Friday, January 15, 2016

அன்போடு வேலை

கழுதையைத் தேடிச் சென்றவர் அரசராக வீடு திரும்புகிறார்.

நாளைய முதல் வாசகத்தை இப்படித்தான் சுருக்கி சொல்ல வேண்டும்.

இஸ்ரயேல் சமூகத்தின் முதல் அரசன் தேர்ந்தெடுக்கப்படும் விதம் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.

முதலில் சவுலையும் அவரின் உடல் அழகையும் வர்ணிக்கும் ஆசிரியர் தொடர்ந்து அவரின் குடும்பம் பற்றியும் குறிப்பிடுகின்றார்.

சவுலின் அப்பா வளர்த்த கழுதை காணாமல் போய்விடுகிறது.

3000 வருடங்களுக்கு முன் கழுதை காணாமல் போவது என்பது, இன்று நாம் வைத்திருக்கும் ஆடி அல்லது ரோல்ஸ் ராய்ஸ் அல்லது பெராரி அல்லது அல்லது ஜக்வார் காணாமல்போவது போல. ஆகையால்தான் அதைத் தேடும்படி தன் பணியாளர்களை மட்டுமல்லாமல் தன் மகனையும் உடன் அனுப்புகிறார் சவுலின் தந்தை.

அவர்கள் தேடுகிறார்கள். தேடுகிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சவுல், 'போனால் போகட்டும்' என திரும்பிவிட நினைக்கின்றார்.

ஆனால் அவரின் பணியாளர்தான், 'இல்லை. இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாம்!' என்கிறார்.
பாதியில் திரும்பிவிட நினைக்கும் சவுலின் இந்தப் போக்கு அவரின் அரசாட்சிக்கு உருவகமாகக் கூட இருக்கலாம். நன்றாக ஆட்சி செய்து கொண்டிருந்த சவுல் பாதியிலேயே கெட்டவனாகிவிடுகிறார்.

செய்யும் வேலையை - கழுதையை தேடுவதோ அல்லது அரசனாக இருப்பதோ - முழுமையாகவும், இனிமையாகவும் செய்ய அழைக்கின்றது நாளைய முதல் வாசகம்.

இன்று, நாளை, மறுநாள் என நாம் திருநாட்கள் எடுத்து சூரியனுக்கு, இயற்கைக்கு, மாடுகளுக்கு என நம் உழைப்புக்கு உடன் நிற்கும் அனைத்திற்கும், அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

இந்த நாளில் வேலை பற்றிய கலீல் கிப்ரானின் பாடல் ஒன்றை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்:

'அன்போடு செய்யப்படாத எந்த வேலையும் வெறுமையானதே.
அன்போடு வேலை செய்வதென்றால் என்ன?
உன் இதயத்திலிருந்து வரும் நார்களை எடுத்து,
உன் அன்பிற்குரியவர் அதை அணிவார் என்று அவருக்கு துணி நெய்வதே அது.
உன் அன்பிற்குரியவர் அங்கே குடிபெயர்வார் என வீடு கட்டுவது அது.
அன்பில்லாமல், வேண்டா-வெறுப்பாக வேலை செய்வதை விட,
கோவிலின் வெளியே அமர்ந்து, தன் வேலையை மகிழ்ந்து செய்யும் ஒருவரிடம் இரத்தல் நலம்.
நீ அன்பில்லாமல் சமைக்கும் ரொட்டி அடுத்தவரின் அரைப்பசியைத்தான் நிரப்பும்.
நீ பகைமையோடு தயாரிக்கும் திராட்சை ரசம் விஷம் போன்றது.
அன்பின் காணக்கூடிய வெளிப்பாடே வேலை.'


3 comments:

  1. அழகான பதிவு. உழைப்பின் மகிமையை உணரவைக்கும் இந்நாட்களில் தரப்பட்ட சரியான, அர்த்தமுள்ள பதிவு. ஒருவர் செய்யும் வேலையை எளிதாக்குவதோ, இடறாக்குவதோ அவரது மன ஓட்டமே.வேலையின் நோக்கத்தை நினைவில் கொண்டால் எந்த வேலையும் எளிமையாகிவிடும்.அப்படி இல்லாதவர்களுக்காகச் சொல்லப்பட்டதுதான் ' செத்தவன் கையில வெத்தலயக் கொடுத்தாப்ல' என்ற சொல்லாடல்." நம் அன்பிற்குரியவர் அணிவார் என்று துணி நெய்வதும்,நம் அன்பிற்குரியவர் குடி பெயர்வார் என்று வீடு கட்டுவதும்" ...அழகான வரிகள்! இந்த கலீல் கிப்ரான் எதைத்தான் விட்டுவைத்தார் என்று தெரியவில்லை.தந்தையிடம் ஒரு விண்ணப்பம்.தங்களின் படிப்பெல்லாம் முடிந்தபின் இந்த 'கலீல் கிப்ரானை' கொஞ்சம் தமிழில் மொழி பெயர்க்க முயற்சி செய்யுங்களேன்.நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Dear Mrs. Philomena Arockiasamy:
    Thank you for your valuable comments on Fr Yesu's thoughts.
    Your suggestion for translation is most welcome. Meanwhile there are already TAMIL TRANSLATOINS of KG.
    Please google-search...
    There is one by Mr. S. Jeyabarathan, a Madurai Desi, Engineer by profession. He lives currently in Canada...

    ReplyDelete
  3. Dear Father,You have written well regarding I Love Work.A great appreciation to you.It taught me a lesson how to love the work.

    ReplyDelete