Sunday, March 6, 2016

சிகப்பா இருக்குறவ

யூதித்து ஒலோபெரின் உரையாடலை யூதித்து நூல் 11ல் பதிவு செய்கின்றார் ஆசிரியர்.

இந்த பகுதியை மூன்று உட்பிரிவுகளாகப் பிரிக்கலாம்:

அ. ஒலோபெரின் தரும் நம்பிக்கை (11:1-4)
ஆ. யூதித்தின் உரை (11:5-19)
இ. ஒலோபெரினின் புகழ்ச்சி (11:20-23)

அ. 'பெண்ணே, துணிவுகொள். அஞ்சாதே!' (11:1)

புதிய இடம், புதிய ஆள்கள், படைக்கலங்கள் என்று ஒலோபெரினின் கூட்டத்தைப் பார்த்து சற்றே பயந்தே போயிருப்பார் யூதித்து. தான் எடுத்த முடிவை செயலாற்ற முடியுமா, தன் மக்களுக்கு விடுதலை கிடைக்குமா என்ற ஏக்கமும் அவருக்கு இருந்திருக்கும்.

சில நேரங்களில் நாம் தைரியசாலிகளாக இருந்தாலும், உள்ளத்தில் டன் கணக்கில் துணிச்சல் இருந்தாலும், 'தைரியமாக இரு!' என்று மற்றவர்கள் சொல்லும் வார்த்தைகள், நம் துணிச்சலுக்கு இன்னும் கூடுதல் வலு சேர்க்கின்றன.

ஆ. 'நான் யூதேயா நாடு வழியாக எருசேலம் சேரும்வரை உம்மை வழிநடத்திச் செல்வேன். அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன். ஆயன் இல்லா ஆடுகள் போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர். ஒரு நாய்கூட உமக்கு எதிராக உறுமாது.' (11:19)

'இரட்டுற மொழிதல்' (double entendre) என்ற இலக்கியக்கூறு பற்றி தெரிந்து கொள்வோம். அதாவது, ஒரு கதைமாந்தர் உச்சரிக்கும் சொல்லாடல்களில் இரண்டு பொருள் இருக்கும். இந்த இரண்டு பொருள்களில் ஒன்று உச்சரிக்கும் கதைமாந்தருக்கும், மற்றொன்று கேட்கும் கதைமாந்தருக்கும் விளங்கும். அவர்களால் ஒன்றைத் தான் புரிந்து கொள்ள முடியும். மற்றொன்றை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், இதை வாசிக்கும் வாசகர்கள் இதன் இரண்டு பொருள்களையும் புரிந்து கொள்வர்.

யூதித்தின் மேற்காணும் வார்த்தைகளில் 'இரட்டுற மொழிதல்' என்ற இந்த இலக்கியக்கூறு பயன்படுத்தப்பட்டுள்ளது. எப்படி?

'நான் உம்மை வழிநடத்திச் செல்வேன்'

ஒலோபெரினுக்கு, 'நான் உம் படைகளை வழிநடத்திச் செல்வேன்' என்று புரியும்.

ஆனால், யூதித்தோ, 'நான் உம் தலையைக் கொய்து, உம் தலையை வழிநடத்திச் செல்வேன்' என்ற பொருளில் சொல்கின்றார்.

'அங்கு உமக்கு ஓர் அரியணை அமைப்பேன்'

ஒலோபெரினுக்கு, 'நான் உம்மை இஸ்ரயேலரின் அரசனாக அமர்த்துவேன்' என்று புரியும்.

ஆனால், யூதித்தோ, 'நான் உம் தலையை என் நகர வாயில் மதில்மேல் வைப்பேன்' என்ற பொருளில் சொல்கின்றார்.

'ஆயன் இல்லா ஆடுகள் போல' இஸ்ரயேலர் அழிவார்கள் என நினைக்கிறான் ஒலோபெரின்.

ஆனால், 'படைத்தலைவன் இறந்துவிட்டதால் அசீரியரே ஆயன் இல்லா ஆடுகள் போல இருப்பர்' என்று யூதித்து இறைவாக்காகச் சொல்கின்றார்.

'ஒரு நாய்கூட உம்மைச் சீண்டாது!'

ஆம், 'நகர வாயிலின் மதில்மேல் இருக்கும் தலையை யார்தான் சீண்டுவார்?'

யூதித்தின் இந்த வார்த்தைகள் அவரின் ஞானத்தையும், சொல்வளத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இ. 'நீ தோற்றத்தில் அழகுவாய்ந்தவள் மட்டுமல்ல, பேச்சில் ஞானம் மிக்கவளும் ஆவாய்!' (11:23) என்று பல் இளிக்கின்ற ஒலோபெரின், 'உன் கடவுள் எனக்கும் கடவுளாவார்' என வாக்குறுதியும் கொடுக்கின்றான்.

ஒலோபெரினின் இந்த இறுதி வார்த்தைகள் அவன் அழியப்போகிறான் என்பதை வாசகருக்கு சொல்லிவிடுகிறது.

ஏனெனில், வழக்கமாக வெற்றி பெறும் மக்களின் கடவுள்தான் தோல்வியுறும் மக்களின் கடவுளாக மாறுவார்.

இறுதியாக,

நாம் கதைக்கு வெளியிலிருந்து ஒலோபெரினைப் பார்ப்போம். அவனை எதிரியாக அல்ல. மாறாக, ஒரு பணியைச் செய்ய வந்திருக்கும் ஒரு படைத்தலைவனாக.

'என் நாட்டைக் காட்டிக்கொடுக்கிறேன். என் நாட்டை அழிக்கும் வழியை உனக்குக் காட்டுகிறேன்' என வந்த இரண்டு இளம்பெண்களையும், அவர்களின் வாய்ச்சொற்களையும் அப்படியே நம்பும் அளவுக்கு, சிந்திக்கும் திறனற்றவனாக இருந்தானா படைத்தலைவன்?

அல்லது வெறும் உடல் பலம் மட்டும் கொண்டிருந்து மனபலம் அல்லது தன்கட்டுப்பாடு இல்லாமல் இருந்தானா?

அல்லது ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரவில்லையா?

எப்படி இருந்தாலும், மேலாண்மையியல் கண்ணோட்டத்தில், ஒலோபெரின் வலுவற்றவன். எளிதில் ஏமாற்றப்படக் கூடியவன். தோற்றத்தில் மயங்குபவன்.

'சிகப்பா இருக்குறவ(ன்) பொய் சொல்ல மாட்டா(ன்)!' என்ற நம்பிக்கை கொண்டிருந்தவன்!

1 comment:

  1. யூதித்தின் மனபலத்தை உரித்துக்காட்டும் பதிவு.என்னதான் ஒரு பலசாலி போல தன்னைக் காட்டிக்கொண்டாலும் ஒலோபெரினின் எல்லைக்குள் நுழைந்தவுடன் அவள் மனதைரியம் கொஞ்சம் ஆட்டம் கண்டிருக்க வேண்டும்.ஆகவே தான் " நான் யூதேயா நாடு வழியாக எருசலேம் சேரும் வரை உம்மை வழி நடத்திச் செல்வேன்; அங்கு உமக்கொரு அரியணை அமைப்பேன்; ஆயன் இல்லா ஆடுகள் போல் இருக்கும் அவர்களை நீர் துரத்தியடிப்பீர்; ஒரு நாய் கூட உமக்கு எதிராக உறுமாது." எனும் வார்த்தைகள் அவள் வாயிலிருந்து வெளிப்படுகின்றன.ஆனால் என்னதான் பலசாலி எனத்தன்னை நினைத்திருப்பினும் இறைவனின் இரக்கப்பார்வை அவன் மீது படாததால் ஒலோபெரின் யூதித்தின் வார்த்தைகளைத் தனக்கு சாதகமாகப் புரிந்து கொள்கிறான்.எனக்கென்னவோ ஒலோபெரினின் மீது கோபத்திற்குப் பதில் பரிதாபமே படத்தோன்றுகிறது.அவன் செய்ய வந்தது ஒரு படைத்தலைவனுக்கான பணியைத்தான்.அதில் அவன் தெளிவாய் இருப்பினும் அவன் தன் எதிரிகளாக நினைக்கும் யூதித்தையும்,அவள் பணிப்பெண்ணையும் இறைவனின் கரம் வழி நடத்தி வந்ததை அவன் உணரவில்லை.தன்னிடம் இல்லாத ஒன்று அவர்களிடம் இருப்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை. வந்திருப்பவர்கள் 'பெண்கள் தானே!' என்று குறைத்து மதிப்பிடுகிறான். புறத் தோற்றத்தில் தன்னை,தன் பலத்தை இழந்து விடுகிறான் "உன் எதிரியின் பலமறிந்து அவனிடம் சண்டைக்குப் போ" எனும் சொல்லாடலை அவன் மறந்து போனான்.எனவே தோல்வி அவனுக்குத் துணையானது.நாமும் கூட பல நேரங்களில் புறத்தோற்றத்தை வைத்து அகத்தை எடை போடுகிறோம்.பல நேரங்களில் ' appearance is deceptive' என்பதை மறந்து செயல் படுகிறோம்,இம்மாதிரி நேரங்களில் நாம் துணைக்கு அழைக்க வேண்டியது இறைவனை மட்டுமே! யூதித்துக்கு கருணை காட்டிய இறைவன் நம் மேலும் தன் கருணையைப் பொழிவார். நமக்கு நம்பிக்கை தரும் ஒரு பதிவிற்காகவும், " இரட்டுற மொழிதல்" போன்ற விஷயங்களுக்காகத் தந்தையைப் பாராட்டலாம்.ஆனால் அது என்ன ' சிகப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்' என்ற நம்பிக்கை கொண்டிருந்தவன்?? இயேசுவின் காலத்திலும் இந்தக் கறுப்பு,சிகப்பு பிரச்சனை இருந்ததா என்ன? பிறக்கும் வாரம் இனிமையைக் கொணர்ந்திட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete