Monday, May 31, 2021

உமது குணம்

இன்றைய (1 ஜூன் 2021) முதல் வாசகம் (தோபித்து 2:9-14)

உமது குணம்

இந்த வாரத்திற்குரிய முதல் வாசகங்கள் நமக்கு தோபித்து நூலிலிருந்து தரப்பட்டுள்ளன. இது ஓர் இணைத்திருமுறை நூல். அதாவது, கிரேக்க மொழியில் எழுதப்பட்டிருந்ததால் முதல் ஏற்பாட்டுக்குள் நுழைய இயலாத நூல். பிரிந்த சகோதரர்கள் இந்நூலைத் தூண்டப்பட்ட நூல் என ஏற்றுக்கொள்வதில்லை. இந்நூல் மித்ராஷ் இலக்கிய வகையைச் சார்ந்தது. அதாவது, யூதச் சட்டங்களுக்கு எழுதப்பட்ட கதையாடல் வடிவ விளக்கவுரை வகையைச் சார்ந்தது. கடவுளுக்குப் பயந்து நீதிமானாக வாழ்க்கை நடத்தும் ஒருவர், பத்துக் கட்டளைகளையும் ஆண்டவரின் விதிமுறைகளையும் நியமங்களையும் கடைப்பிடிப்பவர் தன் வாழ்வில் துன்பம் அனுபவிப்பாரா? என்ற கேள்வி இஸ்ரயேல் மக்களுக்கு இருந்தது.

'கட்டளையைக் கடைப்பிடி. நீ நீடுழி வாழ்வாய்!' என ஆண்டவராகிய கடவுள் இணைச்சட்ட நூலில் இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்கின்றார். ஆனால், அசீரிய மற்றும் பாபிலோனியப் படையெடுப்பின்போது கட்டளைகளைக் கடைப்பிடித்த நல்லவர்களும் நாடுகடத்தப்படுகின்றனர். இச்சூழலில் ஆண்டவரின் வாக்குறுதி பொய்யாகிவிட்டது போல மக்கள் உணர்கின்றனர். ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களின் வாழ்வில் துன்பம் வந்தாலும் அவர்களுடைய துன்பத்தை நீக்க இறைவன் உதவி செய்வார் என்ற நம்பிக்கையைத் தருவதற்காக எழுதப்பட்ட நூல் தோபித்து நூல்.

இறந்தவர்களை நல்லடக்கம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து முற்றத்தில் தூங்குகிறார் தோபித்து. முற்றத்தில், 'குக்கூ, குக்கூ' எனப் பாடிக்கொண்டிருந்த குருவிகள் அவரின் கண்களில் எச்சம் போட்டுவிடுகின்றன. மருத்துவம் பலன் தரவில்லை. தோபித்தின் பார்வை குறைகின்றது. இதில் என்ன ஓர் அழகான இலக்கியக் கூறு என்றால், இறந்தவர்கள், 'ஒளி இழந்தவர்கள்' எனப் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் அழைக்கப்பட்டனர். 'ஒளி இழந்த ஒருவரை' அடக்கம் செய்துவிட்டு வந்த தோபித்து 'ஒளி இழக்கின்றார்.' இது மிகப்பெரிய கொடுமை. இரண்டு நிலைகளில்: ஒன்று, அவர் செய்த நற்செயலுக்கு ஏற்ற கைம்மாறு இல்லை. மாறாக, 'தண்டனை' போன்ற ஒன்று நடக்கிறது. இரண்டு, அவர் இனி உயிரோடு இருந்தாலும் இறந்தவர்போலக் கருதப்படுவார். உடலின் மற்ற குறைகளைக் கூடத் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், பார்வையின்மை மிகப் பெரிய இழப்பு. நான் அடிக்கடி நினைப்பதுண்டு. பொதுவிடங்களில், இரயில் போன்ற இடங்களில் உள்ள கழிவறைகளைப் பார்வையற்ற நபர்கள் எப்படி பயன்படுத்துவர் என்று. பல இடங்களில், பல நேரங்களில் நாம் திறன்குறையுடையவர்களின் அசௌகரியங்களை நினைப்பதில்லை. தோபித்து பல அசௌகரியங்களை அனுபவித்திருப்பார்.

தோபித்து தொடர்ந்து தன் மனைவி அன்னா பற்றிக் கூறுகின்றார். அன்னாவைப் பற்றிய விடயமும் நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அன்னா கைவேலைப்பாடுகள் செய்து அதில் வரும் பணத்தை வைத்து வீட்டைப் பராமரிக்கிறார். இங்கே, மீண்டும் மிகவும் இரசிக்கத்தக்க ஒரு கூறு. தோபித்து கண்பார்வையை இழக்கின்ற நேரம், அன்னா தன் கண் பார்வையை மூலதனமாக்குகிறார். ஏனெனில், கைவேலைப்பாடுகள் செய்வதற்கு கண்பார்வை மிக அவசியம். அன்னாவின் உழைப்பு நமக்குப் பாடமாக இருக்கிறது. அன்னாவின் உழைப்புக்கு அன்பளிப்பாக உரிமையாளர் ஒருவர் ஆட்டுக்குட்டி தருகின்றார். தன் வீட்டுக்கு வெளியே ஆட்டுக்குட்டி கத்தக் கேட்டவுடன் சந்தேகம் வருகிறது தோபித்துக்கு. தன் மனைவி யாரிடமோ திருடிவிட்டதாக, அல்லது தன் வீட்டுக்கு அருகில் சுற்றிக்கொண்டிருந்த ஆடு ஒன்றை எடுத்துத் தன் வீட்டில் கட்டியதாக நினைக்கின்றார். ஏனெனில், அன்று நாடுகடத்தலின்போது மக்கள் அப்படி அப்படியே அனைத்தையும் - துணிகள், கால்நடைகள், பாத்திரங்கள், கோழிகள், நாய்க்குட்டிகள் - விட்டுவிட்டுச் சென்றனர். பல ஆடு, மாடுகள், கழுதைகள் ஊருக்குள் சுற்றிக்கொண்டிருந்தன. ஊருக்குள் சுற்றிக்கொண்டிருப்பதையும் அபகரிக்க நினைக்காத தோபித்தின் குணம் பாராட்ட வேண்டியதாக இருந்தாலும், தன் மனைவியின் நற்பண்பை சந்தேகிப்பது நமக்கு வருத்தமாக இருக்கிறது.

அதிகம் நேர்மையாக இருப்பவர்களின் பிரச்சினையே இதுதான். தங்களைத் தவிர அனைவரும் அநீதியாளர்கள் அல்லது அயோக்கியர்கள் என அவர்கள் நினைப்பர்.

அன்னா உடனடியாகப் பதிலிறுக்கின்றார்: 'உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்கே? உம்முடைய குணம் இப்போது நன்றாகவே புலப்படுகிறது.'

நாம் நற்பண்புகள் கொண்டிருந்தாலும் மற்றவர்களின் நற்பண்புகளைக் கேள்விக்குட்படுத்துவது தவறு. ஒன்றைப் பற்றி அல்லது ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் பேசுவது சால்பன்று.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மாற் 12:13-17), இயேசுவிடம் வருகின்ற ஏரோதியர்களின் மனநிலையும் அப்படித்தான் இருக்கின்றது. தாங்களே சீசருக்குப் பிரமாணிக்கமாக இருந்துகொண்டு, வெளிவேடம் அணிந்துகொண்டு, 'சீசருக்கு வரி செலுத்துவது முறையா?' என்று கேள்வி கேட்கின்றனர்.

இயேசு அவர்களின் பிரமாணிக்கமின்மையையும், வெளிவேடத்தன்மையையும் சுட்டிக்காட்டுகின்றார்.

Sunday, May 30, 2021

மரியா – எலிசபெத்து சந்திப்பு

இன்றைய (31 மே 2021) திருநாள்

மரியா – எலிசபெத்து சந்திப்பு

நம் தாய்த்திருஅவையில் 13ஆம் நூற்றாண்டில் இத்திருவிழா தொடங்கப்பட்டது. முதலில் ஜூலை 2ஆம் தேதி கொண்டாடப்பட்ட இவ்விழா, பிற்காலத்தில் மே 31க்கு மாற்றப்பட்டது. அதாவது, மங்கள வார்த்தை திருநாளுக்கும் (மார்ச் 25), திருமுழுக்கு யோவானின் பிறப்பு விழாவுக்கும் (ஜூன் 24) இடையே கொண்டுவரப்பட்டது.

வானதூதர் தன் இல்லத்தை விட்டு வெளியேறிய அந்த நொடியே, கதவை அடைத்துவிட்டு மரியாவும் வெளியேறுகிறார். அப்படித்தான் பதிவு செய்கின்றார் லூக்கா: 'அதன்பின் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார்.' இயேசுவைத் தன் உடலில் தாங்கத் தொடங்கிய அந்த நொடி முதல் அவர் முழு இயக்கத்திற்கு உட்படுகிறார். எருசலேம் ஆலயத்தை நோக்கியோ, அல்லது தலைமைச்சங்கத்தை நோக்கியோ அவர் ஓடவில்லை. மாறாக, தேவையில் இருந்த தன் உறவினர் எலிசபெத்தை நோக்கி ஓடுகிறார்.
மங்கள வார்த்தை மரியாவை முழுவதுமாக மாற்றியது: நாசரேத்தூரின் எளிய இளவல் இப்போது உன்னதரின் மகனின் தாயாகின்றார். இனி அவர் தன் விருப்பத்தை அல்ல, இறைவிருப்பத்தை நிறைவேற்றவே விரும்புவார். இனி அவர் அனைத்திலும் விரைந்தே செயல்படுவார்: விரைந்து பணியாற்றுவார், விரைந்து இறைத்திருவுளம் நிறைவேற்றுவார்.

கிறிஸ்து நம்மில் கருவாகத் தொடங்கினால் நாமும் அமைதியாக ஓய்ந்திருக்க முடியாது. நாமும் அடுத்தவர்களுக்குப் பணி செய்வோம். நம் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேறுவோம். நம் தேவைகளை மறந்து மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்.

இப்போது தொடங்குகின்ற மரியாவின் பயணம், தொடர்ந்துகொண்டே இருக்கும்: பெத்லகேமுக்கு, எகிப்துக்கு, மீண்டும் நாசரேத்துக்கு, எருசலேம் ஆலயத்துக்கு, கானாவூருக்கு, கல்வாரிக்கு என இனி அவர் பயணம் செய்துகொண்டே இருப்பார். எல்லாப் பயணங்களின் முன்னோட்டமே எலிசபெத்தை நோக்கிய பயணம்.

தான் கடவுளின் தாயாக இருந்தாலும் தாழ்ச்சியுடன் புறப்படுகின்றார் மரியா. தன் அன்பைப் பகிர்ந்துகொள்ளச் செயல்கிறார் மரியா. மரியாவின் அன்பும் தாழ்ச்சியுமே அவரை எலிசபெத்தை நோக்கி உந்தித் தள்ளியது என்கிறார் புனித பிரான்சிஸ் சலேசியார்.

மரியா தன் வழியில் வேறு எந்தக் கவனச் சிதறலும் கொள்ளவில்லை. அவருடைய இலக்குத் தெளிவு நமக்கு ஆச்சர்யம் தருகின்றது. செக்கரியாவின் வீட்டை அடைந்தவுடன் வாழ்த்துகிறார். மரியாவின் வாழ்த்து மிகவும் எதார்த்தமானதாகவும் உண்மையாகவும் இருந்ததால் அது வயிற்றிலுள்ள குழந்தையைச் சென்றடைகின்றது.

'எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்' என இங்கே பதிவு செய்கின்றார் லூக்கா. வானதூதர் கபிரியேல் சொன்ன நொடியில் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் மரியா. இப்போது ஒரு மெழுகுதிரி இன்னொரு மெழுகுதிரியைப் பற்ற வைப்பதுபோல, தன்னிடம் உள்ள தூய ஆவியைத் தன் உறவினருக்குக் கொடுக்கின்றார் மரியா.

எலிசபெத்து மரியாவை வாழ்த்த, மரியாவோ கடவுளைப் பாடிப் புகழ்கின்றார். மற்றவர்கள் நம்மைப் பாராட்டும்போது நம் முகம் நம்மையோ அல்லது மற்றவர்களையோ பார்க்காமல் இறைவனைப் பார்த்தால் எத்துணை நலம்! தன் வாழ்வு முழுவதும் இறைமையின் வெளிப்பாடாகப் பார்க்கத் தெரிந்த மரியாவின் நம்பிக்கைப் பார்வை நமக்கு வியப்பாக இருக்கிறது.

ஏறக்குறைய மூன்று மாதங்கள் எலிசபெத்தோடு தங்கியிருக்கின்ற மரியா பின்னர் வீடு திரும்புகின்றார்.

புறப்படும் பயணம் அனைத்தும் இல்லம் திரும்பவே என்பதும் ஒரு நல்ல வாழ்வியல் பாடம். பயணத்தின் எந்த இலக்கும் நம் வீடாகிவிடாது. நாம் திரும்ப வேண்டிய ஒரு வீடு எப்போதும் உண்டு.

நிகழ்வு முழுவதும் மகிழ்ச்சி மேலோங்கி இருக்கிறது.

இந்த மகிழ்ச்சி நம் அனைவரையும் பற்றிக்கொள்வதாக!

Saturday, May 29, 2021

உறவும் பணியும்


மூவொரு கடவுள் பெருவிழா

I. இணைச்சட்டம் 4:32-34,39-40 II. உரோமையர் 8:14-17 III. மத்தேயு 28:16-20

உறவும் பணியும்

கடந்த வாரம் டுவிட்டரில் ஒரு புகைப்படம் வலம் வந்தது. ஒரு மருத்துவமனையின் கொரோனா வார்டில் பணி புரியும் ஆண் மருத்துவர் ஒருவர் அதிகாலையில் தன் இல்லம் திரும்புகின்றார். இல்லம் திரும்பி ஓய்வெடுக்க விரும்பிய சில நொடிகளில் மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு பெற்று புறப்படுகின்றார். அந்த நேரத்தில் அவரிடம் ஓடி வருகிறாள் அவளுடைய மகள். அவளுக்கு ஏறக்குறைய 4 அல்லது 5 வயது இருக்கும். தன்னை அள்ளி எடுக்குமாறு அந்தக் குழந்தை தன் கைகளை மேலே தூக்குகிறார். அவருக்கும் அவரை அள்ளி எடுக்க ஆசை. ஆனால், மருத்துவ உடையில் இருக்கிறார். உடனே, அருகிலிருந்த பெரிய பாலித்தின் பேக் ஒன்றைத் தன் குழந்தையின்மேல் போர்த்தி, பாலித்தீன் பையோடு அக்குழந்தையைத் தழுவிக்கொள்கிறார்.

தன் அன்புக்குரிய குழந்தையை பாலித்தீன் பை சுற்றிக் கட்டிப் பிடிப்போம் என்று அவர் ஒருபோதும் நினைத்திருக்க வாய்ப்பில்லை.

பெருந்தொற்று நம்மை நம் அன்புக்குரியவர்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்தினாலும், அன்பு செய்வதற்கான வழிகளை மானுடம் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பு மருத்துவர் தந்தை போல.

எந்தப் பெருந்தொற்றும் மானுடத்தை அழித்துவிட முடியாது.

இறுதியில், மானுடம் வெல்லும்.

இன்று நாம் நம் கடவுளை மூவொரு இறைவன் என்று கொண்டாடி மகிழ்கின்றோம்.

இந்த மறைபொருள் பற்றி புனித அகுஸ்தினார் சிந்தித்துக் கொண்டே கடற்கறையில் நடந்துகொண்டிருந்தபோது, அங்கே தோன்றிய குழந்தை, 'கடல் தண்ணீரை ஒரு சிறிய குழிக்குள் நிரப்ப முயல்வது எவ்வளவு மதியீனம்!' என்று கேட்டுவிட்டு மறைந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால், புனித அகுஸ்தினாரைத் தவிர வேறு யாரும் இந்த மறைபொருள் பற்றி அதிகம் பேசவில்லை. பேசிய மற்றவர்கள் எல்லாம் அகுஸ்தினார் பேசியதைத்தான் வேறு வார்த்தைகளில் சொன்னார்கள்.

அகுஸ்தினார், 'அன்பு' என்ற உணர்வை இங்கே ஓர் உருவகமாகக் கையாண்டு தமதிருத்துவத்தின் (மூவொரு கடவுளின்) பொருளைப் புரிந்துகொள்ள விழைகின்றார். அன்பில் மூன்று பகுதிகள் உள்ளன: (அ) அன்பு செய்பவர், (ஆ) அன்பு செய்யப்படுபவர், (இ) இருவருக்கிடையே பரிமாறப்படும் அன்பு. அன்பு என்ற ஒன்றே இந்த மூன்று பகுதிகளையும் இணைத்தாலும், மூன்றும் தனித்தனியாக இருக்கின்றன என்பதை நாம் மறுப்பதில்லை.

மூவொரு கடவுள் பற்றிய புரிதலில் இதுவே முதன்மையானது. அதாவது, இவர்கள் மூவரும் ஒன்று என்றாலும், இவர்கள் வேறு வேறான நபர்கள்.

அகுஸ்தினார் இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வு பற்றி ஓரிடத்தில் மறையுரை வைக்க வேண்டிய தேவை இருந்தது. இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வில், 'மகன் வேறு,' 'தந்தை வேறு,' 'தூய ஆவியார் வேறு' என்று நம்மால் எளிதில் பிரித்துப் பார்க்க முடியும். மகன் தண்ணீருக்குள் இருக்கிறார். தந்தை வானத்தில் இருக்கிறார். தூய ஆவியார் இரண்டுக்கும் நடுவில் ஆகாயத்தில் இருக்கிறார். மூன்று பேரும் தனித்தனியாக அவர்கள் பிரிந்துதானே இருக்கிறார்கள். அப்படி இருக்க, அவர்கள் எப்படி ஒரே கடவுள் என்றும், பிரிக்க இயலாதவர்கள் என்றும் சொல்ல முடியும்? என்று அவருடைய மூளை கேள்வி கேட்கிறது. (அகுஸ்தினாரின் கேள்வி கேட்கும் திறன் நம்மை வியப்புக்கு உள்ளாக்குகிறது). இந்த இடத்தில் அவர் இன்னொரு உருவகத்தைக் கண்டுபிடிக்கின்றார்: நினைவு (memory), புரிதல் (understanding), விருப்பம் (will).

ஒரு கதையை நாம் நினைவில்கொள்ள வேண்டுமெனில், அந்தக் கதையைப் புரிந்துகொள்ளவும், நினைவில் வைத்திருக்க விருப்பம் கொள்ளவும் வேண்டும்.

ஒரு கதையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அவற்றின் வார்த்தைகளை நினைவில்கொள்ளவும், அவற்றை எண்ணிப்பார்க்க விருப்பம் கொள்ளவும் Nவுண்டும்.

ஓரு கதையை நாம் விரும்ப வேண்டுமெனில், அதை நினைவில் கொள்ளவும், புரிந்துகொள்ளவும் வேண்டும்.

மூன்றையும் செய்யக் கூடியது மூளைதான். ஆனால், மூன்றையும் வேறு வேறு செயல்களாகச் செய்கிறது. ஆக, அவற்றைப் பிரிக்க முடிவது போலத் தெரிந்தாலும், பிரிக்க இயலாதவையாக அவை இருக்கின்றன.

அப்படியே, கடவுளும், தந்தை-மகன்-தூய ஆவியாரும் என்கிறார் அகுஸ்தினார்.

மூவொரு கடவுள் மறைபொருளை இன்று நாம் எப்படிப் புரிந்துகொள்வது?

மூவொரு கடவுள் தங்களிலேயே உறவு நிலையில் இருக்கின்றார்கள் என்றும், அவர்களுக்கென்று ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கிறது என்றும் வரையறுக்கிறது நம் கத்தோலிக்கத் திருஅவையின் மறைக்கல்வி (காண். எண்கள் 267, 255).

ஆக, உறவும் பணியும் இங்கே அடிப்படையாக இருக்கின்றன.

உறவும் பணியும் மனித வாழ்வின் அடிப்படையான கூறுகளாக இருக்கின்றன. ஏனெனில், நாம் நம்மில் காண்பதைத்தான் கடவுளில் காண்கிறோம் என்கிறது சமூகவியல்.

பகுப்பாய்வு உளவியலின் தந்தை என அழைக்கப்படுகின்ற சிக்மண்ட் ஃப்ராய்ட், மனித வாழ்க்கையை 'லீபன் உன்ட் ஆர்பைடன்' (lieben und arbeiten) என்று வரையறுக்கின்றார். 'அன்பும்' 'பணியும்' - இதுதான் நம் வாழ்வின் மொத்தச் சுருக்கம். இந்த இரண்டும் தான் நம் அடையாளங்களாக இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, நான் யாருடைய மகன் என்ற உறவு நிலையிலும், நான் என்ன பணி செய்கிறேன் என்ற நிலையிலும்தான் நான் அறியப்படுகின்றேன். இந்த இரண்டுக்காகவும்தான் நம் மனித உள்ளம் ஏங்குகிறது. ஆகையால்தான், நம்மால் தனியாக இருக்க முடிவதில்லை. ஏதாவது பணி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டால், அல்லது பணிசெய்ய வேண்டாம் என்று நாம் தடுக்கப்பட்டால் நம்மால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.

மூவொரு கடவுள், தங்களுக்கிடையே, தந்தை-மகன்-உறவின் கனி என்னும் நிலைகளில் ஒருவர் மற்றவரோடு உறவில் இருக்கின்றனர். அது போல, தந்தை படைக்கின்றார், மகன் மீட்கின்றார், ஆவியார் வழிநடத்துகின்றார். எனவே, மூன்று பணிகளை அவர்கள் செய்கின்றனர். இன்றைய முதல் வாசகத்தில் தந்தையாகிய கடவுள் செய்கின்ற படைப்பு மற்றும் பராமரிப்புப் பணி பற்றி மோசே இஸ்ரயேல் மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றார். இரண்டாம் வாசகத்தில், ஆவியார் நம் உள்ளத்தில் அமர்ந்துகொண்டு, கடவுளை, 'அப்பா! தந்தையே!' என அழைக்குமாறு நம்மைத் தூண்டி எழுப்புகின்றார். நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் உடனிருப்பு எந்நாளும் இருக்கிறது என்று வாக்களிக்கின்றார். ஆக, மூன்று ஆள்களாக அவர்கள் மூன்று பணிகளைச் செய்கின்றனர். ஆனாலும், அவர்கள் ஒரே ஆளாக – ஒரே புத்தி, ஒரே ஞானம், ஒரே உணர்வு - இருக்கின்றனர்.

மூவொரு கடவுள் எப்படி? என்று கேட்பதை விட, மூவொரு கடவுள் ஏன்? என்று கேட்பதே சிறப்பு.

மனித வாழ்வின் அடிப்படை அலகுகளான 'உறவு' மற்றும் 'பணி' ஆகியவற்றை வரையறை செய்வதற்கு மூவொரு இறைவன் நமக்கு அளவுகோலாக இருக்கின்றார்.

எப்படி?

'மகிழ்ச்சி' மற்றும் 'வளர்ச்சி' - இவ்விரண்டும்தான் உறவு மற்றும் பணியில் அடிப்படையாக இருக்க வேண்டியவை.

இன்று நான் ஒருவர் மற்றவருடன் இணைந்திருக்கும் உறவினால் நான் மகிழ வேண்டும், நான் வளர வேண்டும். அதுபோலவே நான் செய்யும் பணியிலும். நான் செய்யும் பணியால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும், அந்தப் பணி செய்வதன் வழியாக நான் வளர வேண்டும்.

மகிழ்ச்சியும் வளர்ச்சியும் இணைந்து செல்தலே உறவுக்கும் பணிக்கும் அழகு.

இன்றைய நாளில், நம்மில் பலர் தங்கள் உறவுகளைப் பிரிந்து, உறவுகளை இழந்து நிற்கின்றோம். பணிகள் செய்ய இயலாமல் முடங்கிக் கிடக்கின்றோம். வைரஸ் நம்மை விட்டு நீங்காது என்ற எதிர்மறையான குரல்கள் வலுத்து வருகின்றன. அச்சம், கலக்கம், பயம் எல்லோர் முகங்களிலும் அப்பிக் கிடக்கின்றது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை. எல்லாவற்றையும் எல்லாரையும் நோய் தாங்கும் பொருள்களாக, நபர்களாகப் பார்க்கத் தொடங்கிவிட்டோம். ஒரே இல்லத்திற்குள் தனித் தனித் தீவுகளாகிவிட்டோம். அன்றாட வேலைக்குச் சென்றால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ள பல குடும்பங்களில் சேமிப்பும் இல்லாத நிலையில், வறுமையா? கொரோனாவோ? – எது முந்திக்கொண்டு நம்மை அழிக்கப் போகிறது? என்ற எண்ணத்துடன் எழுகின்றோம். இறப்பை விட இறப்பு பற்றிய அச்சம் நமக்கு அதிகம் அச்சம் தருகிறது. படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், கடவுளை வேண்டுவோர், கடவுளை ஏற்காதோர் என அனைவரையும் அள்ளிக்கொண்டு போகிறது பெருந்தொற்று.

முன்பை விட இன்று நமக்கு மூவொரு கடவுள் நமக்கு அதிகம் தேவைப்படுகிறார். நாம் தனிநபர் அல்லர், நம்மைச் சுற்றியும் உறவுகள் இருக்கின்றன எனச் சொல்கின்றார் நம் கடவுள்.

பதிலுரைப்பாடலின் ஆசிரியர் (திபா 33) நாம் அவரையே பற்றிக்கொள்வோம்: 'ஆண்டவர் நம் உயிரைச் சாவினின்று காக்கின்றார். அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். நாம் ஆண்டவரையே நம்பியிருக்கின்றோம். அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார் ... உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எம்மீது இருப்பதாக!'

Friday, May 28, 2021

எந்த அதிகாரத்தால்?

இன்றைய (29 மே 2021) நற்செய்தி (மாற் 11:27-33)

எந்த அதிகாரத்தால்?

'ஒத்த செருப்பு சைஸ் 7' என்ற திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

ரா. பார்த்திபன் அவர்கள் எண்ணத்தில் அவர் மட்டுமே நடித்திருக்கும் 102 நிமிடத் திரைப்படம். இந்தப் படத்தின் டேக் லைன் இதுதான்: 'அதிகாரம்தான் சார் கடவுள். அதிகாரம் உள்ளவனை யாரும் எதுவும் செய்ய இயலாது!'

இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்திவிட்டார். அவர் ஆலயத்தின் அருகே இருப்பதைக் காண்கின்ற தலைமைக் குருக்களும், மறைநூல் அறிஞர்களும், 'எந்த அதிகாரத்தால் இப்படிச் செய்கிறீர்?' என்று அவரிடம் கேள்வி கேட்கின்றனர்.

அவர்களின் கேள்வி இயல்பானதுதான். ஏனெனில், இயேசுவின் சமகாலத்து மறைநூல் அறிஞர்களும், போதகர்களும், 'தலைமைச் சங்கத்தின் அதிகாரத்தால்,' 'சட்ட நூல்களின் அதிகாரத்தால்,' 'தான் சார்ந்திருக்கின்ற பள்ளியின் அதிகாரத்தால்' போதித்தனர். அதிகாரத்தை மீறி அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், இயேசு இப்படிப்பட்ட எந்த அதிகாரத்தையும் பெற்றவர் அல்லர் என்பதை அவர்கள் அறிவர். ஆகையால்தான் இந்தக் கேள்வியை அவர்கள் இயேசுவிடம் கேட்கின்றனர்.

கேள்வி கேட்டவர்களிடம் கேள்வி கேட்கிறார் இயேசு: 'திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? மண்ணகத்திலிருந்து வந்ததா?' இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன விடை தந்தாலும் மாட்டிக்கொள்வர். ஆகவே, 'எங்களுக்குத் தெரியாது' என்று சொல்லித் தப்புகின்றனர். இயேசுவும் தன் அதிகாரம் பற்றி அவர்களுக்கு விடை தர மறுக்கின்றார்.

நம்பிக்கையைப் பற்றிச் சொல்கின்ற புனித அகுஸ்தினார், 'நம்புகிறவர் விளக்கம் கேட்பதில்லை. விளக்கம் கேட்பவர் நம்புவதில்லை' என்பார்.

இயேசு, தன் அதிகாரம் விண்ணிலிருந்து வந்தது என்று சொன்னால் மறைநூல் அறிஞர்கள் நம்பப் போவதில்லை என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆக, தன்னை நம்பத் தயாராக இல்லாதவர்களுக்காக தன் ஆற்றலை வீணடிக்கவில்லை இயேசு.

இயேசு எந்தவொரு ஆற்றல் கசிவுகளையும் (ENERGY LEAKS) கொண்டிருக்கவில்லை.

ஆற்றல் கசிவு என்றால் என்ன?

ஒரு பானையில் இருக்கும் சிறிய கீறல் பானையில் உள்ள தண்ணீர் அனைத்தையும் வெளியேற்றிவிடுகிறது. எதிர்மறை உணர்வுகளால் - பயம், கோபம், கலக்கம், குற்றவுணர்வு, ஒப்பீடு, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, முற்சார்பு எண்ணம் - நம்மில் விழும் கீறல்கள் நம் ஆற்றலை வீணடித்துவிடுகின்றன.

எந்த நிலையிலும் இயேசு தன்னை முழுவதும் அறிந்தவராக இருந்தார். தன்மேல் ஆளுகை செலுத்தினார். எந்தவொரு உணர்ச்சிப் பெருக்கிற்கும் அவர் இடம் தரவில்லை.

நாம் பல நேரங்களில் தேவையற்று மற்றவர்களுக்கு நம்மைப் பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறோம். அல்லது, நாம் யார் என்று நிரூபித்துக்கொண்டிருக்கின்றோம். அப்படிச் செய்யும்போதெல்லாம் நம் ஆற்றல் கசிந்துகொண்டிருக்கின்றது.

இயேசுவின் அதிகாரம் அவருக்கு உள்ளேயே இருந்தது.

தன் அதிகாரத்தைத் தனக்குள் கண்டுகொள்வதே ஞானம். ஏனெனில், தன் உள்ளத்தின் தூய்மையில் ஞானத்தைக் கண்டுகொண்டதாகப் பாடுகிறார் சீராக் (முதல் வாசகம்).


Thursday, May 27, 2021

அத்திமரம்

இன்றைய (28 மே 2021) நற்செய்தி (மாற் 11:11-26)

அத்திமரம்

இன்றைய நற்செய்தி மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) அத்திமரத்தைச் சபித்தல், (ஆ) ஆலயத்தைத் தூய்மைப்படுத்துதல், (இ) அத்திமரம் பற்றிய போதனை. இலக்கிய வகையில் இதை 'சான்ட்விச் அமைப்பு' என அழைக்கின்றனர்.

இயேசு ஏன் அத்திமரத்தைச் சபிக்கின்றார்?

இயேசு பசியாக இருக்கின்றார். அத்திமரத்தின் அருகில் செல்கின்றார். இலைகள் அதிகம் இருக்கின்றன அன்றி அங்கே காய்கள் இல்லை. உடனடியாக அதைச் சபிக்கின்றார். அது காய்க்கும் காலம் இல்லை என்று பதிவு செய்கின்றார் மாற்கு. இங்கே, 'அத்திமரம்' என்பது யூதர்களின் தோராவுக்கான (சட்ட நூல்கள்) உருவகம் என்றே பார்க்கப்படுகின்றது. தோரா கனிதரவில்லை. மேலும், மெசியாவின் வருகைக்கென எந்தக் குறிப்பிட்ட காலமும் இல்லை. அவர் எப்போதும் வரலாம்.

இயேசு ஏன் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்?

ஆலயம் இறைவேண்டலுக்கான இல்லமாக இல்லாமல் கள்வர் குகையாக மாறிவிட்டதால் இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துகின்றார்.

ஆக,

இந்த நிகழ்வில் தன் சமகாலத்து யூதர்கள் மேன்மையாகக் கருதிய இரு அடையாளங்களை – தோரா, ஆலயம் - எடுத்து, அவை பிறழ்வுபட்டுப் போயிருப்பதையும், பலன்தராமல் இருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் இயேசு.

ஆனால், சீடர்கள் இந்தக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவில்லை.

மாற்கு நற்செய்தியில் நாம் காணும் சீடர்கள் இயேவைப் புரிந்துகொள்ளாதவர்களாகவே இருக்கின்றனர். இவ்வளவு பெரிய செயலை இயேசு செய்திருந்தாலும், அவரை 'ரபி' (போதகர்) என்றே அழைக்கின்றனர்.

இந்த நாளின் சிந்தனையாக நாம் எதை எடுத்துக்கொள்வது?

'கனி தருவது'

அதாவது, மரத்தின் இருத்தல் கனி தருதலில்தான் நிறைவு பெறுகிறது.

சில நேரங்களில் நாம் கனிதர இயலாமல் இருக்கலாம்.

சில நேரங்களில் நாம் கனிதர மறுக்கலாம்.

இரண்டையும் இயேசு கண்டிக்கிறார்.

கனிதர இயலாமல் இருப்பவர்கள் கனிதரக் கூடிய நிலைக்கு தங்களையே தகுதியாக்கிக்கொள்ள வேண்டும்.

கனிதர மறுப்பவர்கள் கனிதர முன்வர வேண்டும்.


Wednesday, May 26, 2021

எல்லாம் இரட்டையாய்

இன்றைய (27 மே 2021) முதல் வாசகம் (சீஞா 42:15-25)

எல்லாம் இரட்டையாய்

'எல்லாம் இரட்டையாய் உள்ளன. ஒன்று மற்றொன்றுக்கு எதிராய் இருக்கிறது. யாதொன்றையும் அவர் குறைபடச் செய்யவில்லை. ஒன்று மற்றொன்றின் நன்மையை நிறைவு செய்கிறது.'

இயற்கையில் காணப்படும் கடவுளின் மாட்சிக்குப் புகழ்பாடும் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் மேற்காணும் வார்த்தைகளோடு புகழ்ச்சியை நிறைவு செய்கிறார்.

நாம் காணும் யாவும் இரட்டையாய் உள்ளன. அல்லது இரட்டைத்தன்மையை நாம் கண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இதையே சபை உரையாளர், 'ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர்' என்கிறார் (காண். சஉ 7:18). ஏனெனில், சபை உரையாளரைப் பொருத்தவரையில் வாழ்வில் அனைத்தும் இரட்டையாகவே உள்ளன: பிறப்பு-இறப்பு, நடவு-அறுவடை, கொல்தல்-குணப்படுத்துதல், இடித்தல்-கட்டுதல், அழுகை-சிரிப்பு, அன்பு-வெறுப்பு, போர்-அமைதி (காண். சஉ 3:1-8).

பல நேரங்களில் நாம் ஒற்றையாகப் பார்க்கவும், ஒற்றையாக்கிப் பார்க்கவும் விரும்புகிறோம். அல்லது இரட்டைத்தன்மையை மறுக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒளியை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், இருள் இருந்தால்தான் ஒளியை அறிய முடியும். உண்மையை நாம் உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், பொய்மை இருந்தால்தான் உண்மைக்குப் பொருள் இருக்கிறது. உடல்நலத்தை உயர்த்திப் பேசுகிறோம். ஆனால், உடல்நலமின்மையும் நம் வாழ்வின் அன்றாட எதார்த்தம்.

மனிதர்களாகிய நாமும் எப்போதும் இரட்டை மனிதர்களே.

இன்றைய நற்செய்தியில் மனிதர்களின் இரட்டைத் தன்மை மூன்று விடயங்களில் காட்டப்படுகிறது. இயேசு பார்வையற்ற ஒரு நபருக்குப் பார்வை தருகின்றார்.

(அ) பார்வையற்ற ஒரு நபர் பார்வை பெறுகின்றார். ஒளி இழந்த நிலையிலிருந்து ஒளி பெற்ற நிலைக்குக் கடந்து போகின்றார் பார்த்திமேயு. நம் அனைவருக்குமே இது பொருந்தும். நாமும் பல நேரங்களில் ஒளி இழந்த நிலையில் இருக்கின்றோம். பின் தெளிவு பெற்றவர்களாக ஒளி அடைந்த நிலைக்குக் கடந்து செல்கின்றோம்.

(ஆ) 'பார்வையற்ற நபரை அதட்டிய மனிதர்கள்' சற்று நேரத்தில், 'துணிவுடன் எழுந்து வாரும். இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்று அழைக்கின்றனர். இவர்கள் பொய்யர்களா? முரண்பட்டுச் செயல்படுபவர்களா? இல்லை! இரண்டும் எதார்த்தம். முதலில் அதட்டியதும் இவர்கள்தாம். பின் ஆறுதல் சொல்லியதும் இவர்கள்தாம். நம்மிலும் குணத்தில் இரட்டைத்தன்மை உண்டு.

(இ) 'உமது நம்பிக்கை நலமாக்கிற்று' என்று இயேசு அனுப்ப, அவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அது என்ன இரண்டாவது பார்வை? அதுதான் இயேசுவை இறைமகன் என்று பார்ப்பது. நம்பிக்கையில்லாத நிலையும் உண்டு, நம்பிக்கை அடைந்த நிலையும் நம்மில் உண்டு.

மகிழ்ச்சி, நேர்முக எண்ணம், வெற்றி ஆகியவற்றை மட்டுமே நாம் எண்ண வேண்டும் என்று நமக்குப் பல நேரங்களில் கற்பிக்கப்படுகின்றன. இவற்றையே நாம் நாடித்தேட வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றின் முரண்களான துயரம், எதிர்மறை எண்ணம், தோல்வி ஆகியவையும் எதார்த்தங்களே.

வாழ்வின் இரட்டைத்தன்மையைக் காணும் எவரும் ஞானியரே.

அப்படி என்றால், மூடராக இருக்கக் கூடாதா?

இருக்கலாம். ஞானமும் மூடத்தனமும் இரட்டைத்தன்மை தானே.


Tuesday, May 25, 2021

உங்களிடையே இருக்கக் கூடாது

இன்றைய (26 மே 2021) நற்செய்தி (மாற் 10:32-45)

உங்களிடையே இருக்கக் கூடாது

இன்றைய நற்செய்தி மூன்று நிகழ்வுகளாக அமைந்துள்ளது. முதல் நிகழ்வில், இயேசு தன் பாடுகளை இரண்டாம் முறை அறிவிக்கின்றார். இரண்டாம் நிகழ்வில், செபதேயுவின் பிள்ளைகள் இருவர் இயேசுவை அணுகி அவருடைய வலப்புறமும் இடப்புறமும் இடம் கேட்கின்றனர். மூன்றாவது நிகழ்வில் மற்ற பத்து சீடர்கள் இவ்விருவர் மேல் கோபம் கொள்கின்றனர். இதன் பின்புலத்தில் இயேசு சீடத்துவத்தின் பாடமாக, தாழ்ச்சியைக் கற்பிக்கின்றார்.

முதல் நிகழ்வு. இயேசு தன் வாழ்வில் தனக்கு நடக்கவிருப்பதை அறிந்திருந்தார். அல்லது தான் செல்லும் இலக்கு அவருக்கு தெளிவாகத் தெரிந்தது. தெளிவான இலக்கு இல்லாமல் பயணம் செய்வது என்பது கண்களைக் கட்டிக் கொண்டு வாகனம் ஓட்டு முயற்சி செய்வது போன்றது. அப்படிச் செய்தால் நாம் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருப்போம். அல்லது தொடங்கிய இடத்தையே வந்தடைவோம். தன் இறுதியை மனத்தில் வைத்தே இயேசு தன் பணியையும் பயணத்தையும் தொடங்கினார். ஒரு நாளின் இறுதி எப்படி இருக்கும், ஒரு வாரத்தின் இறுதி, ஒரு மாதத்தின் இறுதி, ஒரு வருடத்தின் இறுதி, ஒரு வாழ்க்கையின் இறுதி எப்படி என்பதை நாம் மனத்தில் இருத்தித் தொடங்கினால், நாம் தேவையற்றவற்றைப் பற்றி எண்ணவோ, பேசவோ, செயல்படவோ மாட்டோம்.

இரண்டாம் நிகழ்வு. இயேசு தவறாகப் புரிந்துகொள்ளப்படுகின்றார். நம் இலக்கு மற்றும் பயணம் பற்றி எல்லாருக்கும் தெரியத் தேவையில்லை. எல்லாரும் புரிந்துகொள்ளவும் தேவையில்லை. இயேசு பாடுகள் வழியாக மாட்சிமை அடைவது பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் வேளையில், சீடர்கள் இயேசுவின் அரசாட்சி என்னும் மாட்சி பற்றி யோசிக்கின்றனர். ஒவ்வொருவரும் தன் மனத்திற்கு எது தோன்றுகிறதோ, அல்லது தனக்கு எது பிடிக்கிறதோ அதைத்தான் தெரிவு செய்கிறார் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இயேசு அவர்களுடைய புரிதலின்மையைக் கண்டிக்கவில்லை. மாறாக, அவர்களுடைய புரிதலைத் திருத்த முயற்சி செய்கின்றார்.

மூன்றாம் நிகழ்வு. பத்து திருத்தூதர்கள் யோவான் மேலும் யாக்கோபு மேலும் கோபம் கொள்கின்றனர். கோபம் பயத்தின் வெளிப்பாடு. இந்தப் பயம் பொறாமையின் குழந்தை. எல்லாம் நெருங்கிய உறவினர்கள். அடுத்தவர் என்னைவிடச் சிறந்துவிடுவாரோ என்ற பயம், பொறாமையாக மாறுகிறது. பொறாமை கோபத்தைப் பெற்றெடுக்கிறது. கோபத்தின் பின்புலத்தில் தாழ்வு மனப்பான்மை ஒளிந்துகொள்கிறது. கோபத்தால் நாம் செய்யும் செயல்களுடன் குற்றவுணர்வு ஒட்டிக்கொள்கிறது. ஆனால், 'தாழ்ச்சி' என்ற பண்பு மேற்காணும் அனைத்தையும் வென்றெடுக்க உதவுகிறது. தாழ்ச்சி என்பது நம் அடையாளங்களைக் களையும் நிலை. ஒரு பாம்பு தன் தோலை உரித்துக்கொள்ளும் நிலை. அப்படி உரிக்கும்போது அது வலுவற்றதாக மாறுகிறது. ஆனால், அப்போதுதான் அது புதுப்பிறப்பு அடைகிறது. குழந்தை போன்ற அந்த நிலையில் எந்த ஒப்பீடும் எழுவதில்லை. அதுவே சீடத்துவத்தின் முதன்மையான பண்பாகவும் இருக்கிறது.

முதல் வாசகத்தில், சீராக்கின் ஞானநூல் ஆசிரியர், ஆண்டவராகிய கடவுள்முன் ஒட்டுமொத்த இஸ்ரயேல் மக்களும் பணிந்து நிற்கும் நிலையை எடுத்துரைக்கின்றார். கடவுள்முன் நம் தாழ்நிலையை ஏற்றுக்கொள்தல் மிக எளிது. ஆனால், ஒருவர் மற்றவர்முன் அவ்வாறு ஏற்றுக்கொள்தல் கடினம்.

அக்கடினமான ஒன்றே இன்று நாம் சுமக்க வேண்டிய சிலுவை.

அச்சிலுவையில்தான் இயேசு தான் அறையப்படுவதாக முன்னுரைத்தார்.

 

Monday, May 24, 2021

எல்லாவற்றையும் விட்டுவிடுதல்

இன்றைய (25 மே 2021) நற்செய்தி (மாற் 10:28-31)

எல்லாவற்றையும் விட்டுவிடுதல்

பெந்தகோஸ்தே பெருவிழாவோடு உயிர்ப்புக் காலம் நிறைவுபெறுகின்றது. நேற்று முதல் நாம் பொதுக்காலத்தில் நுழைந்துள்ளோம். இந்த வாரம் ஆண்டின் பொதுக்காலம் 8ஆம் வாரம். வருகின்ற நாள்களின் நற்செய்தி வாசகங்கள் மாற்கு நற்செய்தி நூலிலிருந்து நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு இயேசுவிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்று கூற, இயேசுவும், இம்மையில் அதற்காக ஒருவர் பெறும் கைம்மாற்றையும், அவற்றோடு வருகின்ற இன்னல்களையும், மறுமையில் அவர்கள் பெறுகின்ற பேறுபலன்களையும் எடுத்துரைக்கின்றார்.

இன்றைய முதல் வாசகமும் (காண். சீஞா 35:1-12) ஆண்டவருக்குக் கொடுத்தல் பற்றி மிக அழகாக எடுத்துரைக்கின்றது.

மேலாண்மையியலில், தனிப்பட்ட நபரின் மேன்மையான பண்புகள் என்ற வரிசையில் அதிகமாகப் பேசப்படுவது 'மிகுதியாகக் கொடுப்பது' (over-delivering).

மிகுதியாகக் கொடுப்பது என்றால் என்ன?

என்னிடமிருந்து எதிர்பார்க்கப்படும் திறன் அல்லது பலனை விட நான் அதிகமாகக் கொடுப்பது. Walking the extra mile எனச் சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, நான் ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறேன் என வைத்துக்கொள்வோம். என்னிடம் எதிர்பார்க்கப்படுவது என்ன? வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், ஒரு மாணவன் மிகவும் பின்தங்கியவராக இருக்கிறார். அவருக்கென நான் சிறப்பான கவனம் எடுத்து, பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அவருக்காக நேரம் செலவிடுவது, அல்லது வார இறுதியில் அவருக்கென சில மணி நேரங்கள் செலவிடுவது என்பதுதான் மிகுதியாகக் கொடுப்பது.

நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும் என்னால் மிகுதியாகக் கொடுக்க முடியும்.

நான் என் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறேன். என்னைக் காண ஒருவர் வருகின்றார். அவர் உள்ளே வருமாறு நான் சென்று கதவைத் திறந்து பிடித்துக்கொள்வது. அவர் நாற்காலியில் அமர உதவி செய்வது - இதுவும் மிகுதியாகக் கொடுப்பதுதான்.

மிகுதியாகக் கொடுப்பதன் பேறுபலன் மிகுதியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியும் வளர்ச்சியுமே.

இதில் இன்னலும் இருக்கிறது. எப்படி?

நான் என் பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேற வேண்டும். என் தேவைகளைக் குறைத்துக்கொண்டு மற்றவர்களின் தேவையை முன்நிறுத்த வேண்டும். மேலும், நான் மிகுதியாகக் கொடுப்பதால் என்னிடமே மற்றவர்கள் தங்கள் வேலைகளைக் கொடுத்துவிட்டு தப்பிச் செல்லும் நிலை வரும். அல்லது என் உழைப்பு மற்றவர்களால் சுரண்டப்படலாம். அல்லது என் நல் எண்ணத்தை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இன்னொரு பக்கம், நம்மால் இயலாத காரியங்களையும் நாம் இதனால் சுமக்கத் தொடங்கி விடுவோம். அதைக் குறித்து சீராக்கின் ஞானநூல் ஆசிரியரும் எச்சரிக்கின்றார்:

'குழந்தாய், பல அலுவல்களில் ஈடுபடாதே. ஈடுபட்டால், குற்றப்பழி பெறாமல் போகமாட்டாய். செய்யத் தொடங்கினாலும் முடிக்க மாட்டாய். தப்ப முயன்றாலும் முடியாது. சிலர் மிகவும் கடுமையாய் உழைக்கின்றனர். போராடுகின்றனர். விரைந்து செயல்புரிகின்றனர். எனினும், பின்தங்கியே இருக்கின்றனர்' (காண். சீஞா 11:10-11)

ஒரு பக்கம், மிகுதியாகக் கொடுத்தல் நமக்கு மகிழ்ச்சியும் வளர்ச்சியும் தருகிறது.

