Friday, February 28, 2014

ராஜா வந்திருக்கிறார்

'ராஜா வர்றாரு போல. எல்லாத் தயாரிப்பும் ரொம்ப வேகமா நடக்குது!'

இந்த வார்த்தைகளை இன்று என் அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது கேட்டேன். போனை வைத்து விட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு திடீரென ஆறாம் வகுப்பில் படித்த 'ராஜா வந்திருக்கிறார்' கதை நினைவிற்கு வந்தது.

'ராஜா வந்திருக்கிறார்' சிறுகதை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் படித்திருக்கிறீர்களா? இதை எழுதியவர் கு. அழகிரிசாமி. இவரின் மற்றொரு அழகிய படைப்பு 'அன்பளிப்பு'. நேரமிருந்தால் நீங்கள் கண்டிப்பாகப் படியுங்கள்.

என் நினைவிற்கு எட்டியதை இப்போது கதையாகவே பகிர்கிறேன். கதாபாத்திரங்கள் நினைவில்லை. ஆகையால் நாமே பெயர் கொடுத்துக்கொள்வோம். சரியா?

ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் இரண்டு குழந்தைகள்: இனியா மற்றும் பாலு. இனியாவின் குடும்பம் அந்தக் கிராமத்தில் ரொம்ப வறுமையான குடும்பம். பாலுவின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம். இனியாவின் குடும்பச் சூழலை பாலு தினமும் கிண்டல் செய்வான். இருவரும் அந்த ஊரில் இருந்த ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கின்றனர். 'எந்தக் கலர் பாவாடைக்கு எந்தக் கலர் சட்டை போடவேண்டும்' என்று கூட இனியாவிற்குத் தெரியாது. அப்படியே தெரிந்தாலும் மேட்சாகப் போட வசதியில்லாதவள் அவள். இனியா அவள் வீட்டிற்கு ஒரே பொண்ணு. அவளுக்குத் தேவையானதை அவர்கள் பெற்றோர்கள் தங்களால் முடிந்த அளவு வாங்கிக் கொடுத்தனர். தீபாவளி நெருங்கி வர ஆரம்பித்தது. 'எனக்கு புது டிரஸ் வேணும்' என்று இப்பவே அடம் பிடிக்கத் தொடங்கிவிட்டாள்.

பாலுவிற்கு ஒரு அண்ணன் உண்டு. அவன் பெயர் ராஜா. பாலுவின் குடும்பத்தின் மூத்த மகன் இவனே. பண்ணையார் சொத்தெல்லாம் ராஜாவுக்கே என்று சொன்னது ஊர். படிப்பு அவ்வளவாக வராது. இருந்தாலும் அப்படி இப்படி முயற்சி செய்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்று விட்டான். 'என்ன வேலை செய்கிறான்?' என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மூன்று வருடங்களுக்குப் பிறகு தீபாவளிக்கு வருவதாகச் சொன்னதை அடுத்த பண்ணையார் குடும்பமே களை கட்டியது.

தீபாவளி நெருங்கிக் கொண்டே இருந்தது. பாலு தன் தந்தை வாங்கிய போலீஸ் டிரசையும், பளபளக்கும் ஜிப்பாவையும் பள்ளிக் கூடத்தில் காட்டி மகிழ்ந்தான். இனியாவிடமும் காட்டி அவளை வம்பிழுத்தான். அழுது கொண்டே வந்த இனியா தனக்கும் இந்தத் தீபாவளிக்கு போலீஸ் டிரஸ் வேணும் என வீட்டில் அடம் பிடித்தாள். அவளின் அப்பாவும் எப்படியோ போராடி மிச்சம் பிடித்து அவள் விருப்பப்படியே போலீஸ் டிரஸ் வாங்கிவிட்டார்.

தீபாவளிக்கு முந்தைய தினம்.

ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. பெண்கள் ஒருவர் மற்றவரிடம் தாங்கள் வாங்கிய புடவைகளைக் காட்டி மகிழ்ந்தனர். ஒரு சில சிறுவர்கள் இப்போதே வெடி வெடிக்கத் தொடங்கி விட்டனர். இரண்டு சிறுவர்கள் தாங்கள் வாங்கிய துப்பாக்கியை வைத்து திருடன் போலீஸ் விளையாட ஆரம்பித்து விட்டனர். மேள தாளத்துடன் ராஜா வீட்டிற்கு வந்து சேர்ந்தார். அவருக்கு ஊரின் முகப்பிலிருந்தே வரவேற்பு கொடுக்கப்பட்டது. நல்ல வாட்ட சாட்டமாக ராஜா மாதிரியே வந்திறங்கினார் சிங்கப்பூர் மாப்பிள்ளை. பாலுவுக்கு நிறைய ஸ்வீட்ஸ் வாங்கி வந்தார் ராஜா.

இரவானது. தன் புதிய போலீஸ் டிரசை மீண்டும் ஒருமுறை தடவிப் பார்த்துவிட்டு தூங்கப் போனாள் இனியா. விடிந்ததும் அதை அணிந்து கொண்டு பாலு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என தனக்குள் முடிவெடுத்துக் கொண்டாள்.

விடிந்தது. வீட்டைக் கூட்டி தண்ணீர் தெளிப்பதற்காக வெளியே வந்தாள் இனியாவின் அம்மா. விடிந்தும் விடியாமல் இருந்தது. 'அடித்து விரட்டினாலும் போக மாட்டேன்' என்பது போல மெல்ல மெல்ல விலகிக் கொண்டிருந்தது இருள். வீட்டிற்கு வெளியே யாரோ நிற்பது போல இருந்தது. 'யாரது?' என்று கேட்டாள். பதில் வரவில்லை. அருகில் சென்று பார்த்தாள். ஒரு சிறுவன் வெற்றுடம்போடு, இப்பவோ அப்பவோ என்று கிழிந்து தொங்கிக் கொண்டிருந்த கால்சட்டையோடு நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் சென்றவுடன் ஏதோ ஒரு கெட்ட வாடை. 'யாரப்பா நீ?' என்று கேட்டாள் அம்மா. பதில் இல்லை. சிறுவன் ஏதோ முனகினான். 'எங்கிருந்து வருகிறாய்?' என்றாள். அதற்கும் ஏதோ முனகினான். அவனை விரட்டவும் மனதில்லை. உள்ளே அழைக்கவும் தயக்கமாய் இருந்தது.

நன்றாக விடிந்து விட்டது. இனியா இன்னும் தூங்கிக் கொண்டிருந்தாள். வெளியே நின்ற சிறுவன் அப்படியே நின்று கொண்டிருந்தான். இனியாவின் அம்மா இட்டிலி மாவைக் கொப்பரையில் ஊற்றிக் கொண்டிருந்தாள். மாற்றுப் பாத்திரம் எடுக்க வெளியே வரும்போது அந்தச் சிறுவன் இன்னும் அங்கே நின்று கொண்டிருந்தான். அவளின் தாயுள்ளம் கேட்கவில்லை. உடனே அவனை வீட்டிற்குள் அழைத்தாள். அவனின் தலையில் நல்லெண்ணெய் ஊற்றி ஊற வைத்து சீயக்காய் வைத்து நன்றாகத் தேய்த்தாள். சிறுவன் அழுதான். இருந்தாலும் விடவில்லை. அவனை நன்றாகக் குளிக்க வைத்து தன் வீட்டில் இருந்த ஒரு துண்டை எடுத்து அவனைத் துவட்டினாள். துவட்டியதும் தான் நினைத்தாள். இப்போ இவன் என்ன டிரஸ் போடுவான்? தன் கணவரின் உடைகள் இவனுக்குப் பெரியதாக இருக்கும். சட்டென்று இனியாளின் போலீஸ் டிரஸ் நினைவிற்கு வந்தது. அதை எடுத்து அணிவித்தாள். ஒரு தட்டில் மூன்று இட்டிலிகளும் வைத்துக் கொடுத்தாள்.

கொஞ்ச நேரத்தில் இனியாவும் எழுந்து விட்டாள். தூக்கக் கலக்கத்தில் அவளுக்கு யார் இருக்கிறார் யார் இல்லை என்றே தெரியவில்லை. நேராகக் குளிக்கப் போனாள். அவளின் அம்மாவை அழைத்தாள். அம்மாவும் குளிக்க வைத்து வீட்டிற்குள் அழைத்துப் போனாள். அப்போதுதான் இனியா அந்தச் சிறுவனைக் கவனித்தாள். அவன் போலீஸ் டிரஸ் அணிந்ததைப் பார்த்து விட்டு, 'இரு...நானும் போய் அணிந்து வருகிறேன்' என உள்ளே போனாள். அப்போதுதான் அவள் அம்மா சொன்னாள். 'உன் டிரசைத் தான் இவன் போட்டிருக்கிறான்!' இனியாவிற்கு வந்தது பாருங்கள் கோபம். விம்மி விம்மி அழுதாள். அவளுக்கு என்ன சமாதானம் சொல்வதென்று தெரியாமல் அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள் அம்மா. 'அவனுக்கு யாருமேயில்லை செல்லம். உனக்கு அண்ணன் மாதிரி வந்திருக்கிறான். அவன் போட்டுக் கொள்ளட்டும். உனக்கு வேறு வாங்குவோம்' என்று ஒரு வழியாகச் சமாதானப்படுத்தினாள். இனியாவின் இந்தக் கலவரத்தினால் பயந்தே விட்டான் சிறுவன்.

கையிலிருந்த இனிப்பை அவனுக்குக் கொடுத்து உன் பெயர் என்ன? என்று கேட்டாள் இனியா. 'ராஜா' என்றான் சிறுவன்.

மதிய வேளை பாலு இனியாவின் வீட்டிற்கு ஒரு சாக்லேட் பெட்டியோடு வந்தான்.

சாக்லேட்டைக் கொடுத்து விட்டு அவளைக் கிள்ளினான்.

'எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்!' என்றான் பாலு.

'எங்க வீட்டுக்கும் ராஜா வந்திருக்கிறார்' என்றாள் இனியா.


ஒரு மனிதனின் தற்கையளிப்பு

ஜெர்மானியப் படை தனது நாசிச வெறியின் உச்சத்தில் இருந்த காலம். ஒரு இருண்ட சிறைச்சாலை. தினந்தோறும் பல்வேறு வகையான கொடுமைகள். பல்வேறு வகையில் சாவு. வாழ்வா, சாவா என்பதே தினசரி கனவாகிப் போனது சிறைவாசிகளுக்கு. மறுபுறம் சண்டை சச்சரவுகள். கைதிகளுக்குள்ளே கலவரங்கள். புதிதாக வரும் கைதிகள் ஏற்கனவே இருக்கும் கைதிகளின் கையில் சிக்கியும் துன்புற்றனர். எந்த நேரமும் குழப்பம். ஒருவரையொருவர் காட்டிக் கொடுக்கும் கலாச்சாரம். நாட்கள் நகர்ந்தன. அன்றொரு நாள் மாலை வேளை. கைதிகள் வேலை முடித்த நேரம். படைத்தளபதி விரைந்து வருகிறான். ஒரு மண்வெட்டியைக் காணவில்லை. அதற்கான விசாரணைக்காக எல்லாக் கைதிகளும் அழைத்து வரப்படுகின்றனர். யாரும் உண்மையை ஒத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. படைத்தளபதிக்குப் பதற்றம். மண்வெட்டியைப் பயன்படுத்தி யாராவது தப்பி ஓடி விட்டால் தனது பணி பறிபோய்விடும். அனைத்துக் கைதிகளையும் வரிசையாக நிறுத்திச் சுடக் கட்டளையிடுகிறான். அனைவருக்கும் பயம். வரிசையாக நின்றவுடன் ஒரு கைதி மட்டும் முன்னே வந்து தான் திருடியதை ஒப்புக் கொள்கிறான். படைவீரர்கள் பாய்ந்தோடிப் பிடித்து அவனைச் சுட்டுக் கொள்கின்றனர். ஆழ்ந்த அமைதி. அனைவரும் தத்தம் அறைகளுக்குச் செல்கின்றனர். படைத்தலைவன் மீண்டும் சரிபார்க்க மண்வெட்டிகள் அனைத்தும் சரியாக இருக்கின்றன. அனைவருக்கும் ஆச்சர்யம். நிசப்தம். எதற்காக அந்த மனிதன் பிறருக்காகத் தனது உயிரை இழந்தான்? அன்றிலிருந்து ஒரு புதிய நிலை சிறைச்சாலையில்: கைதிகள் அனைவரும் ஒருவர் ஒருவருடன் அன்புடன் பழகினர். படைவீரர்கள் துன்புறுத்தினாலும் மகிழ்ச்சியாக இருந்தனர். புதிய கைதிகளை நன்முறையில் நடத்தினார்கள். எப்படி இவ்வளவு மாற்றம்? எல்லாம் அந்த ஒரு மனிதனின் தற்கையளிப்பு. அந்த மனிதனுடன் இருந்த அனுபவம். 

Thursday, February 27, 2014

தேனினும் இனியது

சிங்கத்தினும் வலியது எது?

தேனினும் இனியது எது?

சிம்சோனைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையை இன்று எழுதத் தொடங்கினேன்.

சிம்சோன் என்ற ஒரு மனிதர் இருந்தாரா? என்பது முதல் கேள்வி.

சிம்சோனைப் பற்றி எழுதும்போது என் நண்பன் சாம்சன் தான் நினைவிற்கு வருகிறான்.

என் குருத்துவக் கல்லூரி முதல் நண்பன் சாம்சன். திண்டுக்கல்லில் இருக்கிறான்.

எவ்வளவு நாட்கள் பேசாவிட்டாலும் பார்க்கும்போது அதே பாசத்தைப் பொழிவான்.

அதிகமாக அவனிடம் பேசாமல் இருந்த ஆண்டுகள் மூன்று.

அந்த மூன்று ஆண்டு இடைவெளியில் ஒருநாள் ஒரு அலைபேசி எண்ணிலிருந்து ஒரு அழைப்பு.

புதிய எண் என்பதால் அழைப்பைத் துண்டித்து விட்டு

'who are you?' என அனுப்பினேன்.

உடனே பதில் வந்தது:

டேய் யேசு. என்னடா? 'how are you?' அனுப்புவதற்குப் பதில் 'who are you?' என அனுப்பியிருக்கிறாய்?

பாசக்கார பயபுள்ள!

விவிலியத்தின் சாம்சனும் பாசக்காரர் தான்.

சாம்சனைப் பற்றி நீதித்தலைவர்கள் நூல் 13 முதல் 16 (நான்கு அதிகாரங்கள்) சொல்கின்றன.

இந்த நான்கு அதிகாரங்களையும் இரண்டே வாக்கியங்களில் அடக்கி விடலாம்:

1. பிலிஸ்தியரைக் காணும்போதெல்லாம் கொலை செய்வார்.

2. பெண்களைக் காணும்போதெல்லாம் காதல் கொள்வார்.


Wednesday, February 26, 2014

என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!

இயேசுவைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான். வாயில் நுரை தள்ளியது. அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, 'இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?' என்று கேட்டார். அதற்கு அவர், 'குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்து வருகிறது. இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள் மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்றார். இயேசு அவரை நோக்கி, 'இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்றார். உடனே அச்சிறுவனின் தந்தை, 'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்' என்று கதறினார். (மாற்கு 9:20-24)

நேற்றைய நற்செய்தியை திருப்பலியில் வாசிக்கும் போது என்னை அறியாமல் என் கண்களில் தண்ணீர் கோர்த்தது. இந்த முறை இந்த நற்செய்தியை வாசித்த போது இதே நிகழ்வு இப்போதே நடப்பது போல இருந்தது. நான் தேனியில் அருட்பணியாளராய்ப் பணியாற்றிய போது ஒரு நாள் காலை வாக்கிங் முடிந்து திரும்பினேன். என் அறைக்கு அருகில் ஆரம்பப் பள்ளி உண்டு. அந்த ஆரம்பப் பள்ளிக்கு வந்து கொண்டிருந்து சிறுமி ஒருத்தி கோவிலை ஒட்டி அமர்ந்திருந்தாள். நான் அறைக்குச் சென்று அறையைத் தாளிடும்போது மறுபடியும் அவளை எதார்த்தமாகக் கவனித்தேன். அப்படியே சாய்ந்தாள். சற்று நேரத்தில் கையும் காலும் இழுத்தது. வாயெல்லாம் நுரை. ஓடிச் சென்று பார்த்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை? ஏதாவது இரும்பைக் கொடுத்தால் அடங்கும் என்று எங்கோ சொல்லக் கேட்டு அவளின் கைகளில் கொடுத்தேன். கொஞ்ச நேரத்தில் அமைதியானாள். அவளின் முகமெல்லாம் வியர்வை. துடைத்து விட்டு அவளுக்கு காஃபி போட்டு கொடுத்தேன். பின் அவளின் பெற்றோரை அழைத்து வரச் சொன்னேன். அவர்களும் வந்தார்கள். மிகவும் பரிதாபமான பெற்றோர். ஒருநாள் அந்தக் குழந்தைக்கு நடந்ததையே என்னால் தாங்க முடியவில்லை. அந்தப் பெற்றோர்கள் எத்தனை முறை இரவிலும், பகலிலும் அவளுக்கு உதவி செய்திருப்பார்கள்.

மற்றொரு முறை திருவனந்தபுரத்திலிருந்து ஒரு ஆசிரியரின் காரில் மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். அவ்வளவு நேரம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த ஆசிரியர் திடீரென்று அவரின் தம்பியை ஓட்டச் சொல்லிவிட்டு பின்னால் அமர்ந்தார். வண்டி சென்று கொண்டிருந்த கொஞ்ச நேரத்தில் அவருக்கு வலிப்பு வர அப்படியே நிறுத்தி அவருக்கு முதலுதவி செய்தோம். அவர் வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போது ஒரு வேளை வலிப்பு வந்திருந்தால் கண்டிப்பாக விபத்து நடந்திருக்கும். 

இப்பொழுதுதான் வரும், அப்பொழுதுதான் வரும் என்று கணிக்க முடியாத ஒரு கொடிய நோய் இது. பாவம் இதனால் வருத்தப்படுவோர். இதைக் குணமாக்க இப்போது மருத்துவம் வளர்ந்து விட்டது என்பது குறித்து மகிழ்ச்சி. இயேசுவின் காலத்தில் இந்த நோய்க்குக் காரணம் அலகை என நினைத்தனர். அந்த அப்பாவித் தந்தையும் அப்படியே நினைத்திருப்பார். ஆனால் அலகையும் இருந்து, இந்த நோயும் இருந்தால் அந்தச் சிறுவன் பாவம் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பான். 

சுற்றி நின்ற கூட்டத்திற்கு இது ஒரு பெரிய வேடிக்கையாக இருந்திருக்கும். 'நமக்கு நடக்கும் வரை நடப்பதெல்லாம் வேடிக்கை' என்பார் கண்ணதாசன். இயேசுவுக்கு ஏன் அக்கறை? குணமாக்க நினைக்கின்றார். நான் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பேன்? நீங்க என்ன செஞ்சிருப்பீங்க?

மிக எதார்த்தமான இயேசுவின் உரையாடலை இங்கே பதிவு செய்கிறார் மாற்கு நற்செய்தியாளர். இயேசு ஒரு மந்திரவாதி அல்ல. எடுத்தவுடன் குணமாக்கி விட. அவரின் மனிதாபிமானம் இங்கே அழகாகச் சித்தரிக்கப்படுகின்றது. 'எவ்வளவு காலம் இது இவனுக்கு இருக்கிறது?' என்று கேட்கின்றார். என்ன ஒரு அக்கறை? அந்த அப்பாவி அப்பாவுக்குத் தெரியவில்லை இயேசுவால் குணமாக்க முடியும் என்று. ஆகையால் தான் 'உம்மால் இயலுமானால்!' என்கிறார். 'நம்புகிறவருக்கு எல்லாம் முடியும்!' என்கிறார் இயேசு. நம்பிக்கையில் தளர்வுறும் போது எல்லாமே தளர்ந்து விடுகிறது. 'நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!' என்கிறார் அந்த அப்பா. மிக எளிய செபம். தன் லிமிட்டை உணர்ந்தவர் அந்த அப்பா.

குடும்பத்தில் வேலை, குழப்பம், பிரச்சினை என புலம்பிக் கொண்டிருக்கும் சாமானியர்கள் தாம் ஆன்மீகத்தில் உயர்ந்தவர்கள் என்பேன் நான். நான் ஒரு சில நாட்கள் நினைத்துப் பார்த்ததுண்டு. என்னுடைய கவலைகள் எவை? அந்தப் பட்டியல் இப்படி இருக்கும்: திருப்பலி வைக்க வேண்டும்? மறையுரை தயாரிக்க வேண்டும்? காலை செபம் சொல்ல வேண்டும்? எபிரேயம் படிக்க வேண்டும்? கிரேக்கம் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்? மொபைல் டாப் அப் செய்ய வேண்டும்? வைஃபை பாஸ்வேர்ட் மாற்ற வேண்டும்? நல்ல மொபைல் ஃபோன் வாங்க வேண்டும்? நாளைக்கு கறுப்பு கலர் டிரஸ் அணிய வேண்டும்? பிடிஎஃப் பைல்களை பிரிண்ட் எடுக்க வேண்டும்? ஸ்பைரல் செய்ய வேண்டும்? நேற்று அவனை விஷ் பண்ணினேன். அவன் கண்டு கொள்ளவில்லை. இன்று அவனை விஷ் பண்ணக் கூடாது? ஏன் என்னைப் பார்த்து சிரித்தான் எனக் கேட்க வேண்டும்? அவள் எப்போதும் என்னைப் பற்றியே பேசுகிறாள். அவளை அவாய்ட் பண்ண வேண்டும்? இதெல்லாம் பல நேரங்களில் என் கவலைகள்.

இதே நாட்களில் என் கிராமத்தில் இருக்கும் என் அம்மாவின் கவலைகள் என்னவாக இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்துள்ளேன்: பால் வாங்கப் போக வேண்டும். குழந்தைக்கு பிஸ்கட் வாங்க வேண்டும். பள்ளிக்குச் சரியான நேரத்திற்குச் செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு நல்ல சாப்பாடு கொடுக்க வேண்டும். குழந்தைகளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். மதியும் டவுணுக்குச் செல்ல வேண்டும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க வேண்டும். நோயுற்றிருக்கும் பக்கத்து வீட்டுக்காரரைப் பார்க்க வேண்டும். ஊருக்கு வரும் பங்குத்தந்தைக்கு காலை உணவு கொடுக்க வேண்டும். மகளிர் கூட்டத்திற்கு அறிக்கை எழுத வேண்டும். கடந்த வாரம் வந்த பணத்தை வங்கியில் செலுத்த வேண்டும். கடன் கேட்ட மல்லிகா அக்காவை பேங்கிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

முதல் லிஸ்டையும் இரண்டாவது லிஸ்டையும் பாருங்களேன். முதலில் உள்ள லிஸ்டில் கவலையெல்லாம் தன்னைப் பற்றி. இரண்டாவது லிஸ்டில் கவலையெல்லாம் அடுத்தவர்களைப் பற்றி. இரண்டாவது லிஸ்டிலிருந்து புறப்படும் ஆன்மீகம் தான் இன்றைய நற்செய்தி காட்டும் ஆன்மீகம். 'நம்பிக்கையில் ஊன்றி இருப்பதற்காகவே பத்து ஆண்டுகள் படித்தேன்!' என்று சொல்கின்ற என் நம்பிக்கை இன்னும் தள்ளாடுகின்றது. நம்பிக்கைக்கும் எதிர்நோக்கிற்கும் அர்த்தம் தெரியாது. ஆனால் இரண்டையும் வாழ்ந்து காட்டும் சாமானியர்களின், அப்பாக்களின், அம்மாக்களின் நம்பிக்கை கற்பாறையாய் கலங்காமல் நிற்கின்றது.

'நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்!'

Monday, February 24, 2014

அன்பு மணமக்களே

'உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்.
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர்.
ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவராக!'
(திருப்பாடல் 128)

அன்று ஒரு தம்பதியினரின் திருமண ஆண்டு விழா. காலையிலேயே கோவிலுக்குச் சென்று இறைவனுக்கு நன்றி செலுத்தினர். மாலையில் தங்களின் ஆண்டுவிழா நினைவாக ஒரு மோதிரம் வாங்கலாம் என எண்ணியவர்களாய் நகைக் கடைக்குச் செல்கின்றனர். ஒவ்வொரு மோதிரமாக எடுத்துப் பார்த்துக்கொண்டேயிருக்க ஒரு மோதிரம் திடீரென்று பேசத் தொடங்கியதாம். தம்பதியினருக்கு அதிர்ச்சி. அந்த மோதிரம் பேசியதையே கூர்ந்து கேட்டார்கள்.

அந்த மோதிரம் என்ன பேசியதாம்? அது பேசியதை நான் இங்கு அப்படியே பதிவு செய்கிறேன்.

அன்பு மணமக்களே,

வாழ்த்துக்கள்.

என்னை பக்குவமாக கைகளில் ஏந்தியிருக்கிறீர்களே! ஆச்சர்யமாய் இருக்கிறதா? நான் அழகாய் இருக்கிறேன் என்று வியக்கிறீர்களா? ஒரு காலத்தில் நான் இவ்வளவு அழகாய் இல்லை. என்னை உருவாக்கியவர் என்னை மண்ணிலிருந்து எடுத்தார். அப்போது எனக்கு வலித்தது. 'ஐயோ வலிக்கிறது! விட்டுவிடுங்கள்!' என்றேன். அவர் சொன்னார், 'இன்னும் முடியவில்லை!'. பின் என்னை அப்படியே நெருப்பில் போட்டார். என்னால் அந்தச் சூட்டைத் தாங்க முடியவில்லை. 'ஐயோ! சாகப் போகிறேன்!' என்று கத்தினேன். 'இன்னும் முடியவில்லை!' என்றார் அவர். நெருப்பிலிருந்து என்னைத் தூக்கிய அவர் அப்படியே என்னை வளைத்தார். என் முதுகுத் தண்டே ஒடிந்து விடும் போல இருந்தது. 'ஐயோ! போதும்!' என்றேன். அவர், 'இன்னும் முடியவில்லை!' என்றார். பின் என்மேல் மெருகேற்றினார். அந்த வாடையே எனக்குப் பிடிக்கவில்லை. 'ஐயோ! இதற்கு மேல் தாங்க முடியாது!' எனக் கதறிறேன். என்னை அவர் அப்படியே தூக்கி ஒரு கண்ணாடியின் முன் நிறுத்தினார். எனக்கே ஆச்சரியம். 'இது நானா?' என்றேன். 'எனக்கா இவ்வளவு அழகு!' என்று வியந்தேன். 

அவர் சொன்னார்: 'நான் உன்னை மண்ணோடு மண்ணாக விட்டிருந்தால் நீ மக்கிப் போயிருப்பாய். உன்னை நெருப்பிலிடாவிட்டால் நீ பொலிவு பெற்றிருக்க மாட்டாய். நான் உன்னை வளைக்காவிட்டால் நீ உருப் பெற்றிருக்க மாட்டாய். நான் உனக்கு மெருகேற்றாவிடில் நீ மின்ன மாட்டாய்! நான் செய்ததெல்லாம் உன் நன்மைக்கே!'

மணமக்களே!

உங்கள் மணவாழ்க்கை இன்று போல் என்றும் சுகமாக இருக்க நீங்கள் என்னைப் போல இருங்கள். புரியவில்லையா? என்னைப் பாருங்கள்.

1. எனக்கு தொடக்கமும் இல்லை. முடிவும் இல்லை. நான் ஒரு வட்டம். உங்கள் அன்பும் அப்படித்தான் இருக்க வேண்டும். தொடக்கமும் இல்லாமல், முடிவும் இல்லாமல் முழுவதுமாக ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்.

2. எனக்கு அழகு வந்தது என் கஷ்டங்களிலிருந்து. உங்கள் வியர்வைத் துளிகள் தாம் உங்கள் உழைப்பின் கனிகள். வியர்வை சிந்தினால் தான் வாழ்க்கை என்பதை உணர்ந்தவர்கள் நீங்கள். ஒவ்வொரு முறை வாழ்வில் வலிகள் வரும்போதும் துவண்டுவிட வேண்டாம். அப்போதெல்லாம் நீங்கள் இன்னும் அழகு பெறுகிறீர்கள்.

3. மோதிரத்தின் அழகு கைகளில் இருக்கும்போதுதான். நகைப்பெட்டியில் வைப்பதற்கல்ல மோதிரம். நீங்கள் ஒருவர் மற்றவரின் கைகளிலும், நீங்கள் இருவரும் இறைவனின் கைகளில் இருக்கும் போதுதான் அழகிய மணிமகுடமாகத் திகழ்வீர்கள்.

வாழ்க வளமுடன், நலமுடன். இன்றும், என்றும்.

திருமண ஆண்டு வாழ்த்துக்களும் வணக்கங்களும் ...

நான் பெற்றெடுத்த என் அம்மா - அப்பாவிற்கு...!


Sunday, February 23, 2014

பதினோராவது கட்டளை: நீங்கள் அந்நியப்படுத்துங்கள்!

நேற்றைய தினம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை வாசித்தேன். கட்டுரையின் தலைப்பு: பதினோராவது கட்டளை: நீங்கள் அந்நியப்படுத்துங்கள்! (The Eleventh Commandment: Thou Shalt Defamilarize) இதன் இரண்டாம் பகுதிக்கான தமிழ் மொழிபெயர்ப்பு சரியாக வரவில்லை. 'familiarize' என்பதை 'பழக்கப்படுத்துதல்' என்று சொல்லலாம். 'Defamiliarize' என்றால் 'பழக்கப்படுத்தாதே' என்று மொழிபெயர்த்தால் எதிர்மறை அர்த்தமாக மாறிவிடுகிறது. இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்தபின் அதில் ஆசிரியர் சொல்ல வரும் கருத்துக்களைப் பார்த்தபின் 'அந்நியப்படுத்துங்கள்' என்று அர்த்தம் எடுக்க முடிந்தது. இந்தக் கட்டுரையின் ஆசிரியர் வேறு யாருமல்ல. நேற்றைக்கு முன் தினம் யோபு புத்தகம் பற்றி உரையாற்றிய பேராசிரியர் பீட்டர் மெசினிஸ்ட் அவர்களே. இந்த பதினோராவது கட்டளையை அவர்கள் விவிலியம் படிக்கும் அனைவருக்கும் கொடுக்கின்றார். இந்தக் கட்டளையின் பொருள் என்ன? இதன் உள்ளர்த்தங்கள் எவை?

கட்டளையின் பொருள். எடுத்துக்காட்டிற்கு, மோசேவுக்கு சீனாய் மலையில் யாவே இறைவன் காட்சி கொடுத்த நிகழ்வை எடுத்துக்கொள்வோம். இந்த நிகழ்வை நாம் எங்காவது வாசிக்கக் கேட்டவுடன் நம் மனக்கண் என்ன வரும்? முட்செடி, எரியும் முட்செடி, பாலைவனம், மலை, ஆடு மேய்க்கும் மோசே, ஆடுகள், மோசேயின் கைத்தடி, அவரின் காலணிகள், யாவேயின் கனத்த குரல், பாலைவன வெயில். இப்படி நிறையவற்றை நம் மனம் கற்பனை செய்யும். நம் காதுகளில் கூட மோசேயின், கடவுளின் குரல் கேட்பது போன்று தோன்றும். ஆனால் இவை மட்டும்தான் இந்த நிகழ்வு நமக்குச் சொல்ல வருவதா? ஒரு விவிலியப் பகுதிக்கு நம் மனம் 'பழக்கப்பட்டு' விட்டால் நம் அர்த்தம் குறுகி விடுகிறது. இந்தப் பகுதி சொல்லும் இன்னும் பல நம் மனதிற்கு தட்டுப்படுவதே இல்லை.

எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் படும் துன்பம், அதைப் பற்றிய இறைவனின் அக்கறை என இன்னும் பலவற்றை நாம் கண்டுகொள்வதேயில்லை. மேலும் இறைவன் தன் பெயரை இங்கேதான் 'யாவே', அதாவது 'ஆண்டவர்' என வெளிப்படுத்துகின்றார். ஆனால் தொடக்கநூல் 4:26ல் ஏற்கனவே மக்களுக்கு 'யாவே' என்னும் பெயர் தெரிந்திருந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நிகழ்வைப் பற்றி புதிய ஏற்பாட்டில் உரையாடுகின்ற ஸ்தேவான் (முடியப்பர்) 'மோசேக்கு ஆண்டவர் மலையில் தோன்றவில்லை, பாலைவனத்தில் தோன்றினார்' எனவும் 'தோன்றியது ஆண்டவர் இல்லை, ஆண்டவரின் தூதர்' எனவும் பெரிய கூட்டத்தின் முன் அறிக்கையிடுகின்றார். முடியப்பரிடம் வேறு விவிலியம் இருந்ததா? மோசேயின் முட்புதர் நிகழ்வு பற்றி எழுதப்பட்ட வேறு நூல்கள் இருந்தனவா? இன்னும் இருக்கின்றனவா? என்பவை கேள்விகள். இந்தப் பின்புலத்தில் விடுதலைப்பயணம் 3:4 (மோசேக்குக் காட்சி) பகுதியை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் அந்நியப்படுத்த வேண்டும். நமக்குத் தெரிந்தவற்றிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும். 'இதுதான் இதன் அர்த்தம்' என்று நாம் எழுதும் தீர்ப்பை அழித்து விட்டு திறந்த மனத்தோடு காத்திருக்க வேண்டும். நாம் ஏற்கனவே கொண்டிருக்கும் அர்த்தங்கள் எப்படி வருகின்றன? 'பழக்கத்தால்' வருகின்றன. நாம் புதிதாக ஒருவரைச் சந்திக்கும் போது ஒருவர் மேல் நாம் கொள்ளும் அபிப்பிராயத்திற்கும், கொஞ்ச நாள்கள் பழகிய பின் அவர் மேல் கொள்ளும் அபிப்பிராயத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதே நபர் தான்? ஆனால் 'அவர் நல்லவர்' என்றும் 'அவர் கெட்டவர்' என்றும் நாம் சொல்லி விடுகின்றோம். அதற்குக் காரணம் 'பழக்கம்'. நாம் அவரோடு பழகிய சில நாட்கள் அவரது அந்நியம் மறைந்து நெருக்கம் வந்து விடுகிறது. நெருக்கம் வந்துவிட்டால் 'அதற்கு மேல் ஒன்றும் இல்லை' என்று ஆகிவிடுகிறது. 'அந்நியமாய்' ஒருவர் இருக்கும் போது அவரைப் பற்றிய நம் பார்வை objective ஆக இருக்கும். நெருக்கம் வந்துவிட்டால் அது subjective ஆக மாறிவிடுகிறது. அதே நபரைப் பற்றிய மற்றவரின் கருத்து நம் கருத்துக்கு எதிர்மாறானதாக இருக்கலாம். ஏன் இந்த வித்தியாசம்? ஒவ்வொருவரின் பார்வையும் வித்தியாசம். ஆகையால் விவிலியம் படிக்கும் போது எந்தப் பகுதியையும் புதிதாகப் படிப்பது போல படியுங்கள். 'அடுத்தவர்கள் சொன்னார்கள், அதுதான் சரி!' என நீங்களே நினைத்து முடிவெடுத்து விடாதீர்கள். விவிலியம் உங்களிடமும் பேசும். அதை அந்நியப்படுத்துங்கள். அந்த அந்நியத்தைக் கண்டு பயந்து விடாதீர்கள். 

இதுதான் கட்டுரையின் சுருக்கம்.

இதைப் பற்றிய எனது புரிதல்கள் என்ன?

1. 'அந்நியப்படுத்துதல்' என்பது விவிலியப் படிப்பைப் பொறுத்தவரையில் ஒரு புதிய கருத்து என்றாலும், மெய்யியலில் இது பழைமையானதுதான். டெரிடா என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் இதே கருத்தை 'deconstruction' என்று அழைக்கின்றார். நாம் ஒவ்வொரு முறையும் கருத்துக்களை கட்டிக் கொண்டே போகிறோம் (construction). ஆனால் எந்த ஒரு பொருளின் அர்த்தமும் நாம் கட்டுக்களை உடைக்கும்  (de-construct) போதே தெளிவாக விளங்குகிறது என்று குறிப்பிடுகிறார். இந்தக் கருத்தை நம் ஒளவையாரும் ஆத்திசூடியில் குறிப்பிடுகிறார். அகர வர்க்கத்தில் வரும் 13வது ஆத்திசூடி இதுதான்: 'அஃகஞ் சுருக்கேல்'. இதன் பொருள் ரேசன் கடை சம்பந்தப்பட்டது என்பர். அதாவது ஒரு படி அளவு எவ்வளவோ அதை அப்படியே கொடு. சுருக்காதே. ஆனால் மொழியியல் பின்புலத்தில் பார்த்தால் ஒளவையின் அர்த்தம் 'ஒரு அர்த்தத்தை இருப்பது போல எடுத்துக் கொள். அதை உனக்கு ஏற்றது போல சுருக்கிவிடாதே' என்று இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

2. விவிலியத்தை ஆராய்ச்சி செய்யும் போது அடுக்கடி இரண்டு வார்த்தைகள் வரும்: text மற்றொன்று context எந்த ஒரு பாடமும் (text) உருவானது ஒரு சூழலில்தான் (context). வானத்திலிருந்து எந்த டெக்ஸ்டும் நம் மேல் விழவில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கைச் சூழலில் உருவானதுதான் பைபிள். ஒரு டெக்ஸ்டை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதன் கான்டெக்ஸ்டை நாம் புரிய வேண்டும். அந்தக் கான்டெக்ஸ்டை நாம் புரிய வேண்டுமென்றால் அதற்கு ஒரு தடையாக இருப்பது நம் கான்டெக்ஸ்ட். உதாரணத்திற்கு இத்தாலிய மொழியின் முக்கிய இலக்கிவாதி மற்றும் பாடலாசிரியர் என அழைக்கப்படும் 'டான்டே' என்பவரின் இலக்கியங்களை நான் பலமுறை வாசித்திருக்கின்றேன். ஆனால் இன்னும் என்னால் அதன் முழு அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம் என் கான்டெக்ஸ்ட். தமிழ் மொழி, இந்தியக் கலாச்சாரம், கிறிஸ்தவ மதம் என்ற பின்னணியில் நான் இதை அணுகும்போது டெக்ஸ்ட் நழுவி ஓடுகிறது. இந்தத் தடை எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும். என்னைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு மனிதரும் ஒரு டெக்ஸ்ட். அவருக்கென்று ஒரு கான்டெக்ஸ்ட் இருக்கும். பல நேரங்களில் 'என்னால் அவரைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை' எனப் புலம்புவோம். ஏன் இந்தப் புலம்பல்? கான்டெக்ஸ்ட் மாறுவதுதான். வேறு என்ன தான் வழி? யாரையும் நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு முடிந்த வரை 'அந்நியத்தை' ரசிக்கக் கற்றுக்கொள்வதுதான்.

3. மொழி நம் மனக்கருத்தை வெளிப்படுத்தும் என்கிறோம். ஆனால் மொழியினால் மனக்கருத்தை மறைக்கவும் முடியும். மொழியால் எல்லாவற்றையும் வெளிப்படுத்த முடியாது. மொழிக்கும் நிறைய ஊனங்கள் உண்டு. எடுத்துக்காட்டாக, நீங்கள் என்னிடம் 'தலை வலிக்கிறது!' எனச் சொல்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இந்த இரண்டு வார்த்தைகளால் நீங்கள் உணரும் வலியை ஒருபோதும் அப்படியே என்னிடம் உணர்த்திவிட முடியாது. இதை வாசிக்கும் போது எனக்கு என்றாவது வந்த தலைவலியை வைத்து நானாகவே 'ஓ...இதுதான் தலைவலியோ!' எனப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகள் உங்கள் வலியை எனக்கு உணர்த்துவதில்லையே. அப்படியென்றால் மொழி ஊனம்தானே!

கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்


ரியோகான் என்ற ஜென் துறவி ஒரு காட்டின் நடுவில் ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்து வந்தார். மிக எளிமையான வாழ்வு வாழ்ந்தார். ஒருநாள் இரவு அவரது குடிசைக்கு திருடன் வந்துவிட்டான். எங்கும் தேடி ஒன்றும் கிடைக்காமல் வெறுங்கையனாய்ப் புறப்படுகின்றான் திருடன். அவனை விரட்டிச் செல்கின்றார் ரியோகான். 'நண்பா! இவ்வளவு தூரம் வந்துவிட்டு நீ வெறுங்கையனாய்த் திரும்பக் கூடாது. இதோ என் உடைகளை எடுத்துச்செல்' எனச்சொல்லித் தன் உடைகளைத் திருடனிடம் கொடுத்து விடுகின்றார். ஆச்சர்யப்பட்ட திருடன் அதையும் வாங்கிக் கொண்டு புறப்படுகிறான். கொஞ்ச தூரம் சென்றுவிட்டு திரும்ப ரியோகானிடமே திரும்ப வருகிறான். அந்நேரம் நிலாவை நோக்கி தியானம் செய்து கொண்டிருக்கிறார் ரியோகான். கண்விழிக்கும்போது எதிரில் நிற்கின்றான் திருடன். 'என்னப்பா ஆடை போதவில்லையா? என்னால் முடிந்தால் அந்த நிலவையும் உனக்குக் கொடுத்துவிடுவேன்!' என்கின்றார் ரியோகான். ஞானம் பெற்றான் திருடன்.

இயேசு தன் மலைப்பொழிவில் பழைய ஏற்பாட்டுச் சட்டங்கள் ஆறிற்கு புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றார் எனவும், அந்தச் சட்டங்கள் அனைத்தும் அன்பினால் பிண்ணப்பட்டவை எனவும் கடந்த வாரம் நாம் பார்த்தோம். கடந்த வாரத்தில் நான்கு சட்டங்களுக்கு இயேசு கொடுத்த புதிய அர்த்தத்தையும் பார்த்தோம். அன்பு என்ற நூலில் தொடர்ச்சியாக இந்த வாரமும் இரண்டு சட்டங்களைக் கோர்க்கின்றார் இயேசு.

5. அன்பு பழிவாங்குவதில்லை. 'கண்ணுக்குக் கண். பல்லுக்குப் பல்' என்ற பழைய ஏற்பாட்டுச் சட்டம் ஒருவரையொருவர் பழிதீர்த்துக் கொள்ள வழிகோலுவதாய் அமைந்திருந்தது. 'கண்ணுக்குக் கண்' என இந்த உலகத்தில் இன்னும் சட்டம் இருந்தால் நாம் அனைவரும் பார்வையற்றவர்களாகத்தான் இருப்போம் என்கிறார் காந்தியடிகள். பழி தீர்ப்பதற்குப் பதில் பரந்த மனம் காட்டுங்கள் என்ற புதிய அர்த்தம் கொடுக்கின்றார் இயேசு. தன் சமகாலத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார் இயேசு. அ. வலக்கன்னத்தில அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள். நமக்கு முன் நிற்கும் ஒருவரை நாம் அறைந்தால் நம் வலது கையால் அவரது இடது கன்னத்தைத்தானே அறைய முடியும். அப்புறம் எப்படி வலது கன்னம்? உரோமையர்கள் தவறு செய்யும் யூதர்களை தங்கள் வலது கையால் அறைவார்கள். வலது கையின் உள்புறத்தால் அல்ல, மாறாக வெளிப்புறத்தால். அதாவது தங்கள் புறங்கைகளால் அறைவார்கள். எதற்காகவென்றால் யூதர்கள் மேல் தங்கள் உள்ளங்கைகள் பட்டால் தங்களுக்கு அசிங்கம் என நினைத்தார்கள். அப்படி அவர்கள் புறங்கையால் வலது கன்னத்தால் அடிக்கும்போது, மறு கன்னத்தைக் காட்டினால் அவர்கள்தான் அசிங்கப்பட்டுப் போவார்கள். ஆ. அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் மேலாடையையும் கொடுங்கள். மானம் மறைப்பது ஆடை. உள்ளாடையை நாம் இழந்த பின் மேலாடையால் என்ன பயன்? அதையும் கொடுத்து விடுங்கள். உங்களின் நிர்வாணம் அவனுக்கு அவமானமாய்ப் போய்விடும். இ. ஒரு கல் வரக் கட்டாயப்படுத்தினால் இரு கல் தூரம் செல்லுங்கள். ஒரு கல் என்பது மைல்கல். உரோமைப் படையினர் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்குப் பயணம் செய்யும்போது யாராவது யூதர்கள் வந்தால் அவர்களைக் கட்டாயப்படுத்தி தங்கள் ஆடைகள், உணவு, ஆயுதங்கள் என அனைத்துச் சுமைகளையும் அவர்கள் சுமந்துவரச் செய்வார்கள். அப்படி ஒரு யூதரைப் பயன்படுத்தி ஒரு கல் வரை அழைத்துச் செல்லலாம் என்பது உரோமைச் சட்டம். அதையும் மீறி நாமாகவே இரண்டு கல் தூரம் சென்றால் அது அவர்களுக்கே தண்டனையாக முடியும். இப்படியாக இந்த மூன்று நிகழ்வுகளில் அன்பின் வழி, மிதவாதமும், மிதவாதத்தின் வழி சுயமதிப்பும் கிடைக்கும் என்கிறார் இயேசு. இந்த மூன்றையும் செயல்படுத்தத் தேவையானது பரந்த மனம். பரந்த மனம் படைத்தவர்கள் மட்டுமே படபடப்பின்றி இருக்க முடியும். படபடப்பாக செயல்பட்டுப் பழி தீர்க்க நினைத்தால் நம்மேல் நாமே நெருப்பைக் கொட்டிவிடுவதாக ஆகிவிடும்.

6. அன்பு பகைவர்களையும் தழுவிக்கொள்ளும். 'பகைவர்களை அன்பு செய்வாயாக' என்று இயேசு புதிய அர்த்தம் கொடுக்கிறார் என்றால் 'பகைவர்கள் இருக்க வேண்டும்' என்பது பொருளல்ல. பகைவர்கள் இல்லாத அளவிற்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார். அன்பு ஒளியைப்போலவும், மழையைப் போலவும் இருக்க அழைப்பு விடுக்கின்றார் இயேசு. வானகத் தந்தையைப் போல நிறைவுள்ளவராக இருக்கச் சொல்கின்றார் இயேசு. நிறைவு எதில் வெளிப்படுகிறது? அனைவரையும் ஒன்றுபோலப் பார்ப்பதில். ஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் கொண்டு வாழாமல், அனைவரையும் சமமாகப் பார்ப்பதே அன்பின் புதிய பரிமாணம். 'நல்லவர்கள் மேலும் கெட்டவர்கள் மேலும் சூரியன் சமமாகவே ஒளிர்கிறான். நீதியுள்ளோர் மேலும், நீதியற்றோர் மேலும் மழை ஒரே மாதிரிதான் பொழிகின்றது.'

இப்படியாக இந்த ஆறு நிலைகளிலும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களைவிட சீடர்களின் எண்ணங்கள் உயர்ந்திருக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றார் இயேசு. சட்டம் என்று பார்த்தால் அது சுமை. அன்பு என்று பார்த்தால் அது சுகம். நம் வாழ்வில் இறைவனையும், சக உறவுகளையும் 'கட்டளையாகப்' பார்த்தால் அவர்கள் சுமைகளாகத்தான் தெரிவார்கள். அவர்களை நாம் அன்பு என்ற கண்ணாடியில் வைத்துப் பார்த்தால் அவர்கள் சுகங்களே.

Saturday, February 22, 2014

யோபு: நூலும் நபரும்

'என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான் வந்தேன்.
அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான் செல்வேன்;
ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!' என்றார்.
இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை.
கடவுள் மீது குற்றம் சாட்டவுமில்லை. (யோபு 1:21-22)

இன்று எங்கள் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விரிவுரை இருந்தது. விரிவுரையின் தலைப்பு, 'யோபு நூல்'. விரிவுரை வழங்கியவர்: பீட்டர் மெசினிஸ்ட் (Prof. Dr. Peter Machinist). என் கனவு பல்கலைக்கழகத்தின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர். கிழக்கத்திய மொழிகளில் அசீரியம், சீரியம், எபிரேயம், அரமேயம் முனைவர் பட்டம் பெற்றவர். இவை தவிர விவிலிய தொல்பொருள் ஆராய்ச்சியிலும் ஈடுபட்டவர். அவரிடம் எனக்குப் பிடித்தவை மூன்று: ஒன்று, எளிமை (உடையில், நடையில், பேச்சுத் தொனியில்). தான் ஒரு அமெரிக்கர் என்பதிலும், ஹார்வர்ட் பேராசிரியர் என்பதிலும் அலட்டிக் கொள்ளவே இல்லை. இரண்டு, புலமை (எந்த ஏரியாவில் கேள்வி கேட்டாலும் பதில் சொல்றார் மனுசன்!). மூன்று, புன்சிரிப்பு (ரொம்ப படிச்சவங்க ரொம்ப சீரியஸா இருக்கணும்கிற myth-ஐ உடைக்கிறவர் இவர்).

ஐபேட், ஐஃபோன், மேக்புக், பவர்பாயிண்ட் போன்ற லக்சுரி அயிட்டங்கள் எதுவும் இல்லாம ஏறக்குறைய 600 பேரின் கவனத்தை 60 மணித்துளிகள் விடாமல் பெற்றுவிட்டார் இன்று. இவரைப் போல இருக்கணும்னு எனக்கும் இன்று ஆசை வந்தது.

சரி லெக்சர் என்னன்னு பார்ப்போம்.

அவரின் வார்த்தைகளோடு என் புரிதலையும் இணைத்துப் பதிவு செய்கிறேன்.

யோபு நூல் விவிலியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியத்திலும் முக்கியப் பங்கு வகிக்கின்றது. யோபு என்பவர் இருந்தாரா? இல்லையா? யோபு என்பவர் இருந்தார் என்று சொல்கின்றார் எசேக்கியேல் இறைவாக்கினர் (14:4-20). அவரைப் பற்றிய வேறு குறிப்புக்கள் இல்லை. யூதர்களைப் பொறுத்தவரையில் யோபு ஒரு உருவகம். அந்த யோபு என்பவர் நம் அனைவரையும் ஏதோ ஒரு வகையில் சுட்டிக் காட்டுகின்றார். அந்த யோபுவிற்குள் நாமும் ஒளிந்திருக்கின்றோம்.

யோபு நூலில் மொத்தம் 42 அதிகாரங்கள் உள்ளன.

உரைநடை முன்னுரை: 1-2
பாடல் உரையாடல்கள் - யோபுவும் நண்பர்களும் 3-37
பாடல் உரையாடல்கள் - யோபுவும் கடவுளும் 38-42:6
உரைநடை முடிவுரை: 42:6-17

முன்னுரையும், முடிவுரையும் உரைநடை வடிவில் உள்ளன. உரையாடல்கள் அனைத்தும் பாடல்கள் வடிவில் உள்ளன். தமிழ் மொழியைப் போலவே எபிரேய மொழியிலும் இரண்டு நடை உண்டு: உரைநடை, செய்யுள் நடை. இரண்டு தமிழும் வித்தியாசம். இரண்டு எபிரேயமும் வித்தியாசம். செய்யுளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு மொழியின் வார்த்தைகள் மட்டும் தெரிந்தால் போதாது. அந்த மொழியின் அணி இலக்கணம் தெரிய வேண்டும். மாத்திரை அளவுகள் தெரிய வேண்டும். 'நேர் நேர் தேமா!' நினைவிருக்கிறதா? யோபு நூலில் வரும் செய்யுள் நடை உரையாடல்கள் இன்றும் புதிராகவே இருக்கின்றன. இவற்றை எழுதியவர் எபிரேய மொழியில் மிகச் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். 

இந்த நூலில் மூன்று வகை டூவலிட்டி (duality) இருக்கின்றது:

பொறுமையுள்ள யோபு - கோபப்படும் யோபு.
கடவுள் பக்தி - துன்பம்
உரைநடை - செய்யுள்

உரைநடைப் பகுதிகள் யோபுவை பொறுமையுள்ளவராகவும், செய்யுள் பகுதிகள் அவரைக் கோபக்காரராகவும் காட்டுகின்றன. உரைநடைப் பகுதிகள் கடவுள் பக்தியையும், செய்யுள் பகுதிகள் 'ஏன் துன்பம்?' என்பதையும் விளக்குகின்றன.

யோபு நூலின் தொடக்கம் விண்ணக நீதிமன்றத்தில் நடக்கின்றது. கடவுள் முன் வாதாடுகின்றான் சாத்தான். சாத்தான் இருக்கின்றானா? இல்லையா? என்ற கேள்வி இங்கே தேவையற்றது. யோபு பக்தியாய் இருப்பதற்குக் காரணம் அவனின் உடல்நலமும், பொருள்சுகமும் எனவும் அது அழிந்தால் அவன் கடவுளை மறந்து விடுவான் எனவும் சவால் விடுகிறது அலகை. ஒவ்வொன்றாய் இழக்கின்றார் யோபு. அவரின் மனைவி அவரைச் சபிக்கின்றார். அவரின் நண்பர்கள் எலிபாசு, பில்தாது மற்றும் சோப்பார் அவரைச் சபிக்கின்றனர். இறுதியாக வருகின்ற எலிகு என்கிற நண்பர் கடவுளின் ஞானம் பற்றிப் பேசுகின்றார். கடைசியில் கடவுள் அவருக்குப் புயல் காற்றில் தோன்றி, 'முதலைகளும், நீர்யானைகளும் எதற்காகப் படைக்கபட்டன?' எனத் தெரியுமா? என்று கேட்கின்றார். உங்களுக்குத் தெரியுமா? எனக்குத் தெரியாது. இருப்பவைகள் பலவற்றிற்கு நம்மால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியாது. இறுதியில் சராணாகதியாகின்றார் யோபு. அவரின் சொத்துக்களை இன்னும் அதிகமாகத் தருகின்றார் கடவுள்.

இந்த நூலின் ஒரு சில சித்தாந்தப் பிரச்சினைகள்:

1. இவ்வுலகில் தீமை இருப்பது எதனால்? துன்பம் நம் பாவத்தால் வருகிறதா? பாவம் செய்யாதவர்கள் துன்பப்படுகிறார்களே அதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் கெட்டது செய்தால் கடவுள் தண்டிப்பார் என நமக்கு ஏன் பயம் வருகிறது? 

2. இந்த நூலின் தொடக்கத்தில் வரும் சாத்தானையும், விண்ணக நீதி மன்றத்தையும் புத்தகத்தின் இறுதியில் காணோம். சாத்தான் ஜெயித்து விட்டது போலவே இருக்கின்றது இந்த நூலின் இறுதிப் பகுதி.

3. பொறுமைசாலியாகவும், கோபக்காரராகவும், மீண்டும் பொறுமைசாலியாகவும் மாறுகிறார் யோபு. இறுதியில் பொறுமை தான் தேவை என்றால் எதற்காக இடையில் இவ்வளவு கோபம்.

இந்த நூலை 'ஞானம்' என்ற வார்த்தையை வைத்து மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:

யோபு மற்றும் அவரது நண்பர்களின் ஞானம்.
இந்தப் புத்தகத்தை வாசிக்கும் நம் ஞானம்.
கடவுளின் ஞானம்.

யோபுக்கும், அவரது நண்பர்களுக்கும் சாத்தான் கடவுளிடம் விட்ட சவால் தெரியாது. நமக்கு சாத்தானின் சவால் பற்றியும் தெரியும், யோபுவின் துன்பமும் தெரியும். அவரது நண்பர்களின் கடினமான சொற்களும் தெரியும். இந்த இரண்டு ஞானங்களுமே கடவுள் என்ற ஞானத்திடம் சரணாகதியாக வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை. 

61 வயதில் கேன்சரால் இறந்து போன ஒரு ரபியைப் பற்றிய அவரது நண்பரின் வார்த்தைகளோடு விரிவுரையை நிறைவு செய்தார் பேராசிரியர்:

'இவர் நிறையப் படித்தார். எழுதினார். பேசினார். ஒவ்வொரு நாளும் கேன்சர் இவரைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது. ஆனால் அவர் அதற்காக தன்னை நொந்து கொள்ளவோ, 'ஏன் எனக்கு மட்டும்!' என்று கேட்கவோ இல்லை. அந்த நாள் வந்தது. மௌனமாகச் சரி என்று சொன்னார். தான் அன்பு செய்த நண்பர்களும், தான் அன்பு செய்த புத்தகங்களும் அருகிருக்க அமைதியாக விடைபெற்றார்.'

இந்த விரிவுரையின் வழியாக நான் கற்றுக்கொண்ட பாடங்கள் மூன்று:

1. எல்லாக் கேள்விகளுக்கும், பதில்களுக்கும் ஒரு லிமிட் இருக்கிறது. அந்த லிமிட்டிற்கு மேல் நாம் சரணாகதி ஆக வேண்டும். கேள்வி கேட்கும் புத்தியை விடுத்து சரணாகதியாகும் மனநிலை எனக்கு தேவை.

2. நம் லிமிட் என்ன என்று தெரிந்து கொள்வதில்தான் ஞானம் தொடங்குகிறது. ஆல்பர் கேம்யூ அழகாகச் சொல்வார்: 'we can only do this much. therefore we must do at least that much' நான் பல நேரங்களில் என்னால் முடிபவற்றையே செய்வதில்லை. 'எனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது' என்றும் 'எனக்கு வேற வேலை இருக்கிறது' என்றும் என் லிமிட்டையே நான் வாழ்வதில்லை. 'இதுதான் லிமிட்' என்று தெரியாமல் ஏன் பயந்து நிற்க வேண்டும்? முடிந்த வரைப் போய்ப் பார்ப்போமே. என் பயம் விடுப்பேன். 

3. துன்பம் என்று வந்தவுடன் 'கடவுள் இல்லை' என்றும் 'கடவுள் ஒரு அசுரன். நம்மைத் துன்புறுத்தி வேடிக்கை பார்க்கிறார்' என்றும் விடையை எழுதிவிடுகிறது என் மனம். இந்த இரண்டு மனநிலையையும் கடந்து துன்பத்தை ஒரு எதார்த்தமாக ஏற்கும் வரம் கேட்கின்றேன்.

'ஆண்டவர் அளித்தார். ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக!'

Thursday, February 20, 2014

தேவதைகள் காலம் தாழ்த்துவதில்லை!

ஆபிரகாமுக்குக் கடவுள் குறிப்பிட்டுச் சொல்லிய இடத்தை அவர்கள் அடைந்தனர். அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடம் அமைத்து அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைத்தார். பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார். ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார். அப்பொழுது ஆண்டவரின் தூதர் வானத்தினின்று 'ஆபிரகாம்! ஆபிரகாம்!' என்று கூப்பிட, அவர் 'இதோ! அடியேன்!' என்றார். அவர், 'பையன் மேல் கை வைக்காதே. அவனுக்கு எதுவும் செய்யாதே' என்றார். (தொடக்கநூல் 22:9-12)

யூத செபக்கூடம் ஒன்றில் ரபி ஒருவர் இந்த இறைவாக்குப் பகுதியை வாசித்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். 'ஆபிரகாம் தம் மகனை வெட்டுமாறு தம் கையை நீட்டிக் கத்தியைக் கையிலெடுத்தார்' என்று சொன்னவுடன் செபக்கூடத்திலிருந்த குழந்தை ஒன்று 'ஐயோ!' என்று கத்தி அழுதது. எல்லாரும் அமைதியாக இருந்தனர். ரபி அந்தக் குழந்தையைப் பார்த்துச் சொன்னார்: 'பயப்படாதே குழந்தாய்! வானதூதன் வந்து ஆபிரகாமை நிறுத்தி ஈசாக்கைக் காப்பாற்றி விட்டார்!' குழந்தை சொன்னது: 'வானதூதன் வர ஒரு நிமிடம் தாமதமாகியிருந்தாலும் ஈசாக்கு இறந்திருப்பாரோ!' ரபி சொன்னாரம்: 'வானதூதர்கள் எப்போதும் சரியான நேரத்தில் வருவார்கள்!' 

'தேவதைகள் சரியான நேரத்தில் வருவார்கள். தேவதைகள் காலம் தாழ்த்துவதில்லை!'

நேற்று இரவு 'நட்பு என்ற அருளடையாளம்' (Friendship as Sacrament by Carmen L. Caltagirone) என்ற புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தச் செபக்கூட நிகழ்வோடு தொடங்குகிறது இந்தப் புத்தகம். 'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே குடிகொண்டார்' என நற்செய்தி நமக்குச் சொல்லுகின்றது. இந்த இறைவன் அன்று மட்டுமல்ல இன்றும் நம் நண்பர்கள் நடுவில் 'மனிதராக' மாறுகின்றார் என்கிறார் ஆசிரியர்.

நட்பு ஒரு மந்திரச்சொல்.

நம் வாழ்வில் நாம் சந்திக்கும் அனைத்து நபர்களும் கடவுள் நம்மிடம் அனுப்பிய தேவதூதன்களும், தேவதைகளும் தான். நம் வாழ்வின் பயணத்தை ஒரு நிமிடம் ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு திருப்பத்திலும் ஒரு தூதன் அல்லது தேவதை இருப்பார். இவர்கள் நாம் தேர்ந்து கொண்டவர்கள் அல்லர். பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களைப் போல இவர்களும் நமக்குக் கொடுக்கப்படுபவர்களே. 'அன்பே கடவுள்', 'அன்பே சிவம்' என்றெல்லாம் சொல்கின்றோம். நாம் அன்பிற்குரியவர்களை நினைக்கும் போது திடீரென்று அவர்களிடமிருந்து அழைப்பு அல்லது மின்னஞ்சல் வரும். இது வெறும் கோ-இன்சிடன்ஸ் அல்ல. நாமும் கடவுளில் இருக்கிறோம். அவர்களும் கடவுளில் இருக்கிறார்கள். கடவுள் நம் இருவரின் இணைப்புக் கோடாய் நிற்கின்றார்.

அன்பைப் பற்றிச் சொல்லும் போது இரண்டு கிரேக்க வார்த்தைகளைக் கையாளுகின்றது விவிலியம். ஒன்று 'ஈரோஸ்' (eros). மற்றொன்று 'அகாபே' (agape). ஈரோஸ் வகை அன்பு தன்னை மையப்படுத்தியது. அடுத்தவரைக் கொண்டு நம் வெறுமையை நிரப்பத் துடிக்கும் அன்பு ஈரோஸ். இந்த வார்த்தையிலிருந்துதான் erotic என்ற வார்த்தை வருகின்றது. மற்ற வவை அகாபே அன்பு பிறரை மையப்படுத்தியது. தன்னையே வெறுமையாக்கி பிறரை நிரப்புவது. முதல் வகை அன்பு தவறு என்றோ இரண்டாம் வகை அன்பு சரி என்றோ பொருள் அல்ல. இரண்டும் சரிதான். ஆனால் அன்பு முதல் வகையிலிருந்து இரண்டாம் வகைக்குப் பயணம் செய்ய வேண்டும். முதல் நிலையிலேயே தேங்கிவிடக் கூடாது. அப்படித் தேங்கிவிட்டால் அடுத்தவர் நமக்குக் போரடித்துவிடுவார். குலோப் ஜாமுன் பிடிக்கும் என்பதற்காகவும், அது இனிப்பாய் இருக்கிறது என்பதற்காகவும் நாம் சாப்பிட்டுக் கொண்டே இருக்க முடியுமா? ஒரு கட்டத்தில் அந்த இனிப்பு திகட்டி விடும். ஈரோஸ் வகை அன்பும் அப்படித்தான். திகட்டிவிடும். சரியான நேரத்தில் அது அகாபே அன்பாக மாற வேண்டும்.

பழைய ஏற்பாட்டில் நட்பின் அடையாளமாகக் காட்டப்படுபவர்கள் 'யோனத்தான் - தாவீது'. யோனத்தான் சவுலின் மகன். சவுலுக்குப் பின் அரியணை ஏறும் தகுதி பெற்றவன். யோனத்தானைப் பொறுத்த வரையில் தாவீது தன் அரியணைக்கான எதிரி. ஆனால் இந்த இருவரையும் பற்றி விவிலியம் சொல்லும் போது, 'தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுபட்டது. யோனத்தான் அவரைத் தம் உயிரெனக் கருதி, அவர்மீது அன்பு கொண்டிருந்தார்' (1 சாமுவேல் 18:1) என்று குறிப்பிடுகின்றது. தாவீது யோனத்தானின் தந்தையிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவரைப் பிடித்துப் போய்விடுகின்றது யோனத்தானுக்கு. இதுதான் அன்பின் இயல்பு.

இவர் இவரோடுதான் பழக வேண்டும். அவர் அவரோடுதான் பழக வேண்டும் என்று அன்பிற்கு வேலி இடுவது கடினம். வயது, நிறம், பாலினம், மதம், சாதி என்ற அனைத்து மதிப்பீடுகளையும் கடக்கின்றது அன்பு. ஏனெனில் அன்பு கடவுள். கடவுளுக்கு வயது இருக்கிறதா? நிறம் இருக்கிறதா? பாலினம் இருக்கிறதா? மதம் இருக்கிறதா? சாதி இருக்கிறதா?

நம் வாழ்வின் தேவதூதன்களுக்கும், தேவதைகளுக்கும் நன்றி கூறுவோம். அவர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள். சரியான நேரத்தில் அனுப்பப்பட்டவர்கள்.

அவர்கள் வரும்போது லைட் எரியும், பெல் அடிக்கும்!

Wednesday, February 19, 2014

அன்னாவின் கண்ணீர்

ஆண்டவர் அன்னாவை மலடியாக்கியிருந்ததால் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.

(1 சாமுவேல் 1:6)

இன்றும் நாம் அன்னாவைச் சந்திப்போம். பெனின்னாவிடம் இருக்கும் ஒன்று அன்னாவிடம் இல்லை - குழந்தை பாக்கியம். அந்த வெறுமை அவரின் கண்ணீருக்குக் காரணமாகின்றது. அன்னாவின் வலுவின்மையைத் தெரிந்து கொண்ட பெனின்னா அதையே தன் ஆயுதமாக எடுத்து அவரை அச்சுறுத்துகின்றாள்.

நாம் ஒவ்வொருவருமே கடவுளால் தனிப்பட்ட முறையில் படைக்கப்பட்டவர்கள். நமக்கென்று திறமைகள், ஆற்றல்கள் இருக்கின்றன. அதே போல அனைவருக்கும் திறமைகள், ஆற்றல்கள் இருக்கின்றன. பிறரிடம் இருக்கும் திறமைகள் நம்மிடம் இருப்பதில்லை. இந்த 'வெறுமை' நம்மில் ஒப்பீட்டைத் தூண்டுகிறது. அந்த ஒப்பீடு தாழ்வு மனப்பான்மையாக மாறி விடுகிறது. நம்மிடம் உள்ள நிறைகள் மறைந்து குறைகள் மட்டுமே நம் கண்களுக்குத் தெரிய ஆரம்பிக்கின்றன. இந்த நிலையில் நம் திறமைகளையும், ஆற்றல்களையும் கூட நம்மால் பயன்படுத்த முடியாமல் போய்விடுகிறது.

'ஒரு ரோஜாவை மல்லிகையோடு அல்ல மற்றொரு ரோஜாவுடன் கூட ஒப்பிட்டுப் பேசாதீர்கள்' என்பார் வைரமுத்து. ரோஜாவுக்கே தனித்தன்மை இருக்கின்றது என்றால் நமக்கு இன்னும் அதிகமாகத் தானே இருக்கின்றது.

மற்றொரு விஷயம். நம்மைத் தவிர வேறு யாரும் நம்மை தாழ்த்தி விட முடியாது. நாம் அனுமதித்தால் ஒழிய மற்றவர்கள் நம்மை அழ வைக்க முடியாது.

தாழ்வு மனப்பான்மை அழியாத ஒரு நோயாக நம் உடன் வாழ்ந்து கொண்டே இருக்கிறது. சின்னச் சின்ன ஒப்பீடுகள் கூட நம்மை அழவைத்து விடலாம்.

நம் திறன்களை உணர்ந்தால், நம் ஆற்றல்களை வளர்த்தால் அதுவே போதும்.

நாம் ஒவ்வொருவருமே தனிப்பட்டவர்கள்.

நம் வலுவின்மை மற்றவர்களின் ஆயுதமாகி விட்டால் நாமும் அன்னாவைப் போல கண்ணீர் விட நேரிடும். நம்மை அறிதலும், நம் வெறுமையை ஏற்றுக்கொள்தலும், ஒப்பீட்டைத் தவிர்த்தலும் அழாமல் இருக்க ஒரு வழி.

Tuesday, February 18, 2014

நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்?

ஆண்டவர் அன்னாவை மலடியாக்கியிருந்ததால் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள். இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது. அவர் ஆண்டவரின் இல்லம் வந்தபோதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார். அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா நீ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரைவிட மேலானவன் அன்றோ? என்பார். (1 சாமுவேல் 1:6-8)

இந்தப் பகுதியை நாம் ஏற்கனவே நம் சிந்தனைக்கு எடுத்துள்ளோம். ஆனால் இந்தப் பகுதியை நேற்று எபிரேய மொழியில் வாசித்தபோது இதன் பொருள் வித்தியாசமாகத் தெரிந்தது. ஆகையால் அன்னா என்ற இந்தப் பெண்ணையும் அவர் குறிப்பிடும் இஸ்ரயேல் இனத்தையும் இன்று சிந்திப்போம்.

அன்னா.

இதன் பொருள் அருள் என்றாலும், எபிரேய இலக்கியத்தில் இதன் பொருள் 'ஈர்ப்பு'. கவிஞர் பா. விஜய் பெண்களை மூன்று வகைகளாகப் பிரிப்பார். முதல் வகையினர் 'பார்க்கலாம்' என்பது போல இருப்பார்கள். இரண்டாம் வகையினர் 'திரும்பிப் பார்க்கலாம்' என்பது போல இருப்பர். ஆனால் மூன்றாம் வகையினர் 'நினைத்து நினைத்துப் பார்க்கணும்' போல இருப்பார்கள். இந்த மூன்றாம் வகை உணர்வை உணர்த்தக் கூடிய பெண்ணின் குணநலமே ஈர்ப்பு. அன்னாவின் பெயர் இந்த ஈர்ப்பையே குறித்தது. அன்னா இஸ்ரயேல் இனத்தின் தாயாக இருக்கிறாள். எவ்வாறு? அன்னாவின் வழி வரும் சாமுவேலுக்குப் பிறகுதான் இஸ்ரயேலர் சவுல் என்ற அரசரையும் தொடர்ந்து அரசர்களையும் பெறுகின்றனர். அரசாட்சி தொடங்கியது அன்னாவில்தான். 'எல்லாம் இருந்தது. ஆனால் மகன் இல்லை' என்று அன்னாவைப் பற்றி சொல்லப்படுகின்றது. இதன் பொருள் என்ன? இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாம் இருந்தது. ஆனால் அரசன் இல்லை.

அன்னாவிடம் பிடித்த பண்புகள் மூன்று:

1. அன்னாவின் அழுகை. அன்னாவை அழ வைத்துப் பார்க்கும் சேடிஸ்ட் அல்ல. ஆனால் அன்னா ஒரு உணர்வுகளை வெளிப்படுத்தும் பெண். பெண்மையின் அழகு ஒளிவுமறைவில்லாத ஒரு நிலை. ஆண்களின் இயலாமை கோபமாக வெடிக்கும். பெண்களின் இயலாமை கண்ணீராகக் கசியும். தன் கருவறை அடைக்கப்பட்டதற்கு கடவுள்தான் காரணம். அந்த இயலாமையில் கண்ணீர் வடிக்கிறார். கடவுளும் எதிராக இருக்கிறார். சக்களத்தியும் எதிராக இருக்கிறாள். கணவனும் எதிராக இருக்கிறார். கணவனின் வார்த்தைகள் 'நான் உனக்குப் பத்துப் புதல்வர்களை விட மேலானவர்கள் அல்லவா?' என்னும் வார்த்தைகள் கணவனை நல்லவன் போலக் காட்டுகின்றன. ஆனால் கணவன் உண்மையில் நல்லவனாய் இருந்திருந்தால் 'நீ எனக்குப் பத்துப் புதல்வர்களை விட மேலானவர்கள் அல்லவா?' என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். நம் வாழ்க்கையில் கடவுளும் நம் அருகில் இல்லை, நம் நண்பர்களும் நம் அருகில் இல்லை, நம் உடன்பிறந்தவர்களும் நம் அருகில் இல்லை எனில் நாமும் அழத்தானே செய்வோம். அழுகை ஒரு நல்ல உணர்வு. உணர்வு என்பதை விட உணர்வின் வெளிப்பாடு. எல்லோருக்கும் உள் ஏதோ ஒரு குழந்தை அழுது கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சில குழந்தைகள் பசியால் அழுகின்றன. ஒரு சில குழந்தைகள் காயத்தால் அழுகின்றன. ஒருவர் மற்றவரின் கண்ணீரைத் துடைக்க அன்னாவின் அழுகை நம்மைத் தூண்டுகிறது.

2. அன்னாவின் இறைவேண்டல். பழைய ஏற்பாட்டில் அன்னா இறைவேண்டலுக்கு ஒரு எடுத்துக்காட்டாக முன்வைக்கப்படுகின்றார். அன்னாவின் அழுகை கலந்த மன்றாட்டை குரு ஏலி குடிபோதை என்று தவறாகப் புரிந்து கொள்கிறார். ஆனால் அவரின் மனக்கலக்கமே கண்ணீராய் வெளிவருகின்றது. பல நேரங்களில் நம் இறைவேண்டலும் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றது. 'அவன் நடிக்கிறான். அவள் வெளிவேடம் போடுகிறாள்' என்று நம் செபங்களையும் மற்றவர்கள் விமர்சனம் செய்திருக்கலாம். ஆனால் நம் அழுகை நம் இறைவனுக்குத் தெரியும். மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அருட்பணியாளராகிய எனக்கு இன்னும் ஒரு பாடத்தைத் தருகின்றார் ஏலி. நம்மிடம் செபிக்க வருபவர்களின் கண்ணீர் குடிபோதை அன்று. அது எதார்த்தம். அதை நான் மதிக்க வேண்டும்.

3. நான் பெற்றதை ஆண்டவருக்கே கொடுப்பேன். வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தவர் அன்னா. நான் இறைவேண்டலில் பெற்ற குழந்தையை இறைவனுக்கே கொடுப்பேன் என்று துணிகின்றார் அன்னா. என்ன ஒரு தன்னலமற்ற வேண்டல்? தான் பெற்றதை இறைவனுக்கே கொடுக்கின்றார் என்றால் எதற்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்? என நினைக்கலாம். இறைவனுக்குக் கொடுப்பது ஒரு போதும் இழப்பு அன்று. இறைவனிடம் இருக்கும் எல்லாம் நம்மோடும் இருக்கின்றது. நம்மிடம் உள்ளதன் மதிப்பு மிக்கதை இறைவனுக்குக் கொடுக்கும்போது அது இன்னும் மதிப்பு மிக்கதாக மாறுகின்றது.

அன்னாவின் அழுகை ஏலிக்குக் கேட்கிறதோ அல்லது எல்கானாவுக்குக் கேட்கிறதோ இல்லையோ! ஆனால் இறைவனுக்குக் கேட்கிறது.

'நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்?'

அவரும் ஞானத்தைக் கொடுப்பார்

உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும். அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். ஆனால் நம்பிக்கையோடு ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். (யாக்கோபு 1:4-5)

'ஞானம்' - நாம் அதிகமாகக் கேட்கும் ஒரு வார்த்தை. ஞானத்தை பொன்னைவிட மேலானதாகக் கருதுகின்றது பழைய ஏற்பாடு. கடவுளின் ஞானமாக வந்தார் இயேசு என்கிறார் யோவான் நற்செய்தியாளர். ஞானம் என்பதன் பொருள் என்ன? 'ஞானம்' என்பது எபிரேய இலக்கியத்தில் கடவுளுடைய கொடை எனவும், கிரேக்க இலக்கியத்தில் 'செய்முறை அறிவு' என்றும் கருதப்படுகின்றது. யாக்கோபு திருத்தூதர் கிரேக்க இலக்கியத்தின் பொருளோடு எபிரேய இலக்கியத்தின் பொருளையும் இணைத்துச் சொல்கின்றார்.

அறிவிற்கும், ஞானத்திற்கும் என்ன வித்தியாசம்? நெருப்பு சுடும் என்பது அறிவு. நெருப்பு சுடும் என்பதால் அதைத் தொடக்கூடாது என்பது ஞானம். அறிவைச் செயல்முறைப்படுத்துதலே ஞானம். 'அறிவே ஆற்றல்' என்றார் பிரான்சிஸ் பேகன். அறிவு மட்டும் ஆற்றல் ஆகிவிடுமா? இல்லை. சர்க்கரை நோயாளர்கள் சர்க்கரை சாப்பிடக் கூடாது என்பது அறிவு. இந்த அறிவு இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் சரியாகி விடுமா? சாப்பிடக் கூடாது என்ற அறிவு சாப்பிடமால் இருக்கும் செயலாக வடிவம் பெற வேண்டும். அதுவே ஞானம்.

ஞானம் (wisdom), திடம் (fortitude), நீதி (justice) மற்றும் மட்டுசனம் (temperance) - இந்த நான்கும் உரோமை அரசர்கள் வரலாற்றில் மேன்மையான மதிப்பீடுகளாகக் கருதப்பட்டன. இதற்கு எதிர்மறையாக உரோமை அரசர்கள் கருதியவை நான்கு: ambition, resourcefulness, courage மற்றும் devotion. முதல் நான்கையே விவிலியத்தின் ஞான நூல்களும் மதிப்பீடுகளாக வைத்துள்ளன.

இரண்டாம் ஆண்டின் புதிய பருவத்தை இன்று தொடங்கினேன். இன்று நான் வேண்டிக் கொண்டவையும் முதல் நான்கு மதிப்பீடுகளே. ஆனால் பல நேரங்களில் இரண்டாவது சொல்லப்பட்ட நான்கு மதிப்பீடுகளையே நான் பற்றியிருந்திருக்கின்றேன். ஆனால் இரண்டாம் நிலையிலிருந்து முதல் நிலைக்குக் கடந்து போதலே மேன்மை.

ஞானம் மேலிருந்து வரக்கூடியது. 

'எங்கள் வாழ்க்கை எவ்வளவு குறுகியது என்று உணரும் ஞானத்தைத் தாரும்' என்கிறார் தாவீது. இன்று நாம் கேட்கும் ஞானம் என்ன?

Sunday, February 16, 2014

நீரையும் நெருப்பையும் வைத்துள்ளார்

நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி. பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார். உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (சீராக்கின் ஞானம் 15:15-18)

மனிதர்களை விலங்குகளிடமிருந்து பிரிக்கின்ற ஒரு மாபெரும் கொடை சுதந்திரம். 20000 ஆண்டுகளுக்கு முன் சிட்டுக்குருவி எப்படிக் கூடு கட்டியதோ அதே போலத்தான் இன்றும் கட்டுகிறது. பறவைகள், விலங்குகள் 'ஒரே-மாதிரி-நிலைக்கு' (condemned to sameness) சபிக்கப்பட்டுள்ளனர் என்பர் சமூக ஆய்வாளர்கள். மனிதர்கள் மட்டும்தான் தங்களையும் மாற்ற முடியும். தங்களைச் சுற்றியிருப்பவைகளையும் மாற்ற முடியும். இதற்குக் காரணம் அவர்களிடமுள்ள சுதந்திரம். 'இதைச் செய்வேன்' என்று சொல்லவும், 'இதைச் செய்ய மாட்டேன்' என்று சொல்லவும் அவர்களால் மட்டும்தான் முடியும். நமக்கு முன்னிருக்கும் பலவற்றிலிருந்து ஒன்றைத் தெரிவு செய்யும் உரிமை நமக்கு மட்டுமே உண்டு. இதுவே நமது வரம். இதுவே நமது சாபம். எல்லாமே கடவுள் அல்லது ஒரு வெளிப்புற ஆற்றல் நமக்காகத் தெரிவு செய்தால் நாம் கவலையில்லாமல் இருக்கலாம் தானே. நாம் செய்யும் தெரிவுகள் பல நேரங்களில் தவறாகப் போய்விடுகின்றன. ஏமாற்றம் அல்லது தோல்வியைத் தருகின்றன. அந்த நேரங்களில் நம் சுதந்திரத்தை நாமே நொந்து கொள்கிறோம்.

இன்றைய சிந்தனைப் பகுதியில் ஏறக்குறைய 4000 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட ஒரு விவிலியப் பகுதியை எடுத்துள்ளோம். இந்தப் பகுதியை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம்:

1. மனிதர்கள் முன் உள்ள சாய்ஸ்
2. எதையும் தெரிந்து கொள்ள நமக்கு உரிமை உண்டு
3. நாம் எதை விரும்புகிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கும்

1. சாய்ஸ். இன்னைக்கு உள்ள உலகத்தை ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் 'சாய்ஸ்' எனச் சொல்லிடலாம். எல்லாவற்றிலும் சாய்ஸ். குழந்தை பெற்றுக்கொள்ளவா வேண்டாமா என்ற சாய்ஸ். கவர்மண்ட் ஆஸ்பிடலா பிரைவேட் ஆஸ்பிடலா என்ற சாய்ஸ். சமச்சீர் கல்வியா சிபிஎஸ்சி கல்வியா என்ற சாய்ஸ். தமிழ் வழியா ஆங்கில வழியா என்ற சாய்ஸ். பள்ளிப் படிப்பா டுடோரியல் படிப்பா என்ற சாய்ஸ். டே ஸ்காலரா கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸா என்ற சாய்ஸ். ஃபேஸ்புக்கா டுவிட்டரா என்ற சாய்ஸ். திருமணமா தனித்த வாழ்வா என்ற சாய்ஸ். பெண் பார்க்க சாய்ஸ். வேலை பார்க்க சாய்ஸ். நாம் பார்க்கும் சேனல்களில் சாய்ஸ். குடிக்கும் பாலில் சாய்ஸ். மருத்துவத்தில் சாய்ஸ். அரசியல் கட்சியில் சாய்ஸ். கும்பிடும் கடவுளில் சாய்ஸ். வைக்கும் பெயர்களில் சாய்ஸ். எல்லாவற்றிலும் சாய்ஸ். சாய்ஸ் இருப்பது பெரிதன்று. நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பதில் தான் கவனம் தேவை. 'தண்ணீரும் நெருப்பும்' உன் முன் என்கிறார் சீராக்கு. இதில் எது வாழ்வு எது சாவு என்பது தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து அவர் எழுதும் வாக்கியத் தொடரைப் பார்த்தால் தண்ணீர் வாழ்வு எனவும் நெருப்பு சாவு எனவும் எடுத்துக்கொள்ளலாம். நாம் எடுக்கும் எல்லா சாய்ஸ்களையும் இந்த இரண்டிற்குள் அடக்கி விடலாம். ஒன்று நன்மையாக இருக்கும், மற்றொன்று தீமையாக இருக்கும். ஒருசில நேரங்களில் நன்மையும் தீமையும் கலந்திருப்பது போல இருக்கும். அந்த இடத்தில் 'குறைந்த தீமை' (லெஸ்ஸர் ஈவில்) யை நாம் தெரிவு செய்யலாம். 

2. நம் வாழ்க்கை நம் கையில். கடவுள் நம்மேல் எதையும் சுமத்துவதில்லை. கடவுள் நம் விருப்பத்தை மதிக்கின்றார். எது நமக்கு விருப்பமோ அதைத் தெரிவு செய்ய நமக்கு உரிமை உண்டு. 'நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி' என்று தான் விவிலியம் சொல்கிறது. ஆகையால் கடவுளின் கட்டளைகளையோ, ஒரு மதத்தின் கோட்பாடுகளையோ யாரும் யார்மேலும் பயத்தினாலோ, அச்சுறுத்தலினாலோ, மறைபோதகம் என்ற அடிப்படையிலோ திணிக்க முடியாது. ஒவ்வொருவரின் மனச்சான்றும் கடவுளின் குரல். அந்தக் குரல் ஆம் என்றால் நாமும் ஆம் எனலாம். இல்லையென்றால் இல்லை எனலாம். 

3. எதை விரும்புகிறோமோ அதுவே நமக்குக் கிடைக்கும். 'பிறர்க்கின்னா முற்பகற் செய்யின் தமக்கின்னா (தமன்னா! அல்ல) பிற்பகற் தாமே வரும்' என்கிறது குறள். முற்பகல் பிற்பகல் மட்டுமல்ல. நாம் நல்லது செய்தால் நல்லது வரும். கெட்டது செய்தால் கெட்டது வரும். 'ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு' என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. 'தென்னங்கன்று வைத்து மாமரம் வராது' என்பார்கள் நம்மூரில். கொடுத்தல் மிகப்பெரிய கொடை. எல்லாராலும் கொடுக்க முடியாது. கொடுத்தலைப் போலவை வருவதை அனுமதிப்பதும் ஒரு கொடை. சிலர் சொல்வாங்க. நான் எல்லாருக்கும் கொடுப்பேன். ஆனால் யாரிடமும் எதுவும் வாங்க மாட்டேன். என்ன சார் ஃபிலாசபி இது. அப்போ நாங்கெல்லாம் பிச்சைக்காரங்க. நீங்க கொடுக்கறத வாங்கிக்கணும். ஆனா நாங்க கொடுத்தா வாங்க மாட்டீங்க? அன்பைக் கொடுக்கிறோம் என்றால் அன்பை மற்றவர்கள் நமக்குத் தரும்போது அதைத் தாராளமாக வாங்கிக் கொள்ள வேண்டும். 'கொடுத்தலில் இன்பம் வைத்தான். ஆகையால் அன்பைத் தாராளமாய்க் கொடு' என எழுதியிருந்தாள் என் நண்பி. வாழ்விற்கு நாம் எதைக் கொடுக்கிறோமோ அதையே வாழ்வு நமக்கும் கொடுக்கும். இதையே மேலாண்மையியலில் 'பூமராங் இஃபெக்ட்' என்று சொல்வார்கள். 

இறுதியாக, பீட்சா 2 பற்றிய ஒரு குறிப்பு. நெகடிவ் எனர்ஜி (எதிர்மறை ஆற்றல்) எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைச் சொல்லும் ஒரு திரைப்படம். ஜெபினின் பெயரில் உள்ள வில்லாவில் வாழ்ந்த பலரின் எதிர்மறை ஆற்றல் அவனது வாழ்விலும், அவனைச் சுற்றியிருக்கும் வாழ்விலும் பல விபரீதங்களை உருவாக்குகிறது. அந்த பில்லி சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றலை விட ஜெபினை அழித்தது ஆர்த்தியின் 'தன்னல அன்பு' என்றுதான் நான் சொல்வேன். ஜெபினை அவனது வங்கிக் கணக்கை வைத்து அளவிடுகிறாள் ஆர்த்தி. அதுவும் ஜெபினைச் சுற்றியிருக்கும் ஒரு நெகடிவ் எனர்ஜி தானே.

'ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம்' என்பதும் நியூட்டனின் விதி. அன்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு பாஸிட்டிவ் எனர்ஜி. அதை நாம் எடுக்கும் எல்லா சாய்ஸ்களிலும் மிளிரச் செய்வோம். அது அன்பாகவே நம்மிடம் திரும்பி வரும்.

'உனக்கு முன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்!'

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்

ஜென் துறவிகள் மடத்தில் யாராவது தவறு செய்தால் அவர்களுக்குத் தண்டனை சமையலறையில் வேலை செய்வது: காய்கறி வெட்டுவது, பாத்திரங்களைக் கழுவுவது, சமையல் செய்யும் இடத்தைத் துப்புரவு செய்வது போன்ற வேலைகளைச் செய்ய வேண்டும். தியான நேரத்தில் வழக்கமாகத் தூங்கி வழியும் கீன் என்ற சீடருக்கு அதே தண்டனை கொடுக்கப்படுகிறது. மூன்று மாதங்கள் சமையலறையில் வேலை செய்ய வேண்டும். கீன் எல்லாரையும் விட நன்றாகவே வேலை செய்கின்றார். கொடுக்கின்ற வேலைகளைச் சிறப்பாகச் செய்கின்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் புலம்பிக்கொண்டும், வசைபாடிக் கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் வேலைகளைச் செய்வார். அவரின் வேலையைப் பார்த்த தலைமைத் துறவி அவரின் தண்டனையை இரண்டு மாதமாகக் குறைத்து விடுகின்றார். சில மாதங்கள் கழித்து சமையலறையின் நிர்வாகம் சரியில்லை எனவும் அதற்கு தலைவராக ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் சொன்னபோது கீன் தலைவராக நியமிக்கப்படுகிறார். இம்முறையும் அதே வேலைகளைச் சிறப்பாகச் செய்கின்றார். ஆனால் இம்முறை எந்த வருத்தமோ, முணுமுணுப்போ இல்லாமல் செய்கின்றார். முதல் வேலை கண்டிப்பால் வந்தது. இரண்டாம் வேலை அன்பால் வந்தது. கண்டிப்பிலும், தண்டனையிலும் முணுமுணுப்பு இருக்கும். அன்பில் முணுமுணுப்பு இல்லை. ஞானம் பெற்றான் சீடன்.

இந்த வாரமும், வருகின்ற வாரமும் நற்செய்திப் பகுதிகள் இயேசுவின் மலைப்பொழிவின் தொடர்ச்சியாகவே உள்ளன. 'திருச்சட்டத்தை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றவே வந்தேன்' எனத் தன் வருகையின் நோக்கத்தை அறிவிக்கின்ற இயேசு தன் சமகால யூதர்களின் வழக்கத்திலிருந்த ஆறு சட்டங்களை எடுத்து அவற்றிற்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றார். இன்றைய நாளில் 4 சட்டங்களும் வருகின்ற வாரம் 2 சட்டங்களும் நமக்குப் புதிய அர்த்தங்கள் கொடுக்கின்றன. சட்டங்களை வெறும் தண்டனைக்கான காரணிகள் எனப் பார்க்காமல், அவற்றை அன்பின் தொடர்ச்சியாகப் பார்க்க அழைக்கின்றார் இயேசு. இந்த ஆறு சட்டங்களுமே அன்பால் கட்டப்பட்டவை.

1. அன்பு வெறுப்பைக் காட்டாது. 'கொலை செய்யாதே' என்ற சட்டத்தை எடுக்கின்ற இயேசு, 'யாரையும் வெறுக்காதே!' என அதற்குப் புதிய அர்த்தம் கொடுக்கின்றார். கொலையின் விதை வெறுப்பு. யாரும் யாரையும் கத்தியை எடுத்து எளிதாகக் கொலை செய்துவிடுவதில்லை. ஒருவரின் மனதில் இருக்கும் வெறுப்பு, கோபமாக மாறி, அந்தக் கோபம் 'கொலை' என்ற செயலாக வெளிப்படுகின்றது. 'கொலை' என்ற செயலில் ஈடுபடத் துணியாமல் பல நேரங்களில் நாம் 'வெறுப்பையும்,' 'கோபத்தையும்' நம் உள்ளத்தில் எரிய விட்டுக்கொண்டேதான் இருக்கின்றோம். எரிச்சல், வெறுப்பு, கோபம் அனைத்தும் பல நேரங்களில் நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் வழியாக வெளியே கொட்டப்படுகின்றது. நமக்கு மேல் இருப்பவர்கள் மேல் கோபம் எனில் அது திசைமாறி மற்றவர்கள் மேலும் திருப்பப்படுகின்து. கொலையின் வேரான வெறுப்பைக் களையச்சொல்கிறது இயேசுவின் புது மொழிபெயர்ப்பு.

2. அன்பு தீர்ப்பிடுவதில்லை. சண்டைகள் வரும்போது சமரசம் செய்து வைக்க நாம் நடுவரை நாடுகிறோம். நம் வாழ்க்கை முறையில் எடுத்துக்கொண்டால் காவல்துறை அல்லது நீதிமன்றத்தை நாடுகிறோம். இந்த இரண்டிற்கும் சென்றால் நம் வாழ்க்கை எப்படிப் பாழாய்ப்போகும் என்பதை நாம் அறிவோம். இயேசுவின் காலத்து நிலையும் அப்படித்தான் இருந்திருக்க வேண்டும். வலிமை படைத்தவர் பக்கமே தீர்ப்பு வழங்கப்பட்டது. நலிந்தவர் பணம் செலவழிக்க, வலிமையானவர் வெற்றி பெற்ற அவலம் அன்றும் நடந்தது. அந்த நிலைக்குப் போவதற்குப் பதில், எதிரியோடு வழியிலேயே சமரசம் செய்வது மேல் என்கிறார் இயேசு. நடுவர் மன்றங்கள் இருவருக்கிடையேயிருக்கும் பகையுணர்வைக் குறைப்பதை விட, அதிமாக்கவே செய்கின்றன. நாம் யாரையும் தீர்ப்பிடவில்லையெனில் யாரும் நம்மைத் தீர்ப்பிடுவதற்கும் வாய்ப்பு இல்லை.

3. அன்பு பிரமாணிக்கமாய் இருக்கும். அன்பின் முக்கிய பரிமாணம் பிரமாணிக்கம் அல்லது நம்பகத்தன்மை. நாம் ஒருவரை அன்பு செய்கிறோம் என்றால் அந்த நபர்மேல் நாம் பிரமாணிக்கமும், நம்பகத்தன்மையும் கொண்டிருக்கின்றோம். அந்த நபரும் பதிலுக்கு நம்மேல பிரமாணிக்கமும், நம்பகத்தன்மையும் வைக்கின்றார். அன்பில் இணையும் இருவரும் ஒருபோதும் இந்த பிரமாணிக்கத்திற்கும், நம்பகத்தன்மைக்கும் எதிராகச் செயல்பட முடியாது. திருமணம் என்ற அமைப்பில் இதன் முக்கியத்துவம் இன்னும் அதிகமாகிறது. பிரமாணிக்கம், நம்பகத்தன்மை குறையுமிடத்தில்தான் விபச்சாரம் நுழைகின்றது. ஒருவரின் உள்ளத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, உடலைப் பார்க்கத் தொடங்கும்போதே விபச்சாரம் அங்கே நுழைந்து விடுகிறது. உள்ளத் தூய்மை என்ற புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. உடலோடு விபச்சாரம் செய்வதற்கு முதற்படி உள்ளத்தால் விபச்சாரம் செய்வதே. விபச்சாரம் இரண்டு முறை நடக்கின்றது. முதலில் ஒருவரது எண்ணத்தில். இரண்டாவதுதான் செயலில். எண்ணத்தையே களைந்துவிடச் சொல்கின்றார் இயேசு.

4. அன்பு உண்மை பேசும். 'ஆணையிடாதீர்கள்' என்ற சட்டத்திற்கு 'உண்மை பேசுங்கள். அப்போது ஆணையிடத் தேவையே இருக்காது' என்ற புதிய அர்த்தத்தைக் கொடுக்கின்றார் இயேசு. உண்மையில்லாத இடத்தில்தான் சத்தியம் நுழையும். 'சத்தியமாக' என ஒருவர் ஆரம்பிக்கிறார் என்றால் அவர் எதோ பொய் சொல்லப் போகிறார் என்பதே அர்த்தம். வார்த்தையில் தூய்மையே வாய்மை. 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும், 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் இருக்க வேண்டும். 'இரண்டிற்கும் நடுவில்' என்ற நிலை அன்பில் இல்லை.

Saturday, February 15, 2014

களத்தூர் கண்ணம்மாவும் காதலர் தினமும்

இன்று காதலர் தினம். இன்றைய தமிழில் இதை அன்பர்கள் தினம் என்றும் அழைக்கின்றனர். இன்று தொலைக்காட்சி நிகழ்வுகளைப் பார்த்தால் காதலர் தினத்தை அனைவரும் கொண்டாடலாம் என்று புதிய பொருள் கொடுத்துள்ளனர். இது அன்பின் திருநாள். இந்தத் திருநாளுக்குப் பின் நிற்பவர் தூய வலண்டின் என்ற புனிதர். இந்தப் புனிதரைப் பற்றி இன்றைய உரோமைத் திருச்சபை வழிபாட்டுக் குறிப்பில் எதுவும் இல்லை. இந்தப் புனிதரைப் பற்றி பல்வேறு மரபுக் கதைகள் இருக்கின்றன. இது மேற்கத்திய விழா என்று நாம் சொல்கிறோம். ஆனால் இன்று இதன் தாக்கம் மேலை நாடுகளை விட கீழை நாடுகளில் தான் அதிகம் தான் இருக்கின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்னணியில் பார்த்தால் இது தங்கள் வாழ்த்து அட்டைகளையும், மிட்டாய்களையும், பரிசுப் பொருட்களையும் விற்கும் வியாபார நுணுக்கம்தான் காதலர் தினம்.

ஒரு காலத்தில் காதல் என்றால் கெட்ட வார்த்தையாகப் பார்க்கப்பட்ட நம் மண்ணில் இன்று இளைய தலைமுறையினர் நடுவில் 'நாங்கள் இருவரும் காதலிக்கிறோம்!' என்று சொல்லக் கூடிய துணிச்சல் வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. காதல் நல்லதா? கெட்டதா? என்று இங்கு ஆராய வேண்டாம்.

காதல் என்ற சிந்தனை எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம். நான் அடிக்கடி விரும்பிப் பார்க்கும் ஒரு திரைப்படம் 'களத்தூர் கண்ணம்மா'. இந்தத் திரைப்படத்தில் வரும் 'கண்களின் வார்த்தைகள் புரியாதோ' என்ற பாடலும், குட்டிக் கமலஹாசன் பாடும் 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். கண்களில் தோன்றி இதயத்தில் குடிகொள்ளும் ஒரு உணர்வே காதல். களத்தூர் கண்ணம்மா முன்வைக்கும் காதல் 'பிரமாணிக்கம்'. எந்த ஒரு இக்கட்டிலும் தன் காதலுக்குப் பிரமாணிக்கமாய் இருக்க நினைக்கின்றனர் இருவரும். இன்று திரைப்படத்தில் காதல் எப்படி வளர்ந்திருக்கிறது? 'வில்லா' (பீட்சா 2) திரைப்படம் பார்த்தீர்களா? தன் காதலனின் கையிருப்பை முன்வைத்துக் காதலிக்கும் ஒரு காதலியாய் முன்வைப்பதில் திருப்பத்தை உருவாக்குகிறது இந்தத் திரைப்படம்.

காதல் மாறிவிட்டதா? அல்லது காதலைப் பற்றிய திரைப்படங்களின் பார்வை மாறிவிட்டதா? திரைப்படங்களின் தாக்கங்களால் காதல் மாறியதா? அல்லது காதல் மாறியது திரைப்படங்களில் பிரதிபலிக்கிறதா? 'கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா?' கதைதான்.

இன்று வத்திக்கான் நகரில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட அகில உலக 20,000 தம்பதியினரைச் சந்தித்துப் பேசினார் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள். இன்று மேலை நாடுகளில் திருமணம் யாரும் கண்டுகொள்ளாத ஒரு சமூக அமைப்பாக மாறிவிட்டது. இந்தப் பின்னணியில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு திடம் ஊட்டுகிறார் திருத்தந்தை. இன்று அவர் சொன்னதில் எனக்கு மிகவும் பிடித்தது இதுதான்:

'எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என்பது இயேசுவின் செபம்.

ஆனால் இன்று நீங்கள் செபிக்க வேண்டியது இதுதான்:

'எங்கள் அனுதின அன்பை எங்களுக்கு இன்று அளித்தருளும். ஏனெனில் திருமண உறவில் அன்புதான் அனுதின உணவு. இந்த அன்பில் பட்டினி வந்துவிட்டால் திருமணம் வாடி விடுகிறது.'

'எங்கள் அனுதின அன்பை எங்களுக்கு இன்று அளித்தருளும்' என்ற இந்த இறைவேண்டல் திருமண உறவிற்கு மட்டுமல்ல, அருள்நிலை உறவிற்கும் பொருந்தும்.

இந்த இரண்டு உறவுகளிலும் அடிப்படையாக இருப்பது: 'அனுதின அன்பு'.

'அன்பு என்றும் உலகை ஆளட்டும்...'

அன்பின் தின வாழ்த்துக்கள்!

Thursday, February 13, 2014

தினமும் குளிக்க வேண்டுமா?

உனக்குப் பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதே. உன் உணவில் ஒரு பகுதியை பசித்திருப்போருக்கு வழங்கு. ஞானிகளிடம் அறிவுரை கேள். எல்லாக் காலத்திலும் உன் கடவுளாகிய ஆண்டவரைப் போற்று. உன் வழிகள் நேரியவையாய் அமையவும் உன் முயற்சிகளும் திட்டங்களும் வெற்றியடையவும் அவரிடம் மன்றாடு. (தோபி 4:15-19)

அருட்பணியாளர்கள் அன்றாடம் திருப்பலி நிறைவேற்றுவதை விட கட்டளைச் செபம் சொல்வதையே திருஅவை ஒரு கடமையாக முன்வைக்கின்றது. பல நாட்களாக எனக்குள் ஒரு கேள்வி: எதற்காக செபத்தை, அதுவும் தொடர்ந்து ஒரே வகை செபத்தைத் தொடர்ந்து செபிக்க வேண்டும்? 'திருஅவையின் திருப்புகழ்மாலையின்' அர்த்தம் என்ன? 

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நான் இந்தத் திருப்புகழ்மாலையை தமிழில் செபிக்கின்றேன். ஆங்கிலத்திலும், இத்தாலிய மொழியிலும் சொன்ன போது இல்லாத ஒரு நெருக்கம் தமிழில் செபிக்கும் போது இருக்கின்றது.

திருப்புகழ்மாலையில் தினமும் வருகின்ற ஒரு வாக்கியம் இது: 

'உளத்தை அவரே ஆண்டு நடத்திடவும்
உடலைத் தூயதாய்க் காத்திடவும்,
ஒளிரும் நம்பிக்கையில் நிலைத்து
உலகில் துலங்கிடவும் வேண்டிடுவோம்'

இந்த வாக்கியம் ஏதோ ஒரு வகையில் எல்லா நாட்களிலும் இருக்கும். இது உடல் தூய்மை மற்றும் உள்ளத் தூய்மையை முன்வைக்கின்ற ஒரு வாக்கியம். எதற்காக இது எல்லா நாட்கிளில் இடம் பெற வேண்டுமென்று நினைத்தேன். நேற்று சிம்பிள் ட்ரூத்ஸ் என்ற வலைத்தளத்தில் ஒரு கட்டுரை: 'நாம் ஏன் தினமும் குளிக்க வேண்டும்?' நாம் குளிக்கும் போது கிடைக்கின்ற உடல் சுத்தம் 24 மணி நேரங்களுக்குத் தான் தாங்குகின்றது. அதைத் தக்க வைத்துக்கொள்ள நாம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் குளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதுபோலத் தான் உள்ளத்து ஊக்கமும். அதன் வாழ்நாளும் 24 மணிநேரங்கள் தான். அடுத்த நாளும் அது புதுப்பிக்கப்பட வேண்டும். அல்லது உள்ளம் வாடிவிடும். 

இதன் பின்னணியில் திருப்புகழ்மாலை இன்று எனக்கு இரண்டு பொருளைத் தருகின்றது:

1. நான் கடவுளோடு இருக்கிறேன். கடவுளுக்காக இருக்கிறேன் என்று நாம் நமக்குக் கொடுக்கும் ஊக்கம் தினமும் புதுப்பிக்கப்பட வேண்டும். உடல் தூய்மைக்குக் குளியல் உதவுவது போல உள்ளத் தூய்மைக்கு செபம் உதவுகிறது.

2. திருப்புகழ்மாலை நம்மை காலத்தையும் கடந்து போகச் செய்கின்றது. இன்றைய இறைவார்த்தைப் பகுதி தோபியா நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியின் வயது ஏறக்குறைய 4000 ஆண்டுகள் இருக்கும். இதை வாசிக்கும் போது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அப்பா தன் மகனுக்குச் சொன்ன அறிவுரை. அது இன்றும் எனக்குச் சொல்வது போலவே இருக்கின்றது. நாம் செபிக்கும் திருப்பாடல்களின் வயது ஏறக்குறைய 6000 ஆண்டுகள். நாம் இந்த உலகில் இருந்து சென்றாலும் அவைகள் தொடர்ந்து செபிக்கப்படும். திருப்புகழ்மாலை செபிக்கும் போது பல ஆண்டுகள் முன்னே செல்வது போன்ற அனுபவமும், பல ஆண்டுகள் பின்னே செல்வது போன்ற அனுபவமும் கிடைக்கின்றது.

வாழ்க்கைப் புத்தகம்

கல்லூரி மாணவன் ஒருவனுக்கு ஃபெராரி கார் என்றால் மிகவும் பிடிக்கும். எந்நேரமும் அந்தக் கார் பற்றியே எண்ணிக் கொண்டிருப்பான். தன் நண்பர்களோடு பேசும் போதும் அதைப் பற்றியே பேசுவான். அந்த காரைப் பற்றி எங்கே செய்தி இருந்தாலும் அதை வெட்டி எடுத்துக் கொள்வான். தன் அறை முழுவதும் அந்தக் காரின் ஃபோட்டோக்களை ஒட்டி வைத்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடிக்கும் தறுவாயில் பெரிய தொழிலதிபராய் விளங்கிய தன் தந்தையிடம் ஃபெராரி வாங்கித் தருமாறு கேட்கிறான். 'நீ கல்லூரிப் படிப்பை முடிக்கும் இறுதி நாளில் உனக்கு கார் நிச்சயம்!' என்கிறார். கல்லூரிப் படிப்பின் இறுதி நாள். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என முடிந்து வீடு திரும்புகிறான். வீட்டின் கேட்டைத் திறந்தவுடன் கார் நிற்கும் என நினைக்கிறான். ஆனால் ஏமாற்றம். கார் நிறுத்தத்தில் சென்று பார்க்கிறான். அங்கும் ஃபெராரி இல்லை. கோபத்தோடும் ஏமாற்றத்தோடும் வீட்டிற்குள் செல்கிறான். அவனை ஆரத்தழுவும் தந்தை ஒரு பார்சலை அவனிடம் தருகின்றார். வேகமாகத் திறக்கிறான் மாணவன். உள்ளே ஒரு புதிய டைரி. கோபம் அதிகமாகிவிட, நீங்கள் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்! நான் இன்னும் ஒரு நிமிடம் கூட இங்கே இருக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டுப் புறப்படுகிறான். தனியாக வீடு எடுத்துத் தங்கி, நல்லதொரு வேலை, திருமணம் என்று செட்டில் ஆகி விடுகிறான். தன் சம்பளத்தில் தன் கனவுக் காரையும் வாங்கி விடுகிறான். ஒரு நாள் அவனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு: 'உங்கள் தந்தை இறந்து விட்டார்!' கோபத்தில் தந்தையின் இறப்பிற்குக் கூடச் செல்ல மறுத்து விடுகிறான். சில வருடங்கள் கழித்து தந்தைதான் இல்லையே, தான் இருந்த வீட்டையாவது பார்த்துவிட்டு வரலாம் என நினைத்துப் புறப்படுகிறான். ஒவ்வொரு அறையாகப் பார்த்துக் கொண்டு வந்த போது, தன் தந்தையின் அறைக்குள் நுழைகிறான். அங்கே அவன் கல்லூரி பட்டவிழா அன்று தந்தை பரிசளித்த டைரியும் இருக்கின்றது. அதில் என்னதான் இருக்கும்? என எண்ணி அதைத் திறக்கிறான். உள்ளேயிருந்து ஒரு கார் சாவி கீழே விழுகின்றது. அந்த டைரிக்குள் கார் வாங்கியதற்கான பில்லும் இருக்கின்றது. அந்த பில்லில் இருந்த ஃபோன் நம்பரைத் தொடர்பு கொண்டு அந்தக் கார் கம்பெனியை விசாரிக்கிறான். 12 வருடங்களாக அந்தக் கார் டெலிவரி எடுக்கப்படாமல் நிற்பதாகச் சொல்கின்றனர் அவர்கள். ஒரு நிமிடம் நின்று அன்று டைரியைத் திறந்து பார்த்திருந்தால் இவ்வளவு மனவருத்தம் வந்திருக்காதே என்ற நினைவுடன் தன் வீடு திரும்புகிறான்.

பல நேரங்களில் நாம் வாழ்க்கை என்ற புத்தகத்தை திறந்தே பார்ப்பதில்லை தானே. திறந்து பார்க்காமல் வாழ்க்கை புரியவில்லை என்று புலம்புவது தகுமோ?

Wednesday, February 12, 2014

நீ கைகளை விரித்துக் கொடுப்பாய்

'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக் கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடி வந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். இதைச் சொன்னபின் பேதுருவிடம், 'என்னைப் பின்தொடர்' என்றார். (யோவான் 21:18-19)

இன்று அகில உலக நோயுற்றவர் தினம். கிபி 1858 ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் லூர்து நகரில் பிப்ரவரி 11 முதல் சூலை 16 வரை பெர்னதெத் என்ற சிறுமிக்கு அன்னை மரியாள் காட்சி கொடுத்தார். அந்தக் காட்சியின் முதல் காட்சி இன்றைய தினம். இன்றைய நாளில் இத்தாலியின் பல நகரங்களில் மதியம் 3 மணிக்கு நோயுற்றவருக்கான சிறப்பு திருப்பலி நடைபெறும். இன்றைய தினம் எங்கள் பங்கிலும் திருப்பலி நடைபெற்றது. இந்தத் திருப்பலியில் நோயிற்பூசுதல் என்ற அருளடையாளம் வழங்கப்படும். நோயிற்பூசுதல் என்றால் என்ன? திருஅவையின் ஏழு அருளடையாளங்களில் ஒன்று இது. சாதாரண சொல் வழக்கில் 'அவஸ்தை' என்று இதைச் சொல்வார்கள். 'மரண அவஸ்தையின்' போது வழங்கப்படும் அருளடையாளம் இது. இதைக் கேள்விப்பட்டாலே பலரும் பயப்படுவர். இதைப் பெற்றுக்கொண்டால் நாம் இறந்துவிடுவோம் என்பதும் ஒரு சிலரது பயம். அந்தக் காலத்தில் இந்த அருளடையாளம் கொடுக்க வரும் அருட்பணியாளர் கையில் ஒரு சிறிய மணியை வைத்து அடித்துக் கொண்டே வருவார். அவர் நற்கருணை ஆண்டவரைக் கையில் கொண்டு வருகிறார் என்பதை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்காக அந்த மணி. நோயிற்பூசுதலின் போது நற்கருணையும் வழங்கப்படும் என்பது குறிப்பு. அருட்பணியாளரின் அந்த மணிச்சத்தத்தைக் கேட்கும் நீட்சே என்ற மெய்யியலார் இப்படி கிண்டலாக எழுதுகிறார்: 'இதோ மரண மணி அடித்துக்கொண்டு அருட்பணியாளர் வருகிறார். யார் உயிரை அவர் எடுக்கப் போகிறாரோ? இதோ வருகிறார் இறப்பின் தூதன்'. நீட்சேவைப் போல இன்னும் பலர் எண்ணுகின்றனர். 

ஆனால் நோயிற்பூசுதலின் பின்புறம் இருக்கும் பொருள் தூய யாக்கோபின் வார்த்தைகள்தாம்: 'உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள். நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்' (யாக்கோபு 5:14-15). நோயிற்பூசுதல் ஒரு நலம்தரும் அடையாளம். இன்றைய திருப்பலியில் நான் 73 பேருக்கு இந்த அருட்சாதனத்தை நிறைவேற்றினேன். மிகவும் மனதுக்கு உருக்கமான நிகழ்வாக இருந்தது. இந்த அருளடையாளம் எப்படி வழங்கப்படும்? புனிதப்படுத்தப்பட்ட திருஎண்ணெயை பெறுபவரின் நெற்றியிலும், இரண்டு புறங்கைகளிலும் பூசுவதால் நிறைவேற்றப்படும். ஏன் உள்ளங்கைகளுக்குப் பதிலாக புறங்கைகள்? உள்ளங்கையில் எண்ணெய் தேய்த்து வழங்கப்படும் அருளடையாளம் குருத்துவம். புறங்கைகளுக்கும் இந்த அருளடையாளத்திற்கும் நிறைய தொடர்பு உண்டு. என்ன தொடர்பு?

இன்று என்னிடம் இதைப் பெற வந்த ஒரு பாட்டியின் கண்கள் என் கண்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவருக்கு ஏறக்குறைய 75 வயது இருக்கும். சிவப்பு ஆடை. நல்ல வெள்ளை நிறம். நரைத்த முடி. கைப்பிடி, கைத்தடி இல்லாமல் நடக்க முடியும் என்னும் அளவிற்கு உடல் பலம். நெற்றியில் நான் சிலுவை அடையாளம் வரைந்தவுடன் அவரது கண்கள் கலங்குவதை நான் கவனித்தேன். பின் அவராகவே தன் இரு புறங்கைகளையும் நீட்டினார். 'இவற்றில் எண்ணெய் தேயுங்கள்!' என்று சொல்வதற்குப் பதில், 'என்னைப் பிடித்து நடத்திச் செல்லுங்கள்' என்று அவர் சொல்வது போலவே இருந்தது. என் தங்கை மகள் குட்டி ஃபிலோவும் மின்னலாக வந்து சென்றாள். 'மாமா' என்று சொல்லத் தெரியாமல் 'ம்மா...ம்மா..' என்று கைகளை நீட்டுவாள். 'என்னை நடத்திச் செல்' என்று சொல்லாமல் சொல்வாள். குழந்தைப் பருவத்திலும் கைகளை விரித்துக் கொடுக்கிறோம். வயது முதிர்ந்ததும் கைகளை விரித்துக் கொடுக்கிறோம். இந்த இரண்டு நிலைகளிலுமே மற்றவரின் துணை நமக்குத் தேவைப்படுகிறது. ஆகையால்தான் ஷேக்ஸ்பியர் முதிர்வயது பருவத்தை இரண்டாம் குழந்தைப் பருவம் என அழைக்கிறார் போலும். இரண்டு நிலைகளிலும் கைகளை வரித்துக் கொடுக்கும் போது மனதின் உணர்வுகள் வித்தியாசமாக இருக்கின்றன.

குழந்தை கையை விரித்துக் கொடுக்கும் போது அதன் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு, தேடல், துணிச்சல், ஆர்வம் தெரியும். முதியவர் விரித்துக் கொடுக்கும் போது அந்த பளுப்பு நிறக் கண்களில் கண்ணீர் மட்டுமே தெரிகின்றது. முதுமையாக இருப்பது பெரிய விஷயம்தான். ஒவ்வொரு முதியவருமே புதிதாகப் பிறக்கின்றார் ஒவ்வொரு நாளும். 'எனக்கு யார் இருக்கிறார்? யார் இருப்பார்?' என்ற கேள்வி அவர்களைத் தொற்றிக் கொள்கின்றது. 'அவர்கள் கைகளை நீட்டி மட்டுமே இருக்கும் அளவிற்கு' மாறிவிடுகிறார்கள். இறப்பின் தூதன் அவர்களை அவர்கள் விரும்பாத இடத்திற்கு அழைத்துச் செல்வான் என்பது அவர்களுக்குத் தெரியத் தொடங்குகிறது. கைகளை விரித்துக் கொடுக்க நிறைய துணிச்சல் வேண்டும்.

தான் உயிர்த்தபின் இயேசு பேதுருவைப் பார்த்துக் கூறும், 'நீ கைகளை விரித்துக் கொடுப்பாய், மற்றவன் உன்னைக் கூட்டிச் செல்வான்' என்ற வார்த்தைகள் நம் ஒவ்வொருவருக்கும் சொல்லப்பட்டதாகவே இருக்கின்றது.

இப்பொழுதும் என் நினைவில் அந்த சிவப்பு உடை பாட்டியே இருக்கின்றார். அவரின் புறங்கைகள் என் கைகளைப் பற்றிக் கொள்வது போலவே உணர்கின்றேன். குருத்துவத்தின் இனிமையான பொழுதுகளில் இதுவும் ஒன்று. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஒரு இனியவரின் கைகளை என் கைகள் பற்றிக் கொள்ளத் துடிக்கின்றது. அவரின் கைகள் என் கைகளைப் பற்றிக் கொள்ளத் துணிகின்றன. 

'என்னை நோக்கித் தன் கைகளை நீட்டும் இரண்டாம் குழந்தையர் அனைவரையும் அணைத்துக் கொள்ளும் பரந்த மனம் கேட்கின்றேன்!'

'நீ கைகளை விரித்துக் கொடுப்பாய் ... வேறொருவர் உன்னைக் கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச் செல்வார்.'

Tuesday, February 11, 2014

மதமாற்றமும் ராஜா-ராணியும்

நேற்று நாங்கள் காலை உணவு அருந்திக் கொண்டிருந்தபோது அந்த உணவின் ஒரு பகுதியாக 'பனாத்தோனே' என்ற கேக் வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கேக் கிறிஸ்துமஸ் காலத்தில் இத்தாலி முழுவதும் செய்யப்படுகின்ற ஒரு கேக் வகை. இப்போது உலகின் பல நாடுகளில், குறிப்பாக கிறித்தவ மதம் மேலோங்கி நிற்கும் நாடுகளில் இது கிறிஸ்துமஸ் காலத்தில் தயாரிக்கப்படுகின்றது. அதை வெட்டி எல்லாருக்கும் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு வயதான அருட்தந்தை (82) உங்கள் நாட்டிலும் இந்த கேக் உண்டா என்று கேட்டார். நான் 'நல்ல வேளை இல்லை!' என்றேன். அவரின் புருவம் சற்றே உயர்ந்தது. 'ஏன் நல்ல வேளை! பிடிக்கவில்லையா?' என்று கேட்டார். 'இல்லை. கிறிஸ்துமஸ் முடிந்து ஏறக்குறைய 45 நாட்கள் ஆகிவிட்டன. இன்னும் இந்தக் கேக்கைச் சாப்பிடுகிறோமே. அதனால் சொன்னேன்' என்றேன். 'ஏன் நீங்கள் விழாக்களுக்கேற்ற உணவு வகை செய்வதில்லை இந்தியாவில்?' என்று கேட்டார். 'எங்களுக்கு கிறிஸ்துமஸ் பெரிய விழா அன்று. எங்கள் ஊரில் அதிகமாகக் கொண்டாடப்படும் விழா தீபாவளி. அந்த நாளில் நாங்கள் பலகாரங்கள் செய்வோம். மேலும் எங்கள் தமிழ்நாட்டின் பொங்கல் திருவிழாவில் நாங்கள் பொங்கல் செய்வோம்.' என்றேன். பின் பேச்சு அப்படியே வளர்ந்து இந்துக்களின் திருவிழா, கொண்டாட்டம், சாமி, விரதம், நேர்ச்சை, அபிசேகம் எனத் தொடர்ந்தது. காலை உணவு முடிவு பெறும் வேளையில் விருந்துக்கு வந்திருந்த ஒரு மேலைநாட்டு அருட்தந்தை, 'இந்த மக்கள் மனம் மாற மாட்டார்களா?' என்றார். எனக்குக் கொஞ்சம், இல்லை, ரொம்பவே கோபம். வயதான அருட்தந்தை சொன்னார்: '2000 வருடங்களாக இருக்கிறார்கள். எப்படி மாறுவார்கள்?' என்றார். 'எல்லாருமே மனம் மாற வேண்டுமா? ஏன் இப்படியே இருந்தால் என்ன? உங்களுக்கு என்ன?' என்று நான் கோபமாகவே கேட்டேன். 'இல்லை. நம் கடவுள் தான் உண்மையான கடவுள்' என்றார். 'அடுத்தவர்கள் பொய் என்று நிரூபித்து உங்கள் கடவுளை உண்மை என்று ஆக்க வேண்டுமா?' என்றேன். வாக்குவாதம் அப்படியே வளர்ந்தது. கடைசியில் 'நீ கிறித்தவ அருட்பணியாளர் மாதிரி பேசுவதற்குப் பதிலாக ஏன் இந்துவைப் போலப் பேசுகிறாய்?' என்று என்னிடம் கேட்டுவிட்டு கலைந்து சென்றனர். 'அடுத்தவர்கள் வித்தியாசமாக இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற மேற்கத்திய மூளை அந்த வித்தியாசத்தை அழித்து தன்னைப் போல ஆக்கிவிட நினைக்கிறது. தன்னைப் போல ஆக்கிவிட்டால் பயமில்லைதானே. பயந்தாங்கொள்ளிகள்!' என்று நானும் பதிலுக்குச் சொன்னேன்.

மதமாற்றம். மனமாற்றம். ஒளி. உப்பு. மலைமேல் உள்ள ஊர். என்று நேற்று சிந்தனை ஓடியது. 'எல்லாரும் என்னைப் போல இருக்க வேண்டும்' என்ற மேல்தட்டு சித்தாந்தமே நம் மண்ணில் நடந்த மனமாற்றத்திற்குக் காரணம். ஒரு நிமிடம் யோசிங்களேன். 'நாம் ஒரு குடும்பத்தில் பிறந்தோம் என்கிற ஒரே காரணத்திற்காக அந்தக் குடும்பத்தின் மதம் நம்மேல் ஒட்டிக் கொள்வது எப்படி? அப்படி ஒட்டிக்கொண்டாலும் அந்த அடையாளத்தைப் பெறாதவர்கள் எல்லாம் பொய் என்று நாம் எப்படிச் சொல்ல முடியும்?'

விவிலியத்தை அடிப்படையாக வைத்து உருவானது. இயேசு இந்த உலகில் வாழ்ந்தார் என்றெல்லாம் சொல்லலாம். இயேசு மட்டுமல்ல இயேசுவைப்போல 13 மெசியாக்கள் இருந்தார்கள் என யூதர்களின் வரலாறு சொல்கிறது. அப்படியென்றால் மற்ற 12 மெசியாக்களின் கதி என்ன? விவிலியம் ஒரு நல்ல புத்தகம். காலங்கலாமாக கைமாறி வருகிறது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் விவிலியத்திலும் அந்தந்த காலப் பிரச்சனைகள் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியே உள்ளன. உதாரணத்திற்கு, லூக்கா நற்செய்தியாளர் இயேசு திருமுழுக்கு பெறும் நிகழ்வை எழுதும்போது திருமுழுக்கு யோவான் சிறையில் இருந்தார் என எழுதுகின்றார். திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தால் அவர் எப்படி யோர்தான் நதியில் திருமுழுக்கு கொடுக்க முடியும்? ஏன் லூக்கா இப்படி எழுதிகிறார் என்றால் லூக்காவின் திருச்சபைக்கும், திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்குமிடையில் ஒரு சில கருத்தியல் வேறுபாடுகள். நீ பெரியவனா? நான் பெரியவனா? என்ற அதிகாரப் போராட்டம். 'உங்கள் போதகர் இல்லாமலும் எங்கள் இயேசுவால் பணியாற்ற முடியும்!' என்ற ஆதிக்க சிந்தனையில் திருமுழுக்கு யோவான் சிறையில் இருந்ததாக எழுதுகின்றார் லூக்கா. இப்படியே ஆராயந்தால் எல்லா மதங்களின் அடித்தளங்களும் கொஞ்சம் வீக்காகவே இருக்கின்றன. மதம் இருப்பதற்குக் காரணம் புத்தகமோ, மத போதகர்களோ, கடவுள்களோ அல்ல - நம்பிக்கைதான். காதலிப்பவர்களுக்கு காதல் ஒரு மதம். நண்பர்களுக்கு நட்பு ஒரு மதம். அரசியல்வாதிகளுக்கு அரசியல் ஒரு மதம். எல்லாம் இயங்குவது நம்பிக்கையில் தானே. அப்படியென்றால் எல்லாம் மதம் தானே.

இந்தப் மனமாற்ற, மதமாற்றப் மனப்போராட்டத்தோடு 'ராஜா-ராணி' திரைப்படம் பார்த்தேன். 'நல்லாயிருக்கு! இன்னும் பார்க்கலயா? இன்னும் பார்க்கலயா?' என்று நண்பர்கள், நண்பிகள் நச்சரித்தபின் இன்று பார்த்தேன். ஒரு வித்தியாசமான படம் தான். 'ப்ளே ஆஃப் போல்ஸ்', அதாவது இரண்டு துருவங்களை வைத்துக் கதையைக் கட்டமைப்பு செய்திருக்கின்றார் இயக்குநர்: இரண்டு ஹீரோ, இரண்டு ஹீரோயின், இரண்டு காமெடியன், இரண்டு அப்பாக்கள், இரண்டு வீடுகள், இரண்டு பணியிடங்கள் என இரண்டுகளில் விளையாடுகின்றார் இயக்குநர். ஒரு ஹீரோவின் பெற்றோர் பற்றி எல்லாமே இருட்டு. அதுபோல ஒரு ஹீரோவின் பெற்றோர் பற்றி எல்லாமே இருட்டு. ஒரு ஹீரோ இறக்கிறார். ஒரு ஹீரோயின் இறக்கிறார். மறு ஹீரோவும், மறு ஹீரோயினும் கைகோர்க்கிறார்கள். படத்தின் கருத்து இதுதான்: வாழ்க்கையில் அனைவருக்குமே பிரச்சினைகள் வரும். அந்தப் பிரச்சினைகளில் நாம் காயப்பட்டாலும் அந்தக் காயத்தை நாம்தான் ஆற்ற வேண்டும். இதில் திருமண உறவை எடுத்திருப்பதால், முதலில் ஒருவர் தன் காயத்தை ஆற்ற வேண்டும். பின் மற்றவரின் காயத்தை ஆற்ற வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு காயம்பட்ட மருத்துவர் என்பதை எதார்த்தமாகச் சொல்கின்றது இந்தத் திரைப்படம்.

இங்கே பிரச்சினையாக வைக்கப்படுவது காதல். படத்தைக் கொஞ்சம் விமர்சனம் செய்வோம். முதல் காதலில் (சூர்யா - ரெஜினா) சூர்யாவிடம் காதல் வருமுன் ரெஜினா ஒரு அழகான வசனம் சொல்வார்: 'ஸ்மார்ட்டா இருக்கிற பையன விட இன்னசன்ட்டா இருக்கிற பையனத்தான் பொண்ணுங்களுக்குப் பிடிக்கும்!' ஸ்மார்ட்டா இருக்கிற என்ன மாதிரி பையன்களுக்கு (!) இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் கொடுக்கிற வசனம் இது. அப்ப ஸ்மார்ட்டா இருக்கக் கூடாதா? என்று பொங்கி எழாதீங்க ப்ளீஸ். இன்னசன்ட்டா இருக்கிற சூர்யா எப்படி ரெஜிஸ்டர் ஆபிஸ் வருவதற்குப் பதில் அமெரிக்கா செல்கிறார்? எப்படி தான் இறந்ததாகப் பொய் சொல்லச் சொல்கிறார்? இதுதான் பெண்கள் விரும்பும் இன்னசன்ஸா? காதல் செய்வது தங்கள் கலாச்சாரத்தில் இல்லை என்று சொல்லும் சூர்யாவின் தந்தையின் கலாச்சாரத்தில் ஏமாற்றுவதும், பொய் சொல்வதும் சாதாரணமா? 'தன் அப்பாவிற்காகப் பயப்படுவதாகக் கூறும் சூர்யா அந்தப் பயத்தை அன்பாக மாற்றினாரா? இல்லையா?' பயம் இருக்கும் இடத்தில் எதுவுமே சாத்தியமில்லையே? 
இரண்டாம் காதலில் (ஜான் - கீர்த்தனா) கொஞ்சம் 'எங்கேயும் எப்போதும்' வாடை அடிக்கிறது. இந்த இரண்டு காதலும் இணைந்து ஒரு திருமணம் - இதுதான் சிம்ப்ளிஸ்டா இந்தப் படத்தைப் பற்றிச் சொல்ல ஒரு வழி. 'எவ்ளோ பெரிய காதலாயிருந்தாலும் ஒரு கட்டத்துல எல்லாம் சரியாயிடும்!' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'எல்லாத் திருமணங்களுக்குப் பின்னாலும் ஏதாவது ஒரு காதல் இருக்கும்!' என்றும் எடுத்துக் கொள்ளலாம். 'நம்ம கூட இருக்குறவங்க நம்மள விட்டு போயிட்டாங்கன்னா நம்மளும் போகணும்னு அவசியமில்ல. என்னைக்காவது ஒருநாள் நம்ம ஆசப்பட்டது மாதிரி நம்ம லைஃப் மாறும். கண்டிப்பா மாறும்!' இதுதான் இத்திரைப்படத்தின் இரத்தின வரி. இந்த வரிகள் இரண்டிரண்டு முறை (நான்கு முறை) சொல்லப்படுகின்றன - இங்கும் இரண்டுதான்! 

சரிப்பா...மதமாற்றத்திற்கும், ராஜா-ராணிக்கும் என்ன சம்பந்தம்?

எனக்காக அடுத்தவன் அல்லது அடுத்தவள் மாறனும்னு நினைச்சா அது மதமாற்றம்.

அடுத்தவன் அல்லது அடுத்தவளுக்காக நான் மாறனும்னு நினைச்சா அது ராஜா-ராணி.

ஒவ்வொவரும் ஒரு காயம்பட்ட மருத்துவர் என்பதை உணர்ந்து, இன்னும் தொடர்ந்து காயப்படுத்தாமல், ஒருவர் மற்றவரின் கண்ணீர் துடைக்க நம் கரம் நீட்டினால் நாமும் ராஜா - ராணிதான்!