Monday, August 26, 2019

தாய் தன் குழந்தைகளை

இன்றைய (27 ஆகஸ்ட் 2019) முதல் வாசகம் (1 தெச 2:1-8)

தாய் தன் குழந்தைகளை

கடந்த ஆண்டு எங்கள் இறையியல் கல்லூரியில் 'விவிலியத்தில் மறைத்தூதுப்பணி' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், 'திருத்தூதர் பவுல் திருமணம் செய்தவரா?' என்ற கேள்வி ஒருவரால் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அருள்பணியாளர், 'திருமணம் செய்தவர் என்பதற்கும் சில சான்றுகள் உள்ளன. திருமணம் செய்யாதவர் என்பதற்கும் சில சான்றுகள்' உள்ளன என்று சொன்னார். பவுலின் தனிப்பட்ட வாழ்வு பற்றி நமக்கு ஒன்றும் தெரியாததால் நாம் இதை அறுதியிட்டுச் சொல்ல முடியவில்லை.

இன்றைய முதல் வாசகத்தில் தன்னுடைய பணியைப் பற்றி எழுதுகின்ற பவுல், 'தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பது போல கனிவுடன் நடந்துகொண்டோம்' என்கிறார். இந்த வரியைப் பார்க்கும்போது பவுல் தன்னுடைய தாயை மனத்தில் கொண்டிருந்தாரா அல்லது தன்னுடைய மனைவியை மனத்தில் கொண்டிருந்தாரா அல்லது பொதுவான ஒரு தாயை மனத்தில் கொண்டிருந்தாரா என்று தெரியவில்லை. வழக்கமாக தாய்மையோடு அதிகமாக இணைக்கப்படும் மதிப்பீடு தியாகம். ஆனால், பவுல் சற்றே மாறுபட்டு, 'கனிவு' என்பதே 'தாய்மை' என்கிறார்.

கனிவு என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

இந்த வரிக்கு முன்பாக, பவுல், 'மனிதர் தரும் பெருமையை உங்களிடமிருந்தோ மற்றவர்களிடமிருந்தோ நாங்கள் தேடவில்லை' என்கிறார். பெருமை கொள்கின்ற உள்ளம் தன்னையே உயர்த்தி நிற்கும். ஆனால், கனிவு கொள்கிற உள்ளம் தாழ்ந்து நிற்கும். இதுதான் தாய்மை. கனிந்து தரையில் விழப்போகும் பழம் தாழ்ந்தே இருக்கும். தன்னுடைய குழந்தையை நோக்கித் தாழ்ந்து பணிகின்ற தாய்தான் அதற்கு வழிகாட்ட முடியும், அதை அள்ளி அணைத்துக்கொள்ள, அதன் அழுகையைத் தணித்துக்கொள்ள முடியும்.

தன்னுடைய நற்செய்திப் பணியின் முக்கிய மதிப்பீடாக கனிவை முன்வைக்கிறார் பவுல். இன்று நான் செய்கின்ற எல்லாப் பணிகளிலும் கனிவு தெரிகிறதா? அல்லது பெருமை தெரிகிறதா? கனிவு தெரிந்தால் மட்டுமே பணி சிறக்க முடியும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 23:23-26) மறைநூல் அறிஞர் மற்றும் பரிசேயரைத் தொடர்ந்து சாடுகின்ற பவுல், அவர்கள் சமயத்தின் முக்கியக்கூறான கனிவை மறந்துவிட்டு, வீணான பாரம்பரியங்களையும், தூய்மைச் சடங்கையும் பற்றிக்கொண்டிருப்பதைச் சாடுகின்றார்.

இன்று நாம் கொண்டாடும் புனித மோனிக்கா, புனித அகுஸ்தினாரின் தாய், கனிவிற்கு நல்ல எடுத்துக்காட்டு. தன் வயிற்றின் கனியாகிய அகுஸ்தின் கனியும் வரை இவர் கண்ணீரால் கரைந்தார். இவரின் கண்ணீரின் சூட்டில் அகுஸ்தின் என்னும் காய் கனிந்தது. இவர் தன் மகனைப் பார்த்துக் கனிவுடன் குணிந்ததால் தான், அந்த மகன் கடவுளைப் பார்த்து துணிவுடன் எழுந்தான்.

இன்று நான் என் பணியிலும், வாழ்விலும் கொண்டிருக்க வேண்டியது இந்த ஒரு மதிப்பீடே: கனிவு.

என் சொல், செயல், எதிர்நோக்கு அனைத்திலும் இது பிரதிபலிக்க வேண்டும்.

நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் இந்த மோனிக்கா போல ஏதோ ஒன்றிற்காய் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கின்றனர். அப்படி இருக்க, நான் இவரின் கண்ணீரைக் கூட்டலாமா?

கனிவில் வளர என்ன செய்ய வேண்டும்?

அ. யாரையும் தீர்ப்பிடக் கூடாது. தீர்ப்பிடும் மனம் தன்னையே தாழ்த்தாது. தனக்கென்று ஒரு அளவுகோல் வைத்துக்கொண்டு எல்லாரையும் அதைக் கொண்டு மதிப்பிடும். மோனிக்கா ஒருவேளை இப்படிப்பட்ட அளவுகோலை வைத்திருந்தால், தன் மகனைவிட தான் புனிதமானவர், தன் மகன் சாபத்திற்குரியவர் என்று அவரை அவமானப்படுத்துவதில் கருத்தாயிருந்திருப்பார். தன் மகனுடைய பிறழ்வான உணர்வுகள், நல்ல படிப்பு, நல்ல அறிவு, நல்ல நட்பு வட்டம் என அனைத்தையும் ஒன்றுபோல எடுத்துக்கொள்கின்றார். தன் மகனின் படிப்பிற்காக அவரை உச்சி முகரவும் இல்லை. தன் மகன் தவறான உறவில் இருந்ததற்கா எட்டி உதைக்கவும் இல்லை. தீர்ப்பிடாத உள்ளம்தான் இப்படிக் கனிவோடு இருக்க முடியும்.

ஆ. நான்தான் மையம் என்பதை விட்டு நகர வேண்டும். என்னைப் போலவே அல்லது என்னைவிட நிறைய மையங்கள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தாய் ஒருபோதும் தன் குழந்தையைவிட அதிகம் தெரிந்தவள் என்று காட்டுவதே இல்லை. தன் மகள் வரையும் 'அ' என்ற எழுத்தை அப்படிப் பாராட்டுகிறாள். ஏன்? அவள் தன் மையம் கொண்டிருப்பதில்லை. அவளின் மையம் குழந்தையே.

இ. சட்டதிட்டங்கள், வரைமுறைகள், வரையறைகள் அனைத்தையும் விட்டு வெளியேற வேண்டும். இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட நிலை வரைதான் அன்றி இறுதி வரை அவை வருவதில்லை. 'நீங்கள் நிறைய நண்பர்கள் வைத்திருக்கலாம். சொத்து சேர்த்திருக்கலாம். பெரிய வேலையில் இருக்கலாம். ஆனால் எத்தனை பேர் உங்கள் இறுதி ஊர்வலத்திற்கு வருகிறார்கள் என்பது அன்றைய நாளின் தட்பவெப்ப நிலையைப் பொறுத்தே (க்ளைமேட்டை) பொறுத்தே' என்பது அமெரிக்காவில் நான் லிஃப்ட் ஒன்றில் வாசித்த வாசகம். ஆக, கனிவு கொண்டிருப்பவர் தன் வாழ்க்கையின் வரையறையைத் தானே நிர்ணயம் செய்வார்.

கனிவு நோக்கி நாம் நகர மோனிக்கா நமக்கு உதவி செய்வாராக!

1 comment:

  1. தூய பவுலடியார் திருமணமானவரா,ஆகாதவரா.... இதையெல்லாம் தாண்டி இவர் கொண்டிருந்த குணாதிசயங்களே இன்று நம்மை அவரை ஏறெடுத்துப் பார்க்க வைக்கும் விஷயங்கள்.தாய்மை,தியாகம், கனிவு இந்த வார்த்தைகள் பவுலைக் குறிப்பிட்டாலும் சரி,ஒரு தாயைக் குறிப்பிட்டாலும் சரி...இவ்வார்த்தைகளுக்கிடையே அதிக தூரம் இருப்பதாகத் தெரியவில்லை.ஆகவே தான் ‘கனிவின்’ மொத்த உருவமான புனித மோனிக்கா பற்றி தந்தையால் இத்தனை அழகாக விமரிசிக்க முடிகிறது.” தன் வயிற்றின் கனியான.......அந்த மகன் துணிவுடன் எழுந்தான்.”, “ தன் மகனின் படிப்பிற்காக அவரை.......அவர் தவறான உறவில் இருந்ததற்காக அவரை எட்டி உதைக்கவும் இல்லை.”,. இந்தத் தாயைக்குறித்த தந்தையின் அனைத்து வரிகளுமே நம் கண்களைக் கசிய வைப்பவை. இன்று நாம் கொண்டாடும் இந்த மோனிகா கலங்கி நிற்கும் அனைத்துத் தாய்மார்களுக்கும் கலங்கறை விளக்கம் போனறவள். ஒரு தாயின் கண்ணீரின் வலிமையை எனக்குப் புரிய வைத்தவள்.இத்தனை தகுதிகளுக்கும் சொந்தக்காரரான இந்த தாய், நாம் யாரையும் தீர்ப்பிடாமலிருக்கவும்,நம்மை விட நிறைய மையங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவும்,கனிவு நோக்கி நம் ஒவ்வொருவரையும் நகர்த்தவும் நமக்கு உதவி செய்வாராக! மோனிகா குறித்து தந்தை பாடியுள்ள மனமுருகும்,அழகான கவிதைக்கு என் நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள். தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் கூட என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete