Tuesday, March 22, 2016

ஏற்றமும் இறக்கமும்

எஸ்தர் (கி) 5:9 - 7:10 ஆமோனின் இறக்கத்தையும், மொர்தெக்காயின் ஏற்றத்தையும் பதிவு செய்கிறது.

'ரொம்ப ஆடாதடா!' என்று நம்ம ஊர்ல சொல்வாங்க. அந்த நிலைக்கு ஆளாகிவிடுகிறான் ஆமான்.

'அரசனுக்கு அப்புறம் நான்தான்!'
'அரச முத்திரையை பயன்படுத்துவது நான்தான்!'
'விருந்துக்கு அழைக்கப்பட்டது நான்தான்!'
'எல்லார்முன் பெருமைப்படுத்தப்பட்டது நான்தான்!'
என 'எல்லாம் நான்தான்' என எண்ணிக்கொண்டிருந்த ஆமானுக்கு, மொர்தெக்காயைப் பார்க்கும்போதெல்லாம் கோபம், கோபமாக வருகிறது. 'மொர்தெக்காயை ஒழித்துக்கட்ட வேண்டும்!' என்று தன் மனைவி மற்றும் நண்பர்களோடு சேர்ந்து சூழ்ச்சி செய்கிறான் ஆமான்.

இதற்கிடையில், மொர்தெக்காய் அரசனின் உயிர்காப்பாற்றிய நிகழ்வைப் பற்றி அவனது அலுவலர்கள் அவனுக்குச் சொல்ல, அரசனும் மொர்தெக்காயை பெருமைப்படுத்த நினைக்கிறான்.

'ஒருவனை எப்படி பெருமைப்படுத்தலாம்?' என பொத்தாம்பொதுவாக அரசன் ஆமானைக் கேட்க, ஆமானும், தன்னைத்தான் அரசன் பெருமைப்படுத்தப்போகிறான் என நினைத்து, 'அப்படி செய்யணும்!' 'இப்படி செய்யணும்!' 'மெல்லிய ஆடைகள் அணிவிக்கணும்!' 'உயர்ரக குதிரையைக் கொடுக்கணும்!' 'நகரைச் சுற்றிவரணும்!' என சொல்கிறான். ஆனால், இந்த மரியாதை அனைத்தும் மொர்தெக்காய்க்குச் செய்யப்படுகிறது. கூனிக்குறுகி, தன் தலையை மூடிக்கொண்டு வீட்டுக்குச் செல்கிறான் ஆமான்.

'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்பதுபோல, தொடர்ந்து எஸ்தரும், ஆமான் அனுப்பிய அரசாணை பற்றி அரசனிடம் போட்டுக்கொடுக்கிறாள்.

'எஸ்தர், என்னை ஒன்றும் செய்துவிடாதே!' என்று எஸ்தரின் காலைப் பிடித்து ஆமான் ஒருநாள் கெஞ்சிக் கொண்டிருக்க, 'ஏன்டா, என் மனைவியையே தொட்டுப் பேசுகிறாயா?' என கோபம் கொள்ளும் அரசன், ஆமான் நட்டுவைத்த தூக்குமரத்திலேயே அவனைத் தூக்கிலிடுகிறான்.

தம்பி ஆமான், 'மற்றவருக்கு நாம் தீங்கு நினைத்தால் அந்த தீங்கு நமக்கே திரும்பி வரும்' என்றும்,

ஐயா மொர்தெக்காய்,  'தன் மதிப்பு இன்று மற்றவர்களுக்குத் தெரியவில்லையென்றாலும், ஒருநாள் கண்டிப்பாக தெரியும்' என்றும் நமக்குக் கற்றுக்கொடுக்கின்றனர்.

1 comment:

  1. " தன் வினைத் தன்னைச் சுடும்", மற்றும் " பொறுத்தார் பூமியாள்வார்" எனும் பழமொழிகளுக்கு அர்த்தம் தரும் ஒரு பதிவு.முன்னதற்கு ஆமானும்,பின்னதற்கு மொர்தெக்காயும் தங்கள் வாழ்க்கை முறையினால் இந்தப் பழமொழிகளுக்கு உயிர் கொடுத்துள்ளனர். மொர்தெக்காயை எவ்வாறெல்லாம் பெருமைப் படுத்தலாம் எனும் வழிமுறைகளை ஆமான் வழியாகவே நமக்குத் தெரியப்படுத்துவது நல்ல யுத்தி.பூமியில் புதைக்கப்படும் ஒரு விதையானது மனிதன்,விலங்குகள் மற்றும் இயற்கையின் இடர்பாடுகள் அத்தனையையும் சமாளித்து பூமிக்கு மேல் வந்தே தீருவேன் என்று தன் 'தளிர்' முகத்தைக் காட்டுவது போல உண்மையும் ஒருநாள் வெளியே வந்தே தீரும் என்பது இயற்கையின் எழுதப்படாத விதி.அதுவரை பொறுமை காப்போர் புண்ணியவான்கள் நம் மொர்தெக்காயைப்போல. நாம் பார்த்துக்கொண்டிருப்பது என்னவோ 'எஸ்தரைப்' பற்றிய நூல் எனினும் அவளின் சுற்றத்தின் வழியாகவும் நமக்கு நல்ல பல விஷயங்களைக் கொண்டுவரும் தந்தைக்கு நன்றிகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete