Sunday, June 21, 2015

நாங்கள் சாகப்போகிறோமே!

கடந்த இரண்டு வாரங்களாக இத்தாலிய தொலைக்காட்சிகளில் புலம்பெயர் மக்கள் குறித்து அதிகம் பேசப்படுகிறது. ஆப்பிரிக்காவின் பிரெஞ்சு பேசும் நாட்டவர்கள் பலர் கடந்த இரண்டு மாதங்களில் அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்திருக்கின்றனர் (ஏறக்குறைய 2 லட்சம் பேர் என்கிறது மீடியா). கடல்வழி வருபவர்களுக்கு இத்தாலிதான் ஐரோப்பாவின் முக்கியமான நுழைவாயில். இத்தாலிக்குள் நுழையும் இவர்களின் நோக்கம் இத்தாலியில் தங்குவது அல்ல. மாறாக, பிரெஞ்சு நாட்டுக்குச் செல்வது. இத்தாலிக்கும், பிரான்சுக்கும் சும்மாவே ஆகாது. 'நீ ஏன் அவங்கள விடுற!' என்று பிரான்சு இத்தாலியைக் கேட்கிறது. 'இங்கிருக்கக் கூடாது! வேறு எங்கு வேண்டுமானாலும் போய்க்கொள்!' என உள்ளிழுத்து அகதிகளை வேறு நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறது இத்தாலி.

பிரெஞ்சக்காரன் கொஞ்ச வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவின் சில நாடுகளை ஆக்கிரமித்து, அவர்களின் மொழியையும் அழித்து அவர்களுக்கு பிரெஞ்சு கற்றுக்கொடுத்துவிட்டான். இன்று அந்த ஆப்பிரிக்க நாட்டவர்கள் தங்கள் நாட்டில் வாழ வழியில்லாமல் இருக்கும்போது தங்களின் கைவசம் இருக்கும் அந்த மொழியையாவது பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள். அவ்வளவுதான்!
'அவன் வர்றான்! கறுப்பன் வர்றான்!' என இப்போது ஐரோப்பிய நாடுகள் குய்யோ, முறையோ எனக் கத்துகின்றன. ஆனால் இந்த ஐரோப்பியர்களே சில பத்தாண்டுகளுக்கு முன் ஊர் ஊரா திருடிக்கொண்டிருந்ததை மறந்து விட்டார்கள்.

இந்த அகதிகளை இத்தாலியர்கள் கையாளும் விதம் மிகவும் மோசமானது. தங்கள் முகத்துக்கு முகமூடி, கையுறை, முழங்கால் வரை காலணிகள் என அணிந்துகொண்டு இந்த அகதிகளை ஏதோ வேற்று கிரகத்தவர் போல வரவேற்கின்றனர். சாப்பாடு, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை தூக்கி போடுகிறார்கள். மற்றவர்கள் பிடித்துக்கொள்கிறார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்! இத்தாலிக்காரன் தன் வீட்டு நாயைக் கொஞ்சும்போது கையுறை அணிவதில்லை. இந்த நாயைவிட அகதிகள் மோசமானவர்களா? அல்லது இத்தாலிக்காரனும், நாயும் சொந்தக்காரர்களா?
இந்த அகதிகளின் வருகையால் ஏற்கனவே இங்கு தங்கி வாழும் மற்ற நாட்டவர்கள்மேல் கலாச்சாரப் போர் தொடுத்திருக்கின்றனர் இத்தாலியர்கள். எங்கு பார்த்தாலும் அந்நியர்களுக்கு எதிரான சுவரொட்டிகள். அரசியல்வாதிகள் இந்த அகதிகளை வைத்து தங்கள் ஆதாயம் தேடிக்கொள்ளப்பார்க்கிறார்கள்.

ஆக, வெள்ளை தவிர வேறு கலரில் இருந்தால், நாம் வெறும் பொருளே.

கடந்த 17 அமெரிக்க ஐக்கிய நாடுகளின், சார்ல்ஸ்டன் நகரில், 21 வயது வெள்ளை இளைஞன், ஆஃரோ-அமெரிக்கர்களின் தேவாலயத்திற்குள் சென்று 9 பேரை கொன்றிருக்கிறான். இதன் வழியாக ஒரு நிற போர் உருவாகவேண்டும் என நான் விழைகிறேன் என பத்திரிக்கைக்கு செய்தி கொடுக்கிறான். 'நீ செய்தது தவறு என்று ஏற்றுக்கொள்கிறாயா?' என்ற கேள்விக்கு 'இல்லை' எனவும் சொல்லியிருக்கிறான்.

இத்தாலியில் இருக்கும் நிறவெறிகூட ஓகே எனச் சொல்லிவிடலாம். ஆனால் அமெரிக்க ஒரு வந்தேறிகளின் நாடு. அல்லது குடியேற்ற நாடு. வெறும் 200 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்டது. அன்றாடம் கண்டுபிடிக்கப்படும் ஒரு தீவு போலத்தான் அது. யாரும் அங்கே குடியேற உரிமை இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நாட்டில் ஒரு வந்தேறி தன் நிறம் வெள்ளை என்பதற்காக மற்றொரு வந்தேறிமேல் வன்முறையை ஏவுவது தவறு. வெள்ளைத் தோலிலும் துப்பாக்கி குண்டு பாயும் என்பது அவனுக்குத் தெரியாதா?

நிறத்தில் என்னதான் இருக்கிறது?

இந்த நிறப்பிரச்சினைக்கு இத்தாலியின் வத்திக்கானின் கத்தோலிக்க கடவுளும் பதில் சொல்ல மறுக்கிறார். 9 பேரை சுட்டுக்கொன்றபோது அந்த ஆலயத்தில் இருந்த கடவுளும் பாவம் தன் பக்தர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

பாவம் கடவுள்! எத்தனை பேரை எத்தனை இடங்களில் காப்பாற்றுவார்?

நாளைய நற்செய்தியில் வரும் இயேசு போல படகின் ஓரத்தில் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாரா நம் கடவுள்?

'போதகரே! நாங்கள் சாகப்போகிறோமே! உமக்கு அக்கறையில்லையா?'


1 comment:

  1. உண்மைதான்....அடுத்த கிரகத்திற்கு ஏணி அமைக்கத் தெரிந்த மனிதனுக்கு தன் சக மனிதனைக் கொண்டாடத் தெரியவில்லை." வெள்ளை தவிர வேறு நிறத்தில் இருந்தால் நாம் ஒரு பொருளே!" பெருத்த அவலம்."அன்று கொல்லும் அரசு; நின்று கொல்லும் தெய்வம்". இறைவன் உறங்கவில்லை...காலம் கருதிக் காத்திருக்கிறார்.அவர் விழித்துக்கொண்டால்??!! யோசிக்க வேண்டிய விஷயம்....நேரமும் கூட...

    ReplyDelete