Thursday, October 31, 2013

தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?

மோசே ஆண்டவரிடம், 'உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச்செய்யாதீர். நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினங்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ?' என்றார். (விடுதலைப்பயணம் 33:15-16)

'இம்மக்களை வழிநடத்திச்செல்' என்று மோசேக்கு யாவே இறைவன் கட்டளையிடுகின்றார். யாவே இறைவனின் துணையில்லாமல் தன்னை வழிநடத்திச் செல்ல இயலாது என்று இறைவனிடம் முறையிடுகின்றார். தன் பிரசன்னத்தை அவருக்கு உறுதி செய்கின்றார் இறைவன். 

இஸ்ராயேல் இனம் கடவுளால் 'செகுல்லா' (கண்ணின் கருவிழி)யாகத் தெரிந்து கொள்ளப்படுகிறது. அந்த தெரிவு செய்தலே அண்டை நாட்டவர் மத்தியில் பெருமையைத் தருகின்றது. கடவுளின் பிரசன்னத்தின் மேன்மையை உணர்கின்றார். தொடர்ந்து தன்னை மோசேக்கு வெளிப்படுத்துகின்றார் இறைவன். 'இரக்கமும் பரிவும் உள்ள இறைவன். சினம் கொள்ளத் தயங்குபவர். பேரன்பு மிக்கவர். நம்பிக்கைக்குரியவர். ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்' என்று தன் பெயரை வெளிப்படுத்துகின்றார் இறைவன்.

இங்கே இரண்டு எபிரேய வார்த்தைகளின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வோம். 

'இரக்கம்' என்பதற்குப் பயன்படுத்தப்படும் எபிரேய வார்த்தையின் பொருள் 'பால் கொடுக்கும் தாய் தன் குழந்தையின் முகம் பார்ப்பது' என்பதாகும். தன் குழந்தையைக் கரிசணையோடும் பெருமையோடும் பார்க்கும் தருணம் அதுதான். கடவுளின் அருளிரக்கத்திற்கான உருவகமும் இதுவே.

இரண்டாவது வார்த்தை பேரன்பு. இதன் பொருள் தாயின் கருவறை. பெண்ணின் தாய்மையை மையப்படுத்திய வார்த்தைகளாக இவை இருப்பதைக் காணும் போது ஆண்டவரின் பிரசன்னம் என்பது அவரின் தாய்மை என்பது புலப்படுகின்றது. 

இறைவனின் தாய்மை நம்மையும் தாங்குகின்றது. அந்தப் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கிறது என்பதை உணர்ந்தோமாகில் நாமும் மற்றவருக்கு அந்தத் தாய்மையைப் பகிரக் கடமைப்பட்டுள்ளோம்.

'நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்?'

Tuesday, October 29, 2013

உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?

அப்போது மோசே தம் கடவுளாகிய ஆண்டவர்முன் மன்றாடி, 'ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்? 'மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்' என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்? ...' என்று வேண்டிக் கொண்டார்.

சீனாய் மலையில் மோசேக்கு ஆண்டவர் தோன்றுகின்றார். இஸ்ராயேல் மக்களோடு தாம் செய்து கொண்ட உடன்படிக்கையின் அடையாளமாக பத்துக் கட்டளைகளை வழங்குகின்றார். 'இந்தக் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் நாம் உங்கள் கடவுளாய் இருப்போம், நீங்கள் எம் மக்களாய் இருப்பீர்கள்' என்ற நிபந்தனையின்கீழ் இந்த உடன்படிக்கை செய்யப்படுகின்றது. மலையின் மேல் உடன்படிக்கை நடந்து கொண்டிருந்தபோது, மலையின் கீழ் மக்கள் பொன்னாலான கன்றுக்குட்டியைச் செய்து, 'இதுவே நம் தெய்வம்!' என வணங்கிக் கொண்டிருக்கின்றனர். இது ஆண்டவருக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அவர்களைத் தான் அழிக்கப்போவதாகச் சபதமிடுகின்றார். அப்போது குறுக்கிடும் மோசே தன் மக்களுக்காகப் பரிந்து பேசுகின்றார்.

விடுதலைப்பயணநூலை சுருக்கமாகக் சொல்ல வேண்டுமானால் அதை 'யாருக்குப் பணிசெய்ய வேண்டும்?' என்ற கேள்விக்குள் அடக்கி விடலாம். விடுதலைப்பயண நூலின் முதற்பகுதியில் 'இஸ்ராயேல் மக்கள் யாருக்குப் பணிசெய்ய வேண்டும் - கடவுளுக்கா? பாரவோனுக்கா?' என்ற கேள்வி எழுகின்றது. இதுவே 32ஆம் அதிகாரத்தில் 'கடவுளுக்கா? பொற்கன்றுக்குட்டிக்கா?' என மாறுகின்றது. தங்கள் வாழ்;க்கை முழுவதும் இந்தக் கேள்விக்கு எந்த விடை தருவது என போராடிக்கொண்டிருந்தனர் இஸ்ராயேல் மக்கள்.

இன்றைய நம் சிந்தனை மோசேயின் தலைமைத்துவம். தான் அழைத்து வந்த மக்களை கடவுள் அழிக்கப்போகிறார் என்று சொன்னவுடன், மோசேயின் பதில் இதுதான்: 'என் பெயரைக்கூட வாழ்வின் நூலிலிருந்து அழித்து விடும். ஆனால் என் மக்களை ஒன்றும் செய்ய வேண்டாம்!'

மோசேயின் உச்சகட்ட பொறுப்புணர்வைக் காட்டுகின்றது. தங்களின் பயணத்தில் எவ்வளவோ இடர்பாடுகள் வந்தாலும், மக்கள் என்னதான் முணுமுணுத்தாலும் தன் பயணம் இன்னும் நிறைவுபெறவில்லை எனவும், 'என்ன இருந்தாலும் இவர்கள் என் மக்கள்!' என்ற நினைவும் மோசேக்குப் பரந்த மனம் தருகின்றது. 

நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் பல நேரங்களில் மற்றவர்களை விமர்சனம் செய்வதிலேயே நேரத்தைக் கழிப்பதால் அவர்களை அன்பு செய்ய நேரம் இல்லாமல் போய்விடுகிறது. என்ன இருந்தாலும் இவர் என்னவர்! என்ற நினைவே பொறுப்புணர்வின் தொடக்கம்.

'உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?'

Monday, October 28, 2013

நீர் மக்களுக்குச் செய்து கொண்டிருப்பது என்ன?

மறுநாள் மோசே மக்களுக்கு நீதி வழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்றுகொண்டிருந்தனர். மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். 'நீர் மக்களுக்குச் செய்து கொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலை முதல் மாலை வரை உம்மைச் சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?' என்று அவர் கேட்டார். (விடுதலைப்பயணம் 18:13-14)

பாலைநிலத்தில் இஸ்ராயேல் மக்களின் பயணம் தொடர்கிறது. பயண வழியில் பல பஞ்சாயத்துக்கள். அப்படி ஒரு முறை பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தபோது மோசேயின் மாமனார் வருகிறார். மோசேயைச் சுற்றி கூட்டம் நிற்பதைப் பார்த்து 'என்ன?' எனக் கேட்கின்றார். 'நீதி வழங்குகிறேன்!' என்கிறார் மோசே. நீர் மட்டும் இதைச் செய்து கொண்டிருந்தால், மற்ற வேலையை நீர் எப்போது கவனிக்கப் போகிறீர்? ஆகையால் வேறு யாரையாவது இதற்கு ஏற்பாடு செய்யும் என ஆலோசனை வழங்குகின்றார். எங்கிருந்தே திடீரென வருகின்ற மோசேயின் மாமனார் நல்ல ஆலோசனை வழங்கியதோடு மட்டுமல்லாமல் மோசேயின் வேலைப்பளுவையும் குறைக்கின்றார்.

1. Delegation. இன்றைய தினம் மேலாண்மையியலில் அதிகம் பேசப்படும் கருத்தியல்களில் ஒன்று இது. நாம் பல நேரங்களில் எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என இழுத்துப் போட்டுக்கொண்டு நிற்கின்றோம். இப்படி இருக்கும்போது நம் தனிப்பட்ட திறமைகளில் கவனம் செலுத்த நேரம் இல்லாமல் போய்விடுகிறது. எடுத்துக்காட்டாக, மைக்கேல் ஜாக்சன் ஒரு உலகப் புகழ்பெற்ற நடனக்கலைஞர். அவர் நடனக்கலைஞராய் இருந்த போது 'நானே எல்லாவற்றையும் செய்வேன்!' என நினைத்துக்கொண்டு, 'அரங்கம் முன்பதிவு செய்வதிலிருந்து, டிக்கெட் அச்சிட்டு விநியோகம் செய்வது வரை' அவரே செய்திருந்தால் நடனப்பயிற்சிக்கு நேரம் கிடைத்திருக்குமா? நல்ல கலைஞர் என்ற பெயர் கிடைத்திருக்குமா? அன்றாட வாழ்வில் நாம் delgation பல இடங்களில் பயன்படுத்தத்தான் செய்கின்றோம். நமக்கு வேண்டிய ஒருவருக்கு ஒரு லெட்டர் அனுப்ப வேண்டுமெனில் நாமே கொண்டுபோய் கொடுப்பதற்குப் பதில் தபால் சேவையை பயன்படுத்துவதும் delegation தான். ஒவ்வொருவரின் திறமைகளைக் கண்டுணரவும், திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், நேரத்தை சரியாகச் செலவிடவும் 'delegation' மிகவும் அவசியம். அதையே மோசே இன்று கற்றுக்கொள்கின்றார்.

2. முதுமையின் ஞானம். விவிலியத்தின் நீதிமொழிகள் நூலும், சீராக்கின் ஞானநூலும் முதுமையை ஞானத்திற்கு ஒப்பிடுகின்றன. என்னதான் நூல்கள் பல கற்றாலும், வாழ்க்கையின் அனுபவங்களே, வயதின் அனுபவங்களே நமக்கு வாழ்வின் பெரியவற்றைக் கற்றுத்தருகின்றன. வாழ்க்கையின் அடிநாதமாக இருப்பது வயதாதல். நேற்றைவிட இன்று நமக்கு ஒருநாள் வயதாகிவிட்டது. இந்த ஒருநாள் வயது நம்மை எந்த அளவிற்கு உணர்வு முதிர்ச்சியடையச் செய்கிறது? வயதானால் மட்டும் ஞானம் வந்து விடாது? வாழ்வின் அனுபவங்கள் நம்மைப் பக்குவமடையச் செய்ய நாம் நம்மையே திறந்த மனத்தோடு கையளிக்கும்போதே அது ஞானமாக மாறுகிறது.

3. மோசேயின் பரந்த மனம். 'ஹலோ பாஸ்! எங்களுக்குத் தெரியும் என்ன செய்யனும்னு! நாங்க எகிப்திலிருந்து மக்களைக் கூட்டி வந்தோம். எங்களுக்கே அட்வைஸா!' என மாமனாரை உதறித்தள்ளவில்லை மோசே. அவரின் வார்த்தைகளை வரவேற்கும் பெரிய மனம் காட்டுகின்றார். 'உங்களைவிட பிறர் மதிப்பிற்குரியவர் என எண்ணுங்கள்!' என தூய பவுல் எழுதுவதன் அடிப்படையும் இதுதான். மற்றவர் நமக்குத் தரும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனம் படைத்தவர் மோசே.

4. தகுதியுடைவர் நியமனம் பெறுதல். மோசே மற்றவர்களுக்கு இடம் கொடுத்து விலகுகின்றார். மற்றவர்களின் தகுதியும் வெளிப்படுகிறது. 'எனக்கு மட்டுமே எல்லாம் தெரியும்!' என்ற மனநிலையில் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பிறருக்கு வழிவிடும்போது மற்றவரின் திறமைகளும் வெளிப்படுகின்றன. 'நல்லது செய்கிறேன்!' எனச் சொல்லிக்கொண்டு மக்களைக் காலை முதல் மாலை வரை காத்திருக்க வைப்பது நலமா? எனக் கேட்கின்றார் மோசேயின் மாமனார்.

'நீர் மக்களுக்குச் செய்து கொண்டிருப்பது என்ன?'


Sunday, October 27, 2013

எவ்வளவு காலம் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

ஆயினும், ஏழாம் நாளில் மக்கள் சிலர் உணவு சேகரிப்பதற்காக வெளியில் சென்றனர். ஆனால் எதையும் காணவில்லை. ஆண்டவர் மோசேயை நோக்கி, 'எவ்வளவு காலம் என் கட்டளைகளையும் சட்டங்களையும் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்? கவனியுங்கள், ஆண்டவர் ஓய்வுநாளை உங்களுக்கு அளித்துள்ளார். அதனால் ஆறாம் நாளிலேயே இரு நாள்களுக்குரிய உணவையும் உங்களுக்கு அளிக்கிறார். எனவே ஒவ்வொருவரும் தம் உறைவிடத்தில் தங்கிவிட வேண்டும். ஏழாம் நாளில் தம்தம் இடத்திலிருந்து எவரும் வெளியில் செல்லலாகாது' என்றார். ஆகவே, மக்கள் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தனர். (விடுதலைப்பயணம் 16:27-30)

'The Lord is My Shepherd: Healing Wisdom of the Twenty-Third Psalm' என்ற நூலை எழுதிய யூத ரபி Harold Kushner அந்த நூலில் இரு நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். 

நிகழ்வு 1:

அவரின் தொழுகைக் கூடத்திற்கு வருகின்றவர்களுக்கு அவர் counselling தருவதுண்டு. அப்படி counselling பெறுவதற்காக ஒரு பெரிய businessman வந்தார். அவரின் மகன் சில நாட்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து போனார். அந்த இறப்பையும், இழப்பையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தார் அந்த businessman. அவரிடம் ரபி நான்கு சனிக்கிழமைகள் தொடர்ந்து தன்னை வந்து சந்திக்குமாறு கூறுகிறார். அதற்கு businessman ரபியிடம், 'ஒவ்வொரு வாரமும் வர முடியுமா எனத் தெரியவில்லை. ஏனென்றால் நான் business தொடர்பாக அடிக்கடி வெளியூருக்குப் பயணம் செய்வேன். ஆகையால் ஒரே சனிக்கிழமையில் நான்கு sessions வைத்துக்கொள்ளலாமா?' எனக் கேட்கிறார். அதற்கு ரபி அவரிடம் சொல்கின்றார்: 'வாழ்வின் ஒரு சில காயங்கள் நேரம் எடுத்தால்தான் ஆறும். அதை விடுத்து அவசரப்பட நினைத்தால் பின் அதுவே நம்மை உறுத்திக்கொண்டு இருக்கும். முன்னைய நிலையை விட பின்னைய நிலை மோசமாகி விடும்'.

நிகழ்வு 2:

ரபி Harold Kushner நியூயார்க் நகரின் ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்காக நிகழ்ச்சிகள் வழங்கிக் கொள்ள ஒத்துக்கொள்கின்றார். ஆறுநாட்கள் அவர் பல்கலைக்கழகத்தில் வகுப்பு எடுக்க வேண்டியிருந்ததால் சனிக்கிழமை மட்டும்தான் அவரால் அந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவிற்கு செல்ல முடிகின்றது. ஆறு நாட்கள் பல்கலைக்கழகத்திலும், ஏழாம் நாள் தொலைக்காட்சி studio என நேரம் நிறைந்து விடுகிறது. ஓய்விற்கே இடமில்லை. சில மாதங்கள் செல்லச் செல்ல, அவரின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அவருக்கே பிடிக்காமல் போரடிக்கத் தொடங்கிவிடுகின்றன. 'சொன்னதையே சொல்வதாகவும், புதிய கருத்துக்கள், படைப்புத்திறன் குறைந்து போவதாகவும்' உணர்கிறார். அதற்குக் காரணம் ஓய்வில்லாமல் தான் ஓடிக்கொண்டிருப்பதே எனக் கண்டுபிடிக்கிறார். உடனடியாக தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஃபோன் செய்து தன்னால் இனி திங்கள் கிழமை மாலை மட்டுமே ஒளிப்பதிவிற்கு வரமுடியும் எனவும், சனிக்கிழமை ஓய்வு எடுக்கப்போவதாகவும் தெரிவிக்கின்றார். சனிக்கிழமையின் ஓய்வு அவருக்குப் புதிய கருத்துக்களையும், புதிய உணர்வையும் தருகின்றது. உலகப் புகழ்பெற்ற 'when bad things happen to good people' என்ற நூலைப் படைக்கின்றார்.

ஓய்வு.

'எல்லா நாளும் வேலை செய்ய வேண்டும்!' என்ற வேலைப் பைத்தியம்(!), வேலைப் போதை(!) பிடித்த சில இஸ்ராயேல் மக்களைக் கடிந்து கொள்கின்றார் யாவே இறைவன். 

ஓய்வு என்ற கருத்தியல் இஸ்ராயேல் மக்களுக்கு இரு புலங்களில் தரப்படுகின்றது:

1. உலகை ஆறு நாள்களில் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வெடுக்கின்றார். ஆகையால் ஏழாம் நாள் அவசியம்.

2. எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்களை விடுவிக்கின்றார் யாவே இறைவன். ஆகவே வேலை என்னும் அடிமை நிலையிலிருந்து அவர்கள் ஓய்ந்திருக்க வேண்டும்.

'நீங்கள் ஓய்வு எடுக்க வேண்டும்!' என்றால் யார் கேட்பார்கள்? ஆகையால் தான் கடவுள் பெயரை உள்ளே இழுக்க வேண்டியிருக்கிறது. மேலை நாடுகள் தங்கள் வாழ்க்கை நிலையில் 'ஓய்வை' மிக முக்கிய அம்சமாக வைத்திருக்கின்றனர். வாரத்திற்கு இரு நாட்கள் ஓய்வு என்றால், வருடத்திற்கு மூன்று மாதங்கள் ஓய்வு என அமைத்து தங்கள் குடும்பம், வேலை, பயணம் அனைத்தையும் அதற்கேற்பத் திட்டமிடுகின்றனர். 'வேலை' என்பது எல்லாவற்றிலும் ஒன்று. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 'வேலை' என்னவோ ஒரு பெரிய புண்ணியமாகவும், கண்டிப்பாகச் செய்ய வேண்டிய ஒன்றாகவும் கற்பிக்கப்படுகின்றது. 'வேலை செய்தால், உழைத்தால் நல்லவன்!' 'ஓய்ந்திருந்தால், வேலை செய்யவில்லையென்றால் கெட்டவன், சோம்பேறி!' என சிறுவயது முதல் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. 'எறும்பு போல உழைக்க வேண்டும்! தேனீ போல சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்!' என்றே நமக்குச் சொல்லப்படுகிறது. இதுவே காலப்போக்கில் ஒருநாள் ஓய்ந்திருந்தால் கூட அது நமக்குக் குற்றவுணர்வாக மாறிவிடுகிறது.

மற்றொரு பக்கம் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு 'outsourcing' என்ற அடிப்படையில் தங்களின் அறிவு, படைப்புத்திறன் அனைத்தையும் அடமானம் வைத்து அவர்கள் ஓய்ந்திருப்பதற்காக நம் இளவல்கள் ஓடி உழைத்து, overtime பார்த்து சின்ன வயதிலேயே tension, stress விரக்தி, என்று ஓய்ந்து போகின்றனர். 'இன்னும் கொஞ்சம் வேலை பார்த்தால் இன்னும் நல்லா இருக்கலாம் என்று சொல்லி,' ஓய்வில்லாமல் இளவயதிலேயே மரணத்தைத் தழுவுபவர்களைப் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். நாம் பிறந்ததே வேலைக்காகத்தானா?

நம் வீட்டை வெறும் ஆடை மாற்றும் இடமாகவும், நம் உறவுகளை நமக்கு உணவு சமைத்துத்தரும் ஓட்டல்களாக மட்டுமே வைத்துள்ளோம். நாம் அதிக பட்சம் மேற்கொள்ளும் பயணம் நம் உறவினரின் திருமணத்திற்கோ, அல்லது நாம் குலசாமி கோயிலுக்கோ என்று குறுகிவிட்டது. நம் உறவுகளின் மரணம், நமக்கு நோய் என்றால் கட்டாய ஓய்வு (வேறு வழியில்லாமல்!) எடுக்கிறோம். ஓடி ஓடி உழைப்பதால் உடனடியாகப் பயன் இருப்பதாகத் தெரியலாம். ஆனால் வாழ்வின் பலவற்றை அந்த ஓட்டத்தில் பார்க்கத் தவறிவிடுகிறோம். 

ஆங்கில மோகம் மற்றொரு பக்கம். ஒவ்வொரு நாட்டிலும் தங்கள் மொழியில் மட்டுமே மக்கள் ஆர்வம் காட்ட நம் ஊரில் ஏனோ நம் நாட்டமெல்லாம் ஆங்கில மொழியில்தான் இருக்கின்றது. ஆங்கிலம் பேசினால் அது மேல்தட்டு நிலையில் நம்மை வைப்பதாக மாயையில் இருக்கின்றோம். அண்மையில் வெளிவந்த மூடர்கூடம் திரைப்படத்தில் ஒரு தமிழரிடம் ஆங்கிலத்தில் பேசும் மற்றொரு தமிழரைப் பார்த்து செண்ட்ராயன் சொல்வார்: 'கக்கூஸ் போய்ட்டு வந்தா இன்னும் கழுவிகிட்டுதான்டா இருக்கோம். என்னைக்கு எல்லாரும் பேப்பர்ல துடைக்க ஆரம்பிக்கிறாங்களோ அன்னைக்கு இங்கிலீசுல பேசுங்கடா!' மேலைநாட்டு மொழியைக் கற்கும் அளவிற்கு அவர்களின் ஓய்வை நாம் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது. 'சுறுசுறுப்பு' என்பது மேலை நாடுகள் நம்மைச் சுரண்ட நம்மேல் 'மதிப்பீடு' எனக் கட்டிய ஒரு 'பாவம்!'. நாம் சுறுசுறுப்பாய் இருந்தால் தானே அவர்கள் ஓய்வு எடுக்க முடியும்!

ஓய்விற்கு அடிப்படையாக நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்:

நம் வாழ்க்கை நமக்கு மட்டுமே. 'அடுத்தவர்களுக்காக பொருள் சேர்க்கிறேன்' என நாம் ஏன் ஓட வேண்டும்? எல்லாருக்கும்தான் வாழ்க்கையில் பொறுப்பு இருக்கின்றது. 'அடுத்தவர்களுக்காக!', 'நாளைக்காக' எனச் சொல்லிச் சொல்லியே நாம் 'நமக்காகவும்', 'இன்றுக்காகவும்' வாழ மறந்துவிடுகிறோம்.

ஓய்வு இல்லாமல் உழைப்பது என்பது, வேகமாகப் போக வேண்டும் என்பதற்காக பெட்ரோல் போடாமல் வண்டி ஓட்ட நினைப்பது போன்றது!

எவ்வளவு காலம் கடைப்பிடிக்காதிருப்பீர்கள்?

எத்துணை நலமாயிருக்கும்!

இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அந்தப் பாலைநிலத்தில் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர். இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, 'இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறர்கள்' என்றனர். (விடுதலைப்பயணம் 16:2-3)

செங்கடலைக் கடந்து வந்த இஸ்ராயேல் மக்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முணுமுணுக்கின்றனர். பசி எடுத்தவுடன் இறைவனின் அருட்பெரும் செயல்களை மறந்து விடுகின்றனர். 'பசி வந்தால் பத்தும் பறந்து விடும்' என்பது போல அனைத்தையும் மறந்து நிற்கின்றனர். 

எகிப்து நாட்டில் தாங்கள் உண்டு நிறைவடைந்த இறைச்சிப் பாத்திரத்தை நினைவுகூறுகின்றனர். அடிமைகளாக இருந்தாலும் பரவாயில்லை உணவு கிடைத்தால் போதும் என யோசிக்க ஆரம்பிக்கின்றனர். மேலானது எது? உரிமை வாழ்வா? ஒரு கைச்சோறா? உரிமை வாழ்வை வைத்து என்ன செய்ய முடியும்? ஒரு கைச்சோறு என்றால் கூட கொஞ்ச நேரம் பசியாறலாம்! என எதார்த்தமாக யோசிக்கின்றனர். 

Art Buchwald என்ற இலக்கிய ஆர்வலரின் புகழ்பெற்ற வாக்கியம் இதுதான்: 'the best things in life are not things!'

'எகிப்தின் இறைச்சிப் பாத்திரம்' என்பது இஸ்ராயேல் மக்களின் இறந்த காலம். அந்த இறந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு அவர்கள் கடந்து கொள்ளத் தடையாக இருந்தது 'இறைச்சிப் பாத்திரம்' என்னும் இறந்தகாலம். நம் வாழ்வில் நாம் முன்னால் செல்லத் தடையாக இருக்கும் இறந்தகாலக் காயம் என்ன? இறந்தகால மாயை என்ன?

'இப்படி இருந்தால் நல்லா இருக்குமே!' என்று ஏங்கிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பதை விட, 'இன்று இப்படி இருக்கிறது. இதை நான் எப்படி சாதகமாக்கிக் கொள்ளப் போகிறேன்' என யோசிக்கலாமே!

எத்துணை நலமாயிருக்கும்!

Friday, October 25, 2013

அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்!


மோசே மக்களை நோக்கி, 'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்! இன்று ஆண்டவர்தாமே உங்களுக்காக ஆற்றும் விடுதலைச் செயலைப் பாருங்கள். இன்று நீங்கள் காணும் எகிப்தியரை என்றும் காணப்போவதில்லை. ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார். நீங்கள் அமைதியாயிருங்கள்' என்றார். (விடுதலைப்பயணம் 14:13-14)

எகிப்தில் தலைப்பேறுகளை அழித்து இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்கின்றார் யாவே இறைவன். இஸ்ராயேல் மக்களின் வீடுகளைக் கடந்து செல்லும் இறைவன் எகிப்தியரின் தலைப்பேறுகளை மட்டும் அழிக்கின்றார். வாழ்வின் கடவுளுக்கும், இறப்பின் கடவுளுக்குமான யுத்தத்தில், ஒளியின் கடவுளுக்கும், இருளின் கடவுளுக்குமான யுத்தத்தில் வாழ்வின் கடவுளும், ஒளியின் கடவுளுமான யாவே இறைவன் வெற்றி பெறுகின்றார்.

பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறும் இஸ்ராயேல் மக்களின் முன் இப்போது நிற்பது செங்கடல். பின்புறம் பார்வோனின் படைகள். முன்புறம் கடல். என்ன செய்வது? பின்னால் ஓடினால் பார்வோனின் படைகள் கொன்றுவிடும். முன்னால் சென்றால் கடல் அமிழ்த்திவிடும். 'சட்டியிலிருந்து தப்பி அடுப்பில் விழுந்த' கதையாய் ஆகிவிட்டது அவர்கள் நிலை. நிலைகுலைந்த நிலையில் யாவே இறைவனின் அருட்கரத்தை வெளிப்படுத்துகின்றார் மோசே.

இதுவரை 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' எனப் பெயர் கொண்ட யாவே இறைவனுக்கு இந்த இடத்தில் புதிய பெயர் கொடுக்கப்படுகிறது: 'போரிடும் கடவுள்'.

அஞ்சாதீர்கள். நிலைகுலையாதீர்கள் என்னும் கட்டளையும், தொடர்ந்து ஆண்டவரின் வாக்குறுதியும் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றது. ஆண்டவரின் வாக்குறுதி மூன்று நிலைகளில் அமைந்துள்ளது:

1. ஆண்டவர் விடுதலைச் செயல் செய்வார்.

2. இன்று காணும் எகிப்தியரை நீங்கள் இனி ஒருபோதும் காணப்போவதில்லை.

3. ஆண்டவர் உங்களுக்காகப் போரிடுவார்.

'நம் கண்முன் நிற்கும் தடை' இனி நமக்கு ஒருபோதும் தடையாயிருக்காது என்றால் அது எவ்வளவு பெரிய வாக்குறுதி. அது தரும் நம்பிக்கை அளப்பெரிது. என் மனம் சோர்வுறும் நேரங்களில் நான் அடிக்கடி வாசிக்கும் பல பகுதிகளில் ஒரு பகுதி இதுதான். 

முன்னும் பின்னும் நெருக்கடி இருந்தாலும் ஆண்டவர் நமக்காகப் போரிடுவார் என்றால் நாம் ஓய்ந்திருக்கலாமே. 'நாம் செய்ய வேண்டியதெல்லாம் அமைதியாயிருப்பதுதான்!' 

இறைவன் என்று ஒருவர் இந்த இடத்தில் தான் தேவைப்படுகின்றார். காரியங்கள் நம் கைமீறிச் செல்லும்போது அந்தக் காரியங்களைப் பார்த்துக்கொள்வேன் என்ற வாக்குறுதியோடு இறைவன் வருகிறார்.

இதே வாக்குறுதியை நம் இறைவன் நமக்குத் தருவது போல நாமும் ஒருவர் மற்றவருக்குக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் அல்லவா?

'அஞ்சாதீர்கள்! நிலைகுலையாதீர்கள்!'

Thursday, October 24, 2013

இன்னும் உமக்குத் தெரியவில்லையா?


பார்வோனின் அலுவலர் அவனை நோக்கி, 'எவ்வளவு காலம் இவன் நமக்குக் கண்ணியாக அமைவானோ? தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யும்படி அந்த மனிதர்களை நீர் அனுப்பிவிடும். எகிப்து அழிந்து கொண்டிருப்பது இன்னும் உமக்குத் தெரியவில்லையா?' என்றனர். மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் அழைத்துக் கொண்டுவரப்பட்டனர். அவன் அவர்களை நோக்கி, 'போங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள். ஆனால், போகவேண்டியவர்கள் யார் யார்?' என்று கேட்டான். (விடுதலைப்பயணம் 10:7-8)

எகிப்தில் யாவே இறைவன் அனுப்பிய கொள்ளை நோய்களுக்கெல்லாம் பார்வோன் பயந்தானோ இல்லையோ ஆனால் அவரின் உடனிருப்போர் பயந்துவிட்டனர். 'எகிப்து அழிவதை' நினைவூட்டுகிறார்கள். அவர்களின் பேச்சைக் கேட்பது போலத் தெரிந்தாலும் பார்வோன் யார் வார்த்தைகளுக்கும் செவிகொடுக்க மறுக்கின்றான். கடவுள் அனுப்பும் இறுதிக் கொள்ளை நோய்க்கே பயப்படுகின்றான்.

நமக்கருகில் இருப்பவர்களின் பேச்சைக் கேட்கலாமா? வேண்டாமா? என்ற கவலை நம் அனைவருக்குமே இருக்கின்றது. ஜோ-ஹேரி என்ற உளவியல் அறிஞர்கள் தங்களின் ஜன்னல் மனஆய்வுக்குப் பெயர்பெற்றவர்கள். 'நம் கண்களுக்கு' மறைவாய் இருப்பவை மற்றவர்களின் கண்களுக்குத் தெரிகின்றன. மற்றவர்கள் நம்மிடம் சொல்பவை நம்மைப் பற்றிய விழிப்புணர்வை வளர்க்கின்றன.

அடுத்தவர்கள் நம்மிடம் நம்மைப் பற்றிச் சொன்னால் கேட்டுக்கொள்ளலாம். ஆனால் அடுத்தவர்கள் அடுத்தவர்களைப் பற்றிச் சொன்னால் நாம் மூன்று கேள்விகளைக் கேட்க வேண்டும்: 'is it true? is it necessary? is it kind?' 

அடுத்தவர்கள் நம் நிழல்கள். நமக்குத் தெரியாதவைகளை அடுத்தவர்கள் வழியாகத் தெரிந்துகொள்ளலாம். மற்றவர்கள் வழியாகவும் இறைவன் பேச முடியும். அவர்களின் குரல் இறைவனின் குரல்.

'இன்னும் உமக்குத் தெரியவில்லையா?'

Wednesday, October 23, 2013

எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?


அதற்கு மோசே, 'அது முறையல்ல. அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும். எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படிப் பலியிட்டால் அவர்கள் எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா? பாலைநிலத்தில் நாங்கள் மூன்று நாள்கள் வழிநடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு, அவர் எங்களுக்குச் சொல்வதுபோல் பலியிடுவோம்' என்றார். (விடுதலைப்பயணம் 8:26-27)

யாவே இறைவனிடம் முறையிடும் மோசேக்கு, 'இதோ நான் அறிகுறிகள் வழியாக என்னை வெளிப்படுத்துவேன். பார்வோனின் மனம் கடினமுற்றாலும் இறுதியில் நீங்கள் விடுதலை பெறுவீர்கள்' என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார். 'பார்வோன் எனக்கு எப்படி செவிசாய்ப்பான்?' என்ற மோசேயின் கேள்விக்கு விடையாக ஆரோனை உடன் அனுப்புகின்றார் இறைவன்.

பார்வோனின் பிரசன்னத்திற்கு வரும் மோசேயும், ஆரோனும் கடவுளின் அறிகுறிகளை அவன் முன் செய்து காட்டுகின்றனர். ஆனால் பார்வோனின் மனம் மாறவில்லை. ஆண்டவர் அனுப்பும் பத்துக் கொள்ளை நோய்கள் தொடங்கித் தொடர்கின்றன:

1. தண்ணீர் இரத்தமாய் மாறுகிறது.

2. தவளைகள்.

3. கொசுக்கள்.

4. ஈக்கள்.

5. கால்நடைகள் இறப்பு.

6. கொப்புளங்கள்.

7. கல்மழை.

8. வெட்டுக்கிளிகள்.

9. காரிருள்.

10. தலைமகன் இறப்பு.

நான்காம் அறிகுறியைப் பார்த்த பார்வோன் அவர்களை அழைத்து '50-50' டீல் பேசுகிறான். பலிசெலுத்தத்தானே போகவேண்டும் என்கிறீர்கள். இங்கேயே பலி செலுத்துங்கள் என option கொடுக்கிறான். 

'இங்கே நாங்கள் பலி கொடுத்தால் அது எகிப்தியர்களுக்கு அருவருப்பாய் இருக்குமே!' என்கிறார் மோசே. 

'ஒருவருக்கு உணவு மற்றவருக்கு மருந்து' என்பார்கள். ஒருவரது கலாச்சாரம் மற்றவருக்கு முட்டாள்தனம். மனித குலத்தின் தொடக்கத்திலிருந்தே 'இரு-புலம்' இருந்து கொண்டேதான் இருக்கின்றது: 'எனது – உனது'. 'என் கடவுள் - உன் கடவுள்'. 'என் நாடு – உன் நாடு'. 'என் மொழி – உன் மொழி'. 'என்னைச் சார்ந்தவர் – உன்னைச் சார்ந்தவர்'. இந்தப் பின்புலங்களில் மனித மூளை நம்மைச் சார்ந்தது அனைத்தும் நல்லது எனவும், நம்மைச் சாராதவை அனைத்தும் தீயது எனவும் முடிவு கட்டுகிறது. இந்த இருபுலச் சண்டைதான் இங்கே மேலோங்கி நிற்கின்றது.

என்ன காரணத்தால் பிறரை நமக்குப் பிடிப்பதில்லை. 'அந்நியரைப் பார்த்துப் பயப்படுதலை' xenophobia என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அந்நிய நாடு, அந்நிய மக்கள், வேறு ஊர், வேறு மொழி என்றாலே நமக்குப் பல நேரங்களில் பயம், சந்தேகம் தொற்றிக் கொள்ளும். தொடக்கத்தில் அடுத்தவரோடு பேசவும், பழகவும் நிறைய நேரம் தேவைப்படும். இந்தப் பயத்திற்குக் காரணம் நாம் நம் வேற்றுமைகளை மையப்படுத்துவதுதான். இந்த வேற்றுமைகளை மையப்படுத்துவதற்குப் பதிலாக ஒற்றுமைகளை மையப்படுத்தினால் இந்த பயம் களைந்து விடும்.

அடுத்தவர்களை அருவருப்பானவர்கள் என்று நாம் சொல்லக் காரணம் அவர்கள் நம்மிடமிருந்து வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதுதான். வித்தியாசங்களை மையப்படுத்தாமல் பொதுவானவைகளை மையப்படுத்தினால் பயம், தீர்ப்பிடுதல் குறைந்து விடும்.

ஒவ்வொருவருக்கும் அவரின் தனிப்பட்டவைகள் இருக்கின்றன. அவைகளை மதிப்பதும் நம் கடமை. எனக்கு நல்லது என்பதற்காக அதை மற்றவர்களுக்கும் நல்லது எனத் திணிக்க முயல்வது வன்முறை.

'எங்களைக் கல்லால் எறியாமல் விடுவார்களா?'

Tuesday, October 22, 2013

எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?


அப்போது மோசே ஆண்டவரிடம் திரும்பிச் சென்று, 'என் தலைவரே! இம்மக்களுக்கு நீர் ஏன் தொல்லை கொடுக்கிறீர்? எதற்காக இப்படி என்னை அனுப்பி வைத்தீர்? உமது பெயரால் பேசுவதற்காகப் பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடர்பாடுதான் ஏற்பட்டுள்ளது. அத்துடன் நீர் உம் மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை' என்று கூறினார். (விடுதலைப்பயணம் 5:22-23)

Henry J. Nouwen அவர்கள் எழுதிய ஒரு புகழ்பெற்ற நூல் The Wounded Healer. கடவுளால் அவரது பணிக்கு அழைக்கப்படுகின்ற ஒவ்வொரு அருட்பணியாளரையும் 'காயம்பட்ட மருத்துவர்' என அழைக்கிறார் நூவன். மோசே என்ற காயம்பட்ட மருத்துவரின் புலம்பல்தான் இன்றைய கேள்வி.

நாங்கள் குருமாணவர்களாகப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது அடிக்கடி சொல்லப்படும் வாசகம் இதுதான்: "Ships in the harbour are safe. But they are not what they built for" (துறைமுகத்தில் நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பானவை. ஆனால் அவை அங்கே நிற்பதற்காகக் கட்டப்பட்டவை அல்ல). ஒரு கப்பலின் பயன் அல்லது அதன் திறன் அலையடிக்கும் கடலில்தான் தெரியும். ஒரு அருட்பணியாளரின் பயன் அல்லது அவரது திறன் அவரது பணியிடத்தில்தான் வெளிப்படும்.

உதவி அருட்பணியாளராக நான் மூன்று பங்குத்தளங்களில் பணியாற்றியுள்ளேன். அருட்பணியாளராய் இருப்பதில் மகிழ்ச்சி இருப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவிற்கு துன்பமும் இருக்கும் என்பதே எதார்த்தம். பெரிய திருவிழா என ஊரே கூடியிருக்கும். மின்விளக்கு வெளிச்சம். ஃபோகஸ் லைட். மைக் செட். 3000 பேருக்கு முன்னால் நின்று மறையுரை வைப்போம். வைத்த கண் வாங்காமல் 3000 பேர் நம்மைப் பார்ப்பர். அடுத்த ஒரு மணிநேரம். சப்பரம் போய்விடும். விளக்கெல்லாம் அணைந்து விடும். அறைக்கு வந்தால் அங்கே தனிமை கன்னத்தில் அறையும். அப்படியே சோர்ந்து கட்டிலில் விழுவேன் (சில சமயங்களில் அங்கியைக் கூடக் கழற்றாமல்!). எழுந்து ஒரு கப் காஃபி போடக் கூடத் திறன் இருக்காது. அப்போது நான் கேட்பேன். அருட்பணி வாழ்வில் எது நிஜம்? ஒரு மணி நேரத்திற்கு முன் 3000 பேருக்கு முன் நின்ற நானா? அல்லது ஒரு கப் காஃபி போடக் கூட முடியாமல் துவண்டு கிடக்கும் நானா?

எல்லாம் இருப்பது போல இருக்கும். ஆனால் ஒன்றும் இல்லாதது போல இருக்கும்.

எல்லோரும் நம்மோடு இருப்பது போல இருக்கும். ஆனால் யாரும் நமக்கு இல்லை என்பது போல இருக்கும்.

எல்லோரும் நம்மிடம் சிரித்துப் பேசுவார்கள். எல்லோரும் நம்மைப் பற்றிக் கேலி பேசுவார்கள்.

எல்லாருக்கும் விடுமுறை இருக்கும் அன்று அருட்பணியாளருக்கு வேலை இருக்கும்.

'வேலை', 'ஓய்வு', 'குடும்பம்', 'குழந்தைகள்', 'சினிமா', 'சர்க்கஸ்' என எல்லாருக்கும் ஒரு நாளில் அவர்களின் அடையாளங்கள் மாறும். ஆனால் அருட்பணியாளர் எங்கே சென்றாலும் அருட்பணியாளர்தான்.

18 வயதில் காதல், 25 வயதில் வேலை, 40 வயதில் பதவி உயர்வு, 58 வயதில் ஓய்வு என நகரும் வாழ்க்கை ஓட்டம் அருட்பணியாளருக்கு என்னவோ, 18 வயதில் கோயில், 25 வயதில் கோயில், 40 வயதில் கோயில், 58 வயதில் கோயில், 80 வயதிலும் கோயில் எனத் தேக்கமாகி(!) விடுகிறது. 

சாதாரண குடும்பத்தில் உள்ளவருடைய கவலைகள் எல்லாம் பால், காய்கறி, தண்ணீர், கார்ப்பரேசன், பஸ், ஓட்டம், விருந்தினர்கள், கல்யாணம், சடங்கு, கடன், வட்டி, மாதக்கடைசி. அருட்பணியாளரின் கவலையெல்லாம் பூசை, ரசம், ஓஸ்தி, நவநாள், செபம், கோயில். 

பிடிக்கிறதோ பிடிக்கலையோ அனுப்பப்படும் இடத்திற்குப் போக வேண்டும். ஒரு ஆயரைப் பிடிக்கிறதோ இல்லையோ அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ அடுத்தவர்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். யாரும் கேள்வி கேட்கலாம்? அவர்களுக்கு விருப்பமான பதிலையே நாம் சொல்ல வேண்டும்.

சீக்கிரம் மறையுரை முடித்தால் தயாரிக்கவில்லை என்பார்கள். கொஞ்சம் அதிக நேரம் எடுத்தால் 'இழுக்கிறார். எங்களுக்கு வேறு வேலை இல்லையா?' என்பார்கள்.

சரியான நேரத்திற்குத் திருப்பலியைத் தொடங்கினால், 'சும்மாதான் இருப்பார்போல!' என்பார்கள். கொஞ்சம் தாமதமாகத் தொடங்கினால், 'punctuality -யே இல்லை' என்பார்கள்.

எல்லாரிடமும் சிரித்துப் பேசினால் 'flirt' என்பார்கள். யாரிடமும் பேசவில்லையென்றால் 'உம்மனாம்மூஞ்சி' என்பார்கள்.

அதிகமான electronic gadgets வைத்திருந்தால் 'பகட்டு' என்பார்கள். ஒன்றும் இல்லாமல் இருந்தால், 'காலத்திற்கு ஒத்துப்போகாதவர், உலகம் தெரியாதவர்' என்பார்கள்.

ஏதாவது வேலை செய்யப் பணம் கேட்டால், 'பணவிரும்பி' என்பார்கள். ஒன்றும் கேட்கவில்லையென்றால் 'சும்மாவே இருக்கிறாரு. கோவிலுக்காவது வெள்ளையடிக்கலாமே!' என்பார்கள்.

இப்படி மற்றவர் பேசினாலும் கேட்டுக்கொண்டுவிடலாம். ஆனால் ஒவ்வொரு அருட்பணியாளரும் கண்ணீர் வடிக்கின்ற ஒரு நேரம் - 'தனக்கென்று யாரும் இல்லையே!' என்னும்போதுதான். பிஷப் புரிந்து கொள்ளமாட்டார். சக குருக்கள் 'இவன் சருக்கி விழமாட்டானா' எனக் காத்திருப்பர். வேலை செய்யும் பங்கில் உள்ளவர்கள் 'இவர எப்படா அனுப்பலாம்!' என இருப்பர். எங்க போக முடியும்? அறைக்குள்ளே எவ்வளவு நேரம் இருக்க முடியும்? 'கடவுள் தான் கூப்பிட்டார்னு!' நினைச்சு நற்கருணைப் பெட்டி முன்னாலே உட்கார்ந்திருந்தாலும் எதார்த்தைவிட்டு ஓடிவிட முடியுமா?

'ஒன்றும் தெரியாத பருவத்தில் உள்ளே நுழைந்து விட்டோமோ' என்றுப் புலம்பும் வேளையில் சாத்தான் ஒரு சோதனை தான். அந்தச் சோதனைதான் 'martyr complex'. 'எல்லாவற்றையும் உன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்!' 'நீ ஒரு தியாகி!' 'நீ ஒரு புனிதன்' 'நீ மட்டும் மோட்சம் போவாய். உன் பங்கில் உள்ளவர்கள். உன் பிஷப். உன் உடன்குருக்கள். அனைவருக்கும் நரகம்தான்'. 'நீ அனைத்தையும் பொறுத்துக்கொள். எல்லாம் மாறிவிடும்' இப்படியெல்லாம் ஆழ்மனம் பேச ஆரம்பித்தால் அருட்பணியாளரே கவனம்: 'martyr complex' அருள்நிலையில் மட்டும் அல்ல. பொதுநிலையிலும் இச்சோதனை வரலாம். 'என்ன கஷ்டம்னாலும் நான் என் குடும்பத்திற்காகப் பொறுத்துக்கொள்கிறேன்!' எனத் தியாக எண்ணம் வந்தால் கவனம். இந்த எண்ணம் நம்மை எதார்த்தத்திலிருந்து தப்ப வைக்கும் ஒரு போதை மருந்து. 

நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டும் பிரச்சனையை. அதைத்தான் மோசே செய்கிறார். 'என்னை ஏன் அழைத்தீர்?' 'என்னை ஏன் அனுப்பினீர்?' என முறையிடுகிறார். அதுதான் ஒரு அருட்பணியாளருக்குத் தேவை. அதை விடுத்து 'என் மக்களுக்காக, என் கடவுளுக்காக நான் பார்வோனின் துன்பங்களையெல்லாம் ஏற்றுக்கொள்கிறேன்' என்று மோசே சொல்வாரானால் அது தவறான நிலைப்பாடு. 

'நான் நல்லது செய்ய நினைத்து அதை தீயதாக முடிந்துவிட்டதே!' என முறையிடுகின்றார் மோசே. அன்று இறைவன் உடனே பதில் கொடுத்தார். ஆனால் இன்று நற்கருணையின் முன் 'ஐயோ! கஷ்டமாக இருக்கின்றதே!' என்று அருட்பணியாளர்கள் முறையிடும்போது எங்கும் 'மௌனம்'தானே இருக்கிறது. இறைவன் என்று குரல் கொடுப்பார்?

'இறைவன் குரல் கொடுக்க மாட்டார்' என்று நிலைகுலைந்து 'அருட்பணி' நிலையை விடுத்துப் 'பொதுநிலையை'த் தழுவிக் கொள்ளும் அருட்பணியாளர்களை 'ex-priest' என்ற பட்டம் வாழ்க்கை முழுவதும் துரத்திக் கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு நாள் திருப்பலியிலும் அருட்பணியாளர் திராட்சை இரசத்தோடு கலப்பது தண்ணீர் அல்ல. அது அவர் தன் தனிமையில் வடிக்கும் கண்ணீர்!

'எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?'

Monday, October 21, 2013

ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?


இஸ்ரயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் வந்து, 'ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்? உம் பணியாளர்களாகிய எங்களுக்கு வைக்கோல் தராமலேயே 'செங்கல் அறுங்கள்' என்று வேலை வாங்கும் அதிகாரிகள் கூறுகிறார்கள். குற்றம் உம் மக்களுடையதாய் இருக்க, உம் பணியாளர்களாகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம்' என்று கதறினர். (விடுதலைப்பயணம் 5:15-16)

அ. மோசே மற்றும் ஆரோனின் வார்த்தைகளைக் கேட்ட பார்வோன் அவர்கள் மேல் உள்ள கோபத்தை இஸ்ரயேல் மக்கள் மேல் திருப்புகின்றார். கோபம் எப்போதும் மேலிருந்து கீழ்நோக்கியே பாய்கிறது. ஒரு போலீஸ் ஐ.ஜியின் கோபம் இன்ஸ்பெக்டர் மேல் என்றால், இன்ஸ்பெக்டரின் கோபம் ஏட்டின் மேலும், ஏட்டின் கோபம் வெளியில் காவல் நிற்கும் சென்ட்ரியின் மேலும், சென்ட்ரியின் கோபம் வழியோரம் வாழைப்பழம் விற்கும் வியாபாரியின் மேலும், வியாபாரியின் கோபம் அவர் மனைவியின் மேலும், மனைவியின் கோபம் பிள்ளையின் மேலும், பிள்ளையின் கோபம் பொம்மையின் மேலும் என வடிந்து கொண்டே போகிறது. மோசேயின் கடவுள் மேல் உள்ள கோபத்தை தனக்குக் கீழ் இருக்கும் அடிமை மக்கள் மேல் திருப்புகின்றான் பார்வோன். கோபத்திற்குப் பதிலாக சம்பந்தப்பட்ட நபரிடம் நேருக்கு நேர் பேசிவிட்டால் கோபத்திற்கே அங்கு இடமில்லை. இன்று நாம் யார்மேலாவது கோபப்பட்டால் இரண்டு விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்: 1) நாம் கோபப்படும் நபரை நமக்குக் கீழ் வைத்திருக்கின்றோம். அவர்கள் மேல்தான் நம் எண்ணத்தைச் சுமத்தப் பார்க்கின்றோம். 2) 'anger is one letter short of danger' அடுத்தவர்கள் செய்த தவறுக்கு நமக்கு நாமே கொடுத்துக் கொள்ளும் தண்டனையே கோபம்.

ஆ. இஸ்ராயேல் மக்களின் மேற்பார்வையாளர் பார்வோனிடம் முறையிடுவது அவர்களின் 'assertive' மனப்பான்மையைக் காட்டுகிறது. குட்டக் குட்டக் குனிவார்கள் என்ற நினைத்த பார்வோனுக்கு இவர்களின் கேள்வி ஒரு எதிர்ப்பாகவே தெரிந்திருக்கும். குட்டியவுடன் எழுந்து விட்டனர் இஸ்ராயேல் மக்கள். நம்மை அடக்கி நினைக்க முயலும் எந்த அடக்கு முறையையும் எதிர்க்க முதல் வழி: கேள்வி. 'ஏன் இப்படி?' என்று கேட்டால் போதும். அடக்குமுறையைக் கையாள்பவரின் கண்களை எதிர்கொண்டு நேருக்கு நேர் நின்றால் போதும் வன்முறை நின்றுவிடும். பணிந்து போவதால் பல நேரங்களில் அடக்குமுறைகள் வளர்ந்துகொண்டே தான் போகின்றன. இன்று யாராவது நம்மைக் குட்டுகிறார்கள் என நினைத்தால் ஒரு நொடி நிமிர்ந்து பார்த்து, 'ஏன்?' என்று கேட்கலாமே?

'ஏன் உம் பணியாளர்களை இவ்வாறு நடத்துகிறீர்?'

ஏன் குழப்புகிறீர்கள்?


எகிப்திய மன்னன் அவர்களை நோக்கி, 'மோசே! ஆரோன்! நீங்கள் இம்மக்களை அவர்களின் வேலையைச் செய்ய விடாமல் ஏன் குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைகளுக்குச் செல்லுங்கள்' என்று கூறினான். மேலும். பார்வோன், 'பாருங்கள், நாட்டில் உங்கள் மக்கள் இப்போது பெருந்திரளாயுள்ளனர். அப்படியிருக்க, அவர்களைத் தம் வேலையிலிருந்து ஓய்ந்திருக்கச் சொல்கிறீர்கள்' என்றான். (விடுதலைப்பயணம் 5:5-6)

ஏன் குழப்புகிறீர்கள்?

ஒவ்வொரு புதிய முயற்சியையும் நாம் தொடங்குவதற்கு முன் நம்மிடம் மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகளும் இவைதான். 'நல்லாதான போய்க்கிட்டிருக்கு!' 'ஏன் ரிஸ்க் எடுக்கிற?' 

ஆளும் வர்க்கம் தாங்கள் அடிமைப்படுத்தியவர்கள் தங்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என மட்டுமே நினைக்கின்றனர். அதுதான் 'சரி' என்றும், அதுதான் 'நடைமுறை' என்றும், அதுதான் '...' எனவும் நினைக்கின்றனர். அப்படித்தான் நினைக்கின்றான் பார்வோன். 'உங்கள் வேலைகளைப் போய்ப் பாருங்கள்!' என மோசேயையும், ஆரோனையும் அனுப்பி விடுகிறான்.

'குழப்பம்'. எந்தவொரு தெளிவிற்கு முன் நாம் கடந்து செல்லும் ஒரு பாதை குழப்பம். ஒரு சில குழப்பங்கள் நாமாக ஏற்படுத்திக் கொண்டவை. ஒரு சில குழப்பங்கள் தாங்களாக வருபவை. இந்த இரண்டிலும் நாம் இழப்பது மன அமைதிதான். 'எல்லாம் நல்லாய்ப் போய்க்கொண்டிருக்கும்போது திடீரென ஏதாவது ஒன்று நடந்து விட்டால்,' 'வாழ்வின் முக்கியமான கட்டங்களில் முடிவுகள்' எடுக்கும் முன்னால் குழப்பம் வருகிறது.

குழப்பத்திற்குக் காரணம் என்ன? ஒன்றுக்கு மேற்பட்ட சாய்ஸ். நேராக போய்க்கொண்டிருக்கிறோம். நமக்கு முன் இரண்டு பாதைகள் இருக்கின்றன. இவைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது? ஒரு பாதை மட்டும் இருந்தால் குழப்பமே வராது. பயணம் போய்க்கொண்டே இருக்கலாம்.

அடிமைகள் இவ்வளவு நாளாக 'வேலை' என்ற ஒரே பாதையில் போய்க்கொண்டிருக்கின்றனர். இப்போது 'கடவுள்' என்ற அடுத்த பாதை வருகிறது. பார்வோனுக்குக் குழப்பம் வருகிறது: 'கடவுளிடம் அனுப்பவா?' 'வேலையை அதிகமாக்கவா?' அவன் வேலையை அதிகமாக்கி 'கடவுள்' என்னும் பாதையை அவர்கள் மனத்தில் இருந்து அழித்துவிடப் பார்க்கின்றான்.

குழப்பத்தை மேற்கொள்ள முதல் வழி: 'இலக்குத் தெளிவு'. இலக்கு இல்லாதவர்களுக்கு எல்லாப் பாதைகளும் ஒரே பாதைதான். நம் இலக்குதான் நம் பாதையைத் தெளிவாக்குகின்றது. குழப்பத்தை மேற்கொள்ள இரண்டாவது வழி: 'குழப்பத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்!' குழப்பமாக இருக்கிறது என்று தள்ளிப்போட்டுக்கொண்டே போனால் மட்டும் வழி பிறந்து விடாது. 'அப்புறம் பார்க்கலாம்!' என எவ்வளவு நாட்கள் நாம் தள்ளிப்போட முடியும்? ஒரு முடிவை நாம் தான் எடுக்க வேண்டும் என்றால், அதை நாம்தான் எடுக்க வேண்டும். நல்லதோ, கெட்டதோ அதன் பலனையும் நாம்தான் அனுபவிக்க வேண்டும். மற்றவர்கள் நமக்காக முடிவு எடுக்க வேண்டும் என நினைப்பதோ, நம் நலத்திற்கும், தீமைக்கும் மற்றவர்களைப் பொறுப்பாளர்கள் ஆக்குவதும் முறைமை அல்ல.

'ஏன் குழப்புகிறீர்கள்?'

Saturday, October 19, 2013

யார் அந்த ஆண்டவர்?


பின்னர் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் வந்து அவனை நோக்கி, 'பாலைநிலத்தில் எனக்கொரு விழா எடுக்குமாறு என் மக்களைப் போகவிடு என இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் உரைத்துள்ளார்' என்று அறிவித்தனர். அதற்குப் பார்வோன், 'யார் அந்த ஆண்டவர்? அவரது பேச்சைக் கேட்டு இஸ்ராயேலை நான் ஏன் அனுப்ப வேண்டும்? அந்த ஆண்டவரை நான் அறியேன். இஸ்ராயேலரை நான் போகவிடவும் மாட்டேன்' என்று கூறினான். (தொடக்கநூல் 5:1-2)

'யார் அந்த ஆண்டவர்?'

நல்ல கேள்வி.

'யாருய்யா அந்தக் கடவுள்? நான்தான் எல்லோருக்கும் கடவுள்!' என்றுதான் பார்வோன் சொல்லியிருக்க வேண்டும். 

எகிப்தின் பிரமிடுகள் இன்றும் நம்மை வியக்க வைக்கின்றன. பிரமிடுகள் வெறும் கல்லறைகளே. யாருடைய கல்லறைகள்? எகிப்தை ஆண்டை பார்வோன்களின் கல்லறைகள். எகிப்தில் ஏறக்குறைய 240 பிரமிடுகள் இருக்கின்றன. அவற்றில் பெரியனாவாக இருப்பவை மூன்று. இந்த மூன்றும் ஒன்று தாத்தா பார்வோன், அடுத்தது மகன் பார்வோன், அடுத்தது பேரன் பார்வோன் என்ற ஒரே குடும்பத்தைச் சார்ந்தது என்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரமிடுகள் வெறும் கற்குவியல்கள் அல்ல. அவை அறிவியல் தொழில்நுட்பத்தைப் பிரதிபலிக்கின்றன. பிரமிடு போன்ற அமைப்பிற்குள் அதிகமான காந்த சக்தி உருவாகிறது. இந்தக் காந்த சக்தி எந்தப் பொருளையும் அழிந்து விடாமல் பாதுகாக்கின்றது. ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பாகவே உடலைப் பதப்படுத்தும் தொழில்நுட்பத்தையும், காந்த ஆற்றலையும் கண்டறிந்திருந்தனர் எகிப்தியர்கள். எகிப்தியர்களின் இந்தத் தொழில்நுட்பம் அரசகுடும்பத்தாருக்கே அதிகம் பயன்பட்டது. பார்வோன்கள் எகிப்தியக் கடவுளர்களின் அவதாரங்களாகக் கருதப்பட்டனர். கடவுளர்கள் இறப்பதில்லை. பார்வோன்களும் இறப்பதில்லை. அவர்கள் உலகின் பார்வைக்கு இறந்தவர்களாகத் தெரிந்தாலும் மேலுலகில் என்றும் ஆட்சியாளர்கள் என்பதைக் காட்டுவதற்காகவும், மறுபிறப்பில் அவர்கள் மீண்டும் கடவுளர்களாக வருவர் என்ற நம்பிக்கைக்கு வலுவூட்டுவதற்காகவும் பிரமிடுகளைக் கட்டி அதில் பார்வோன்களின் உடல்களைப் பாதுகாத்தனர் எகிப்தியர்கள். பார்வோன் இறக்கும்போது அவர் பயன்படுத்திய அரியணை, படைக்கலன்கள், தேர்கள், குதிரைகள், அவருக்குப் பணி செய்த பணியாளர்கள், பணிப்பெண்கள் என அனைவரும் கொல்லப்பட்டு அவரோடு அடக்கம் செய்யப்பட்டனர். ஏனெனில் மறுபிறப்பு எடுத்து வரும் பார்வோனுக்கு அவர்கள் தேவைப்படுவார்கள். 

இந்த ஒரு பின்புலத்தில் பார்வோன்கள் தாங்கள் வாழ்ந்த காலத்திலும் தங்களைக் கடவுளர்களாகக் கருதி வாழ்ந்தனர். ஆகையால் தான் பார்வோனுக்கு, 'இஸ்ராயேல் மக்களின் கடவுள்' யாரென்றே தெரியவில்லை. அவன் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. மேலும் எகிப்து நாட்டில் நடக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க கடவுளர்கள் எதற்கு? தான் மட்டும் போதுமே! என்று நினைத்திருந்தான் பார்வோன்.

'யார் அந்த ஆண்டவர்?' நம் தாய்நாட்டிற்கு மேற்கத்திய மதபோதகர்கள் வந்தபோது நம் முன்னோர்களும் இதே கேள்வியைத்தான் கேட்டிருந்திருக்க வேண்டும்.

பார்வோனின் இந்தக் கேள்வியில் கேலியும் இருக்கிறது. பயமும் இருக்கிறது. நம் வாழ்வின் தேவைகள் நிறைவேறிவிட்டால், இனி தேவைகளே இல்லை என்ற நிலை வந்துவிட்டாலும் நாமும் இதே கேள்வியைத்தான் கேட்போம். 

'யார் அந்த ஆண்டவர்?' எனக் கேட்கின்ற பார்வோன் மிக விரைவாக 'உங்கள் ஆண்டவரே கடவுள்' என்று அறிக்கையிடுவார். 

இந்தியா போன்ற பல சமயங்கள் கொண்ட நாட்டில் இந்தக் கேள்வி பிரச்சினையாகவே அமையும். கடவுளர்களில் யார் பெரியவர் என்பதை வைத்து மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதும் உண்டு. கடவுளை எப்படித்தான் புரிந்து கொள்வது? புரிந்து விட்டால் அவர் கடவுளாகவே இருக்க முடியாது. 

பிறரின் சிரிப்போடு நாமும் சிரித்தால்

பிறரின் அழுகையோடு நாமும் அழுதால்

நாமும் கடவுளர்களே!

'யார் அந்த ஆண்டவர்?'

மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்?


மோசே ஆண்டவரிடம்: 'ஐயோ! ஆண்டவரே! நீர் உமது அடியானிடம் பேசுவதற்கு முன்போ, பேசிய பின்போ நாவன்மை அற்றவன் நான்! ஏனெனில் எனக்கு வாய் திக்கும்;. நாவும் குழறும்' என்றார். ஆண்டவர் அவரிடம், 'மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே! ஆகவே, இப்போதே போ! நானே உன் நாவில் இருப்பேன். நீ பேச வேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்' என்றார். அதற்கு அவர், 'வேண்டாம், ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் இப்போதே அனுப்பிவைப்பீராக!' என்றுரைத்தார். (விடுதலைப்பயணம் 4:10-13)

எரியும் முட்புதரில் தோன்றிய யாவே இறைவனுக்கும், ஆடு மேய்க்கச் சென்ற மோசேக்கும் இடையேயான உரையாடல் தொடர்கின்றது. 'நீ எகிப்திற்குப் போ. நான் உன்னை அனுப்புகிறேன்!' என்று கூறும் ஆண்டவருக்குச் சாக்குப் போக்கு சொல்லுகின்றார் மோசே.

1. 'நான் வாய் பேச முடியாது!' மோசே தன் பலவீனத்தைப் பார்க்கின்றார். ஆனால் கடவுள் அவரது பலத்தைப் பார்க்கின்றார். இதுதான் கடவுளின் பார்வைக்கும் நம் பார்வைக்கும் உள்ள வித்தியாசம். டம்ளரில் இருக்கும் தண்ணீரைப் பார்த்து 'பாதி காலியாயிருக்கிறது!' என்கிறார் மோசே. 'ஆனால் பாதி நிரம்பியிருக்கிறதே' என்கிறார் கடவுள். இன்று நாம் நம்மிலும், பிறரிலும் எதைப் பார்க்கின்றோம்? பலத்தையா? பலவீனத்தையா? முடியாது என்றால் எதுவுமே முடியாதுதான். முடியும் என்றால் எல்லாம் முடியும்.

2. பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான்தானே. நம் அனைவருக்கும் இயலாமைகள் இருக்கின்றன. நாம் பிறரை மட்டம் தட்டக்காரணமாக இருப்பது அவர்களிடம் நாம் காணும் இயலாமைகளே. 'இயலாமையை' வைத்து நாம் ஒருவரை மட்டம் தட்டும்போது அந்த இயலாமையை உருவாக்கிய இறைவனையே நாம் மட்டம் தட்டுகிறோம். நம் இயலாமைகளையும், அடுத்தவர்களின் இயலாமைகளையும் இருப்பது போல எடுத்துக்கொண்டால் கேலிப்பேச்சுக்கே இடமில்லை.

3. 'வேறு யாரையாவது அனுப்புங்க!' என கடவுளுக்கு யோசனை சொல்கின்றார் மோசே. நம் வேலையை நாம் தான் செய்ய வேண்டும். வேறு யாராவது செய்யட்டும் என எதிர்பார்ப்பதோ, 'நான் ஏன் செய்ய வேண்டும்?' எனப் பின்வாங்குவதோ சரியான நடைமுறை அல்ல.

4. கடவுள் தகுதியானவர்களைத் தன் பணிக்குத் தேர்ந்தெடுப்பது கிடையாது. ஆனால் தேர்ந்தெடுக்கும் அனைவரையும் தகுதியுள்ளவராக்குகின்றார். அருள்நிலை, பொதுநிலை என நம்மை அழைக்கும் அவர் அதற்கேற்றவாறு நம்மைத் தகுதியுள்ளவர்களாக்குகின்றார். ஆகையால் நாம் பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ்வோம். 'இறைவாக்கு உரைத்து, மூப்பர்கள் உன்மீது கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்கு அளிக்கப்பட்ட அருள்கொடையைக் குறித்து அக்கறையற்றவனாய் இராதே!' (1 திமோத்தேயு 4:14).

'மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்?'

Thursday, October 17, 2013

உன் கையில் இருப்பது என்ன?


மோசே மறுமொழியாக, 'இதோ, அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள். என் பேச்சைக் கேட்கவும் மாட்டார்கள். ஏனெனில் 'ஆண்டவர் உனக்குக் காட்சியளிக்கவில்லை' என்று சொல்வார்கள்' என்று கூறினார். ஆண்டவர் அவரை நோக்கி, 'உன் கையில் இருப்பது என்ன?' என்று கேட்டார். 'ஒரு கோல்' என்றார் அவர். 'அதைத்தரையில் விட்டெறி' என ஆணை விடுத்தார் ஆண்டவர். அவரும் அதைத் தரையில் விட்டெறிந்தார். அது ஒரு பாம்பாக மாறியது. அதனருகிலிருந்து அவர் விலகி ஓடினார். (விடுதலைப்பயணம் 4:1-3)

பழைய ஏற்பாட்டின் அழைத்தல் நிகழ்வுகள் எல்லாம் ஒரு ஃபார்முலாவால் கட்டப்பட்டுள்ளன. 

1. சந்திப்பு. கடவுள் யாரைத் தன் பணிக்காக அழைக்கின்றாரோ அவர்களைச் சந்திக்கின்றார். மோசேயைக் கடவுள் சந்திக்கும் இடம் எரியும் முட்புதர்.

2. வாழ்த்து. 'மோசே, மோசே' என அழைக்கின்ற கடவுள் அவருக்குத் 'தான் யார்' என்பதை வெளிப்படுத்துகின்றார். 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். 

3. பணி ஒப்படைப்பு. 'இப்போது, இதோ! இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது. மேலும் எகிப்தியர் அவர்களுக்கு இழைக்கும் கொடுமையையும் கண்டுள்ளேன். எனவே இப்போதே போ! ... நான் உன்னை அனுப்புகிறேன்'.

4. அழைக்கப்பட்டவரின் தயக்கம். 'பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?'

5. கடவுளின் வாக்குறுதி. 'நான் உன்னோடு இருப்பேன்'.

6. வாக்குறுதியின் அடையாளம். 'இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள். நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே'.

இந்த 6 படிகளுமே மோசேயின் அழைப்பில், கிதியோனின் அழைப்பில், எரேமியாவின் அழைப்பில் வெளிப்படையாகத் தெரிந்தாலும், மற்றவர்களின் அழைப்பு நிகழ்வுகளில் அவைகள் மறைமுகமாக மிளிர்கின்றன.

மோசேக்குக் கடவுள் காட்டும் முதல் அறிகுறி: 'கைத்தடி பாம்பாக மாறுவது'. 

'உன் கையில் இருப்பது என்ன?'

கடவுளின் அறிகுறி எகிப்து நாட்டில் இன்னும் மேன்மையாக வெளிப்பட்டாலும் முதலில் மோசேயின் கையில் இருந்தே தொடங்குகிறது. 'கையில் இருப்பவற்றைக் கொண்டே' நமக்கு அறிகுறிகளை நிகழ்த்த வல்லவர் நம் கடவுள். அறிகுறிகள், அற்புதங்கள் என நாம் எங்கெங்கோ ஓடுகிறோம். ஆனால் அற்புதங்கள் நம் கண்களுக்கு முன்னாலேதான் எப்போதும் நடக்கின்றன. நம் மனத்தோடு ஒத்துழைக்கும் நம் உடல் ஒரு அற்புதம். நாம் கண்விழிப்பது, சுவாசிப்பது, உண்பது, உறங்குவது, நடப்பது, வெளியே சென்றால் பத்திரமாய் வீடு திரும்புவது, தங்குவதற்கு வீடிருப்பது, நம்மைத் தேட உறவுகள் இருப்பது என நாம் அற்புதங்களால் சூழப்பட்டுள்ளோம். 'ஆழிசூழ் உலகு!' என நாம் நம் உலகை அழைத்தாலும் இது 'அற்புதம்சூழ் உலகுதான்!'.

இரண்டாவதாக, கையிலிருப்பவற்றைப் பார்ப்பது. 'வெறுங்கை என்பது மூடத்தனம். விரல்கள் ஐந்தும் மூலதனம்' என்பார்கள். நம் வாழ்வின் பிரச்சனைகக்கு விடை பல நேரங்களில் நம்மிடம் தான் இருக்கின்றது. நம்மிடம் தேடுவதை விட்டுவிட்டு நாம் மற்றவைகளில், மற்றவர்களில் தேடுகிறோம். ஒரு நிமிடம் உட்கார்ந்து நம்மையே உற்றுப் பார்த்தால், நம் எண்ணங்களை உற்றுக் கவனித்தால் விடை கிடைத்துவிடும்.

'உன் கையில் இருப்பது என்ன?'

ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?


மோசே ஓரேபை வந்தடைந்தார். அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்த போது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?' இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்' என்று மோசே கூறிக்கொண்டார். (விடுதலைப்பயணம் 3:1-3)

மோசே இரகுவேலின் மகள் சிப்போராவைத் திருமணம் முடிக்கின்றார். தன் மகனுக்கு 'கேர்சோம்' (அன்னியன்) எனப் பெயரிடுகின்றார். இதற்கிடையில் எகிப்தில் இஸ்ராயேல் மக்கள் படும் துன்பம் அதிகமாகின்றது. அவர்கள் கடவுளை நோக்கிக் கூக்குரல் எழுப்ப அவர் அவர்களுக்குச் செவிகொடுக்கின்றார். 

தன் சார்பாக இஸ்ராயேல் மக்களை விடுதலை செய்ய மோசேயை அனுப்பத் திருவுளம் கொள்ளும் இறைவன் அவருக்கு ஓரேபு மலையில் தன்னை வெளிப்படுத்துகின்றார். 'எரிகின்ற முட்புதர்' என்று அனைவராலும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நடந்த இடம் இன்றும் சீனாய் மலையில் உள்ளது (?!). 

முட்புதர் எரிகின்றது. ஆனால் தீய்ந்துபோகவில்லை. இதை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார் மோசே. முதலில் கடவுள் எகிப்தை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார். பின் மோசே புதரை நோக்கிக் கண்களைத் திருப்புகின்றார். மோசேயின் ஆர்வத்தை இங்கே நாம் காணலாம். அது என்ன? அது ஏன்? என்று கேள்விகளை எழுப்புகின்றார் மோசே.

கடவுள் தான் விரும்பும் இடத்தில் தன்னை வெளிப்படுத்துகின்றார். ஆனால் அந்த வெளிப்பாட்டைக் கண்டுகொள்ள நம் முயற்சியும் அவசியம். நாமும் நம் கண்களைத் திருப்ப வேண்டும். 'ஏன் இப்படி?' என்ற கேள்வியைக் கேட்க வேண்டும். கண்களைத் திருப்புதலுமே, ஏன் என்று கேட்பதுவுமே சரணாகதி.

நமக்கு அருகில் இருப்பவரின் கண்ணீரைப் பார்க்கும்போதும், அவர்கள் தேவையில் இருக்கும்போதும் அவர்கள் எரியும் முட்புதர்களே. நாம் பார்க்காவிட்டால் ஒருவேளை அவர்கள் அணைந்து போகலாம். கண்களைத் திருப்புவோம். ஏன் கண்ணீர்? என்ன தேவை?

'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை?'

Wednesday, October 16, 2013

ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்?


எனவே மோசே பார்வோனிடமிருந்து தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியிருக்க வேண்டியதாயிற்று. அவர் ஒரு கிணற்றருகில் அமர்ந்திருக்க ... ... அவர்கள் தம் தந்தையான இரகுவேலிடம் சென்றபோது அவர், 'என்ன, இன்று விரைவாக வந்துவிட்டீர்களே?' என்றார். அவர்கள், 'எகிப்தியன் ஒருவன் இடையர்களின் தொல்லையிலிருந்து எங்களை விடுவித்ததோடு, எங்களுக்குப் பதிலாகத் தண்ணீர் இறைத்தான். ஆட்டு மந்தைக்கும் தண்ணீர் காட்டினான்' என்றார்கள். அவர் தம் புதல்வியரிடம், 'எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்? சாப்பிட அவனை அழைத்து வாருங்கள்' என்று கூறினார். (விடுதலைப்பயணம் 2:15,18-20)

மோசே பாரவோனிடமிருந்து தப்பியோடி மிதியான் நாட்டிற்குச் செல்கின்றார். ஈசாக்கு, யாக்கோபின் வாழ்வில் நடந்தது போலவே கிணற்றடியில் பெண் பார்க்கும் படலம் நடைபெறுகிறது. இரகுவேல் என்ற அர்ச்சகரின் புதல்வியரின் உதவி செய்கின்றார். மகளிரின் நல்லெண்ணெத்தையும் அவர்களின் தந்தையின் நல்லெண்ணத்தையும் பெறுகின்றார். 

தங்கள் தந்தையரிடம் அவர்கள் சென்று மோசேயைப் பற்றிச் சொல்லும்போது அவரை 'எகிப்தியன்' எனக் குறிப்பிடுகின்றனர். 

மோசேயின் நல்லுள்ளம் இங்கே தென்படுகிறது. கிணறு, தண்ணீர் என்ற சொல்லாடல் பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வை முன்னுரைப்பதாக அமைகின்றது. இடையர்களை விரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் கொடுத்தது போல, எகிப்தியரிடமிருந்து இஸ்ராயேல் மக்களை மீட்டு, செங்கடல் என்னும் தண்ணீரைக் கடந்து, பாலைவனத்தில் அவர்கள் வாழ்வு பெறத் தண்ணீர் அளிப்பார் என்ற நிழல் இக்கிணற்றடியில் விழுகிறது. 

மற்றொரு பக்கம், இரகுவேலின் நன்றியுள்ளம். ஏதோ ஒரு அந்நியன் உதவி செய்தான் என்று நின்றுவிடாமல் உடனடியாக நன்றிக்கடன் செலுத்துகின்றார். 'இதோ! ஒருவன் கிணற்றடியில் ஆட்டு மந்தைக்குத் தண்ணீர் காட்டுவான். அவரே உன் மருமகன்!' என்று யாரும் அவருக்கு இறைவாக்குச் சொன்னார்களா? 'தண்ணீர் காட்டியதற்கு' நன்றியாக தன் மகளையே அவரால் எப்படிக் கொடுக்க முடிந்தது? 

இன்று இரகுவேல் நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்: 'பிரபஞ்சத்தின் வலை'. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே ஒரு வலைப்பின்னல்தான். ஒன்று மற்றொன்றோடு இணைந்திருக்கின்றது. ஒரு இடத்தில் சங்கிலி அறுந்துவிட்டாலே அது ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையே பாதிக்கின்றது. நமக்கு ஒருவர் நல்லது செய்தால், அதற்குப் பதிலாக அவருக்கோ, அல்லது வேறு ஒருவருக்கோ நல்லது செய்து விட வேண்டும். இப்படியே நன்மை தொடர்ந்தால் அது நம்மிடமும் வந்துகொண்டேதான் இருக்கும். 

'எங்கே அவன்? ஏன் அம்மனிதனைப் போகவிட்டீர்கள்?'

Tuesday, October 15, 2013

உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?


அக்காலத்தில் மோசே வளர்ந்து விட்டபோது தம் இனத்தவரிடம் சென்றிருந்தார். அவர்களுடைய பாரச்சுமைகளையும் பார்த்தார் ... ... ... அடுத்த நாள் அவர் வெளியே சென்றபோது, எபிரேயர் இருவருக்கிடையே கைகலப்பு நடந்து கொண்டிருந்ததைக் கண்டார். குற்றவாளியை நோக்கி, 'உன் இனத்தவனை ஏன் அடிக்கிறாய்?' என்று கேட்டார். அதற்கு அவன், 'எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்? எகிப்தியனைக் கொன்றதுபோல் என்னையும் கொல்லவா நீ இப்படிப் பேசுகிறாய்?' என்று சொன்னான். (விடுதலைப்பயணம் 2:11,13-14)

இன்னைக்கு மதியம் 1:30 மணிக்கு கல்லூரியில் இருந்து என் இல்லத்திற்கு வந்தேன். மிச்சமீதியை சாப்பிட்டு விட்டு ஹோம்வொர்க் செய்த கொண்டிருந்தேன். ஏறக்குறைய 2 மணிக்கு காலிங் பெல் அடித்தது. 'chi è?' (யார் அது?) என்று கேட்டேன். 'சாப்பாடு வேண்டும்!' என்ற ஒரு நடுத்தர வயது ருமேனியப் பெண்ணின் குரல். ருமேணியப் பெண் என்றால் லோ-ஹிப் கட்டிக்கொண்டு, வெற்றிலை மென்று கொண்டு நிற்கும் என நினைக்காதீர்கள். ஜீன்சும், டிசர்ட்டும், ஓவர்கோட்டும், கூலிங் கிளாசுமாய் நின்றது. நான் சாப்பிட்டு மிச்சம் இருந்ததை ஒரு தட்டில் வைத்து 2:30 நிமிடங்கள் சூடாக்கி கீழே கொண்டு போனேன். சாப்பாடு எடுத்துச் செல்லும் அவசரத்தில் என் அறைச் சாவியை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். 'வேகமாகக் கொடுத்து விட்டு வந்துவிடலாம்!' என நினைத்துக் கதவை திறந்தே வைத்துவிட்டுப் படியிறங்கிச் சென்றேன். கீழே நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் கொடுத்தவுடன் பிடுங்காத குறையாக வாங்கிச் சாப்பிட்டார். 'ரொம்ப பசிபோல' என நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் காற்றுக்கு என் அறைக் கதவு பூட்டிக்கொண்டது. சாவி உள்ளே மாட்டிக்கொண்டது. என் அறையைத் தாண்டி வசிக்கும் மற்றவர்களும் இன்று இல்லை. இருந்தால் திரும்பவும் காலிங் பெல் அடித்துத் திறந்து விடச் சொல்லலாம். ஒரு கதவு வேகமாக காற்றில் அடித்துப் பூட்டியதால் எமர்ஜென்சி என்ற அடிப்படையில் எல்லாக் கதவுகளும் ஆட்டோமெட்டிக்காகப் பூட்டிக்கொண்டன. நானும் அந்தப் பெண்ணும் வெளியே தெருவில் எங்கள் வாசற்படியில் நின்றுகொண்டிருந்தோம். மற்ற அருட்தந்தையர்கள் எப்போது வருவார்கள் என்று செல்ஃபோனில் கேட்கலாம் என்றால் செல்ஃபோனும் அறையில் மாட்டிக் கொண்டது. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தபோது அந்தப் பெண்ணுக்கு விக்கல் எடுத்தது. 'தண்ணீர்!' என்று கேட்டது. வருவோர் போவோர் தண்ணீர் எடுத்துக்கொள்ள ஓபன் ஃபௌன்ட்டன் ஒன்று எங்கள் தெருவில் ஒன்று உண்டு. அதில் போய்க் குடியுங்கள் என்றவுடன் அந்தப் பெண்ணுக்குக் கோபம் வந்து விட்டது. 'வாட்டர் பாட்டில் தண்ணீர்தான் வேண்டும்!' என்றது. சாவி இல்லை. கதவு மூடிக்கொண்டது என்றேன். அதற்குப் புரியவில்லை போலும். நமக்கு பயத்துல தமிழே வராது. அப்புறம் எப்படி இத்தாலியன் வரும்? 'சாவி இருக்குங்கிறத நிருபிச்சிடலாம். ஆனா இல்லைங்கறது எப்படி நிருபிக்க முடியும்?' 

'தண்ணி இல்லைன்னா பரவாயில்லை. கோக் கிடைக்குமா?' என்றது. தமிழின் சில கெட்ட வார்த்தைகள் தொண்டை வர வந்து போயின. விக்கல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. நம்ம கெட்ட நேரம் அந்தப் பொம்பளைக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன செய்ய என நினைத்து அதை வாசற்படியில் அமர வைத்துவிட்டு அருகில் இருந்த கடைக்குப் போனேன். எந்தப் பையிலும் காசு இல்லை. கடனாய்த்தான் கேட்க வேண்டும். அருட்பணியாளருக்குரிய 'ஒயிட் காலர்' இருந்தால் கூட துணிச்சலாய்க் கேட்கலாம். அதுவும் இல்லை. வெறும் கறுப்பு டி-சர்ட்தான். வெள்ளைத் தோலுக்கே கடன் கொடுக்க மாட்டார்கள். நம்ம ரொம்ப வெள்ளை! கண்டிப்பாகக் கொடுக்க மாட்டான். இருந்தாலும் துணிச்சலோடு கேட்டேன். நான் நினைத்தது போலவே அவன் பதில் சொன்னான்: 'கடன் கிடையாது!'. கையில் போட்டிருந்த மோதிரம் கண்ணில் பட்டது. 'இந்த மோதிரத்தை வைத்துக்கொண்டு ஒரு பாட்டில் தண்ணீர் கொடுங்கள். எங்க ஃபாதர்ஸ் வந்தவுடன் நான் கதவைத்திறந்து பணம் கொடுத்து விட்டு மோதிரத்தை வாங்கிக் கொள்கிறேன்' எனச் சொல்லித் தண்ணீர் வாங்கினேன். வேகமாக வாங்கிக் கொண்டான். மற்றவர்களும் இப்படி வாங்குவார்கள் போல! அந்த லேடியிடம் தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து ஒரு வழியாய் அனுப்பிவிட்டு, கால்கடுக்கப் படியில் காத்திருந்து பின் ஒரு ஃபாதர் வந்து, 'என்னடா இங்க இருக்க?'ன்னு கதவைத் திறக்க வேகமாக ஓடிச்சென்று 'ஒரு யுரோ' எடுத்துக் கடைக்கு ஓடி என் மோதிரத்தை மீட்டேன். மோதிரத்தை வாங்கும் போது கடைக்காரன் சொன்னான்: 'veramente è oro?' 

நாம நல்லது செய்யப் போய் அது நமக்கே பிரச்சனையாய் ஆகிவிடுவது நம் எல்லாருக்கும் நிகழ்கின்ற ஒன்றுதான். இது ஏன்? என்பதற்குக் காரணம் இல்லை. 'நடக்கும் என்று இருந்தால் அது நடந்துதான் ஆகும்போல!'

மோசே வாழ்விலும் இன்று அப்படித்தான் நடக்கிறது. தன் இனத்தான் ஒருவனை எகிப்தியன் அடிப்பதைப் பார்த்துக் கோபம் கொள்கிற மோசே அவனைக் கொன்று புதைத்து விடுகிறார். அடுத்த நாள் தன் இனத்தான் ஒருவனை தன் இனத்தானே அடித்துக் கொண்டிருக்க, அங்கே சமரசம் செய்யச் செல்லும்போது, அவர்களில் ஒருவன், 'எங்களையும் கொல்லப் பார்க்கிறாயா?' என்று கேட்டவுடன் அவருக்குத் தூக்கி வாரிப் போடுகின்றது.

'யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சோம்!' ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சே என்ற பயம் ஒரு பக்கம். 'டேய் அவனை நான் எதுக்காகக் கொன்னேன்னு தெரியுமா?' என்று தன்னை யாருமே புரிந்து கொள்ளவில்லையே என்ற விரக்தி மறுபக்கம். 

இந்தச் செய்தி பாரவோன் காதுகளுக்குப் போய் பாரவோன் இவரைக் கொல்லத் தேட இவர் எகிப்திலிருந்து தப்பி ஓடுகின்றார். மோசேயின் இளமைப் பருவம் பற்றி, அவரின் அரசவை வாழ்வு பற்றி விடுதலைப்பயண நூல் எதுவுமே குறிப்பிடப்படவில்லை. பேழையிலிருந்து எடுக்கப்படுகின்ற குழந்தை மோசே வளர்ந்து பெரியவராக வருகின்றார். 'தன் இனத்தின்மேல் உள்ள பற்று!' - இதுதான் மோசேயைக் கொலை செய்யத் தூண்டுகிறது. தான் அரசவையில் வளர்ந்தாலும், 'நான் இந்த இடத்திற்கு உரியவன் அல்ல!' என்பது அவர் உள்மனதில் இருந்துகொண்டேதான் இருந்திருக்கும். 

தானே தன் இனத்தை விடுதலை செய்ய நினைக்கின்றார். அது தோல்வியில் முடிகிறது. 'என்னால் முடியும்!' என நாம் முடிவுகட்டி இறங்கும் பல காரியங்கள் தோல்வியாக முடிகின்றன. 'கடவுளோடு சேர்ந்தால்தான் இனத்தின் விடுதலை சாத்தியம்' என்பதைத் தொடர்ந்துவரும் பகுதி காட்டுகின்றது. நம்முன் அநியாயங்கள் நடக்கும் போது இறங்கி அதை எதிர்ப்பதா? அல்லது எல்லாம் நல்லபடியாய் நடக்கும் என ஓய்ந்திருப்பதா?

'ஒருவேளை நம்மால் முடியவில்லையென்றால்...' என்ற பயம் நாம் செய்யும் அனைத்துக் காரியங்களோடும் உடன் வந்து நம்மைக் கட்டிப்போடுகிறது. 

பயம் விடுப்போம். விரக்தி தவிர்ப்போம். துணிவே துணை!

'உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?'

Sunday, October 13, 2013

நான் சென்று அழைத்து வரட்டுமா?


அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவளர் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள். அதைத் திறந்த போது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள். அது அழுதுகொண்டிருந்தது. அதன்மேல் அவள் இரக்கம் கொண்டாள். 'இது எபிரேயக் குழந்தைககளுள் ஒன்று' என்றாள் அவள். உடனே குழந்தையின் சகோதரி பார்வோனின் மகளை நோக்கி, 'உமக்குப் பதிலாகப் பாலூட்டி இக்குழந்தையை வளர்க்க, எபிரேயச் செவிலி ஒருத்தியை நான் சென்று அழைத்து வரட்டுமா?' என்று கேட்டாள். பார்வோனின் மகள் அவளை நோக்கி, 'சரி, சென்று வா' என்றாள். (விடுதலைப்பயணம் 2:5-7)

'நான் சென்று அழைத்து வரட்டுமா?'

எபிரேயக் குழந்தைகளின் பிறப்பைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கின்ற எகிப்தின் பாரவோன் 'பிறக்கும் எபிரேய ஆண்மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண்மகவையோ வாழ விடுங்கள்' என்று அறிவிக்கின்றான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நான் சில அருட்பணியாளர்களோடு இணைந்து புனித நாட்டிற்குச் சென்றேன். முதல் நாள் நாங்கள் தங்கியது நைல் நதியின் கரையோரத்தில். இரவு உணவு நைல் நதியில் மிதந்து கொண்டே செல்லும் ஒரு படகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிறைய மதுபானங்கள், பெல்லி டான்ஸ், மியூசிக் என படகில் ஓடிக்கொண்டிருக்க நானும் மற்ற இரண்டு தந்தையர்களும் படகின் மேல்தளத்திற்குச் சென்றோம். படகிலிருந்து ஒரு தூரத்து இடத்தைச் சுட்டிக் காட்டினார். அங்கே 'மோசேயின் பேழை' என்று மூங்கில் பேழை நாணல்களுக்கு இடையே கட்டப்பட்டிருந்தது. 'இப்படித்தான் மோசே காப்பாற்றப்பட்டார்!' என்றார் அவர். அருகிலிருந்தவர் சொன்னார், 'மோசே காப்பாற்றப்பட்டார். ஆனால் நிறையக் குழந்தைகள் நைல் நதியில் எறியப்பட்டனவே. அவர்களைக் கடவுள் காப்பாற்றவில்லையா?'

தண்ணீர் உயிர் வாங்கும் இடமாகவே பண்டைக்காலம் தொட்டு இருக்கின்றது. உலகின் மிகப்பெரிய நாகரீகங்கள் நதியின் படுகைகளில்தான் தோன்றின என்பது எந்த அளவிற்கு உண்மையோ அதே அளவிற்கு உலகின் மிகப்பெரிய அழிவுகள் நதிகளில்தான் நடந்திருக்கின்றன என்பதும் உண்மை. வாழ்வில் தாங்கள் சந்திப்பதெல்லாம் தோல்வி என நினைத்து எத்தனைபேர் தங்கள் உயிரைத் தண்ணீரில் மாய்த்துக்கொள்கின்றனர். சில நேரங்களில் விளையாட்டெனப் போய் விபரீதமாய் விளைவுகளை ஏற்படுத்தும் இடமாகவும் தண்ணீர் மாறிவிடுகின்றது.

மோசே காலத்தில் பிறந்த பச்சிளம் குழந்தைகள் என்ன பாவம் செய்திருந்தன? இவ்வளவு பெரிய தீங்கைச் சந்திக்க வேண்டுமா அவர்கள்? 'பிறந்தது அவர்கள் குற்றமா?' வரலாற்றில் இனக்கொலைகள் நடக்கும்போதெல்லாம் இதே கேள்விதான் எழுகிறது: 'ஹிட்லரின் காலத்தில் யூதராய்ப் பிறந்தது யார் குற்றம்?' கடவுளர்களின் மௌனம் இந்த இடத்தில் புரியாத ஒன்றாகவே இருக்கின்றது. 'எத்தனை கடவுள்கள் இருந்தும் ஏன் ஒரு கடவுளுக்குக் கூட காப்பாற்ற மனம் வரவில்லை?'

பல குழந்தைகள் இறக்கின்றனர். மோசே மட்டும் காப்பாற்றப்படுகின்றார். இந்த இரண்டு வாக்கியங்களையும் வாசித்தவுடன் நம் மனம் நம்மையறியாமல் பெத்லகேமில் நடந்த இயேசுவின் பிறப்பை நினைத்துப் பார்க்கின்றது. இயேசுவின் காலத்திலும் ஏறக்குறைய இதே நிகழ்வுதான். அங்கே பாரவோன். இங்கே ஏரோது. அங்கே நைல் நதி. இங்கே வாள்முனை. அங்கே மோசே. இங்கு இயேசு. இயேசு பிறந்தபோது அவரின் சமகாலத்துக் குழந்தைகள் ஏரோது அரசனால் கொலை செய்யப்பட்டனரா? இல்லையா? வரலாற்றின் அடிப்படையில் பார்த்தால் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததற்கான எந்தப் பதிவும் இல்லை. இந்த நிகழ்வை மத்தேயு நற்செய்தியாளர் மட்டுமே எழுதுகின்றார். மற்ற நற்செய்தியாளர்கள் குறிப்பாக இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்வுகளை விரிவாக எழுதுகின்ற லூக்கா நற்செய்தியாளர்கூட இந்நிகழ்வு குறித்து மௌனம் சாதிக்கின்றார். இது வரலாற்று நிகழ்வு என்று சொல்வதை விட இறையியல் நிகழ்வு என்றே சொல்ல வேண்டும். இயேசுவைப் புதிய மோசேயாக முன்வைக்க விழைகின்ற மத்தேயு நற்செய்தியாளர் பிறப்பிலும் இயேசு மோசேயைப்போல இருந்தார் என்பதைப் பதிவு செய்ய முனைகின்றார்.

மோசேயின் பிறப்பு ஒரு புரட்டிப்போடுதலைக் காட்டுகிறது. எந்தப் பாரவோன் எபிரேயர்களை ஒடுக்க நினைத்தானோ, அந்தப் பாரவோனின் மகளே அவர்களின் தலைவனைத் தன் வீட்டிற்குள் எடுத்து வளர்க்கின்றாள். 'அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்' என்ற வாக்கியம் அவளின் இளகிய மனத்தைக் காட்டுகிறது. தன் தந்தை கொடுங்கோலனாய் இருந்தாலும் மகள் என்னவோ பாசக்காரியாய் நிற்கின்றாள். எந்தவொரு குழந்தையைப் பார்த்தாலும் பெண்கள் தாய்மார்களாக மாறிவிடுகின்றனர் என்பது இன்றும் நாம் காணும் உண்மை. பெண்மை என்றால் தாய்மை என்பதுதான் பெண்மைக்கான முழுமையான அர்த்தமாகும். 

மோசேயின் இரண்டாவது தாய் அவரின் சகோதரி. ஒரு வீட்டில் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதற்குப் பின் பிறக்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் அவ்வீட்டில் இரண்டு தாய்மார்கள் என்பார்கள். ஆம். அம்மா ஒரு தாய். அக்கா இரண்டாவது தாய். ஆனால் முதலில் ஆண் குழந்தை பிறந்தால் அவனால் அண்ணனாய் மட்டும்தான் இருக்க முடியும். ஒவ்வொரு அக்காவும் இரண்டாம் தாய் என்பதை மோசேயின் அக்காவின் செயல் காட்டுகிறது. அந்தப் பெண்ணிற்கு எத்;தனை வயது இருந்திருக்கும்? நைல் நதியின் ஓரத்தில் நாணல் அரிக்க, கால் கடுக்க, சகதியில் கால் பதித்து, பேழையில் கண் பதித்து எவ்வளவு நேரம், எவ்வளவு நாள் அவள் நின்றிருந்திருப்பாள்? அக்காவின் தியாகம், அரசியின் இரக்கம் மோசேக்கு வாழ்வாக மாறுகிறது. 

தன் சொந்தத் தாயிடமே வாடகைக்கு வளர்க்கப்படுகின்றார் மோசே. 'நீ என் மகன்தான். ஆனால் என் மகனல்ல!' என்ற நினைவு அந்தத் தாயை மிகவே வாட்டியிருக்கும். நமக்கும் பல நேரங்களில் இதே அலைக்கழிப்புதான் நம் உறவுகளிலும் இருக்கும். 'இவன் எனக்கா? அல்லது எனக்கில்லையா?' 'இவள் என்னவள்தானா? அல்லது இல்லையா?' என்ற அங்கலாய்ப்பிலே பல உறவுகளை நாம் சுமக்கின்றோம். 'இவனால் நமக்கு மகிழ்ச்சியா? இவனால் நமக்குத் துயரமா?' இரண்டும் உண்டு. இரண்டும் இல்லை. இந்த உணர்வை நாம் எப்படிக் கையாள்வது?

'எடுத்ததால்' மோசே 'எடுக்கப்பட்டவன்!' என்ற பெயர் பெறுகின்றார்!

இனி மோசேக்கு அழிவில்லை!

அவர் நல்ல கைகளில் அடைக்கலமாகிவிட்டார்.

'நான் சென்று அழைத்து வரட்டுமா?'

ஏன் ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?


எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது: 'எபிரேயப் பெண்களின் பிள்ளைப்பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள். ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள். பெண்மகவு என்றால் வாழட்டும்' ... எனவே, எகிப்திய மன்னன் மருத்துவப் பெண்களை அழைத்து அவர்களை நோக்கி, 'ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?' என்று கேட்டான். (விடுதலைப்பயணம் 1:15-16,18)

யோசேப்பை முன்பின் அறியாத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றுகிறான். எல்லாம் தலைகீழாய் மாறுகின்றது. புதிய மன்னனுக்குப் பயம். யாரைப் பார்த்து? இஸ்ராயேல் மக்களைப் பார்த்து. எதற்காக? தங்களை விட மிஞ்சிவிடுவார்கள் என்றும், தங்கள் பகைவர்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்றும். ஆகையால் இஸ்ராயேல் இனம் வளர்வதைத் தடுக்க நினைக்கிறான்.

முதலில் இருப்பவர்களை வதைப்போம் என எண்ணுகிற மன்னன் கொடிய வேலைப்பளுவினால் அவர்களை வேதனைக்குட்படுத்துகிறான். 'அவர்கள் வாழ்க்கை கசந்து போகும்படி செய்கிறான்!' – எவ்வளவு பெரிய கொடுமை. அடுத்தவர்களின் வாழ்க்கை அவர்களுக்குக் கசந்து போகும்படி செய்வது மிகப்பெரிய பாவம். அடுத்துவர்களின் வலியில் இன்பம் காணத் துடிக்கிறான் பாரவோன் மன்னன்.

அடுத்ததாக, புதிய பிறப்பைக் கட்டுப்படுத்த எண்ணுகிறான். 'பெண்மகவு என்றால் வாழட்டும். ஆண்மகவு என்றால் அழித்துவிடுங்கள்' என மருத்துவப் பெண்களுக்குக் கட்டளை இடுகிறான். இதில் தவறு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. காலந்தோறும் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் ஆண்களே அழிக்கப்படுகின்றனர். இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு இணைய தளத்தில் வித்தியாசமான செய்தியைப் பார்த்தேன். செய்தியின் தலைப்பு: 'யார் பெரியவர்? ஆணா? பெண்ணா?' அந்தக் கட்டுரையை நிறைவு செய்கின்ற ஆசிரியர் இப்படி முடிக்கின்றார்: 'இந்த உலகில் நாம் எல்லோரும் ஒரு நாள் அழிந்து விடுகிறோம் என வைத்துக்கொள்வோம். மனித இனத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரே ஒரு பெண் மிஞ்சினால் போதும். நாம் நமது ஆய்வுக்கூடங்களில் சேர்த்து வைத்துள்ள விந்தணுக்களை வைத்து அவள் பெரிய இனத்தையே உற்பத்தி செய்து விடுவாள். ஒரே ஒரு ஆண் மட்டும் மிஞ்சினால் அவனால் தன்னை மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியுமே தவிர, வேறொன்றும் செய்ய இயலாது. ஆண்கள் இனித் தேவையில்லை. பெண்கள் மட்டும் போதும்!' 

எதற்காக ஆண் குழந்தைகளைக் கொலை செய்யத் தூண்ட வேண்டும்? ஆண் குழந்தைகள் வளர்ந்தால் போர்ப்பயிற்சி பெற்று பகைவர்களோடு சேர்ந்து விடுவார்கள் என்ற பயம். பெண் குழந்தைகள் வளர்ந்தால் தங்கள் அரண்மனையில் வேலைக்கு அமர்த்துக்கொள்ளாலாம் என்று நினைத்திருக்கலாம். பெண்களை எளிதாக மடக்கிவிடலாம் என்ற சித்தாந்தம் விடுதலைப்பயண நூல் காலத்திலேயே இருந்திருக்கிறது. பெண்ணைச் சக்தியாகவும் பார்க்கும் சமுதாயம், அதை பலவீனமாகவும் பார்ப்பது விந்தையாக இருக்கிறது.

பாரவோனின் 'birth control' முறை பலன்தரவில்லை. அதற்குக் காரணம் மருத்துவப் பெண்களின் நற்குணம். அவர்கள் குழந்தைகளின் வாழ்வை அழிக்க விரும்பவில்லை. இன்றைக்கு contraception, abortion, family planning என பல நிலைகளில் 'birth control' பேசப்படுகிறது. இது தேவையா? வேண்டாமா? என்று. ஆனால் திருச்சபை காலங்காலமாக தன் நிலைப்பாட்டில் உறுதியாய் இருக்கிறது. 'குழந்தையின் வாழ்வை அழிக்க நமக்கு உரிமை கிடையாது'. உயிர் கடவுளிடமிருந்து வருகிறது. அந்த உயிரோடு விளையாட நாம் நினைத்தால் அது கடவுளோடு விளையாடுவதற்கு இணையானது. தன்னையே கடவுளாக்கிக் கொள்ளும் எந்த இனமும் விரைவில் அழிந்துவிடும் என்பது வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம். அறிவியலால் ஒரு உயிரை உருவாக்க முடிந்தால் அதற்கு அழிப்பதற்கு உரிமை உண்டு எனலாம். ஆனால் நம் அறிவியல் விஞ்ஞானத்தால் புதிய உயிரை உருவாக்க முடியவில்லை. இந்த இடத்தில் நம் அறிவியல் தோற்றுத்தான் போகிறது. 

இந்த விவிலியப் பகுதியை வாசிக்கும் போது பாரதிராஜாவின் 'கருத்தம்மா' திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. 'பெண்ணாய்ப் பிறத்தல்' என்பது சாபமாக இன்னும் ஒருசிலர் மனதில் ஓடத்தான் செய்கிறது. மற்றொரு பக்கம், கருவறையில் தப்பிக்கும் பெண் கல்லறை வரை காயங்கள் பட்டுக்கொண்டேதான் இருக்கிறாள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. 'இல்லறம் என்னும் கிரிக்கெட்டில் சமையலறைக்கும், படுக்கையறைக்கும் ரன் எடுத்தே அவுட் ஆகி விடுகிறாள் பெண்' என்பார் வைரமுத்து.

விடுதலைப்பயணத்தின் முதல் கேள்வியே நமக்குச் சொல்வது இதுதான்: உயிர் மதிப்புள்ளது. ஆணோ, பெண்ணோ அனைவருமே உயிர் என்ற அடிப்படையில் சமமே. வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு. 'நீ வாழக்கூடாது!' என்று பிறரைச் சொல்ல எந்த தனிநபருக்கோ, நிறுவனத்திற்கோ, அரசிற்கோ அதிகாரம் இல்லை! 

வாழ்வை மதிப்போம். வாழ்வை இனிதாய் வாழ்வோம். வாழ்வோம். பிறர் வாழ வழி விடுவோம்!

'ஏன், இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?'

Saturday, October 12, 2013

அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?


மீண்டும் யோசேப்பு 'கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார். அப்பொழுது, நீங்கள் என் எலும்புகளை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்' என்று சொல்லி, இஸ்ரயேல் புதல்வரிடமிருந்து உறுதிமொழி பெற்றுக்கொண்டார். யோசேப்பு தம் நூற்றுப்பத்தாம் வயதில் இறந்தார். அவரது உடலை மருத்துவ முறைப்படி பாதுகாப்புச் செய்து எகிப்தில் ஒரு பெட்டியில் வைத்தனர். (தொடக்கநூல் 50:25-26)

இன்றைக்குக் கேள்விக்குப் பதில் ஒரு ஸ்டேட்மண்ட்.

'கடவுள் உங்களைக் கனிவுடன் சந்திக்க உறுதியாக வருவார்!'

இதுதான் யோசேப்பின் இறுதி வார்த்தைகள். யோசேப்பின் வார்த்தைகள் மட்டுமல்ல. இவையேதான் தொடக்கநூலின் இறுதி வார்த்தைகளும் இவைதான். யோசேப்பு இந்த வார்த்தைகளை இறைவாக்காகச் சொல்லிவிட்டுப் போகின்றார். இது இறுதியாக இயேசுவின் வருகையைச் சுட்டிக் காட்டுகிறது. 

கடவுள் உங்களைச் சந்திக்க உறுதியாக வருவார். இஸ்ராயேல் மக்களின் உச்சகட்ட நம்பிக்கை இது. யாராவது நம்மைச் சந்திக்க வருகிறார்கள் என்றால் நம்மிடம் உள்ளது ஒரு எதிர்பார்ப்பு, ஆர்வம், தயாரிப்பு. 

இந்த மூன்றும் இருக்கும்போதுதான் நம் சந்திப்பு பலன்தரும்.

படைப்பின் தொடக்கத்தில், பிதாப்பிதாக்களின் வாழ்வில் மனிதர்களைச் சந்திக்க வந்த கடவுள் இன்றும் நம்மைச் சந்திக்க வருகின்றார்.

இந்த நம்பிக்கையும், எதிர்நோக்கும் நம் வாழ்விலும் இருக்கட்டும்.

கீதாஞ்சலியின் இனிய வார்த்தைகளோடு நாம் தொடக்கநூலை நிறைவு செய்வோம்:

'நீங்கள் அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?

அவர் வருகிறார். அவர் தினமும் வருகிறார்.

குழந்தையின் சிரிப்பில்.

எளியவரின் நம்பிக்கையில்.

உழைப்பாளியின் வியர்வையில்.

அவரின் காலடி ஓசைகள் கேட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

நீங்கள் அவரின் காலடி ஓசைகளைக் கேட்டதில்லையா?'

'கடவுள் உங்களைச் சந்திக்க வருவார்!'

Thursday, October 10, 2013

நான் கடவுளுக்கு இணையானவனா?


அவர்கள் இதைத் தம்மிடம் அறிவித்;தபோது யோசேப்பு அழுதார். அவர் சகோதரரும் அழுது அவர்முன் தாள்பணிந்து, 'நாங்கள் உம் அடிமைகள்' என்றனர். யோசேப்பு அவர்களிடம், 'அஞ்சாதீர்கள். நான் கடவுளுக்கு இணையானவனா? நீங்கள் எனக்குத் தீமை செய்ய நினைத்தீர்கள். ஆனால், கடவுள் அதை இன்று நடப்பது போல், திரளான மக்களை உயிரோடு காக்கும் பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார். ஆகவே இப்பொழுது அஞ்சவேண்டாம். உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக்காப்பேன்' என்றார். இப்படியாக அவர் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார். அவர்களுடன் இதமாகப் பேசி வந்தார். (தொடக்கநூல் 50:17-21)

தன் சகோதரர்கள்தாம் தம்மிடம் தானியம் கேட்டு வந்துள்ளனர் என்று கண்டு கொண்ட யோசேப்பு அவர்களோடு 'திருவிளையாடல்' செய்கின்றார். இறுதியில் தன்னை வெளிப்படுத்துகின்றார். யோசேப்பின் சகோதரர்கள் வந்திருக்கிறார்கள் என்பதைக் கேள்வியுற்ற பாரவோனும், அவர்களுக்கும் அவர்களின் தந்தை யாக்கோபுக்கும் எகிப்தில் தங்குவதற்கு இடமும், உணவும் தருகின்றார். தன் மகன் கிடைத்து விட்டான் என்ற மகிழ்ச்சியில் இருக்கின்றார் யாக்கோபு. தன் மகன் உயிரோடுதான் இருக்கிறான் என்பதைக் காணும் யாக்கோபு மற்ற மகன்கள் மேல் கொஞ்சமாவது கோபப்பட்டிருக்கலாமே. 'ஏன்டா...உயிரோடு இருக்கிற ஒரு மகனை, ஏதோ விலங்கு கொன்று விட்டது என ஏன் சொன்னீர்கள்?' 'ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?' எனக் கேட்டிருக்கலாம். ஆனால் அப்படி எதுவுமே நடைபெறவில்லை. ஒருவேளை தான் பிறரை ஏமாற்றியதால் தானும் ஏமாற்றப்படுவோம் என்பதை அறிந்திருந்திருந்த ஞானி யாக்கோபோ என்னவோ?

யாக்கோபு தன் பிள்ளைகளுக்கு நிறைவான ஆசீர் வழங்கி இறந்து போகின்றார். யாக்கோபு இறந்தவுடன் சகோதரர்களுக்குப் பயம். ஒருவேளை யோசேப்பு தங்களைப் பழிதீர்ப்பாரோ என்று! இந்தப் பயத்தில்தான், 'நாங்கள் உம் அடிமைகள்' எனப் பணிகின்றனர். 'இதோ வருகிறான் கனவு காண்பவன்!' என்று சொன்னவர்கள் இன்று 'நாங்கள் உம் அடிமைகள்' என்கின்றனர். நம்மை உலகம் கேலி பேசுகிறது என்றால் ஒரு நாள் அது மீண்டும் நம் பாதம் தொடும் என்பதைக் காட்டுகிறது இந்த நிகழ்வு. இன்று நம்மை இகழ்பவர்கள் நாளை நம்மை அண்டி வருவார்கள். ஆகையால் நம்மை யாராவது புரிந்துகொள்ளவில்லையென்றாலோ, தவறாகப் புரிந்து கொண்டாலோ, கேலி செய்தாலோ கவலை வேண்டாம். விரைவில் அவர்கள் நம்மிடம் திரும்பி வருவார்கள்.

இரண்டாவதாக, யோசேப்பின் பெருந்தன்மை. 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்கள்தாம்' என்பதைக் காட்டிவிட்டார் யோசேப்பு. தான் வாழ்வில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், புரியாத மொழி பேசுகின்ற நாட்டில் விற்கப்பட்டாலும், 'என்னைக் கையைப் பிடிச்சு இழுத்தான்' என்று தவறாகப் பழி சுமத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டாலும், தன் சகோதரர்களைப் பழி தீர்க்க மறுக்கின்றார் யோசேப்பு – சங்கு சுட்டாலும் வெண்மை தரும்! 'என்ன இருந்தாலும் நீங்கள் என் உடன்பிறப்பு!' என அவர்களைத் தழுவிக்கொள்கின்றார்.

மூன்றாவதாக, யோசேப்பிற்கு இருந்த கடவுள் பக்தியும் நம்பிக்கையும். பிறர் நமக்கு எவ்வளவு தீங்கிழைத்தாலும், கடவுள் நமக்கு அருகில் இருந்தால் அனைத்தையும் அவர் நலமானதாக மாற்றுவார் என நம்பினார் யோசேப்பு. 'நீங்கள் தீங்கு நினைத்தீர்கள். ஆனால் கடவுள் அதை நன்மையாக மாற்றினார்'. மகாபாரதத்தின் பாரதப்போரிலும் அர்ச்சுனனை நோக்கி வருகின்ற தீமை விளைவிக்கும் அஸ்திரங்களையெல்லாம் நன்மை பொழியும் வரங்களாக மாற்றுகின்றார் தேரோட்டியாய் வந்த கடவுள் கிருஷ்ணா. கடவுளை நம் அருகில் வைத்துக்கொண்டால் நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

நான்காவதாக, யோசேப்பு பழிதீர்க்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், இன்னும் அதிக நன்மைகளை அவர்களுக்குச் செய்யத் தயாராகின்றார். 'நீ எனக்குச் செய்த தீமைக்குப் பதிலாக நானும் தீமை செய்வேன்!' என்பது மிருகத்தன்மை. 'நீ எனக்கு தீமை செய்து விட்டாய். நான் தீமை செய்ய மாட்டேன். ஆனால் என் கண்முன்னே நிற்காதே!' என்று சொல்வது மனிதத்தன்மை. 'நீ எனக்கு தீமை செய்தாய். ஆனால் நான் உனக்கு நன்மை செய்வேன்!' என்று நினைப்பது கடவுள் தன்மை. யோசேப்பு கடவுள் தன்மை பெற்று உயர்ந்து நிற்கின்றார். இதையே மேலாண்மையியலில் 'being proactive' என்று சொல்வார்கள். சாதாரண மனிதர்கள் வாழும் நிலை 'reactive' ஆனால் மேன்மக்களின் வாழ்க்கை நிலை 'proactive'

'அஞ்சாதீர்கள். நான் கடவுளுக்கு இணையானவனா?'