுவே, அப்பம் பிட்குதல் நிகழ்வில் நடந்த பிறழ்வுகளை - ஏற்றத்தாழ்வுகளை, ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு மற்றவர் தள்ளப்படுவதை, உணவு மற்றும் குடிவெறியை - கடிந்துகொள்கின்ற பவுல், இந்த அப்பம் பிட்குதலின் தோற்றுவாய் ஆண்டவராகிய இயேசு என்றும், இந்த வெளிப்பாடு தான் பெற்றுக்கொண்டது என்றும், இதற்கு ஓர் இலக்கு இருக்கிறது என்பதையும் முன்மொழிகின்றார். 'பெற்றுக்கொண்டேன் - ஒப்படைக்கின்றேன்' என்று சொல்வதன் வழியாக, இந்த மரபு வாழையடி வாழையாகத் தொடர வேண்டும் என்கிறார் பவுல். இயேசு ஏற்படுத்திய நற்கருணை புதிய உடன்படிக்கை ஆகும். ஆக, இது உறவைக் குறிக்கின்றது. அப்பம் பிட்குதலின் இலக்கு என்னவென்றால், 'ஆண்டவருடைய சாவை - தற்கையளிப்பை - அவர் வரும் வரை அறிக்கையிடுவது. ஆக, கடவுள் நம்மோடு உடன்படிக்கை செய்துகொண்டு, நமக்காகத் தன்னையே கொடையாகக் கொடுத்து நம்மை அன்பு செய்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், பாஸ்கா விழாவுக்கு முந்தைய நாளில் - யோவான் நற்செய்தியில் நாள் முரண்பாடு உள்ளது - தம் சீடர்களோடு உணவருந்துகின்ற இயேசு, அப்பமும் இரசமும் கொண்டு நற்கருணையை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, தண்ணீரும் துண்டும் கொண்டு 'பணிவிடை நற்கருiணையை' ஏற்படுத்துகின்றார். இது ஒரு பெரிய இடறலாக இயேசுவின் சீடர்களுக்கு இருந்திருக்கும். ஓர் அடிமை செய்கின்ற வேலையை, தங்களில் யாரும் அதைச் செய்வதற்கு முன் வராத நிலையில், தங்கள் தலைவர் அச்செயலைச் செய்தது குறித்து அவர்கள் பதறிப் போனார்கள். 'உங்களை நான் பணியாளர்கள் என்றல்ல, மாறாக, நண்பர்கள் என அழைத்தேன்' என்று சொன்ன இயேசு, நட்பின் அடையாளமாக பணிவிடையைக் கையில் எடுக்கின்றார். அவர் நமக்குப் பணிவிடை செய்து நட்பு பாராட்டினால் அன்றி, நாம் யாருக்கும் பணிவிடை செய்யவோ, யாரிடமும் நட்பு பாராட்டவோ முடியாது. ஆகையால்தான். தன் பாதங்களைக் கழுவ பேதுரு அனுமதிக்காதபோது, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை' என்கிறார் இயேசு. ஆக, நமக்குப் பணிவிடை செய்வதன் வழியாக, பணிவிடை வழியாக, நம்மை நண்பர்கள் நிலைக்கு உயர்த்துவதன் வழியாகக் கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.

நாம் அன்றாடம் அல்லது அடிக்கடி நற்கருணை கொண்டாடுகின்றோம். அருள்பணி நிலையில் பணிக்குருத்துவத்திலும், பொதுநிலையில் பொதுக்குருத்துவத்திலும் பங்கேற்கின்றோம். இரண்டிலும் நாம் கற்க வேண்டியது ஒன்றே: 'அன்பு செய்தல்', குறிப்பாக, 'இறுதிவரை அன்பு செய்தல்.'

இறுதிவரை அன்பு செய்தல் என்பது, (அ) தீமைகளை அழித்து நாம் அன்பு செய்பவரோடு உடன் செல்வது, (ஆ) ஒருவர் மற்றவரோடு உடன்படிக்கை செய்துகொண்டு, உடன்படிக்கையின் உரிமைகள் மற்றும் கடமைகளை உணர்ந்து, நம்மையே கொடையாக மற்றவருக்குக் கொடுப்பது, மற்றும் (இ) ஒருவர் மற்றவருக்குக் கீழ் நம்மையே நிறுத்தி நம் முகம் உயர்த்தி அவரின் முகம் பார்ப்பது என்னும் மூன்று நிலைகளில் நம் வாழ்வில் வெளிப்படலாம். 

இந்த மூன்று நிலைகளையும் அடைய சில தடைகள் இருக்கின்றன: (அ) நாம் அன்பு செய்பவர்களுக்கே நாம் சில நேரங்களில் நாம் தீங்கு நினைக்கிறோம். அவர்களைத் தவறாகப் புரிந்துகொள்தல், புரிந்துகொள்ள மறுத்தல், நம் எதிர்பார்ப்புகளை அவர்கள்மேல் சுமத்துதல், குற்றங்காணுதல், பொறுப்புணர்வு துறத்தல், போன்றவற்றின் வழியாக, நாம் அவர்களுக்குத் தீங்கிழைப்பதோடு, அவர்களோடு உடன்செல்ல மறுக்கின்றோம். இறுதிவரை இருக்க வேண்டிய உடனிருப்பு இவ்வாறாக பாதியிலேயே முடிந்துவிடுகிறது. (ஆ) உடன்படிக்கையின் கடமைகளை மறந்து உரிமைகளை மட்டும் பிடித்துக்கொள்வது இரண்டாவது தடை. திருமண உறவின் உரிமையை நாம் விரும்புவது போல கடமையையும் உணர வேண்டும். அருள்பணி நிலையிலும் அவ்வாறே. உரிமையை முன்னிறுத்தி, கடமையை மறுக்கும்போது நாம் நம்மை நமக்குள்ளே வைத்துக்கொள்கின்றோம். மற்றும் (இ) மற்றவருக்குக் கீழ் அமர்ந்து அவரின் முகம் பார்ப்பதை விடுத்து, அவருக்கு மேல் அமர்ந்து அவரைப் பார்க்க விரும்புகின்றோம். கீழிருந்து மேல் பார்வையில் கண்கள் சந்திக்கும். கண்கள் சந்திக்க அங்கே உறவு உண்டாகும். நம் விருந்தி மேசையிலிருந்து எழுவதும், நம் ஈகோ என்னும் மேலாடையைக் களைவதும், அமர்வதும் கடினமே. ஆனால், கடினமானவையே வாழ்வின் இனிமையானவையாக மாறுகின்றன. 

இறுதியாக, இன்றைய பதிலுரைப் பாடலில் (116), 'ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் என்ன கைம்மாறு செய்வேன்? மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து ஆண்டவரின் பெயரைத் தொழுவேன்' என்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நம்மை இறுதிவரை அன்பு செய்து நமக்கு நன்மை செய்தார். அவரைத் தொழுவது என்றால், அவரின் கிண்ணத்தைக் கையில் ஏந்துதல் என்றால் அவரைப் போல நாமும் இறுதி வரை அன்பு செய்ய முன்வருதலே.

இறுதி வரை அன்பு செய்தல் நலம்!

Tuesday, March 30, 2021

ரபி நானோ?

இன்றைய (31 மார்ச் 2021) நற்செய்தி (மத் 26:14-25)

ரபி நானோ?

யூதாசு ஏன் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார் என்பதற்கு வரலாற்றில் மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன:

ஒன்று, அவர் 30 வெள்ளிக்காசுகளுக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். அதாவது, தன் பணத் தேவைக்காக இயேசுவைக் காட்டிக் கொடுத்தார். இக்கூற்றுக்கு எதிராக இரு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன: முதலாவது, ஏற்கெனவே யூதாசு பணத்தின் பொறுப்பாளராக இருக்கின்றார். ஆக, பணத்திற்கான தேவை அவருக்கு அதிகம் இருந்திருக்காது. இரண்டாவது, அவர் பணத்துக்காக இயேசுவைக் காட்டிக்கொடுத்திருந்தால், இயேசு துன்புறுத்தப்படுதல் கண்டு அவர் காசுகளைத் தலைமைக் குருக்களிடம் திருப்பித் தரத் தேவையில்லை. தான் பணத்தைப் பெற்றுவிட்ட மகிழ்ச்சியில் அவர் தன் வாழ்க்கையை நடத்தியிருக்கலாம்.

இரண்டு, இயேசு ஓர் அரசியல் மெசியாவாக உருவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார் யூதாசு. ஆனால், இயேசு தன்னையே ஓர் ஆன்மிக மெசியாவாக முன்வைக்கத் தொடங்கியதால் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக, ஏமாற்றம் கோபமாக மாற அவர் இயேசுவைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றும் ஏற்புடையது அல்ல. ஏனெனில், இயேசுவின் மேல் அவர் கோபம் கொண்டதாகவோ, அல்லது அவர் இயேசுவைத் தவறாகப் புரிந்துகொண்டதாகவோ நற்செய்தி நூல்களில் எந்தப் பதிவும் இல்லை.

மூன்று, இயேசு தன் மெசியா பணியேற்பில் தாமதிப்பதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவின் பணியைத் துரிதப்படுத்துவதற்காக அவரைக் காட்டிக்கொடுத்தார். இக்கூற்றே இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் பணியின்போது அவரைச் சுற்றியிருக்கின்ற கூட்டத்தைப் பார்க்கின்ற யூதாசு, இயேசு சென்றவிடமெல்லாம் நன்மை செய்துகொண்டே செல்வதைக் காண்கின்ற யூதாசு, இயேசுவுக்கு மக்களுடைய ஆதரவும் உடனிருப்பும் இருக்கும் என்று தவறாகக் கணக்கிட்டுவிடுகின்றார். 'ஓசன்னா!' பாடிய கூட்டத்தைக் கண்டவுடன் இன்னும் யூதாசுக்கு உற்சாகம் கூடியிருக்கும். ஆனால், 'ஓசன்னா!' பாடிய கூட்டம் 'சிலுவையில் அறையும்!' என்று பேசத் தொடங்கியடவுடன், யூதாசைப் பதற்றம் பற்றிக்கொள்கின்றது. தன் கணக்கு தவறிவிட்டதாக உணர்கின்றார். தான் தொடங்கிய கொடுமையைத் தானே முடித்து வைக்க நினைத்து தலைமைக் குருக்களிடம் செல்கின்றார். சென்று முறையிடுகின்றார். பெற்ற காசுகளைத் திரும்ப வீசுகின்றார். பாவம்! அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோற்கின்றன. விரக்தியில் தன்னைத் தானே மாய்த்துக்கொள்கின்றார். தன் தலைவரைக் காணவும் துணியாமல் போயிற்று அவருக்கு.

இந்த நிகழ்வைக் குறித்தே இயேசு, 'அவன் பிறவாமல் இருந்திருந்தால் அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்!' என்கிறார். 

நாம் ஒன்று நினைக்க, எதார்த்தம் வேறொன்றாக மாறுவது நம் வாழ்விலும் நடக்கின்ற ஒன்று.

நல்லது என நினைத்து நாம் சொல்லும் ஒற்றைச் சொல் அடுத்தவருக்குத் தீயதாக மாறலாம்.

நல்லது செய்வதாக நினைத்து நாம் செய்த ஒற்றைச் செயல் அடுத்தவருக்குப் பெரிய கெடுதலாக மாறியிருக்கலாம்.

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறும் என்பதற்கு யூதாசு என்னும் கதை மாந்தர் சிறந்த எடுத்துக்காட்டு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் இறுதி இராவுணவில் இருக்கின்றார். 'உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக் கொடுப்பான்!' என்று இயேசு சொன்னவுடன், சீடர்கள் ஒரு மாதிரியும், யூதாசு வேறு மாதிரியும் பதில் சொல்வதைக் கவனித்தீர்களா?

சீடர்கள் ஒவ்வொருவரும், 'ஆண்டவரே, நானோ?' என்கின்றனர்.

ஆனால் யூதாசு மட்டும், 'ரபி, நானோ?' என்கின்றார்.

உடனே இயேசு, 'நீயே சொல்லிவிட்டாய்!' என்கிறார்.

யூதாசு அப்படி என்ன சொன்னார்?

'ரபி' என்று சொன்னார்.

மற்றவர்கள் எல்லாம், 'ஆண்டவரே!' என, யூதாசு மட்டும், இயேசுவை, வெறும் 'போதகர், ஆசிரியர், ரபி' என்று பார்க்கின்றார். பாவம் அவர்! அவரால் இயேசுவை அப்படி மட்டுமே பார்க்க முடிந்தது. இயேசுவைத் தவறாகப் பார்க்கத் தொடங்கியதன் விளைவு, அவரைக் காட்டிக்கொடுக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தில், துன்புறும் ஊழியன் மூன்றாம் பாடலிலிருந்து வாசிக்கின்றோம். தான் இழிநிலையை அடைந்தாலும் தன்னுடன் தன் ஆண்டவராகிய கடவுள் இருப்பதாக உணர்கிறார் ஊழியன். 

'நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்' என்கிறார் துன்புறும் ஊழியன்.

நம் நாவு கற்றோனின் நாவாக இருந்தால் இறைவனை ஏற்று அறிக்கையிட முடியும். 

இயேசுவை, 'ஆண்டவர்' என அறிக்கையிட மறுத்த யூதாசு, 'ரபி!' என்கிறார். 

அது அவருடைய கடின உள்ளமா?

அல்லது இயேசுவைப் பற்றிய தவறான எதிர்பார்ப்பா?

அல்லது இப்படித்தான் எல்லாம் நடக்க வேண்டும் என்னும் இறைத்திருவுளமா?

நம் ஒவ்வொருவரைப் போலவே யூதாசும் ஒரு புதிர்.

Monday, March 29, 2021

அன்பின் உச்சம்

இன்றைய (30 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 13:21-33,36-38)

அன்பின் உச்சம்

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இறுதி இராவுணவு நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசு தன் சீடர்களுடைய பாதங்களைக் கழுவியபின் அவர்களோடு அமர்ந்து உரையாடும் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். 

தன் சீடர்களில் இருவர் பற்றிப் பேசுகிறார் இயேசு: யூதாசு, பேதுரு. யூதாசு தன்னைக் காட்டிக்கொடுப்பார் என்றும், பேதுரு தன்னை மறுதலிப்பார் என்றும் முன்னுரைக்கின்றார் இயேசு.

இதே நிகழ்வில் ஒரு சீடர் இயேசுவின் மார்புப் பக்கமாகச் சாய்ந்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்வில் தான் அடையும் மாட்சி பற்றியும் பேசுகின்றார்.

தன் சீடர்கள் தனக்கு எதிராகப் புறப்படும் நிலையை அறிந்திருந்தாலும் அவர்கள்மேல் அன்பு கூர்கின்றார் இNயுசு.

அடுத்தவர்களின் நற்குணங்களால் இயேசு தன் அன்பை வரையறுக்கவில்லை. அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை அன்பு செய்கின்றார். 

இதுவே இன்று நாம் கற்கும் உறவுப் பாடம்.

தன் பாதை எது என அறிந்தவருக்கு, தன் இலக்கு எது என தெரிந்தவருக்கு எல்லாம் ஒன்றுதான். அவர் எச்சலனமும் அடைவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய முதல் வாசகம் சொல்வது போல, தன் தந்தையாகிய கடவுளின் கையில் தான் விலைமதிப்பற்றவராக இருப்பதை உணர்ந்திருந்தார் இயேசு.

Sunday, March 28, 2021

பெத்தானியா

இன்றைய (29 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 12:1-11)

பெத்தானியா

இயேசுவின் தொடக்கம் நாசரேத்து. அவருடைய இறுதி எருசலேம்.

இந்த இரண்டுக்கும் இடையில் அவர் இளைப்பாறிய இடம் பெத்தானியா. தன் வாழ்வில் அவர் சோர்ந்த பொழுதெல்லாம் அவரைத் தூக்கி நிறுத்தியது அவருடைய நண்பர் வட்டம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பெத்தானியாவுக்கு வருகிறார். மார்த்தா உணவு தயாரிக்கிறார். மரியா அவருக்கு நறுமணத் தைலம் பூசுகின்றார். லாசர் அவருடன் அமர்ந்து விருந்துண்கிறார். 

மார்த்தா-மரியா-இலாசர் என்னும் மூன்று பேருக்கு நேர் எதிராக, யூதர்கள்-யூதாசு-தலைமைக் குருக்கள் இருக்கின்றனர். பெத்தானியாவில் இருந்ததால் என்னவோ இயேசுவால் எந்தவொரு எதிர்ப்பையும் எளிதில் எதிர்கொள்ள முடிந்தது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 42) நாம் காணும் துன்புறும் ஊழியன் பாடலில், ஆண்டவராகிய கடவுள் தன் அன்பார்ந்த மகனாகிய துன்புறும் ஊழியனுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார். இஸ்ரயேல் மக்களையே 'துன்புறும் ஊழியன்' அடையாளப்படுத்தினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவை அவரில் காண்கிறோம்.

துன்புறும் நம் அனைவருக்கும் பெத்தானியா போல இருக்கிறார் நம் கடவுள்.

நம் வாழ்வின் பெத்தானியாவாகிய அவரை அனுபவித்தால் துன்பமோ, இன்பமோ சமநிலையில் நாம் இருக்க முடியும்.

Saturday, March 27, 2021

நம்மோடு துன்பத்தில்

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு

(பவனியில்) மாற்கு 11:1-10
(திருப்பலியில்) I. எசாயா 50:4-7 II. பிலிப்பியர் 2:6-11 III. மாற்கு 14:1-15:47

நம்மோடு துன்பத்தில்

'அவர் அடிமையின் உருவை ஏற்றி தம்மையே வெறுமையாக்கினார்' (காண். பிலி 2:7) என்னும் திருத்தூதர் பவுலின் வார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் நம் உள்ளத்தில் ஒலிக்கட்டும். இன்று இயேசுவோடு இணைந்து நாமும் எருசலேமுக்குள் நுழைகிறோம். எருசலேம் என்பது இயேசுவின் வாழ்வில் அவருடைய நொறுங்குநிலையின் உச்சகட்ட இயங்குதளமாகவும், அவருடைய பணி வாழ்வின் இலக்காகவும், உயிர்ப்பு என்னும் மாற்றத்தின் தளமாகவும் இருந்தது. 

இயேசு ஓர் அடிமை போல நம்முன் நிற்கிறார். பெரிய வியாழன் அன்று தன் சீடர்களின் காலடிகளைக் கழுவும் பணியாளர் அல்லது அடிமை போலவும், புனித வெள்ளி அன்று, துன்புறும் மற்றும் வெற்றிபெறும் பணியாளனாகவும் இருக்கின்றார். நமக்குப் பணிபுரிவதன் வழியாகக் கடவுள் நம்மை மீட்டுக்கொண்டார். நாம்தான் இறைவனுக்குப் பணிபுரிகிறோம் எனப் பல நேரங்களில் நினைக்கிறோம். இல்லை! அவரே தாமாக முன்வந்து நமக்குப் பணிபுரிகிறார். ஏனெனில், அவரே நம்மை முதலில் அன்பு செய்தார். பதிலன்பு பெறாமல் அன்பு செய்வது என்பது கடினம். கடவுள் நமக்குப் பணிபுரியமாறு நாம் அனுமதிக்கவில்லை என்றால் அது இன்னும் கடினம்.

கடவுள் நமக்கு எப்படிப் பணி செய்தார்? தன் உயிரை நமக்காகக் கொடுப்பதன் வழியாக. நாம் அவருக்கு மிகவும் பிரியமானவர்கள், நெருக்கமானவர்கள். அவர் நம்மேல் கொண்ட அன்பினால் தன் உயிரை நமக்காகப் பலியாக்கினார், நம் பாவங்களைத் தன்மேல் ஏற்றுக்கொண்டார். எந்தவொரு முணுமுணுப்பும் இன்றி, தாழ்ச்சியோடும், பொறுமையோடும், அடிமையின் கீழ்ப்படிதலோடும், அன்போடும் ஏற்றுக்கொண்டார். தந்தை அவருடைய பணியில் அவரை உயர்த்தினார். அவர்மேல் விழுந்த கொடிய தீமையை தந்தை விலக்கவில்லை. மாறாக, தன் மகனை உறுதிப்படுத்தினார். இதன் வழியாக, நன்மையால் தீமையை வென்றார் கடவுள். அன்பினால் அவர் அப்படிச் செய்தார். அந்த அன்பே இறுதிவரை நீடிக்கிறது.

அன்பு செய்பவர்கள் அனுபவிக்கும்  இரண்டு கொடிய துன்பநிலைகளை ஏற்கும் அளவுக்கு ஆண்டவர் நம்மை அன்பு செய்தார். அவை எவை? துரோகமும் கைவிடப்பட்ட நிலையும்.

(அ) துரோகம். தன்னோடு இருந்த சீடர்களில் ஒருவரே தன்னைப் பணத்திற்கு விற்கும் நிலையில் துரோகம் அனுபவித்தார் இயேசு. 'ஓசன்னா!' என்று பாடிய மக்கள் கூட்டம், 'சிலுவையில் அறையும்' என்று முழங்கி அவருக்குத் துரோகம் இழைத்தது. அநீதியாக அவருக்குத் தீர்ப்பிட்ட அன்றைய சமய அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. அவர்மேல் கைகளைக் கழுவிய அரசியல் அமைப்பு அவருக்குத் துரோகம் செய்தது. சிறிய மற்றும் பெரிய நிலைகளில் நாம் அனுபவித்த துரோகங்களும் இன்று நம் நினைவில் நிற்கலாம். நம் ஆழ்மனத்திலிருந்து எழுகின்ற ஒரு வகையான ஏமாற்றம் வாழ்வின் பொருளையே சில நேரங்களில் கேள்விக்குள்ளாக்குகிறது. நாம் அன்பு செய்யப்படவும், அன்பு செய்யவும் படைக்கப்பட்டுள்ளோம். ஆகையால், நமக்கு அருகில் இருக்கும், நம்மை அன்பு செய்யும், நமக்குப் பிரமாணிக்கமாக இருக்கும் ஒருவரால் ஏமாற்றப்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அன்பே உருவான கடவுளுக்கு ஏமாற்றம் எவ்வளவு கொடியதாக இருந்திருக்கும்!

நம்மை நாமே உற்றுப் பார்ப்போம். நாம் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால் நம்முடைய பிரமாணிக்கமின்மை நமக்கத் தெரியும். எவ்வளவு பொய்மை, வெளிவேடம், இரட்டைத் தன்மை!  நாம் மறுதலித்த நன்மைத்தனங்கள் எத்தனை! நாம் உடைத்த வாக்குறுதிகள் எத்தனை! நாம் நிறைவேற்றாத முடிவுகள் எத்தனை! நம்மை விட நம் இதயத்தை நன்கு அறிந்தவர் நம் ஆண்டவர். நாம் எவ்வளவு வலுவற்றவர்கள் என்பதும், எவ்வளவு இருமனம் கொண்டவர்கள் என்பதும், எத்தனை முறை தவறி விழுகிறோம் என்பதையும், எழுந்து நிற்பது எத்தனை கடினம் என்பதையும், சில காயங்களை நாம் குணமாக்கவே இயலாது என்பதையும் அறிந்தவர் அவர். இறைவாக்கினர் ஓசேயா வழியாக அவர் நமக்குச் சொல்கிறார்: 'அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன். அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன்' (ஓசே 14:4). நம் பிரமாணிக்கமின்மையையும் துரோகங்களையும் அவர் தன்மேல் சுமந்துகொண்டு நம்மைக் குணமாக்குகிறார். பயம் மற்றும் ஏமாற்றத்தால் நாம் நழுவிச் செல்வதற்குப் பதிலாக, சிலுவையின்மேல் நம் கண்களை நாம் பதிய வைக்கலாம். அவரை நோக்கி நாம் சொல்வோம்: 'இதோ! என் பிரமாணிக்கமின்மை! நீர் அதை எடுத்துக்கொண்டீர் இயேசுவே! உம் கரங்களை விரித்து அன்பினால் நீர் எனக்குப் பணி புரிகிறீர். நீர் எனக்குத் தொடர்ந்து உறுதியளிக்கிறீர். உம் உடனிருப்பால் நான் தொடர்ந்து முன்னேறுவேன்!

(ஆ) கைவிடப்படுதல். இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு சிலுவையிலிருந்து ஒன்றே ஒன்றைத்தான் சொல்கின்றார்: 'என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?' (மாற் 15:34. மேலும் காண். மத் 27:46). இவை மிகவும் வலிமையான வார்த்தைகள். இயேசுவோடு உடனிருந்தவர்கள் அவரைக் கைவிட்டு ஓடினர். ஆனால், தந்தை அவரோடு இருந்தார். இப்போது தனிமையில் முதல் முறையாக, 'இறைவனே!' 'கடவுளே!' எனப் பொதுப்படையாக அழைக்கிறார் இயேசு. 'ஏன்?' என்ற வாழ்வியல் கேள்வியைத் தொடுக்கின்றார். 'ஏன் என்னைக் கைவிட்டீர்?' எனக் கேட்கின்றார். 'நீரும் என்னைக் கைவிட்டது ஏன்?' என்று கேட்பது போல இருக்கிறது இக்கேள்வி. இவ்வார்த்தைகள் திருப்பாடலின் வார்த்தைகள் (திபா 22:1). இயேசு தன் விவரிக்க இயலாத துன்பத்தை இறைவேண்டலுக்கு எடுத்துச் செல்கிறார். இருந்தாலும், அவர் வறண்ட நிலையை அவர் உணர்ந்தார் என்பதே எதார்த்தம். கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை உணர்கின்றார் இயேசு.

இது ஏன் நடந்தது? நமக்காகவே இது நடந்தது. நமக்குப் பணிபுரியவே இப்படி நடந்தது. நம் கண்முன் பெரிய சுவர் எழும்பி, பாதைகள் அடைக்கப்படும்போது, வெளிச்சம் இல்லா வழியில் நாம் நின்று தப்பிக்கும் வழியறியாமல் நிற்கும்போது, கடவுளும் நமக்கு மறுமொழி தராத போது நாம் தனியாய் இல்லை என்று நமக்கு நினைவூட்டவே இது நிகழ்ந்தது. அனைத்திலும் நம்மைப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே, தான் அனுபவித்திராத இந்த உணர்வையும் அனுபவிக்கிறார் இயேசு. நமக்கமாகவே இதை அனுபவித்த அவர் நம்மிடம் சொல்கிறார்: 'அஞ்சாதே! நீ தனியாக இல்லை. உன் வறண்ட நிலையை, தனிமையை நானும் அனுபவித்துள்ளேன்!' இந்த அளவுக்கு அவர் நமக்குப் பணிவிடை புரிந்தார். துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலையின் உச்சத்தை அறியும் அளவுக்கு நம் துன்பத்துக்குள் அவர் தன்னையே ஆழ்த்தினார். இன்று, பெருந்தொற்று நம்மை விட்டு அகலாத நிலையில், தேர்தல் என்ற பெயரில் போலி வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும் நிலையில், அரசு என்ற நிலையில் மக்கள் துன்பங்கள் பல அனுபவிக்கும் நிலையில், நாமும் துரோகம் மற்றும் கைவிடப்பட்ட நிலை சூழ்ந்து செய்வதறியாது நிற்கின்றோம். இயேசு இன்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்: 'துணிவோடிரு! உன் இதயத்தை என் அன்பிற்குத் திற! உனக்கு வலுவூட்டும் கடவுளின் ஆறுதலை நீ கண்டுகொள்வாய்!' 

துரோகத்திற்கு ஆளாகி, கைவிடப்பட்ட நிலையை ஏற்று நமக்குப் பணிபுரிய ஓர் அடிமையான நம் கடவுளோடு ஒப்பிடும்போது நாம் என்ன செய்ய முடியும்? நாம் அவரை இனியும் காட்டிக்கொடுக்க வேண்டாம். பிரமாணிக்கமில்லாமல் இருக்க வேண்டாம். வாழ்வின் முக்கியமானவற்றை நாம் புறந்தள்ளிவிட வேண்டாம். நாம் அவரை அன்பு செய்யவும் அயலாரை அன்பு செய்யவும் படைக்கபட்டோம். மற்றதெல்லாம் மறைந்துவிடும். இது ஒன்றே நிலைத்து நிற்கும். வாழ்வின் முக்கியமானவற்றையும் முதன்மையானவற்றையும் கைக்கொண்டு, மற்றவற்றைப் புறந்தள்ளி விடுவோம். அடுத்தவர்களுக்காகப் பணிபுரியாத வாழ்க்கை பயனற்ற வாழ்க்கை என்பதை மீண்டும் கண்டறிவோம். ஏனெனில், அன்பினாலேயே வாழ்க்கை அளக்கப்படுகிறது. ஆகவே, இந்த நாள்களில், நம் இல்லங்களிலும் ஆலயத்திலும் சிலுவையில் அறையுண்ட நம் ஆண்டவர் முன் நிற்போம். சிலுவையில் அறையப்படும் அன்புக்குத் தன்னையே தாழ்த்தி அவர் நம்மை அன்பு செய்தார். பணிபுரிவதற்காகவே நான் வாழ வேண்டும் என்னும் வரத்தை அவரிடம் கேட்போம். துன்புறுகின்ற அனைவருக்கும் நம் கரம் நீட்டுவோம். நம்மிடம் என்ன குறைவாக இருக்கிறது என்று எண்ணிக் கவலைப்பட வேண்டாம். நாம் மற்றவர்களுக்கு என்ன நன்மை செய்ய முடியும் என்பதைப் பற்றிக் கவலைப்படுவோம்.

'இதோ! நான் பற்றிப் பிடித்துப் பாதுகாக்கும் என் ஊழியன்!' என்று தன் மகனுடைய துன்பத்தில் உடனிருந்த தந்தை, நம்மோடு உடனிருந்து பணிபுரிவதற்கான நம் முயற்சிகளில் துணைசெய்கின்றார். அன்பு செய்தல், இறைவேண்டல் செய்தல், மன்னித்தல், அக்கறை காட்டுதல் என்பவை நம் குடும்பத்தில் தொடங்கி எங்கும் தொடரட்டும். இவை உண்மையாகவே கடினமானவை. இவை சிலுவைப் பாதையாக நமக்கு இருக்கலாம். பணிவிடையின் பாதை வெற்றியானது, வாழ்வு தருவது. அதன் வழியாகவே நாம் மீட்கப்படுகிறோம். இன்றைய நாள் இளைஞர்களின் நாள் என்று திருஅவை கொண்டாடுகிறது. வாழ்க்கை உங்களை அழைக்கிறது. இறைவன் உங்களை அழைக்கிறார் என்பதை உணருங்கள். உங்கள் வாழ்வைக் கடவுளுக்காகவும் ஒருவர் மற்றவருக்காகவும் பயப்பட வேண்டாம். நாம் நம்மையே மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதுதான் வாழ்க்கை என்பது ஒரு கொடை என்பதை நாம் உணர முடியும். 

நிபந்தனைகள் இல்லாமல் அன்பிற்கு ஆம் என்று சொல்லும்போது மட்டுமே ஆழ்ந்த மகிழ்ச்சி நமக்குச் சொந்தமாகும். அப்படிப்பட்ட 'ஆம்!' என்பதுதான் இயேசுவின் வார்த்தையாக இருந்தது.

இறுதியாக,

நம்மோடு துன்பத்தில் அவரோடு நிற்பதால் துன்பத்தில் நாம் தனிமையில் இல்லை!

புனித வாரம் நமக்கு அருளின் காலமாக இருப்பதாக!

(மேற்காணும் மறையுரை, கடந்த ஆண்டு திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு அன்று நம் மதிப்புக்குரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறையுரையின் மொழிபெயர்ப்பும் தழுவலும் ஆகும். நன்றி!)

Friday, March 26, 2021

ஒரு மனிதன் இறப்பது

இன்றைய (27 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 11:45-57)

ஒரு மனிதன் இறப்பது

இயேசுவின் பணியாலும், போதனையாலும், அரும் அடையாளங்களாலும் மக்கள் ஈர்க்கப்படுவதையும், அதனால் கண்களில் விழுந்த தூசியாக இயேசுவை யூதத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' - இது அவர்களின் அச்சமாக இருக்கிறது.

அப்போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா,

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்கிறார்.

அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.

இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் - துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி - ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். 'ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்' என்று விதுரர் கேட்கிறார்:

'ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்' (மகாபாரதம், இரண்டு, 55.10)

ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.

பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.

ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா?

இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?

அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.

இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.

இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.

ஆனால், 'எது தேவையோ அதுவே தருமம்' என்கின்றன புனித நூல்கள்.

Thursday, March 25, 2021

நெருக்கடி

இன்றைய (26 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 10:31-42)

நெருக்கடி

விவிலியத்தில், 'நெருக்கடி' பற்றிய உருவகங்கள் திருப்பாடல்களில் அதிகம் காணக்கிடக்கின்றன. 'குறுகிய வழியில் நான் நடந்தேன். ஆனால், ஆண்டவர் என் பாதையை அகலமாக்கினார்', 'சறுக்கும் வழிகளில் நான் நடந்தேன். என் அடிகள் சறுக்காமல் நீர் பார்த்துக்கொண்டீர்', 'சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் நீர் என்னோடு இருக்கிறீர்' என்று திருப்பாடல்கள் மனித வாழ்வின் நெருக்கடிகளை உருவகங்களாகப் பதிவு செய்கின்றன. மேற்காணும் உருவகங்களை நாம் வாசிக்கும் இடங்களில் ஒன்று நமக்குத் தெளிவாக இருக்கிறது. திருப்பாடல் ஆசிரியர் தன் வாழ்வில் எப்பொழுதெல்லாம் நெருக்கடி நிலையை அனுபவிக்கிறாரோ, அப்பொழுதெல்லாம் ஆண்டவரின் உடனிருப்பைக் காண்கின்றார். 

நெருக்கடி இருக்கும் நேரத்தில் எல்லாம் இறைத்துணை இருக்கும் என்பதே விவிலியம் தரும் பாடமாக இருக்கின்றது.

இன்றைய வாசகங்கள் தங்கள் வாழ்வில் நெருக்கடி நிலைகளை எதிர்கொண்டு இரு மாந்தர்களை நம்முன் நிறுத்துகின்றன.

முதல் வாசகத்தில், எரேமியா ஆண்டவராகிய கடவுள்முன் சரணடைகின்றார். 'ஆண்டவரே! நீரோ என்னை ஏமாற்றிவிட்டீர்! நானோ ஏமாந்து போனேன்!' என்கிறார். தன் சொந்த ஊராரும் இனத்தாரும் தனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து நிற்க, தன் இறைவாக்குரைக்கும் பணி தோல்வியாகிவிட்டதை உணர்ந்து பின்வாங்க விழைகின்றார். அந்த நெருக்கடி நிலையில், அவர் உரைக்கும் அழகான வார்த்தைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன: 'ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார்.'

நிர்கதியாக நிற்கும் ஒருவரின் அருகில், அவரைக் காப்பாற்ற வாளேந்திய ஒரு வீரர் இருந்தால் அவர் துள்ளிக்குதிப்பார். அவருடைய தன்னம்பிக்கை உயரும், பயம் அகலும். எரேமியாவும் அப்படித்தான் உணர்கின்றார். 
நெருக்கடியான நிலையில் எரேமியாவால் எப்படி இறைத்துணையை உணர முடிந்தது?

அனைத்தும் இறைவனிடமிருந்து ஊற்றெடுக்கின்றன என உணர்பவர்கள் நெருக்கடி நேரத்தில் இறைவனின் உடனிருப்பை எளிதாக உணர்ந்துகொள்வர்.

நற்செய்தி வாசகத்தில், இயேசுவுக்கும் யூதர்களுக்கும் எதிரான வாக்குவாதம் ஏறக்குறைய ஒரு முடிவுக்கு வருகின்றது. இயேசு, கடவுளைத் தன் தந்தை என அழைப்பதைப் பொறுத்துக்கொள்ளாத யூதர்கள் அவர்மேல் கல் எறிய முயற்சி செய்கின்றனர். அனைவரும் இறைவனின் பிள்ளைகளே என்பதை அந்த நேரத்தில் இயேசு அவர்களுக்கு நினைவூட்ட முயல்கின்றார். அவருடைய முயற்சி தோற்றுப் போகிறது. 

தனக்கென்று யாருமற்ற அந்த நேரத்தில், 'என் தந்தை என்னுள்ளும் நான் என் தந்தையினுள்ளும் இருப்பதை ...' என்று இயேசு சொல்வது, அவர் பெற்ற இறைத்துணையை நமக்குச் சுட்டிக்காட்டுகிறது.

இன்று நாம் நம் வாழ்வில் நிறைய நெருக்கடிகளை நாம் சந்திக்கிறோம். வறுமை, முதுமை, தனிமை, நோய், இறப்பு, இழப்பு என நாம் எந்த எதார்த்தத்தை எதிர்கொண்டாலும் அங்கே இறைத்துணை நம்மோடு இருக்கிறது என்பதை நாம் நினைவில்கொள்வோம்.

Wednesday, March 24, 2021

மங்கள வார்த்தை

இன்றைய (25 மார்ச் 2021) திருநாள்

இன்று 'மங்கள வார்த்தை திருநாள்' என்றழைக்கப்படும் 'ஆண்டவரின் பிறப்பு முன்னறிவிப்பு' பெருவிழாவைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய திருநாள் நமக்கு மூன்று 'உ'க்களை முன்வைக்கின்றன: (அ) உடல், (ஆ) உடனிருப்பு, மற்றும் (இ) உறுதி.

(அ) உடல்

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 10:4-10) எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசுவைத் தனிப்பெரும் தலைவராக முன்வைத்தபின், இயேசுவின் பலியை மற்ற எல்லா தலைமைக்குருக்களின் பலிகளைவிட மேன்மையானதாகவும் நிறைவானதாகவும் காட்டுகின்றார். மற்ற தலைமைக்குருக்களின் பலிகளில், 'பலி செலுத்தபவர் வேறு,' 'பலி வேறு' என்ற இரட்டைத்தன்மை இருந்தது. ஆனால், இயேசுவின் பலியில் அப்படி அல்ல. அவரில் பலியும், பலி செலுத்துபவரும் ஒன்றாகவே இருக்கின்றன. திருப்பாடல் 40ஐ மேற்கோள் காட்டுகின்ற ஆசிரியர், 'எனக்கொரு உடலைத் தந்தீர். உம் திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்!' என்று முன்வந்து தன் உடலையே பலியாகக் கையளிக்கிறார் இயேசு. இவ்வாறாக, 'உடல் இல்லாமல் பலியும் மீட்பும் இல்லை' என உணர்த்துகிறார் இயேசு. மனித உலகிற்குள் நுழைய விரும்பிய கடவுள் உடலின் வழியாக மனித உலகிற்குள் நுழைகின்றார். இவ்வாறு உடலைப் புனிதப்படுத்துகின்றார். உடலை இறைவனுக்குப் பலியாக்குவதன் வழியாக உடலை இறைவனுக்குரிய பொருளாக அர்ப்பணிக்கிறார் இயேசு. 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' என்று வார்த்தை மனித உடல் ஏற்கிறார். இறைவன் மனுஉரு ஏற்க மரியாள் தன் உடலில் இடம் கொடுக்கிறார்.

(ஆ) உடனிருப்பு

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 7:10-14, 8:10) ஆகாசு இறைவனுக்கு ஆண்டவராகிய கடவுள் அடையாளம் ஒன்றைத் தருகிறார்: 'இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார் ... அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர். 'இம்மானுவேல்' என்றால் 'கடவுள் நம்மோடு' என்பது பொருள்.' அசீரியப் படையெடுப்பை எதிர்கொள்ள எகிப்தின் உதவியை நாடுவதா அல்லது வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்த ஆகாசுக்கு இறைவன் தன் உடனிருப்பைத் தருகின்றார். மனுக்குலத்திற்குள் தன் மனுவுருவாதல் வழியாக நுழைந்த வார்த்தையாகிய இறைவன் நமக்குத் தருவதும் உடனிருப்பே.

(இ) உறுதி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 1:26-38), 'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று வாக்குறுதி கொடுக்கின்றார். இதுதான் மரியாவின் மிஷன் ஸ்டேட்மன்ட். தன் வாழ்க்கை முழுவதையும் இதற்காகவே வாழுகின்றார். இத்தாழ்ச்சியில் அடிமைத்தனம் இல்லை. மாறாக, முழு விடுதலை இருக்கின்றது. ஏனெனில், இனி எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார். இறைத்திருவுளம் ஏற்றலில் உள்ள நன்மை இதுதான். அது நம்மை முழுமையான விடுதலைக்கு இட்டுச் செல்கிறது.

இறைவன் கபிரியேல் வழியாக மரியாளுக்குச் சொன்ன வார்த்த எந்த அளவிற்கு மங்களமோ, அதே அளவிற்கு மங்களம் மரியாளின் 'ஆம்' என்ற வார்த்தையும்.

இந்த ஒற்றை 'ஆம்' என்ற சொல்தான் விண்ணையும் மண்ணையும் இணைத்தது.

Tuesday, March 23, 2021

விடுதலை

இன்றைய (24 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 8:31-42)

விடுதலை

ஏறக்குறைய கடந்த 10 நாள்களாக நாம் யோவான் நற்செய்தியிலிருந்து வாசித்துக் கொண்டிருக்கிறோம். இயேசுவை ஏற்றுக்கொள்ள யூதர்கள் தயக்கம் காட்டுவதும், இயேசு தன்விளக்கம் தருவதும், பின் அவர்கள் அதை கேலியாக்குவதும் என நிகழ்வுகள் நகர்ந்துகொண்டே வருகின்றன.

இன்றைய நற்செய்தியில் இரண்டு வரையறை வாக்கியங்களை முன்வைக்கின்றனர் யூதர்கள்:

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'

இவை இரண்டுமே பொய் என்பதை இயேசு அவர்களுக்கு தோலுரிக்கின்றார்.

அ. 'நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை'

இயேசுதான் இந்த விவாதத்தை தொடங்குகிறார்: 'என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்.' 

இப்போதுதான் அவர்கள் தாங்கள் யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை என்கின்றனர். ஆனால், அவர்களின் முன்னோர் எகிப்தில் அடிமைகளாக இருந்ததையும், அவர்களை ஆண்டவராகிய கடவுள் வியத்தகு முறையில் விடுதலை செய்ததையும் அவர்கள் மறந்துவிடுகின்றனர். அடுத்ததாக, வெகு சில ஆண்டுகளுக்கு முன் பாபிலோனியாவில் அடிமைகளாக இருக்கின்றனர். இப்போது - அதாவது, இயேசுவின் சமகாலத்தில் - உரோமைக்கு அடிகைளாக இருக்கின்றனர். இப்படி அடிமைத்தனங்களை அனுபவித்தாலும் அவர்கள் பொய்யுரைக்கின்றனர். 

இயேசு அவற்றைச் சுட்டிக்காட்டாமல், இதையெல்லாம் கடந்த, எல்லாரும் அடிமையாக இருக்கின்ற ஒன்றைச் சுட்டிக்காட்டுகின்றார்: 'பாவம் செய்யும் யாவரும் பாவத்திற்கு அடிமை'. ஏனெனில், பாவம் செய்த ஒருவர் அதைத் திரும்பத் திரும்பச் செய்வதால் ஒரு கட்டத்தில் அவர் 'செய்தார்' என்ற நிலை மாறி, அவர் செய்யும் நிலைக்குத் 'தள்ளப்பட்டார்' என்ற நிலை உருவாகிவிடுகிறது. பாரவோன் மன்னன் போல. அவனுடைய உள்ளம் இறுக இறுக, ஒரு கட்டத்தில் அவன் விரும்பினாலும் அவன் நல்லவனாக இருக்க முடிவதில்லை.

ஆ. 'ஆபிரகாமே எங்கள் தந்தை'
முதல் ஏற்பாட்டில் ஆபிரகாமை 'நம்பிக்கையின் தந்தை' என இஸ்ரயேலர் அறிவித்தனர். இஸ்ரயேலரின் இனம் யாக்கோபில் தோன்றினாலும், அவர்கள் நம்பிக்கையில் தங்களுடைய தந்தையாக நினைப்பது ஆபிரகாமைத்தான். 

ஆனால், இயேசு இதிலிருந்த பொய்யையும் சுட்டிக்காட்டினார். நம்பிக்கையின் தந்தையின் பிள்ளைகளாக இருந்துகொண்டு நம்பிக்கை இல்லாமல் இருப்பது எப்படி? என்று கேட்கின்றார். மேலும், இயேசுவைக் கொல்ல அவர்கள் முயன்றதால் அவர்கள் ஆபிரகாமைப் போல இல்லாமல் தங்களின் முற்கால மண்ணகத் தந்தையர்போல இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இவ்வாறாக, அவர்கள் தங்களின் அடையாளங்கள் என்று நினைத்த இரண்டு வரையறைகளையும் உடைக்கின்றார் இயேசு.

இந்த நற்செய்தி வாசகம் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'அடையாளம்' நமக்கு ஆட்டோமேடிக் வாழ்வைத் தந்துவிடாது. நான் 'கிறிஸ்தவன்,' நான் 'அருள்பணியாளன்,' நான் 'இப்படி,' நான் 'அப்படி' என்று நாம் வைத்திருக்கும் வரையறைகள் வெளிப்புறக் கொண்டாட்டமாக இருந்துகொண்டு, நம்மை உள்புறத்தில் அழிப்பவையாகவும் இருக்கும் அபாயம் இருக்கிறது. ஆக, அடையாளங்களை முழுமையாக ஏற்று வாழ்ந்து அதன்படி நடக்கும்போதுதான் அவை வாழ்வைத் தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில் நெபுகத்னேசர் தன் தெய்வங்களை வணங்குமாறு மூன்று இளைஞர்களுக்குக் கட்டளையிட அவர்கள் மறுக்கின்றனர். எரிகிற தீச்சூளையில் தள்ளப்பட்டாலும் எதிர்சான்றாக நிற்கின்றனர்.

Monday, March 22, 2021

பாவிகளாகவே சாவீர்கள்

இன்றைய (23 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 8:21-30)

பாவிகளாகவே சாவீர்கள்

இன்றைய நற்செய்தி வாசகம், 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' நிகழ்வின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. அந்த நிகழ்வைப் பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'இறுதியில் காயமும் கருணையும் மட்டுமே அங்கு நின்றன. கருணை காயத்தைத் தீர்ப்பிடவில்லை. காயமும் இனிப் பாவம் செய்யவில்லை' என எழுதுகிறார். 

தொடர்ந்து வரும் உரையில், இயேசு பரிசேயர்களை நோக்கி, 'நீங்கள் பாவிகளாகவே சாவீர்கள்!' என்கிறார். யோவான் நற்செய்தியில், 'பாவம்' என்பது 'தந்தையின் ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத நிலையே.' இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'இருக்கிறவர் நானே!' என்கிறார். இந்தப் பெயரைக் கொண்டே ஆண்டவராகிய கடவுள், தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகிறார். இது பரிசேயர்களுக்கு மிகப் பெரிய இடறலாக இருந்திருக்கும். ஏனெனில், 'கடவுள்' என்ற பெயரை வீணாக உச்சரிப்பதையே தடை செய்கின்ற அவர்கள், ஒருவர் அதே பெயரைத் தன் பெயராக அல்லது தானாக அறிவிப்பது ஏற்புடையதாக இருந்திருக்காது.

தொடர்ந்து இயேசு, தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவை முன்வைக்கின்றார். இதுவும் அவர்களுக்குப் புதிய புரிதலாக இருந்திருக்கும். ஏனெனில், கடவுளை தந்தை என அழைத்திராத அவர்கள், கடவுளைத் தன் தந்தை என உரிமை கொண்டாடுபவரை ஏற்றுக்கொள்ளக் கண்டிப்பாகத் தயக்கம் காட்டுவார்கள். இங்கே இயேசு தன் தந்தையின் உடனிருப்பைத் தன் பெரிய பலமாக முன்வைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகத்தையும், நற்செய்தி வாசகத்தையும் இணைக்கின்ற ஒற்றைச் சொல், 'உயர்த்தப்படுதல்.' முதல் வாசகத்தில், பாலைவனத்தில் மோசே வெண்கலப் பாம்பை உயர்த்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். உயர்த்தப்பட்ட பாம்பைக் கண்ட அனைவரும் நலம் பெறுகின்றனர். நற்செய்தி வாசகத்தில், உயர்த்தப்படுதல் என்பது 'அறிதல் நிலைக்கான தொடக்கம்' என்கிறார் இயேசு. 

'உயர்த்தப்படுதல்' என்பது யோவான் நற்செய்தியில் மூன்று விளைவுகளை ஏற்படுத்துகின்றது: (அ) நலம் பெறுதல் (காண். யோவா 3). (ஆ) கடவுளை அறிதல் (காண். யோவா 8). (இ) தந்தையோடு இணைதல் (காண். யோவா 12). உயர்த்தப்படுதல் என்பது இங்கே இரண்டு பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது: ஒன்று, இயேசு சிலுவையில் அறையப்படுதல். இரண்டு, இயேசு உயிர்த்து விண்ணேற்றம் அடைதல். 

'பாம்பைக் கண்டவர்' முதல் வாசகத்தில் 'இறக்கவில்லை.'
'
உயர்த்தப்பட்ட இயேசுவைக் கண்டவர்' நற்செய்தி வாசகத்தில் 'இறப்பதில்லை.'

மேலும், யோவான் நற்செய்தியில் 'காணுதல்' என்பது 'நம்புதலை' குறிக்கிறது (காண். யோவா 22). 

இயேசு ஒரு தளத்தில் நின்று பேசுகிறார். கேட்பவர்கள் இன்னொரு தளத்தில் அவரைப் புரிந்துகொள்கிறார்கள்.

'இன்னும் சிறிது காலத்தில் என்னைக் காணமாட்டீர்கள்' என்று அவர் தன் உயர்த்தப்படுதலை மனத்தில் வைத்துச் சொல்ல, அவர்களோ, 'அவர் தற்கொலை செய்துகொள்ளப் போகிறாரோ?' என்கின்றனர். 

கீழிருந்து வந்தவர்கள் தாழ்வாகவே யோசிக்க, மேலிருந்த வந்த இயேசு அவர்களை உயர்த்த முயற்சி செய்கின்றார்.

இன்று நாம் அவரைப் போல மேலிருந்த நிலையில் சிந்திக்கவும் செயல்படவும் முயற்சி செய்தால் நலம்.

Saturday, March 20, 2021

துன்பமும் தூய்மையும்

21 மார்ச் 2021 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

I. எரேமியா 31:31-34 II. எபிரேயர் 5:7-9 III. யோவான் 12:20-33

துன்பமும் தூய்மையும்

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகள், இறப்பு, மற்றும் உயிர்ப்பு விழாக் கொண்டாட்டங்கள் நெருங்கிவந்துவிட்ட வேளையில் இன்றைய வாசகங்கள், இயேசுவின் பாடுகள் மற்றும் துன்பம் நோக்கி நம் உள்ளங்களைத் திருப்புகின்றன.

துன்பம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் எதார்த்தம். 

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எரே 31:31-34) இஸ்ரயேல் மக்கள் இறைவனிடமிருந்து தூரமாகிப் போகின்றனர். அவர்களுடைய பாவத்தாலும், ஆண்டவராகிய கடவுளின் கட்டளைகளை மீறியதாலும் அவர்கள் இந்த நிலைக்கு ஆளாகின்றனர். தங்களுடைய பாவத்தாலும் கீழ்ப்படியாமையாலும் அந்நியப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களை மீண்டும் தன்னருகே அழைக்கின்ற ஆண்டவராகிய கடவுள் அவர்களோடு புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்கின்றார். இந்த உடன்படிக்கை மனித உள்ளத்தில் எழுதப்படுவதால் இறைவனும் இஸ்ரயேல் மக்களும் ஒருவரோடு ஒருவர் மிகவும் நெருக்கமானவர்களாக மாறுகின்றனர்.

இரண்டாம் வாசகத்தில் (காண். எபி 5:7-9), எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு கிறிஸ்துவை தனிப்பெரும் தலைமைக்குருவாக முன்வைக்கின்றார். ஆண்டவராகிய இயேசு கெத்சமெனியில் பாடுகள் பட்டதை இறையியலாக்கம் செய்யும் ஆசிரியர், 'மன்றாடி வேண்டினார்' மற்றும் 'நிறைவுள்ளவரானார்' என்னும் இரு சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றார். 'மன்றாடி வேண்டுதல்' என்பது பலி ஒப்புக்கொடுத்தலையும், 'நிறைவுள்ளவராதல்' என்பது பலி ஏற்றுக்கொள்ளப்படுதலையும் குறிக்கிறது. இங்கே, 'கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்' என்னும் சொல்லாடல் இயேசுவின் உள்ளத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. இயேசு தன் துன்பங்கள் வழியாகத் தலைமைக்குருவாக உயர்கின்றார்.

நற்செய்தி வாசகம் (காண். யோவா 12:20-33) மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) இயேசுவைக் காண கிரேக்கர்கள் சிலர் ஆர்வம் தெரிவிக்கின்றனர்ளூ (ஆ) இயேசு தன் இறப்பு பற்றியும், சீடத்துவம் பற்றியும் போதிக்கின்றார்ளூ மற்றும் (இ) வானிலிருந்து ஒரு குரல் இயேசுவின் செய்தியை ஆமோதிக்கிறது. இயேசு தன் இறப்பை கோதுமை மணி உருவகம் வழியாக எடுத்துரைக்கின்றார். இயேசு சொல்லும் இந்த உருவகம் ஒரு விவசாய உருவகம். நாம் விவசாயம் செய்து விதைகள் விதைக்கும் போது, நாம் செய்யும் விவசாயத்தின் நோக்கம் நாம் தெளிக்கும் விதைகள் எல்லாம் நம் வயலின் மேல் கிடந்து அதை அலங்கரிக்க வேண்டும் என்பதா? இல்லை. விதைக்கப்படுகின்ற விதைகள் போராட வேண்டும். முதலில் விதை மண்ணோடு போராட வேண்டும். மண்ணைத் துளைத்து உள்ளே சென்று தன்னையே மறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, தன்னை மறைத்துக் கொள்ளும் விதை மடிய வேண்டும். தன் இயல்பை முற்றிலும் இழக்க வேண்டும். மூன்றாவதாக, அதே போராட்டத்துடன் மண்ணை முட்டிக் கொண்டு மேலே வர வேண்டும். இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் விதையின் போராட்டம் தடைபட்டாலும் விதை பயனற்றதாகிவிடுகிறது. இங்கே, விதை போல இயேசு பாடுகள் படுகின்றார். விதை நிலத்தில் ஊன்றப்படுவது போல இயேசு அடக்கம் செய்யப்படுகின்றார். விதை புத்துயிர் பெற்று வெளியே வருவது போல இயேசு கல்லறையிலிருந்து வெளியெ வருகின்றார். இதுவே மாட்சிப்படுத்தப்படுதல். இந்த நிலையை அடைந்தவுடன் இயேசு அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக்கொள்கின்றார். 

முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் துன்பம் இறைவன் செயலாற்றும் தளமாக மாறுகிறது. இரண்டாம் வாசகத்தில், துன்பத்தின் வழியாக இயேசு நிறைவுள்ளவர் ஆகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு துன்பங்கள் வழியாக உயிர்க்கின்றார்.

இன்றைய நம் உலகம் துன்பத்தைத் தவிர்க்கவே நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. துன்பத்தைத் தவிர்ப்பதற்காக நாம் இரண்டு பாதுகாப்புக் கவசங்களைப் பயன்படுத்துகிறோம்: ஒன்று, துன்ப மறுப்பு. இரண்டு, மற்றவரைக் குற்றம் சுமத்துதல். இக்கவசங்களை அகற்றிவிட்டு, நேருக்கு நேராக நாம் துன்பத்தை ஏற்கும்போது நம் உள்ளம் தூய்மை பெறுகிறது.

இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 51), இறைவன்முன் தன் பாவம் உணர்கின்ற தாவீது, 'தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்!' என்று உருகுகின்றார். தாவீது தன்னுடைய துன்ப அனுபவத்தை இறை அனுபவமாக மாற்றுகின்றார். துன்பத்தின் வழியே தூய்மை. துன்பத்தின் வழியே உயிர்ப்பு.

அவரவர் வீட்டுக்கு

இன்றைய (20 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 7:40-53)

அவரவர் வீட்டுக்கு

இன்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதி வரி நம் சிந்தனையைத் தூண்டுகிறது: 'அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குச் சென்றார்கள்'

நற்செய்தியாளர் இந்தக் குறிப்பைத் தருவது ஏன்?

ஒவ்வொருவரும் நாளின் இறுதியில் அவரவர் வீட்டுக்குத்தானே செல்ல வேண்டும். இந்தத் தகவலால் வாசகருக்கு என்ன பயன்?

இதையொத்த வரியை நாம் 1 சாமு 8:22இல் வாசிக்கின்றோம்: பின்பு, சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, 'ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்!' என்றார்.

அங்கே, இஸ்ரயேல் மக்கள் ஒட்டுமொத்தமாக சாமுவேல் இறைவாக்கினரிடம் கூடி வந்து தங்களுக்கென்று ஓர் அரசன் வேண்டுமென்று கேட்கிறார்கள். மக்களின் வார்த்தைகளை ஆண்டவரிடமும், ஆண்டவரின் வார்த்தைகளை மக்களிடமும் சொன்ன சாமுவேல் அனைவரையும் தத்தம் நகருக்குச் செல்லுமாறு பணிக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு யார்? என்ற குழப்பம் யூதர்களில் அறிவிற்சிறந்தவர்களுக்கு வருகிறது. 'மெசியா' என்றும் 'மெசியா இல்லை' என்றும் அவர்கள் பிளவுபட்டு நிற்கின்றனர். இதற்கிடையில் இயேசுவைக் கைது செய்ய ஆள்கள் அனுப்பப்படுகிறார்கள். வெறுங்கையராய் வந்த அவர்கள், 'அவரைப் போல எவருமே என்றுமே பேசியதில்லை' என்று சான்று பகர்கின்றனர். மேலும், பரிசேயர்கள் நடுவிலும் நிக்கதேம் மற்றும் மற்றவர்கள் என பிரிவு ஏற்படுகிறது.

முதல் வாசகத்தில், தன் இறைவாக்குப் பணி பற்றிய குழப்பத்தில் இருக்கின்ற இறைவாக்கினர் எரேமியா தன் வாழ்வின் பொருள் எது என்று அறியாதவராய் இறைவனிடம் சரணடைகின்றார்.

நற்செய்தி வாசகம், இயேசுவைப் பற்றி மக்களிடையே நிலவிய குழப்பம் பற்றிப் பேசுகின்றது.

இங்கேதான், அவரவர் வீட்டுக்குத் திரும்புதல் முக்கியமானதாக அமைகிறது.

பொதுவான ஒரு பிரச்சினையைப் பற்றி - அரசன் தேவை அல்லது இயேசு மெசியா என்று - பேசுவதற்கு முன்பாக மக்கள் தங்கள் வீட்டுக் குழப்பங்களைத் தெளிவுபடுத்த வேண்டும். தங்கள் குழப்பங்கள் தெளிவுறாத மக்கள் இறைவனைப் பற்றி அறிந்துகொள்தல் இயலாது. தன் உள்ளத்தின் குழப்பம் தீர்க்க முயற்சி செய்கிறார் எரேமியா.

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று கேள்விகளை எழுப்புகின்றது:

ஒன்று, என் உள்ளம் என்னும் வீட்டுக்குள் நான் திரும்பி எனக்குள்ளே இருக்கும் குழப்பத்தை நான் அகற்றத் தயராhக இருக்கிறேனா?

இரண்டு, இயேசுவை ஏற்றுக்கொள்ள அவருடைய எளிய பின்புலம் பரிசேயர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவனை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருக்கும் அக மற்றும் புறக்காரணி எது?

மூன்று, காவலர்கள் கொண்டிருந்த துணிச்சல் நமக்கு ஆச்சர்யம் தருகிறது. தங்களுடைய வேலைக்குப் பாதகம் வந்தாலும் பரவாயில்லை என்று சான்று பகரும் அத்துணிச்சல் இன்று என்னிடம் இருக்கிறதா? இயேசுவையும் அவருடைய போதனை மற்றும் செயல்களையும் நான் எப்படிப் பார்க்கிறேன்?

இறுதியாக,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நிறைய கேள்விகள் இருக்கின்றன. ஆனால், விடை ஏதும் இல்லை.

விடை தெரியாத கேள்விகளா அவை?

அல்லது விடை தெரிந்து கேட்கப்பட்ட கேள்விகளா?

அல்லது விடைகளை விரும்பாத கேள்விகளா?

Thursday, March 18, 2021

புனித யோசேப்பு

இன்றைய (19 மார்ச் 2021) திருநாள்

புனித யோசேப்பு

இன்று நாம் புனித யோசேப்பை அன்னை கன்னி மரியாவின் கணவர் என்று கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டு, 'புனித யோசேப்பு ஆண்டு' என்பதால் இன்றைய நாள் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.

'To Be' means 'To be Useless.'

புனித யோசேப்பு ஆண்டை அறிமுகம் செய்த அன்று (8 டிசம்பர் 2020) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, 'தந்தையின் இதயத்தோடு' ('Patris Corde') என்னும் திருத்தூது மடலில், புனித யோசேப்பின் தந்தைக்குரிய ஏழு பரிமாணங்களை வகைப்படுத்துகிறார். அவற்றில் இறுதியாக இருப்பது, 'நிழல்நில் தந்தை.' இந்தப் பகுதியை திருத்தந்தை இப்படி நிறைவு செய்கிறார்: 'ஒரு தந்தை, தான் 'பயனற்றவர்' என்ற நிலையை அடையும்போதுதான் அவர் ஒரு தந்தையாகவும் ஆசிரியராகவும் மாறுகிறார். அந்த நிலையில் அவர், தன் குழந்தை தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்குவதையும், தன் துணை இல்லாமலேயே வாழ்வின் பாதைகளில் நடக்க இயல்வதையும் காண்கிறார். யோசேப்பு போல அவர் மாறும் போது அந்நிலையை அடைகிறார்.'

திருத்தந்தை அவர்களின் இவ்வரிகள் என்னை அதிகம் யோசிக்க வைத்தன.

'இருப்பது' என்றால் 'பயனற்று இருப்பது!' (To Be means To be Useless).

இதை நம்மால் அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், 'இருப்பது' என்றாலே 'பயனுக்காக இருப்பது' என்றுதான் நாம் கற்றுவைத்துள்ளோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களும் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால், உண்மை அதுவன்று.

நீங்க ஒரு டீச்சர். கணிதத்தில் ஐந்தாவது பாடம் நடத்த வேண்டும் என்று வகுப்பறைக்குள் செல்கிறீர்கள். அங்கே உங்களுக்கு முன் உங்கள் மாணவி ஒருத்தி, அழகாக கணிதத்தை கரும்பலகையில் எழுதி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு கோபம் வருமா? அல்லது உங்களுக்கு மகிழ்ச்சி வருமா?

மாணவி தன் கண்முன்பாக தான் கற்றுக்கொடுக்க நினைத்த பாடத்தைக் கற்றுக்கொடுப்பதைக் காணும் ஆசிரியர், தான் 'பயனற்றவர்' என உணர்கிறார். அந்த நொடியில் அவர் அந்த மாணவியைக் கொண்டாடுகிறார்.

நீங்கள் ஒரு அப்பா. உங்களுடைய எந்தவொரு அறிவுரையும் உடனிருப்பும் இல்லாமலேயே உங்கள் மகன் நன்றாகப் படிக்கிறான், தன் வாழ்க்கை நிலையைத் தெரிவு செய்கிறான். நீங்கள் பெருமைப்படுமாறு நடக்கிறான். அவனது வளர்ச்சியைக் காண்கின்ற நீங்கள், 'என் குறுக்கீடு இல்லாமலேயே இவ்வளவு வளர்ந்துவிட்டானே!' என்று உணரும் அந்த நொடியில் நீங்கள் பயனற்ற நிலைக்கு ஆளாகிறீர்கள்.

நான் ஒரு பங்குத் தந்தை. என் பங்குத் தளத்தில் உள்ள எல்லா நிகழ்வுகளும் எனது எந்தவொரு ஈடுபாடுமின்றி மிக அழகாக நடக்கின்றன. அவற்றைக் காணும் நான், பயனற்ற நிலையில் இருப்பதாக உணர்கிறேன்.

இதுவே பயனற்ற நிலையை உணர்தல்.

இதுவே மெய்யான ஞானம்.

இந்த ஞானத்தையே புனித யோசேப்பு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில் (2 சாமு 7) இறைவாக்கினர் நாத்தானோடு உரையாடுகின்ற தாவீது அரசர், தன் கடவுளுக்கு ஆலயம் கட்ட விரும்புகிறார். ஆனால், நாத்தான் வழியாக குறுக்கீடு செய்கின்ற ஆண்டவராகிய கடவுள், 'நீயா எனக்கு ஆலயம் கட்ட விரும்புகிறாய். நான் உனக்கு ஆலயம் கட்டுவேன்' என்று சொல்லும் அந்த நொடியில், தாவீது அரசர் தான் பயனற்றவர் என்பதை உணர்கிறார்.

இரண்டாம் வாசகத்தில் (உரோ 4), ஆபிரகாமின் எதிர்நோக்கு பற்றிப் பேசுகின்ற பவுல், ''உன் வழிமரபினர் எண்ணற்றவராய் இருப்பர்' என்ற கூற்று நிறைவேறும் என்னும் எதிர்நோக்குக்கு இடம் இல்லாதது போலத் தோன்றினாலும், அவர் எதிர்நோக்கினார்ளூ தயங்காமல் நம்பினார்' என்கிறார் புனித பவுல். ஆபிரகாமின் வழிமரபினர் தோன்றுதலுக்குக் கடவுளே காரணம் என்பதால், அங்கே ஆபிரகாம் பயனற்ற நிலைக்கு தன்னையே உட்படுத்துகின்றார்.

நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 1), இயேசுவின் பிறப்பு அறிவிப்பு நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். 'மரியாவை எப்படி விலக்கி விடலாம்' என்று யோசித்துக் கொண்டே இருந்த யோசேப்பு, தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொள்கின்றார். 'விடிய விடிய யோசித்த யோசேப்பு, தன் யோசனையால் பயன் ஏதும் இல்லை' என்று உணர்ந்த அந்த நொடி, 'பயனற்றவர்' ஆகிறார். மேலும், இயேசு ஆலயத்தில் காணாமல் போகும் நிகழ்வில் (காண். லூக் 2), 'என் தந்தையின் அலுவலில் நான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?' என்று இளவல் இயேசு கேட்ட அந்த நொடியில், 'நான் ஒரு பயனற்ற தந்தை' என்று உணர்ந்திருப்பார் யோசேப்பு.

ஆக, பயனற்ற நிலையை உணர்தல் என்பது தான் இல்லாமலேயே இந்த உலகில் நிகழ்வுகள் நகரும் என்ற மெய்ஞ்ஞானம் பெறுவது. ஏனெனில், அனைத்தையும் நடத்துபவர் கடவுளே. 

தன்னுடைமையாக்கும் அன்பு கொண்டிருக்கும் ஒருவர் தன்னால் மட்டுமே மற்றவர்களுக்குப் பயன் என்று சொல்லி, மற்றவர்களும் தன்னைப் போல இருக்க வேண்டும் என நினைப்பார். ஆனால், தற்கையளிப்பைக் கற்றுக்கொண்ட ஒருவர், கற்புநிறை அன்போடு தன் பயனற்ற நிலையை ஏற்றுக்கொள்வார்.

மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்கா சென்று, ஒரு வழக்கறிஞராக அந்நாட்டு மக்களுக்குப் பணியாற்ற விரும்பினார். ஆனால், அங்கே அவர் கறுப்பின மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தபோது, வழக்கறிஞர் பணியில் பயனற்றவர் ஆகிறார்.

அன்னை தெரசா ஓர் ஆசிரியையாக கொல்கத்தாவின் தெருக்களில் நடந்து வருகிறார். ஆனால், அங்கு நிலவிய மிகவும் ஏழ்மையான நிலைகண்டு சமூகப் பணி செய்யத் தொடங்கிய அவர், ஆசிரியப் பணியில் பயனற்றவர் ஆகிறார்.

ஆக, ஒருவர் தன் வாழ்வில் தான் கொண்டிருக்கும் இலக்குகளை ஒதுக்கிவைத்துவிட்டு, இறைத்திட்டத்திற்குத் தன்னையே கையளிக்கும்போது பயனற்றவர் ஆக முடியும்.

இன்றைய கார்ப்பரேட் உலகம் நம்மை 'பயனுள்ளவர்களாக' இருக்க வேண்டும் என்று கற்பித்து, நம்மை மனஇறுக்கத்திலேயே வைத்துள்ளது. 'பயனுள்ள வகையில்' நேரம் செலவழிக்கப்பட வேண்டும், 'பயனுள்ள உறவுகள்' வேண்டும், 'பயனுள்ள இடத்தில்' பணத்தைச் சேமிக்க அல்லது முதலீடு செய்ய வேண்டும். 'பயனுள்ள இடத்தை' பார்க்க சுற்றுலா செல்ல வேண்டும். 'பயனுள்ள உணவை' சாப்பிட வேண்டும். இப்படி நமக்குக் கற்பிக்கப்படும் அனைத்தும் நம்மைச் சுற்றி கார்பரேட் விரிக்கும் மாய வலைகளே.

நம் இல்லத்தில் உள்ள குழந்தைகளைப் பாருங்கள். வயதானவர்களைப் பாருங்கள். உடல் அல்லது மனநலம் சரியாக இல்லாதவர்களைப் பாருங்கள். அவர்களால் மேற்காணும் எந்தவொரு பயனும் இல்லை. அவர்கள் எதையும் உருவாக்குவதில்லை. எந்த வளத்தையும் பெருக்குவதில்லை. அப்படி என்றால், அவர்கள் தேவையற்றவர்களா? இல்லை! 'பயனற்ற நிலையும்' இனிமையாக வாழ்க்கை நிலையே.

அடுத்தவர்களுக்குப் பயனுள்ள வகையில் வாழ வேண்டும் என்ற ஆசையிலும், விருப்பத்திலும் நாம் அன்றாடம் விரக்திக்கு உள்ளாகிறோம். என் கணவருக்குப் பயனுள்ளவராக, என் மனைவிக்குப் பயனுள்ளவராக, என் மறைமாவட்டத்திற்குப் பயனுள்ளவராக, என் துறவற சபைக்குப் பயனுள்ளவராக, எனக்கு அடுத்திருப்பவருக்குப் பயனுள்ளவராக, என் நாட்டுக்குப் பயனுள்ளவராக நான் இருக்க வேண்டும் என்ற வீணான வேட்கையில் நாம் எத்தனை முறை சோர்வுக்கும், மனவிரக்திக்கும், குழப்பத்திற்கும் ஆளாகி உள்ளோம்?

'இருத்தல்' என்றால் 'பயனற்று இருத்தல்' என்பதை நாம் எப்படி அடைவது?

ஒன்று, உரிமை எடுத்தலைத் தவிர்க்க வேண்டும் (Let go of sense of entitlement).

நமக்கு யார் மேலும், எதன் மேலும் எப்போதும் உரிமை இல்லை. இதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நான் பேராசியர் என்பதால் என் மாணவர் என்னை மதிப்பது என் உரிமை என நான் நினைப்பது தவறு. நான் ஓர் அருள்பணியாளர் என்பதால் என் பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும் என்பது என் உரிமை என நான் நினைப்பது தவறு. யோசேப்பு தன் வாழ்வில் எந்த நிலையிலும் எந்த உரிமையும் எடுத்துக்கொள்ளவில்லை. 'நான் மெசியாவின் தந்தை. விடுதியில் இடம் வேண்டுவது எங்கள் உரிமை' என்று விடுதிக்காரரிடம் சண்டையிடவில்லை. 'பிறந்திருப்பது மெசியா, யூதர்களின் அரசர். அவர் இங்கேதான் இருக்க வேண்டும்' என்று ஏரோதிடம் உரிமைக்காகக் குரல் கொடுக்கவில்லை. உரிமையை விட்டுக்கொடுக்க மிகப் பெரிய துணிச்சல் தேவை.

இரண்டு, எல்லாம் நிறைவாக (எந்தவொரு குறையுமின்றி) இருக்க வேண்டும் என நினைப்பதைத் தவிர்க்க வேண்டும் (Let go of perfectionism).

எல்லாம் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்களால் மட்டுமே இந்த உலகத்திற்குப் பயன் இருப்பதாக நினைத்து, மாங்கு மாங்கு என்று வேலை செய்வார்கள். ஆனால், வாழ்க்கையின் நிகழ்வுகள் நாம் நினைப்பது போல நடப்பதில்லை. தன் வாழ்க்கைப் படகின் திசைமாற்றியைக் கடவுளிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார் யோசேப்பு. தான் நினைப்பது போலப் படகு செல்ல வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. அவருடைய வாழ்க்கைப் படகு, எருசலேமுக்கும், எகிப்துக்கும், எருசலேமுக்கும், நாசரேத்துக்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டாலும், தான் நினைத்தது போல தன் வாழ்க்கை 'கரெக்ட்' ஆக இல்லை என்றாலும், தன் மௌனம் காத்தார் வளன்.

மூன்று, ஓய்ந்திருத்தல் அன்று, செயலாற்றுதல் (Don't be indifferent. But act by being different).

'பயனற்ற நிலை' என்றால் 'ஓய்ந்திருத்தல்' அன்று. என் குறுக்கீடு இல்லாமலேயே என் மாணவி கணிதம் படிக்கிறாள் என்றால், 'பரவாயில்லை. நான் ஓய்வெடுக்கலாம்' என்று நினைப்பது தவறு. அல்லது, என்னைச் சுற்றி நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது அன்று. மாறாக, நான் செய்வதனைத்தையும் வித்தியாசகமாகவும், மேன்மையாகவும் செய்ய வேண்டும். செயலாற்றுதல் என்பது வலி ஏற்பது. பயனற்ற நிலைக்குத் தன்னையே உட்படுத்துபவர் வலிகள் வழியேதான் அதை அடைய முடியும். 

நிற்க.

திருத்தூது மடலின் இறுதியில், நம் திருத்தந்தை அவர்கள், 'நாம் புனித யோசேப்பிடம் கேட்க வேண்டியதெல்லாம் அருளில் சிறந்த அருளான ஒன்றே: நம் மனமாற்றம்' என்கிறார்.

நம் மனமாற்றம் இதுவே.

'நான் தான் பயனுள்ளவன், பயனுள்ளவள்' என்ற தன்முனைப்பையும், தன்னுடைமையாக்கும் அன்பையும் விடுத்து, 'நான் பயனற்றவன், பயனற்றவள்' என்ற நிலைக்கு ஆட்படுத்துவது.

பயனற்ற நிலையே ஞான நிலை.