Thursday, March 31, 2016

அக்சா

(இணைத் திருமுறை நூல்களில் 'சீராக்' தவிர்த்த மற்ற அனைத்து நூல்களையும் பற்றி எழுதியாயிற்று. இன்று முதல் 'நீதித்தலைவர்கள் நூலில் பெண்கள்' என்று சிந்திக்கலாம். பெண்களைப் பற்றித்தான் அல்லது பெண்களைப் பற்றியேதான் சிந்திக்க வேண்டுமா? என கேட்க வேண்டாம். இந்த நூலில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பெண்கள் நிறைய ஆச்சர்யங்களைத் தருகின்றார்கள்)

அக்சா - நீத 1:10-15 ல் வருகிறார் இவர். இதே நிகழ்வு யோசுவா 15:13-19-இலும் உள்ளது.

'அக்சா' என்றால் 'கொலுசு,' 'வளையல்,' அல்லது 'சிலம்பு' என்பது பொருள்.

இவரைப் பற்றிய பாபிலோனிய தால்முத் என்னும் நூல் இப்படிச் சொல்கிறது: 'அவளின் பெயர் அக்சா என ஏன் வழங்கப்பட்டது? ஏனெனில் அவளைக் காணும் எந்த ஆணும் தன் மனைவி மேல் கோபப்பட்டான்.'

அதாவது, நம்ம 'அக்சா'வின் அழகைப் பார்த்து அதில் பிரமிக்கும் ஆண்கள் அனைவரும், தம் மனைவியர் 'அழகு குறைவாக' இருப்பதாக அவர்கள்மேல் கோபப்படுவார்களாம். மேலும், இவளின் பெயர் 'கஆஸ்' ('கோபம்') என்ற எபிரேய மூலத்திலிருந்து வருகின்றது.

இவளின் அப்பா பெயர் 'காலேபு'. தெபீர் என்ற நகரை யார் அழிக்கிறார்களோ அவர்களுக்கு என் மகளை மணம் முடித்துக்கொடுப்பேன்! என அறிக்கை விடுகின்றார் காலேபு.

பெண் என்பவள் எபிரேய சமூகத்தில் ஆணின் (தந்தையின்) உடைமையாகக் கருதப்பட்டாள் என்பதற்கு இது சான்று. அதாவது, வெற்றி பெற்ற ஒருவருவருக்கு வழங்கப்படும் பரிசு அல்லது அன்பளிப்பு என மாற்றப்படுகிறாள் அக்சா.

மேலும், எபிரேய சமூகத்தில் வரதட்சணை என்பது 'பெண்-விலை' என அழைக்கப்பட்டது. அதாவது, விவசாய சமூகத்தில் ஒவ்வொருவரும் முக்கியமானவர். ஒரு பெண்ணை அவளது குடும்பத்திலிருந்து ஒரு ஆண் திருமணம் செய்து செல்கிறான் என்றால், அவன் அந்தக் குடும்பத்தில் ஏற்படும் ஒரு வெற்றிடத்தை பணம் கொண்டு நிரப்ப வேண்டும். ஆக, பெண் எடுக்கும் ஆண்தான், பெண்ணின் குடும்பத்திற்கு 'பணம்' அல்லது 'ஆடுகள்' அல்லது 'வேலை' என எதையாவது கொடுக்க வேண்டும்.

தெபீர் நகரை அழிக்கின்ற ஒத்னியேல் ('கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுளின் சிங்கம்') அக்சாவைக் கரம் பிடிக்கின்றான்.

'என் தந்தையிடம் ஒரு நிலம் கேள்!' என அவள் ஒத்னியேலைத் தூண்டுகிறாள். ஆனால், கழுதையை விட்டு இறங்கியபோது அவள், 'எனக்கு நீரூற்றுக்கள் வேண்டும்!' என்கிறாள்.

ஒத்னியேல் என்பவன் வறண்ட நிலம் என்றும், எனக்கு வேறு 'நீரூற்றுக்கள்' வேண்டும் என தன் தந்தையிடம் வேறு ஆடவர்களை அவள் கேட்பதாகவும் சிலர் வேறு பொருள் கொள்கின்றனர்.

தந்தையும் தன் மகள் கேட்டபடி 'மேல் ஊற்றுக்களையும், கீழ் ஊற்றுக்களையும் கொடுக்கின்றார்.'

போர்கள் மறைந்து, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அமைதியாக நிலங்களில் குடியிருக்க ஆரம்பிக்கிறார்கள். ஒத்னியேலும், அக்சாவும் தான் வாக்களிக்கப்பட்ட நாட்டில் வாழும் முதல் தம்பதியினர். இனி எல்லாமே மாறும்.

'அக்சா' அழகியோ இல்லையோ, ஆனால் அவள் தான் விரும்புவதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் திறமைசாலி.

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் - அக்சா.

1 comment:

  1. ஆச்சரியங்களைத் தரும் பெண்கள் பற்றி சிந்திக்க விடுக்கும் தந்தையின் அழைப்புக்கு நன்றி.'அக்சா' என்னும் பெயருக்கு 'கொலுசு', 'வளையல்' மற்றும் 'சிலம்பு' எனும் பொருள் இருப்பதாலோ என்னவோ இவள் ஒரு பொருளாகவே கருதப்பட்டுள்ளாள்...அவளைக் கைபிடித்த ஆடவனால் மட்டுமல்ல; பெற்றெடுத்த தந்தையாலும் கூட.திருமணச் சந்தையில் காத்திருக்கும் பெண்கள் அழகிகளாக,அறிவுள்ளவர்களாக,செல்வம் படைத்தவர்களாக ....இப்படி என்ன பின் புலத்துடன் இருப்பினும் அவர்களை யாருமே அவரின் தகுதிக்காக(worth) மதிப்பதில்லை என்பது கசப்பான உண்மை.இது காலம் காலமாக நடப்பதுதான்.நடந்நேறும் விதம் மாறலாம்.ஆனால் நடத்துபவர்களின் மன நிலை என்னவோ ஒரே மாதிரிதான் உள்ளது. அவளை அன்று வரதட்சணை என்ற பெயரில் நிலம்,ஆடு,வேலை போன்றவற்றோடு சமன் செய்தார்கள் என்றால் இன்று சில பல ரொக்கம், நகைகள்,கார், பங்களா போன்ற உயிரற்ற பொருட்களுடன் சமன் செய்கிறார்கள்.வித்தியாசம் அவ்வளவே!இதில் நம் கதாநாயகி ' வாயுள்ள பிள்ளையாகவும்' இருப்பதனால் அவர் பிழைத்துக்கொள்கிறார்.அவள் தந்தை அவளுக்கு " மேல் ஊற்றுக்களையும்,கீழ் ஊற்றுக்களையும்' தருகிறார்.ஆனால் இந்த நீரூற்றுக்கள் இந்தப் பெண்ணின் மதிப்பை எவ்வித்த்திலேனும் கூட்டப்போகிறதா? " இனி எல்லாமே மாறும்" என்று தந்தை சொல்வதை நம்புவோம்; காத்திருப்போம்.தந்தை தரப்போகும் ஆச்சரியங்களைக் காண காத்திருக்கிறோம்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete