Friday, August 23, 2019

புனித பர்த்தலமேயு

இன்றைய (24 ஆகஸ்ட் 2019) திருநாள்

புனித பர்த்தலமேயு

இன்று நாம் திருத்தூதரான புனித பர்த்தலமேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். இவரை நத்தனியேல் என்று யோவான் நற்செய்தியாளர் அழைக்கிறார். இதுதான் இவருடைய இயற்பெயராக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், 'பர்த்தலமேயு' என்றால் அரமேயத்தில் 'தலமேயுவின் மகன்' என்றுதான் பொருளே தவிர வேறொன்றுமில்லை. 'நத்தனியேல்' என்றால் 'கடவுளின் கொடை' அல்லது 'கடவுள் கொடுத்தார்' என்று பொருள்.

இயேசுவைக் கண்ட பிலிப்பு தன் நண்பரான நத்தனியேலிடம் போய், 'அவரை நாங்கள் கண்டுகொண்டோம்' என்று சொல்ல, அவரோ, 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று தயக்கம் காட்டுகிறார். ஆனால், 'வந்து பாரும்' என்று பிலிப்பு அழைத்தவுடன் இயேசுவைச் சென்று பார்க்கிறார்.

'வந்து பாரும்!'

நமக்கு உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் அல்லது மருத்துவமனையில் இருந்தால், அல்லது நம் வீட்டில் குழந்தை பிறந்திருந்தால், அல்லது ஒருவருக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதாக இருந்தால், அல்லது ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால், அல்லது மேலதிகரியாக இருக்கும் எனக்குக் கீழ் இருக்கும் ஒருவர் தவறு செய்தால், 'வந்து பாரும்' என்று என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். மேலும், 'அவன் வந்து பார்னு நிக்கிறான்' என்ற வாக்கியத்தில். 'வந்து பார்' என்பது நேருக்கு நேராக நிற்கும் துணிச்சலையும் குறிப்பிடுகிறது.

இன்று நாம் 'வந்து பாரும்' என்ற வார்த்தைகளை இரண்டு கோணங்களில் யோசிப்போம்.

அ. பிலிப்பு நத்தனியேலிடம் சொன்னது போல, இயேசுவை 'வந்து பாரும்' என நான் எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்? நான் இயேசுவை மெசியாவாகக் கண்டுணர்கிறேன். அல்லது அவருடைய அனுபவத்தை நான் பெற்றிருக்கிறேன். நான் எத்தனை பேருக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்?

ஆ. நத்தனியேல் பிலிப்பைப் பின்தொடர்ந்தது போல, 'வந்து பாரும்' என்ற அழைப்பு எனக்கு வந்தவுடன் நான் இயேசுவை எத்தனை முறை சென்று பார்த்திருக்கிறேன்? 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற எண்ணத்திலோ, அத்திமரத்தின் கீழ் அமர்ந்து இறைவாக்குகள் படிப்பதோ போதும் என்று எண்ணவில்லை நத்தனியேல். உடனே புறப்படுகின்றார். இந்தத் தயார்நிலையும், இயேசுவை ஏற்றுக்கொள்ளும் கபடற்ற உள்ளமும் என்னிடம் இருக்கிறதா?

'வந்து பாரும்' என்ற அழைப்பை நான் ஏற்றுச் செல்லும்போதெல்லாம் அவரிடம் 'இன்னும் பெரியவற்றை நான் காண்பேன்.'


1 comment:

  1. “ வந்து பாரும்” சொல்பவரின் தொனிக்கேற்ப,சொல்லப்படும் இடத்திற்கேற்ப அர்த்தம் மாறும் ஒரு சொற்றொடர். நமக்குத் தெரிந்த இயேசுவை நமக்கடுத்தவரிடம் கொண்டு சேர்ப்பதும்,’ வந்து பாரும்’ எனும் அழைப்பு எனக்கு வரும்போதெல்லாம் ‘அவரைக்’ காணத் தயார் நிலையில் இருப்பதும், இன்றையப் பதிவு நமக்குக் கற்றுத் தரும் பாடம்.எத்தனை பேருக்கு நான் ந்த்தானியேலாக( கடவுளின் கொடையாக) செயல்படுகிறேன்? என்னை நான் கேட்க வேண்டிய கேள்வி.’ வந்து பாரும்’ என்ற அழைப்பை நான் ஏற்றுச் செல்லும் போதெல்லாம் அவரிடம் ‘ இன்னும் பெரியவற்றை நான் காண்பேன் .’....அருமை! நம்மைச் சுற்றியிருக்கும் பிலிப்புகளுக்காக இறைவனுக்கு நன்றி சொல்வதோடு நாமும் பல ந்த்தானியேல்களை இயேசுவிடம் இட்டுச்செல்லும் பிலிப்புகளாக செயல்படுவோம். ஒரு ‘பிலிப்புக்கு’ இணையாகச் செயல்படும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும் ! நன்றிகளும்!!!

    ReplyDelete