Sunday, March 20, 2016

மொர்தெக்காயின் மன்றாட்டு

எஸ்தர் (கி) பிரிவு 4ல் இரண்டு இடைநில் பாடல்கள் இருக்கின்றன:.

இந்த இரண்டுமே மன்றாட்டுக்கள். முதல் மன்றாட்டு மொர்தெக்காயினுடையது. இரண்டாவது எஸ்தருடையது.

மொர்தெக்காயின் மன்றாட்டின் (4:17a-17j) உட்கூறுகளைப் பார்ப்போம்.

கடந்த இரண்டு பிரிவுகளுக்கு முன், மொர்தெக்காய் ஆமானுக்கு வணக்கம் செலுத்த மறுத்தார் என குறிப்பிட்டிருந்தோம். தான் எதற்காக ஆமானுக்கு வணக்கம் செலுத்தவில்லை என்று அதன் காரணத்தை தன் மன்றாட்டில் குறிப்பிடுகின்றார்:

'தருக்குற்ற ஆமானுக்கு நான் வணக்கம் செலுத்த மறுத்ததற்கு காரணம்
செருக்கோ இறுமாப்போ வீண்பெருமையோ அல்ல என்பதையும் நீர் அறிவீர்.
இஸ்ரயேலின் மீட்புக்காக நான் அவனுடைய உள்ளங்கால்களைக்கூட முத்தமிட்டிருப்பேன்.
ஆனால் கடவுளைவிட மனிதரை மிகுதியாக மாட்சிமைப்படுத்தக்கூடாது என்பதற்காகவே
இவ்வாறு நடந்து கொண்டேன்.'

பச்சிளங்குழந்தைகளின் உள்ளங்கால்களை நாம் முத்தமிட்டிருப்போம்.

கொஞ்சம் மிஞ்சிப்போய், காதலியின் உள்ளங்கால்களையும் முத்தமிட்டிருக்கலாம்.

'உள்ளங்காலை முத்தமிடுதல்' என்பது 'உள்ளங்காலில் ஒட்டியிருக்கும் தூசி அளவு என்னையே தாழ்த்துகிறேன்' என்பதற்கான உருவகம்.

மொர்தெக்காய் தன் கடவுளாகிய ஆண்டவரைத் தவிர மனிதர்கள் எவரையும் வணங்க, அல்லது திருப்திபடுத்த விரும்பாதது, அவரின் நிறைவான மனத்தைக் காட்டுகிறது.

மேலும்,

'உரிமைச்சொத்து,' 'உடைமை' என்ற இரண்டு வார்த்தைகள் வழியாக தன் மக்களை அடையாளப்படுத்துகிறார்.

இறுதியாக,

மக்களும் தங்கள் ஆற்றலெல்லாம் கூட்டி ஆண்டவரை நோக்கிக் கத்தினார்கள் என்று பாடல் நிறைவடைகிறது.

'ஏனெனில் தங்களது சாவு பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்'

இதுதான் மக்கள் அனுபவித்த பெரிய துன்பம்.

நாம் பிறந்த நாள் முதல் சாவின் நிழல் நம்மீது நீண்டு கொண்டே இருக்கின்றது. இந்த சாவின் நிழல் இப்போது அழுத்தும் இருளாக இருந்தால், வேறு ஒன்றையும் நம்மால் பார்க்க முடியாமல் போய்விடும். அப்படித்தான் இருக்கிறார்கள் இந்த மக்கள்.

'சாவின் நிழல்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
நான் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்' (திபா 23:4)


1 comment:

  1. அழகானதொரு பதிவு.ஆமானுக்குத் தான் மரியாதை செலுத்த முடியாததன் காரணத்தை மொர்தெக்காய் விவரிக்கும் சொற்களில் அவரது சுயமரியாதையும், தன் இன மக்கள்மீது அவருக்குள்ள வாஞ்சையும் வெளிப்படுகிறது.படைத்தவரை விட்டுப் படைப்புக்களை வணங்கத் தனக்கு அவசியமில்லை எனும் வார்த்தைகளில் எது சரியோ அதை மட்டும் தான் செய்வேன் எனும் அவரது மனத்திண்மையையும் பார்க்கமுடிகிறது.கண்டிப்பாகத் தங்களின் இறுதியை மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்த மக்களுக்கு மொர்தெக்காயின் வரிகள் உரமேற்றியிருக்க வேண்டும். ஏன் நமக்கும் கூடத்தான் தந்தையின் 23 ம் திருப்பாடலின் " சாவின் நிழல்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்..." எனும் வரிகள் நம்மை
    நெஞ்சை நிமிர்த்தி கர்வத்தில் உறையவைப்பதை உணரமுடிகிறது.இந்த வாரத்தை அழகாகத் தொடங்கி வைத்திருக்கும் தந்தையின் வரிகளுக்காக அவருக்கு ஒரு 'சல்யூட்!'.

    ReplyDelete