இன்னொரு பக்கம், நாம் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு உள்ளாகவும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வதில் அல்ல, பிரச்சினைகளைக் கையாளக் கற்றுக்கொண்டு வாழ்வதில்தான் வாழ்வின் இனிமை இருக்கிறது.

திருத்தூதர்கள் தாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு வருகின்றனர். அந்த இழப்பையும் அவர்கள் எதிர்கொள்ளக் கற்றுக்கொள்கின்றனர்.


Sunday, May 23, 2021

மரியா திருஅவையின் தாய்

இன்றைய (24 மே 2021) திருநாள்

மரியா திருஅவையின் தாய்

நம் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2018ஆம் ஆண்டில், 'அன்னை கன்னி மரியா திருஅவையின் தாய்' என்ற திருநாள், பெந்தகோஸ்தே பெருநாளுக்கு அடுத்த திங்கள் கிழமை கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்புலத்தில் இன்றைய நாளில் நாம் அன்னை கன்னி மரியாவை, 'திருஅவையின் தாய்' எனக் கொண்டாடி மகிழ்கின்றோம்.

இன்று இரண்டு முதல் வாசகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: தொநூ 3:9-15,20, மற்றும் திப 1:12-14. இவற்றில் ஏதாவது ஒன்றை இன்றைய திருப்பலியின் வாசகமாக எடுத்துக்கொள்ளலாம். தொநூ வாசகத்தில், 'மனிதன் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான். ஏனெனில் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய்' என்று கொடுக்கப்பட்டுள்ளது. திப வாசகத்தில், 'இயேசுவின் தாய் மரியாவோடு இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாசகங்களுமே அன்னை கன்னி மரியாவை மறைமுகமாகவும், நேரிடையாகவும், 'திருஅவையின் தாய்' என அழைக்கின்றன.

திப வாசகத்தை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்.

இயேசுவின் விண்ணே;றத்திற்குப் பின்னர் நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்கின்ற லூக்கா இயேசுவின் தாய் பற்றிக் குறிப்பிடுவதில் அக்கறை காட்டுகின்றார். தொடக்கத் திருஅவை தொடங்கி, இன்று வரை நம்மிடையே எழும் கேள்வி அன்னை கன்னி மரியா பற்றியதுதான். சிலுவையின் அடியில் இயேசுவின் தாய் நின்றதாக (நற்செய்தி வாசகம்) யோவான் தன் நற்செய்தியில் பதிவு செய்கின்றார். மாற்கு நற்செய்தியாளரின் பதிவின்படி இயேசு அடக்கம் செய்யப்பட்ட நிகழ்வில் சில பெண்கள் இருக்கின்றனர். அவர்களின் அன்னை கன்னி மரியாவும் இருந்திருப்பார். ஆனால், இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்ற நிகழ்வுகளில் அன்னை கன்னி மரியா பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. விண்ணேற்றத்திற்குப் பின்னர் மரியா திருத்தூதர்களோடு இணைந்து இறைவேண்டல் செய்கின்றார்.

'இயேசுவே திருஅவை' என்பதை அன்னை கன்னி மரியா அறிந்திருந்தார்.

திப 9இல் தமஸ்கு நகர் நோக்கி வாளேந்திச் செல்கின்ற சவுலை (பவுலை) தடுத்தாட்கொள்கின்ற ஆண்டவர், 'நீ துன்புறுத்தும் இயேசு நான்தான்!' என்கிறார். அதாவது, அங்கே இயேசு தன்னைத் திருஅவையோடு ஒன்றித்துக்கொள்கின்றார். ஆக, திருஅவைதான் இயேசு, இயேசுதான் திருஅவை.

இந்த நிகழ்வின் முன்னோடியாக இருக்கிறது மரியா திருத்தூதர்களோடு இணைகின்ற நிகழ்வு.

சிலுவையின் அடியில், இயேசு, 'இதோ! உம் மகன்!' என்று யோவானை அர்ப்பணித்த அந்த நொடியில், அனைத்துத் திருத்தூதர்களையும், அனைத்து நம்பிக்கையாளர்களையும், ஒட்டுமொத்தத் திருஅவையையும் தன் பிள்ளையாக ஏற்றுக்கொள்கின்றார் அன்னை கன்னி மரியா. இவ்வாறாக, இயேசுவின் தாய் என்று இருந்தவர், திருஅவையின் தாயாக மாறுகின்றார்.

மரியா ஏன் திருஅவையைத் தன் தாயாக எடுத்துக்கொண்டார்?

தன் தனிமை போக்கவா?

தன் மகனை இழந்த துயரம் போக்கவா?

தன் மகனின் இறப்பு தந்த வெறுமையை நீக்கிக் கொள்ளவா?

திருத்தூதர்களுக்கு ஒன்றும் தெரியாது என்பதற்காகவா?

இல்லை!

'நான் ஆண்டவரின் அடிமை. உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்!' (காண். லூக் 1:38) என்று வானதூதர் கபிரியேல் வழியாக இறைவனிடம் சராணகதி அடைந்த அந்த நொடியே, அவர் தன்னை யாதுமாக இறைவனின் திட்டத்திற்கு ஒப்புக்கொடுத்ததால், இறைவனின் திட்டமான திருஅவைக்குத் தாயாக, தன்னையே கையளிக்கின்றார்.

மரியாவும் திருத்தூதர்களும் மேலறையில் தங்குகின்றனர்.

இந்த மேலறையில்தான் இயேசு தன் இறுதி இராவுணவைக் கொண்டாடினார். புதிய உடன்படிக்கையின் இரத்தம் என்று சொல்லி, அப்பம் மற்றும் இரசத்தை அவர் தன் சீடர்களோடு பகிர்ந்துகொண்டது இந்த அறையில்தான். புதிய உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்ட இடத்திலேயே தொடங்குகிறது திருஅவையின் பயணம். இயேசுவின் மகிழ்ச்சியான பொழுதாக இறுதி இராவுணவு இருந்தது என்பதை அவருடைய பிரியாவிடை உரை (யோவான் நற்செய்தி) நமக்குச் சொல்கிறது. ஆக, கல்வாரியில் அல்ல, வெற்றுக் கல்லறையில் அல்ல. மாறாக, மேலறையில் தொடங்குகிறது மரியாவின் தாய்மைப் பயணம்.

இரண்டாவதாக, அன்னை கன்னி மரியா திருத்தூதர்களோடு இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தல் இல்லாமல் தாய்மை இல்லை. ஒரு தாய் தன் குழந்தைகளோடு இணைந்திருந்தால் மட்டுமே அவரின் தாய்மையை நாம் கொண்டாடுகிறோம். உடலளவில் முதலில் அவர் குழந்தையோடு இணைந்திருக்கின்றார். பின் உள்ளத்தளவில் இணைந்திருக்கின்றார். இறந்த பின்னும் நினைவாக இணைந்திருக்கின்றார். இணைந்திருத்தலில் இல்லாமல் அவர் தன் தாய்மையை நிலைநிறுத்த முடியாது. அன்னை கன்னி மரியா, இயேசுவின் இடத்தில் நின்று, திருத்தூதர்களை ஒருவர் மற்றவர்களோடு இணைக்கின்றார்.

மூன்றாவதாக, இணைந்திருத்தல் இறைவேண்டலாகக் கனிகிறது. தன் தாய் மோனிக்கா பற்றி எழுதுகின்ற புனித அகுஸ்தினார், 'இறைவேண்டலில் எந்நேரமும் என்னை நினைவில்கொள்.அதன் வழியாகவே நான் உன்னுடன் இணைந்திருப்பேன்' என்று அவர் சொன்னதாகப் பதிவு செய்கின்றார். இறைவேண்டல் இறைவனையும் நம்மையும் அன்றி, நம்மை ஒருவர் மற்றவரோடும் இணைக்கின்றது. 'ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று மிக அழகாகப் பதிவு செய்கின்றார் லூக்கா. திருத்தூதர்களும் அன்னை கன்னி மரியாவும் வௌ;வேறு நபர்களாக இருந்தாலும், அவர்கள் உள்ளம் ஒன்றாக இருக்கின்றது. இதுவே இயேசுவின் இறைவேண்டலாக இருந்தது. ஏனெனில், 'எல்லாரும் ஒன்றாக இருப்பார்களாக' என்று வேண்டினார் இயேசு.

இன்று அன்னை கன்னி மரியாவை, திருஅவையின் தாய் எனக் கொண்டாடி மகிழும் நாம், அத்தாயின் வழியாக இறைவனுக்கு நன்றி கூறுவோம். திருஅவையில் உள்ள நம் அனைவருக்கும் அவர் தாய் என்ற நிலையில், அவரோடு இணைந்து நம்மையும் இறைத்திட்டத்திற்குச் சரணாகதியாக்க முன்வருவோம்.


Saturday, May 22, 2021

உம் ஆவியை அனுப்பி

தூய ஆவியார் பெருவிழா

உம் ஆவியை அனுப்பி

புத்த மடாலயம் ஒன்றைச் சந்திக்க இளவல் ஒருவர் வந்தார். வந்தவருக்கு ஆச்சர்யம். மடலாயத்தில் இரு மொட்டுகள் தியானம் செய்துகொண்டிருந்தனர். இளவலுக்கு ஆச்சர்யம். அந்த மொட்டுகள் ஒருவரிடம், 'என்ன செய்கிறீர்கள்?' எனக் கேட்டார். 'தியானம் செய்கிறேன்' என்றார் மொட்டு. 'இந்த வயதில் என்ன தியானம் செய்கிறீர்கள்?' கேட்டார் இளவல். 'என் சுவாசத்தைக் கவனிக்கிறேன். சுவாசம் ஒன்றுதான் உண்மை. நம் பிறப்பு முதல் இறப்பு வரை நம்முடன் இருப்பது சுவாசம் தான். சுவாசம் நின்றவுடன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. நம் தனிமையில், தூக்கத்தில், நடையில், அழுகையில், சிரிப்பில் அனைத்திலும் உடனிருப்பது சுவாசம்தான். நாம் கோபம் கொண்டால் சூடாவது சுவாசம். நாம் பரபரப்பாக இருந்தால் பதற்றம் அடைவது சுவாசம். அமைதியாக இருந்தால் இலுகுவாக இருப்பது சுவாசம். சுவாசக் காற்று உள்ளே செல்வதையும், சுவாசித்த காற்று வெளியே வருவதையும் உணர்தலே தியானம்' என்று சொல்லிவிட்டுத் தன் தியானத்தைத் தொடர்ந்தார் மொட்டு.

நாம் சுவாசிக்கும் காற்றின் அருமையை இந்த நாள்களில் நாம் மிகவும் அதிகமாகவே உணர்கிறோம்.

பெருந்தொற்றின் முதல் அலையின்போது நாம் 'மாஸ்க்' அணிந்தோம். இரண்டாம் அலையில் இப்போது நாம் 'ஆக்ஸிஜன் மாஸ்க்' அணியும் நிலைக்கு வந்துவிட்டோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன், 'தண்ணீரை யாராவது விலைக்கு வாங்குவாங்களா?' என்று கேட்டோம். இன்று தண்ணீரை நாம் விலைகொடுத்தே வாங்குகிறோம். குடிக்கும் நீர் இப்போது காசில்லாமல் கிடைப்பதில்லை. சுவாசிக்கும் காற்றை வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இனி கட்டப்படும் கட்டடங்களும், 'தொற்றொதுக்கத்திற்கான அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் சேமிப்பு அறை' என்று இணைத்தே கட்டப்படும். 'இங்கே ஆக்ஸிஜன் கிடைக்கும்' என எல்லாக் கடைகளிலும் எழுதப்பட்டிருக்கும்.

நம் தாய்த் திருஅவை இன்று தூய ஆவியார் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. இன்று நம் திருஅவையின் பிறந்தநாள். வாரங்கள் எனப்படும் யூதர்களின் திருவிழாவின் நிறைவுநாளான பெந்தகோஸ்தே திருநாளில் கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் உருவாகி, நெருப்புப் போன்ற பிளவுற்ற நாவுகள் அன்னை கன்னி மரியா மேலும் திருத்தூதர்கள்மேலும் இறங்கியது இன்று. பூட்டிய அறைக்குள் கிடந்தவர்களுக்கு புதிய ஆக்ஸிஜனாக வந்து சேர்கிறார் தூய ஆவியார். புதிய பிறப்பு அடைந்தவர்களாக அவர்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்குகின்றனர். இந்த நிகழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது இன்றைய முதல் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் வரும் வரிகளை நம் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம்:

'தூய ஆவியின் துணையால் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்'

- 'ஊனியல்பு' மற்றும் 'ஆவிக்குரிய இயல்பு' என்னும் இரு இயல்புகள் பற்றி எடுத்துரைக்கின்ற பவுல், ஆவிக்குரிய இயல்போடு வாழுமாறு கலாத்தியத் திருஅவைக்கு அறிவுறுத்துகின்றார்.

ஆவிக்குரிய இயல்போடு வாழ்வது என்றால் என்ன?

இதைப் புரிந்துகொள்ள நாம் முதல் ஏற்பாட்டுக் கதை மாந்தர் சிம்சோன் (சாம்சன்) வாழ்க்கையை எடுத்துக்கொள்வோம். சிம்சோனின் பிறப்பு முதல் அவருடைய இறப்பு வரை ஆவியாரின் உடனிருப்பை அவருடைய வாழ்க்கையில் நாம் பார்க்கின்றோம். அவருடைய பிறப்பை விவிலிய ஆசிரியர் இப்படிப் பதிவு செய்கின்றார்:

'அப்பெண் (மனோவாகின் மனைவி) ஒரு மகனைப் பெற்றெடுத்து அவனுக்குச் சிம்சோன் எனப் பெயரிட்டார். பையன் வளர்ந்து பெரியவன் ஆனான். ஆண்டவர் அவனுக்கு ஆசி வழங்கினார். சோராவுக்கும் எசுத்தாவேலுக்கும் இடையே அவன் இருக்கும்போது ஆண்டவரின் ஆவி அவனைத் தூண்டத் தொடங்கினார்' (காண். நீத 13:24-25).

இங்கே, 'தூண்டத் தொடங்குதல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரேய வார்த்தையின் பொருள், 'இங்கேயும் அங்கேயும் நகர்த்துதல், அல்லது அலைக்கழித்தல், அல்லது இழுத்தடித்தல்' என்பதாகும். ஆக, ஆவியார் அல்லது ஆவி அவரை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் இங்கும் அங்கும் அலைக்கழிக்கிறார்.

இதுதான் தூய ஆவியாரின் முதல் பணி.

அவரைப் பெற்றுக்கொண்ட எவரும் ஒரே இடத்தில் இருப்பதில்லை. உடனடியாக இயக்கத்திற்கு உட்படுவர்.

அன்னை கன்னி மரியாவின் வாழ்க்கையிலும் இதைப் பார்க்கலாம். 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும்' (காண். லூக் 1:35) என்று வானதூதர் கபிரியேல் மரியாவுக்கு மங்கள வார்த்தை சொன்ன அடுத்த நிமிடம், மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து செல்கின்றார் (காண். லூக் 1:39).

இதுதான் ஆவியாரின் இயக்கம். இந்த இயக்கத்தையே நாம் திருத்தூதர் பணிகள் நூலிலும் வாசிக்கின்றோம். பேதுரு உடனடியாக நற்செய்தி அறிவிக்கத் தொடங்குகின்றார். திருத்தூதர்கள் பல்வேறு இடங்களுக்குப் பயணமாகிறார்கள்.

சிம்சோன் ஆண்டவருடைய ஆவி தன்னோடு இருப்பதை மறந்துவிடுகின்றார்.

அந்நாளில் இஸ்ரயேலின் எதிரிகளாக இருந்த பெலிஸ்தியர்கள், இலேகி என்னும் இடத்தில் சிம்சோனைத் தாக்கிக் கொல்ல முயன்றபோது, 'ஆண்டவரின் ஆவி அவர்மீது ஆற்றலுடன் இறங்கியது. அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணலைப் போல் ஆக, அவர் கையிலிருந்த கட்டுகள் தளர்ந்து வீழ்ந்தன' (நீத 15:14).

சிம்சோனின் பணி வாழ்வில் ஆண்டவரின் ஆவி உடன் வந்து, அவருக்கு வலிமை தருகின்றார். ஆவியாரால் வலுவூட்டப்படுகின்ற சிம்சோன், கழுதையின் தாடை எலும்பைக் கொண்டு ஆயிரம் பெலிஸ்தியரைக் கொன்று போடுகின்றார். இயேசு தன் பணி வாழ்வின் தொடக்கத்தில், தான் ஆற்றுகின்ற உரையில், 'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது. ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்' (லூக் 4:18) என அறிக்கையிடுகின்றார்.

சிம்சோன் ஆண்டவருடைய ஆவியை மீண்டும் மறந்துவிடுகின்றார்.

தன் வாழ்க்கை முழுவதும் ஓய்வுக்காக அலைந்து திரிகின்ற சிம்சோன் தெலீலாவின் மடியில் ஓய்ந்திருக்கின்றார். ஆனால், அதுவே அவருடைய இறுதி ஓய்வின் தொடக்கமாக இருக்கிறது.

விவிலிய ஆசிரியர் இந்நிகழ்வின் சோகத்தைப் பின்வருமாறு பதிவுசெய்கின்றார்:

'அவர் தம் தூக்கத்திலிருந்து விழித்து, 'முன்பு போல் இப்போதும் என்னை விடுவித்துக் கொண்டு வெளியே செல்வேன்' என்று சொன்னார். ஆனால், ஆண்டவர் அவரிடமிருந்து அகன்று விட்டார் என்பதை அவர் உணரவில்லை' (நீத 16:20).

'ஆண்டவர் தன்னிடமிருந்து அகன்று விட்டார்' என்பது, ஆண்டவரின் ஆவி தன்னைவிட்டு அகன்று விட்டது என்பதை அவர் அறியவில்லை. இதைவிட ஒரு மனிதருடைய வாழ்வில் சோகம் இருக்க முடியாது. நம் ஒட்டு, உறவு, நண்பர், நலவிரும்பிகள் நம்மை விட்டு அகன்றாலும் தாங்கிக்கொள்ளலாம். ஆனால், ஆண்டவர் நம்மைவிட்டு அகன்றால் என்ன செய்வது?

இதே போன்ற நிகழ்வு இன்னொரு இடத்திலும் நடக்கிறது. இஸ்ரயேலின் முதல் அரசனாகக் கடவுள் தேர்ந்துகொண்ட சவுலின் வாழ்வில் நடக்கிறது: 'ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது' (காண். 1 சாமு 16:14). சிம்சோனை விட சவுலின் நிலை இன்னும் பரிதாபமாக இருக்கிறது. ஆண்டவரின் ஆவி நீங்கியதோடல்லாமல், தீய ஆவி வந்து அவரைப் பற்றிக்கொள்கிறது.

சிம்சோன் தான் கடவுளுக்கான ஒரு நாசீர் என்பதை மறந்து, நாசீருக்கான மூன்று விதிகளையும் மீறுகின்றார்: (அ) இறந்த சிங்கத்தின் உடலைத் தொடுகின்றார், (ஆ) தேனை உட்கொள்கின்றார், (இ) தன் தலையை மழிக்குமாறு அனுமதிக்கின்றார். இருந்தாலும், ஆண்டவர் தான் தேர்ந்துகொண்டவரைத் தொடர்கிறார்.

'மழிக்கப்பட்ட அவரது தலைமுடி வளரத் தொடங்கியது' (காண். நீத 16:22) எனப் பதிவு செய்கின்றார் ஆசிரியர். நிகழ்வின் இறுதியில், தாகோனின் ஆலயத்தில் மக்கள் கூடியிருந்தபோது, சிம்சோன் ஆண்டவரை நோக்கி, 'என் தலைவராகிய ஆண்டவரே! இந்த முறை மட்டும் என்னை நினைவுகூரும். எனக்கு ஆற்றல் அளியும்' (காண். நீத 16:28) என மன்றாடுகின்றார். ஆண்டவர் அவரை மறக்கவில்லை. சிம்சோன்தான் ஆண்டவரை மறந்துவிட்டார்.

சவுலின் வாழ்விலும் அதே நிலைதான். தன்னிடமிருந்த ஆண்டவரை மறந்துவிடுகிறார் சவுல்.

'தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்' எனச் சொல்கின்ற பவுல், அவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டவை என்று சுட்டிக்காட்டி, ஒன்றைத் தெரிந்துகொள்ளவும் மற்றதை விட்டுவிடவும் அழைக்கின்றார்.

ஒன்றைப் பற்றிக்கொண்டு மற்றதை விடுதல் நம் வாழ்வில் மிக மிக அவசியம்.

சிம்சோனும் சவுலும் இதில் தவறிவிடுகிறார்கள்.

எல்லாவற்றையும் பற்றிக்கொள்ள வேண்டும் என நினைக்கிறது மனித உள்ளம். ஆனால், எல்லாவற்றையும் எல்லா நேரத்திலும் பற்றிக்கொள்தல் நம்மால் இயலாது. ஒன்றை இழந்தால்தான் நான் இன்னொன்றைப் பெற முடியும். அல்லது இன்னொன்றைப் பெறுவதற்காக நான் ஒன்றை இழந்தே ஆக வேண்டும்.

கலாத்திய நகரத் திருஅவையினர் ஒரே நேரத்தில் பரத்தைமை, கெட்ட நடத்தை, காம வெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றையும், அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றையும் பற்றிக்கொள்ள விரும்பினர். ஆனால், இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பதை மறந்துவிட்டனர். காமவெறியும் களியாட்டமும் கொள்பவர் எப்படி அடுத்தவரை அன்பு செய்வார்? பொறாமை கொள்பவர் எப்படி மற்றவர் மேல் கனிவு காட்டுவார்? தன்னடக்கம் இல்லாதவர் தன்னையே பெரியவராகக் கருதி மற்றவர்களுக்கு அடையே பிரிவை வளர்ப்பார் அல்லவா?

ஆக, ஆண்டவருடைய ஆவியார் நம் வாழ்வின் இயக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறார்.

நாம்தான் பல நேரங்களில் அவரை மறந்துவிடுகின்றோம்.

இலவசமாக நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆக்ஸிஜன் போல, திருமுழுக்கின் போது நமக்கு இலவசமாகக் கிடைத்ததால் என்னவோ, ஆவியாரை நாம் மறந்துவிட்டோம்.

நாம் சுவாசிப்பதே காற்று இல்லாத போதுதான் நம் நினைவுக்கு வருகிறது.

நாம் ஊனியல்பின்படி நடக்கும்போதும், அதனால் நம் மனம் அமைதி இழக்கும்போதும்தான், ஆவியார் இல்லாதது நம் நினைவுக்கு வருகிறது. சில நேரங்களில் அப்போதும் ஆவியார் நம் நினைவுக்கு வருவதில்லை.

ஆக்ஸிஜன் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் அது இருக்கின்றது.

ஆவியாரைத் தேடி நாம் அருங்கொடை இல்லங்களுக்கு அலையத் தேவையில்லை. அவர் நம்முடன் நம் சுவாசமாக இருக்கின்றார். அதனால்தான், பவுல், 'தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயல்வோம்' என்கிறார்.

இத்தூய ஆவியாரே நம்மை உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்கிறார் இயேசு இன்றைய நற்செய்தி வாசகத்தில்.

மறந்துபோன நம் சுவாசத்தை நினைவூட்ட வந்த ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போல,

மறந்துபோன நம் ஆன்மிக சுவாசத்தை நினைவூட்ட வருகிறது இன்றைய திருநாள்.

இன்று ஆக்ஸிஜனுக்காக மன்றாடும் நாம், ஆவியாருக்காகவும் மன்றாடுவோம்.

திருப்பாடல் ஆசிரியர் போல,

'ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

... ... ...

நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.

உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்படுகின்றன!' (திபா 104).

இன்று பெந்தகோஸ்தே பெருவிழாவில் இறங்கி வருகின்ற தூய ஆவியார், நம் இந்தியத் திருநாட்டின் முகத்தைப் புதுப்பிப்பாராக!

நம் அன்புக்குரியவர்களின் முகங்களிலிருந்து ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் விரைவில் அகலவும், அனைவரின் முகங்களும் ஆவியாரால் புதுப்பிக்கபடவும் மன்றாடுவோம்.

சுவாசிப்பது வேண்டுமானால் நாமாக இருக்கலாம். ஆனால், சுவாசம் அவரே!

'இறைவா! என்று திரும்பும் எங்கள் இயல்பு வாழ்க்கை?

என்று காண்போம் நாங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை?

பார்த்துப் பார்த்துப் பழகிய உறவுகளை

பாராத நிலைக்குத் தள்ளியது ஏனோ?

காகிதப் பூ எனக் கருதிப் பக்குவமாய் அன்பு செய்த எம் பெற்றோரை,

உடன் பிறந்தோரை, பிள்ளைகளை, கணவர்களை, மனைவியரை,

பிளாஸ்டிக் பைகளில் அள்ளிக் கொண்டு போடும் அவல நிலை ஏனோ?

எல்லாரும் கைகளை விரித்த நிலையில்,

எங்கள் கரங்கள் இன்று உம்மை நோக்கி!'

புதிய மொழிகள் பேச வேண்டாம் நாங்கள்!

எங்கள் மொழி பேச எங்கள் முகக்கவசங்களை அகற்ற எங்களுக்கு அருளும்!


Friday, May 21, 2021

இவருக்கு என்ன ஆகும்?

இன்றைய (22 மே 2021) நற்செய்தி (யோவா 21:20-25)

இவருக்கு என்ன ஆகும்?

யோவான் நற்செய்தியின் இறுதிப் பகுதிக்கும், பாஸ்கா காலத்தின் இறுதி நாளுக்கும் வந்துவிட்டோம். யோவான் தன் நற்செய்தியை மிக அழகாக நிறைவு செய்கிறார்: 'இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன்.'

இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியமா? அல்லது நேரிடையான கூற்றா?

இறையனுபவம் அல்லது இயேசு அனுபவம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவம். ஆக, உண்மையாகவே அனைத்து அனுபவங்களும் எழுதப்பட்டால் இந்த உலகமே கொள்ளாது.

யோவான் ஓர் அழகான நிகழ்வோடு நிறைவு செய்கிறார். அது அவரைப் பற்றியதே. அதாவது, இயேசு அன்பு செய்த சீடர் பற்றியது. 

பேதுரு இயேசுவிடம் அவரைச் சுட்டிக்காட்டி, 'இவருக்கு என்ன ஆகும்?' அல்லது 'இவருக்கு என்ன நிகழும்?' எனக் கேட்கின்றார்.

இயேசுவோ, 'உனக்கு என்ன?' என்று கேட்டுவிட்டு, 'என்னைப் பின்தொடர்' என்கிறார்.

இந்த நிகழ்வின் பொருள் என்ன?

இது பேதுருவின் ஆளுமை பற்றியது அல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரையும் பற்றியது.

அதாவது, இறையனுபவம் பெறும்போது நம்மில் எழுகின்ற ஒரு கேள்வி என்னவென்றால், 'எனக்கு அனுபவம் கிடைத்துவிட்டது. நான் இறைவனைப் பின்பற்றுகிறேன். ஆனால், இவருக்கு என்ன ஆகும்?' என்று அடுத்திருப்பவரோடு ஒப்பிடும் மனநிலை.

என் நம்பிக்கைப் போராட்டத்தில் நான் கடவுளிடம் அடிக்கடி கேட்டதும் இதுதான். 'இந்து சகோதரருக்கு என்ன ஆகும்?' 'இசுலாம் சகோதரிக்கு என்ன ஆகும்?' 'கடவுளை நம்பாத ஒருவருக்கு என்ன ஆகும்?' 'திருப்பலிக்கு வராதவருக்கு என்ன ஆகும்?' 'செபமாலை செபிக்காதவருக்கு என்ன ஆகும்?' 

இந்தக் கேள்விகள் இரண்டு காரணங்களால் எழுகின்றன:

ஒன்று, இயேசுவைப் பின்பற்றுவதில் எனக்குள்ள தயக்கத்தால்.

இரண்டு, என்னை அவர்களோடு ஒப்பிட்டு நான் அவர்களைவிட பெரியவன் என்று இறுமாப்பு கொள்வதால்.

இறைவனைப் பின்பற்றுவதில், இவை இரண்டுமே தவறு. தயக்கமும், இறுமாப்பும் சீடத்துவத்தின் பெரிய எதிரிகள்.

பேதுருவுக்கும் இதே தயக்கமும் இறுமாப்பும் இருந்திருக்கலாம். பேதுருவை நெறிப்படுத்துகின்ற இயேசு, 'உனக்கு என்ன? என்னைப் பின்தொடர்!' என்கிறார்.

இன்று நாம் இறையனுபவம் பெற்றுவிட்டால், நம் கண்கள் இயேசுவின்மீது மட்டும் இருக்கட்டும். அப்போது தயக்கமும் இறுமாப்பும் மறைந்துவிடும்.

இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் பணிகள் நூல் நிறைவு பெறுகிறது. பவுல் உரோமைக்குச் சென்றவுடன் தன் நூலை நிறைவு செய்கின்றார் லூக்கா. ஏனெனில், அன்றைய கருத்துப்படி, உலகின் எல்லை என்பது உரோமை. ஆக, பவுலுடன் இணைந்து நற்செய்தி உலகின் எல்லையை அடைந்துவிடுகிறது. 

'உரோமையில் தனி வீட்டில் தங்கியிருக்க பவுல் அனுமதி பெற்றுக்கொண்டார்' என்று எழுதுகின்றார் பவுல்.

பவுலின் ஆளுமை நம்மை வியக்க வைக்கிறது. அவர் என்னதான் சிறைப்பட்டவராக இருந்தாலும், தன் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும், தான் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கின்றார். இது ஒரு முக்கியமான வாழ்க்கைப் பாடம். பல நேரங்களில் நம் வாழ்க்கையை நாம் பிறருக்காக வாழ்கின்றோம். மற்றவர்களுக்காக, அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்துக்கொண்டே நம் வாழ்க்கையை நாம் அவர்களின் கைகளில் கொடுத்துவிடுகிறோம். தனக்கு எது தேவை என்பதை அறிந்தவராகவும், தான் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்பவராகவும் இருக்கிறார் பவுல்.

மேலும், பவுலின் பழகும் திறனுக்கும் இந்நிகழ்வு சான்றாக அமைகிறது. மிகவும் எளிதாகவும் இயல்பாகவும் மற்றவர்களுடன் பழகுகின்றா.

பவுல் இரண்டு ஆண்டுகள் வாடகை வீட்டில் இருந்ததாகப் பதிவு செய்கிறார் லூக்கா.

அங்கே பவுல் ஞானம் பெறுகிறார்.

தன்னை அழிக்கத் துடிக்க நினைத்த யூதர்களை அழைத்துப் பேசுகிறார்.

'யூதர்களை எதிரிகள் என்றும், உறுப்பு சிதைப்பவர்கள் என்றும், வயிறே அவர்கள் தெய்வம் என்றும், மானக்கேடே அவர்களுடைய வாழ்க்கை' என்றும் சாபமிட்டவர், அவர்களை வரவழைத்துப் பேசுகின்றார். அதாவது, தன் வாழ்நாள் குறுகியது. இனி சண்டையிட்டு என்ன பயன்? என எண்ணுகின்ற பவுல், அவர்களை அழைத்து மிகவும் சாந்தமாக, 'என் இனத்தாருக்கு எதிரான குற்றச்சாட்டு எதுவும் என்னிடமில்லை. இதனால்தான் நான் உங்களைக் கண்டு பேச அழைத்தேன். நம்பிக்கையின் பொருட்டு நான் விலங்கிடப்பட்டுள்ளேன்' என்கிறார். அவருடைய பேச்சில் வெறுப்போ, கோபமோ இல்லை.

வாடகை வீடு தந்த வாழ்க்கைப்பாடம்தான் இது.

வாடகை வீட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பு நம்மை அடுத்தவர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொள்ள நம்மைப் பழக்கும். 'இது நிரந்தரமல்ல' என்ற உணர்வு இருப்பதால் நாம் யாரையும் கண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டோம்.

'ஒன்றும் ஒன்றும் ஐந்து என்று என்னிடம் யாராவது சொன்னால், அப்படியா என்று கேட்டுவிட்டு நகரும் மனப்பான்மை' தருவதுதான் வாடகை வீடு. 'இல்லை. அது இரண்டு' என்று வாதிடுவது நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்கும் செயலாகும்.

நிரந்தரமான இறைவனைப் போல, நிரந்தரமற்ற வாடகை வீடும் நமக்கு வாழ்க்கைப்பாடங்களைக் கற்றுத்தரும் - பவுலுக்குப் போல!

வாழ்வின் நிலையாமையை அறிந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை மட்டுமே வாழ்வர். அதை இனிதாக வாழ்வர். 'இவருக்கு என்ன ஆகும்?' 'அவருக்கு என்ன ஆகும்?' என்னும் பேராவலும், 'சண்டை சச்சரவும், கோபமும், பகைமை உணர்வும்' அவரிடம் இருக்காது.


Thursday, May 20, 2021

அன்பு செய்கிறாயா?

இன்றைய (21 மே 2021) நற்செய்தி (யோவா 21:15-19)

அன்பு செய்கிறாயா?

பாஸ்கா காலம் நிறைவுற இன்னும் ஓரிரு நாள்களே இருக்கின்ற வேளையில், யோவான் நற்செய்தியின் இறுதிப் பிரிவுகளிலிருந்து நாம் இன்றும் நாளையும் வாசிக்கின்றோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?' என்று இயேசு பேதுருவிடம் மூன்று முறை கேட்டல்.

ஆ. பேதுருவின் இறுதி நாள்கள் பற்றிய முன்னறிவிப்பு

இ. பேதுருவின் இரண்டாம் அழைப்பு

அ. 'என்னை நீ அன்பு செய்கிறாயா?'

கலிலேயக் கடல் அருகே சீடர்கள் உணவருந்தி முடித்தவுடன், மற்றவர்கள் சற்று தூக்கக் கலக்கமாக அங்கே தூங்கிப் போக, பேதுருவை தனியாக அழைத்துச் செல்கின்ற இயேசு, 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களை விட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என மூன்றுமுறை கேட்கின்றார். இந்த நிகழ்வு யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இது ஏன் எழுதப்பட்டது? பேதுரு இயேசுவை மூன்று முறை மறுதலிக்கின்றார். இப்போது, அவர் திருஅவையின் தலைவராக இருப்பது தொடக்கத்திருஅவைக்கு நெருடலாக இருக்கும். ஆண்டவரை மூன்றுமுறை மறுதலித்த ஒருவர் எப்படி திருஅவையின் தலைவராக இருக்க முடியும்? என்ற கேள்வி தொடக்கத் திருஅவையில் எழுந்திருக்கலாம். இந்தக் கேள்விக்கு விடை தரும் விதமாக, மூன்று முறை இயேசுவை பேதுரு மற்ற எல்லாரையும் விட அதிகமாக அன்பு செய்வதாக பதிவு செய்கின்றார். இங்கே, 'அன்பு' என்ற வார்த்தை, கிரேக்கத்தில் இரண்டு வார்த்தைகளாக உள்ளது: முதல் மற்றும் இரண்டாம் கேள்வியில் இயேசு, 'அகாப்பாவோ' (தன்னலமற்ற அன்பு) என்ற வினைச்சொல்லையும், மூன்றாம் கேள்வியில், 'ஃபிலயோ' (நட்பு அல்லது உறவுசார் அன்பு) என்ற வினைச்சொல்லையும் பயன்படுத்துகின்றார். மூன்றாம் கேள்வியில், இயேசு, பேதுரு தனக்குக் காட்டும் இயல்பான நட்பு அல்லது அன்பு பற்றி விசாரிக்கின்றார். மூன்றாம் கேள்விக்கு விடை அளிக்கின்ற பேதுரு, 'ஆண்டவரே! உமக்கு எல்லாம் தெரியுமே!' என்று சரணடைகின்றார். இந்த நட்பில்தான் நான் உம்மை மறுதலித்தேனே என்று தன்னுடைய வலுவின்மையையும் ஏற்றுக்கொள்கிறார் பேதுரு.

ஆ. நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

இரண்டாவதாக, பேதுருவின் இறுதி நாள்கள் எப்படி இருக்கும் என்பதை இயேசு அவருக்கு முன்மொழிகின்றார்: 'உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.' இது பேதுருவின் இறுதிநாள்கள் மட்டுமல்ல. மாறாக, நம் ஒவ்வொருவரின் இறுதிநாள்களும் கூட. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும். 'என்னால் இது இயலாது' என்று தன் வலுவின்மையை ஏற்றுக்கொள்ளும் ஒருவர்தான் கைகளை விரித்துக் கொடுக்க முடியும்.

இந்த முதிர்ச்சியின் அடையாளங்கள் எவை? அண்மையில் நான் கண்ட ஒரு போஸ்டரில் அவை குறிக்கப்பட்டிருந்தன:

முதிர்ச்சியின் அடையாளங்கள்: சின்ன சின்ன விவாதங்கள் உன்னை காயப்படுத்துவதில்லை. வெளியில் உலாவச் செல்வதைவிட தூங்குவது சிறந்தது எனத் தோன்றும். நீ அதிகமாக மன்னிப்பாய். நீ திறந்த உள்ளத்துடன் இருப்பாய். வேற்றுமைகளை மதிப்பாய். அன்பை வலுக்கட்டாயமாக வரவைக்க மாட்டாய். மனம் வலித்தாலும் பொறுத்துக்கொள்வாய். யாரையும் எளிதாகத் தீர்ப்பிட மாட்டாய். மடத்தனமான வாய்ச்சண்டையை விட மௌனம் சிறந்ததென்பாய். உன் மகிழ்ச்சி மற்றவர்களிடமல்ல, உன்னிடம் தான் இருக்கிறது எனக் கண்டுகொள்வாய். நீதான் சரி என்று உன்னை நிரூபிக்க முயற்சிக்க மாட்டாய். உன்னை மற்றவர்களோடு ஒப்பீடு செய்ய மாட்டாய். தேவைக்கும் ஆசைக்குமான வித்தியாசம் அறிவாய். ஒவ்வொருவரும் அவரவருடைய பார்வையில் சரி என ஏற்றுக்கொள்வாய்.

இவை எல்லாவற்றையும் ஒற்றை வாக்கியத்தில், 'கைகளை விரித்துக் கொடுத்தல்' என்று சொல்லிவிடலாம்.

இ. 'என்னைப் பின்தொடர்'

இறுதியாக, இயேசு, 'என்னைப் பின்தொடர்' என்று பேதுருவை அழைக்கின்றார். முதல் சீடர்களை ஒத்தமைவு நற்செய்திகளில் அழைத்த அதே வார்த்தையைக் கொண்டு இயேசு அழைக்கின்றார். பின்தொடர்தல் என்பது பேதுரு இனி தன் வேலைகளை முற்றிலும் தூக்கி எறிந்துவிட்டு, இயேசுவின் வேலைகளைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல. இறக்கும் வரையிலும்!

முதல் வாசகத்தில், ஒரு வேடிக்கையான பகுதியை நாம் வாசிக்கின்றோம்.

பவுல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அந்நேரத்தில் பெஸ்துவைக் காண அகிரிப்பா அரசன் வருகின்றார். மாலை நேரத்தில் சாப்பிட்டு விட்டு அமரும் நேரம் அவர்களுக்கு 'போர் அடிக்கிறது.' அந்த நேரத்தில், பவுலைக் கூப்பிட்டு உரையாடச் சொல்கிறார்கள். பவுலின் உரையைப் பற்றிச் சொல்கின்ற பெஸ்து, 'இறந்துபோன இயேசு என்னும் ஒருவரைப் பற்றியும் அவர்கள் பேசினார்கள். இந்த இயேசு உயிரோடு இருப்பதாகப் பவுல் சாதித்தார்' என்கிறார்.

பவுல் என்னதான் இயேசுவே இறைமகன் என அறிக்கையிட்டாலும், உரோமையருக்கு, அவர் 'வெறும் ஒருவராகத்தான்' தெரிகிறார்.

நாமும் வாழ்வில் பல சாதனைகள் செய்திருக்கலாம். அல்லது செய்தது போல நினைத்திருக்கலாம். ஆனால், நம்மைப் பற்றி அறியாதவர்களுக்கு நாம் வெறும் எண்ணிக்கையே.

இந்த எண்ணம் இருந்தால் போதும்! நாம் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருப்போம்.


Wednesday, May 19, 2021

விவேகமும் தொடர்பணியும்

இன்றைய (20 மே 2021) முதல் வாசகம் (திப 22:30, 23:6-11)

விவேகமும் தொடர்பணியும்

பவுல் எருசலேமின் தலைமைச் சங்கத்தால் விசாரிக்கப்படுவதை இன்றைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது. 

சங்கத்திற்குள் நுழைகின்ற பவுல், அங்கே இருக்கின்ற சூழலைச் சட்டென்று புரிந்துகொள்கிறார். அங்கிருப்பவர்கள் இரு குழுவினராக இருக்கின்றனர். ஒரு குழுவினர் பரிசேயர், இன்னொரு குழுவினர் சதுசேயர். இவர்கள் இருவரும் யூதர்கள் என்றாலும், நம்பிக்கை அடிப்படையில் இரு குழுவினருக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இந்த வேறுபாட்டைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறார் பவுல். 

பரிசேயர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சதுசேயர்கள் அரசியல் பலத்தில் சிறந்தவர்கள்.

பரிசேயர்களைத் தன்னோடு சேர்த்துக்கொள்ளும் நோக்கில், 'நான் ஒரு பரிசேயன்...' என்று தன்னுடைய வாதத்தைத் தொடங்குகிறார். உடனே அங்கே மோதல் உருவாகிறது. ஆக, பவுல் விசாரிப்பதற்காக அழைத்துவரப்பட்ட காரணம் ஒன்று, ஆனால், இங்கே நடப்பது வேறு. 

இதை பவுலின் விவேகம் என்று சொல்வதா? அல்லது அவருடைய சந்தர்ப்பவாதம் என்று சொல்வதா?

ஒருவரின் விவேகம் இன்னொருவரின் சந்தர்ப்பவாதம்.

பவுலின் இச்செயல் நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

'ஒருவருக்கு எது வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.'

எடுத்துக்காட்டாக, நாம் ரின் சோப் வாங்க கடைக்குப் போறோம். 'ரின் சோப் இருக்கா?' எனக் கேட்கின்றோம். ஆனால், கடைக்காரர், 'ஸர்ஃப் எக்ஸெ;தான் நல்லா இருக்கும்' அல்லது 'இந்தாங்க ஏரியல்' என்று கொடுத்தால், நாம் அந்தக் கடைக்கு மீண்டும் செல்ல மாட்டோம். ஏனெனில், 'அவர் நான் விரும்புவதை அல்ல, தான் வைத்திருப்பதையே கொடுக்கிறார்.' 

பவுலிடம் கொடுப்பதற்கு நிறைய இருந்தது. இயேசுவைப் பற்றி, தன் பயணம் பற்றி, தன் நம்பிக்கை பற்றி என அவர் நிறைய பேசியிருக்க முடியும். ஆனால், அது தலைமைச் சங்கத்தின் தேவை இல்லை என்பதை உடனடியாக உணர்கின்றார். அவர்களுக்குத் தேவையானது எல்லாம், 'நீ யார்? அல்லது நீ யார் பக்கம்?' என்ற கேள்விக்கான விடைதான். பவுல் அதை அளிக்கின்றார்.

இதுதான் வெற்றியின் இரகசியம்.

இரண்டு விடயங்கள்,

ஒன்று, அடுத்தவர் நம்மிடம் எதையும் கேட்காமல் அதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

இரண்டு, அடுத்தவர் கேட்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்.

பவுலின் விவேகம் அவரைக் காப்பாற்றினாலும், தலைமைச் சங்கம் அவரைச் சிறையில் அடைக்கின்றது. சிறை அனுபவம் அவருக்கு இறையனுபவமாக மாறுகின்றது. 'நீ உரோமையிலும் எனக்குச் சான்று பகர வேண்டும்' என அவரை உறுதிப்படுத்துகிறார் இயேசு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களுக்காக இறைவேண்டல் செய்கிறார். 'எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!' என்பதே அவருடைய இறைவேண்டலாக இருக்கிறது. 'ஒன்றாக இருத்தல்' என்பது இணைந்திருத்தலைக் குறிக்கிறது. யோவான் நற்செய்தியைப் பொருத்தவரையில், 'இணைந்திருத்தல்' மட்டுமே 'கனி தருதலுக்கான வழி.'

பவுல் தன் வாழ்வின் ஒவ்வொரு சூழலிலும் இறைவனோடு இணைந்திருந்தார். அதன் வழியாகக் கனி தந்தார்.

நாம் பெறுகின்ற அழைப்பும் இதுவே.


Tuesday, May 18, 2021

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய (19 மே 2021) நற்செய்தி (யோவா 17:11-19)

கடவுளுக்கு அர்ப்பணமாக்குதல்

இன்றைய முதல் வாசகத்தில் பவுல் எபேசின் மூப்பர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும், நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் சீடர்களுக்கு வழங்கும் பிரியாவிடையும் தொடர்கின்றது. இரண்டு தொடர்நிகழ்வுகளும் இரண்டு புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன.

'உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை. ... உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன்' என்கிறார் இயேசு.

முதலில், சீடர்களை அர்ப்பணம் ஆக்குமாறு கடவுளை வேண்டுகிறார்.

இரண்டு, தானே அர்ப்பணம் ஆகின்றார்.

'அர்ப்பணம் செய்தல்' அல்லது 'அர்ப்பணித்தல்' என்பது நாம் அடிக்கடிப் பயன்படுத்தும் வார்த்தை அல்ல. மாறாக, ஆலய அர்ப்பணிப்பு, அருள்பணியாளர்கள் அர்ப்பணிப்பு போன்ற நிகழ்வுகளுக்கு மட்டுமே இதை நாம் ஒதுக்கி வைக்கின்றோம். 'இறைவனுக்கென ஒன்றை ஒதுக்கி வைத்தலே' அர்ப்பணம் செய்தல் என்று ஓரளவுக்கு நாம் புரிந்துகொள்ளலாம். இதை இறைவன்தான் செய்ய முடியும். அவர் தனக்கென மனிதர்களையும் இடங்களையும் அர்ப்பணம் ஆக்கிக்கொள்கின்றார். இறைவனுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட ஒன்று மற்ற விடயங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், அதன் தூய்மை கெடுவதாகக் கருதப்பட்டு அந்த இடம் மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறது. ஆக, அர்ப்பணத்தில் நிறைய பொறுப்புணர்வு உண்டு.

மேலும், இறைவனுக்கென ஒருவர் அர்ப்பணம் ஆகும்போது அவர் அனைவருக்கும் பொதுவானவர் ஆகின்றார். அனைவரையும் இறைவனுடன் இணைப்பவராக மாறுகின்றார்.

ஆகையால்தான் இன்றைய முதல் வாசகத்தில், 'நான் உங்களைக் கடவுளிடம் ஒப்படைக்கிறேன்' என்கிறார் பவுல். அதாவது, இப்போது பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார். இனி அவருக்கும் அவர்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இருக்காது. ஆனால், பவுல் எங்கிருந்தாலும் கடவுளோடு இணைந்திருப்பார். அந்தக் கடவுளோடு அவர்களையும் இணைத்துவிட்டால் கடவுள் வழியாக அவர் அனைவரோடும் இணைந்திருக்க முடியும்.

இதையே புனித அகுஸ்தினாரும், 'நாம் அன்பு செய்கின்ற அனைவரையும் இறைவனில் அன்பு செய்தால் அந்த அன்பு முடிவற்ற அன்பாக இருக்கும், ஏனெனில் இறைவன் முடிவில்லாதவர்' என்கிறார்.

ஆக, உண்மை வழியாக, அதாவது நம் இருத்தல் வழியாக, நம்மையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்தல் முதல் பாடம்.

இரண்டாவதாக, 'பெற்றுக்கொள்வதை விடக் கொடுத்தலே பேறுடைமை' என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் பவுல். ஆண்டவர் இப்படி எங்கும் குறிப்பிட்டதாக நற்செய்தி நூல்களில் பதிவு இல்லை. அல்லது இவ்வார்த்தைகள் வாய்மொழிப் பாரம்பரியத்தில் ஆண்டவரின் வார்த்தைகளாக வலம் வந்திருக்கலாம்.

வாழ்க்கையின் இரண்டு நிலைகளை நாம் பார்க்கிறோம்: 'பெற்றுக்கொள்தல்' 'கொடுத்தல்.'

கொடுத்தல்தான் முதன்மையானதாக, மேன்மையானதாக இருக்கின்றது. இதைப் பவுல், 'உழைப்பு' பற்றிய பகுதியில் குறிப்பிடுகின்றார். உழைக்கின்ற போது நாம் உண்மையில் நம்மையே கொடுக்கின்றோம்.

இறைவனுக்கு அர்ப்பணம் செய்து, அந்த அர்ப்பணத்தை நம் உழைப்பின் வழியாகக் கொடுத்தல் நலம்.

Monday, May 17, 2021

இருக்கப் போவதில்லை

இன்றைய (18 மே 2021) நற்செய்தி (யோவா 17:1-11)

இருக்கப் போவதில்லை

இன்றைய முதல் வாசகத்தில், பவுல் எபேசு நகர மூப்பர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'ஆனால் இனிமேல் உங்களுள் எவரும் என் முகத்தைப் பார்க்கப்போவதில்லை என்று நான் அறிவேன்'

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார்: 'இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை. அவர்கள் உலகில் இருப்பார்கள். நான் உம்மிடம் இருக்கிறேன்'

ஆங்கிலத்தில், 'Don't overstay where you are welcome!' என்ற ஒரு பழமொழி உண்டு. அதாவது, 'அழைக்கப்பட்ட இடத்தில் நீண்ட நேரம் தங்காதே!' அல்லது 'எப்போது வெளியேற வேண்டும் என்பதை அறிந்தவனாக இரு!' (The secret to a long life is knowing when it's time to go.)

சிறிய எடுத்துக்காட்டை எடுத்துக்கொள்வோம். என்னை ஒரு பிறந்தநாள் விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள். விருந்துக்குச் செல்லும் நான் அங்கே எல்லாரோடும் அமர்ந்து உரையாடுகின்றேன். என் உரையாடல் அவர்களுக்குப் பிடிக்கிறது என்று உணர்கின்ற நான் இன்னும் கொஞ்ச நேரம் உரையாடுகின்றேன். ஆனால், என்ன நடக்கிறது? நான் மட்டும் பேசிக்கொண்டே இருக்க மற்றவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பிக்கிறார்கள். என் பேச்சு நீடித்துக்கொண்டே போனால் அங்கே அது மதிப்பை இழந்துவிடுகிறது. எப்போது நிறுத்த வேண்டும் என்பதை நான் அறிந்தால் மட்டுமே என் பேச்சு மற்றவர்களைக் கவரும்.

இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். என் சாப்பாட்டுத் தட்டிலிருந்து என் கையை எப்போது அப்புறப்படுத்த வேண்டும், என் படுக்கையிலிருந்து எப்போது நான் எழ வேண்டும் என எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும்.

சிலரை நாம் பார்த்திருப்போம். ஒரே வேலையில் பல ஆண்டுகள் இருப்பார்கள். ஆனால், அவர்கள் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. அவர்களிடம், 'இந்த வேலை உன்னை எங்கும் கொண்டுபோகப் போவதில்லை. நீ வேற வேலை பார்க்கலாமே!' என்று சொன்னால், அவர்கள், 'இல்லை! நான் இதை நிறைய நாள் செய்கிறேனே!' என்பார். அதாவது, அவர் தான் எப்போது அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதை மறந்துவிட்டார். அல்லது அவர் வெளியேற மறுக்கிறார்.

சில உறவுநிலைகள் அப்படித்தான். தொடங்கி நாளிலிருந்து நாம் ஒரே இடத்தில் இருந்துகொண்டே இருப்போம். ஓடாத பேருந்தில் ஏறி டிக்கெட் வாங்குவது போல. அந்தப் பேருந்து ஓடாது என்று தெரிந்தும் நாம் டிக்கெட் வாங்கிக்கொண்டே இருப்போம். ஏனெனில், அந்தப் பேருந்தில் நாம் நிறைய நாள்கள் இருந்துவிட்டோம். அப்படியே இருப்பது நமக்கு இனிமையாக இருக்கிறது. நாம் பேருந்தை விட்டு எந்த நேரத்தில் இறங்க வேண்டும் என்பதை நாம் மறந்தால் பேருந்துக்கு நாம் சுமையாக மாறிவிடுவோம். பேருந்து நமக்கு ஆபத்தாக மாறிவிடும்.

சிறிய விடயம் தொடங்கி பெரிய விடயம் வரை, 'எந்நேரத்தில் நான் வெளியேற வேண்டும்' என்பதை அறிந்தவனாக இருக்க வேண்டும்.

பவுல் எபேசில் நற்செய்தியை அறிவிக்கிறார். எல்லாம் இனிமையாக இருக்கிறது. மூப்பர்களை நியமிக்கிறார். மக்களைச் சந்தித்து உரையாற்றுகிறார். 'இங்கு எல்லாம் நன்றாக இருக்கிறதே! இங்கேயே இருக்கலாமே!' என்று அவர் முடிவெடுத்து அங்கேயே தங்கியிருந்தால் என்ன ஆகும்? அவருடைய உடனிருப்பை இரசித்தவர்கள் சிறிது நாள்களில் அவரை வெறுக்கத் தொடங்கியிருப்பார்கள். அவரால் புதிய தலைவர்களை உருவாக்க இயலாமல் போய்விடும். மக்களிடையே பிரிவினைகள் தோன்றும். மற்ற இடங்களில் பணிகள் பாதிக்கப்படும். ஆகையால்தான், கண்ணீர் பெருக்கெடுத்து ஓட வேண்டிய நிலை வந்தாலும், 'நான் வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது' என உணர்ந்து புறப்படுகின்றார் பவுல்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன் திருத்தூதர்களிடமிருந்து விடைபெறுகின்றார். விருந்திலிருந்து எழ வேண்டிய நேரம் எது என்பதை இயேசு சரியாக அறிந்திருந்தார். ஆகையால்தான், மிக எளிதாக விடைபெறுகின்றார்.

'எப்போது வெளியேற வேண்டும்' என்பதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்?

(அ) தெளிவான நோக்கம்

இலக்கு அல்லது நோக்கம் தெளிவாக இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, 'மூன்று மணிக்கு நான் வலைப்பதிவு எழுதுவேன்' என்ற நோக்கம் தெளிவாக இருந்தால் என் உடல் 2:50 மணிக்கு கட்டிலிலிருந்து எழுந்துவிடுகிறது. ஆனால், 'மூன்று மணிக்கு என்ன செய்வது?' என்ற குழப்பத்தோடு நான் குட்டித்தூக்கம் போட்டால், எழும்போது மணி நான்கைக் கடந்து விடுகிறது. தெளிவான நோக்கம் இருந்தால் எழுதல் மிகவும் இயல்பு. இரவு 9 மணிக்கு நான் என் அறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் நான் 8:45 மணிக்கு விருந்திலிருந்து விடைபெற்று வெளியேறுவேன்.

(ஆ) என் வாழ்க்கை என் கையில்

தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்கள் கைகளில் கொடுத்து வாழச் சொல்பவர்களால் 'எளிதில் எதிலிருந்தும் வெளியேற முடியாது.' ஏனெனில், அவர்கள் வாழ்க்கை அவர்கள் கைகளில் இல்லை. ஓர் ஆசிரியை, தன்னைக் கொடுமையாக நடத்துகின்ற தலைமையாசிரியையின் கைகளில் தன் வாழ்க்கையைக் கொடுத்துவிட்டால், அவரால் அந்தப் பள்ளியிலிருந்து வெளியேற முடியாது. தான் வெளியேறினால் தலைமையாசிரியை கோபப்படுவார், அல்லது வருத்தப்படுவார் என்று அங்கேயே இருந்துகொண்டே இருப்பார். மாறாக, 'என் வாழ்க்கை என் கையில்' என்று நினைக்கத் தொடங்கும் மறு நிமிடமே அவர் வெளியேறுவதற்கான முயற்சிகள் எடுப்பார்.

(இ) 'வேண்டாம்!' என்று சொல்லும் துணிவு

'இது போதும்! இதற்கு மேல் வேண்டாம்!' என்று எனக்கு நானே வேண்டாம் என்று சொல்லும் பக்குவம் வேண்டாம். ஒன்றை நோக்கி நான், 'வேண்டாம்!' என்று சொன்னால்தான் இன்னொன்றில் வளர முடியும். எடுத்துக்காட்டாக, 'சர்க்கரை எனக்கு வேண்டாம்' என்று சொன்னால்தான், என் உடல் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரையும் வேண்டும், உடல்நோயும் குறைய வேண்டும் என்றால், அங்கே நான் சர்க்கரை முன் என் துணிவை இழந்தவன் ஆகிறேன்.

இன்று நான் எப்போது வெளியேற வேண்டும் என்பதை அறிந்தவனாக இருக்க முயற்சி செய்கிறேனா?

அறிந்தவுடன் வெளியேறுகிறேனா?

பிரியாவிடை கொடுத்தலும் பெறுதலும் இனிமையே! ஏனெனில், அங்கே புதிய பயணம் தொடங்குகிறது! புதிய பாதை பிறக்கிறது!


Sunday, May 16, 2021

துன்பம் உண்டு

இன்றைய (17 மே 2021) நற்செய்தி (யோவா 16:29-33)

துன்பம் உண்டு

நேற்றைய நாளில் நாம் ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடினோம். இந்த வார வாசகங்கள் அனைத்தும் விண்ணேற்றம் அடைந்த ஆண்டவர் நமக்கு அனுப்பப் போகின்ற தூய ஆவியார் பற்றிப் பேசுகின்றன.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 19:1-8), மலைப்பாங்கான பகுதியாகத் திகழ்ந்த எபேசு நகரத்துக்கு வருகின்றனர் புனித பவுலும் அவருடைய உடனுழைப்பாளர்களும். சீடர்களைக் கண்டு, 'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?' எனக் கேட்க, அவர்களோ, 'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே' என்கின்றனர். பல நேரங்களில், உறுதிப்பூசுதல் அருளடையாளத்தின் போதும், அருங்கொடை இயக்க இறைவேண்டல்களின்போது மட்டுமே நாமும் தூய ஆவியார் பற்றி நினைக்கின்றோம். இவர் ஒரு மறக்கப்பட்ட மனிதராகவே இன்றும் நம்மோடு இருக்கின்றார்.

நற்செய்தி வாசகத்தில், இயேசு தன்னுடைய பிரியாவிடை உரையில், 'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு. எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.

'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'

இப்படிச் சொல்லும் ஒருவரிடம் சீடர்கள் எப்படி ஒட்டிக்கொண்டு நின்றார்கள்.

நம் உடலும் உள்ளமும் இயல்பாகவே துன்பத்தையும் துன்பம் சார்ந்த காரணிகளையும் வெறுக்கிறது. அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. யாராவது ஒருவர் நம்மிடம், 'என்னோடு நீ இருந்தால் உனக்குத் துன்பம் உண்டு' என்று சொல்கிறார் என வைத்துக்கொள்வோம். நாம் அவரிடமிருந்து அந்நொடியே ஓடிவிட மாட்டாமோ? துன்பம் இருக்கின்ற இடத்தில் நமக்கென்ன வேலை?

காரல் மார்க்ஸ் அவர்கள், மதம் அல்லது சமயத்தை ஒரு போதைப் பொருள் என அழைத்தார்:

'சமயம் என்பது ஒடுக்கப்பட்ட படைப்பின் பரிதாப ஏக்கம்,

இதயமற்ற உலகத்தின் இதயம்,

ஆன்மா இல்லாத நிலையின் ஆன்மா,

மக்களின் அபின் அல்லது போதை'

ஆனால், இயேசுவின் சொற்கள் இதற்கு முரணாக இருக்கின்றன. 'உங்களுக்குத் துன்பம் இருக்கும்' என்று சொல்லும் இயேசு, 'உங்கள் துன்பத்தை மறக்க போதைப் பொருள் தருகிறேன்' என்று சொல்லவில்லையே?

ஆக, நம் கிறிஸ்தவ சமயம் துன்பத்திற்குப் போதை ஊட்டுகின்ற சமயம் அல்ல. மாறாக, துன்பத்தைக் கொண்டாடுகின்ற சமயம்.

துன்பத்தைக் கொண்டாட முடியுமா?

இன்று நாம் யூட்யூபைத் திறந்தால் அங்கே நிறைய உளவியல் அறிஞர்களும், ஆன்மிகக் கருத்துரையாளர்களும், 'மகிழ்ச்சியை அடைவது எப்படி?' 'துன்பத்தைக் களைவது எப்படி?' 'நேர்முகமான எண்ணத்தை வளர்ப்பது எப்படி?' 'எல்லா நிலைகளிலும் நேர்முகமான மனநிலை கொண்டிருப்பது எப்படி?' என்று தங்கள் கருத்துகளை வழங்குகின்றனர், அல்லது விற்கின்றனர்.

ஆனால், மகிழ்ச்சியை அடைவது நம் நோக்கம் அல்ல. மகிழ்ச்சி மட்டும்தான் நிரந்தரமா? ஏன் நான் எப்போதும் நேர்முகமாக எண்ணம் மட்டுமே கொண்டிருக்க வேண்டும்? எதிர்மறை எண்ணம் என் மனத்தில் இருந்தால் என்ன? 'தனிமையாக நான் உணர்கிறேன்' என்றால், 'நான் இப்போது தனிமையாக உணர்கிறேன்' என்று என் எதிர்மறையான எண்ணத்தை நான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, 'இல்லை! நான் இப்போது தனியாக இல்லை. என்னைச் சுற்றி என் நண்பர்கள் இருக்கிறார்கள்' என்று நான் நேர்முகமாக எண்ணிக்கொள்வது எனக்கு நானே பொய் சொல்வதாக இல்லையா? 'எனக்கு உடல்நலம் சரியில்லை' என்றால் 'எனக்கு உடல்நலம் சரியில்லை' என்று ஏற்றுக்கொண்டால்தானே நான் மருந்து எடுக்க முடியும். அதை விட்டு, 'இல்லை. என் உடல்நலம் எனக்கு நன்றாக இருக்கிறது' என்று சொல்லும்போது நான் என்னை நானே மறுப்பதோடு, எனக்கு எதிராகவும் செயல்படுகிறேன் அல்லவா?

இயேசு இன்று நமக்கு மிக அழகான வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றார்.

'உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு'

தொடர்ந்து, 'எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றிகொண்டுவிட்டேன்' என்கிறார்.

இங்கே சற்றே கவனிக்க வேண்டும். 'நான் வெற்றிகொண்டுவிட்டேன்' என்று அவர் சொல்கிறாரே தவிர, 'நீங்கள் வெற்றிகொள்வீர்கள்' என்று நம்மைப் பார்த்துப் போலியான வாக்குறுதி அளிக்கவில்லை. ஏனெனில், நம்மால் துன்பத்தை வெற்றிகொள்ளவே முடியாது. அடுத்தடுத்த துன்பத்தை நாம் எதிர்கொண்டே இருக்க வேண்டும் என்பதே நியதி. துன்பம் துன்பத்தைப் பெற்றெடுத்துக்கொண்டே இருக்கும்.

எடுத்துக்காட்டாக, நீண்ட தூரம் காற்றிலும் மழையிலும் பயணம் செய்வது எனக்குத் துன்பமாக இருக்கிறது என்று நான் ஒரு கார் வாங்குகிறேன் என வைத்துக்கொள்வோம். கார் வாங்கியவுடன் துன்பம் மறைந்துவிடுமா? இல்லை! புதிய வகை துன்பங்கள் வரத் தொடங்கும். பெட்ரோல் விலையேற்றம், சாலை வரி, சுங்க வரி, விபத்து, வாகனத்தில் எலி, தொடர் சர்வீஸ், தொடர் சுத்தம் செய்தல் என்று அடுத்தடுத்த துன்பங்கள் வந்துகொண்டே இருக்கும்.

துன்பம் எப்போதும் உண்டு.

ஆனால், எல்லாத் துன்பத்தையும் நாம் சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. சர்வீஸை நிறுவனம் பார்த்துக்கொள்ளும், சுத்தம் செய்தலை என் உதவியாளர் பார்த்துக்கொள்வார், விபத்து நடக்காமல் என் ஓட்டுநர் பார்த்துக்கொள்வார். எலி வராமல் நான் காத்துக்கொள்ள முடியும்.

எல்லாத் துன்பத்தையும் வெற்றிகொள்ள முடியும்.

அந்த வெற்றிகொள்தல் தான் நம் வாழ்க்கையை முன்நோக்கி நகர்த்துகிறது.

கொஞ்சம் துணிவு இருந்தால் போதும்.

துணிவே நமக்குத் துணையாகும் தூய ஆவியார்.

Saturday, May 15, 2021

உடனிருப்பும் செயலாற்றுதலும்

ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழா

I. திருத்தூதர் பணிகள் 1:1-11   
II. எபேசியர் 4:1-13   
III. மாற்கு 16:15-20

ஆண்டவரின் உடனிருப்பும் செயலாற்றுதலும்

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று
நம்பிக்கை கொள்வதற்காகவே'

புனித அகுஸ்தினாரின் மேற்காணும் வார்த்தைகள் இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையாக அமைந்து, இன்றைய நாளின் முக்கியத்துவத்தை மிக அழகாக நமக்குக் காட்டுகின்றன.

இயேசு திருத்தூதர்களை விட்டு மறைகின்றார். அல்லது இயேசு அவர்களிடமிருந்து மறைந்து விண்ணேற்றம் அடைகின்றார். ஒருவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா? நம்மோடு உடனிருந்து, நம்மை அழைத்து, தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, புதியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து நம்மிடமிருந்து ஒருவர் மறைகின்றார் என்றால், அவருடைய மறைவை நாம் கொண்டாட முடியுமா?

இந்த நாள்களில் நாம் எதிர்கொள்ளும் பெருந்தொற்று மிகப் பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. நம் அன்புக்குரியவர்கள் வேகமாக நம்மிடமிருந்து மறைந்துகொண்டிருக்கிறார்கள். இயேசுவின் உயிர்ப்புக்கும் விண்ணேற்றத்துக்கும் இடையே இருந்த நாற்பது நாள்கள் இடைவெளி கூட, ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கும், அவர் இறப்பதற்கும் இடையே இல்லை. நம் வாட்ஸ்ஆப் செயலியில் மற்றவர் வைக்க நாம் காணும் ஸ்டேடஸில் ஒரு டிக் டாக் சிரிப்பு வீடியோ கடந்து செல்வது போல, நம் அன்புக்குரியவர்கள் அடுத்தடுத்த நிழற்படங்களாகக் கடந்து செல்கிறார்கள். யாருக்கும் யாரிடமும் பேசப் பிடிக்கவில்லை. யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? எல்லார் வீட்டிலும் இழப்பு என்றால் யார் யாருக்கு தேற்றுதல்மொழி பகர முடியும்?

கடந்த இரு வாரங்களுக்குள் நடந்த இருவரின் இறப்பு என்மேல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. கடந்த மாதம் 27ஆம் தேதி அருள்திரு டோமா ஜோஜி ரத்னாகர், விஜயவாடா மறைமாவட்ட அருள்பணியாளர், நேற்று (மே 12), அருள்திரு கிளமென்ட் ஃப்ராங், பெங்களுரு உயர்மறைமாவட்ட அருள்பணியாளர், இயற்கை எய்தினர்.

நான் புனே பாப்பிறை அருள்பணி பயிற்சி மையத்திற்கு 2000 ஆவது ஆண்டில் சென்றபோது முதன் முதலாகச் சந்தித்த வேற்று மாநிலத்தவர் ரத்னாகர். ரொம்ப ஸ்டைலாக இருப்பார். அன்று தொடங்கிய எங்கள் நட்பு உரோமையில் நான் பயின்றபோதும் தொடர்ந்தது. தன் படிப்புடன் இணைந்து எப்போதும் தன் குடும்பத்தையும் சிந்திப்பவர். வந்த புதிதில், தனக்கு இங்கு கிடைக்கும் நல்ல உணவு தன் தங்கைக்கும் தாய்க்கும் கிடைக்காதே என்று புலம்பிக்கொண்டு, வெறும் தட்டுடன் சாப்பாட்டு அறையில் அமர்ந்திருப்பார். கடந்த ஆண்டுதான் தன் முனைவர் பட்ட படிப்பை முடித்து தன் ஊர் திரும்பினார். நிறையப் பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்.

கிளமென்ட்-ஐ நான் முதன்முதலாக உரோமையில் உள்ள பாப்பிறை விவிலியக் கழகத்தில் சந்தித்தேன். நான் அட்மிஷன் போடச் சென்ற அதே நாளில் அவரும் வந்திருந்தார். 'தமிழாப்பா நீ?' என்று கேட்டு, மிக அழகாகப் புன்முறுவல் செய்தார். 'நாம நல்லாப் படிச்சு தமிழ்த்திருச்சபைக்கு நிறையச் செய்யணும்!' என்று சொன்னார். என்னைவிட வயதில் மூத்தவர். அவருடைய குடும்பம் அறிமுகம் இல்லை. எனக்கு அருகில் வகுப்பில் அமர்ந்திருப்பார். ஜெகன், அந்தோனிசாமி, கிளமென்ட், நவீன், நான் என்னும் ஐவர் அணி இணைந்துதான் தினமும் கஃபேடேரியா செல்வோம். ஓடிக்கொண்டே இருப்பார். தன் பங்குப் பணிகள் அனுபவம் பற்றியும் பகிர்வார். கிடைக்கின்ற கொஞ்ச நேரத்தையும் நூலகத்தில் செலவிடுவார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் தன் சொந்த மறைமாவட்டம் திரும்பினார். விவிலியத்தைக் கற்பிப்பதில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார். விவிலிய மற்றும் மேற்கத்தேய மொழிகளை நன்கு கற்றவர். நிறையப் பயணம் செய்தவர். திருஅவை மேல் மிகுந்த பற்றுக்கொண்டவர். அன்னை கன்னி மரியா மேல் அவர் கொண்டிருந்த அதீதப் பற்றுறுதியால் என்னவோ, பாத்திமா அன்னை திருநாள் அன்றே விண்ணகம் திரும்பிவிட்டார்.

நிற்க.

தங்களுடைய தலைவரும் போதகரும் ஆண்டவருமான இயேசு தங்களை விட்டு மறைந்ததைத் திருத்தூதர்கள் எப்படி எடுத்துக்கொண்டார்கள்?

'அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நின்றார்கள்' என்று லூக்கா பதிவு செய்கின்றார். நம் அன்புக்குரியவர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட, நாமோ குனிந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்ணாந்து பார்ப்பதிலும், குனிந்து பார்ப்பதிலும் இருக்கும் உணர்வு ஒன்றுதான். 'எப்படியாகிலும் அவரை நான் எட்டிப் பிடித்துவிட மாட்டேனா?' என்ற ஏக்கம்தான் அப்போது திருத்தூதர்கள் பார்வையில் இருந்தது. இன்று நம் பார்வையில் இருக்கிறது. 'அவர் விண்ணேறிச் சென்றவாறே மீண்டும் திரும்பி வருவார்!' என்று திருத்தூதர்களுக்கு வானதூதர்கள் ஆறுதல் மொழி சொல்கின்றனர். நாமோ இன்று ஆறுதலின்றி நிற்கின்றோம்.

இயேசுவின் விண்ணேற்றம் மூன்று நிலைகளில் முக்கியத்துவம் பெறுகிறது: (அ) அவர் தன் மண்ணக வாழ்வுப் பயணம் முடித்து தந்தையின் இல்லம் திரும்புகிறார். (ஆ) திருஅவையின் பணி இங்கே தொடங்குகிறது. (இ) தூய ஆவியார் உடனிருந்து திருஅவையை வழிநடத்துகின்றார். தன் விண்ணேற்றத்தின் கொடையாக இயேசு, அவர் வாக்களித்தவாறே, தூய ஆவியாரை அனுப்புகிறார்.

விண்ணேற்றம் திருத்தூதர்களுக்குச் சொன்ன செய்தி என்ன?

இன்றைய முதல் வாசகத்தில், லூக்கா பதிவு செய்வது போல, அவர்கள் எருசலேமை விட்டு நீங்குதல் கூடாது. மேலும், அவர்கள் கடவுளது வல்லமை பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் சாட்சியாக இருப்பார்கள். இயேசு பணியை நிறுத்திய இடத்திலிருந்து திருத்தூதர்கள் தங்கள் பணியைத் தொடங்க வேண்டும். இன்றைய நற்செய்தி வாசகத்தில் மாற்கு நற்செய்தியாளரும் அப்படியே பதிவிடுகிறார்: 'இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர் அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர்.'

விண்ணேற்றம் நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

(அ) இயேசுவின் உடனிருப்பு. 'கடவுள் நம்மோடு' என்று இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என்று ஏறிச்செல்கின்றார். அவர் நம்மை விட்டு நீங்கிவிடவில்லை. இதையே இன்றைய இரண்டாம் வாசகத்தில், புனித பவுல், 'எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்ற அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார்' என எழுதுகிறார். ஆக, ஆண்டவர் எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் தன் உடனிருப்பை பல்வேறு நபர்கள் வழியாகவும், திருஅவையில் உள்ள தன் இருத்தலின் வழியாகவும் வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றார்.

(ஆ) இயேசுவின் செயல்பாடு. நற்செய்தி வாசகத்தில், 'ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்' என மாற்கு பதிவு செய்கின்றார். 'உடனிருப்பு' என்பது இருத்தல் என்றால், 'செயல்படுதல்' என்பது இயக்கம். ஆண்டவர் செயல்படுகின்றார். எப்படி? நம் செயல்கள் வழியாக. நம் செயல்கள் அவருடைய செயல்களாக இருந்தால் அவர் அவற்றை உறுதிப்படுத்துகின்றார். அவற்றுக்குச் சான்றாக நிற்கின்றார். எளியோரைத் தூக்கி விடுவதில், உள்ளம் உடைந்தோரைக் குணமாக்குவதில், ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்வதில், வாழ்வின் சின்னஞ்சிறிய நிகழ்வுகளில் அவர் நம்மோடு செயல்படுகின்றார்.

ஆக, 'உடனிருப்பும்' 'செயல்படுதலும்' ஆண்டவர் நமக்குத் தருகின்ற செய்தி.

உடனிருப்பு மட்டும் இருந்து செயல்படுதல் இல்லை என்றால், அடுத்தவர் நமக்குச் சுமையாகி விடுவார். செயல்படுதல் மட்டும் இருந்து உடனிருப்பு இல்லை என்றால், அடுத்தவர் நம்மை எண்ணத்தை விட்டு எளிதாக மறைந்துவிடுவார். இரண்டும் இணையும்போது, அங்கே வல்ல செயல் (அரும் அடையாளம்) நடக்கிறது: பேய்கள் ஓட்டப்படுகின்றன. புதிய மொழிகள் பேசப்படுகின்றன. பாம்புகள் கைகளால் பிடிக்கப்படுகின்றன. கொல்லும் நஞ்சு தீங்கிழைப்பதில்லை. நலமற்றவர்கள் மேல் கைகள் வைக்கப்பட்டவுடன் அவர்கள் நலம் பெறுகின்றனர்.

மறைதல் என்றால் இறைமை. இதையே பவுலும், 'நாங்கள் காண்பவற்றை அல்ல, நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம். காண்பவை நிலையற்றவை. காணாதவை என்றும் நிலைத்திருப்பவை' (காண். 2 கொரி 4:18) என எழுதுகின்றார். காணக்கூடிய நிலையில் இருந்த இயேசு திருத்தூதர்களின் பார்வையிலிருந்து மறைகின்றார். நிலையற்ற தன்மையிலிருந்து நித்தியத்திற்கு இயேசு கடந்து செல்கின்றார்.

காண முடியாத நிலைக்குக் கடந்து செல்லும் அனைவரும் நித்தியத்திற்குள் கடந்து செல்கின்றனர். இனி இவர்கள் காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். எனவே, இவர்களால் எந்தக் காலத்திற்குள்ளும் எந்த இடத்திற்குள்ளும் இனி நுழைய முடியும்.

ஆகையால்தான், உயரே ஏறுகின்ற ஆண்டவர் குறித்து, 'அல்லேலூயா' பாடி அக்களிக்கின்றார் திருப்பாடல் ஆசிரியர் (காண். 47).

இறுதியாக, 'எங்கள் கண்கள் முன்பாக இயேசு எடுத்துக்கொள்ளப்பட்டார்' எனக் கூறும் முதல் வாசகம், அதே கண்களை நாம் இந்த உலகத்தின்மேல் பதிக்கவும், 'கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்' என்று சொல்லும் இரண்டாம் வாசகம், விண்ணேற்றம் என்பது நாம் அடையும் நிறைவு என்றும், இன்றே நம் எண்ணங்களும் செயல்களும் முதிர்ச்சி பெற்று மேன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் ஊக்கம் தருகிறது.

ஆண்டவரின் உடனிருப்பும், செயலாற்றுதலும் இன்றும் என்றும் நம்மோடு!

நம்மைவிட்டு மறைந்து இறைமையில் கலக்கும் நம் அன்புக்குரியவர்களின் உடனிருப்பும் செயலாற்றுதலும் என்றும் நம்மோடு!

இன்று விண்ணேற்றம் அடையும் இறைவன் தன் அரும் அடையாளங்களால் பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிப்பாராக! மனுக்குலத்தின் துன்பத்தை அவர் அங்கிருந்து பார்க்கவில்லை. மாறாக, இங்கே நம்மோடு, நம்மில் ஒருவராக அதை அனுபவித்தார். அவர் நமக்காக விண்ணேறிச் செல்தல் சிறப்பு.