Monday, June 22, 2015

'உயிர்ப்பு' - லியோ டால்ஸ்டாய்

கடந்த ஒரு வாரமாக ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்களின் 'உயிர்ப்பு' (Resurrection) என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். கிண்டில் பதிப்பில் ஏறக்குறைய 2000 பக்கங்கள். டால்ஸ்டாய் அவர்களின் இறுதி நூல் இது. அவர் எழுதிய மற்ற புகழ்பெற்ற நூல்கள் 'அன்னா கத்தரீனா' (Anna Katherina), 'போரும், அமைதியும்' (War and Peace). 'போரும் அமைதியும்' வாசித்திருக்கிறேன். ஆனால், டால்ஸ்டாயின் இதயத்தை அறிய வேண்டுமென்றால் நீங்கள் கண்டிப்பாக அவரின் 'உயிர்ப்பு' வாசிக்க வேண்டும்.

திமித்ரி இவானிக் நெக்ல்டோப், ஒரு இளவரசன். காலத்தின் கொடுமையாலும், தான் கடந்த காலத்தில் செய்த குற்றங்களுக்கு மனம் வருந்தி, தன் தவறுகளையெல்லாம்; சரி செய்ய விழைகின்றான். இந்தச் சரி செய்தலை பின்புலமாக வைத்து டால்ஸ்டாய் அவரின் காலத்தில் நிலவிய கலாச்சாரம், பண்பாடு என அனைத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார். அவரின் காலத்தில் நிலவிய நிலக்கிழார் முறை, கிறிஸ்தவம், அரசாங்கம், இராணுவம், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள், சிறைச்சாலை என தான் சந்திக்கும் அனைத்தையும் இயல்பாக விமர்சிக்கிறார் டால்ஸ்டாய்.

நெக்ல்டோப், வாயில் வெள்ளிக்கரண்டியோடு பிறந்த இளவல், சமூகத்தின் ஆசை வலைக்குள் விழுகிறான். தன் அத்தை வீட்டில் வேலைக்கு இருந்த ஒரு ஏழைப் பெண்ணின்மேல் காதல் கொண்டு, அவளை மயக்குகிறான். பின் அவளைக் கண்டுகொள்ளவே இல்லை. சில வருடங்கள் கழித்து அவன் நீதிபதியாக இருக்கின்ற ஒரு நீதிமன்றத்திற்கு அவள் கொலைக்குற்றவாளியாக அழைத்துவரப்படுகிறாள். தன்னால் அன்று ஏமாற்றப்பட்டவள்தான் இன்று இந்த நிலைக்கு ஆகிவிட்டாள் என்ற குற்றவுணர்வினால் தள்ளப்பட்டு, அவளைக் காப்பாற்றவும், அவளை திருமணம் செய்து கொள்ளவும் விரும்புகிறான். அவள் தண்டனை பெற்று சைபீரியா நாட்டிற்கு நாடுகடத்தப்படுகிறாள். இவனும் சைபீரியா வரை செல்கிறான். இதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். சஸ்பென்ஸ்!

நிறைய இடங்கள் எனக்குப் பிடித்திருந்தன.

அவற்றில் மூன்றை மட்டும் இங்கு பதிவு செய்ய விழைகிறேன். டால்ஸ்டாயின் வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்க்க முயற்சிக்கிறேன்.

1. நிலாப் பார்வை. சூரியப் பார்வை.
நாம் அன்பு செய்யும் நம் உறவுகளை நிலா வெளிச்சத்தில் பார்க்கலாம். சூரிய வெளிச்சத்தில் பார்க்கலாம். நிலா வெளிச்சத்தில் பார்க்கும்போது அவளின் பரிவு, கரிசணை, அக்கறை, அழகு, ஸ்பரிசம் நமக்குத் தெரிகிறது. சூரிய வெளிச்சத்தில் பார்க்கும்போது அவளின் கோபம், வெறுப்பு, கிண்டல், கன்னத்துக் கோடு, அடிக்கும் உதட்டுப்பூச்சு கண்ணுக்குத் தெரிகிறது. அன்று அவளை நான் சூரிய வெளிச்சத்தில் பார்த்தேன்.

2. ஆறும். மனிதர்களும்
மனிதர்களில் சிலரை நல்லவர் என்கிறோம். சிலரை கெட்டவர்கள் என்கிறோம். சிலர் மேன்மையானவர்கள் என்கிறோம். சிலர் தாழ்வானவர்கள் என்கிறோம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனிதர்கள் எல்லாரும் ஓடுகின்ற ஆறு போன்றவர்கள். ஆறு ஒன்றுதான். ஆனால், அது ஓரிடத்தில் ஆழமாகவும், மற்றொரு இடத்தில் மேலோட்டமாகவும், ஒரு இடத்தில் சிறியதாகவும், மற்றொரு இடத்தில் அகன்றதாகவும் ஓடுகிறது. அகன்ற இடத்தில் நிற்பவர்கள் அதை அகன்றது என்கின்றனர். குறுகிய இடத்தில் அதைப் பார்ப்பவர்கள் அதைக் குறுகியது என்கின்றனர்.

3. மணத்துறவு
திருமணத்தை விட மணத்துறவு எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமணம் எனக்குப் பிடிப்பதில்லை. ஏன்? இனியும் இந்தப் பூமிப்பந்தில் உயிர்களைக் கூட்ட எனக்கு விருப்பமில்லை. இருக்கின்ற உயிர்களைக் காப்பாற்றுவதே மேல் என நினைக்கிறேன். மணத்துறவில் இருக்கும் ஒவ்வொருவரும் நம் உடலில் இருக்கும் 'பாகோசைட்' (Phagocytes, from Greek 'phagein', meaning 'to eat' or 'devour' and 'kutos', meaning 'hollow vessel') என்ற செல் போன்றவர்கள். வலுவிழந்த செல்களைக் காப்பாற்றுவதும், உடலை நோய் தாக்கும்போது, தாக்கப்பட்ட செல்களைக் காப்பாற்றுவதும்தான் இவைகளின் பணிகள். இப்படிக் காப்பாற்றும்போது தாங்கள் அழிய நேரிட்டாலும் இவை கவலைப்படுவதில்லை.

இந்த நாவலை வாசிக்கும் ஒவ்வொரு நொடியும் என்னையே சுயஆய்வு செய்து பார்ப்பதுபோல இருந்தது. யார் வாசித்தாலும், இந்த நூல் வாசிப்பவரை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருக்கிறது.

டால்ஸ்டாய்க்கு மரணமில்லை.

'உயிர்ப்பு' - என்றும்!



1 comment:

  1. முகத்தை மயிலிறகு கொண்டு வருடிவிட்ட ஒரு சுகம் இன்றையப்பதிவு.நெக்ல்டோப்...அவனால் காதலிக்கப்பட்ட அந்த ஏழைப்பெண்...யார் பக்கம் நியாயம்? தெரியவில்லை.அதென்ன சஸ்பென்ஸ்? முடிவையும் சொல்லியிருக்கலாமே ஃபாதர்! நூலில் தங்களுக்குப் பிடித்த அந்த இடங்கள் எனக்கும் கூடப் பிடித்திருந்தன. சூரிய...சந்திர ஒளியின் பிண்ணனியில் எப்படி ஒருவரின் மாறுபட்ட குணாதிசயங்கள் வெளிப்படுகிறது! அருமை! ஆறும் மனிதர்களும் ....அவர்கள்( அவைகள்) நல்லவராகவும் கெட்டவராகவும் காட்டுவது நாம் நின்று கொண்டிருக்கும் இடத்தின் தன்மையே அன்றி அது அவர்களது குற்றமல்ல.....நாம் மற்றவரை எப்படிப்பட்ட பார்வையால் அளக்கிறோம்? சுய ஆய்வு செய்ய வேண்டிய கேள்வி!! எல்லாவற்றிற்கும் கொடுமுடி...அந்தக் கடைசிப் பகுதி " மணத்துறவு மேற்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் 'ஃபாகோசைட்ஸ்' போன்றவர்கள்; வலுவிழந்த,நோய்தாக்கப்பட்ட செல்களைக் காப்பதுதான் இவர்களின் வேலை; மேற்கொண்ட பணியில் அழிய நேரிட்டாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை"... இதற்கு மேல் இவர்களைப்பற்றிச் சொல்ல என்ன இருக்கிறதென எனக்குத் தெரியவில்லை.ஆம்! டால்ஸ்டாய்க்கு மட்டுமல்ல....இந்த ஃபாகோசைட்ஸாக நின்று செயல்படும் எந்த ஒரு அருட்பணியாளருக்கும் கூட மரணமில்லை....'உயிர்ப்பு'தான் என்றும்!... அருமையோ அருமை!!!

    ReplyDelete