Tuesday, March 8, 2016

அன்புடன் ஒலோபெரின்

என் அன்பிற்கினிய யூதித்து,

பெண்கள் தின வாழ்த்துக்கள்!

பத்திரமாய் உன் ஊர் போய் சேர்ந்தாயா?
வழியில் என் வீரர்கள் உன்னை தடை செய்தார்களா?
'நீ யார்?' 'எங்கே போகிறாய்?' என்று கேட்டார்களா?

நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?
எதிலே உனக்கு துயர் தந்தேன்?
எனக்கு பதில் நீ கூறிடுவாய்!

உன்னைக் கண்டவுடன்
உன்னை அழகி என்றேனே!
உன் பேச்சைக் கேட்டவுடன்
உன்னை ஞானி என்றேனே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

முன்பின் தெரியாத உன்னை
உன்னவர்களும் சந்தேகித்த உன்னை
சந்தேகமின்றி நம்பினேனே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

என்முன் பேசுவதற்கு நீ படபடத்தபோது,
'துணிவுகொள்! அஞ்சாதே!' என்று தைரியம் சொன்னேனே!
நீ தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தபோது
ஒரு வார்த்தை கூட குறுக்கிடாமல்
நான் கேட்டுக்கொண்டே இருந்தேனே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

யாரும் நுழையாத என் நாட்டு கடவுளர்களின் அறையில்
உனக்கு இடம் தந்தேனே!
பகலில் சூரியன் உன்னைச் சுடாமல்
இரவில் நிலா உன்னைத் தீண்டாமல்
என் பாளையத்து கூடாரத்தில் இடம் தந்தேனே!
என் அமைச்சன் பகோவை உனக்குத் துணையாளனாய்த் தந்து
உன் வலமும் இடமும் படைவீரர்கள் உடன் செல்லச் சொன்னேனே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

'நான் கொண்டு வந்ததைத்தான் சாப்பிடுவேன்!'
என்று நீ சொன்னபோதும்,
'நான் தினமும் காலையில் என் கடவுளை வழிபடச் செல்வேன்!'
என்று நீ சொன்னபோதும்,
'சரி' என்று சொன்னேனே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

உன்மேல் காதல் கொண்டேன்!
உன்னோடு உறவுகொள்ளத் துடித்தேன்!
ஆனால் உன்மேல் என் விரலும் தீண்டியதில்லையே!
அதனாலோ நீ என் தலையைக் கொய்தாய்?

பல்வேறு நாடுகளை வெற்றி கொண்ட எனக்கு
உன் சிற்றூர் எனக்கு கால் தூசி!
உன் ஊரின் நீரூற்றுக்களை அடைத்த எனக்கு
உன் ஊராரின் மூச்சை என் வாள் வீச்சால்
நிறுத்தியிருக்கத் தெரியாதா?

நான் நம்பினேன்!
உன் ஊராரை நம்பினேன்!
என் கடவுள் நோக்கி திரும்பிவருவார்கள் என நம்பினேன்!

என்னை அழிக்க சூழ்ச்சி செய்த
உன்னை அழிக்க எனக்கு சூழ்ச்சி தெரியாதா?
என் அங்கதேசத்து அழகிகளைவிட
நீ அழகானவளா?

உன் அழகால்
உன் கவர்ச்சியால்
உன் வஞ்சக வார்த்தைகளால்
என்னை ஏமாற்றிவிட்டதாக நினைக்காதே!

பெண் வலுவானவள்
ஆண் வலுவற்றவன்
நான் உன்மேல் கொண்ட காதல்தான் உன் வல்லமை!
நான் உன்மேல் கொண்ட காதல்தான் என் வலுவின்மை!
என் வலுவின்மையை நீ பயன்படுத்திக்கொண்டாய்
அவ்வளவுதான்!
ஒரு ஆண் தரும் பாதுகாப்பு உணர்வில் இன்புறும் நீங்கள்
சட்டென்று ஏன் மனம்மாறி,
'நான் என்ன உனக்கு அடிமையா?' என்று கேட்டுவிடுகிறீர்கள்?
நான் பார்ப்பதெல்லாம் காமப் பார்வை
என் தொடுதலில் காமம் மட்டும்தான் இருக்கிறது
என்று நீ ஏன் அவசரப்பட்டு முடிவெடுக்கிறாய்?

மதுமயக்கத்தில் கிடந்ததால்தான் என் தலையை வெட்டினாய்!
மாதுமயக்கத்தில் கிடந்ததால் அல்ல!

என் ஏமாற்றம் என் தலைமுறைக்கு நல்ல பாடம்...
அசீரியாவில் இருக்கும் என் மகன்
உன்னைப் பழிதீர்க்க வருவான்
எந்தப் பெண்ணின் கருவிழியும் அவனை ஏமாற்ற முடியாது!
எந்தப் பெண்ணின் சொற்களையும் காதுகொடுத்துக் கேட்க மாட்டான்!

'வாளை எடுப்பவர் வாளால் மடிவர்' என்பதுதான் தர்மம் என்றால்,
முற்பகல் செய்யும் துன்பம் பிற்பகல் உடன் வரும் என்றால்,
நீயும் வாளால் மடிவாய்
உனக்கும் துன்பம் வரும்!

உன் மக்களைக் காக்க நீ செய்தது சரி என்றால்,
என் மக்களைக் காக்க நான் செய்ததும் சரிதானே!

இனி தொடரும் சண்டை
உனக்கும் எனக்கும் அல்ல!
உன் மக்களுக்கும் என் மக்களுக்கும் அல்ல!
உன் கடவுளுக்கும் என் கடவுளுக்கும்!

என்னை மதில் சுவற்றின் மேல் ஏற்று!
ஆயன் இல்லா ஆடுகளான என் படைகளை
உன் மக்கள் அடித்து விரட்டட்டும்.
என் படை இனி செத்த பாம்பு
இந்த செத்த பாம்பை அடிக்க உன் ஊரார் போடும் கூப்பாடு கேட்டு
இந்த உலகம் சிரிக்கட்டும்...

நான் தோற்றுவிட்டேன் என நினைக்கிறாயா?
நீதான் தோற்றுவிட்டாய்...

நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன்?
எதிலே உனக்கு துயர் தந்தேன்?
எனக்கு பதில் நீ கூறிடுவாய்!

அன்புடன்,

உன் கையில் தொங்கும் ஒலோபெரின்

2 comments:

  1. Dear Father,Congrats and thank you so much for your greetings.

    ReplyDelete
  2. ஹலோ ஃபாதர்! தங்களின் கற்பனாசக்திக்கும்,குறும்பிற்கும் ஒரு எல்லையே இல்லாது போய்விட்டது.இன்று 'மகளிர் தினம்' என்பது வேறு தங்களின் எழுத்துக்கு சாதகமாக அமைந்து விட்டது.செய்றதை எல்லாம் செய்துவிட்டு " கீழே விழுந்தாலும் மீசையில மண் ஒட்டல" என்றாகி விட்டது உங்கள் ஒலோபெரினின் கதை.ஒலோபெரின் யூதித்தை சிறிதும் சந்தேகமின்றி நம்பியதும்,துணிவுகொள்; அஞ்சாதே என தைரியம் சொன்னதும்,யாரும் நுழையாத அவனது அறைக்குள் யூதித்துக்கு அடைக்கலம் கொடுத்ததும்,.....எல்லாம் சரிதான்! ஆனால் எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு hidden agenda இருந்ததே அதை மறந்து போனீர்களா?ஆனாலும் கூட " நான் உன்மேல் கொண்ட காதல்தான் என் வலுவின்மை; நான் உன்மேல் கொண்ட காதல் தான் உன் வல்லமை",மது மயக்கத்தில் கிடந்ததால்தான் என் தலையை வெட்டினாய; மாது மயக்கத்தில் கிடந்ததால் அல்ல", உன் மக்களைக் காக்க நீ செய்தது சரி என்றால் என் மக்களைக் காக்க நான் செய்ததும் சரியே"..... போன்ற வரிகள் ஒலோபெரினின் மீது பரிதாபத்தை ஏற்படுத்துவதும் உண்மையே! ஆனால் ஒரு விஷயத்திற்காக ஒலோபெரின் மீது கோபம் வருவதும் உண்மைதான்.' பாதுகாப்பு' என்பது ஆணுக்குப் பெண்ணும்,பெண்ணுக்கு ஆணும் தருவது தான்.அதென்ன ஆண் தரும் பாதுகாப்பிற்குப் பதிலாகப் பெண் அவனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது?" யூதித்தின் மீது நமக்கு ஒரு ஈர்ப்பை ஏற்படுத்திய தந்தையின் எழுத்துக்கள் இயற்கையானவையே! ஆனால் ஒரே சமயத்தில் ஒலோபெரினின் மீது பகைமை உணர்ச்சியையும்,பச்சாதாபத்தையும் ஏற்படுத்திய தந்தையின் எழுத்துக்கள் கண்டிப்பாகப் பாராட்டுக்கெல்லாம் அப்பாற்பட்டவையே! வரப்போகும் ' புனித வெள்ளி' யன்று நாம் பாடப்போகும் 'எனது பிரஜைகள்!' எனும் பாடல் யூதித்தையும்,ஒலோபெரினையும் ஞாபகப்படுத்தப் போவது உண்மை.வாழ்த்துகிறேன்; வணங்குகிறேன்.மறைமுகமாக வெளிப்படுத்திய 'மகளிர் தின' வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete