Friday, August 30, 2019

விதைக்காத இடத்திலும்

இன்றைய (31 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 25:14-30)

விதைக்காத இடத்திலும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தாலந்து எடுத்துக்காட்டை வாசிக்கின்றோம். லூக்கா நற்செய்தியிலும் இதே நிகழ்வு சற்றே மாறுபட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.

'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்' என்று பொதுவாகச் சொல்கின்ற இயேசு இந்த எடுத்துக்காட்டில் எதை விண்ணரசுக்கு ஒப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை. தாலந்தைப் பெருக்க வேண்டும் என்று சொல்கிறாரா, அல்லது தாலந்தைப் பெருக்காவிட்டால் தண்டிக்கப்படுவோம் என்று சொல்கிறாரா, அல்லது இந்த நிகழ்வில் வரும் செல்வந்தர் போலக் கடவுள் கறாராக இருப்பார் என்று சொல்கிறாரா என்று தெரியவில்லை.

'சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவர் பெரியவற்றிலும் நம்பிக்கைக்குரியவர்' என்பது நிகழ்வின் இடைச் செய்தி.

'உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதவரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்' என்பது இறுதிச் செய்தியாக இருக்கிறது.

ஆக, பயன்படுத்தாத ஒன்று, அல்லது பலன்தராத ஒன்று நம்மிடமிருந்து பறிக்கப்படும்.

பயன்படுத்தப்படாத ஒன்று மறைந்துபோகும் என்பது பரிணாம வளர்ச்சியின் செய்தியும்கூட. மேலும், நாம் அடிக்கடி பயன்படுத்துகின்ற ஒன்று பலம் பெறும் என்பதும் அதன் நீட்சியே.

இந்த மூன்றாவது பணியாளர் ஏன் தாலந்தைப் பெருக்கவில்லை?

அவரிடமிருந்த பயம் என்றே நினைக்கிறேன்.

ஒரு தாலந்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயத்தில் அதைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்து வைக்கிறார். தன் தலைவர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர், தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவர் என்று எண்ணியதால், இருக்கிற ஒரு தாலந்தில் இன்னும் குறைந்துவிட்டால் என்ன ஆவது என்ற நினைப்பில் புதைத்து வைக்கிறார்.

இந்த பயம் சரியானதா?

இவர் தன் தலைவரைப் பற்றி நினைத்திருந்தது சரியா?

நாமே தவறான புரிதல்களைக் கொண்டிருப்பது நம்முடைய பயத்தை இன்னும் அதிகமாக்கும். இவருடைய இந்த பயத்தால் வட்டிக்கடை இருப்பதும் இவருக்கு மறந்துவிட்டது. தலைவர் அத்தவற்றையே சுட்டிக் காட்டுகின்றார்.

பயத்தோடு இணைந்தது சோம்பல்.

யாராவது நம்முடைய வீ;ட்டில் தூங்கி விழுகிறார்கள் என்றால், பகலிலும் அதிகம் தூங்குகிறார்கள் என்றால், அவர்களுடைய உள்ளத்தில் பயமும் கவலையும் அதிகம் இருக்கிறது என்று பொருள். பயத்தாலும் கவலையாலும் இருக்கின்ற உள்ளம் சோம்பிவிடும். சோம்பல் சின்னவற்றிலும் நம்மை சமரசம் செய்யத் தூண்டும்.

இதிலிருந்து விடுபட என்னதான் வழி?

இன்றைய முதல் வாசகம் (1 தெச 4:9-11) இதற்கான விடையைக் கொண்டிருக்கிறது. கடவுளிடமிருந்து அன்பைக் கொடையாகப் பெற்றிருக்கின்ற தெசலோனிக்க நகர் மக்கள் தங்களுடைய அன்பைப் பயன்படுத்தி, தங்களுடைய கைகளைக் கொண்டு நற்செயல்கள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார் பவுல்.

ஒருவேளை அப்பணியாளர் பயம் என்ற உணர்விற்குப் பதிலாக அன்பு என்ற உணர்வை வைத்திருந்தால் தன்னுடைய கைகளையும் கால்களையும் நன்றாகப் பயன்படுத்தியிருப்பார்.

பணியாளரை வர்ணிக்க மூன்று வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார் இயேசு: 'பொல்லாதவன்,' 'சோம்பேறி,' 'பயனற்றவன்.'

விண்ணரசுக்குள் நுழைய ஒருவரைத் தகுதியற்றவர் ஆக்குபவை இப்பண்புகளே.


2 comments:

  1. இயேசு,விண்ணரசு,செல்வந்தர்,பணியாளர்,தாலந்து,பரிணாமக்கொள்கை......எல்லாம் சேர்ந்து ஒரு அவியலாகத் தெரிகிறது எனக்கு.மூன்றாவது பணியாளன் செய்தது சரியா? அவன் மன்னிப்புக்குரியவனா? தெரியவில்லை.ஆனால் அவன் தன் தாலந்தைப் புதைத்து வைத்தது தவறென்றால் அதற்குக் காரணம் அவனில் பயத்தை ஊன்றிய அந்த செல்வந்தர் தானே! விதைக்காத இடத்திலும்,தூவாத இடத்திலும் அறுவடை செய்பவர் என்ற பயத்தை அவனில் உறையச்செய்தவர் அவர்தானே! அவர் தண்டிக்கப்பட வேண்டாமா? அவர் அன்பானவர் என்ற நினைப்பு அவனுக்கிருந்தால் அவனும் கூட முதல் இருவர் போல் செய்திருக்கவும் வாய்ப்புள்ளதே! இதை விட்டு,வட்டிக்கடை இருப்பதை அவன் மறந்து போனான் என்று தந்தை சொல்வது சரியா? வட்டி கொடுப்பதும்,வாங்குவதும் சரியா? கொஞ்சமல்ல....நிறையவே குழப்புகிற பதிவு. ஆனாலும் “பயத்தோடு இணைந்தது சோம்பல்” என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே! சரி..மேலும் குழப்பாமல்...குழம்பாமல் அன்பை மட்டுமே அணிகலனாய் கொள்வோம் விண்ணரசில் நுழைவதற்கு.நிறைவுள்ளவர்களாய் இருப்போம் இன்னும் நிறைவானவைகளைப் பெறுவதற்கு. கொஞ்சம் குழப்பமாக இருப்பினும் வாழும் வாழ்க்கையை நிறைவானதொன்றாக்க வழி சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete