Sunday, January 24, 2016

கண்காணாதவை

கிறிஸ்து பிறப்பு கால திருப்பலி தொடக்கவுரையில் வரும் ஆறு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை:

'ஏனெனில் வார்த்தை மனிதரானார் என்னும்
மறையுண்மையின் வாயிலாக உமது மாட்சியின் பேரொளி
எங்கள் மனக் கண்களுக்கு புதிதாய் ஒளி வீசியது.
எனவே, நாங்கள் கடவுளைக் கண்கூடாய்க் காண்கிறோம்.
அவர் வழியாகவே கண்காணாதவைமீதுள்ள அன்பு
எங்களை ஆட்கொள்கிறது!'

அதாவது,

கண்காணாத கடவுளை நாம் கண்கூடாகக் கண்டதால்
கண்காணாதவை மீதுள்ள பற்று அதிகமாகிறது!

என்னே அழகிய வரிகள்!

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நம்ம அகுஸ்தினார்தான்!

நாளைய இரண்டாம் வாசகத்தில் (1 கொரிந்தியர் 12:12-30) பவுலடியார் உடலின் உறுப்புகளின் ஒருங்கமைவை உருவகமாக முன்வைத்து ஒற்றுமை என்னும் பாடத்தைக் கற்பிக்கின்றார்.

கை, கண், காது, கால் என வெளியில் தோன்றும் உறுப்புக்களைப்பற்றிப் பேசினாலும், 'நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்பு பெறுகின்றன!' என்கின்றார்.

உணவுக்கு ருசி கொடுக்கும் உப்பு
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

காஃபிக்கு இனிப்பு கொடுக்கும் சர்க்கரை
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

வானளாவ ஒரு கட்டடம் உயர்ந்து நிற்க, தன்னையே பூமிக்குள் மறைத்து நிற்கும் அடித்தளம்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நாம் உண்ணும் உணவை நெறிப்படுத்தும் நம் உடலின் ஆய்வுக்கூடம்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நம் உணர்வுகளின் இயக்கமாகிய மூளை
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

நம் சுவாசத்தின் மையம் நுரையீரல், நம் இரத்த ஓட்டத்தின் மையம் இதயம் எதுவும்
நம் கண்களுக்குத் தெரிவதில்லை.

கண்ணுக்குத் தெரியாத இவைகள் மதிப்பு மிக்கவை இல்லையா?

நம் கண்களுக்கு முன் இருந்து, இன்று நம் கண்களில் இருந்து மறைந்து நிற்கும்

நம் அன்புக்குரியவர்களும் மதிப்பு மிக்கவர்களே!


2 comments:

  1. என்னதொரு அழகான பதிவு! நம் பூதக் கண்களுக்குத் தெரிவதால் மட்டுமே ஒரு விஷயம் முக்கியத்துவம் பெறுகிறதென்றோ அல்லது மறைவாய் உள்ளதாலேயே சிலவிஷயங்கள் நம்மைப் பாதிப்பதில்லை என்றோ அர்த்தமாகாது. எவை எங்கே இருக்க வேண்டுமோ அவை அங்கே இருந்தால் மட்டுமே அவற்றிற்கு மதிப்பு. இந்த உண்மையை இன்றைய விவிலியப்பகுதியின் பின்புலத்தோடு கூற வரும் தந்தை அதற்காக எடுத்து வைக்கும் உதாரணங்கள் அபாரம். நம் வாழ்க்கைப்பாதையில் நம்மை உரசும் எந்த ஒரு சிறிய விஷயத்தையும் கூட வாழ்ந்து பார்த்து, இரசிக்கத்தெரிந்த ஒருவரால் மட்டுமே இத்தகைய நுணுக்கமான விஷயங்களையும்,அவை தாங்கி வரும் முக்கியத்துவத்தையும் பற்றிப் பேச முடியும்." "கண்காணாத கடவுளை நாம் கண்கூடாக்க் கண்டதால் கண்காணாதவை மீதுள்ள பற்று அதிகமாகிறது"..... புனித அகுஸ்தினாரைப் புகழின் உச்சத்திற்குக் கொண்டு செல்லும் வரிகள் என்றால் மிகையாகாது. இதன் இன்னொரு பரிமாணமாக எடுத்துக்காட்டும் தந்தையின் வரிகள் " நம் கண்களுக்கு முன் இருந்து,இன்று நம் கண்களில் இருந்து மறைந்து நிற்கும் நம் அன்புக்குரியவர்களும் மதிப்பு மிக்கவர்களே!"... கண்களைப் பனிக்க வைக்கின்றன. தந்தைக்கும், மற்ற அனைவருக்கும் 'ஞாயிறு' வாழ்த்துக்கள்! இந்த வாரம் இனிய வாரமாகட்டும்!!!

    ReplyDelete
  2. Dear Father,Congrats.

    ReplyDelete