Thursday, January 28, 2016

தனிஒருவன் தாவீது

'தனிஒருவன்' திரைப்படத்தில் சித்தார்த்-அபிமன்யுவிடம் (அர்விந்சாமி) மித்ரன் (ஜெயம் ரவி) பரிசு வாங்கும்போது, தன் கையில் கையுறை அணிந்திருப்பார். அந்த காட்சியில் இந்த கையுறை பெரிய விஷயமாக தெரியாது. ஆனால், இறுதிக்காட்சிளை விறுவிறுப்பாக்குவது, இந்த கையுறை அணிந்த காட்சிதான்.

திரைப்படங்களிலும், கதைகளிலும் கொடுக்கப்படும் ஒவ்வொரு டீடெய்லும் கதையின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானவை.

ஆகையால்தான், சின்னச் சின்ன குறிப்புகள்கூட சின்னவை அல்ல 'details are not in detail' என்பார்கள்.

இந்தக் கூற்றை விவிலிய நிகழ்வுகளிலும் காணலாம்.

நாளைய முதல்வாசகம் (2 சாமு 11:1-4, 5-10, 13-17), முதல் ஏற்பாட்டின் கிலுகிலுப்பான பகுதிகளில் ஒன்று. நாம் அனைவரும் அடிக்கடி கேட்ட ஒன்றுதான்: தாவீது-பத்சேபா உறவு.

இதில் நான் இதுவரை கவனித்திராத இரண்டு சின்ன விஷயங்களை நான் இன்று பகிர்ந்து கொள்கிறேன்:

அ. 'தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார்.'

இதில், அவளை வரவழைத்தார், உடலுறவு கொண்டார் என வேகமாக கதையை நகர்த்தியிருக்கலாம் ஆசிரியர். எதற்காக ஒரு இன்-பிட்வின் டீடெய்ல் - அவள் மாதவிலக்கு முடிந்து... - கொடுக்கிறார்?

இரண்டு காரணங்கள்?

ஒன்று, இப்போது தாவீதின் உறவினால் ஏற்படும் கர்ப்பத்திற்கு காரணம் தாவீது மட்டுமே.

இரண்டு, கொஞ்ச நேரத்தில் இங்கே அழைத்துவரப்படும் உரியா தன் வீடு செல்லவும், தன் மனைவியைத் தழுவவும் மறுப்பார். ஆக, உரியாவினால் விழைந்த கர்ப்பம் எனவும் சொல்லிவிட முடியாது.

தாவீது இப்போது பத்சேபாவினாலும், உரியாவாலும் கட்டம் கட்டப்படுகிறார். ஒருவேளை 'மாதவிலக்கு' பற்றிய அந்த வரி இல்லையென வைத்துக்கொள்வோம். வாசகர்கள் பத்சேபா வேறு ஆணிடம் அல்லது தன் கணவன் போருக்கு செல்லுமுன் நிகழ்ந்த உறவால் கர்ப்பம் தரித்திரிக்கலாம் என்று ஐயம் கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆக, தாவீது மட்டுமே இந்த நிகழ்வுக்கு முழுக்காரணம் என்பதைக் காட்ட ஆசிரியர் இந்த தேவையற்ற, ஆனால் முக்கியமான டீடெய்ல் கொடுக்கிறார்.

ஆ. தாவீது உரியாவிடம், 'உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்!' என்றார்.
... ...
உரியா தாவீதிடம், 'நான் மட்டும் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்தும், என் மனைவியோடு உறவுகொண்டும் இருப்பேனா! உம் மேலும், உம் உயிர்மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்!'

'பாதங்களைக் கழுவிக்கொள்' என்பதன் அர்த்தம் 'உடலுறவு கொள்' என்பது. 'பாதம்' என்பது 'ஆண்குறி' என்பதன் மங்கலச்சொல் (euphemism). 'கழுவிக்கொள்' என்பது இன்னும் செக்ஸியாக இருப்பதால் நானே சென்சார் செய்துகொள்கிறேன்.

மேற்காணும் உரையாடலில் ஆணையிடும் பகுதியைக் கவனித்தீர்களா?

வழக்கமாக, ஆணையிடும் பகுதியில், 'உம்மேலும், கடவுள்மேலும் ஆணை' (1 சாமு 26:10, 2 அர 4:30, எரே 5:2) என்றுதான் இருக்கும். ஆனால், இங்கே ஆசிரியர் கொஞ்சம் மாற்றி, 'உம்மேலும், உம் உயிர்மேலும்' என எழுதுகிறார்.

இந்த 'உயிர்' என்ற வார்த்தைதான் தாவீதை அவரின் அடுத்த செயலான கொலைக்கு தூண்டுகிறது. 'உயிர் னா சொல்ற! உன் உயிரையே எடுக்கிறேன்!' என உரியாவைக் கொல்வதற்கு திட்டம் வகுத்து, அதை உரியாவிடமே கொடுத்தனுப்புகிறார்.

ஆக, சின்னச் சின்ன குறிப்புகள்கூட சின்னவை அல்ல!


2 comments:

  1. "One man's flesh is another man's meat" ....நாம் கேட்டிருப்போம்.இன்றையப் பதிவில் வரும் விஷயங்கள் சிலருக்குக் கிளுகிளுப்பாக இருப்பினும் இன்னும் சிலரை முகம் சுளிக்க வைக்கும்.அது என்னவோ தெரியவில்லை.....இந்த முதல் ஏற்பாட்டில் வரும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு போன்ற விஷயங்கள் மட்டும் எப்படி நியாயப்படுத்தப்படுகின்றன எனத் தெரியவில்லை. தாவீது செய்தாலும் சரி,நம்மூர் தாமஸ் செய்தாலும் சரி...குற்றம் குற்றம் தானே! இதில் குறிப்புகளைப் பற்றி யாருக்குக் கவலை? தந்தைக்கு என் மேல் கண்டிப்பாக்க் கோபம் வரும்....மன்னித்துக் கொள்ளுங்கள். ஒருவேளை இன்றையப் பதிவை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ!சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்?!

    ReplyDelete
  2. Dear Father,Very good.Congrats!!!

    ReplyDelete