Monday, March 3, 2014

மனவருத்தம்

இன்று மாதா டிவியில் ஒரு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு உளவியல் நிபுணர் 'மனவருத்தம்' பற்றி பேசிக் கொண்டிருந்தார். மிகவும் எதார்த்தமான பேச்சு. அவர் பெயர் தெரியவில்லை. மிக அழகாகப் பேசினார். அதில் சிறப்பு தூய தமிழில் பேசினார். அந்தத் தமிழில் எந்தவொரு 'திணிப்புத்தன்மை'யும் இல்லை. அதாவது நான் தூய தமிழில் பேச வேண்டும் என நினைத்தாலும் அது முடிவதில்லை. ஒன்று செயற்கைத்தனமாக இருக்கும். அல்லது எனக்கே சிரிப்பு வந்துவிடும். எனக்கும் தூய தமிழில் இனிமையாக, எதார்த்தமாகப் பேச ஆசை. ஆசை என்பதை விட 'வெறி' என்று சொல்லலாம்.

நிகழ்ச்சிக்கு வருவோம். நிகழ்ச்சியில் அந்த நிபுணர் ஒரு கட்டத்தில் சொல்லியது எனக்கே சொல்லியது போல இருந்தது. அதை அவருடைய வார்த்தையிலேயே பகிர்கிறேன்:

மனவருத்தம் எல்லா வயதினருக்கும் வரலாம். நன்றாக ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தை திடீரென விளையாட்டுப் பழக்கத்தையெல்லாம் நிறுத்திவிட்டு சோகமாக அமரத் தொடங்கலாம். மனவருத்தம் வந்துவிட்டால் சிலர் அதைச் சிரிப்பினால் மறைப்பர். சிலர் சிலைபோல இருப்பர். சிலர் அதை மறைக்க புகைப்பிடிப்பர். சிலர் அதிகமாகச் சாப்பிடத் தொடங்குவர்.

இந்த மனவருத்தம் வெளிநாட்டில் படிப்பின் நிமித்தம் அல்லது வேலையினிமித்தம் இருப்பவர்களுக்கு அதிகம் வருவதாக ஆய்வுகள் சொல்கின்றன. பல மணி நேரங்கள் அவர்கள் தனிமையிலேயே இருக்க வேண்டிய ஒரு கட்டாயம். எல்லாரும் சுற்றி இருந்தாலும் மொழி, கலாச்சாரம், பழக்கவழக்கம் என எண்ணற்ற தடைகள் இருக்கும். அவர்கள் இரண்டு கடிகாரங்களின் படி வாழ வேண்டியிருக்கும். அதுவே அவர்களுக்கு பெரிய மனவருத்தத்தைத் தரும்.

நம் வீட்டு பால்கணியில் நாம் வைத்து அழகுபார்க்கும் குரோட்டன்ஸ் செடியைப் பாருங்கள். அதை மண்ணிலிருந்து பிடுங்கி வெளியே வைத்து அதை 'வளர்! வளர்!' என்று சொன்னால் அது எப்படி வளரும்? மண்ணின் பிடி இருக்கும் வரைக்கும் வளரும். பின் காய்ந்து விடும். மனவருத்தம் உள்ளிருந்தே அவர்களை அழிக்கத் தொடங்கி விடும்...

தொடர்ந்து அவர் அதை நீக்கும் காரணிகள் குறித்துச் சொல்லத் தொடங்கினார்.

நேற்றும் அதன் முன் தினமும் எனக்கு ரொம்ப போர் அடித்தது. நான் ஊரில் இருந்த போது என்னுடன் நன்றாகப் பேசிய, நான் நன்றாகப் பேசிய 19 பேரை நினைத்துப் பார்த்தேன். 19 பேருக்கும் ஃபோன் செய்தேன். 19 பேரும் ஃபோனை எடுக்கவில்லை. நேற்று இரவு வரை காத்திருந்தேன். இந்த 19 பேரில் யாராவது திரும்பக் கூப்பிடுவார்களா? என நினைத்தேன். 19 பேரும் கூப்பிடவில்லை. எனக்கு ரொம்பவே வருத்தம்.

'Out of sight! out of mind!' என்பார் ஷேக்ஸ்பியர். (Same Shakespeare has told: 'Absence makes love grow fonder!' Contradiction!) இந்தப் 19 பேரின் உலகிலிருந்தும் நான் வெளியேறி விட்டேன் என்று தானே அர்த்தம். 19 பேர் வெளியேறிவிட்டால் 19 பேர் உள்ளே வந்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. 19 பேர் இருந்த வெற்றிடத்தை நான் இப்போது எப்படி நிரப்புவேன்? நிறைய புத்தகங்கள் படித்தா, நிறைய காமெடி பார்த்தா, நிறைய திரைப்படங்கள் பார்த்தா, நிறைய ஓவியங்கள் வரைந்தா? நிறைய ஊர் சுற்றியா? இவையெல்லாம் அவர்களை நிரப்பி விடுமா?

வாழ்க்கை மாறும். மனிதர்கள் மாறுவார்கள். என்று சப்பை கட்டு கட்ட முடியுமா?

இந்த மாதிரி நேரங்களில் மனவருத்தம் வரும்.

ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் இரண்டு நிலைகள் இருக்கும்:

1. Orientation. தமிழில் எப்படிச் சொல்ல வேண்டும்? எல்லாமே நன்றாக நடப்பது போல இருக்கும். காலையில் சரியான நேரத்திற்கு எழுவோம். குளிப்போம். சாப்பிடுவோம். பேருந்து சரியான நேரத்திற்கு வரும். படிப்பு, வேலை நன்றாக நடக்கும். சொந்தக் காரர்கள் வருவார்கள். நம் நண்பர்கள் நம்மிடம் நன்றாக இருப்பார்கள். நாம் நினைப்பதெல்லாம் நடக்கும். 'கடவுளே உமக்கு நன்றி!' என்று உள்ளம் துள்ளிக் குதிக்கும்.

2. Disorientation. அடுத்த நாள் நிலை தலைகீழாகி விடும். எழுந்திருக்க லேட் ஆகும். குளிக்கப் போனால் சுடுதண்ணி இருக்காது. சாப்பாட்டு அறைக்குப் போனால் ஃபிரிட்ஜ் காலியாக இருக்கும். எல்லாம் சொதப்பும். அன்னைக்குன்னு பார்த்து புரபஷர் நம்மிடம் கேள்வி கேட்பார். யாருக்குப் போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார்கள். 'மிஸ்டர் கடவுளே! எங்கய்யா போனீங்க?' என்று கேட்கத் தோன்றும்.

இந்த இரண்டாவது நிலையிலிருந்து எப்படி மறுபடி முதல் நிலைக்குக் கடந்து செல்வது? இன்னும் எனக்குத் தெரியவில்லை. இரண்டும் எதார்த்தம்தான் என்பது புரிகிறது. ஆனால் ஏன்? என்று மட்டும் தெரிவதில்லை.

மனவருத்தத்தின் போது அருள்நிலையில் இருப்பவர்களுக்கு வரும் பெரிய சோதனை: martyr complex. எல்லாவற்றையும் பொறுத்துக்கொள். கடவுள் உனக்கு நிறைய பரிசுகள் கொடுப்பார். உலகம் உன்னைப் பெரிய சாதனையாளர் எனப் போற்றும். நீ ஒரு பெரிய மறைச்சாட்சி! நீ கஷ்டப்படு! நீ அமைதியாய் இரு! எல்லாம் சரியாகிவிடும்!

இந்தச் சோதனைக்குப் பலியாகிவிடுவோர் பலர். நானும் இதற்குப் பலியாகிவிடுவேனோ? என்று பயமாக இருக்கிறது.

மனவருத்தம் மறைய ஒரே வழி என்ன?

நான் கற்றது இதுதான்:

உனக்கு நண்பன், எதிரி எல்லாம் நீ தான். உன்னையே நீ நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். பிறப்பிலிருந்து இறப்பு வரை உன் கூட வரப்போவது நீ மட்டும்தான். உனக்கு உடல் கொடுத்த பெற்றோரோ, உயிர் கொடுப்பேன் எனச் சொல்லும் நண்பர்களோ உன்னுடன் வரப்போவதில்லை. உனக்காக வேறு யாரும் சிரிக்க முடியாது. சிரிப்பு வந்தால் நீ தான் சிரிக்க வேண்டும். அழுகை வந்தால் நீ தான் அழ வேண்டும். உன் வயிற்று வலிக்கு நீதான் மருந்து சாப்பிட வேண்டும். You have to face your death alone!

உன் ரசணைகள் என்ன என்று யோசி. புத்தகம், பாட்டு, ஓவியம் என உன்னையே பிஸியாக வைத்துக்கொள்.

'நீ சுயநலவாதி!' என்று சொல்வார்கள். எல்லோரும் சுயநலவாதிகள் தான். பிறர்நலமே பெரிய சுயநலம்தான். பிறருக்கு உதவினால் கடவுள் நமக்கு உதவுவார் என்று நினைத்துத்தானே பல நேரங்களில் நாம் உதவி செய்கிறோம்.

'மனவருத்தம்' நம்மால் தான் வருகிறது. நாம் அனுமதித்தாலன்றி நம்மை யாரும் வருத்தப்படுத்தி விட முடியாது.

1 comment:

  1. Anonymous3/04/2014

    இன்றையக் கட்டுரை யதார்த்தமாக இருப்பினும் இத்தனை seriousness தேவையா என்ற எண்ணத்தையும் கொடுத்தது.Changes are meant to change...இதுதான் வாழ்க்கையின் நியதி.நம் உணவிலுள்ள உடையிலும் variety தேடும் நாம் ஏன் நமது personal வாழ்க்கை என்று வரும்போது மட்டும் ஓரே போல் இருக்க நினைக்கிறோம்? எப்பவுமே சிரித்துக் கொண்டிருந்தால்கூடத்தான் வாழ்க்கை புளித்துவிடும்.ஆசிரியர் அவர்களே! Look at the lighter side of life.கொஞ்சம் ' ரிலாக்ஸ்டா' இருங்க.

    ReplyDelete