Sunday, March 30, 2014

ஒற்றை நாணயம்

அது ஒரு கல்லூரி மாணவியர் விடுதி.

மாலாவின் ரூம் மேட் சுமதி.

மாலா அழகான ஒரு டெடி பொம்மை வைத்திருந்தாள். பார்க்க மிகவும் பழையது போல இருந்தாலும் அதை ஒருமுறையாவது முத்தமிடமால் அவள் தூங்கப் போக மாட்டாள். இதை தினமும் கவனித்துக் கொண்டிருந்தாள் சுமதி.

மாலா வெளியே சென்ற நேரம் அந்த பொம்மையை எடுத்து ஒளித்து வைத்து விட்டாள்.

தன் டெடியைக் காணாமல் அல்லாடினாள் மாலா.

சுமதியிடம் கேட்டாள்: 'நீ பார்த்தாயா?'

'இல்லை! எனக்கென்ன தெரியும்!' சமாளித்தாள் சுமதி.

நடுஇரவில் அழுகைச் சத்தம். எழுந்து பார்த்தாள் சுமதி. டெடி இருந்த இடத்தில் அமர்ந்து மாலா அழுது கொண்டிருந்தாள். கையில் அவளது அம்மாவின் ஃபோட்டோ.

'ஏன்டி அழுற?'

'என் டெடியைக் காணோம். அதான் எங்க அம்மாவிடம் கேட்கிறேன்!'

'உன் அம்மா சொல்லிடுவாங்களா!' 'உன் அம்மா என்ன சாமியா?'

'ஆமா...எங்க அம்மா சாமிதான். அவங்க நான் 4ஆம் வகுப்பு படிக்கும் போதே இறந்துட்டாங்க!'

'ஸாரிடி...'

மாலாவின் கைகளைப் பிடித்துக்கொண்டாள் சுமதி.

'ஒரு நாள் நானும் என் அம்மாவும் எங்க ஊருக்குப் பக்கத்து ஊரில் உள்ள சந்தைக்குப் போனோம். அங்கே ஒரு டெடி பொம்மை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எங்க அம்மாகிட்ட கேட்டேன். வீட்டில் பாத்திரம் தேய்த்துச் சம்பாதிக்கும் அவங்களால அதை உடனே வாங்கித்தர முடியல. கொஞ்சங் கொஞ்சமாக சேர்த்து வச்சி வாங்குனாங்க. சில மாதங்களாக ஆஸ்துமா நோயினால கஷ்டப்பட்ட அவங்க திடீர்னு ஒருநாள் இறந்திட்டாங்க.'

இறக்கும் போது ஒன்னு சொன்னாங்க:

'நம் வாழ்க்கைக்கு பெரிய அர்த்தங்கள் கொடுப்பவை எல்லாம் மிக எளிதில் கிடைத்து விடாது!'

இந்த டெடி எனக்கு வெறும் பொம்மை அல்ல.

இது என் அம்மாவின் உழைப்பு.

இது என் அம்மாவின் கண்ணீர்.

அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்று திரும்பிய மாலா தன் கட்டிலில் தன் டெடி இருப்பதைப் பார்த்தாள்.

ஓடி வந்து அதை அணைத்துக் கொண்டாள்.

பக்கத்து அறைகளுக்கு ஓடினாள். தன் தோழிகளை அழைத்தாள்.

அவளின் முகமெல்லாம் புன்சிரிப்பு.

'பெண் ஒருவரிடம் இருந்த பத்து நாணயங்களுள் ஒன்று காணாமற்போய்விட்டால்
அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி
அதைக் கண்டுபிடிக்கும் வரை கவனமாகத் தேடுவதில்லையா?'

அந்தப் பெண்ணிடம் ஒரேயொரு நாணயம் இருந்து...

அதையும் அவள் தொலைத்துவிட்டால்...?!

1 comment:

  1. Anonymous3/30/2014

    பெண்கள் மத்தியில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு.மிக எதார்த்தமாக கூறியுள்ளீர்கள்.இன்று பல பெற்றோர் செய்யும் தவறினால் பிள்ளைகளுக்கு நினைத்த மாத்திரத்தில் எல்லாமே கிடைத்து விடுகிறது.அதனால் அவர்களுக்கு பெற்றோரின் அருமையும் புரிவதில்லை; தங்கள் கையில் உள்ள பொருட்களின் மதிப்பும் தெரிவதில்லை.பிள்ளைகள் மட்டும் தங்கள் பரிசுப் பொருட்களுக்குப் பின்னால் உள்ள தங்கள் பெற்றோரின் தியாகத்தையும் பாசத்தையும் உணர்ந்தால்...? எல்லாப் பெற்றோருமே 'கொடுத்து வைத்தவர்கள்'.

    ReplyDelete