Tuesday, March 25, 2014

பிரவுன் கலர் கண்கள்

இன்று மங்கள வார்த்தை திருநாளைக் கொண்டாடுகிறோம்.

நாசரேத்தூர் என்ற ஊரில் வாழ்ந்த மரியாளுக்கு ஆண்டவரின் தூதர் கபிரியேல் 'மங்களம்' சொன்ன திருநாள் இன்று.

கிறிஸ்து பிறப்பு டிசம்பர் 25 கொண்டாடப்படுகிறது. அதற்கு சரியாக 9 மாதங்களுக்கு முன்பாக இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இயேசுவின் பிறப்பு ஒரு குறைமாதப் பிறப்பாக இருந்தால் இந்தத் திருநாள் என்று கொண்டாடப்பட்டிருக்கும்? கடவுளின் பிறப்பு நிறைவாகத் தான் இருக்க முடியும். ஆகையால் இந்த நாளை இன்றே கொண்டாடுவோம்.

'கடவுள் மன்னுலகின் மேல் தன் கண்களைப் பதிய வைக்கின்றார்' –
இதுதான் இன்றைய நாளின் பொருள்.

சுஜாதாவின் 'கடவுள் இருக்கிறாரா?' என்ற நூலின் முதல் அத்தியாயத்தை நேற்றுப் படித்தேன். கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கு அறிவியல் படும் கஷ்டங்களைப் பதிவு செய்திருக்கிறார். அறிவியல் அறிஞர்களின் பல கஷ்டங்களில் ஒன்று: கடவுள் இந்த உலகைப் படைத்திருக்க முடியுமா? படைப்பு என்பது காலத்திற்கும் இடத்திற்கும் உட்பட்டது. காலத்திற்கும் இடத்திற்கும் உட்படாத ஒரு கடவுள் படைப்பைப் படைக்க வேண்டுமென்றால் அவர் காலத்திற்குள்ளும், இடத்திற்குள்ளும் நுழைந்தாக வேண்டும். அப்படி அவர் நுழைந்துவிட்டால் அவரைக் 'கடவுள்' என்று அழைக்க முடியாது.
ஏனெனில் 'கடந்து உள்ளவர்' தானே 'கடவுள்'.

இது ஒரு பிரச்சினை. மற்றொன்று? நம் உடலை ஆராய்ந்தால் அதில் திடப்பொருளும் இருக்கிறது. சக்தியும் இருக்கிறது. தாதுப்பொருள் என்ற அடிப்படையில் சொன்னால் பொட்டாசியம், கால்சியம் என்று பிரித்து விடலாம். இயற்பியல் அடிப்படையில் பிரித்தால் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் எனப் பிரித்து விடலாம். தொடுகின்ற பொருள், தொட முடியாத உயிர் - இணைந்தது தான் நாம். கடவுளையும் தாதுப்பொருள், சக்தி எனப் பிரிக்க முடியுமா?

கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா என்று சொல்வதிலேயே இவ்வளவு பிரச்சனைகள். இதில் கடவுள் மனுக்குலத்தின் வரலாற்றுக்குள் நுழைவதில் இன்னும் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்? பிரச்சினைகளை விட்டு விடுவோம். நிகழ்விற்குச் செல்வோம்.

மரியாள் ஒரு சாதாரண பெண். நாசரேத்தூருக்கு நாங்கள் சென்ற போது மரியாளின் இல்லத்திற்கும் போயிருந்தோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த வீட்டை அப்படியே பாதுகாத்து வருகிறார்கள். அந்த இடத்தில் நின்று ஜன்னல் வழியாக மேலே பார்த்தபோது, 'திடீரென்று கபிரியேல் தூதர் வந்தால் எப்படி இருக்கும்?' என்று மனம் நினைத்தது.

கடவுளின் கண்கள் மரியாளின் மேல் விழுகின்றன. அவரின் வழியாக மனுக்குலத்தின் மேல் விழுகின்றன. தினமும் நம் கண்கள் பலர் மேல் விழுகின்றன. பலரின் கண்கள் நம் மேல் விழுகின்றன. 'கண்ணு பட்டுருச்சு' என்று சொல்வோம். 'கல்லடிக்குத் தப்பிடலாம். கண்ணடிக்குத் தப்ப முடியாது' என்றும் சொல்வார்கள்.

'அந்தப் பொண்ணை அவன் கண்ணடிக்கிறான்!' என்று சொல்லும் போது அவன் அவளைக் காதலிக்கிறான் அல்லது அன்பு செய்கிறான் என்றே பொருள் கொள்கின்றோம். பார்ப்பது என்பதற்கு வெறும் பார்ப்பது மட்டுமல்ல. தேடுவது. அன்பு செய்வது. பராமரிப்பது. கவனமாய் இருப்பது. எண்ணற்ற பொருள் தரும் வார்த்தை இது.

கடவுளின் கண்கள் இன்று நம்மேல் பட்டு நமக்குச் சொல்லும் ஒரே (எபிரேய) வார்த்தை – எம்மானுவேல்! கடவுள் நம்மோடு!

நம் கண்கள் மற்றவர்கள் மேல் படும்போது நாம் அவர்களோடு இருக்கிறோம். அவர்களின் கண்கள் நம்மேல் படும்போது அவர்கள் நம்மோடு இருக்கிறார்கள்.
இன்று மெட்ரோவில் கல்லூரி போகும் போதும் வரும்போதும் கண்களை மட்டுமே பார்க்க வேண்டும் என முடிவெடுத்துச் சென்றேன். அப்படின்னா மத்த நாள்களில் என்ன பார்ப்பீங்க ஃபாதர்? என்று கேட்காதீங்க!

கண்ணாடிக்குப் பின் ஒளிந்த கண்கள்!
கடிகாரம் பார்க்கும் கண்கள்!
மேலே ஓடும் டிவியின் பிம்பம் தெரியும் கண்கள்!
ஐஃபோன்கள் ஒளியூட்டும் கண்கள்!
மூடிக்கொண்டு பாடலில் லயித்திருக்கும் கண்கள்!
ஜெர்மானியம் பேசும் ஒரு பெண்ணின் நீலக் கண்கள்!
காட்டராக்ட் ஆபரேசன் செய்து திரையிட்ட கண்கள்!
மூடி மூடித் திறந்த கைக்குழந்தையின் கண்கள்!
மஞ்சள் நிறம்!
கறுப்பு நிறம்!
பளுப்பு நிறம்!
கலங்கிய கண்கள்!
தூக்கக் கலக்கக் கண்கள்!
நேற்று அடித்த பியர் தெரியும் கண்கள்!
ஒளியைக் கண்டு கூசும் கண்கள்!
கூர்ந்து பார்க்கும் கண்கள்!

இப்படி எண்ணற்ற கண்களில்...
என்மேல் வைத்த கண் எடுக்காமல் பார்த்த
இரண்டு பிரவுன் கலர் கண்கள்...தான்....
இப்போதும் என் கண்முன்னேயே நிற்கின்றது!

1 comment:

  1. Anonymous3/26/2014

    கண்கள்..நம் உடம்பின் சக்திவாய்ந்த உறுப்புகள்.நமக்கு அடுத்து இருப்பவர் மீது நாம் கொண்டுள்ள விருப்பையோ வெறுப்பையோ பிரதிபலிக்கும் 'ஆடிகள்'.இவற்றைக் 'கருணை' சுரக்கும் ஊற்றுக்களாக மட்டுமே பயன்படுத்துவோம்.Hats off to U Father for ur observation power & ur capacity to translate it into words.ஆனாலும் அதிலும் கூட சிக்கல் இருக்கிறது.கவனம் தேவை.just kidding...

    ReplyDelete