Wednesday, March 9, 2016

தலையைக் காணோம்!

யூதித்து 13:10 முதல் 15:13 வரை காட்சிகள் மூன்று மேடைகளில் நடந்தேறுகின்றன:

மேடை 1 (13:10-14:13)

யூதித்தும் அவருடைய பணிப்பெண்ணும் தங்கள் கைகளில் ஒலோபெரினை ஏந்தியவாறு பெத்தூலியா வந்து சேருகின்றனர்.

தன் பையிலிருந்த ஒலோபெரின் தலையை வெளியே எடுத்து நீட்டும் யூதித்து, 'நான் கறைபடவோ இழிவுறவோ அவன் என்னுடன் பாவம் செய்யவில்லை' என்று தன் தூய்மையையும் அறிக்கையிடுகின்றார்.

தொடர்ந்த தாக்குதல் நடத்தவதற்கு அறிவுரை சொல்கின்றார்.

மேடை 2 (14:14-15:2)

யூதித்தின் அறிவுரையை உடனடியாக செயல்படுத்தும் இஸ்ரயேல் வீரர்கள் தங்கள் வாள்களையும் படைக்கலங்களையும் எடுத்துக்கொண்டு அசீரியர்களின் பாளையம் நோக்கிச் செல்கின்றனர்.

ஐந்து நாட்கள் தாகத்தால் வாடிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த தைரியம் வரக்காரணம் ஒலோபெரின் கொல்லப்பட்டதுதான்.

தங்களை நோக்கி இஸ்ரயேல் வீரர்கள் ஓடிவருவதைப் பார்க்கின்ற அசீரிய வீரர்கள் தங்கள் தலைவரை எழுப்ப ஓடுகின்றனர்.

அவரின் தலையற்ற உடலைக் கண்ட பகோவா தன் ஆடைகளைக் கிழித்துக் கொள்கின்றார்.

எல்லாரும் அங்குமிங்கும் ஓடுகின்றனர். ஒரே குழப்பமும் கூச்சலுமாக இருக்கின்றது.

மேடை 3 (15:3-13)

அங்குமிங்கும் ஓடும் அசீரிய வீரர்களை துரத்திச் செல்லும் இஸ்ரயேல் வீரர்கள் எஞ்சியவர்களை வெட்டி வீழ்த்துகின்றனர். அவர்களின் பாளையங்களைக் கொள்ளையிடுகின்றனர்.

வெற்றி பெற்று திரும்பிய அனைவரும் தங்கள் தலைகளில் ஒலிவக் கிளைகளை அணிந்து கொள்கின்றனர்.

இந்த வெற்றிக் கனி தங்கள் கைகளில் கிடைக்கக் காரணமான யூதித்தை வாழ்த்தி உச்சி முகர்கின்றனர்.

இந்த இடத்தில் ஒரு சின்ன அறநெறிக் கேள்வி:

'நோக்கம் நல்லது என்பதற்காக எவ்வகை வழியையும் பயன்படுத்தலாமா?'
(Does a good end justify the bad means?)

ஆம் என்றால்...

நம் மாணவர்கள் தேர்வில் பார்த்து எழுதுவதும், தீவிரவாதிகள் தங்கள் கைகளில் ஆயுதங்கள் எடுப்பதும், திருடர்கள் திருடுவதும் சரி என்றாகிவிடும்.

இல்லை என்றால்...

இன்று நாம் கண்டிருக்கும் மருத்துவ சாதனைகள், அன்று யூதித்து கண்ட வெற்றி எதுவும் இல்லை என்று ஆகியிருக்கும்.

அறநெறி கேள்விகள் பொதுவானவை என்றாலும், பதில்கள் என்னவோ தனிநபர் சார்ந்தும், இடம் சார்ந்தும்தான் இருக்கின்றன.

1 comment:

  1. வெற்றிக்களிப்பில் யூதித்து தான் மாசற்றவள் எனத்தன் மக்களிடம் அறிக்கை இடுகிறார்.ஒலோபெரினுக்கு நடந்தது குறித்த முடிவிற்கான பச்சாதாபம் மனத்தின் ஒரு ஓரத்தில் இருப்பினும்,யூதித்தின் மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக்கொள்கிறது என்பதும் உண்மை. தங்களது தலைவியின் சொற்படி அசீரிய வீரர்களை வெட்டி வீழ்த்திவிட்டு வெற்றிக்கனியோடும்,ஒலிவக்கிளைகளோடும் வரும் இஸ்ரயேல் வீரர்கள் இந்த வெற்றிக்குக் காரணமான தங்கள் தலைவி யூதித்தை வாயார வாழ்த்துவது நியாயமே! இந்த இடத்தில் தந்தை வைக்கும் கேள்வி எனக்குமே என்றைக்கும் நெருடலான ஒன்றுதான்." நோக்கம் நல்லது என்பதற்காக எவ்வகை வழியையும் பயன்படுத்தலாமா?" தந்தையே அதற்கு ஓரளவு நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பதிலையும் தந்து விடுகிறார்.ஆம்! அறநெறிக் கேள்விகள் பொதுவானவை என்றாலும்,பதில்கள் என்னவோ தனிநபர் சார்ந்தும்,இடம் சார்ந்தும் தான் இருக்கின்றன. தனிநபர் மனசாட்சி சம்பந்தப்பட்ட விஷயம்.கொஞ்சம் சிந்திக்க வைத்த பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!வணக்கங்கள்!!!

    ReplyDelete