Thursday, August 22, 2019

வாற்கோதுமை அறுவடை

இன்றைய (23 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (ரூத் 1:1,3-6,14-16,22)

வாற்கோதுமை அறுவடை

'அப்பத்தின் வீடு' என்றழைக்கப்படும் பெத்லகேமில் கொடிய பஞ்சம் உண்டாகிறது. பஞ்சம் பிழைக்க ஒரு குடும்பம் புலம்பெயர்கிறது. போன இடத்தில் அடுத்தடுத்த இழப்புக்கள். கணவர் எலிமலேக்கும் அவருடைய மகன்களும் இறக்க, மனைவி நகோமியும் மருமகள்கள் ஓர்பாவும் ரூத்தும் மிஞ்சுகின்றனர். ஆண்களைவிட பெண்கள் இழப்புக்களைத் தாங்கக் கூடியவர்கள் என்பது இங்கே தெளிவாகிறது. நகோமி தன் சொந்த ஊர் திரும்பி விழைகின்றார். இதற்கிடையில் மருமகள்களை அவரவர் தந்தையரின் இல்லத்திற்கு அனுப்புகின்றார். ஓர்பா தன் பிறந்தகம் செல்ல, ரூத்து நகோமியைப் பற்றிக் கொள்கிறார்.

'நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன். உமது இல்லமே எனது இல்லம். உம்முடைய இனமே எனது இனம். உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்' என்று நகோமியிடம் ரூத்து சொல்லும் வார்த்தைகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இவர்கள் பெத்லகேம் நகரை அடையும்போது வாற்கோதுமை அறுவடை தொடங்குகிறது.

பஞ்சத்தால் வழியனுப்பப்பட்டவர்கள் அறுவடையால் வரவேற்கப்படுகின்றனர்.

வாழ்க்கை சற்றென்று மாறிவிடுகின்றது.

நமக்குத் தேவையானதெல்லாம் பொறுமையே.

கணவனோடும் மகன்களோடும் சென்ற நகோமி மருமகளோடு மட்டுமே திரும்பி வருகிறாள். இழப்புக்களை தூர நாட்டில் விட்டுவிட்டாள். இனி அவள் கைகள் வாற்கோதுமையாலும் விரைவில் குழந்தையாலும் நிரப்பப்படும்.

வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களில் வெகு சாதாரணமாக நடந்து செல்கின்றனர் இவ்விரு கைம்பெண்கள்.

இழப்புக்களால் இவர்கள் வாடிவிடவும் இல்லை.

அறுவடையால் இவர்கள் ஆனந்தப்படவும் இல்லை.

நம்முடைய உணர்வுகளால் மற்றும் உணர்ச்சிகளால் ஆட்கொள்ளப்படாமல் அல்லது அலைக்கழிக்கப்படாமல் வாழக் கற்றுக்கொள்வது அவசியம்.

இந்த மனப்பக்குவம் வர ஒரு மந்திரத்தைச் சொல்லித் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம் (காண். மத் 22:34-40): 'கடவுளை அன்பு செய்,' 'உன்னை அன்பு செய்,' 'பிறரை அன்பு செய்.' என்னை நான் அன்பு செய்வதன் வேர் கடவுளாகவும், விழுது பிறராகவும் இருத்தல் வேண்டும். கடவுளுக்கும் பிறருக்கும் மையமாக, வேருக்கும் விழுதுக்கும் இடையே தண்டாக இருக்க வேண்டியது நான்தான். கடவுளும், பிறரும் கடந்து போவர். இறுதிவரை என்னோடு இருப்பது நான் மட்டுமே.

ஆக, நான் வெறுங்கையோடும் வாற்கோதுமையோடும் நடக்க வேண்டும் என்ற எதார்த்தம் எனக்குப் புரிந்தால் அதுவே தன்னன்பு, தன்மதிப்பு, தன்னம்பிக்கை.

1 comment:

  1. ஒவ்வொரு முறையும் தந்தை சிலாகிக்கும் இந்த மாமியார்- மருமகள் குறித்த விஷயம் என்னை மகிழ்ச்சியாலும்,வியப்பாலும் ஒரு சேர நிரப்பும்.இன்றும் அப்படித்தான். காரணம் இவர்களிடையே இருந்த நெருக்கம் மட்டுமல்ல....”“இழப்புக்களால் இவர்கள் வாடிவிடவும் இல்லை; அறுவடையால் இவர்கள் ஆனந்தப்படவுமில்லை.” வாழ்க்கை இவர்களை எப்படிப் புரட்டிப்போட்டாலும் தங்களை எப்பொழுதும் சீராக வைத்துக்கொள்ளும் இவர்களின் மனநிலையே! இதற்குக் காரணமாகத் தந்தை சொல்கிறார்...”உணர்வுகளாலும்,உணர்ச்சிகளாலும் ஆட்கொள்ளப்படாமல் வாழக்கற்றுக்கொள்வதே!” என்று. இந்த வாழ்தல் எப்படி என்றும் அவரே சொல்கிறார்...... “இறைவனை வேராகவும்,நம்மைச்சுற்றி இருப்போரை விழுதுகளாகவும், இவர்களுக்கிடையே தொடர்பு ஏற்படுத்தும் தண்டாக என்னையும் உணர்வதும், மற்ற இருவரும் கடந்து போகும் நிலையிலும், என்னோடு இருப்பது நான் மட்டுமே என்ற புரிதலுமே” என்கிறார். என்னை வெறுங்கையோடு நடக்க வைக்கும் இறைவன்,என் கைகளை வாற்கோதுமைகளால் நிரப்பவும் முடியும் எனும் நம்பிக்கை, என்னில் தன்னன்பு,தன் மதிப்பு,தன்னம்பிக்கை இவற்றை வளர்க்கட்டும்.அழகான,நேர்மறையான உணர்வுகளைத் தூண்டும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றியும்!!!

    ReplyDelete