Sunday, May 28, 2017

எதார்த்தமான பதில்


'நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டீர்களா?'

'தூய ஆவி என்னும் ஒன்று உண்டு என்று கூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே!'
தூய பவுலுக்கும் எபேசு நகர மக்களுக்குமான உரையாடலை இப்படி பதிவு செய்கிறார் லூக்கா (காண். திப 19:1-8)

எபேசு நகர மக்களின் எதார்த்தமான பதில் எனக்கு பிடித்திருக்கிறது.

நாம நினைக்கிறது எல்லாம் அடுத்தவர்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும் என நினைக்கிறோம். அல்லது நாம் இந்த உலகத்தைப் பார்ப்பதுபோலத்தான் மற்றவர்களும் பார்ப்பார்கள் என நினைப்பதும் நாம் கொண்டிருக்கின்ற தவறான புரிதல்லகள்.

அடுத்தவர்கள் என்ன புரிந்துகொள்கிறார்கள் என்பதை முதலில் கேள்வி கேட்டு அறியலாம்.

அல்லது நம்மிடம் யாராவது விடை கேட்டால் நேருக்கு நேராகச் சொல்லலாம்.

Saturday, May 27, 2017

மறைதலே இறைமை

'ஆண்டவராகிய இயேசு, மகிமையின் மன்னர்,
பாவத்தையும் இறப்பையும் தோற்கடித்த வெற்றி வீரர்,
வானதூதர் வியப்புற வானங்களின் உச்சிக்கு ஏறிச் சென்றார்.
இவ்வாறு அவர் சென்றது
எங்கள் தாழ்நிலையை விட்டு அகல வேண்டும் என்பதற்காக அன்று.
மாறாக, எங்கள் தலைவரும் முதல்வருமாகிய அவர்
முன்னரே சென்ற அவ்விடத்திற்கு
அவர் உறுப்பினர்களாகிய நாங்களும்
அவரைப் பின் தொடர்ந்து செல்வோம் என்று 
நம்பிக்கை கொள்வதற்காகவே'

இன்றைய திருப்பலியின் தொடக்கவுரையில் நாம் காணும் தூய அகுஸ்தினாரின் இவ்வார்த்தைகள் இன்றைய நாளின் பொருளை மிக நேர்த்தியாக நமக்கு எடுத்துரைக்கின்றன.

'இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து...' (9:51) என லூக்கா இயேசுவின் பயணத்தை முன்கூட்டியே தொடங்கி வைக்கிறார். இயேசுவின் வாழ்வில் நிறைவு அவரின் விண்ணேற்றம். லூக்காவின் இந்தப் புரிதலுக்கு மூன்று பின்புலங்கள் இருந்தன:

பின்புலம் 1: இருதுருவ சிந்தனை

ஒளி-இருள், பகல்-இரவு, நன்மை-தீமை என இருதுருவ சிந்தனைக்குப் பழக்கப்பட்டது மனித மனம். இந்த இருதுருவ சிந்தனையின் படி, இறங்கி வரும் யாரும் ஏறிச் செல்ல வேண்டும். ஆக, இறங்குதல்-ஏறுதல் அவசியம். இயேசு, கடவுளின் மகன், பிறந்து, இறங்கி வந்தார் என்றால், அவர் இறந்து, ஏறிச் செல்ல வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை வட்டம் முழுமை அடையும்.

பின்புலம் 2: அடுக்கு உலக சிந்தனை 

கிரேக்க சிந்தனையாளர் பிளேட்டோ தொடங்கி காலங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது 'அடுக்கு உலகம்.' அது என்ன அடுக்கு உலகம்? இந்த உலகத்தில் மூன்று அடுக்குகள் உள்ளன. மேல் அடுக்கு வானம், நடு அடுக்கு பூமி, கீழ் அடுக்கு பாதாளம். கடவுளர்கள், குட்டிக் கடவுளர்கள், தூதர்கள் ஆகியோரின் உறைவிடம் மேல் அடுக்கு. தீயவர்கள், கொடியவர்கள், தீமை இவர்களின் உறைவிடம் கீழ் அடுக்கு. இந்த இரண்டிற்கு நடுவில் உள்ள அடுக்கில் இருப்பவர்கள் இரண்டு பண்புகளையும் தங்களுக்குள் கொண்டிருப்பவர்கள். ஆனால் இந்த அடுக்கு ஒரு நிழல் அடுக்கு. இங்கு காணும் எல்லாம் மேல் மற்றும் கீழ் அடுக்குகளின் ஜெராக்ஸ் பிரதிகள். மேல் அடுக்கிலிருந்து நடு அடுக்கிற்கு வந்த இயேசு, தன் இறப்பால் கீழ் அடுக்கையும் சந்தித்துவிட்டு, மீண்டும் மேல் அடுக்கிற்கு ஏறிச் செல்கின்றார். நடு அல்லது கீழ் அடுக்கு அவரைத் தன்னகத்தே வைத்துக்கொள்ள இயலாது. ஏனெனில் அவர் மேலடுக்கைச் சார்ந்தவர்.

பின்புலம் 3: மறைதல்-நிறைதல் சிந்தனை

லூக்கா ஒரு மருத்துவர். மருத்துவத்தின் முக்கியமான கூறு 'மறைதல்-நிறைதல்.' புரியலையா? நமக்கு வரும் நோய்களுக்கு காரணம் என்ன? 'இருக்க வேண்டிய ஒன்று மறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல்) 'இருக்கக் கூடாத ஒன்று நிறைந்தால்' (எ.கா. இரத்தத்தில் சர்க்கரை நிறைதல்) அது நோய். மருத்துவரின் பணி என்ன? 'குறையை நிறைவு செய்வது,' 'நிறைதலை கரைத்துக் குறைப்பது.' அதிகம் மறைந்தாலும் ஆபத்து. அதிகம் நிறைந்தாலும் ஆபத்து. இயேசு மறைய வேண்டும். சீடர்கள் நிறைய வேண்டும். ஆனால், இயேசுவும் முழுமையாக மறைந்துவிடக் கூடாது. சீடர்களும் முழுமையாக நிறைந்துவிடக் கூடாது. இந்த இரண்டையும் சமன்படுத்த லூக்கா கையில் எடுக்கும் இறையியல்கூறுதான் விண்ணேற்றம். ஒரு சின்ன அறையில் லேன் நெட்வொர்க் கனெக்ஷன் வழியாக இயேசுவை சீடர்களோடு இணைத்து வைத்திருந்த லூக்கா, அவரை அப்படியே தூக்கி உயரமான ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றிவிடுகின்றார். இப்போது இயேசுவோடு யாரும் தங்களை இணைத்துக் கொள்ள முடியும். தேவையானதெல்லாம் 'நம்பிக்கை' என்ற ஐந்தெழுத்து பாஸ்கோட் மட்டுமே.

இந்த மூன்றும் விண்ணேற்றம் என்பதைப் புரிந்து கொள்ள நமக்குப் பின்புலமாக இருந்தாலும், விண்ணேற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், நம்பவும், புரிந்து கொள்ளவும் மூன்று கூறுகள் தடைகளாக நிற்கின்றன:

தடை 1: இயேசுவின் உடல்

மனித உடல் அல்லது உரு ஏற்றதால் இயேசு பிறந்தார். வளர்ந்தார். சாப்பிட்டார். காணாமல் போனார். கிடைத்தார். நடந்தார். பேசினார். சிரித்தார். அழுதார். இறந்தார். எப்படியோ உயிர்த்தும் விட்டார். உயிர்த்தவர் வெறும் ஆவியாக வராமல் உடலோடு வந்தார். சீடர்களுக்குத் தோன்றினார். தன் உடலைத் தொட்டுப் பார்க்கச் சொன்னார். சாப்பிட்டார். வழிநடந்தார். அப்பம் பிட்டார். இதுவரைக்கும் சரி. ஆனால், விண்ணேற்றம் அடையும்போது அவர் உடலோடு மேலே சென்றாரா? ஆம் என்று சொல்கிறது எருசலேம் விண்ணேற்ற ஆலயம். அங்கே இயேசுவின் இரண்டு அகன்ற பாதத்தடங்கள் இருக்கின்றன. ஒரு ராக்கெட் மேலெழும்பி செல்வதுபோல, புவிஈர்ப்பு விசையை வென்று, புவிஈர்ப்பு மண்டலத்தைக் கடந்து அவர் மேலே சென்றிருக்க வேண்டும். சரி போய்விட்டார். ஆனால், மனித உடலை வைத்து அவர் அங்கே என்ன செய்வார்? தந்தைக்கு உடல் இல்லை. தூய ஆவியானவருக்கு உடல் இல்லை. இவருக்கு மட்டும் உடல் இருக்குமா? இன்னும் அந்த உடலில் காயங்கள் இருக்குமா? (இருக்க வேண்டும் - ஏனெனில் மாறாதவராக இருந்தால்தானே அவர் கடவுள்!) உடல் என்று ஒன்று இருந்தால் உடை என்ற ஒன்றும் இருக்க வேண்டும். உடை இல்லாத மனித உடலை அதுவும் கடவுள்-மனிதனின் உடலை நாம் நினைத்துப் பார்க்கவும் முடியுமா? மாற்று உடைக்கு இயேசு என்ன செய்வார்? அல்லது பாதி வழி சென்ற இயேசுவின் உடல் மறைந்து ஆவியாக மாறிவிட்டதா? மனித உடலோடு இயேசு சென்றார் என்று நாம் சொல்வதே, மற்ற விலங்குகள், பறவைகள், தாவரங்களின் உடலுக்கு நாம் இழைக்கும் தீங்கு இல்லையா? மனித உடலே சிறந்தது என ஹோமோ ஸேபியன்ஸ் ஸேபியன்ஸ் தற்பெருமை கொள்வது முறையா? இயேசுவின் உடல் அவரின் விண்ணேற்றத்தை நாம் புரிந்து கொள்ள தடையாக இருக்கிறது.

தடை 2: காலம்-இடம்; கூறு

மாற்கு நற்செய்தியாளர் இயேசுவின் விண்ணேற்றம் பற்றி எழுதும்போது, 'இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்' (16:19) என எழுதிவிட்டு, உடனே, 'ஆண்டவரும் திருத்தூதர்களோடு உடனிருந்தார்' (16:20) என முரண்படுகின்றார். காலத்தையும், இடத்தையும் கடந்து கடவுளோடு வலப்புறம் அமர்ந்திருக்கும் ஒருவர், காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்ட திருத்தூதர்களோடு எப்படி உடனிருக்க முடியும்? உண்மையாகவே உடனிருந்தாரா? அல்லது உடனிருப்பு என்பது திருத்தூதர்களின் ஒரு உள்ளுணர்வு போல இருந்ததா? அதாவது, இறந்து போன என் அப்பா என்னுடன் இருக்கிறார் என்று நான் சொல்கிறேன் என்றால், 'என் கம்ப்யூட்டர் என்னுடன் இருக்கிறது' என்பது போன்ற 'இருப்பு' அல்ல அது. மாறாக, அது ஒரு உள்ளுணர்வு. ஆக, காலமும்-இடமும் இயேசுவின் உடலை ஒட்டிய இரண்டாம் தடை.

தடை 3: பார்த்தவர்கள் எழுதவில்லை, எழுதியவர்கள் பார்க்கவில்லை

இயேசுவின் விண்ணேற்றம் பற்றி மாற்கும், லூக்காவும் மட்டுமே எழுதுகின்றனர். மத்தேயுவின் இயேசு இம்மானுவேலன் ('கடவுள் நம்மோடு') என்பதால், மத்தேயு இயேசுவை நம்மோடு தங்க வைத்து விடுகிறார். மத்தேயுவின் இயேசு விண்ணேற்றம் அடைவதில்லை (காண். மத் 28:20). விண்ணேற்றத்தைப் பார்த்த திருத்தூதரும் நற்செய்தியாளரும் இயேசு அன்பு செய்த சீடருமான யோவான் இந்த மாபெரும் நிகழ்வு குறித்து மௌனம் காக்கின்றார். 'பிள்ளைகளே சாப்பிட வாருங்கள்' என்று இயேசு அழைத்தார் என சின்ன சின்ன உரையாடலையும் பதிவு செய்த யோவான் இதைப் பற்றி ஏன் எழுதவில்லை? அல்லது இயேசு விண்ணேறிச் செல்லவில்லையா? மேலும், இந்த நிகழ்வை தன் நற்செய்தியிலும் (24:50-53), தன் திருத்தூதர் பணிகளிலும் (1:6-11) பதிவு செய்யும் லூக்கா, இந்த நிகழ்வு நடந்த நேரத்தை முரண்டுபட்டு எழுதுகின்றார்: இந்த நிகழ்வு இயேசுவின் உயிர்ப்பு நாள் அன்று நடந்ததாக நற்செய்தியிலும் (24:51), நாற்பது நாட்களுக்குப் பின் நடந்ததாக திருத்தூதர் பணிகளிலும் (1:9-11) எழுதுகின்றார்.

இந்தத் தடைகளை ஒட்டி ஒரு வார்த்தைச் சிக்கலும் இருக்கிறது: 'விண்ணேற்றமா?' (ascension) அல்லது 'விண்ணேற்பா?' (assumption)

முதல் ஏற்பாட்டில் ஏனோக்கு (தொநூ 5:24) மற்றும் இறைவாக்கினர் எலியாவும் (2 அர 2:2), இரண்டாம் ஏற்பாட்டில் இயேசுவும் விண்ணேற்றம் அடைந்தனர் என்றும், திருத்தந்தை 12ஆம் பயஸ் அவர்களின் 1950 நவம்பர் 1 பிரகடனத்தின்படி அன்னை மரியாள் விண்ணேற்பு அடைந்தார் என்றும் கூறுகின்றோம். இங்கே 'விண்ணேற்றம்' என்பது செய்வினை (active voice). 'விண்ணேற்பு' என்பது செயப்பாட்டுவினை (passive voice). விண்ணேற்றம் அடைந்தவர்கள் தாங்களாகவே, தங்களின் ஆற்றலால் ஏறிச் செல்கின்றனர். இவர்களுக்கு மற்றவர்களின் துணை தேவையில்லை. ஆனால் மரியாவோ கடவுளால் அல்லது தூதர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றார். அவர் ஏறிச் செல்ல மற்றவர்களின் துணை தேவைப்படுகிறது. முன்னவர்கள் ஆண்கள் என்பதால் தாங்களாகவே ஏறிச்சென்றார்களோ? ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடுதான் இந்த வார்த்தை மாற்றங்களோ? தெரியவில்லை!

ஆனால், லூக்கா நற்செய்தியில் 'அனாஃபெரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('அனஃபெரெட்டோ'), திருத்தூதர் பணிகளில் 'எபைரோ' என்ற வினைச்சொல் செயப்பாட்டுவினையிலும் ('எபெர்தெ') உள்ளது. மேலும், ஒரே நிகழ்வைக் குறிக்க லூக்கா வௌ;வேறு வினைச்சொற்களைப் பயன்படுத்துவதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை நாம் உள்ளபடி மொழிபெயர்த்தால், 'அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்' என்றும் 'அவர் எடுத்துக்கொள்ளப்பட்டார்' என்றும் சொல்ல வேண்டும். ஆக, 'இயேசு விண்ணேற்றம் அடைந்தார்' என்பது நம் புரிதலுக்கான மொழிபெயர்ப்பே அன்றி, பாட மொழிபெயர்ப்பு அல்ல.

இவ்வளவு தடைகளும், மொழியியல் சிக்கல்களும் இருக்க, இயேசுவின் விண்ணேற்றத்தை எப்படி புரிந்து கொள்வது?

கேள்வியை மாற்றிக் கேட்டால், பிரச்சினை தீர்ந்துவிடும்.

எப்படி விண்ணேற்பு? என்று கேட்பதை விடுத்து, ஏன் விண்ணேற்பு? என்று கேட்டால் விண்ணேற்பின் பொருள் தெரிந்துவிடும்.

விண்ணேற்றம் இயேசுவின் வாழ்வில் மூன்று நிலைகளில் அர்த்தம் பெறுகின்றது:

1. தன் மண்ணக பணிவாழ்வு முடிந்து, இன்று தன் தந்தையின் இல்லம் திரும்புகின்றார் (காண். பிலி 2:3-6).

2. தன் சீடர்களிடம் தன் பணியை ஒப்புவிக்கின்றார். தன் இறையரசுப் பணியைத் தொடர்ந்தாற்ற அவர்களுக்குக் கட்டளையிடுகின்றார். விண்ணேற்றம் ஒரு பிரியாவிடை நிகழ்வு. விவிலியத்தில் உள்ள பிரியாவிடை நிகழ்வுகளில் மூன்று மட்டுமே மிக நீளமானவை: இஸ்ரயேலின் குலமுதல்வர் யாக்கோபு (தொநூ 49-50), திருச்சட்டம் வழங்கிய மோசே (இச 33-34), புதிய இஸ்ரயேலின் நம்பிக்கை மற்றும் திருச்சட்டத்தின் நிறைவாம் இயேசு (திப 1:1-11). இந்த மூன்று பிரியாவிடைகளும் நான்கு கூறுகளைக் கொண்டுள்ளன: அ) ஆசியுரை, ஆ) பிரிவு, இ) பார்த்தவர்களின் பதில் மற்றும் ஈ) கீழ்ப்படிதல் அறிக்கை. இயேசு கைகளை உயர்த்தி ஆசீர் அளிக்கும் நிகழ்வும் முதல் ஏற்பாட்டு நிகழ்வுகளின் பிரதிபலிப்பாகவே அமைகின்றது (லேவி 9:22, சீஞா 50:20-21). ஆசியளித்தல் தரும் மகிழ்ச்சி லூக்கா நற்செய்தியின் முதல் மற்றும் இறுதி நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது (1:56, 2:20,43,45, 24:9,33, 8:13, 15:7,10). இயேசுவின் சீடர்கள் மகிழ்ச்சியோடு ஆலயம் திரும்பி இறைவனைப் புகழ்கின்றனர்.

3. துணையாளராம் தூய ஆவியானவரை அவர்கள்மேல் அனுப்புவதாக வாக்குறுதி தருகின்றார் (திப 1:4-5).

இயேசுவின் உயிர்ப்பைப் போலவே, அவரின் விண்ணேற்றமும் ஒரு நம்பிக்கையின் மறைபொருளே. 'நம்பிக்கை' என்ற இந்த ஒற்றைச் சொல்லை நீக்கிவிட்டால், இந்த நிகழ்விற்கும் நமக்கும் தொடர்பே இல்லை. 'விண்ணேற்றம் என்னும் நம்பிக்கையை' நாம் எப்படி வாழ்வாக்குவது? விண்ணேற்றம் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

பாடம் 1: மறைதலே இறைமை

இயேசுவை மனிதனாக்க அவருக்கு மனுவுருவாதல் தேவைப்பட்டதுபோல, அவரை இறைவனாக்க அவருக்கு விண்ணேற்றம் தேவை. 'தேவை' என்பதால் இவை உருவாக்கப்பட்டவை என்று பொருள் கொள்ளக் கூடாது. மறைந்திருக்கும் வரைதான் அவன் பெயர் மறையவன் அல்லது இறைவன். ஆகையால்தான் இறைவனைப் பற்றிய அறிவை மறை-கல்வி என்கிறோம். தெரிந்துவிட்டால் அவர் இறைவன் அல்ல. கண்களுக்குத் தெரியாததால் அவர் இல்லை என்பதும் அல்ல. கண்களுக்குத் தெரியக்கூடியவை எல்லாம் மாறக்கூடியவை. மாறாதவைகள் கண்களுக்குப் புலனாவதில்லை. நம் உடலின் கண்களை மறைக்கும் அளவுக்கு நம் கன்னம் வீங்கிவிட்டது என வைத்துக்கொள்வோம். நம்மால் எதையும் பார்க்க முடியாது. என்னால் பார்க்க முடியவில்லை என்பதற்காக என் முன் இருப்பவை எல்லாம், இல்லாதவை என ஆகிவிடுமா? ஒருபோதும் இல்லை. 'ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம். ஆனால் அப்போது நேரில் காண்போம்' (1 கொரி 13:12).  இயேசு விண்ணேற்றத்தின்போதுதான் இறைவனாகின்றார். மறையும்போதுதான் இறைவனாகின்றார். இதை இன்றைய இரண்டாம் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் பார்க்கின்றோம். இரண்டாம் வாசகத்தில் இயேசுவை புதிய உடன்படிக்கையின் தலைமைக்குருவாக உருவக்கின்ற எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், 'அதனால்தான் கிறிஸ்து மனிதரின் கையால் அமைக்கப்பட்ட இவ்வலகின் தூயகத்திற்குள் நுழையாமல், விண்ணகத்திற்குள்ளேயே நுழைந்திருக்கிறார்' (9:24) என்றும், 'அவர் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி' (10:20) என்றும் எழுதுகின்றார். நற்செய்தி வாசகத்தில் இயேசு 'ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்' (24:51) என எழுதுகின்றார் லூக்கா. 'ஆசி வழங்குதல்' என்பது தலைமைக்குருவின் பணி மற்றும் உரிமை. இயேசு மேலே ஏறிச்சென்றவுடன், சீடர்கள் 'நெடுஞ்சாண்கிடையாக' விழுகின்றனர் ('ப்ரோஸ்குனேயோ'). இது கடவுள் முன்  மட்டுமே மனிதர்கள் செய்யும் செயல். ஆக, சீடர்கள் இங்கே இயேசுவை இறைவனாக ஏற்றுக் கொள்வதன் வெளி அடையாளமே இந்த நெடுஞ்சாண்கிடை வணங்குதல். 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர், 'கடவுள் நமக்காக' என ஏறிச் செல்கின்றார்.

பாடம் 2: சீடர்களின் பணி

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களின் பணி என இயேசு குறிப்பிடுவது மூன்று: ஒன்று,  'சீடராக்குங்கள்.' இரண்டு, 'திருமுழுக்கு கொடுங்கள்.' மூன்று, 'கற்பியுங்கள்.' 
சீடராக்குங்கள்: சீடராக்குவது வேறு, பக்தர்களாக்குவது வேறு. இயேசு தனக்கென பக்தர்களை விரும்பவில்லை. மாறாக, சீடர்களையே விரும்பினார். சீடர்களாக இருப்பதை விட பக்தர்களாக இருப்பது எளிதாக இருப்பதால் நாம் அப்படியே இருந்துவிடுகிறோம். அவரை ஒரு பீடத்தில் ஏற்றி வைத்துவிட்டு, 'என் ஆண்டவரே, என் கடவுளே' என நாம் தள்ளி நின்றுகொள்கின்றோம். மற்றவர்களையும் இப்படி நிற்கச் செய்துவிடுகின்றோம். மற்றொரு பக்கம், இயேசுவை நாம் நம் வாழ்வின் நோய், பிரச்சினை, காயம் போன்றவற்றுக்கான தீர்வாக பார்க்கின்றோம். இயேசு இவற்றுக்கு தீர்வுகள் தருபவர் அல்லர். பிரச்சினைகளே வேண்டாம் என அவர் நினைத்திருந்தால் ஒரு நொடியில் பரிசேயர், சதுசேயர், பிலாத்து, ஏரோது, யூதாசு என அனைவரையும் ஒரே நொடியில் இல்லாமல் செய்திருக்கலாம் அல்லவா! நம்மைப்போல பிறந்த அவர் நம்மைப்போல எல்லாவற்றிலும் பங்குகொண்டார். அப்படி என்றால் நமக்கும் இன்று எல்லா நோய், பிரச்சினைகளும் வரும். ஆனால், அவர் கொண்டிருந்த மனநிலையைக் கொண்டிருந்ததே சீடத்துவம்.
திருமுழுக்கு கொடுங்கள்: யார் பெயரால்? 'தந்தை, மகன், தூய ஆவியின் பெயரால்.' 'கழுவுங்கள்' என்பதுதான் இங்கே சொல்லப்படும் வார்த்தை. திருமுழுக்கு என்று சொல்வது நமக்கு இறையியல் பிரச்சினைகளை எழுப்புகிறது. குழந்தை திருமுழுக்கா? வயது வந்தபின் திருமுழுக்கா? தண்ணீர் ஊற்றி திருமுழுக்கா? தண்ணீரில் அமிழ்த்தி திருமுழுக்கா? ஆசை திருமுழுக்கா? இரத்த திருமுழுக்கா? என நிறைய கேள்விகளை எழுப்புகிறது. இதைத் தவிர்க்க, 'கழுவுதல்' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்வோம். 'கழுவுதல்' என்பது நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் சாதாரண ஒரு பழக்கச் சொல். கழுவுதலில் என்ன நடக்கிறது என்றால், முந்தையது மறைந்து புதிய நிலை பிறக்கிறது. அழுக்கு மறைந்து தூய்மை பிறக்கிறது. ஆக, தன்மையம் என்ற முந்தைய நிலையிலிருந்து, 'தந்தை, மகன், தூய ஆவி' என்னும் இறைமையம் நோக்கி நகர்வதே கழுவுதல்.
கற்பியுங்கள்: எவற்றை? 'நான் உங்களுக்குக் கட்டளையிட்டவற்றை.' அவர் எவற்றைக் கட்டளையிட்டார்? அன்பு ஒன்றையே. ஆக, அன்பு என்பது வெறும் சொல் அல்ல. மாறாக, ஒரு செயல். இயேசுவிடமிருந்து புறப்படும் சீடர்கள் அனைவரும் அன்பு ஒன்றை வாழ்பவர்களாகவும், கற்பிக்கிறவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

பாடம் 3: எதிர்நோக்கு

'அவர் மீண்டும் வருவார்' (திப 1:11) என்ற வார்த்தைகள்தாம் நாம் காத்திருப்பதற்கான எதிர்நோக்கை நமக்குத் தருகின்றன. எதிர்நோக்கில் தயக்கம் அறவே கூடாது (எபி 10:23). நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் உந்தித் தள்வது எதிர்நோக்கே. காலையில் எழுவோம் என்ற எதிர்நோக்கு இருப்பதால் தான் இரவு தூங்கச் செல்லுமுன் 'வேக்அப் கால்' வைக்கின்றோம். படிப்பது, பயணம் செய்வது, வேலை தேடுவது, தேடிய வேலையில் சம்பாதிப்பது, திருமணம் முடிப்பது, அருள்நிலை வாக்குறுதி கொடுப்பது என எல்லா வாழ்க்கை நிகழ்வுகளிலும், நிழல்களிலும் எதிர்நோக்கி இழையோடியிருக்கின்றது. இந்த எதிர்நோக்குகளுக்கெல்லாம் தாயாக இருப்பது, 'அவர் மீண்டும் வருவார்' என்ற எதிர்நோக்கும், 'நாமும் அங்கு செல்வோம்' என்ற எதிர்நோக்கும்தான். வெறும் மண்ணோடு மண்ணாக முடியப்போகும் வாழ்க்கைக்கா நாம் இவ்வளவு மெனக்கெடுகிறோம்? நாம் மண்ணைச் சார்ந்தவர்கள் அல்லர். விண்ணைச் சார்ந்தவர்கள். ஆக, எதிர்நோக்கு என்னும் விளக்கு எந்நேரமும் எரிந்துகொண்டிருக்கட்டும். மேலும், நாம் விண்ணைச் சார்ந்தவர்கள் என்பதால் நம் எண்ணங்களும் உயர்ந்த எண்ணங்களாகவே இருக்கட்டும் (காண். கொலோ 3:1).

பாடம் 4: அண்ணாந்து பார்க்காதீங்க!

'கலிலேயரே, ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?' (திப 1:11) என்ற கேள்வி நம்மைப் பார்த்தும் கேட்கப்படுகிறது. அண்ணாந்து பார்க்கும் ஆன்மீகம் வேண்டாம். குனிந்து வாழ்வைப் பார்க்கும் ஆன்மீகம் அவசியம். 'அவர் வருகிறார்!' என்பதற்காக அவரைத் தேடி வீட்டைவிட்டு ஓட வேண்டாம். அண்ணாந்து பார்க்க வேண்டாம். சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து சாப்பிடுங்கள். பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்களா. தொடர்ந்து செய்யுங்கள். பஸ்ஸில் இருக்கிறீர்களா, தொடர்ந்து பயணம் செய்யுங்கள். ரேஷன் கடையில் வரிசையில் நிற்கிறீர்களா, தொடர்ந்து நில்லுங்கள். நோயுற்ற ஒரு நபரோடு மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பேசுங்கள். டிவி பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து பாருங்கள். விளையாடிக் கொண்டிருக்கிறீர்களா, தொடர்ந்து விளையாடுங்கள். ஏனெனில், அவர் இவற்றிலும் வருகின்றார். எல்லாவற்றிலும் அவரால் வர முடியும்.

பாடம் 5: மகிழ்ச்சி

இயேசுவின் பிரிவை அனுபவிக்கும் சீடர்களின் முதல் உணர்வு 'பெருமகிழ்ச்சி' ('காராஸ் மெகாலெஸ்') என்று பதிவு செய்கின்றார் லூக்கா (லூக் 24:52). இந்தச் சொல்லாடலை மீண்டும் ஒருமுறை வானதூதரின் வார்த்தையாகப் பதிவு செய்கின்றார்: 'அஞ்சாதீர்கள். இதோ, எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார்' (லூக் 2:10). இயேசுவின் பிறப்பு, பணி, உயிர்ப்பு, விண்ணேற்றம் என அவரின் வாழ்வு நமக்குத் தருவது மகிழ்ச்சி ஒன்றே. இந்த மகிழ்ச்சி நம் உள்ளத்திலும், இல்லத்திலும் நிறைவாக இருந்து, நாம் செய்வது அனைத்திலும் வெற்றி கண்டு, வளமோடும், நலமோடும் வாழ்தலே அவருக்கு மாட்சி.
இன்றைய நற்செய்தியில் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். ஒத்தமைவு நற்செய்தியாளர்கள் விண்ணேற்றம் பற்றி பதிவு செய்கின்றனர். ஆனால், மத்தேயு அப்படி பதிவு செய்தாலும் இயேசுவை விண்ணேற்றாமல் அப்படியே விட்டுவிடுகின்றார். 'இம்மானுவேல்' - 'கடவுள் நம்மோடு' என இறங்கி வந்தவர் இனி ஏறச் செல்ல முடியாது. அவர் 'உலகம் முடியும் வரை, அதாவது எந்நாளும், நம்மோடு இருந்துவிடுகின்றார்.' இயேசுவின் இந்த ஒற்றை வாக்குறுதியே நம் மகிழ்வின் ஊற்றாக அமைய வேண்டும்.

'நம்மேல் கொண்ட பரிவினால் அவர் விண்ணிலிருந்து இறங்கி வந்தார்.
இன்று அவர் தனியே விண்ணேறிச் சென்றாலும், அவரோடு நாமும் உடன் செல்கிறோம்.
ஏனெனில் அருளால் நாமும் அவரோடு இணைந்துள்ளோம்!'
(தூய அகுஸ்தினார்)

விண்ணேற்றப் பெருநாள் வாழ்த்துக்களும், செபங்களும்!

Friday, May 26, 2017

அந்த மூன்று சொற்கள்

'பவுல் சீடர்கள் அனைவரையும் உறுதிப்படுத்தினார்'

'பிரிஸ்கில்லாவும் அக்கில்லாவும் அப்பொல்லோவுக்கு விளக்கம் கொடுத்தனர்'

'சகோதரர் சகோதரிகள் அவரை ஊக்கப்படுத்தினர்'

'உறுதிப்படுத்துதல்,' 'விளக்கம் கொடுத்தல்,' 'ஊக்கப்படுத்துதல்' - இந்த மூன்று வினைச்சொற்களும் நாளைய முதல்வாசகத்தில் என்னைக் கவர்கின்றனர்.

அதாவது, தொடக்கத் திருச்சபையில் எல்லாரும் நற்செய்தி அறிவிப்பு பணி செய்கின்றனர். 'நான் செய்ய வேண்டும்,' 'நீ செய்யக் கூடாது,' 'உன் வரையறை இது,' 'உன் வரையறை அது,' 'என்னிடம் நீ இதைக் கேட்க வேண்டும்,' 'உன்னிடம் நான் இதைச் சொல்ல வேண்டும்' என்ற நெறிமுறைகள் கிடையாத கட்டின்மை கொண்ட திருச்சபையாக இருந்தது.

மேலும், அவரவர்கள் தங்களுக்கான நிலையில் தங்கள் பணியை முழுமையாகச் செய்கின்றனர்:

1. உறுதிப்படுத்தினார்

ஒரு செடி முளைத்து வரும்போது அதை ஒரு நிலையான குச்சி அல்லது கம்பு அல்லது கம்பியோடு சேர்த்துக் கட்டியிருப்பார்கள். ஏன்? செடி நேராக வளர வேண்டும் என்பதற்காக மட்டும் அல்ல. மாறாக, வலுவற்ற தண்டைக் கொண்டிருக்கின்ற செடிக்கு வலுவான துணை வேண்டும் என்பதற்காகத்தான். காற்றில் அலைமோதும் செடி உடைந்துவிடவும், காயம்பட்டுவிடவும் முடியும். ஆனால், கட்டப்பட்டு உறுதியூட்டப்பட்ட செடி நிலைத்துநிற்கும். நம்பிக்கை வாழ்வும் அப்படித்தான். நம்பிக்கை வேகமாக வந்துவிடும். ஆனால் அது நிலைத்து நிற்பதுதான் கடினம். நிலைத்து நிற்க மற்றவர்கள் துணைநிற்க வேண்டும். அதைத்தான் தூய பவுல் செய்கின்றார். தன் திருச்சபை நம்பிக்கையில் வளர்வதற்கு தான் ஊன்றுகோலாக நிற்கின்றார்.

2. விளக்கம் கொடுத்தனர்

அப்பொல்லொ சிறந்த பேச்சாளர். சிறந்த நம்பிக்கையாளர். ஆனாலும், திருமுழுக்கு பற்றிய போதனையில் யோவானை மட்டுமே அறிந்தவர். மொத்தத்தில் தூய ஆவியை அறியாதவர். இப்படி அறியாத ஒருவரை பிரிஸ்கில்லாவும், அக்கில்லாவும் கேலி பேசி ஒதுக்கிவிடவில்லை. மாறாக, கூப்பிட்டு விளக்கம் கொடுக்கின்றனர். தாங்கள் பெற்ற அறிவை பிறரோடு பகிர்ந்து கொள்கின்றனர். அப்பொல்லா அணையப்போகும் திரி போல இருக்கிறார். இவர்கள் தங்கள் ஒளியை அவரோடு பகிர்ந்துகொள்கின்றனர்.

3. ஊக்கப்படுத்தினர்

நற்செய்திப் பணியாளர் அல்லது அருள்பணியாளர் அல்லது துறவி தன் பணியில் சந்திக்கின்ற முதல் சவால் மனச்சோர்வு. இந்தச் சவால் வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக, உள்ளிருந்து வரக்கூடியது. தன் பணி உடனடி கனியைத் தரவில்லை அல்லது தான் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என நினைக்கின்ற பணியாளர் மனச்சோர்வு அடைந்துவிடுவார். அப்படி மனச்சோர்வு அடைபவர்கள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். ஊக்கம் என்பது தைரியத்தில் ஒருவரை நிற்கச் செய்வது.

நம் நற்செய்திப் பணியில் இல்லாவிட்டாலும், நம் உறவுநிலைகளில்

'உறுதிப்படுத்துதல்,' 'விளக்கம் கொடுத்தல்,' 'ஊக்கப்படுத்துதல்' இருத்தல் நலமே!

Thursday, May 25, 2017

நேர்த்திக்கடன்

'அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு தம் நேர்த்திக்கடனை நிறைவேற்ற கெங்கிரேயா நகரில் முடிவெட்டிக் கொண்டு, அக்கில்லா, பிரிஸ்கில்லா ஆகியோருடன் சிரியாவுக்கு கப்பலேறினார்.'

இறப்புக்குப் பின் ஒருவேளை (!) மோட்சம் என்று ஒன்று இருந்து, அங்கு நான் சென்று (!) அங்கு தூய பவுலை சந்திக்க நேர்ந்தால் அவரிடம் கேட்க விரும்பும் பல கேள்விகளுள் ஒன்று:

'அப்படி என்ன நேர்த்திக்கடன் வைத்து நீங்கள் கெங்கிரேயா துறைமுகத்தில் முடிவெட்டிக்கொண்டீர்கள்?'

பவுல் செய்த நேர்த்திக்கடன் பற்றிய பதிவு திருத்தூதர்பணிகள் நூலில் இல்லை.

பெற்றோர் இறக்கும்போது அடக்கச் சடங்கு முடிந்தவுடன் அந்த வீட்டின் மூத்த மகன் அல்லது ஒரே மகன் முடியெடுத்துக்கொள்வது வழக்கம். இதற்கு இரண்டு சமூக அர்த்தங்கள் கொடுக்கப்படுகிறது:

அ. அவரைப் பார்த்து மற்றவர்கள் அவரின் இழப்பை அறிந்து கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்வர்.
ஆ. தலைமுடியை இழக்கும் ஆண் தன் அழகை இழக்கின்றார். ஆக, தன்னை அழகுபடுத்திக்கொள்ள அவருக்கு இனி நேரம் தேவையில்லை. அந்த நேரத்தை அவர் தன் குடும்பம் பற்றி சிந்திக்க பயன்படுத்துவார். மேலும், தன் அழகு போய்விடுவதால் அடுத்தவர்களுக்கு தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற தேவையற்ற ஆசை அவரில் எழாது.

நிற்க.

பவுல் முடிவெட்டிக்கொண்டாரா அல்லது முழுவதுமாக முடியை எடுத்துக்கொண்டாரா என்ற ஆராய்ச்சி இப்போது வேண்டாம்.

ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம்.

தான் ஒரு இலக்கை நிர்ணயம் செய்கின்றார் பவுல். அந்த இலக்கை அடைகின்றார். அந்த இலக்கை அவர் அடைய காரணமாக இருந்த கடவுள்முன் தன் சரணாகதியின் அடையாளமாக தன் மணிமுடியை கழற்றி கடவுளின் காலடிகளில் இறக்குகின்றார்.

பவுல் நிர்ணயித்த இலக்கு என்ன?

கடவுளின் பிரசன்னத்தை உணர்வதுதான்.

'அஞ்சாதே, பேசிக்கொண்டேயிரு. நிறுத்தாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன். எவரும் உனக்கு தீங்கிழைக்கப்போவதில்லை.'

'நான் இறைவனின் திருச்சபையை துன்புறுத்தினேன். இன்று அவர் என்னோடு இருக்கிறாரா?' என்ற பவுலின் உள்ளத்து ஏக்கத்துக்கு கிடைத்த பதில்தான் இறைவனின் உடனிருப்பு.

இன்று நான் என் வாழ்வில் நிர்ணயிக்கும் சின்ன சின்ன இலக்குகள் எவை?

அவற்றை நான் அடைய எப்படி முயல்கின்றேன்?

அவற்றை அடைந்துவிட்டேன் என்பதை நான் எப்படி உணர்கிறேன்?


Wednesday, May 24, 2017

வேலை

'கூடாரம் செய்வது அவர்களது தொழில். தாமும் அதே தொழிலைச் செய்பவராதலால் பவுல் அவர்களிடம் தங்கி வேலை செய்துவந்தார்.'

நாளைய முதல் வாசகத்தில் (திப 18:1-8) பவுலின் இன்னொரு நல்ல குணத்தை நாம் பார்க்கின்றோம்: 'பவுல் ஒரு வேலைக்காரர்'

மனிதன் யார்? என்ற கேள்விக்கு வரலாற்றில் நாம் பல விடைகளைப் பார்க்கின்றோம்.

'மனிதன் சிந்தனையாளன்' என்கிறார் சாக்ரடீஸ்.

'மனிதன் உறவுக்காரன்' என்கிறார் ஹைடக்கர்.

'மனிதன் ஒரு பரிணாம வளர்ச்சி' என்கிறார் டார்வின்.

'மனிதன் ஒரு வேலைக்காரன்' என்கிறார் காரல் மார்க்ஸ்.

மேற்காணும் வரையறைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரையறை மார்க்ஸ் அவர்களுடையதே. 'நாம் இருக்கிறோம். ஏனெனில் நாம் வேலை செய்கிறோம்.'

அப்படி என்றால் வேலை செய்யாதவர்கள் அல்லது செய்ய முடியாதவர்கள் - குழந்தைகள், வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், உடல் ஊனமுற்றோர் - இவர்கள் மனிதர்கள் இல்லையா?

இவர்கள் மனிதர்கள்தாம். ஆனால், வேலை எல்லா மனிதர்களையும் - செய்பவர்களையும், செய்யாதவர்களையும் - வரையறுக்கிறது.

நாம் செய்யும் ஒவ்வொன்றிலும் வேலை அடங்கியிருக்கிறது.

எலுமிச்சம்பழம், சீனி, கரண்டி, டம்ளர், தண்ணீர் - இவை மட்டும் ஜூஸை உருவாக்கிவிட முடியுமா? இவைகளோடு வேலை சேரும்வரை இவைகள் வெறும் கச்சாப்பொருள்களே. நாம் பயன்படுத்தும் பொருள்கள் என்றாலும் சரி, சேவைகள் என்றாலும் சரி எல்லா இடத்திலும் உழைப்பு அல்லது வேலை இருக்கின்றது.

நம் முதற்பெற்றோர்கள் செய்த தவற்றினால் வந்த சாபம்தான் வேலை என பல நேரங்களில் நாம் நினைக்கிறோம். உண்மை அதுவல்ல. முதற்பெற்றோர் வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் கடவுளின் கொடைகளில் காலந்தள்ளும் சோம்பேறிகளாக மாறியிருப்பர். என்று வேலை செய்யத் தொடங்கினார்களோ அன்றுதான் அவர்கள் கடவுளைப் போல ஆகின்றனர். ஆக, பாம்பின் சொல் இங்கே அப்படியே பலிக்கிறது. 'இந்தப் பழத்தை உண்டால் நீங்கள் கடவுள்போல ஆவீர்கள்.' கடவுள் ஒருவரே வேலை செய்தார். இப்போது இவர்களும் வேலை செய்வதால் இவர்கள் கடவுளைப் போல ஆகின்றார்கள்.

பவுல் கூடாரத் தொழில் செய்தார்.

கூடாரத் தொழில் என்பது பனை அல்லது பனை போன்ற ஓலைகளால் கூரை வேயும் தொழில். பவுலின் இந்த வேலை எனக்கு மூன்று பாடங்களைக் கற்பிக்கின்றது:

அ. ஒன்று, தன்மானம். தான் செய்வது நற்செய்திப் பணி என்றாலும், தன் பணிக்கேற்ற கூலியை மற்றவர்களிடம் இருந்து பெற அவர் தகுதியுள்ளவர் என்றாலும் தானே வேலை செய்கின்றார். ஆக, தன் வயிற்றுக்குரியதை தானே சம்பாதிக்கின்றார். இப்படி வாழ்வது அவருக்கு தன்மானத்தை தந்திருக்கும். ஜெர்மன் நாட்டில் மார்க் என்ற நாணயம் புழக்கத்தில் இருந்தபோது, 'மார்க் எழுதிய நற்செய்தி' என்று குருத்துவத்தை கிண்டல் செய்வார்கள். அதாவது, கொடுக்கப்படும் மார்க் அளவைப் பொறுத்தே அருள்பணியாளர்கள் அருள்பணி செய்தனர். பவுல் யாரையும் சார்ந்திராமல் தன்னை மட்டுமே சார்ந்திருக்கின்றார்.

ஆ. இரண்டு, நேர மேலாண்மை. ஒவ்வொன்றுக்கும் அதனதன் நேரத்தை ஒதுக்க பவுலால் முடிந்தது. ஒன்றை வளர்ப்பதற்காக மற்றொன்றோடு அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. சமரசம் செய்துகொள்ளாமல் தன் உழைப்பையும், தன் நற்செய்தி பணியையும், தன் உறவுகளையும் சமாளிக்கத் தெரிந்திருக்கின்றார் பவுல்.

இ. மூன்று, சக மனிதர்களின் உழைப்பை மதிப்பது. தான் தங்கியிருக்கும் வீட்டார் சாதாரண நபர்கள் என்றாலும், அவர்களோடு உணவருந்தும் பவுல், அவர்களோடு உழைக்கவும் செய்கிறார். இதுதான் முழுமையான ஒன்றிப்பு. அதே நேரத்தில் பவுலால் அரண்மனையிலும் இருக்க முடிந்தது. சிறையிலும் கைதியாக இருக்க முடிந்தது. முன்பின் தெரியாதவர் வீட்டிலும் நல்ல விருந்தாளியாக இருக்க முடிந்தது. தன்னை மறுக்கும், தன்னை இழக்கும் ஒருவரே இப்படிப்பட்ட பண்பைப் பெற முடியும்.

வேலையின் சுமை உணர்தலும் சுகமே!


Tuesday, May 23, 2017

சாமி அல்லது கடவுள்

கடந்த மாதம் சிறுகதை ஒன்றை வாசித்தேன்.

இந்திய மரபில் கடவுள் பற்றிய புரிதல் என்ன என்பதை விளக்கும் கதை அது.

ஒரு சிறிய கிராமம். அந்தக் கிராமத்தின் நடுவில் ஒரு சிறிய கோயில். அந்தக் கோயிலுக்குள் ஒரு சாமி சிலை. அது ஒரு கல் சிலை. அந்தச் சிலைக்கு தினமும் மாலையிட்டு, பூசை செய்து வழிபடுகின்றனர் அந்தக் கிராமத்து மக்கள். அந்த ஊருக்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் வருகின்றார். அந்த ஊர் மக்களின் கோயில் மற்றும் பூசைகளைப் பார்த்துவிட்டு, அந்த சாமி சிலையை ஃபோட்டோ எடுக்க விரும்புகிறார். ஊர் மக்களும் அனுமதி தருகின்றனர். சாமி சிலை கோயிலுக்கு உள்ளே இருந்ததால் ஃபோட்டோவில் சரியாக விழவில்லை. சிலையை வெளியே எடுத்து வைத்து ஃபோட்டோ எடுக்க அனுமதி கேட்கின்றார். ஊர் மக்களும் சம்மதிக்கின்றனர். வெளியே அவர் எடுத்து வைத்து ஃபோட்டோ எடுத்துக்கொண்டிருந்தபோது, அந்த ஊரின் பெரியவர் ஒருவர், 'உங்களுக்குப் பிடித்தால் இந்த சாமி சிலையை நீங்கள் கொண்டு போங்கள். நாங்கள் வேறொன்றை வைத்துக்கொள்கிறோம்!' என்கிறார். ஆக, 'சாமி அல்லது கடவுள் தன்மை என்பது அந்தக் கல்லில் இல்லை. மாறாக, வணங்குபவரின் உள்ளத்தில்தான் இருக்கிறது' எனக் கண்டுகொள்கிறார் அந்த வெளிநாட்டுக்காரர்.

சாமி அல்லது கடவுள் பற்றி ஒவ்வொரு மரபும் ஒவ்வொரு வகையான புரிதலைக் கொண்டிருக்கிறது.

நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 17:15-22, 18:1) இப்படிப்பட்ட ஒரு நிகழ்வைத்தான் வாசிக்கின்றோம்.

ஏதென்ஸ் நகரின் தொழுகைக்கூடங்களைச் சுற்றி வருகின்றார் பவுல். அங்கே, 'நாம் அறியாத தெய்வத்துக்கு' என்ற ஒரு பலிபீடத்தைக் காண்கிறார். தான் பார்த்ததை வைத்து தன் உரையாடலைத் தொடங்குகிறார். அத்தோடு கிரேக்கர்களின் கவிதைகளையும் மேற்கோள் காட்டுகின்றார்.

இது எதைக் காட்டுகிறது? தூய பவுலின் பரந்த அறிவை. அதாவது, எபிரேயத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்த பவுல் கிரேக்கமும் நன்றாக அறிந்திருக்கிறார். ஏதென்ஸ் நகர மக்களுக்கு அவர்கள் மொழியில் பேசி அவர்கள் உள்ளத்தைக் கொள்ளையிடுகின்றார்.

பவுல் நமக்குச் சொல்லும் முதல் பாடம்: நாம் உரையாடத் தொடங்குமுன் அடுத்தவரின் மொழி என்ன என்பதை தெரிந்து, அடுத்தவரின் புரிதல்திறன் எது என்பதை உணர்ந்து அதிலிருந்து தொடங்க வேண்டும்.

இரண்டாவதாக, நற்செய்தி அறிவிக்கும் ஆர்வம். புதிய இடம், புதிய மக்கள், புதிய மொழி என்று ஓய்ந்திருக்காமல், அந்த புதிய இடத்திலும் தன் இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். ஆகையால்தான் இரண்டு நாள்களுக்கு முன் வாசித்தோம். ஆற்றங்கரையில்கூட பவுல் போதிக்கின்றார்.

மூன்றாவதாக, ஏதென்ஸ் மக்களின் அறிவுப்பசி. புதிதாக எது இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் திறந்த உள்ளம். நம் இந்திய மண்ணில் நிறைய மதங்கள் இருக்கின்றன. இந்து மதம், பொளத்தம், சமணம், சோராஸ்டிரியனிசம் என நான்கு மதங்களுக்கு தாயாகவும், இசுலாம், கிறிஸ்தவம் என்னும் இரண்டு மதங்களுக்குத் தொட்டிலாகவும் இருக்கும் நம் மண். இங்கே கிறிஸ்தவத்தில் இருக்கும் எனக்கு பல நேரங்களில் என் மதத்தை மற்றவர்களிடமிருந்து காப்பாற்றுவதிலேயே நேரமும், ஆற்றலும் போய்விடுகிறது.

நிற்க.

என் கடவுள் அனுபவம் என் உள்ளத்தில் இருந்தால் என் கண்முன் சிலையோ, சுரூபமோ எது இருந்தாலும், இல்லை என்றாலும் எல்லாம் இறைமயமே!

Monday, May 22, 2017

கைதிகள் விருந்தாளிகள் ஆன கதை

திருத்தூதர் பணிகள் நூலை ஒற்றைச் சொல்லில் சொல்ல வேண்டுமென்றால், 'வியப்பு' என்று சொல்லலாம். இங்கே பதிவு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் எல்லாமே நம்மை வியக்க வைக்கின்றன. கடவுளின் செயல்பாடுகள் அப்படித்தான் போலும்! அவைகளுக்கு லாஜிக் இல்லை. அவைகள் நம்மை வியக்க வைக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு நிகழ்வையே நாளைய முதல் வாசகத்தில் (காண். திப 16:22-34) வாசிக்கின்றோம்.

பிலிப்பு நகரில் சிறையிடப்படும் பவுலும், சீலாவும் வியப்புக்குரிய வகையில் தப்பிப்பதையும், அவர்களின் தப்பித்தல் சிறைக்காவலரையும் மனமாற்றுவதையும் எடுத்துச் சொல்கிறது இந்த வாசகம்.

சீலா என்றவுடன் பெண் என நினைத்துவிடாதீர்கள். நிறைய வருடங்கள் நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆங்கிலத்தில் 'சைலஸ்'. தமிழில் 'சீலா.'  இருவருக்கும் கடுங்காவல் விதிக்கப்படுகிறது. உடைகள் களையப்படுகின்றன. ஆகையால் இவர்கள் தப்பினாலும் நிர்வாணமாக ஓட வேண்டியிருக்கும். இது முதல் தண்டனை. அவர்கள் உட்சிறையில் தள்ளப்பட்டார்கள். அதாவது, மூன்றடுக்கு சிறையில் மூன்றாவது உள்ளடுக்கில் இருந்தனர். கால்களைத் தொழுமரத்தில் உறுதியாய் மாட்டியிருந்தனர். ஆக, நகலவும் முடியாத நிலையில் கைதிகளாக இருக்கின்றனர்.

ஆனாலும், கடவுளுக்குப் புகழ் பா பாடுகின்றனர். இது எப்படி என்பதுதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது?

வலி, சித்ரவதை, தனிமை, பசி, சோர்வு இவற்றின் நடுவில் கடவுளைப் புகழ இவர்களால் எப்படி முடிந்தது? இவர்கள் பாடுவதை மற்ற கைதிகள் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆக, இவர்கள் தாங்கள் பாடுவதைக் குறித்து வெட்கப்படவில்லை.

அந்நேரம் ஏதோ ஒரு அற்புதம் நிகழ, இவர்களின் கை மற்றும் கால் விலங்குகள் அகல்கின்றன. சிறைக் கதவுகள் திறக்கப்படுகின்றன.

அந்நேரத்தில் விழிக்கும் சிறைக்காப்பாளர், கைதிகள் தப்பித்திருப்பார்கள் என எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ள நினைக்கிறார். கைதிகள் தப்பினால் காப்பாளருக்க மரண தண்டனை என்பதால், தங்கள் மானத்தை காத்துக்கொள்ள நினைக்கிறார் காப்பாளர்.

ஆனால், பவுலும், சீலாவும் அதைவிட தன்மானம் உள்ளவர்கள். தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அப்படியே நிற்கிறார்கள். இவர்களின் இந்த செயல் காப்பாளரின் மனதைத் தொடுகிறது. மனம் மாறுகிறார் அவர் குடும்பத்தோடு. தன் வீட்டில் இவர்களை விருந்தினர்களாக அழைக்கின்றார்.

ஆக, கைதியாக வந்தவர் விருந்தினராக மாறுகின்றார்.

எந்தச் சூழலிலும் தங்களைக் கைதிகள் என பவுலும், சீலாவும் நினைக்கவில்லை.

இவர்களின் இந்த மனச்சுதந்திரம் அல்லது உள்ளத்தின் கட்டின்மை நம் வாழ்க்கைப்பாடமாகலாமே!

Saturday, May 20, 2017

திக்கற்றவர்களாக விடமாட்டேன்!

இக்கால நம் வாழ்க்கை ஒரு முரண். பெரிய கட்டடங்கள். ஆனால் சிறிய உள்ளங்கள். அகன்ற பாதைகள். ஆனால் குறுகிய கண்ணோட்டங்கள். அதிகமாகச் செலவழிக்கிறோம். ஆனால் குறைவாக வைத்திருக்கின்றோம். அதிகமாக வாங்குகின்றோம். ஆனால் அவற்றைக் குறைவாகவே பயன்படுத்துகின்றோம். பெரிய வீடுகள். ஆனால் சிறிய குடும்பங்கள். அதிக வசதிகள். ஆனால் குறைவான நேரம். அதிக கல்வி. ஆனால் குறைவான அறிவு. அதிகமான பகுத்தறிவு. ஆனால் குறைவான நீதி. அதிகமான மேதைகள். மிக அதிகமான பிரச்சினைகள். அதிகமான மருந்துகள். மிகக் குறைவான உடல்நலம். நம் சொத்துக்களைக் கூட்டிவிட்டோம். ஆனால் மதிப்பீடுகளைக் குறைத்துவிட்டோம். அதிகம் பேசுகிறோம். மிகக் குறைவாகவே அன்பு செய்கிறோம். அதிகம் வெறுக்கிறோம். வெகு அதிகம் எரிச்சல்படுகிறோம். அதிக வருடங்கள் சுவாசிக்கின்றோம். ஆனால் குறைவான வருடங்களே வாழ்கின்றோம். நிலவிற்குச் சென்று பத்திரமாய் வீடு திரும்புகின்றோம். ஆனால் பக்கத்து வீட்டிற்குச் சென்று வர பயப்படுகின்றோம். நமக்கு வெளியில் இருப்பவற்றை ஆளக் கற்றுவிட்டோம். ஆனால் நம் உள்ளத்தை ஆள நாம் மறந்துவிட்டோம்.

மனித வாழ்வில் முரண்பாடுகள் எதார்த்தமானவை. காலத்தின் சூழலுக்கேற்ப முரண்பாடுகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. இயேசுவின் சீடர்களின் வாழ்வில் விளங்கிய ஒரு முரண்பாட்டை இயேசு களையக் கற்றுக்கொடுப்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் மையம். இயேசுவின் உடனிருப்பைக் கண்டும், அனுபவித்தும் இருந்த சீடர்களின் உள்ளங்களில் விளங்கிய முரண்பாடுகள்; இரண்டு: 1) உள்ளத்தில் கலக்கம், 2) அச்சம். அச்சத்தைப் போக்கி ஆனந்தம் தந்த இயேசு அவர்களுக்கு அமைதியைக் கொடையாகக் கொடுக்கின்றார். அந்த அமைதியை அருள்பவராக தூய ஆவியானவரை வாக்களிக்கின்றார். 'நான் உங்களைத் திக்கற்றவற்களாக விட்டுவிட மாட்டேன்' என்று தூய ஆவியானவரைத் துணையாளராகவும், தான் கற்பித்ததை அவர்களுக்கு விளக்கிச் சொல்லும் ஆசிரியராகவும், தான் செய்தவற்றை நினைவூட்டுபவராகவும் முன்வைக்கின்றார்.

'நான் உங்களைத் திக்கற்றவர்களாக விட மாட்டேன். 
உங்களிடம் திரும்பி வருவேன்'

என்னும் இயேசுவின் வாக்குறுதியை இன்றைய சிந்தனையின் மையப்பொருளாக எடுத்துக்கொள்வோம்.

தன் சீடர்களின் பாதங்களைக் கழுவிய இயேசு தொடர்ந்து அவர்களோடு பந்தியில் அமர்ந்திருக்கும்போது நிகழ்ந்த உரையாடலின் ஒரு பகுதியே இந்த வாக்குறுதி. வருகின்ற ஞாயிறு விண்ணேற்ற ஞாயிறாகவும், அதற்கு அடுத்த ஞாயிறு தூய ஆவி ஞாயிறாகவும் இருப்பதால் இன்றைய நற்செய்தி இயேசுவின் பிரிதல் பற்றியும், தூய ஆவியின் வருகை பற்றியும் பேசுகிறது. இந்தப் பின்புலத்தில் இயேசுவின் வார்த்தைகளை நாம் புரிந்துகொள்வோம்.

பாடப் பின்புலம்

இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு பற்றி சீடர்கள் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், அரசல் புரசலாக தாங்களே அவற்றைப் பற்றிக் கேட்டிருந்தனர். இயேசுவிற்குப் பின் என்ன நடக்கும் என்ற கேள்வி ஏதோ ஒரு நிலையில் எழுந்திருக்கும். தான் இல்லாத வெறுமையை அவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை உணர்ந்து இயேசு தாமாகவே தன் என்றென்றைக்குமான உடனிருப்பை அவர்களிடம் சொல்லியிருக்கலாம். அல்லது இயேசுவின் உயிர்ப்பு மற்றும் விண்ணேற்றத்துக்குப் பின் நற்செய்தி நூல்கள் எழுதப்பட்டபோது, அவரின் உடனிருப்பை அவரே முன்குறித்து சொன்னதாக யோவான் எழுதியிருக்கலாம்.

நற்செய்தி அமைப்பு

இன்றைய நற்செய்தி வாசகம், 'கட்டளைக் கடைப்பிடிப்பதில்' தொடங்கி, 'கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில்' முடிகிறது. 'நான் உங்களிடம் அன்பு செலுத்தியதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்' என்பதே அந்தக் கட்டளை.

அன்பின் பரிசுதான் தூய ஆவியானவர். இதை அருள்பவர் தந்தை. ஆக, தந்தை, மகன், தூய ஆவியானவர் ஆகிய மூவரும் ஒரே இடத்தில் குறிக்கப்பட்டுள்ள சில விவிலிய பகுதிகளில் இன்றைய நற்செய்தியும் ஒன்று. தூய ஆவியானவரின் மூன்று பண்புகள் இங்கே சொல்லப்படுகின்றன:

அ. அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்
ஆ. அவர் உங்களோடும், உங்களுக்குள்ளும் இருக்கிறார்
இ. உலகம் அவரை அறிந்துகொள்ளாது. ஆனால் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்

இயேசுவின் வாக்குறுதி

'நான் உங்களை திக்கற்றவர்களாக விட மாட்டேன்' - 'திக்கற்றவர்களாக' என மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையை ஆங்கிலத்தில் 'ஆர்ஃபன்' ('அநாதை') என மொழிபெயர்த்துள்ளார்கள். 'திக்கு' என்றால் 'திசை'. அநாதைகள் திசையற்றவர்கள். அன்-ஆதை (ஆதரவற்றவர்கள்). பெற்றோர் இல்லாத குழந்தைகளை நாம் அநாதைகள் என்கிறோம். ஏனெனில் பெற்றோர்களே குழந்தைகளுக்கு திசை காட்டுபவர்கள். வீடு இருக்கும் திசை, பள்ளி இருக்கும் திசை, உற்றார் இருக்கும் திசை என வாழ்வின் எல்லாப் பருவங்களிலும், 'இத்திசையில் போ!' 'அத்திசையில் போகாதே!' என வழிகாட்டுபவர்கள் பெற்றோர்கள். இப்படிப்பட்ட பெற்றோர்கள் இல்லாத போது குழந்தைகள் அநாதைகள் - திசையற்றவர்கள் அல்லது திக்கற்றவர்கள் ஆகிவிடுகின்றனர்.

நம் வாழ்வில் திக்கற்ற நிலை என்பது நிறைய இருக்கிறது. இந்த நாள்களில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் பள்ளித் தேர்வு முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. நீட் மற்றும் தகுதித் தேர்வுகள் நடத்தி உயர்கல்வி தொடர மாணவ, மாணவியர் தயாராக இருக்கின்றனர். பல்வேறு கல்லூரி நிறுவனங்களும், இதழியல்துறையும், அரசு சாரா நிறுவனங்களும், 'வழிகாட்டி வகுப்புகள்' வழியாக மாணவர்களின் பயணத்தை இலகுவாக்கிக்கொண்டிருக்கின்றனர். 'நீ இத்திசையில் போ!' 'அத்திசையில் போகாதே!' என நிறைய வழிகாட்டுதல்கள் நடக்கின்றன. பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் நுழையும்போது மட்டுமல்ல. நம் வாழ்வின் எல்லா நிலைகளிலும் திசை தேவைப்படுகிறது.

இன்றைய இறைவாக்கு வழிபாட்டில் மூன்று வகையான திக்கற்ற நிலையைப் பார்க்கிறோம்:

அ. புறவினத்தார் என்ற திக்கற்ற நிலை
ஆ. தீமை செய்வது என்னும் திக்கற்ற நிலை
இ. கலக்கம் என்னும் திக்கற்ற நிலை

அ. புறவினத்தார் என்ற திக்கற்ற நிலை

இன்றைய முதல் வாசகத்தில் நற்செய்தி சமாரியா நோக்கி நகர்வதை நாம் பார்க்கிறோம். இது ஒரு முக்கியமான நிகழ்வு. ஏனெனில் இந்த நிகழ்வு நடக்கவில்லை என்றால், இதை எழுதிக்கொண்டிருக்கும் நானும், வாசித்துக்கொண்டிருக்கும் நீங்களும் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றிருக்க முடியாது. இந்த நிகழ்வு மட்டும் நடக்கவில்லை என்றால், கிறிஸ்தவம் யூத மதத்தின் ஒரு சிறிய பிரிவாக முடங்கி இருக்கும். 'நாம்-அவர்கள்,' 'யூதர்கள்-சமாரியர்கள்' என்ற நிலையில், யூதர்கள் தங்களையே மேன்மையாகக் கருதி, புறவினத்தாரை ஒதுக்கி வைத்திருந்தனர். ஆனால், பிலிப்பு போன்றவர்களின் நற்செய்திப் பணியால் சமாரியர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்கின்றனர். கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதன் அடையாளமாக தூய ஆவியின் அருள்பொழிவு இருந்தது. யோவானும், பேதுருவும் அவர்கள்மேல் கைகளை வைக்க அவர்கள் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறாக, சமாரியர்கள், 'புறவினத்தார்' என்ற திக்கற்ற நிலையில் இருந்தாலும், அவர்களைத் தேடி நற்செய்தி செல்கிறது. அவர்கள்மேல் தூய ஆவி அருளப்படுகின்றார்.

ஆ. தீமை செய்வது என்ற திக்கற்ற நிலை

இன்றைய இரண்டாம் வாசகம் தீமை செய்வது என்ற திக்கற்ற நிலை பற்றி பேசுகின்றது. தீமை, பரத்தைமை, கூடா ஒழுக்கம், பொய், வன்முறை, அத்துமீறல் என மலிந்திருந்த சமூகத்தில் சிலர் மட்டும் நல்லவர்களாக இருப்பது மிகவும் கடினமாக இருந்தது. கிறிஸ்தவர் - கிறிஸ்தவர் அல்லாதவர் என எல்லாருக்கும் ஒரே முடிவுதான் என்றாலும், ஏன் ஒருவர் மட்டும் நல்லவராகவும், கட்டளைகளைக் கடைப்பிடிப்பவராகவும் இருக்க வேண்டும்? என்ற கேள்வி எழுந்தது. மற்றவர்களின் ஒழுக்கமின்மை கிறிஸ்தவர்களுக்கு இடறலாக இருந்தது. இந்த இடறலில் நம்பிக்கை ஊட்டி ஊக்கம் தருகின்றார் பேதுரு. தீமை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்ற அவர், 'தீமை செய்து துன்புறுவதைவிட நன்மை செய்து துன்புறுவதே மேல்' என்கிறார்.

இ. கலக்கம் என்ற திக்கற்ற நிலை

தன் பிரிவு தன் சீடர்களுக்குள் ஏற்படுத்தும் வெற்றிடத்தை கலக்கம் என பதிவு செய்கின்றார் யோவான். 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம். கடவுள்மேல் நம்பிக்கை கொள்ளுங்கள். என்மேலும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்று சொல்லும் இயேசு அவர்களின் கலக்கம் போக்கும் மருந்தாக தன் உடனிருப்பைத் தருகின்றார். இயேசுவின் உடனிருப்பு அவரின் உயிர்ப்புக்குப் பின் இன்னும் அதிக பரவலான ஒன்றாக மாறிவிடுகிறது. இப்போது உடல் கொண்டிருக்கும் இயேசு காலத்திற்கும், இடத்திற்கும் உட்பட்டு இருக்கின்றார். ஆனால் உயிர்ப்புக்குப் பின் காலமும், இடமும் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க இயலாது. அவர் அவற்றைக் கடந்துவிடுகிறார்.

இன்றைய இறைவாக்கு வழிபாடு நமக்கு வைக்கும் வாழ்வியல் சவால்கள் எவை?

1. என் வாழ்வின் திக்கற்ற நிலை எது?

இன்று நான் எதை நோக்கி அல்லது எந்த திசையில் பயணம் செய்கின்றேன்? என் பயணம் எப்படி இருக்கிறது? நாம் போகின்ற திசை சரியானது என்பதை நாம் எப்படி கண்டுகொள்வது? இன்றைய நமது சந்தைக் கலாச்சாரத்தில் ஒட்டுமொத்தமாக நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்பதே நமக்குத் தெரிவதில்லை. அன்றாடம் வேலை செய்கிறோம். படிக்கிறோம். பயணம் செய்கிறோம். நாள்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. கோயில், திருமணம், நல்லது, கெட்டது, மருத்துவம், உடல்நலம் என வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம் அனைவரின் வழிகளும் ஒன்றல்ல. இப்படி இருக்க என் வாழ்வின் திக்கற்ற நிலைக்கான மருந்தை நான் எங்கே கண்டுகொள்கின்றேன்? என் வாழ்வின் திசையை நான் கண்டுகொள்ள வேண்டுமென்றால் என் வாழ்வை நான் இயேசுவுக்குள் அல்லது அவருடைய ஆவியானவருக்குள் வைத்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு நடக்கும் எதன்மேலும் நமக்கு கன்ட்ரோல் இல்லை என்பது தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. 'ஆண்டவரே வீட்டைக் கட்டுகின்றார். ஆண்டவரே நகரைக் காக்கின்றார்.' நாம் வீட்டைக் கட்டுவதுபோலவும், நகரைக் காப்பதுபோலவும் தெரிகிறது. ஆனால் கட்டுவதும், காப்பதும் அவரே.

நாம் நிறைய கூட்டத்தில் இருந்தாலும், பெரிய குடும்பத்தில் இருந்தாலும், நம்மைச் சுற்றி நிறையப் பேர் இருந்தாலும் நாம் தனிமையாக, அநாதையாக இருக்கின்ற உணர்வு சில நேரங்களில் நம்மிடம் தோன்றுகிறது. ஏன்? படைக்கப்பட்ட நமக்கு படைத்தவரைத் தவிர வேறு யாரும் முழு பாதுகாப்பையும், உடனிருப்பையும் தர முடியாது என்பதையே இது காட்டுகிறது. நம்மிடம் இருக்கிற குறையை அல்லது வெற்றிடத்தை நிரப்ப வல்லவர் இறைவன் ஒருவரே. சக மனிதர்களும், படைப்பு பொருள்களும், பயன்பாட்டுப் பொருள்களும் வெற்றிடத்தை நிரப்ப முடியாது. ஏனெனில், வெற்றிடங்கள் எப்படி வெற்றிடங்களை நிரப்ப முடியும்?

2. எல்லைகள் தாண்டும் நற்செய்தி

யூத எல்லையைத் தாண்டி புறவினத்து எல்லைக்குள் நுழைகிறது நற்செய்தி. நற்செய்தியை யாரும் வேலி போட்டு வைக்க முடியாது. தூய ஆவியின் கொடைகளுக்கும் வேலிகள் போட முடியாது. நாம் இன்று நற்செய்தியை அறிவிக்கிறோமா? முதல் இரண்டு நூற்றாண்டுகள் நற்செய்தி வேகமாக பரவியது. அந்த வேகத்தின் 100ல் ஒரு பகுதி கூட இப்போது இல்லை. எல்லாம் நிறுவனமானபின் நாம் நற்செய்தியை தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம். நம்மால் நம் வேலியைக்கூட தாண்ட முடியவில்லை. மேலும், தூய ஆவி எங்கே, யாரிடம், எப்போது செயலாற்றலாம், செயலாற்ற முடியாது என்ற வரையறைகளையும் வைத்துக்கொண்டோம். இந்நிலையில் தொடக்க காலத்தில் சமாரியக் கிறிஸ்தவர்கள் பெற்ற அனுபவத்தை நாம் எப்படி மற்றவர்களுக்குக் கொடுக்கப்போகிறோம்.

3. தீமையா அல்லது நன்மையா

எல்லாரும் தீமை செய்கிறார்கள் என்பதற்காகவும், தீமை செய்தால்தான் எல்லாரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதற்காகவும் நாம் தீமை செய்வதும், தீமையில் நிலைத்திருப்பதும் சரி அல்ல. மாறாக, ஒரு மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்க நம் ஒவ்வொருவராலும் முடியும்.

இறுதியாக,

'அவர் உங்களுக்குள் இருக்கிறார்' என தூய ஆவியானவரைப் பற்றிச் சொல்கின்ற இயேசுவின் வாக்குறுதி, 'நான் உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன். நான் உங்களிடம் திரும்பி வருவேன்' என்பதாக இருக்கிறது.

இந்த வாக்குறுதியை அனுபவிக்கின்ற நாம் நம் வாழ்வின் சின்ன ஓட்டத்தில் ஒருவர் மற்றவருக்கு திசைகாட்டியாகவும், திசையாகவும், தீர்வாகவும், உடனிருப்பாகவும் இருந்தால் எத்துணை நலம்!

Tuesday, May 9, 2017

கைகளை விரிக்க

'பவுலையும் பர்னபாவையும் எனக்கென ஒதுக்கி வையுங்கள்.

அவர்கள் இறைவேண்டல் செய்து அவர்கள்மேல் கைகளை விரிக்க அவர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டார்கள்'

நாளைய முதல் வாசகத்தில் பவுலும், பர்னபாவும் புதிய பணிக்காக தெரிந்தெடுக்கப்படும் நிகழ்வை நாம் வாசிக்கின்றோம். இங்கே ஆச்சர்யம் என்னவென்றால் தூய ஆவியானவரைப் பொழிவது ஒருவர் மற்றவரின் கடமையாக, உரிமையாக இருக்கிறது.

நேற்றைய முதல் வாசகத்தில் 'கிறிஸ்தவர்கள்' என்னும் பெயர் தோற்றத்தை வாசித்தோம். பெயர் உருவாகும்போது ஒருவரின் சிந்தனையை நாம் ஒரு கூட்டுக்குள் அடைத்துவிடுகிறோம்.

காரல் மார்க்ஸ் உயிரோடு இருக்கும் வரை அவர் நிறைய சிந்தித்தார். ஆனால், மார்க்சியம் என்ற வார்த்தை உருவானபின் அவர் இப்படித்தான் என நாம் வரையறை செய்துவிட்டோம். மகாத்மா காந்தி இருந்தபோது இருந்த உயிரோட்டம் 'காந்தியம்' என்ற ஒன்று உருவானவுடன் சுருங்கிப்போகிறது.

கிறிஸ்தவம் என்ற வார்த்தைக்கும் அந்த ஆபத்து உண்டு.

யார் யார் கைகளை விரிக்கலாம், யார் யார் மேல் தூய ஆவி இறங்கலாம் என இப்போது வரையறை செய்துவிட்டோம். ஆனால் தொடக்க கிறிஸ்தவர்கள் யார் மேலும் கைகளை விரிக்கின்றனர், எல்லாரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கின்றனர்.

பெயரிட்டு சுருக்காதவரை எதுவும் சுதந்திரமாகச் சுற்றி வருகிறது.

கிறிஸ்தவர்

'அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைப் பெற்றார்கள்.'

(காண். திப 11:19-26)

'கிறிஸ்தவர்' என்னும் பெயர் கிறிஸ்தவர்களுக்கு முதல் முதலாக அந்தியோக்கியாவில்தான் கிடைத்தது என பதிவு செய்கிறார் லூக்கா. அப்படி என்றால் அதற்கு முன்னால் அவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?

'நசரேயர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள்.

'புதிய நம்பிக்கையாளர்கள்' என அழைக்கப்பட்டார்கள்.

'புரட்சியாளர்கள்' என அழைக்கப்பட்டனர்.

இப்படி பல பெயர்கள்?
பெயர் ஏன் முக்கியம்?

பெயர்தான் முக்கிய அடையாளம். உதாரணத்திற்கு, அஇஅதிமுக என்ற பெயரை தக்க வைத்துக்கொள்வதற்காக இப்போது அரசியலிலும் சண்டை நடக்கிறது.

இயேசு அல்லது நசரேயன் என்பது வரலாற்றுப் பெயர். கிறிஸ்து என்பது நம்பிக்கைப் பெயர்.

இயேசு காணக்கூடிய வரலாற்று நபர்.

கிறிஸ்து காண முடியாத நம்பிக்கை நபர்.

ஆக, காணக்கூடிய நிலையிலிருந்து காணக்கூடாத நிலைக்கு கடந்து போகிறது.

சிறிய வட்டத்தை உடைத்து பெரிய வட்டத்திற்குள் பயணமாகிறது.

'கிறிஸ்தவர்' என்பது 'கிறிஸ்து' 'அவர்' என்ற இரண்டு வார்த்தைகளின் கூட்டே. அப்படி என்றால் ஒவ்வொருவரும் அப்படி இருக்கத்தானே அழைப்பு பெறுகிறோம்.

Sunday, May 7, 2017

நாம் - அவர்கள்

'நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?'

... ... ...

'தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே!'

'நான் பேசத் தொடங்கியதும் தூய ஆவி முதலில் நம்மீது இறங்கி வந்ததுபோல் அவர்கள் மீதும் இறங்கி வந்தது.'

'நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?'

(காண். திப 11:1-18)

திருத்தூதர்கள்மேல் தூய ஆவி பொழியப்பட்டவுடன் அவர்கள் ஒரு மேஜிக் போல மாற்றம் பெற்றாலும், அவர்கள் நடுவிலும், தொடக்க கிறிஸ்தவர்கள் நடுவிலும் நிறைய வாழ்வியல் சிக்கல்களும், நம்பிக்கைப் போராட்டங்களும், அறநெறி தர்க்கங்களும் இருந்தன. குறிப்பாக, விருத்தசேதனம் பெற்றவர் - பெறாதவர், தூய்மை - தீட்டு என்று வேறுபாடுகள் இருந்ததை நாளைய முதல் வாசகம் நமக்குச் சொல்கிறது.

கொர்னேலியு வீட்டில் சென்று உணவருந்துகிறார் பேதுரு. கொர்னேலியு ஒரு புறவினத்தவர். அதாவது, விருத்தசேதனம் செய்யாதவர். இத்தகையோரின் இல்லங்களைச் சந்திப்பதே தீட்டு எனக் கருதப்பட, பேதுருவோ அங்கே சென்று உணவும் அருந்திவிடுகின்றார். இப்படி 'தீட்டுப்பட்ட' பேதுரு தன் திருச்சபைக்குத் திரும்பியபோது, 'நீர் ஏன் இப்படிச் செய்தீர்?' என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்படுகிறது.

பேதுருவின் பதில் மூன்று நிலைகளில் இருக்கிறது:

அ. கடவுள் தூய்மை எனக் கருதுவதை நான் எப்படி தீட்டு எனக் கருதுவது?

ஆக, தூய்மை - தீட்டை நிர்ணயிப்பவர் நீங்களோ, நானோ அல்ல. மாறாக, கடவுளே. அவரின் பார்வையில் எல்லாம் தூய்மையாய் இருக்க, நான் அல்லது நீங்கள் எப்படி தூய்மை - தீட்டு பாகுபாட்டை உருவாக்க முடியும்?

ஆ. அவர்களும் கொடையைப் பெற்றார்கள்

ஆக, பேதுரு மற்றும் அவருடைய திருச்சபையில் இருக்கும் தூய ஆவியும், புறவினத்தாரின் மேல் பொழியப்பட்ட தூய ஆவியும் ஒன்றுதான். நம்மை இயக்கும் ஆவியானவர் வேறுபாடு பார்ப்பதில்லை. வேறுபாடுகள் வெளியில்தாம் இருக்கின்றனவே தவிர நம் உள் இல்லை. ஆக, நம் உள் இருந்து நம்மை இணைக்கும் ஆவியானவர்தான் முக்கியமே தவிர வெளிப்புற வித்தியாசங்கள் அல்ல.

இ. கடவுளைத் தடுக்க நான் யார்?

கடவுளே நீங்க இப்படிச் செய்யுங்க, அப்படிச் செய்யுங்க என்று நாம் கடவுளுக்கு கட்டு போட முடியாது. ஆக, தான் விரும்பியதை தான் விரும்பியவருக்குச் செய்ய கடவுளுக்கு உரிமை உண்டு. 'அனைத்தையும் அதனதன் நேரத்தில் செம்மையாகச் செய்து முடிப்பவர் அவரே!'

இறுதியாக,

இன்று நம்மிடையே 'தூய்மை - தீட்டு' என்ற பாகுபாடு குறைந்துகொண்டே வந்தாலும், மற்றொரு பக்கம் 'நாம் - அவர்கள்' என்ற பாகுபாடு வளர்ந்துகொண்டுதான் வருகிறது. இதையும் குறைத்துக்கொள்ள அழைக்கிறது நாளைய முதல் வாசகம்.


Saturday, May 6, 2017

ஆயன்போல திருடன்போல

ஏதேன் தோட்டத்தில் விலக்கப்பட்ட கனியை உண்டவுடன் மரங்களுக்குப் பின் ஒளிந்துகொள்கின்றனர் ஆதாமும் ஏவாளும். அவர்களைத் தேடி வருகின்றார் கடவுள். 'நீ எங்கே இருக்கிறாய்?' என்று கேட்கிறார் கடவுள். 'உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்' என்கிறார் ஆதாம். 

குரல் ஒலியைக் கேட்டு அச்சம் கொள்கிறார் ஆதாம்.

'குரல் ஒலி'

நம்மைச் சுற்றி இன்று நிறைய குரல் ஒலிகளைக் கேட்கின்றோம். ஒரு நிமிடம் கண்களை மூடி நம்மைச் சுற்றி இருக்கும் சப்தங்களைக் கேட்க ஆரம்பித்தால் நம்மால் நூற்றுக்கணக்கான ஒலிகளைக் கேட்க முடியும்.

நம் செல்ஃபோனில் செய்தி அல்லது அழைப்பு வரும் ஒலி.

நோட்டிஃபிகேஷன் ஒலி.

அறையில் ஓடும் ஃபேன் அல்லது ஏஸியின் ஒலி.

பறவைகளின் ஒலி.

பேருந்து மற்றும் வாகனங்களின் ஒலி.

தொழிற்சாலைகளின் ஒலி.

நாம் ஃபோனில் கேட்கும் மற்றவரின் ஒலி.

நம்மோடு நேருக்கு நேர் பேசுபவரின் ஒலி.

தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளத்தில் நாம் கேட்கும் ஒலி.

இப்படி ஒலி சூழ் உலகில் நாம் அமர்ந்து கொண்டிருக்கின்றோம்.

இந்த ஒலிகளுக்கு நடுவில் நல் ஆயன் கிறிஸ்துவின் ஒலியும் கேட்கிறது என்றும் அந்த ஒலிக்கு யார் யார் செவிகொடுக்கிறார்கள் என்றும் கேள்வி எழுப்புகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். யோவா 10:1-10).

உயிர்ப்புக்காலத்தில் நான்காம் ஞாயிற்றை 'நல்லாயன் ஞாயிறு' எனக் கொண்டாடுகிறோம். 

'ஆயன்' என்னும் உருவகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வியல் உருவகம். வாழ்வியல் உருவகங்கள் மிக இயல்பாக நம் வாழ்வைப் பாதிக்கக்கூடியவை. ஆகையால்தான் தங்கள் கடவுளை, தங்கள் அரசர்களை, தங்கள் தலைவர்களை, 'ஆயன்' என்று அழைத்து மகிழ்ந்தனர் இஸ்ரயேல் மக்கள்.

'ஆயர் - திருடர்'

இந்த முரண்பாட்டில் கட்டப்பட்டிருக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:

1. ஆயன் வாயில் வழியே நுழைவார் - திருடன் வேறு வழியாக ஏறிக் குதிப்பார்
2. ஆயன் ஆடுகளைப் பெயர் சொல்லி அழைப்பார் - திருடன் அமைதி காப்பார். அவர் குரல் எழுப்பினால் மாட்டிக்கொள்வார். மேலும் அவரது குரல் ஆடுகளுக்குத் தெரியாது.
3. ஆயன்தான் தன் ஆட்டுக்கொட்டிலுக்கு வாயில் - திருடன் வாயில் அல்ல.
4. வாழ்வு தருவதும், அதை நிறைவாகத் தருவதும் ஆயனின் பணி - திருடுவதும், கொல்வதும், அழிப்பதும் திருடனின் பணி.
5. ஆயன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுப்பார் - திருடன் தன் உயிரைக் காக்கும் பொருட்டு ஆடுகளின் உயிரை அழிப்பார்.

இந்த முரண்பாட்டில் 'ஆயன்' என்பதும், 'ஆடு' என்பதும், 'திருடன்' என்பதும் உருவகங்களே.

ஆயன் என்பது தன்னைக் குறிப்பதாகவும், 'ஆடு' என்பது இஸ்ரயேல் மக்களைக் குறிப்பதாகவும், 'திருடன்' என்பது தனக்கு முன் வந்த அனைவரையும் குறிப்பதாகவும் இயேசு மொழிகின்றார்.

திருச்சபை, நாடு, பணியிடம், படிப்பிடம், குடும்பம் என பல இடங்களில் மற்றவர்கள் நமக்கு தலைவர்களாகவும், இவைகளில் சில இடங்களில் நாமே தலைவர்களாகவும் இருக்கின்றோம்.

நம் முன் இருப்பது இரண்டு ஆப்ஷன்:

ஒன்று, ஆயன்போல இருப்பது.

இரண்டு, திருடன் போல இருப்பது.

இவைகளில் நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதுதான் கேள்வி.

மேற்காணும் இரண்டு நிலைகளிலும் மையமாக இருப்பது 'வாழ்வு.'

என்னால் பிறருக்கு வாழ்வு வருகிறது என்றால் நான் ஆயன்.

என்னால் பிறருக்கு இழப்பு வருகிறது என்றால் நான் திருடன்.

ஆயன் நிலை - திருடன் நிலை

இதை இன்று நாம் மூன்று வாழ்க்கை நிலைகள் பாருத்திப் பார்ப்போம்:

1. உறவு நிலைகள்
2. பணி நிலைகள்

1. உறவு நிலைகள்

நம் வாழ்வின் உறவு நிலைகளை 'எனக்கும் எனக்குமான உறவு,' 'எனக்கும் பிறருக்குமான உறவு,' 'எனக்கும் இறைவனுக்குமான உறவு,' 'எனக்கும் இயற்கைக்குமான உறவு' என்று நான்காகப் பிரிக்கலாம்.

எனக்கும் எனக்குமான உறவில் ஆயன் நிலை என்பது என்னை முழுமையாக அறிவதும், என்னை இருப்பது போல ஏற்றுக்கொள்வதும், என் இனியது இன்னாததை பொறுத்துக்கொள்வதும் ஆகும். திருடன் நிலை என்பது என்னையே அறியாமல் இருந்துகொண்டு, அறிந்ததுபோல நடிப்பதும், அல்லது என்னையே அறிய மறுப்பதும் ஆகும். திருடன் நிலையில் நான் என்மேல் தேவையற்ற சுமைகளைச் சுமத்துகிறேன்.

எனக்கும் பிறருக்குமான உறவில் ஆயன் நிலை என்பது பிறரை அறிவதிலும், பிறரை பெயர் சொல்லி அழைத்து உரிமை பாராட்டுவதிலும், பிறருக்குரிய எல்கையை மதிப்பதிலும், பிறரின் உடலை, உணர்வை மதிப்பதிலும் இருக்கிறது. இங்கே திருடன் மனநிலை என்பது நாம் அடுத்தவரின் எல்கைக்குள் அத்துமீறி நுழைவதிலும், அடுத்தவருக்கு உரியதை எனதாக்கிக்கொள்ள நினைப்பதிலும் இருக்கிறது.

எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் அவருக்கு ஆயனாக இருக்க முடியவில்லை என்றாலும், நான் இந்த நிலையில் திருடனாக இல்லாமல் இருக்க முடியும்.

எனக்கும் இயற்கைக்குமான உறவில் ஆயன் நிலை என்பது நான் சார்ந்திருக்கும் இந்த இயற்கையை நேசிப்பதிலும், அதைப் பராமரிப்பதிலும் அடங்கி இருக்கிறது. அதை விடுத்து நான் என் முன் இருக்கும் அனைத்தையும் எனதாக்கவும், வியாபாரம் ஆக்கவும், நுகர்ந்து கொள்ளவும் நினைத்தால் நான் திருடன் ஆகிவிடுகிறேன்.

2. பணி நிலைகள்

திருடனின் பணி என மூன்றை வரையறை செய்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்:

அ. திருடுவது. அதாவது, எனக்கு உரிமை இல்லாத ஒன்றை என் உரிமையாக்கிக்கொள்வது. நான் உழைக்காத ஒன்றை சுரண்டிக் கொள்வது. மிக எளிதான அல்லது குறுக்கு வழியிலான பொருளை நாடுவது. திருட்டு என்பது சில நேரங்களில் கோபத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, ஒரு பெரிய அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன் பாஸ் மேல் இருக்கும் கோபத்தில் அலுவலகத்தில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்வது அல்லது நம் வீட்டில் வேலை பார்க்கும் பெண் அல்லது பையன் நம்மேல் உள்ள கோபத்தைக் காட்டுவதற்காக நம் வீட்டில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்வது அல்லது சேதப்படுத்துவது என்பவை இதன் உதாரணங்கள்.

ஆ. கொல்வது. ஆடுகளைத் திருட வருபவர் ஆடுகள் சத்தமிட்டால் ஆடுகளைக் கொன்றுவிடுவார். ஏனெனில் ஆடுகளின் சத்தத்தால் மற்றவர்கள் விழித்துக்கொண்டு திருடனைப் பிடித்துவிடுவார்கள். அல்லது திருடன் தன் திருட்டிற்கு தடையாக இருக்கும் ஆயன் அல்லது மற்றவர்களைக் கொன்றுவிடுவார். அதாவது, தான் யார் என்றும், தன் அடையாளம் எது என்றும் வெளிப்பட்டவுடன் அதை மறைக்க அவர் இவ்வாறு செய்கிறார்.

இ. அழிப்பது. ஆட்டு மந்தையில் ஓர் ஆடு அழிந்தாலும் அதன் குழுமம் அழிவைச் சந்திக்கிறது. சில வீடுகளில் திருட்டு நடக்கும்போதும் நாம் இதையே கேள்விப்படுகிறோம். நகைத்திருட்டால் நிறுத்தப்படும் திருமணங்கள். அதன் விளைவாக நடக்கும் தற்கொலைகள். இவ்வாறாக, ஒரு செயல் அடுத்த செயலுக்கு இட்டுச் செல்கின்றது. ஒரு அழிவு அடுத்த அழிவுக்கு இட்டுச்செல்கின்றது.

ஆனால், இதற்கு மாறாக ஆயனின் பணி இரண்டு நிலைகளில் வரையறுக்கப்படுகிறது:

அ. அவர்கள் உள்ளே போவர். வெளியே வருவர். அதாவது, ஒருவகையான கட்டின்மையை அனுபவமாக தருபவர் நல் ஆயன்.

ஆ. அவர்கள் வாழ்வு பெறுவர். அதை நிறைவாகப் பெறுவர். நிறைவான மேய்ச்சல். ஆகையால் பசியும், தாகமும் தீர்ந்துவிடும். எவ்வித குறையும் இன்றி நிறைவாக இருப்பர்.

பொதுநிலையினர் நம் தனிப்பட்ட குடும்பத்தையும், அருள்நிலையினர் நம் பணித்தளம் என்னும் குடும்பத்தையும் எடுத்து மேற்காணும் இந்த பண்புகளைப் பொருத்திப் பார்ப்போம். 

என் உடனிருப்பு ஆயன் நிலையாக இருக்கிறதா அல்லது திருடன் நிலையாக இருக்கிறதா?

இறுதியாக,

இன்றைய முதல் வாசகத்தில் பேதுருவின் உரையைக் கேட்ட மக்கள் உள்ளம் குத்துண்டவர்களாய், 'சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்கின்றனர்.

இந்தக் கேள்வியை நாம் ஒவ்வொருவரும் நம் உள்ளத்தில் கேட்க வேண்டும். இதற்கு விடை, 'அவரின் குரல் கேட்பது' என்று இருக்கட்டும்.

மேலும், 'நீங்கள் வழிதவறி அலையும் ஆடுகளைப் போல் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்' என்று தன் திருமடலில் பதிவு செய்யும் பேதுரு, இயேசுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 'ஆயர்' என்ற உருவகம் நமக்கு தெளிவாகிறது. 

என் வாழ்க்கை உறவு நிலைகளில் நான் ஆயரா அல்லது திருடரா?

அவர் குரல் கேட்பதில் நான் நல்ல ஆடா?