Wednesday, August 21, 2019

காயங்கள்

இன்றைய (22 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (நீத 11:29-39)

காயங்கள்

இன்றைய முதல் வாசகத்திலும் நற்செய்தி வாசகத்திலும் (காண். மத் 22:1-14) இரண்டு கோரமான நிகழ்வுகளை வாசிக்கின்றோம். முதல் வாசகத்தில், இப்தா என்னும் நீதித் தலைவர் தான் அவசரப்பட்டு அளித்த வாக்குறுதி ஒன்றினால் தன் ஒரே மகளையே ஆண்டவருக்குப் பலியாக்குகின்றார். நற்செய்தி வாசகத்தில், அரசனால் திருமண விருந்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பணியாளர்களைக் கொலை செய்கின்றனர்.

முன்னவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதால் கொலை நிகழ்கிறது. பின்னவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றாததால் கொலை நிகழ்கிறது.

ஆக, வார்த்தையைக் காப்பாற்றுவது என்பது எல்லா நேரத்திலும் தேவையான ஒரு மதிப்பீடு அல்ல. சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி மகளையேக் கொல்லத் துணிந்தார் இப்தா. பாவம் அந்தப் பெயரில்லாப் பெண். 'ஆண்டவருக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால் உங்கள் வாக்கின்படியே எனக்குச் செய்யுங்கள்' என்கிறாள் அந்த இளவல்.

இப்தா மக்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும் மகளுக்கு அவளுடைய வெற்றி ஆபத்தாய் முடிகிறது.

ஏன் இப்தா இப்படிச் செய்தார்?

இப்தாவைப் பற்றி விவிலியம் நான்கு அடைமொழிகளைத் தருகிறது: (அ) வலிமை மிக்க போர் வீரர், (ஆ) விலைமாதின் மகன், (இ) சகோதரர்களால் விரட்டப்பட்டவர், மற்றும் (ஈ) வீணர்கள் இவரோடு சேர்ந்து திரிந்தனர். தான் ஒரு விலைமாதின் மகன் என்ற எண்ணமும், தன் தாயைக் கருவுறச் செய்தவன் மேலிருந்த கோபமும், சகோதரர்களால் விரட்டப்பட்ட தனிமையும் இப்தாவின் உள்ளத்தில் நிறைய வன்மத்தையும் அநாதை உணர்வையும் உண்டாக்கியிருக்கலாம். மேலும், 'எனக்காக யாராவது இருக்க மாட்டார்களா?' என்ற ஏக்கம் வீணர்களின் பக்கம் இவரைத் தள்ளிவிடுகிறது. ஆக, குடும்பத்திலும் காயம், சமூக உறவிலும் காயம். எல்லாருக்கும் பயந்து வாழ்கின்ற சூழல். இப்படிப்பட்டவர்கள் எல்லாரையும் பயன்பாட்டுப் பொருளாகத்தான் பார்ப்பார்கள். ஏனெனில், இவர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதால் நிறைய காயத்திற்கு உள்ளாகிவிடுகின்றனர். தாங்கள் பெற்றதை அடுத்தவர்களுக்கு அப்படியே திரும்பக் கொடுக்க நினைத்திருப்பர்.

ஆகையால்தான் தன் ஒரே மகளையும் பலிப்பொருளாகப் பார்க்கிறார். மேலும், அவர் வடிக்கும் கண்ணீர் போலியானது. மேலும், இப்படிப்பட்ட குணம் உடையவர்கள் எல்லாரையும் திருப்திப்படுத்த எண்ணுவர். அதுவும் ஆபத்தானது. தானே உறுதித்தன்மை இல்லாமல் இருந்தாலும் தன் கடவுளையும் தன் ஊர் மக்களையும் திருப்திப்படுத்த நினைக்கிறார்.

ஆக, ஒருவர் தன்னுடைய மனத்தின் காயங்களைச் சரியாகக் கையாளவில்லை என்றால், தன்னுடைய சேர்க்கையின்மேல் கவனமாக இல்லை என்றால், அவருடைய போர்க்குணம் மூர்க்க குணமாக மாறி, எல்லாரையும் பயன்பாட்டுப் பொருளாகப் பார்க்கும் நிலைக்கு ஆளாக்கிவிடும்.

இன்று அருள்பணியாளர்களின் பாலியல் பிறழ்வு பற்றிப் பேசும் போது, அவர்களுடைய மணத்துறவு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுகிறது. ஏனெனில், தனக்கு ஒரு பெண் அல்லது ஆண் குழந்தை பிறந்து இருந்தால் அருள்பணியாளருக்கு இதன் வலி தெரியும். தன் குழந்தைக்கு யாரும் செய்ய விரும்பாத ஒன்றை அவருக்கு யாரும் செய்ய மாட்டார். இல்லையா?

இன்றைய நற்செய்தியில் நாம் காணும் விருந்தினர்களுக்கும் மனக்காயங்கள் இருக்கின்றன.

அரசன் விருந்திற்கு அழைக்கிறான். அதைவிட என்ன பெரிய பாக்கியம் இருக்க வேண்டும்? அல்லது அழைப்பு வந்தபோதே ஏற்க மறுத்திருக்கலாம். ஏன், அழைப்பை ஏற்றுவிட்டு அப்புறம், 'வர மாட்டேன்' என்று சொல்ல வேண்டும்? அரசன் மேல் அப்படி என்ன கோபம்? அரசனின் கோபத்தை ஏன் அவர்கள் அப்பாவி பணியாளர்கள்மேல் காட்ட வேண்டும்? அல்லது இப்படிச் செய்வதால் அரசனின் கோபத்தை இன்னும் தூண்ட நினைத்தார்களா?

ஆனால், தங்கள் கோபத்தால் தாங்களே அழிந்துபோகின்றனர்.

புத்தரிடம் ஒருமுறை, 'கோபத்திற்கு என்ன தண்டனை?' என்று கேட்கப்பட்டபோது, 'ஒருவர் கொள்ளும் கோபமே அவருக்குத் தண்டனை. ஏனெனில் அது அவரை அழித்துவிடும்' என்கிறார்.

இன்றைய நாளில் நம்முடைய காயங்களை எண்ணிப் பார்க்கலாம்.

இப்தாவின் கோபம், தனிமை, அநாதை உணர்வு, கூடா நட்பு, பணியாளர்களின் கோபம் நம்மிடமும் இருந்தால் அவற்றைச் சரி செய்ய முற்படலாம்.

இல்லையென்றால், நாமும் நம் உறவுகளும் அன்றாடம் பலியிடப்பட வேண்டிய சூழல் வந்துவிடும்.

காயங்களுக்கு மருந்திடுபவர் கடவுளே.

1 comment:

  1. இன்றைய இரு வாசகங்களும் சொல்வது ஒரே விஷயம் தான்.முன்னது நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ....தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற பெறற மகளையே பலிகொடுத்த இப்தா பற்றிக்கூறுகிறதெனில்,பின்னது அரசனுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற இயலாத மக்களின் அழிவு பற்றிக்கூறுகிறது.இரு நிகழ்வுகளும் கூறுவது ஒன்றுதான்.....கோபத்தின் உச்சம் அழிவு.கோபத்தால் ஏற்பட்ட இரணங்களை...அது நம்முடையதாயினும்,பிறருடையதாயினும் ஆற்ற முற்படவேண்டும்.ஒருவேளை அது நம்மால் இயலாமல் போனால் காயங்கள் புரையோடிப்போகும் நிலை ஏற்படலாம்.அம்மாதிரி நேரங்களில் நமக்கு மருந்திட வேண்டியவர் இறைவனே! காயங்கள் சிறிதா,பெரிதா என ஆராய்ச்சி செய்வதை விட்டு அவற்றிற்கான காரணங்களை அறிய முற்படுவோம்.யாருடைய காயங்களுக்கும் நாம் காரணமில்லாமல் பார்த்துக்கொள்வோம்.எளிமையான புரிதலுக்குக் கொஞ்சம் அப்பாற்பட்ட பதிவுதான்.ஆனாலும் சொல்லும் விஷயம் அன்றாட வாழ்க்கைக்கு மிக அவசியமானதே! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete