Thursday, August 8, 2019

உலகம் முழுவதையும்

இன்றைய (9 ஆகஸ்ட் 2019) நற்செய்தி (மத் 16:24-28)

உலகம் முழுவதையும்

'ஒருவர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவருடைய ஆன்மாவை -வாழ்வை அவர் இழந்துவிட்டால் அதனால் அவருக்கு என்ன பயன்? தம் ஆன்மாவுக்கு - வாழ்வுக்கு ஈடாக அவர் எதைக் கொடுப்பார்?'

பிரான்சிஸ் சேவியர் தன்னுடைய வகுப்பறையில் பேராசிரியராக உரையாற்றிவிட்டு வெளியே வந்தபோது, இனிகோ சொன்ன மேற்காணும் நற்செய்தி வார்த்தைகள் அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றிப்போடுகின்றது.

உலகில் உள்ள எல்லாமும் நமக்கு வாழ்வு தந்துவிடுவதில்லை.

காலையில் நன்றாக உண்கிறோம். மதிய நேரத்தில் பசித்துவிடுகிறது.

காலையில் புதிய ஆடை அணிகிறோம். மாலையில் அழுக்காகிவிடுகிறது.

காலையில் புதிய புத்தகம் ஒன்றை வாசித்து அறிவை வளர்க்கிறோம். மாலையில் அதைவிட புதிய கருத்து ஒன்று வந்துவிடுகிறது. அல்லது நாம் வாசித்தது பழையதாகிவிடுகிறது.

காலையில் நம் உறவினர் அல்லது நண்பரைச் சந்திக்கின்றோம். எவ்வளவோ பேசுகின்றோம், சிரிக்கின்றோம். ஆனால், மாலையில் ஏதோ ஒரு வெறுமை நம்மை கவ்விக்கொள்கின்றது.

ஆக, உடல் சார், மூளைசார், உள்ளம்சார் எதுவும் நமக்கு நிறைவைத் தருவதில்லை. அல்லது அவை நிறைவைத் தருவன போலத் தோன்றினாலும் விரைவிலேயே அவை சலிப்பையும் வெறுமையையும் தந்துவிடுகின்றன.

இம்மூன்றையும் கடந்த ஆன்மா சார் ஒன்றை இன்றைய நற்செய்தி நமக்கு முன்வைக்கின்றது.

'ஆன்மா சார்' அல்லது 'கடவுள் சார்' நிலையில் நிறைவு மட்டுமே உண்டு. இதை அடைவதற்குத் தொடர் முயற்சி தேவை. அந்த முயற்சியின் முதல் படி இழப்பது.

மேற்காணும் மூன்று நிலையிலும் நாம் கூட்டுகிறோம் அல்லது சேர்க்கிறோம். உணவை, உடையை, அறிவை, உறவைக் கூட்டிக்கொண்டே போகிறோம். ஆனால், கூட்டுவதில் அல்ல குறைப்பதில்தான் வாழ்க்கை இருக்கிறது.

வாழ்க்கை இதை நமக்கு நன்றாக உணர்த்துகிறது. குழந்தையாய் இவ்வுலகிற்கு வந்தபோது வெறுமையாய் வருகிறோம். ஏனெனில் இறைமையிலிருந்து நாம் வருகிறோம். அப்புறம் வரிசையாகச் சேர்த்துக்கொண்டே போகிறோம். உடை, உணவு, இருப்பிடம், படிப்பு, நண்பர்கள், உறவினர்கள் என கூடிக்கொண்டே போகிறது. இறுதியில், உணவு ஒவ்வாமை, ஒரு கட்டில் அளவு இடம், ஒரு வேளை உணவு, மிகக் குறைவான உடை, மிகக்; குறைவான நண்பர்கள், உறுப்புகள் செயல் இழப்பு என இறுதியில் இறைமையாகவே மாறிவிடுகிறோம்.

இந்த இறுதியை முதலிலேயே மனத்தில் வைத்து வாழ்பவர்கள் தங்கள் ஆன்மாவை இழக்கமாட்டார்கள். இவர்கள் வாழ்வின் முக்கியமானவற்றின்மீது மட்டுமே அக்கறை காட்டுவார்கள். முக்கியமானவற்றை முதன்மைப்படுத்துதலே நாம் சுமக்கும் சிலுவை.

1 comment:

  1. தந்தையின் வார்த்தைகளில் ஒரு ‘ இறைசார்’, ‘ஆன்மாசார்’ பதிவாகவே இதைப்பார்க்கிறேன். தந்தையின் வார்த்தைகள் ‘மனமுதிர்ச்சியை’ முன்னிலைப்படுத்துகின்றன. வெறுமையாய் உதித்தலும்,அதே வெறுமையுடனே இவ்வாழ்வை விட்டு மறைதலும் நிதர்சனமெனில்,நிரந்தரமெனில் இடையில் எதற்காக நிரந்தரமற்றவைக்காகப் போராடுகிறோம்? வாழ்வின்இறுதியை முக்கியப்படுத்துவதே...முன்னிலைப்படுத்துவதே நாம் சுமக்க வேண்டிய ‘சிலுவை’ எனில் அதை முதலிலிருந்தே சுமக்கப் பழகுவது விவேகமில்லையா? கேட்காமல் கேட்கிறார் தந்தை.நம் பதில் என்னவென யோசிப்போம்.தங்களின் சுமைகளைச் சிலுவையாக எண்ணிச் சுமந்த இனிகோ மற்றும் பிரான்சிஸ் சேவியர் போன்றவர்கள் இறந்தபின்னும் வாழ்கிறார்கள். ஆகவே சுமைகளைக் குறைப்போம்; சிலுவையை சும்ப்போம்..’ நித்தியத்தை’ முன்வைக்கும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete